Social Icons

அன்புள்ள ராட்சசி - 5


 




அத்தியாயம் 8

அன்று மாலை அசோக்கின் வீட்டில்.. அவனுக்கு வரலாறு காணாத வரவேற்பு அளிக்கப்பட்டது..!! மலர் மாலை அணிவித்து.. மங்கள ஆரத்தி எடுக்காத குறைதான்..!! பந்தயம், பரிட்டோ, செருப்பு, முறைப்பு என.. சில சிக்கலான விஷயங்களை மட்டும் தவிர்த்துவிட்டு, மீதி விஷயங்களை எல்லாம்.. ஒன்றுவிடாமல் அசோக்கின் குடும்பத்துக்கு ஒலிபரப்பு செய்திருந்தது.. தி கிரேட் கிஷோர் FM..!! 'அசோக் ஒருபெண்ணை பலநாட்களாக பார்வையாலேயே காதலித்தான்.. இன்று பத்தே நிமிடம் அவளிடம் பேசி.. பதிலுக்கு அவளையும் ஐ லவ் யூ சொல்ல வைத்துவிட்டான்..' என்ற அளவில்தான் செய்தி ஒலிபரப்பு செய்யப்பட்டிருந்தது..!!

விஷயம் கேள்விப்பட்டதில் இருந்தே.. வீட்டில் அனைவருக்குமே அப்படி ஒரு சந்தோஷம்.. குதுகலம்.. மகிழ்ச்சி..!! அனைவரது முகத்திலுமே அப்படி ஒரு பூரிப்பு.. சிரிப்பு.. மலர்ச்சி..!! பொசுபொசுவென, வெள்ளை வெளேரென இருக்கும் பொமெரேனியன்கள் இரண்டும் கூட.. வாசலில் போடப்பட்டிருந்த ரங்கோலியில் புரண்டு எழுந்து.. அன்று கலர்ஃபுல்லாய் காட்சியளித்தன..!! அசோக் வீட்டிற்குள் நுழைந்ததுமே ஓடிச்சென்று.. அவனுடைய காலை சுற்றி சுற்றி வந்து.. முகர்ந்து முகர்ந்து பார்த்தன..!! அனைவருமே அவசரமாய் சென்று அசோக்கை சூழ்ந்து கொண்டனர்.. அன்புடன் கட்டிக்கொண்டனர்.. கைகுலுக்கினர்.. 'கலக்கிட்டடா' என்று கன்னம் கிள்ளினர்..!!

தன் குடும்பத்தினரிடம் இருந்து, அத்தகைய வரவேற்பை அசோக் எதிர்பார்த்திருக்கவில்லை.. திணறிப் போனான்..!! ஏற்கனவே அந்த மீரா தனது காதலை சொல்லிச் சென்றவிதத்தில், அவனுடைய மனம் ஒருவித குழப்பத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தது.. இதில் இவர்கள் வேறு ஆளாளுக்கு கலாட்டா செய்ய.. செய்வதறியாது திருதிருவென விழித்தான்..!! அவனுடன் எப்போதும் சண்டை போடுகிற சங்கீதா கூட.. அன்று அண்ணனின் காதல் கணிந்துவிட்டதென மிக சந்தோஷத்தில் இருந்தாள்..!! அசோக்கை பார்த்து கண்சிமிட்டியவாறே, தனது இனிய குரலால் பாடினாள்..!!

"பெண்கள் பின்னால் சுற்றாமல்.. பெண்ணே சுற்றும் பேரழகன் எவனோ ஓ ஓ ஓ.. அவனே காதல் மன்னன்... காதல் மன்னன்.. காதல் மன்னன்..!!"


ஆட்காட்டி விரலை அண்ணனை நோக்கி நீட்டி.. அதை அப்படியும் இப்படியுமாய் சுழற்றி சுழற்றி, அவள் அவ்வாறு பாட.. அசோக் அவனுடைய மனக்குழப்பத்தையும் மறந்து, மெலிதாக புன்னகைத்தான்..!!

"ப்ச்.. சும்மா இரு சங்கு..!!" என்று அழகாக வெட்கப்பட்டான். உடனே சங்கீதா

"அழுக்கு சட்டை போட்டாலும்.." என்று அடுத்த லைனை கிண்டலான குரலில் ஆரம்பிக்கவும், வெடுக்கென தங்கையை முறைத்தான்.

"போதும்..!!!! நிறுத்து..!!!!" என்று கடுப்பாக சொன்னான்.

"ஹாஹாஹாஹா...!!! ம்ம்ம்ம்.... எப்படிடா இப்படிலாம்.. ஃபஸ்ர்ட் பால்'லயே சிக்ஸரு.. ம்ம்..?? ஃபஸ்ர்ட் நாள் பேசுனதுமே ஒரு பொண்ணை ஐ லவ் யூ சொல்ல வச்சுட்ட.. அதுவும் பத்தே நிமிஷம் பேசுனதுல..?? உன்னை இதயம் முரளின்ல நான் இவ்வளவு நாளா நெனச்சுட்டு இருந்தேன்.. இப்படி கில்ல்ல்லி மாதிரி சொல்லி அடிச்சுட்டியடா அண்ணா..?? ச்ச.. சான்ஸே இல்லடா..!!" அசோக்கை கலாய்க்கிற குரலிலேயே பாராட்டினாள் சங்கீதா.

"ம்ம்ம்.. அம்மா உனக்காகவே ஆசையா.. ஸ்பெஷலா செஞ்சது அசோக்..!! ஆ.... வாயை தெற.." கையில் இனிப்பு கிண்ணத்துடன் வந்திருந்தாள் பாரதி.

"எ..என்ன மம்மி இ.." அசோக் கேட்டு முடிப்பதற்கு முன்பே,

"ஷாஹி துக்ரான்னு ஒரு மொகலாய் ஸ்வீட்டுடா.. நல்லாருக்கும், சாப்பிட்டு பாரு..!!" சுண்டக் காய்ச்சிய பாலில் ஊறிப்போன அந்த இனிப்புத்துண்டை அவன் வாயில் திணித்தாள்.

"அசோக்-மீரா..!! பேர்ப்பொருத்தம் பிரம்மாதமா இருக்குன்னு.. வல்லக்கோட்டை ஜோஸியரே சொல்லிட்டாரு..!!" - பாட்டி தன் பங்குக்கு சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள்.

வெறும் சந்தோஷம் என்ற ஒரு வார்த்தையில் சாதாரணமாக அந்த உணர்வை விளக்கி விட முடியாது..!! குடும்பத்தில் எஞ்சியிருந்த இருந்த ஒருவனும்.. இன்று காதல் இனத்தில் கலந்துவிட்டான்.. இப்போதுதான் இவன் நம் வீட்டுப்பிள்ளை.. என்பது மாதிரியான ஒருவித பெருமிதமும் நிம்மதியும் கலந்த பெருமகிழ்ச்சி எல்லோருக்கும்..!!

"இப்போத்தான் இதுக்குப்பேரு ஸ்மார்ட் ஃபோன்.. இதுக்கு முன்னாடி வேஸ்ட் ஃபோன்..!!" - மகனுடைய செல்ஃபோனில் புதிதாக சேர்ந்திருந்த மீரா என்ற பெண்ணுக்கான எண்ணை, கட்டை விரலால் தடவியபடியே பெருமையாக பார்த்தார் மணிபாரதி.

"ஹ்ம்ம்.. இந்தக்காலத்து புள்ளைகள்லாம் ரொம்ப கொடுத்து வச்சதுங்க..!! அந்தக்காலத்துல உன் பாட்டி கூட நான் பேசணும்னா.. அவ ஊர்ல அய்யனாருக்கு பொங்கல் வைக்கணும்.. இல்லனா அரண்மனைக்காரருக்கு போர் அடிக்கணும்.. அப்போத்தான் அரசுகொடிப்பாளையம் எல்லைக்குள்ளயே என்னால நொழைய முடியும்..!! அப்புறம் ஆர்மோனியக்காரரு எப்போடா மங்களம் பாடுவாருன்னு.. ராமுழுக்க பல்லை கடிச்சுட்டு காத்திருக்கணும்..!! அதுவும் அதிகாலைல.. அந்த இருட்டுக்குள்ள நின்னுக்கிட்டு.. அஞ்சு நிமிஷம் உன் பாட்டி கூட பேச முடிஞ்சதுன்னா பெரிய விஷயம் அசோக்கு..!! ஹ்ம்ம்.. இப்போலாம் அப்படியா இருக்கு... இந்தப்பக்கம் நம்பரை அடிச்சமுனா, அந்தப்பக்கம் நம்மாளு கொரலு கேக்குது..!!" எண்கள் கிறுக்கப்பட்டிருந்த பேரனின் உள்ளங்கையை தடவியவாறே, தாத்தா சொன்னவிதத்தில் பெருமிதத்துடன் சின்ன பொறாமையும் கலந்திருந்தது.

"வடபழனி போய் முருகனை பாத்துட்டு வந்தேன்டா கண்ணா.. உங்க காதல், எந்த சிக்கலும் இல்லாம கல்யாணத்துல முடியனும்னு.. உங்க ரெண்டு பேர் பேர்லயும் அர்ச்சனை செஞ்சேன்..!!" காகித மடிப்பு திறந்து, கட்டை விரலால் விபூதி தொட்டு, அசோக்கின் நெற்றியில் கோடிட்டாள் பாரதி.

இப்படி ஆளாளுக்கு ஆனந்தத்தில் திளைத்தது, அசோக்கின் மனதில் இருந்த அழுத்தத்தை அதிகரிக்கவே செய்தது. அந்தப்பெண் என்னடாவென்றால், 'ஐ லவ் யூ' சொல்லிவிட்டு, அடுத்த நொடியே 'பில் பே பண்ணு' என்கிறாள். இவர்களோ குடும்பத்திற்கு இருந்த பெரிய சாபக்கேடு நீங்கிப்போன மாதிரி, குதுகலத்தில் திளைக்கிறார்கள். அவர்களுடைய சந்தோஷம் சற்று அதிகப்படியானதாகவே தோன்றியது அசோக்கிற்கு..!!

அன்று இரவு உணவை, வீட்டில் இருக்கும் அனைவரும் ஒரே நேரத்தில்தான் உண்டார்கள். ஆறு பேரும் டைனிங் டேபிளில் அமர்ந்து, ஆனந்தமாக பேசி சிரித்தவாறே சாப்பிட்டுக்கொண்டிருக்க, அசோக் தன் மனதில் இருந்த அழுத்தத்தை, அடக்கிக் கொள்ள முடியாமல் சொல்லிவிட்டான்.

"நீ..நீங்கல்லாம்.. தேவை இல்லாம.. ரொம்ப ஓவரா சந்தோஷப்படுற மாதிரி எனக்கு தோணுது.. கொஞ்சம் கொறைச்சுக்கங்க ப்ளீஸ்..!!"

அவன் அவ்வாறு சொன்னதும், எல்லோருமே சட்டென முகம் மாறினர். குழப்ப ரேகைகள் ஓடுகிற முகத்துடன் அனைவரும் அசோக்கை ஏறிட்டனர்.

"ஏய்.. என்னடா இப்படி சொல்லிட்ட..?? நீ ஒரு பொண்ணை லவ் பண்ணிருக்க.. அதுமட்டும் இல்லாம அவளையும் ஐ லவ் யூ சொல்ல வச்சிருக்க..?? எவ்வளவு பெரிய விஷயம் இது..?? இதவிட எங்களுக்கு வேற என்னடா பெரிய சந்தோஷம் இருக்க முடியும்..?? இந்த அளவுக்கு கூட நாங்க சந்தோஷப்படலன்னா எப்படி.??" மணிபாரதி மகனிடம் கேட்டார்.

"உங்களுக்கு சந்தோஷமா இருக்கு.. எ..எனக்கு என்னவோ கொஞ்சம் உறுத்தலா இருக்கு..!!"

"ப்ச்.. நீயும் அவளை லவ் பண்ற.. அவளும் உன்னை லவ் பண்றேன்னு வாய் விட்டு சொல்லிட்டா.. அப்புறம் என்ன உறுத்தல் உனக்கு..??" சங்கீதா அண்ணனிடம் குழப்பமாய் கேட்டாள்.

"ஒருவேளை.. அந்தப் பொண்ணோட குடும்பத்துல இருக்குறவங்க.. இந்த காதலை ஒத்துக்குவாங்களோ இல்லையோன்னு பயப்படுறானோ என்னவோ..?? ஏண்டா அப்படியா..??"

பாட்டி தன் மனதில் இருந்த சந்தேகத்தை பேரனிடம் கேட்டாள். அவள் அவ்வாறு கேட்டதும், இப்போது தாத்தா பலத்த சிரிப்புடன் ஆரம்பித்தார்.

"ஹாஹாஹாஹா..!! ஏன் அசோக்கு.. அதை நெனைச்சா மனசை போட்டு கொழப்பிக்கிற..?? நம்ம கிஷோர் வீட்டுல கூடத்தான்.. ஆரம்பத்துல நம்ம சங்கீதாவை ஏத்துக்கல.. 'காதலாவது கத்திரிக்காயாவது'ன்னு அவரு அம்மா கெடந்து குதிச்சாங்க..!! அப்புறம்.. நம்ம குடும்பத்துல எல்லாரும் அவங்கட்ட பக்குவமா பேசி.. நேரா போய் அவங்களை பாத்து எடுத்து சொல்லி.. எப்படி எப்படி எல்லாமோ போராடி.. கொஞ்சம் கொஞ்சமா அவங்க மனசை கரைக்கலையா..?? இப்போ அந்த அம்மாவே 'உங்க குடும்பத்தோட சம்பந்தம் வச்சுக்க நாங்க குடுத்து வச்சிருக்கனும்'னு வாயார சந்தோஷமா சொல்றாங்க..!! உன் விஷயத்தை மட்டும் சும்மா விட்ருவோமா..?? உனக்கு நாங்கல்லாம் இருக்கோம்டா.. நாம குடும்பத்தோட போய் நாலு வார்த்தை பேசினாலே.. யாருக்குமே நம்மள புடிச்சு போகும்..!! இதுக்குலாமா கவலைப்படுறது..??"

"ஐயோ நான் அதுக்குலாம் கவலைப்படல தாத்தா..!!" அசோக் சற்றே எரிச்சலாக சொன்னான்.


"அப்புறம் என்னடா..??" அத்தனை நேரம் அமைதியாக இருந்த பாரதி இப்போது அசோக்கின் முகத்தை கூர்மையாக பார்த்தவாறு கேட்டாள்.

"எனக்கும் அந்தப் பொண்ணை பத்தி எதுவும் தெரியாது.. அவளுக்கும் என்னைப் பத்தி எதுவும் தெரியாது.. ஆனா ரெண்டு பேரும் ஐ லவ் யூ மட்டும் சொல்லிக்கிட்டோம்..!! நானும் அந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன்ல என் காதலை சொல்வேன்னு நெனைக்கல.. அவளும் திடீர்னு அப்படி ஐ லவ் யூ சொல்வான்னு எதிர்பார்க்கல.. அ..அதான் கொஞ்சம் உறுத்தலா இருக்கு..!! ஏதோ.. எக்ஸாம்க்கு போய்ட்டு எம்ப்ட்டி பேப்பர் நீட்டிட்டு வந்தவனுக்கு.. சென்டம்னு ரிசல்ட் வந்த மாதிரி இருக்கு..!!" அசோக் அந்தமாதிரி குழப்பம் அப்பிய முகத்துடன் சொல்ல, அவனையே உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்த பாட்டி, இப்போது ஒரு பெருமூச்சுடன் ஆரம்பித்தாள்.

"ஹ்ஹ்ம்ம்.. என்ன விஷயம்னு இப்போ எனக்கு கொஞ்சம் புரியுது..!! உன் குழப்பம் போறதுக்கு பாட்டி ஒன்னு சொல்லட்டுமா..??"

"என்ன..??"

"காதலை பத்தியும், காதலிக்கிறவங்கள பத்தியும்.. காதலை சொல்றதுக்கு முன்னாடி தெரிஞ்சுக்குறதை விட.. காதலை சொன்னதுக்கப்புறம் தெரிஞ்சுக்குறதுதான் அதிகம்..!! அப்படி காதலை புரிஞ்சுக்கிட்டவங்கதான் உலகத்துல அதிகம் பேர்..!!" பாட்டி அவ்வாறு தனது அனுபவப்பாடத்தை மிக எளிமையாக சொல்ல, அவளுடைய மகன் மணிபாரதி தன் அம்மாவை புன்னகையுடன் ஆமோதித்தார்.

"ம்ம்.. கரெக்டா சொன்னம்மா..!!" என்றவர் உடனே மகனிடம் திரும்பி,

"ஏண்டா.. இன்னைக்கு காதலை சொன்னதுக்காக, நாளைக்கே உனக்கு கல்யாணம்ன்ற மாதிரில நீ பேசுற..?? இப்போ என்ன ஆகிப் போச்சு..?? ரெண்டு பேரும் பேசுங்க.. பழகுங்க.. ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கங்க.. காதல்னா என்னன்னு நல்லா தெரிஞ்சுக்கங்க..!! அப்புறமா.. கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு உங்களுக்கு தோணுறப்போ, எங்ககிட்ட வந்து சொல்லுங்க.. நாங்க அந்தப் பொண்ணோட ஃபேமிலி கூட பேசி.. எந்த பிரச்னையும் இல்லாம உங்க கல்யாணத்தை முடிச்சு வைக்கிறோம்..!! அவ்வளவுதான.. அதுக்கு ஏன் உனக்கு இவ்வளவு கொழப்பம்..?? மனசை போட்டு அலட்டிக்காம.. நல்லா சந்தோஷமா இருடா..!! ம்ம்... சாப்பிடு.. சாப்பிடு..!!"

உலகத்திலேயே மிக மிக சிறிய பிரச்சினை அதுதான் என்பது போல.. மிக மிக சிம்பிளான தீர்வு ஒன்றை சொல்லி.. அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மணிபாரதி..!!

சந்தோஷத்தை வெளிப்படுத்தியதோடும், அசோக்கை சமாதானப் படுத்தியதோடும் மட்டும், வீட்டில் இருப்பவர்கள் திருப்தி அடைந்து விடவில்லை. ஆளாளுக்கு அவர்களுக்கு தெரிந்த வகையில், அசோக்கின் காதலுக்கு டிப்ஸ் கொடுத்தனர்..!!

"அந்தப் பொண்ணை அடிக்கடி வெளில கூட்டிட்டு போ.. அவ ஏதாவது ஆசைப்பட்டு கேட்டா யோசிக்காம வாங்கிக்குடு..!! இப்போ காதலிக்க ஆரம்பிச்சாச்சு.. இன்னும் காசை பாத்துக்கிட்டு கஞ்சப் பிசினாரியா இருக்காத..!! உன்னை நம்பி ஒரு பொண்ணு.. அவ வாழ்க்கையை உன்கிட்ட ஒப்படைக்க நெனைச்சிருக்கா.. அவளை சந்தோஷமா வச்சுக்க வேண்டியது உன் பொறுப்பு..!! புரியுதா..??" அசோக்கின் தலையில் நறுக்கென்று குட்டியவாறே சொன்னாள் பாரதி.

"இதுலாம் டாடி எழுதுனதுலயே பெஸ்ட் ரொமாண்டிக் நாவல்ஸ்டா அசோக்.. இத்தனை நாளா உனக்கு இதுலாம் பிடிக்காம இருந்திருக்கலாம்.. இப்போ படிச்சு பாரு.. ரசிகர்கள் ஏன் என்னை காதல்க்கதை சக்கரவர்த்தி அப்டின்னு புகழ்றாங்கனு புரிஞ்சுப்ப..!! ஏகப்பட்ட ரொமான்ஸ் டிப்ஸ்.. எக்கச்சக்கமா கொட்டி கெடக்கும்.. உனக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்..!!" ஒரு நாற்பது ஐம்பது நாவல்களை கைகொள்ளாமல் அள்ளிவந்த மணிபாரதி, அசோக்கின் கட்டிலில் இறைத்து சென்றார்.

"ஜஸ்ட் பிஃப்ட்டித்ரீ ருபீஸ்.. ஒரே ஒரு நம்பர் மட்டும் சூஸ் பண்ணிக்கலாம்.. அந்த நம்பரோட மட்டும் அன்லிமிட்டட் ஃப்ரீ டாக்டைம்..!! பேசலாம் பேசலாம்.. பேசிக்கிட்டே இருக்கலாம்..!! நானும் கிஷோரும் இந்த ப்ளான்தான் யூஸ் பண்றோம்.. உனக்கும் அண்ணிக்கும் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்..!! ட்ரை பண்ணிப்பாரு..!!" அதற்குள்ளாகவே மீராவை உறவு கொண்டாட ஆரம்பித்திருந்த சங்கீதா, ஏதோ ஒரு மொபைல் நெட்வொர்க் கம்பனியின் ப்ளானை, இலவசமாக மார்கெட்டிங் செய்தாள்.

"இதை சாதாரண வளையம்னு நெனைக்காத.. உங்க ரெண்டு பேரோட நெருக்கத்துக்கு இது ஒரு சனியன்.. இதை கழட்டி எடுத்தாத்தான், பின்னாடி உக்கார்ற அவளுக்கு பிடிமானம் இருக்காது.. பேலன்ஸ்க்கு உன்னை புடிச்சுப்பா..!!"

அசோக்கின் பைக் பின் சீட்டுக்கு அருகே இருந்த அந்த ஸ்டீல் வளையத்தை, ஸ்பானர் உதவியுடன் கழட்டிக்கொண்டே தாத்தா கண்ணடித்தார். அசோக்கோ நெற்றியை பிசைந்து கொண்டான்.

சாப்பிடும்போது அசோக் எழுப்பிய விஷயத்தை மற்றவர்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும், பாரதி அவ்வாறு எடுத்துக் கொள்ளவில்லை. கணவர் சொன்ன தீர்வில் மகன் இன்னும் சமாதானம் ஆகவில்லை என்பதை, அவனுடைய முகத்தை பார்த்தே புரிந்து கொண்டாள். ஆனால் அப்போதே அத்தனை பேர் முன்னிலையிலும் அவனை துருவி துருவி கேட்க அவள் விரும்பவில்லை. அப்போது அமைதியாக இருந்துவிட்டு, அன்று இரவு அவளுடைய மடியில் அவன் தலை சாய்த்திருந்த வேளையில், அவனது தலை முடியை கோதி விட்டவாறே மெல்ல கேட்டாள்.

"அப்போ ஏண்டா அப்படி சொன்ன...?"

"எ..எப்படி..??"

"மனசுல ஏதோ உறுத்தல்.. ஏதோ கொழப்பம்.. அப்டின்னு..!!"

பாரதி அவ்வாறு கேட்கவும், அசோக் சில வினாடிகள் அமைதியாக இருந்தான். பிறகு அன்று புட்ஃகோர்ட்டில் நடந்த விஷயங்களை அம்மாவிடம் சுருக்கமாக எடுத்துரைத்தான். அசோக் சொன்னதை எல்லாம் பாரதி பொறுமையாக கேட்டுக் கொண்டாள். கேட்டு முடித்தபிறகும் அவள் அமைதியும், யோசனையுமாக இருக்க, அசோக்கே தொடர்ந்தான்.

"நானாவது வேற வழி இல்லாம ஐ லவ் யூ சொன்னேன்.. அவ கைல காசு இல்லாம காதலிக்கிறேன்னு சொல்லிட்டாளோன்னு.. கன்ஃப்யூஸ்டா இருக்கு மம்மி..!!" மகன் பரிதாபமாக சொன்னவிதம், பாரதிக்கு சிரிப்பை வரவழைத்தது.

"ஹாஹாஹாஹா...!! ச்சே.. ச்சே.. அப்படிலாம் எதுவும் இருக்காதுடா..!! நீ ஏன் அப்படி நெனைக்கிற.. மொத நாளே உன்கிட்ட ரொம்ப உரிமை எடுத்துக்கிட்டான்னு நெனச்சுக்கோ..!!"

"இல்ல மம்மி.. உனக்கு புரியல..!! நான் அவ கேரக்டர் பத்தி நெனச்சு வச்சிருந்ததுக்கும்.. அவ திடீர்னு அப்படி ஐ லவ் யூ சொன்னதுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்ல.. எனக்கென்னவோ சந்தேகமாவே இருக்கு..!!"

"ப்ச்.. அதான் அவளும் உன்னை அடிக்கடி அங்க பாத்திருக்கேன்னு சொல்லிருக்காள்ல..?? உன் மனசுல ஒரு ஆசை இருந்த மாதிரி.. அவ மனசுலயும் அதே ஆசை இருந்திருக்கும்..!!"

"ம்ம்ம்... உன் லாஜிக்லாம் கரெக்டாத்தான் இருக்கு.. ஆனா எனக்குத்தான் மனசு சமாதானம் ஆக மாட்டேன்னுது..!!"

"அடடா... இதுக்குப்போய் ஏன் இப்படி ஃபீல் பண்ற..?? ம்ம்ம்ம்.... சரி.. அவதான் ஃபோன் நம்பர் குடுத்திருக்காள்ல.. நீ சந்தேகப்படுற மாதிரிலாம் இருந்தா, அவ ஏன் ஃபோன் நம்பர்லாம் குடுக்கணும்..??" அம்மா அந்தமாதிரி கேட்கவும், இப்போது அசோக்கிற்கும் 'அதான..??' என்று தோன்றியது.

"நீ தேவை இல்லாம மனசை போட்டு கொழப்பிக்காம.. அவகூட பேசு..!! அவ மனசுல என்ன இருக்குன்னு தெளிவா கேட்டு புரிஞ்சுக்கோ..!!"

பாரதி இதமான குரலில் சொல்லிவிட்டு அமைதியானாள். அசோக்கின் மனதிலும் இப்போது குழப்பம் நீங்கி ஒருவித நிம்மதி பரவியது. அந்த நிம்மதியுடன் சேர்ந்து புதுவித ஆசையும் இப்போது அவனது மனதுக்குள் முளைத்தது. 'மீராவுக்கு இப்போது ஃபோன் செய்து பேசினால் என்ன..??' என்ற ஆசை. அந்த ஆசைவந்ததுமே அசோக்கின் இதயத்தில் ஒரு படபடப்பு ஏற ஆரம்பித்தது. உடனே அவளுடைய குரலை கேட்க வேண்டும் என்றொரு உந்துதல் உள்ளத்துக்குள் உருவாகியது. தலை கோதி விட்டுக்கொண்டிருக்கிற அம்மாவை, மெல்லிய குரலில் அழைத்தான்.

"மம்மி...!!"

"ம்ம்...??"

"உ..உனக்கு தூக்கம் வரலையா..??"

"இல்ல.. ஏன் கேக்குற..??"

"பதினோரு மணியாக போகுதே..??"

"பரவாலடா.. படுத்துக்கோ.. நீ தூங்குனப்புறம் மம்மி போறேன்..!!"

"இ..இல்ல மம்மி.. நான் தூங்கிக்கிறேன்.. நீ கெளம்பு.. டாடி வெயிட் பண்ணிட்டு இருக்க போறாரு..!!"

"ஹாஹா.. அவர்லாம் அப்போவே தூங்கிட்டாரு.. நீ படுத்துக்கோ..!!"

"ஐயோ.. நான்தான் தூங்கிக்கிறேன்னு சொல்றேன்ல.. நீ கெளம்பு.. உன் ரூமுக்கு போ..!!"

மகனுடைய குரலில் தொணித்த எரிச்சலை உணர்ந்த பாரதி, இப்போது அவனை வித்தியாசமாக பார்த்தாள். எப்போதும் 'நான் தூங்கும்வரை இருந்துவிட்டு செல்' என்று ஏக்கமாய் சொல்கிறவன், இன்று 'போ.. போ..' என்று விரட்டுகிறானே..?? குழப்பத்துடனே அசோக்கின் முகத்தை வியப்பாக பார்த்தாள். ஓரிரு விநாடிகள்தான். மகனுடைய கண்களில் தெரிந்த கள்ளத்தனத்தை கண்டுகொண்டதும், காரணம் புரிந்து போனது பாரதிக்கு. உடனே அவனுடைய காதை பிடித்து திருகியவள், ஒரு போலிக்கோபத்துடன் சொன்னாள்.

"திருட்டுப்பயலே.. 'என் ஆளோட பேசப்போறேன், எந்திரிச்சு போ'ன்னா.. போயிட்டு போறேன்.. அதுக்கு ஏன்டா என்னன்னவோ சொல்ற..??"

"ஐயையோ.. அ..அதெல்லாம் ஒன்னுல்ல மம்மி.. நான் ஒன்னும் இப்போ அவகூட பேசப்போறது இல்ல.. நா..நாளைக்கு பேசிக்கிறேன்..!!"

"ம்ம்.. ம்ம்.. தெரியும் தெரியும்.. நடிக்காத..!! சரி.. நான் கெளம்புறேன்.. எவ்வளவு நேரம் வேணா நீ பேசிக்கோ..!!"

சொல்லிவிட்டு பாரதி புன்னகைக்க, இப்போது அசோக் பதில் ஏதும் சொல்லாமல் வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்டான். பாரதி அவனுடைய அறையை விட்டு வெளியேறினாள். அசோக் அதன்பிறகும் சிறிது நேரம் எதுவும் செய்யாமல் படுக்கையிலேயே அமர்ந்திருந்தான். அப்புறம் எழுந்து அறையை விட்டு வெளியே வந்து பார்த்தான். எல்லோரும் அவரவர் அறைகளில் அடைந்து விட்டார்களா என்று, அப்படியும் இப்படியுமாய் பார்வையை வீசி உறுதி செய்து கொண்டான். திருப்தியானவன், மீண்டும் தன் அறைக்குள் வந்து தாழிட்டுக் கொண்டான். வேறொன்றும் இல்லை.. அவன் தனது காதலியுடன் பேசுவதை வேறு யாராவது ஒட்டுக் கேட்டு, அவனை கேலி செய்துவிட்டால்..??

மெத்தையில் விழுந்தவன், தனது செல்போனை எட்டி எடுத்தான். மீரா தந்த எண்ணுக்கு டயல் செய்தான். தொண்டையை ஒருமுறை செருமியவன், செல்போனை காதில் வைத்துக்கொண்டான். அடுத்த முனையில் கால் பிக்கப் செய்யப்படுவதற்காக, ஒருவித படபடப்புடன் காத்திருந்தான்.

"கிர்ர்ர்ர்ர்ர்... கிர்ர்ர்ர்ர்ர்... கிர்ர்ர்ர்ர்ர்..."

ரிங் சென்று கொண்டே இருந்தது. சிலவினாடிகள். பிறகு யாராலும் பிக்கப் செய்யப்படாமலே கட் ஆனது. அசோக்கிற்கு சற்றே ஏமாற்றமாக இருந்தது. மீண்டும் முயன்றான். மீண்டும் அதே ரிசல்ட்..!! மீண்டும்.. மீண்டும்.. மீண்டும்..!! ஒரு ஐந்தாறு முறை முயன்றவன், பிறகு அலுத்துப்போனான். 'ச்சே...' என்று எரிச்சலாக, செல்போனை மெத்தையின் ஓரமாக விட்டெறிந்தான். 'ப்ச்.. என்னது இது.. மொத மொத பேசணும்னு நெனைக்கிறப்போ.. இப்படி ஆயிடுச்சு..' என்று சலிப்பை உதிர்த்தான். அப்படியே படுக்கையில் சாய்ந்து புரண்டு படுத்துக் கொண்டான். கண்கள் மூடி சிறிது நேரம் அமைதியாக கிடந்தான்.

ஒரு ஐந்து நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. அவனுடைய செல்போன் அலறியது. உடனே அசோக் பரபரப்பாக எழுந்தான். 'மீராவாகத்தான் இருக்கவேண்டும்..' என்று எண்ணியவன், சந்தோஷமும் பதற்றமுமாய் செல்போனை எட்டி எடுத்தான். டிஸ்ப்ளே பார்த்ததும் ஏமாற்றமும், குழப்பமுமாய் நெற்றி சுருக்கினான். வேறு ஏதோ புதிய எண்ணிலிருந்து கால்..!! 'யாராக இருக்கும்.. இந்த நேரத்தில்..??' என்று ஒருகணம் யோசித்தவன், பிறகு கால் பிக்கப் செய்து காதில் வைத்துக் கொண்டான்.

"ஹலோ..!!" என்றான்.

"ஹலோ.. யாருங்க நீங்க..??" - அடுத்த முனையில் ஒரு தடித்த ஆண்குரல்.

"என்னங்க இது.. எனக்கு கால் பண்ணிட்டு என்னையே யார்னு கேக்குறீங்க..?? மொதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க..!!"

"என் பேரு வாசு..!! உங்க நம்பர்ல இருந்து 98414 16476-ன்ற நம்பருக்கு.. ஒரு ஆறு மிஸ்ட் கால் வந்திருக்கு.. அதான் நீங்க யார்னு.."

அந்த ஆள் கேட்க, அசோக்கின் உடம்பில் உடனடியாய் ஒரு உதறல்..!! 'ஒருவேளை மீராவின் அப்பாவாக இருக்குமோ..?? ஐயையோ.. இப்போது எப்படி பேசி சமாளிப்பது..??'

"ஓ.. அ..அதுவா.. அ..அது.. மீ..மீ..மீராவோட நம்பர்ல..." அசோக் தடுமாறினான்.

"ஆமாம்..!!!! நான் அவளோட புருஷன்தான் பேசுறேன்.. என் பொண்டாட்டிக்கு இந்த நேரத்துல எதுக்கு நீ கால் பண்ணுனன்னு தெரிஞ்சுக்கலாமா..??" அசோக் இப்போது பக்கென அதிர்ந்து போனான்.

"எ..என்னது..??? பொண்டாட்டியா...???" காதில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியாமல் கத்தினான்.

"ப்ச்.. ஆமாண்டா...!!! யார்டா நீ..??? உனக்கு எப்படி இந்த நம்பர் கெடைச்சது..??" அசோக்கின் தடுமாற்றத்தை உணர்ந்து அந்த ஆள் மரியாதையை வெகுவாக குறைத்துக் கொண்டான்.

"அ..அது.. அ..அவங்கதான் குடுத்தாங்க.."

"ஓஹோ..?? அவளே குடுத்தாளா..?? ம்ம்.. எத்தனை நாளா உங்களுக்குள்ள பழக்கம்..??"

"இ..இப்போதான்.. கொ..கொஞ்ச நாளா.."

"ம்ம்.. நான் சந்தேகப்பட்டது சரியா போச்சு..!! எங்கல்லாம் ஊர் சுத்திருக்கீங்க ரெண்டு பேரும் .. எனக்கு தெரியாம என்னல்லாம் செஞ்சிருக்கீங்க..?? ம்ம்..?? கேக்குறேன்ல.. சொல்லுடா..!!!!" வாசு ஆத்திரமாய் கத்த, அசோக் மிரண்டு போனான்.

"ஐயோ ஸார்.. எ..எனக்குலாம் எதுவும் தெரியாது.. அவங்களுக்கு கல்யாணம் ஆனது கூட எனக்கு தெரியாது.. அ..அவங்கதான் என்னை ரொம்ப நாளா சைட் அடிச்சேன்.. காதலிக்கிறேன்லாம் சொன்னாங்க.."

"ஓ.. காதலிக்கிறேன்னு சொன்னாளா அந்த கருவா சிறுக்கி..?? வச்சுக்குறேன் அவளை..!! சரி.. உன் பேர் அட்ரஸ் சொல்லு.. உன்னை நான் நேர்ல பாக்கணும்..!!"

"இ..இங்க பாருங்க ஸார்.. நீங்க நெனைக்கிற மாதிரி தப்பா எதுவும் நடக்கல..!!"

"தப்பா சரியான்னு நான் முடிவு பண்ணிக்கிறேன்டா.. நீ உன் அட்ரஸ் குடு..!!" வாசுவின் குரலில் உக்கிரம் ஏறியிருக்க, அதற்கு மேலும் பேச்சை தொடர அசோக்கிற்கு விருப்பம் இல்லை.

"ஸார்.. நான்தான் என்மேல தப்பு எதுவும் இல்லன்னு சொல்றேன்ல.. எதுவா இருந்தாலும் உங்க வொய்ஃப்ட்டயே கேட்டுக்கங்க.. என்னை ஆளை விடுங்க..!!"

அவசரமாய் சொல்லிவிட்டு அசோக் காலை கட் செய்தான். உடனே வாசுவின் எண்ணிலிருந்து இவனுக்கு மீண்டும் கால் வர, அதை பிக்கப் செய்யாமல் தவிர்த்தான். செல்ஃபோன் ஒரு அரை நிமிடம் அலறிவிட்டு அமைதியானது. அது அமைதியாகி நெடுநேரம் ஆகியும் அசோக்குடைய இதயத்தில் ஏறியிருந்த படபடப்பு மட்டும் அடங்கவில்லை. கொஞ்ச நேரத்திற்கு எதுவுமே புரியவில்லை அவனுக்கு..!!

'மீராவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டதா..?? அப்புறம் ஏன் அதை என்னிடம் மறைத்தாள்..?? ச்சே.. எப்படி எல்லாம் பேசி என்னை ஏமாற்றிவிட்டாள்..?? நானும் தேவையற்ற கற்பனைகளை எல்லாம் மனதில் வளர்த்துக் கொண்டேனே..??' என்று ஆரம்பத்தில் நினைத்தவனுக்கு திடீரென ஒருவிஷயம் புத்தியில் பளிச்சிட்டது. 'வெயிட்.. வெயிட்.. அந்த ஆள் கருவா சிறுக்கி என்றானே.. மீராவின் கலருக்கும் அந்த கமென்ட்டுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லையே..?? ஒருவேளை இப்படி இருக்குமோ.. நான் கால் செய்தது மீராவின் நம்பரே இல்லையோ..?? ராங் காலா அது..?? இல்லையே.. நான் மீரா என்றதுமே 'நான் அவளோட புருஷன்' என்றானே அந்த வாசு..?? ஒருவேளை இது வேறொரு மீராவாக இருக்குமோ..?? ஒன்றும் புரியவில்லையே..??'

அசோக்கின் மனதில் பலப்பல குழப்பமான கேள்விகள்..!! மீரா தனக்கானவள் என்று முடிவே செய்துவிட்ட அவன் மனது, அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை நம்ப மறுத்தது. 'இது.. வேறு ஏதோ மீராவாக இருக்க வேண்டும்.. வேறு ஏதோ மீராவாக இருக்க வேண்டும்..' என்று திரும்ப திரும்ப சொல்லி தன் மனதை சமாதானப் படுத்திக் கொண்டான். படுக்கையில் வீழ்ந்தவன் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தான்.

அவனுடைய வேண்டுதல் கடவுள் காதில் விழுந்தது போல, நள்ளிரவில் அவனுடைய நம்பருக்கு அந்த கால் வந்தது. மீரா என்று அவன் சேகரித்து வைத்திருந்த நம்பரில் இருந்து..!! ஒருவித குழப்பத்துடனே கால் பிக்கப் செய்து பேசினான்.

"ஹலோ..!!" என்றான் மெலிதான பதற்றத்துடனே.

அவ்வளவுதான்..!! அடுத்த முனையில் ஒரு கர்ண கொடூரமான பெண்குரல் படபடவென பொரிந்து தள்ள ஆரம்பித்தது. அந்தக் குரலை கேட்ட அடுத்த நொடியே, அது தன்னுடைய மீரா இல்லை என்று அசோக்கிற்கு புரிந்து போனது. ஆனால் அதற்காக சந்தோஷப் பட முடியாமல், அந்தப்பெண் வண்டை வண்டையாக அசோக்கை வறுத்தெடுத்தாள்.

"ஏய்ய்.. டொச்சு.. யார்றா நீ..?? என் போனுக்கு கால் பண்ணி கீற..??"

"ஹலோ.. கொ..கொஞ்சம் மரியாதையா பேசுங்க.."

"அடிங்.. கொய்யால... உன்கு இன்னாடா மருவாதி என் டோமரு.. பேமானி..!! இன்னாடா சொல்லிக்கின அந்தாளாண்ட..??"

"ஹையோ.. நா..நான்... நான்லாம் ஒன்னும் சொல்லலை.."

"ஏய்ய்.. இன்னா.. என்னான்டயே டபாய்கிறியா..? அப்டியே வுட்டேன்.. பல்ப்பு பீஸாப் போடும்..!! அந்தாளே ஒரு கொரங்கு கம்னாட்டி.. அந்த கொரங்குக்கு கோட்டர் ஊத்தி விட்டுனுக்குற நீயி.. கோச்சுக்குனு போயிட்டான் இப்போ..!! அல்லாம் உன்னால.. பாடு.. பன்னாடை.. பொறம்போக்கு..!!"

"ஹலோ.. திட்டாதீங்க ப்ளீஸ்.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க. ஆக்சுவலி இட்ஸ் நாட் மை ஃபால்ட்.. இட்ஸ் ஜஸ்ட் எ மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்..!!"

"ஏய்ய்.. அல்லாம் பண்ணிட்டு இன்னா பீட்டர் வுட்னுகிற..?? அந்தாள் மட்டும் திரும்ப வரல.. மவன உன் மாஞ்சாசோத்தை கீறி துன்னுருவேன்.. சொல்ட்டேன்..!! சோமாறி.. கயித.. கஸ்மாலம்.."

அசோக்கால் அதன்பிறகும் அவளுடைய வசவுகளை தாங்கிக்கொள்ள முடியவில்லை. படக்கென காலை கட் செய்தான். உதடுகள் குவித்து 'உஃப்.. உஃப்.. உஃப்..' என்று ஊதிக்கொண்டான். மீண்டும் அந்தப் பெண்ணிடம் இருந்து கால் வர, 'இது வேலைக்காவாது' என்று முடிவு செய்த அசோக், செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்தான். தூக்கி ஓரமாக போட்டுவிட்டு, படுக்கையில் விழுந்தான். போர்வையால் தன் உடலை முழுவதுமாக மூடிக் கொண்டான். இமைகளை இறுக்க மூடிக்கொண்டு உறங்கிப்போக முயன்றான்.

'ச்சே.. என்ன பெண் இவள்..?? இவளை எல்லாம் எப்படி கட்டி மேய்க்கிறான் அந்த வாசு..?? ப்ச்... அந்த மீரா ஏன் இப்படி செய்தாள்..?? வேறு யாருடைய நம்பரையோ எனக்கு கொடுத்து.. ச்சே.. அவளால் எவ்வளவு டென்ஷன்..?? இப்படி ஒரு நல்ல.. இல்லை இல்லை.. ஒரு கேவலமான தம்பதிகளின் பிரிவுக்கு காரணமாகி விட்டேனே..??'

எரிச்சலிலும் குழப்பத்திலும் தவித்தவன், எப்படியோ அன்று இரவு உறங்கிப் போனான். காலையில் குளித்து முடித்து ஆபீஸுக்கு கிளம்பும் போதுதான், ஆஃப் செய்து வைத்திருந்த செல்ஃபோனை எடுத்து, மீண்டும் ஆன் செய்தான். அதற்காகத்தான் காத்திருந்த மாதிரி, உடனே செல்போன் அலறியது. ஏதோ ஒரு புது எண்ணிலிருந்து கால்..!! எடுக்கலாமா வேணாமா என்று ஒருகணம் யோசித்தவன், பிறகு பிக்கப் செய்தான்.

"ஹலோ..!!"

"ஹலோ..!!" அடுத்த முனையில் ஒரு மென்மையான பெண்குரல்.

"ம்ம்.. யாரு..??"

"நான் யார்னு உங்களுக்கு தெரியாது.. நீங்க யார்னும் எனக்கு தெரியாது.. ஆனா உங்களுக்கு நன்றி சொல்ல நான் கடமைப் பட்டிருக்கேன்..!! உங்களாலதான் இன்னைக்கு என் புருஷன் எனக்கு திரும்ப கெடைச்சிருக்காரு.. என் புருஷன்ட்ட உண்மைலாம் சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க..!!" அந்தப்பெண் பேசிக்கொண்டே போக, அசோக்கிற்கு எதுவும் புரியவில்லை.

"ஹலோ.. நீங்க யார் பேசுறீங்கன்னு மொதல்ல சொல்லுங்க..!!"

"நான் மிசஸ் வாசு பேசுறேன்.. நேத்து என் ஹஸ்பன்ட் கூட நீங்க பேசுனிங்க.. கரெக்டா..??" அந்தப் பெண் கேட்க, இப்போது அசோக் குழப்பத்துடன் நெற்றியை சுருக்கினான்.

"ஓ.. நீங்கதான் அவர் மிசஸா..?? அப்போ நேத்து நைட்டு எனக்கு கால் பண்ணி என்னை திட்டுனது..??"

"தெ..தெரியலையே.. நான் காலைல இருந்து உங்க நம்பருக்கு ட்ரை பண்ணி.. இப்போத்தான் கெடைச்சது..!!"

"இல்லைங்க.. அவங்களதான் வொய்ஃப்னு மிஸ்டர் வாசு சொன்னாரு..!!"

"ஓ.. அந்த பஜாரியா..??"

"கரெக்டா சொன்னிங்க.. யாருங்க அது..??"

"எ..என்ன கேக்குறீங்க நீங்க.. அவ யார்னே உங்களுக்கு தெரியாதா..?? அப்புறம் எப்படி..???? எ..எனக்கு ஒன்னும் புரியல..!!"

"எனக்கும் ஒண்ணுமே புரியலைங்க..!! ஆக்சுவலா தப்பு என் மேலதான்.. தப்பான நம்பருக்கு கால் பண்ணிட்டேன்.. அப்புறம் ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்..!!"

என்று ஆரம்பித்த அசோக், முதல் நாள் இரவு நடந்த விஷயங்களை அந்த பெண்ணுக்கு சுருக்கமாக எடுத்துரைத்தான்.

"அந்த மீராதான் இந்த மீரான்னு நெனச்சுட்டு.. நான் பாட்டுக்கு என்னன்னவோ சொல்லிட்டேன்..!!" அசோக் சொல்ல, அந்தப்பெண் இப்போது சிரித்தாள்.

"ஹாஹா.. எனக்கு இப்போ நல்லா புரிஞ்சு போச்சு.. ஹாஹா.. ஹையோ ஹையோ..!!"

"என்னங்க.. சிரிக்கிறீங்க..??"

"நீங்க மீரான்னு சொன்னது.. என் வீட்டுக்காரர் காதுல மீனான்னு விழுந்திருக்கும் போல..??"

"மீனாவா..?? அது யாரு..??"

"நேத்து உங்களுக்கு கால் பண்ணி திட்டுனான்னு சொன்னீங்களே.. அவதான்..!! சரியான எடுபட்ட சிறுக்கி.. இத்தனை நாளா என் புருஷனை மயக்கி வச்சிருந்தா.. நேத்து உங்கட்ட பேசுனப்புறம் என் புருஷனுக்கும் அவளுக்கும் பயங்கர சண்டை போல.. இப்போ அவரு எங்கிட்டயே திரும்ப வந்துட்டாரு.. 'அவளை பத்தி நல்லா புரிஞ்சுக்கிட்டேன் துளசி.. இனிமே நீதான் எனக்கு எல்லாம்'னு.. நடுராத்திரில வீட்டுக்கு வந்து அழுவுறாரு..!! ஹ்ம்ம்... எப்படியோ.. உங்களோட ராங் காலால எனக்கு என் வாழ்க்கை திரும்ப கெடைச்சிடுச்சு.. ரொம்ப தேங்க்ஸ் அண்ணா.. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.. உங்க உதவியை இந்த தங்கச்சி எப்போவும் மறக்க மாட்டேன்..!!"

அந்த துளசி 'அண்ணா.. அண்ணா..' என்று அன்பை பொழிந்துவிட்டு, இணைப்பை துண்டித்தாள். அவளுடன் பேசிமுடித்த பிறகுதான், அசோக்கிற்கு நேற்று இரவு தொலைந்து போன உற்சாகம் திரும்ப கிடைத்தது. கெட்டதிலும் ஒரு நல்லது நடந்திருக்கிறது என்று தோன்றியது. தவறான அழைப்பினால் சரியானதொரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டான். மீரா தவறான நம்பர் கொடுத்துவிட்டாளே என்ற எரிச்சல் கூட அவனிடமிருந்து அப்போது மறைந்து போனது.

அந்த சந்தோஷத்துடனே சாப்பிட்டுவிட்டு ஆபீஸ் கிளம்பினான். பைக்கில் வடபழனியை அடைந்து, சிக்னலுக்காக காத்திருந்த போது, அவனுடைய செல்போன் மீண்டும் பதறியது. மீண்டும் ஒரு எண்ணிலிருந்து கால்..!! இந்த முறை எந்த தயக்கமும் இல்லாமல், இயல்பாக அந்த காலை அட்டண்ட் செய்தான்..!! அதற்காகத்தான் காத்திருந்த மாதிரி அடுத்த முனையில் ஒரு ஆள், ஆத்திரமாக சீறினான்.

"டேய்.. யார்டா நீ.. எந்த ஊரு உனக்கு..?? எங்க மீனாக்கா அந்த ஆளை எவ்ளோ கஷ்டப்பட்டு உஷார் பண்ணி வச்சிருந்தது தெரியுமா..?? ஒன்னு ஒன்னா அவன் சொத்துலாம் உருவலாம்னு ப்ளான் போட்ருந்தோம்.. இப்படி ஒரே கால்ல எல்லாத்தையும் காலி பண்ணிட்டியேடா நாதாரி..?? உன்னை நாங்க சும்மா விட மாட்டோம்டா..!!"

"ஹலோ.. நா..நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்கங்க.. அ..அதுலாம் நான் வேணும்னு பண்ணல.. எல்லாம் ஒரு.."

"ஏய்.. மூட்றா.. பேசுன.. பேத்துடுவேன்..!! நான் சொல்றதை மட்டும் தெளிவா கேட்டுக்கோ.. நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எங்களுக்கு தெரியாது.. நாளைக்கு நைட்டு நாங்க சொல்ற எடத்துக்கு பத்து லட்ச ரூவா பணத்தோட வர்ற.. என்ன.. புரியுதா..??"

"என்னது..?? பத்து லட்சமா..??"

"ஆமாம்.. நீ பண்ணுன காரியத்துக்கு ஃபைனு..!!" அந்த ஆள் கூலாக சொல்ல, அசோக் டென்ஷன் ஆனான்.

"யோவ்.. என்ன வெளையாடுறியா..?? பணம் வேணுமாம்ல..?? பணம்லாம் ஒன்னும் தர முடியாது.. வேணுன்னா ஒரு ஸாரி சொல்லிக்குறேன்..!! ஸாரி..!!!! ஓகேவா..??" இப்போது அந்த ஆள் டென்ஷன் ஆனான்.

"என்னது.. ஸாரியா..?? என்னடா.. கொழுப்பா உனக்கு..?? என்ன கேட்டுட்டு இருக்குறோம்.. என்ன சொல்லிட்டு இருக்குற நீ.. பத்து லட்சம் எங்க இருக்கு.. உன் பிஸ்கோத்து ஸாரி எங்க இருக்கு..?? பணம் வரலன்னா உன் உசுரு உனக்கு இல்ல மவனே.. ஞாபகம் வச்சுக்கோ.. நீ எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சு உன்னை போட்டுத்தள்ளாம விடமாட்டோம்..!!"

"யோவ்.. இந்த மெரட்டலுக்குலாம் நான் பயப்பட மாட்டேன்.. பணம்லாம் தர முடியாது.. உன்னால முடிஞ்சதை பாத்துக்கோ.. போ..!!"

அசோக் கெத்தாக சொல்லிவிட்டு ஃபோனை கட் செய்தான். திரும்பவும் அதே நம்பரில் இருந்து கால் வர, கண்டுகொள்ளாமல் செல்போனை பாக்கெட்டில் போட்டான். 'நன்னாரிப்பயலுக.. ஒத்தை ராங் கால் பண்ணதுக்கு பத்து லட்சம் ஃபைனாம்.. ரொம்பத்தான் ஆசையெடுத்து அலையுரானுக..!!' என்று மனதுக்குள்ளேயே அந்த ஆளை திட்டியவாறு, எரிச்சலுடன் சிக்னலை ஏறிட்டான். இன்னும் சிவப்புதான் ஒளிர்ந்து கொண்டிருந்தது..!!

அப்போதுதான் அவனுக்கு பக்கவாட்டில் வெண்ணிற அந்த டாடா சுமோ வந்து சரக்கென்று நின்றது. உள்ளே தடிதடியாய் நான்கைந்து ஆட்கள். ஒருத்தன் முகத்திலும் கடுகளவு கூட கண்ணியம் இல்லை. எல்லோரும் கரடுமுரடு ஆசாமிகளாக காட்சியளித்தனர். சிக்னலுக்காக நின்றவர்கள் அவர்களுக்குள்ளாகவே பேசிக்கொள்ள, கவனம் கலைந்த அசோக் அவர்களை திரும்பி பார்த்தான்.

"என்னடா ஆச்சு..??"

"எடுக்க மாட்டேன்றான் மாமு..!! என்ன பண்ணலாம்..??"

"பரவால விடு.. நம்ம எஸ்.ஐட்ட அந்த நம்பரை குடுத்து, அவன் அட்ரஸ் ட்ரேஸ் பண்ண சொல்லலாம்..!!"

"ங்கொய்யால.. அவன் மட்டும் பணம் தரமாட்டேன்னு மொரண்டு புடிக்கட்டும்.. அவனுக்கு என் கையாலதான் மாமு சாவு..!!"

முகத்தில் வெட்டு காயத்துடன் கொடூரமாக இருந்த அவன், சொல்லிக்கொண்டே கையிலிருந்த கத்தியால் தாடியை சொறிந்தான். அரையடிக்கும் அதிகமான நீளத்தில், அகலமாக பல்பல்லாக பளபளத்தது அந்த கத்தி..!! அதை பார்த்துக் கொண்டிருந்த அசோக் அப்படியே ஆடிப் போனான். அடிவயிறு கலங்கிப் போனது அவனுக்கு.

'ஆத்தி.. கொலைகாரப்பயலுக கூடவா இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருந்தோம்..?? கத்தியும் கையுமால அலையுறானுக..??'

விரிந்த விழிகளுடனும், ஆவேன பிளந்த வாயுடனும் அந்த கத்தியையே சிலவினாடிகள் 'பெக்கே பெக்கே' என்று பார்த்தவன், அப்புறம் பயத்தில் எச்சில் கூட்டி விழுங்கியாவாறே, மெல்ல தலையை திருப்பிக்கொண்டான். கேஷுவலாக கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொள்வது மாதிரி பாவலாவுடன், ஒரு கையை சட்டை பாக்கெட்டுக்குள் விட்டு தன் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்தான்.



அத்தியாயம் 9

அப்புறம் ஒரு அரைமணி நேரம் கழித்து, அசோக் அந்த செல்போனை மீண்டும் ஸ்விட்ச் ஆன் செய்தபோது, வடபழனியில் இருக்கும் ஒரு மொபைல் ஷாப்பில் இருந்தான். புதியதொரு சிம் கார்டை அவனுடைய செல்போன் அல்ரெடி உள்வாங்கியிருந்தது.

"நம்பர் எப்போண்ணா ஆக்டிவேட் ஆகும்..??"

"நைட்டுக்குள்ள ஆகிடும் ஸார்.. நான் கேரண்டி..!!"

"ஓகேண்ணா.. தேங்க்ஸ்..!!"

சொன்ன அசோக், செல்போனை தூக்கி பாக்கெட்டில் போட்டுக்கொண்டான். பழைய சிம்மை கையில் எடுத்து, 'த்தூ.. த்தூ.. த்தூ..' என்று மனதுக்குள்ளேயே மூன்று முறை காறித்துப்பி, அந்தக்கடையில் இருந்த குப்பைக்கூடையிலேயே விட்டெறிந்தான்.

"டபுள் ஃபைவ்.. ட்ரிப்பில் ஃபைவ்னு முடியுது மச்சான்.. நல்லா ஃபேன்சி நம்பர் மாதிரி இருக்கு..!!" புது சிம்கார்ட் அட்டையை சுரண்டிக்கொண்டே சாலமன் இளிக்க, அசோக் அவனை கடுப்புடன் முறைத்தான்.

"கெளம்புடா வெண்ணை..!!" என்று எரிந்து விழுந்தான். திரும்பி நடந்தான்.

"ம்க்கும்.. எவ மேல இருக்குற கடுப்பையோ, என் மேல காட்டு..!!"

சாலமன் முனகிக்கொண்டே அவனுடன் நடந்தான். இருவரும் பைக்கில் ஏறிக்கொள்ள, அது ஆபீஸை நோக்கி பறந்தது.

அசோக் நிஜமாகவே மீரா மீது பயங்கர கடுப்பில் இருந்தான். அவளால் நேற்று இரவில் இருந்து அவன் மாற்றி மாற்றி அனுபவித்த டென்ஷனை எண்ணி எண்ணி எரிச்சலானான். 'எதுக்கு இப்படி ஒரு சிக்கல்ல என்னை மாட்டிவிட்டா.. ஊர் பேர் தெரியாதவன்லாம் என் உசுரை எடுக்க அலைஞ்சுட்டு இருக்கானுக.. ச்சே.. இன்னைக்கு வரட்டும்.. அவளை வச்சுக்குறேன்..' என்று மனதுக்குள்ளேயே கருவிக் கொண்டான்.

ஆபீஸில்..

"அவ நம்பரை உன் கைல எழுதுனதுக்கே.. உன் நம்பர் காலி ஆகிடுச்சு மச்சி..!! ஐ லவ் யூ வேற சொல்லிருக்கா.. அதுக்கு இன்னும் என்னென்ன ஆகப் போகுதோ..?? கொஞ்சம் கேர்ஃபுல்லா இரு..!!" வேணு வேறு அசோக்குக்கு டென்ஷன் ஏற்றினான்.

"அவ ஒன்னும் என் மேல இருக்குற ஆசைல ஐ லவ் யூ சொன்ன மாதிரி எனக்கு தோணலைடா..!!" அசோக் மனதில் இருந்த குழப்பத்தை வெளியே சொல்லிவிட,

"ஹேய்.. ஏண்டா அப்படி சொல்ற..??" கிஷோர் சட்டென அசோக்கிடம் கேட்டான்.

அசோக் இப்போது தன் மனதில் இருந்த குழப்பத்தை நண்பர்களிடம் தெளிவாக எடுத்துரைத்தான். பேச ஆரம்பிப்பதற்கு முன்பே மீரா அவனை கலாய்த்தது.. அப்புறம் பரிட்டோ வாங்கி தந்தால்தான் மேற்கொண்டு பேசுவேன் என்றது.. பில்லுக்கு பணம் கேட்டதும், திடீரென ஐ லவ் யூ சொன்னது..!! நேற்று அவர்களிடம் சொல்லாத அந்த விஷயங்களை எல்லாம், இப்போது விளக்கமாக சொன்னான். நம்பர் தந்திருக்கிறாளே என்ற நம்பிக்கை கூட நேற்று இரவே தகர்ந்து போனது என்று புலம்பினான்.

எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட நண்பர்கள் மூவரும், சிறிது நேரம் பலத்த யோசனையில் இருந்தனர். அசோக்குக்கு ஏதாவது ஒருவகையில் உதவ முடியாதா என்று தீவிரமாக தின்க் செய்தனர். 'புரிஞ்சுக்க முடியாத கேரக்டரா இருக்காடா..' என்று அசோக் சலிப்பாக சொன்னதை அனைவரும் ஆமோதித்தனர். 'ஹேய்.. ஒருவேளை அவ கெளம்புற அவசரத்துல தப்பான நம்பர் குடுத்திருக்கலாம் மச்சி.. நீயா எந்த ஒரு முடிவுக்கும் வந்துடாத..' என்று சொல்லிப் பார்த்தனர். பிறகு அவன் சமாதானம் ஆகாததை கண்டதும், 'சரி மச்சி.. நீ ரொம்ப ஃபீல் பண்ணாத.. அதான் நாங்கலாம் இருக்கோம்ல.. இன்னைக்கு அவ வந்தான்னு வச்சுக்கோ.. ரெண்டுல ஒன்னு கேட்டுடலாம்.. சரியா..??' என்று அசோக்கை தைரியமூட்டினார். என்ன செய்யலாம் என்று நான்கு பேரும் ஒரு திட்டம் தீட்டினர்..!!

அன்று மதியம்..

அவர்கள் நால்வரும் அந்த ஃபுட்கோர்ட்டுக்குள் புகுந்தபோது.. மீரா ஏற்கனவே வந்திருந்தாள்..!! வழக்கம் போல ஒரு கார்னர் டேபிளை பிடித்திருந்தவள்.. தனியாக அமர்ந்து, தட்டில் இருந்த ரோட்டியை தாக்கிக் கொண்டிருந்தாள்..!! வேணுதான் அவளை முதலில் கவனித்தான்..!!

"மச்சி.. யார்னு பாரு அங்க..!!"

என்று வேணு சொன்னதும், மற்ற மூவரும் மீராவை பார்வையால் தேடிப் பிடித்தனர். நன்றாக முழுங்கிக்கொண்டிருந்த அவளை.. நான்கு பேருமே தூரத்தில் இருந்தவாறு முறைத்து பார்த்தனர்..!! தங்களுக்குள் ஒருமுறை ஒருவர் முகத்தை ஒருவர் திரும்பிப் பார்த்துக் கொண்டனர். இதே ஃபுட் கோர்ட்டில் மீரா ஒரு ஆளை பளார் பளார் என்று கன்னத்தில் அறைந்து விரட்டிய சம்பவம், அவர்கள் அனைவருடைய மூளையையும் அந்த நொடியில் க்ராஸ் செய்திருக்க வேண்டும். தலையை சிலுப்பி வலுக்கட்டாயமாக அந்த நினைவை விரட்டி அடித்தனர். பிறகு வீரசிங்கங்கள் போல.. நால்வரும் பேரலலாக நடந்து.. மீராவை நோக்கி சென்றனர்.. அவள் அமர்ந்திருந்த டேபிளை சூழ்ந்து கொண்டனர்..!!

தலையை நிமிர்த்திய மீரா முதலில் அசோக்கைத்தான் பார்த்தாள்.. உடனே அவளுடைய முகம் விளக்கு போட்ட மாதிரி ப்ரைட் ஆனது..!!

"ஹாய்..." என்று உற்சாகமாக கத்தியவள்,

"மிஸ்டர்.. மிஸ்டர்.."

என்று எதையோ மறந்தவள் போல இழுத்தாள். நான்கு பேருமே அவளை இன்னும் கடுமையாக முறைக்க ஆரம்பிக்க, அசோக்தான் கடுப்பை அடக்க முடியாமல் கேட்டுவிட்டான்.

"அசோக்..!!!! என் பேர் கூட அதுக்குள்ள மறந்து போச்சா..??"

"ச்சே ச்சே.. அப்டிலாம் இல்லப்பா..!! உன் பேரை எப்படி நான் மறப்பேன்..? ஆக்சுவலா நேத்து நைட் உனக்கு ஒரு பெட் நேம்.. ஸாரி.. நிக் நேம் யோசிச்சு வச்சேன்.. அதை சொல்லி கூப்பிட ட்ரை பண்ணேன்.. அதுக்குள்ளே நீ..."

"போதும்.. ரொம்ப நடிக்காத..!!" அசோக் அவ்வாறு எரிச்சலாக சொல்ல, இப்போது மீராவின் முகம் பட்டென மாறிப் போனது.

"என்னாச்சு..???" என்றாள் மிகவும் சீரியஸான குரலில்.

அசோக் அவளுக்கு பதில் சொல்லாமல் முறைத்துக் கொண்டே இருக்க, இப்போது சாலமன் அவ்வளவு நேரம் மனதுக்குள் மனப்பாடம் செய்து வைத்திருந்த அந்த டயலாக்கை டெலிவரி செய்தான்.. குரலில் மெலிதான பதற்றத்துடனே..!!

"இ..இங்க பாருங்க.. நீங்க பண்றதுலாம் சரி இல்ல.. உங்க மனசுல என்னதான் நீங்க நெனச்சுட்டு இருக்கீங்க..??" சாலமன் கேட்கவும், இப்போது மீரா அவனை ஏறிட்டு முறைத்தாள்.

"இ..இந்த மொறைக்கிற வேலைலாம் வச்சுக்காதிங்க..!! எ..எங்க அசோக் உங்களை சின்ஸியரா லவ் பண்றான்.. நீங்க என்னடான்னா அவனை வச்சு காமடி பண்ணிட்டு இருக்கீங்க..!! ஏன் இப்படிலாம் பண்றீங்க..??" - இது வேணு சற்று தடுமாற்றத்துடனே.

"இப்படி சைலண்டா இருந்தா என்ன அர்த்தம்..?? கேக்குறோம்ல.. பதில் சொல்லுங்க..!! இன்னைக்கு ரெண்டுல ஒன்னு தெரியாம நாங்க போறதா இல்ல.. எங்க ஃப்ரண்டை நீங்க உண்மைலேயே லவ் பண்றீங்களா.. இல்ல சும்மா டைம் பாஸ்க்கு வெளையாடுறிங்களா..??" கிஷோரின் குரலிதான் சற்றேனும் தைரியம் தொணித்தது.

மீரா இப்போது அசோக்கை விட்டுவிட்டு அவனுடைய நண்பர்கள் மூவரையும் மாறி மாறி பார்த்து முறைத்தாள். அவளுடைய மார்புகள் ஒருமாதிரி குபுக் குபுக்கென ஏறி இறங்கின. அவளுடைய அமைதியை பார்த்த மற்ற மூவரும், இப்போது சற்றே தைரியமாகி..

"ஹலோ.. பேசுங்க.." என்றார்கள் கோரஸாக.

மீராவுக்கு அதற்கு மேலும் பொறுமை இல்லை. அமர்ந்திருந்த சேரை சரக்கென பின்னால் தள்ளிவிட்டவாறு ஆவேசமாக எழுந்தாள். அவளுடைய முகம் இன்ஸ்டண்டாய் ஒரு ஆத்திரச் சிவப்பை பூசியிருக்க,

"அடிங்ங்ங்..!! யார்டா நீங்கள்லாம்..??" என்று நரம்பு புடைக்க அவர்களை பார்த்து கர்ஜித்தாள்.

அவ்வளவுதான்..!! அவளுடைய அனல் கக்கும் பார்வையில் அனைவரும் அரண்டு போயினர். நால்வரும் சடக்கென இரண்டடி பின்னால் நகர்ந்தார்கள். சாலமன் மட்டும் பத்தடி தூரத்திற்கு அந்தப்பக்கம் நின்றிருந்தான். கிஷோர்தான் சற்றே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, மிடறு விழுங்கியவாறு சொன்னான்.

"நா..நாங்க.. நாங்கள்லாம்.. அ..அசோக்கோட ஃப்ரண்ட்ஸ்..!!"

"ப்ரண்ட்ஸ்னா.. பெரிய பருப்பா நீங்கள்லாம்..???? பிச்சுப்புடுவேன் பிச்சு..!!! உங்களுக்குலாம் நான் பதில் சொல்லிட்டு இருக்கணுமா..?? உங்களுக்கு இன்னும் பத்து செகன்ட் டைம் தர்றேன்.. அதுக்குள்ள ஒருபய என் முன்னாடி இருக்க கூடாது.. இல்லனா நான்.. என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..!!"

முகத்தில் முறைப்பும் உடலில் விறைப்புமாக மீரா பொரிந்து தள்ள, நான்கு பேரும் அப்படியே வெலவெலத்துப் போயினர். அசோக்கை தவிர மற்ற மூவரும் தயங்கி பின் வாங்கினர்.

"ம..மச்சி... வந்துட்றா.. போயிர்லாம்..!!"

சாலமன் தொடை நடுங்க அசோக்கை கை நீட்டி சுரண்டினான். உடனே அசோக் மெல்ல ஓரடி பின்னால் எடுத்து வைக்க, இப்போது மீரா அசோக்கின் முகத்துக்கு நேராக 'டக்.. டக்..' என விரலை சொடுக்கினாள்.

"ம்ம்ம்.... நீ எங்க கெளம்புற..?? நீ உக்காரு..!!"

என்று மிரட்டலாக சொன்னவள், அவளுக்கு எதிரே இருந்த சேரை சுட்டு விரலால் அவனுக்கு சுட்டி காட்டினாள். அவன் அப்புறமும் தயங்க, 'ம்ம்.. உக்காருன்றன்ல..?' என்று உறுமினாள். அசோக் இப்போது தயங்கி தயங்கி அந்த சேரில் அமர்ந்து கொண்டான். அவன் அமர்ந்ததும் மீரா வெடுக்கென மற்றவர்களிடம் திரும்பினாள்.

"ம்ம்ம்.. இன்னும் என்ன இங்க வேடிக்கை..??" என்றாள் சீற்றமாக.


"ஹேய்.. நீங்க ஏதாவது ஆர்டர் பண்ணி சாப்பிட்டுட்டு இருங்கடா.. நான் பேசிட்டு வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்..!!" அசோக் திரும்பி நண்பர்களிடம் சொன்னான்.

"இ..இல்ல மச்சி.. நா..நாங்க பார்ஸல் வாங்கிட்டு ஆபீஸுக்கு போயிர்றோம்.. நீ அங்கேயே வந்து ஜாயின் பண்ணிக்கோ..!!" என்று சொன்ன வேணு,

"ஹேய்.. வாங்கடா..!!"

என்று மற்ற இருவரையும் இழுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான். விட்டால் போதும் என்று விழுந்தடித்துக்கொண்டு இடத்தை காலி செய்தனர் மூவரும்.

"மச்சி.. எமர்ஜன்சி ஆம்புலன்ஸ் சர்வீஸ் நம்பர்.. 102-ஆ 103-ஆ..??" நகரும்போது சாலமன் முணுமுணுத்தது அசோக்கின் காதில் விழுந்து அவனை கிலியடைய செய்தது.

அவர்கள் செல்வதையே சிறிது நேரம் முறைத்து பார்த்துக் கொண்டிருந்த மீரா, அப்புறம் படக்கென சேரில் அமர்ந்தாள். அமர்ந்ததுமே டேபிளில் கிடந்த முள்கரண்டியை கையில் எடுத்து.. அசோக்கின் முகத்துக்கு நேராக நீட்டி.. அவனை குத்திவிடுவது மாதிரி ஆட்டியாவாறே.. சீற்றமாய் கேட்டாள்..!!

"என்ன.. ஆள் கூட்டிட்டு வந்து மெரட்றியா..?? ஒரு அறைக்கு தாங்க மாட்டானுக ஒவ்வொருத்தனும்..!! இவனுகள்லாம் உனக்கு அடியாளுகளா..?? அப்டியே போட்டன்னா..!!!"

"ஸா..ஸாரி மீரா.. அ..அவனுக என் ஃப்ரண்ட்ஸ்.... ஏதோ தெரியாம.."

"ப்ரண்ட்ஸ்னா..?? இங்க பாரு.. உனக்கும் எனக்கும்தான் பேச்சு..!! உன் அல்லக்கையி.. நொள்ளக்கையி.. மொன்னக்கையிலாம்.. அங்க.. அங்க நிக்கணும்.. தூரமா..!! பக்கத்துல வந்தானுக.. பஞ்சர் ஆயிடுவானுக.. பஞ்சர்..!! சொல்லி வையி.. புரிஞ்சதா..?? இவனுக ஆளாளுக்கு வந்து கேள்வி கேட்பானுக.. நான் கையை கட்டி பதில் சொல்லனுமா..??"

"ஓகே ஓகே..!! ரிலாக்ஸ்.. கூல் டவ்ன்..!!!!"

அசோக் அவளை சமாதானப் படுத்தும் விதமாக சொன்னான். அப்புறமும் சில வினாடிகள் அசோக்கையே முறைத்துக் கொண்டிருந்த மீரா, அப்புறம் ஆத்திரம் வெகுவாக குறைந்து போனவளாய் கேட்டாள்.

"ம்ம்ம்..!! இப்ப சொல்லு.. என்ன பிரச்சனை..??" அவள் கேட்க, அசோக் சற்றே தயங்கிவிட்டு ஆரம்பித்தான்.

"நீ.. நீ ஏன் அப்படி பண்ணின..??"

"எப்படி பண்ணேன்..??"

"உன்னால எவ்வளவு டென்ஷன் தெரியுமா..??"

"ப்ச்.. பிரச்சனை என்னன்னு சொல்லப் போறியா.. இல்ல சப்புன்னு ரெண்டு விடட்டுமா..??"

"சொ..சொல்றேன்.. அ..அந்த நம்பரு.."

"எந்த நம்பரு..??"

"அதான்.. நேத்து உன் கான்டாக்ட் நம்பர்னு குடுத்தியே..??"

"ம்ம்.. அதுக்கென்ன..??"

"அ..அந்த நம்பருக்கு கால் பண்ணினா வேற யாரோ ஃபோன் எடுக்குறாங்க.. ஆக்சுவலி இட்ஸ் எ ராங் நம்பர்..!!"

"ஓ..!! எங்க.. அந்த நம்பர் என்னன்னு சொல்லு..!!"

மீரா கேட்க, அசோக் நம்பரை சொல்லாமல், தன் செல்போன் எடுத்து அந்த காண்டாக்ட் திறந்து காட்டினான். ஒருகணம் அந்த எண்ணை சரிபார்த்த மீரா,

"ஹ்ம்ம்.. என் நம்பர்தான் இது.. பட்.. ஒரே ஒரு சின்ன கரெக்ஷன்..!! ஏழையும் ஆறையும் மாத்தி போட்டுட்டேன்.. தட்ஸ் ஆல்..!!! இதுக்கா இவ்வளவு அலப்பறை..??" மீரா கேஷுவலாக கேட்க, அசோக் உடனே சன்னமான குரலில் முனகினான்.

"ம்க்கும்.. நீ ஏழையும் ஆறையும் மாத்தி போட்டுட்ட.. எனக்கு எல்லாரும் ஏழரையை கூட்டிட்டாணுக..!!"

"என்ன மொனங்குற..??"

"ஒன்னுல்ல..!! நீ தப்பான நம்பர் குடுத்ததால எனக்கு எவ்வளவு பிரச்சனை தெரியுமா..?? டாடா டோகோமோல இருந்து வோடஃபோன் மாற வேண்டியதா போச்சு.. டாடா சுமோவ பாத்தாலே ஓட்டம் எடுக்க வேண்டியதா போச்சு..!!"

"ப்ச்.. எனக்கு ஒன்னும் புரியல.. என்னாச்சுன்னு கொஞ்சம் தெளிவா சொல்லேன்.." மீரா இப்போது கூலாக கேட்டாள்.

"ஆக்சுவலா.. நேத்து நைட்டு.. உனக்கு கால் பண்ணலாம்னு.." அசோக் ஆரம்பிக்க, அவள் இடையில் குறுக்கிட்டாள்.

"ஏய்.. இரு இரு.. அதுக்கு முன்னாடி.." அவள் சொல்லி முடிக்கும் முன்பே,

"என்ன..? பரிட்டோவா..??" அசோக் பாவமாக கேட்டான்.

"யெஸ்..!! அதோட.."

"டயட் கோக்..??"

"ஹாஹா..!! க.க.க.போ.. வாங்கிட்டு வா போ..!!" கண்களில் குறும்பும், கன்னத்தில் குழியுமாக மீரா புன்னகைத்தாள்.

'தலையெழுத்தே..!!' என்று அசோக் சேரை விட்டு எழுந்து கொண்டான். நேற்று மாதிரியே டேகோ பெல் சென்று பரிட்டோவும், டயட் கோக்கும் வாங்கிக்கொண்டு திரும்ப வந்தான். வந்ததுமே மீரா கவர் பிரித்து, பரிட்டோவை ஒரு பெரிய கடி கடித்தாள்.

"ம்ம்.. சொல்ஹு..!!" என்று வீங்கிப்போன கன்னத்துடன் சொன்னாள்.

அசோக் மீராவின் முகத்தையே சலிப்பாக பார்த்தவாறு, முந்தின இரவில் இருந்து நடந்த சம்பவங்களை, பொறுமையாக கூற ஆரம்பித்தான். அவன் பரிதாபமாக சொன்னவற்றை எல்லாம், மீரா பரிட்டோ மென்று கொண்டே சுவாரசியமாக கேட்டுக் கொண்டாள். அடிக்கடி 'ஹாஹாஹாஹா..' என்று சீஸ் அப்பிய வாயுடன் சிரித்தாள். கோக் குடித்து 'ஏவ்வ்வ்' என்று ஏப்பம் விட்டாள்.

"ம்ம்.. கடைசில என்னாச்சு..??"

"என்னாச்சு.. என் நம்பரை சேன்ஜ் பண்ணிட்டேன்..!! சிவன் கோயில் போய்.. என் பேர்ல நானே ஒரு அர்ச்சனை பண்ணிக்கிட்டேன்..!! அவனுக கைல சிக்க கூடாதுடா சாமின்னு நல்லா வேண்டிக்கிட்டேன்..!!"

"ஹாஹாஹாஹா..!!!" மீரா அதற்கும் கனைக்க, அசோக் எரிச்சலாக அவளை பார்த்தான்.

"ம்ம்.. அந்த கடுப்புலதான்.. ப்ரண்ட்ஸ்லாம் கூட்டிட்டு என் மேல படை எடுத்து வந்தியாக்கும்..??"

"அ..அது மட்டும் இல்ல.."

"அப்புறம்..??"

"நீ நேத்து ஐ லவ் யூ சொன்னேல..??"

"ஆமாம்..!!"

"நெஜமாவே நீ என்ன லவ் பண்றியா.. இல்ல சும்மா வெளையாடுறியான்னு வேற எனக்கு ஒரு டவுட்டு..!!"

"ஏன் அப்படி ஒரு டவுட்டு..??"

"பின்ன.. திடீர்னு ஐ லவ் யூ சொன்னா..??"

"ம்ம்..?? நீயுந்தான் திடீர்னு என்னை லவ் பண்றேன்னு சொன்ன..??"

"அதுக்கில்ல.. என்னைப் பத்தி உனக்கு.." அசோக் கேட்க வந்ததை முடிக்காமல் இழுத்தான்.

"ம்ம்.. சொல்லு..!!" மீரா அவனை முடிக்க சொல்லி தூண்டினாள்.

"இல்ல.. எ..என்னை பத்தி உனக்கு எதுவும் தெரியாதேன்னு.." மீண்டும் இழுக்கத்தான் செய்தான்.

"எதுவுமே தெரியாம வர்றதுக்கு பேர்தான் காதல்.. எல்லாம் தெரிஞ்சுட்டு வந்தா அதுக்கு பேர் கால்குலேஷன்..!! நீதான நேத்து சொன்ன..??" மீரா அசோக்கை மடக்க, அவன் இப்போது சோர்ந்து போனான்.

"ம்ம்ம்.. ஆ..ஆமாம்.. நான்தான் சொன்னேன்.. நானேதான்..!!!!" என்று பரிதாபமாக தலையை ஆட்டினான்.

"ம்ம்.. அப்புறம் என்ன..??"

"இல்ல.. பில்லுக்கு பணம் கேட்டதும் நீ ஐ லவ் யூ சொன்னியா.. அதான் ஒருவேளை.." ஆரம்பித்துவிட்டு, அப்புறம் அவசரப்பட்டு விட்டோமோ என்று அசோக் நாக்கை கடித்துக் கொண்டான்.

"ம்ம்.. ஒருவேளை..??" மீரா கண்களை உருட்டியவாறு கேட்டாள்.

"வே..வேணாம் விடு..!!"

"ப்ச்.. இப்போ சொல்லப் போறியா.. இல்ல பளார்னு ஒன்னு விடவா..??" மீரா திடீரென உக்கிரமாக, அசோக் மிரண்டு போனான்.

"இ..இல்ல.. சொல்லிடுறேன்..!!"

"சொல்லு..!!"

"ஒருவேளை உன் கைல காசு இல்லாம ஐ லவ் யூ சொல்லிட்டியோன்னு.."

சொல்லிவிட்டு அசோக் மிரட்சியாக மீராவை ஏறிட்டான். அவள் எரிந்து விழப் போகிறாள் என்று எதிர்பார்த்தான். ஆனால் அவளோ படுகூலாக இருந்தாள். கோக்கை எடுத்து ஒருமுறை உறிஞ்சிக் கொண்டவள், பிறகு கேஷுவலாக கேட்டாள்.

"என் அப்பாவுக்கு மொத்தம் மூணு புள்ளைங்கன்னு சொன்னேன்ல..??"

"ம்ம்..!!"

"அவருக்கு மொத்தம் சொத்து எவ்வளவுன்னு சொன்னனா..??"

"இ..இல்ல..!!"

"கொஞ்சம் கம்மி.. அறுபது கோடிக்கு கொஞ்சம் கம்மி..!!" மீரா அசால்டாக சொல்ல, அசோக் ஆவேன வாயை பிளந்தான்.

"மூணு பங்கு வச்சாலும்.. இருபது கோடிக்கு சொந்தக்காரி நான்..!! அந்த பிச்சைக்காசு நூத்தி நாப்பது ரூவாக்காக.. உன்கிட்ட ஐ லவ் யூ சொல்லிருப்பேன்னு நெனைக்கிறியா..?? ம்ம்..??" மீரா ஷார்ப்பாக கேட்க, அசோக் அவனையும் அறியாமல் தலையை இப்படியும் அப்படியுமாய் அசைத்தான்.

"சான்ஸே இல்ல..!!!"

"சந்தேகப்படுறல என்னை..??"

மீரா திடீரென முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு, சீரியஸ் குரலில் கேட்டாள். அசோக்கிடம் உடனே ஒரு பதற்றம். தேவையில்லாமல் சந்தேகப்பட்டு அவளை காயப்படுத்தி விட்டோமோ என்பது மாதிரியான குற்ற உணர்வு..!!

"ஹேய்.. மீரா.. அ..அப்டிலாம் இல்ல.."

"போ..!! நம்பாட்டி போ.. மனசுல சந்தேகத்தை வச்சுக்கிட்டு நீ என் கூட பழக வேணாம்..!! போ.. ரெண்டு நாள் சாப்பிட்டதுக்கு நான் காசு தந்துட்றேன்.. வாங்கிட்டு போ..!!" சொல்லிக்கொண்டே, மீரா ஹேண்ட் பேகை எடுக்க செல்ல அசோக் அவசரமாய் அவளை தடுத்தான்.

"ஐயோ.. என்ன மீரா இது.. நான் ஏதோ அறிவில்லாம.."

"நீ மட்டும் என்னை பத்தி தெரியாம சின்ஸியரா லவ் பண்றேன்னு சொல்ற.. அதே நான் சொன்னா.. சந்தேகப்படுறல.. போ..!!"

"ஹையோ.. ஸாரிம்மா.. ஸாரி.. என்னை மன்னிச்சுடு.. ப்ளீஸ்..!! இனிமே நான் உன்னை சந்தேகப்பட மாட்டேன்.. ஓகே வா..?? ஸாரி.. ஸாரி.. ஸாரி..!!"

"ம்ம்.. பரவால விடு..!!"

"ஹேய்.. நீ இப்படி மூஞ்சியை தூக்கி வச்சிருக்குறது எனக்கு கஷ்டமா இருக்கு..!! கொஞ்சம் சிரியேன் ப்ளீஸ்..!!"

"ப்ச்.. வேணாம்.. நான் சிரிக்கிற மூட்ல இல்ல..!!"

"ம்ம்ம்ம்... ஓகே.. அப்போ.. நான் உன்னை சிரிக்க வைக்கவா..??"

"எப்படி..??"

"எனக்கு ஏதோ நிக் நேம் வச்சிருக்கேன்னு சொன்னேல..?? அது என்னன்னு கெஸ் பண்ணவா..??" அசோக் அவ்வாறு கேட்கவும்,

"ம்ம்.. ஓகே..!!" மீரா திடீர் உற்சாகத்துடன் சொன்னாள். அசோக் சில வினாடிகள் யோசிப்பது போல பாவ்லா செய்துவிட்டு கேட்டான்.

"ம்ம்.. தடிமாடு..??" அவன் அவ்வாறு கேட்கவும் மீரா குபுக்கென சிரித்துவிட்டாள்.

"ஹாஹாஹாஹா...!! இல்ல..!!" அவளை சிரிக்க வைத்துவிட்ட திருப்தியில், அசோக்கின் முகத்திலும் இப்போது ஒரு பூரிப்பு.

"ம்ம்ம்.. அப்படினா.. கருங்கொரங்கு..??"

"ஹாஹாஹாஹா...!!"

"அதுவும் இல்லையா..?? ஓகே.. காட்டுப்பன்னி..??"

"ஹாஹாஹாஹா...!! ச்சோ.. ச்வீட்..!!!! பக்கத்துல வந்துட்ட.. ஹாஹா..!! ம்ம்ம்.. போதும் விடு.. நானே சொல்லிர்றேன்..!!"

"ஹாஹா..!! ஓகே.. சொல்லு.. வாட்ஸ் மை நிக் நேம்..??"

"ஹனிபனி..!!"

"ஹனிபனியா..??"

"ம்ம்..!! யு'ஆர் மை பம்கின் பம்கின்.. ஹலோ ஹனிபனி..!! ஃபீலிங் சம்திங் சம்திங்.. ஹலோ ஹனிபனி..!!"

ஐடியா மொபைல் விளம்பர பாடலை.. அசோக்கை நோக்கி ஆட்காட்டி விரலை காட்டி.. கண்களை 'பட், பட்' என சிமிட்டியவாறே.. குரலில் ஒரு கிறக்கத்துடன் மீரா பாட.. அசோக் அப்படியே உருகிப் போனான்..!! அவளுடைய குரல் அவனது காது வழியே புகுந்து.. இதயத்தை வருடி சில்லிட செய்தது..!! எழில் கொஞ்சி விளையாடுகிற அவளுடைய முகத்தையே.. ஏக்கமும் காதலுமாய் பார்த்தான்..!! 'ஏதோ நேற்று அவசரத்தில் தவறான நம்பர் தந்துவிட்டாள்.. என் மீது எவ்வளவு ஆசை வைத்திருக்கிறாள்.. இவளைப்போய் சந்தேகப் பட்டுவிட்டேனே..?' என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டான்.

ஆரம்பத்தில் இருந்த இறுக்க நிலை தகர்ந்து, இப்போது இருவரும் சகஜ நிலைக்கு திரும்பியிருந்தனர். கொஞ்ச நேரம் பொதுவாக ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். ஃபுட்கோர்ட்டிலும் கூட்டம் வெகுவாக குறைய ஆரம்பித்திருந்தது. அப்போதுதான் அசோக் பேச்சை வேறு பக்கம் திருப்பும் விதமாக சொன்னான்.

"ஹேய்.. என் நம்பர் சேன்ஜ் பண்ணிட்டேன் சொன்னேன்ல.. ந்யூ நம்பர் சொல்றேன்.. ஸேவ் பண்ணிக்கோ..!!"

"ம்ம்.. சொல்லு..!!"

"எதுல ஸேவ் பண்ணிப்ப..?? உன் செல்ஃபோனை எடுத்துக்கோ..!!"

"எங்கிட்ட செல்ஃபோன்லாம் இல்ல.. நீ நம்பர் சொல்லு.. நான் மைண்ட்ல ஸேவ் பண்ணிக்கிறேன்..!!" மீரா கேஷுவலாக சொல்ல, அசோக் இப்போது பக்கென அதிர்ந்தான்.

"என்னது..??? செல்ஃபோன் இல்லையா..?? அப்புறம் நம்பர் கொடுத்த..??"

"ஹப்பா..!! இல்லன்னா.. இப்போ எங்கிட்ட இல்லன்னு சொன்னேன்.. வீட்ல வச்சிருக்கேன்..!!"

"ஓ..!! மறந்து வச்சுட்டு வந்துட்டியா..??"

"இ..இல்லப்பா.. நான் செல்ஃபோன் அதிகமா யூஸ் பண்றது இல்ல.. எப்போவாவதுதான்..!! ஆக்சுவலா எங்கிட்ட செல்ஃபோன் இருக்குறதே ஒன்னு ரெண்டு முக்கியமான ஃப்ரண்ட்ஸ் தவிர வேற யாருக்கும் தெரியாது.. முக்கியமா என் ஃபேமிலில யாருக்குமே தெரியாது.. தெரிஞ்சா அவ்வளவுதான்..!! உன்கிட்ட நான் நம்பர் குடுத்தது எனக்கு நீ கால் பண்றதுக்காக இல்ல.. நான் உனக்கு கால் பண்றப்போ.. நான்தான் கால் பண்றேன்னு நீ தெரிஞ்சுக்குறதுக்காக..!!" மீரா அவ்வாறு சொன்னது அசோக்கிற்கு குழப்பத்தையே உண்டுபண்ணியது.

"எ..என்ன சொல்ற நீ.. நீ செல்ஃபோன் வச்சிருக்குறது உங்க வீட்டுக்கே தெரியாதா..??"

"ஹ்ம்ம்..!! இதுக்கே ஷாக் ஆகிட்டா எப்படி..?? எங்க வீட்ல.. நோ டிவி.. நோ மூவி.. நோ இன்டர்நெட்.. நோ சாங்க்ஸ்.. நோ மேகஸின்ஸ்.. நோ பாய்-கேர்ல் ஃப்ரண்ட்ஷிப்..!!" மீரா சொல்ல சொல்ல, அசோக்கின் முகத்தில் எக்கச்சக்கமாய் குழப்ப ரேகைகள்.

"ஏ..ஏன்.. ஏன் அப்படி..??"

"அதெல்லாம் இருந்தா நாங்க கெட்டுப் போயிடுவோமாம்.. யார் மேலயாவது லவ் வந்துடுமாம்..!! எல்லாம் என் அப்பாவோட ரெஸ்ட்ரிக்ஷன்ஸ்..!!"

"அவருக்கு லவ் பிடிக்காதா..??"

"ம்ஹூம்..!! லவ்ன்ற வார்த்தையே ஆகாது.. காதல் மேல வெறுப்புனா வெறுப்பு.. அப்படி ஒரு வெறுப்பு அவருக்கு..!!" மீரா சொல்ல, அசோக்கின் மனதுக்குள் இப்போது ஒரு மெலிதான பயம் பரவியது.

"ஓ..!! எதுக்கு அப்படி ஒரு வெறுப்பு..?? உ..உன்.. உன் அப்பா பத்தி நான் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா..??"

"ம்ம்.. சொல்றேன்..!!"

சொன்ன மீரா சில வினாடிகள் அமைதியாக இருந்தாள். அசோக்கின் முகத்தை பாராமல் வேறெங்கோ பார்வையை செலுத்தினாள். சிறிது நேரம் அவ்வாறே வெறித்துக் கொண்டிருந்தவள், பிறகு மெல்ல ஆரம்பித்தாள்.

"என் அப்பா பேரு சந்தானம்..!!"

"ம்ம்.. கோடிக்கணக்குல சொத்துன்னு சொல்ற.. என்ன பண்றார்..?? பிஸினஸா..??"

"ஆமாம்.. பெயிண்ட் பிஸினஸ்..!! நேத்து என் சொந்த ஊர் சொன்னேன்ல..??"

"ம்ம்.. காரைக்குடி..!!"

"எஸ்..!! அங்க இருக்குறப்போ அவர் பிஸினஸ் பண்ண பெயின்ட்டுக்கு நெறைய கலர்.. சென்னை வந்தப்புறம் பிஸினஸ் பண்ற பெயின்ட்டுக்கு ஒரே ஒரு கலர்தான்..!! ரெட்..!!!!"

"பு..புரியல..!!"

"எங்க ஏரியால என் அப்பா ஒரு பெரிய புள்ளி அசோக்.. நெறைய பாலிடிஷியன்சோட லிங்க் இருக்கு அவருக்கு..!! அடிதடி.. ஆள் கடத்தல்.. கமிஷன்.. கட்டப் பஞ்சாயத்து.. ரியல் எஸ்டேட் ஃப்ராட்.. ப்யூர் ரவுடிசம்..!!!! என் அப்பா மாதிரி ஒரு இரக்கம் இல்லாத மொரட்டு ஆளை நீ பாத்திருக்கவே மாட்ட..!!"

"ஓ..!!!!!" சொல்லும்போதே அசோக்கின் அடிவயிற்றில் ஒரு கிலி கிளம்பியது.

"அவர் சின்னப்பையனா இருக்குறப்போ.. அவரோட அக்கா.. அதாவது என் அத்தை.. அவங்க கல்யாணத்துக்கு மொத நாள்.. காதலிச்ச பையனோட ஓடிப் போய்ட்டாங்க..!! அவமானம் தாங்க முடியாம தாத்தாவும் பாட்டியும் தூக்குல தொங்கிட்டாங்க.. அப்பா அநாதை ஆயிட்டாரு..!! அப்போ வந்தது அவருக்கு காதல் மேல வெறுப்பு.. இன்னைக்கு வரைக்கும் அந்த வெறுப்பு அவர் மனசுல கொழுந்துவிட்டு எரிஞ்சுட்டு இருக்கு.. காதலே பிடிக்காது அவருக்கு..!! எந்த அளவுக்கு பிடிக்காதுன்னா.. ஒருதடவை.. எங்க வீட்டு சமயல்காரியும், வாட்ச் மேனும் லவ் பண்றாங்கன்னு என் அப்பாவுக்கு தெரிஞ்சு போச்சு.. அவ்வளவுதான்.. அப்பாவுக்கு அப்படி ஒரு ஆத்திரம்.. அவங்கள என்ன பண்ணார் தெரியுமா.. அவங்க ரெண்டு பேர் மேலயும் திருட்டுப் பட்டம் கட்டி.. போலீஸ்ல புடிச்சு குடுத்துட்டாரு..!!"

"ஐயையோ..!! அவ்வளவு வெறுப்பா..??"

"ஆமாம்.. சொன்னா நம்ப மாட்ட நீ..!! இதோ.. இங்க பாரேன்..!!"

மீரா சொல்லிக்கொண்டே, தனது இடது கையை அசோக்கின் முன்பாக நீட்டினாள். அவளுடைய உள்ளங்கைக்கு கீழே குறுக்கு வெட்டில் நீளமாக ஒரு தழும்பு..!! பார்த்ததுமே அசோக் பதறிப் போனான்..!!

"ஐயோ.. என்ன மீரா இது.. தழும்பு..??"

"நான் செகண்ட் இயர் படிக்கிறப்போ.. ஒருதடவை அப்பா என்னை பாக்குறதுக்காக எங்க காலேஜுக்கு வந்திருந்தாரு.. அந்த நேரம் பார்த்து நான் என் க்ளாஸ்மேட் பையன் ஒருத்தன்ட்ட சப்ஜக்ட் பத்தி சந்தேகம் கேட்டுட்டு இருந்தேன்.. நாங்க பேசிட்டு இருக்குறதை அப்பா பாத்துட்டாரு..!! அன்னைக்கு நைட்டு அப்பா என் கைல போட்ட சூடுதான் இது..!! 'இனிமே எவன் கூடவாவது நீ பேசுறதை பாத்தேன்.. கழுத்த நெறிச்சு கொன்னு போட்டுடுவேன்'னு சொன்னாரு..!!" மீரா பரிதாபமாக சொல்ல, அசோக் அவளை பாவமாக பார்த்தான்.

"ச்சே.. உன் அப்பா இவ்வளவு மோசமானவரா..??"

"ம்ம்..!!"

"இப்படி ஒருத்தருக்கு மகளா பொறந்துட்டு.. நீ லவ் பண்ண ஆசைப்படுறதே எனக்கு பெரிய ஆச்சரியமா இருக்கு மீரா..!!"

"அதுக்கு காரணம் இருக்கு..!!"

"என்ன..??"

"சினிமா பாக்ககூடாதுன்னு அப்பா கண்டிஷன் போட்டிருந்தாலும்.. நான் அப்பப்போ என் ஃப்ரண்ட்சோட போய் திருட்டுத்தனமா ஏதாவது சினிமா பாத்துடுவேன்.. அப்படி ரீசண்டா பாத்ததுதான்.. காதல் உல்லாசம்..!!" சோகமாக சொல்லிக்கொண்டிருந்த மீரா, இப்போது திடீரென உற்சாகமாகி..

"ஹேய்.. நீ அந்த படம் பாத்திருக்கியா..??" என்று அசோக்கிடம் கேட்டாள்.

உடனே அசோக்குக்கு சுருக்கென்று இருந்தது. 'காதல் உல்லாசமா..?? எங்கயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கே..?? ஆங்.. அன்னைக்கு ஆபீஸ்ல ஃப்ரண்ட்ஸ்லாம் எமோஷனலா பாத்துட்டு இருந்தப்போ.. 'என்ன எழவெடுத்த படம்டா இது'ன்னு கேட்டனே.. அந்தப்படம்தான..??'

"இ..இல்ல மீரா.. நான் பாத்தது இல்ல..!!"

"ஐயோ.. என்ன பையன் நீ..?? சச் எ க்ரேட் மூவி யு நோ..?? இன்னும் அந்தப்படம் பாக்காம என்ன பண்ணிட்டு இருக்குற..?? நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது.. எப்படியாவது இன்னைக்குள்ள அந்தப்படத்தை நீ பாத்துடனும்.. சரியா..??"

மீரா கட்டளையிடுவது மாதிரி சொல்ல, அசோக்கின் மனதுக்குள் ஒரு கற்பனைப்படம் ஓடியது. தலையை சாய்த்து, கண்களை மேலே சுழற்றி அந்த கற்பனைப்படத்தை கண்டான். 'மச்சி.. காதல் உல்லாசம்னு ஏதோ மூவி இருக்காமே.. ரொம்ப நைஸ் மூவின்னு மீரா சொன்னா.. இன்னும் அந்தப்படம் பாக்கலையான்னு செல்லமா கோவிச்சுக்கிட்டா..?? உங்கட்ட அந்த மூவி சாஃப்ட் காப்பி இருக்காடா..??' என்று அசோக் கேட்க, அவனுடைய நண்பர்கள் எல்லாம் அவனை சூழ்ந்து கொண்டு முறைத்தனர். பிறகு 'த்தூ.. த்தூ.. த்தூ..' என்று அவன் முகத்திலேயே காறித் துப்பினர்..!! அசோக் படக்கென தலையை சிலுப்பிக் கொண்டான். முகத்தில் இல்லாத எச்சிலை இருகைகளாலும் துடைத்துக் கொண்டான்.

"ஓகே மீரா.. நான் எப்படியாவது பாத்துடறேன்..!! ஆமாம்.. அந்த படத்துக்கும் நீ சொல்ல வந்ததுக்கும் என்ன சம்பந்தம்..??"

"ஆக்சுவலா அந்தப்படம் பாத்ததும்தான் எனக்கு லவ் பண்ற ஆசையே வந்தது.. 'ச்ச.. காதல்ன்றது இவ்வளவு அற்புதமான விஷயமா.. இத்தனை நாளா மிஸ் பண்ணிட்டோமே'ன்னு தோணுச்சு..!! அந்தப்படத்துல ஒரு டயலாக் வரும்.. 'நமக்கு புடிச்சவங்கள லவ் பண்றதை விட.. நம்மள புடிச்சவங்கள லவ் பண்றதுதான் ரியல் லவ்வு'னு..!! நைஸ் டயலாக்ல..??" மீரா கண்கள் பளபளக்க கேட்க,

"ஹிஹி.. எஸ்..!!" அசோக் வேண்டாவெறுப்பாக இளித்தான்.

"ம்ம்.. அதே மாதிரி நீ எனக்கு கெடைச்ச.. பட்டுன்னு லவ் பண்ணிட்டேன்.. ஐ'ம் ஸோ லக்கி யு நோ..?? ஹாஹா..!!" சொல்லிவிட்டு மீரா சிரித்தாள். பிறகு திடீரென ஞாபகம் வந்தவளாய்,

"ஹேய்.. என் அப்பா பத்தி சொல்லிட்டு இருந்தேன்ல.. டாபிக் மாறிடுச்சு..!!" என்றாள் இன்ஸ்டன்ட் சீரியஸ்னசுடன்.

"இ..இன்னும் அவரை பத்தி சொல்றதுக்கு என்ன இருக்கு..??"

"இருக்கு..!! ஆக்சுவலா என் அப்பா பத்தி எதுக்கு உன்கிட்ட சொன்னேன் தெரியுமா..??"

"எதுக்கு..??"

"நீ என்னை லவ் பண்றதா இருந்தா.. எல்லாத்துக்கும் ரெடியா இருக்கணும்.. அதுக்குத்தான்..!!"

"எ..எல்லாத்துக்கும்னா..??" அசோக்கிடம் இப்போது நிஜமாகவே ஒரு மிரட்சி.

"உனக்கு எப்படி சொல்றது..?? ம்ம்ம்... ம்ம்ம்... ஆங்.. என் அக்கா சொன்னேன்ல..??"

"ஆமாம்..!!"

"கொஞ்ச நாள் முன்னாடி அவ ஒரு பையனை லவ் பண்ணிட்டு இருந்தா.. ரொம்ப சின்ஸியரா லவ் பண்ணினா.. அவனுக்காக என்னவேனா செய்வான்னா பாத்துக்கோயேன்.. அந்த அளவுக்கு அவன் மேல பைத்தியமா இருந்தா..!!"

"ஓ..!! இப்போ என்னாச்சு..??"

"என்னாச்சுன்னே தெரியல அசோக்..!! ஒருநாள் அந்தப்பையன் திடீர்னு காணாமப் போயிட்டான்.. எங்க தேடியும் அவன கண்டுபிடிக்க முடியல..!! அப்புறம்.. அவன் ஐடில இருந்து அக்காவுக்கு ஒரு மெயில் மட்டும் வந்தது..!!"

"என்னன்னு..??"

"நான் யூ.எஸ்ல இருக்கேன்.. இங்கயே செட்டில் ஆகப் போறேன்.. இத்தனை நாளா நான் உன்னை லவ் பண்றதா சொன்னதுலாம் பொய்.. சும்மா நடிச்சேன்.. சும்மா ஜாலிக்காத்தான் உன் கூட பழகினேன்.. நான் இங்க வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போறேன்.. நீயும் நடந்ததை மறந்துட்டு வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ.. அப்டின்னு..!!"

"ஷிட்..!!"

"அக்கா அப்படியே உடைஞ்சு போயிட்டா.. சூசயிட் பண்ணிக்க ட்ரை பண்ணினா.. ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் அவளை காப்பாத்தினோம்..!!"

"ஓ..!! இப்போ எப்படி இருக்காங்க..??"

"இப்போ அக்கா நார்மல் ஆகிட்டா.. அந்தப் பையனை மறந்துட்டா.. 'உன்னை ஏமாத்திட்டு போனவனுக்காக நீ ஏன் சூசயிட் பண்ணிக்கனும்'னு ஆளாளுக்கு சொல்லி சொல்லி.. எப்படியோ அவளை தேத்தினோம்.. இப்போ கொஞ்ச நாளாத்தான் அவ சகஜமா இருக்கா.. எப்போவும் போல சிரிக்க ஆரம்பிச்சிருக்கா..!!"

"குட்..!!"

"அந்தப்பையன் காணாம போனதுல.. அக்காவுக்கு எந்த சந்தேகமும் இல்ல.. ஆனா எனக்கு மனசுக்குள்ள ஒரு சந்தேகம்..!!"

"என்ன..??"

"அந்தப் பையனை அப்பாதான் ஏதாவது பண்ணிருப்பாரோன்னு..!!" மீரா கிசுகிசுப்பாக சொன்னவிதத்திலேயே அசோக்கிற்கு கிலி கிளம்பியது.

"ஓ..!!!! ஏ..ஏன்.. அப்படி சந்தேகப்படுற..??"

"தெரியல.. என் மனசுக்கு அப்படி தோணுது..!! அவங்க லவ் மேட்டர் தெரிஞ்சிருந்தா.. அப்பா அந்தப் பையனை சும்மா விட்ருக்க மாட்டாரு..!! அவனை அடிச்சு உதைச்சு மிரட்டி.. அந்த மாதிரி மெயில் அனுப்ப வச்சு.. அப்புறம் அவனை எங்கயாவது கொன்னு பொதைச்சிருந்தா..??" விழிகளை விரித்து வைத்தவாறு மீரா அப்படி கேட்க,

"ஹேய்... எ..என்ன நீ.. இ..இப்படிலாம் டெரரா யோசிக்கிற..??" அசோக் நடுக்கத்துடன் சொன்னான்.

"இல்ல அசோக்.. என் அப்பா அந்த மாதிரி செய்யக்கூடிய ஆள்தான்.. அதனாலதான் இதெல்லாம் உன்கிட்ட சொல்லிட்டு இருக்கேன்..!!"

"எ..எதனால..??"

"இப்போ நாளைக்கே நீ என்னை லவ் பண்றேன்னு என் அப்பாவுக்கு தெரிஞ்சதுன்னு வச்சுக்கோ.. அவர் உன்னை என்ன வேணா செய்யலாம்..!! உன்னை கடத்தி கொண்டு போய் கட்டிப்போட்டு சித்திரவதை பண்ணலாம்.. கண்ணுல ஊசி ஏத்தலாம்.. நகத்தை பிச்சி பிச்சி எடுக்கலாம்..!! இந்த ஹாக்ஸா ப்ளேட் இருக்குல.. அதை வச்சு உன் கால் நரம்பை அப்படியே கறகறன்னு.."

மீரா சொல்லிக்கொண்டே போக.. அசோக் குலைநடுங்கிப் போனான்..!! பயத்தில் மூழ்கியிருந்த அவனுடைய இதயம்.. 'பக்.. பக்.. பக்..' என அடித்துக் கொண்டது..!! அவள் சொன்ன விஷயங்களை எல்லாம் கற்பனை செய்து பார்க்க.. தான் எழுதி வைத்திருந்த ஹாரர் ஸ்க்ரிப்டை விட படு பயங்கரமாக இருந்தது..!! அசோக் தலையை உலுக்கி, அந்த பயத்தை உதற முயன்றான்..!!

தன்னுடைய குடும்பத்துக்கும் மீராவின் குடும்பத்துக்கும் இருக்கிற, இமாலய முரண்பாடு அவன் மனதை இப்போது சுருக்கென்று தைத்தது. 'பேசி சம்மதிக்க வைத்துவிடலாம்..' என்று தனது குடும்பத்தினர் தந்திருந்த தைரியம், இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போயிருந்தது. இவளை கைபிடிப்பது எளிதாக இருக்கப் போவதில்லை என்று தெளிவாக புரிந்தது.

மீராவின் அப்பாவிடம் சிக்கிக்கொண்டு சித்திரவதை அனுபவிப்பதை நினைத்து பார்க்கையில்.. அசோக்கிற்கு உடல் சில்லிட்டு போயிருந்தாலும்.. அதையும் மீறி அவனுடைய மனதில் ஒரு துணிச்சல் துளிர் விடத்தான் செய்தது..!! மீராவின் மீது அவனுக்கிருந்த காதல் தந்த துணிச்சல் அது..!! 'கஷ்டத்தை எண்ணிக்கொண்டு காதலை தவிர்த்தல் கோழைத்தனம் அல்லவா..?? காதலையே வாழ்க்கையாக கொண்ட குடும்பத்தில் பிறந்துவிட்டு, இதற்கெல்லாமா கவலைப்படுவது..??' என்று தோன்றியது. அந்த மாதிரி ஒரு எண்ணம் வந்ததுமே, பேசிக்கொண்டிருந்த மீராவை இடைமறித்து அசோக் சொன்னான்.

"இங்க பாரு மீரா.. இதெல்லாம் நீ எனக்கு சொல்லனும்னு அவசியம் இல்ல..!! எனக்கு ஒன்னும் உன் அப்பாவ நெனச்சு பயம் இல்ல.. என்ன ஆனாலும் சரி.. எவ்வளவு கஷ்டம் அனுபவிக்க வேண்டி இருந்தாலும் சரி.. என் கடைசி மூச்சு இருக்குறவரை இந்த காதல்ல நான் ஸ்ட்ராங்கா இருப்பேன்.. உன்னை லவ் பண்ணதுக்கு தண்டனை சாவுதான்னா.. அது எனக்கு சந்தோஷம்தான்..!!"

அசோக் உறுதியான குரலில் சொல்லிவிட்டு மீராவை பார்க்க, அவளும் இப்போது அமைதியாக இவனுடைய முகத்தையே பார்த்தாள். ஒருமாதிரி.. இமைகளை அசைக்காமல்.. மிக கூர்மையாக ஒரு பார்வை..!! ஒரு நான்கைந்து வினாடிகள்..!! அப்புறம் இதழில் ஒரு அழகுப் புன்னகையுடன்.. கொஞ்சும் குரலில் சொன்னாள்..!!

"ச்சோ.. ச்வீட்..!!"

மீரா அந்த மாதிரி கொஞ்சியது அசோக்கிற்கு குளுகுளுவென்று இருந்தது. அவனையும் அறியாமல் அவனுடைய முகம் வெட்கத்தில் சிவந்து போனது. அந்த வெட்கத்துடனே..

"ப்ச்.. போ மீரா.. நான் சீரியஸா சொல்லிட்டு இருக்குறேன்..!!"

என்றவாறு தலையை குனிந்து கொண்டான். இப்போது மீரா சில வினாடிகள் அமைதியாக இருந்தாள். அப்புறம் திடீரென ஒருவித உற்சாக குரலில் கேட்டாள்.

"ஹேய் அசோக்.. எனக்காக நீ என்ன வேணா பண்ணுவியா..??"

"என்ன மீரா இப்படி கேட்டுட்ட..?? என்ன பண்ணனும்.. சொல்லு..!!"

"அந்த டேபிள்ள ரெண்டு பேரு என்னையே மொறைச்சு பாத்துட்டு இருக்கானுக.. சும்மா சும்மா என்னை பாத்து கண்ணடிக்கிறாணுக..!! கொஞ்சம் அவனுகளை போய் என்னன்னு கேக்குறியா..??"

அவ்வளவுதான்..!! அசோக் விருட்டென நிமிர்ந்தான். அவன் உடம்பில் அப்படி ஒரு விறைப்பு.. நாடி நரம்பெல்லாம் அப்படி ஒரு புடைப்பு..!! 'நான் அருகில் இருக்கும்போதே, என் காதலியை ஒருவன் ஹராஸ் செய்வதா..?? துடிக்குது புஜம்.. ஜெயிப்பது நிஜம்..!!'

"யார் அவனுக..??"

என்று பல்லை கடித்தவாறு, சரக்கென திரும்பினான். திரும்பி அந்த டேபிளில் அமர்ந்திருந்தவர்களை பார்த்ததுமே, அவனுடைய விறைப்பு புடைப்பு அடைப்பு எல்லாம் பொசுக்கென்று அடங்கிப் போனது.

அந்த இரண்டு பேர்.. மனிதர்களே அல்ல, மாமிச மலைகள் போல தோற்றமளித்தனர்..!! ஒருவன் ஜான் ஸீனா மாதிரி இருந்தான்.. அடுத்தவன் அண்டர் டேக்கர் கணக்காக காட்சியளித்தான்..!! இப்போதுதான் மல்யுத்தத்தை முடித்துவிட்டு.. மதிய உணவுக்காக ப்ரேக்கில் வந்திருப்பார்கள் போலிருக்கிறது..!! ஆட்டுத்தொடை போல ஆளுக்கொன்றை கையில் வைத்துக்கொண்டு.. கடித்து இழுத்துக் கொண்டிருந்தனர்..!! அவர்கள் சாப்பிடுவதே சண்டை போடுவது மாதிரி படுபயங்கரமாக இருந்தது..!!

அசோக் அவர்களையே பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தான்..!! 'ஒரு.. ஓமக்குச்சி நரசிம்மன்.. ஒருவிரல் கிருஷ்ணராவ்.. இந்த மாதிரிலாம் யாராவது என் லவ்வரை சைட் அடிக்க கூடாதா..?? எனக்குன்னு எங்க இருந்துடா கெளம்பி வர்றீங்க..?? ச்சை..!!'

"என்ன அசோக்.. பாத்துட்டே இருக்க.. போ.. போய் அவனுகளை ரெண்டு விடு..!!"

'ரெண்டு விடவா.. அவனுக ஒன்னு விட்டாலே நான் ஒருவாரத்துக்கு பெட் ரெஸ்ட் எடுக்கனுமே..??' மனதுக்குள் நினைத்த அசோக், பயத்துடன் எச்சில் விழுங்கினான். 'ஏதாவது செய்தாக வேண்டும்.. இல்லாவிட்டால் என்னைப் பற்றி கேவலமாக நினைத்து விடுவாள்..!!'. ஒரு முடிவுக்கு வந்த அசோக், இப்போது மீராவிடம் திரும்பி சொன்னான்.

"இ..இங்க பாரு மீரா.. பெரியவங்கள்லாம் என்ன சொல்லிருக்காங்க..??"

"என்ன சொல்லிருக்காங்க..??"

"சாம.. தான.. பேத.. தண்டம்..!!"

"தண்டமா..?? யாரு தண்டம்..??"

"ஐயோ.. யாரும் தண்டம் இல்ல..!! தண்டம்னா அடிதடின்னு அர்த்தம்.. அதை லாஸ்ட் வெப்பனாத்தான் யூஸ் பண்ணனும்னு பெரியவங்க அட்வைஸ் பண்ணிருக்காங்க..!!"

"சரி.. அதுக்கு..??"

"நான் மொதல்ல போய் அவங்கட்ட பேசி பாக்குறேன்.. செஞ்ச தப்பை அவங்களே ஒத்துக்கிட்டு.. உன்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டாங்கன்னு வச்சுக்கோ.. அதுக்கப்புறம் எதுக்கு இந்த அடிதடிலாம்..?? அவங்கள அப்படியே மன்னிச்சு விட்ரலாம்.. பாவம்..!! சரியா..??"

"ம்ம்.. சரி..!!"

மீரா திருப்தியில்லாமல் தலையசைக்க.. அசோக் இப்போது சேரில் இருந்து மெல்ல எழுந்து கொண்டான்..!! பில்டிங் ஸ்ட்ராங்காக, பேஸ்மட்டம் வீக்காக ஒரு நடை நடந்து.. அந்த மாமிச மலைகளை நோக்கி சென்றான்..!! அவர்களுடைய தலை கவிழ்ந்து போயிருக்க.. இரு கைகளாலும் இறைச்சியை பிடித்து.. கவனமாக கடித்து குதறிக் கொண்டிருந்தனர்..!! அவர்களை நெருங்கிய அசோக் மெல்ல ஆரம்பித்தான்..

"ஹாய்.. மிஸ்டர் அண்டர் டேக்கர்..!!" அவன் அழைத்ததும், இருவரும் நிமிர்ந்தனர்.

"க்யா..????" என்று வாயை பிளந்தான் ஒருவன் மட்டும். வட நாட்டவர் போல..!!

"இ..இங்க பாருங்க.. நீங்க பண்ணினது தப்பு..!! நீ..நீங்க பாக்குறதுக்குலாம் பயங்கர டெரராத்தான் இருக்கீங்க.. அதெல்லாம் நான் இல்லைன்னே சொல்லல.. ஆனாலும் நீங்க பண்ணினது தப்பு..!! அழகா இருக்கான்றதுக்காக அடுத்தவன் கேர்ள் பிரண்டை பாத்து கண்ணடிக்கிறது.. இட்ஸ் டூ பேட் யு நோ.. ரொ..ரொம்ப ரொம்ப தப்பு...!! கமான்.. வாங்க.. வந்து என் ஆள்ட்ட ஒரு ஸாரி கேட்டுடுங்க.. கமான்..!!"

அசோக் ஒருமாதிரி தடுமாற்றமும், சமாளிப்புமாய் சொல்லி முடித்தான். இவனையே கேவலமாக ஒரு லுக் விட்டுக்கொண்டிருந்த மாமிச மலைகள் இருவரும், இப்போது அவர்களுக்குள் திரும்பி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு மீண்டும் அசோக் பக்கமாய் திரும்பினர். அண்டர் டேக்கர் இப்போது அசோக்கிடம் சொன்னான்.

"அந்த புண்ணுதான் எங்ளே பாத்து கண்ணு அட்ச்சுசு..!!"

"வாட்..???" அசோக் நம்பமுடியாமல் கேட்க,

"அந்த பொண்ணுதான் எங்ளே பாத்து கண்ணு அடிச்சுச்சு..!!" என்றான் ஜான் ஸீனா பெட்டர் டமிலில். அசோக்கிற்கு இப்போது சிரிப்பை அடக்க முடியவில்லை.

"ஹாஹாஹாஹா.. என்னங்க நீங்க காமடி பண்றீங்க.. பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருத்தமா சொல்றது இல்லையா..?? ஹையோ.. ஹையோ..!!"

"க்யா..?? க்யா போல்த்தா..??"

"பின்ன என்னங்க..?? அங்க பாருங்க என் ஆளை.. எப்டி செதுக்குன சிலை மாதிரி இருக்குறா பாருங்க.. அவ போய் செனப்பன்னி மாதிரி இருக்குற உங்களை பாத்து கண்ணடிச்சான்னு சொன்னா... எப்படிங்க நம்புறது..??"

ஏதோ ஒரு ஃப்ளோவில் அசோக் அவ்வாறு சொல்லிவிட்டான். ஆனால் சொன்னபிறகு அவசரப்பட்டு சொல்லிவிட்டோமோ என்று ஃபீல் செய்தான். அதற்கு ஏற்ற மாதிரி, அவர்களும் இப்போது அசோக்கை உர்ரென்று முறைத்தனர். பிறகு கையில் இருந்த மாமிசத்தை தட்டில் வைத்துவிட்டு.. இருவரும் ஒரே நேரத்தில் எழுந்தனர்.. ஒரே நேரத்தில் முஷ்டியை மடக்கினர்.. ஒரே நேரத்தில் அசோக்கின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டனர்..!!

அடுத்த நொடி அசோக் மீரா அமர்ந்திருந்த டேபிளில் வந்து கிடந்தான்..!! என்ன நடந்தது என்றே அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.. இரண்டு கன்னங்களும் திகுதிகுவென எரிந்தன.. உதட்டோரம் கசிந்த ரத்தம் உப்புக் கரித்தது.. மூளைக்குள் மினி ஸ்டார்ஸ் பறந்தன.. மண்டைக்குள் கிணிகிணிகிணியென மணியடித்தது..!! அசோக் வீங்கிப்போன முகத்துடன் மீராவை ஏறிட்டு பரிதாபமாக பார்த்தான். அவளோ இருகைகளாலும் கன்னத்தை பொத்திக்கொண்டு..

"ஹைய்யயோ..!!" என்றாள் வடிவேலு வாய்ஸில்.

அந்தக்குரலில் இருந்தது.. ஆச்சரியமா.. அதிர்ச்சியா.. வருத்தமா.. சோகமா.. சந்தோஷமா..?? எதுவும் புரியவில்லை அசோக்கிற்கு..!!!

 

2 comments:

  1. இருந்தாலும் இந்த பொண்ணு மீராவுக்கு இவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்க கூடாதுபா

    ReplyDelete

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...