Social Icons

அன்புள்ள ராட்சசி - 2







அத்தியாயம் 3

வடபழனியில் இருந்து வளசரவாக்கம் வருவதற்குள்ளாகவே அசோக் கண்ணயர்ந்திருந்தான். அவனுடைய தலை கார் சீட்டில் சாய்ந்து அண்ணாந்திருக்க, வாய் 'ஆ'வென்று பிளந்திருந்தது. ஆல்கஹாலால் குழம்பிப் போயிருந்த அவனது மூளை, அன்று முழுதும் அவனை பாதித்த விஷயங்களை எல்லாம், கடுகளவும் லாஜிக் இல்லாமல் கண்களுக்குள் படமாக ஓட்டிக்கொண்டிருந்தது.

கொட்டும் மழையில்.. கோரமான பற்களுடனும்.. கொலைவெறி கொப்பளிக்கும் விழிகளுடனும்.. பரந்தாமன் ஷிவாவையும், ப்ரியாவையும்.. கோடாரியுடன் விரட்டினார்..!! 'யாரைப்பாத்து ஆண்ட்டின்னு சொன்ன..? யாரைப்பாத்து சொன்ன..? இனிமே சொல்லுவியா..? சொல்லுவியா.. சொல்லுவியா..??' என்று சாலமனின் ஆள் 'குண்டு' கேத்தரினா.. பற்களை நறநறவென கடித்தவாறு.. அசோக்கின் முகத்திலேயே பாக்ஸிங் பழகினாள்..!! 'இவன் ஆளு ரொம்ம்ம்ப வயலண்டா இருக்காடா..' என்று கிஷோர் யாரிடமோ செல்போனில் சொல்லிக்கொண்டிருந்தான்..!!

இந்த லட்சணத்தில்.. இவர்கள் சரக்கடித்த பாரில்.. எய்ட்டி ஃபோர் இன்ச் எல்.ஈ.டி டிவியில் ஓடிய.. ஐ.பி.எல் மேட்சின் எஃபக்ட் வேறு.. அவனுடைய கனவில் தெரிந்தது..!! வான்கடே மைதானத்தின் மையத்தில்.. வானை முட்டிவிடுவது மாதிரி நின்றது.. ஒரு ராட்சத வடிவ ராயல் சேலன்ச் குவார்ட்டர் பாட்டில்..!! தந்தூரி அடுப்பில் சுடப்பட்டு கருகிப்போன லெக்பீஸ் ஒன்று, அந்த பாட்டில் மீது ஸ்டைலாக சாய்ந்திருந்தது..!! ஃபுட் கோர்ட்டில் பார்த்த அந்த ஸ்ட்ரேஞ்சர் அழகி (நம்ம ஹீரோயின்தான்).. சியர்லீடர் கெட்டப்பில் மஞ்சள் நிற கச்சையும், குட்டைப்பாவாடையும் அணிந்து கொண்டு.. கையில் சிவப்பு நிற பாம்பாம்களுடன்.. முகத்தை வேறு சோகமாக வைத்துக்கொண்டு.. ராட்சத ராயல் சேலன்ச் பாட்டிலை சுற்றி சுற்றி வந்து.. கிறிஸ் கெயிலுடன் கங்ணம் ஸ்டைல் டான்ஸ் ஆடினாள்..!! இதெல்லாம் பத்தாதென்று, எந்த சம்பந்தமுமே இல்லாமல்.. ஹர்பஜன் சிங் வேறு இடையில் புகுந்து.. 'ஹே.. பல்லே பல்லே பல்லே..' என்று ஏற்றிக்கட்டப்பட்ட லுங்கியுடன் தவ்வித்தவ்வி குதித்துக் கொண்டிருந்தார்..!!

"மச்சி வீடு வந்துடுச்சுடா..!!"


காரை ஓட்டிக்கொண்டிருந்த வேணு தோளைப் பற்றிக் குலுக்கவும், அசோக் கனவு கலைந்து விழித்தான். கண்களை சுருக்கி வைத்தவாறே, இமைகளை சிமிட்டி சிமிட்டி சுற்றும் முற்றும் பார்த்தான். கார் ஏதோ கும்மிருட்டுக்குள் நின்றிருந்தது.

"எங்கடா.. வீட்டை காணோம்..??" அசோக் குழப்பமாக கேட்டான்.

"அந்தா... அங்ங்ங்க தெரியுது பாரு..!!"

வேணு எங்கோ தூரமாக கை காட்ட.. அசோக் பாரதிராஜா படத்தில் வரும் பல்லுப்போன கிழவி போல.. கண்களுக்கு மேல் கையை ஹரிசாண்டலாக வைத்து.. அவன் கைகாட்டிய திசையை உன்னிப்பாக பார்த்தான்..!! இருநூறு மீட்டருக்கு அப்பால்.. ஒளிர்ந்துகொண்டிருந்த அவனுடைய வீடு பார்வையில் பட்டது..!! திரும்பி வேணுவிடம் கேட்டான்.

"ஏன் இங்கயே நிறுத்திட்ட..??"

"ஹிஹி.. சும்மாதான் மச்சி.. இங்க இருந்து நடந்தே போயிடுடா.. ப்ளீஸ்..!!"

"ஏன்..?? நீங்க யாரும் வீட்டுக்கு வரலையா..??"

"இ..இல்லடா.. நாங்க இன்னொரு நாள் வரோம்.. நீ கெளம்பு..!!" கிஷோர் பின்சீட்டில் இருந்து சொன்னான். அவன் சொல்லியவிதத்தில் ஒருவித அவசரமோ பதற்றமோ இருந்தது.

"ஏய்.. வீட்டுக்கு வாங்கடா..!! இன்னைக்கு என் பர்த்டேன்னு அம்மா ஏதாவது ஸ்பெஷல் ஐட்டம் பண்ணிருப்பாங்க.. வந்து ஆளுக்கு கொஞ்சம் டேஸ்ட் பாருங்.." அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அவனுக்கு பின்புறம் இருந்த சாலமன்,

"ஐயையோ..!!!!" என்று அலறினான். அவ்வளவுதான்..!! உடனே அசோக் கடுப்புடன் பின்னால் திரும்பினான். கிஷோரையும், சாலமனையும் பார்த்து படுகோவமாக கத்தினான்.

"டேய்.. எவன்டா இப்போ ஐயோன்னு கத்துனது.. எவன் கத்துனது..?? சொல்லுங்கடா.. எனக்கு இப்போ தெரிஞ்சாகனும்.. டெல் மீ..!!!!! என் அம்மா சமையல் அவ்வளவு மட்டமா..??"

"ஐயோ.. அதுக்காக கத்தல மச்சி..!! இவன் ஷூகாலோட என் காலை மிதிச்சுட்டாண்டா..!!" சாலமன் பரிதாபமாக சமாளித்தான்.

"ஏய்.. பார்லயும், ரெஸ்டாரன்ட்லயும் சாப்பிட்டதே வயிறு ஃபுல்லா இருக்குடா மச்சி.. நாங்க இன்னொரு நாள் வந்து சாப்பிடுறோம்..!! அல்ரெடி ரொம்ப லேட் ஆயிடுச்சு.. எங்க வீட்லயும் தேட ஆரம்பிச்சுடுவாங்க..!!"

அசோக்கை சமாளிக்கும் வித்தையை ஓரளவாவது அறிந்தவன் கிஷோர்தான். அவன் அந்தமாதிரி சாந்தமாக சொன்னதும், அசோக் சமாதானமானான். மூன்று பேர் முகத்தையும் மாற்றி மாற்றி ஒருமுறை பார்த்தான். எல்லோருமே இவனைப்பார்த்து அமைதியாக புன்னகைத்தார்கள்.

"ஹ்ம்ம்.. ஓகேடா.. பை.. ஸீ யு டுமார்ரோ..!!"

அசோக் குழறலாக சொல்லிவிட்டு காரை விட்டு கீழே இறங்கினான். கால்கள் சற்றே தள்ளாட வீடு நோக்கி நடையைப்போட்டான். அவன் கீழே இறங்குவதற்காகத்தான் காத்திருந்த மாதிரி, கார் விர்ரென திடீர் வேகம் எடுத்து பறந்தது. காருக்குள் அவர்கள் 'யப்பா.. ஆண்ட்டி சமையல்ல இருந்து கிரேட் எஸ்கேப்டா சாமி..!!' என்று கமென்ட் அடித்தது அசோக்கின் காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லை.

அசோக் வீட்டுக்குள் நுழைந்தபோது, ஹாலில் இருந்த டிவியில் ஏதோ ஒரு தமிழ் சேனலில், பழைய பாடல் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. உதட்டுக்கு மேலே இரண்டு கம்பளிப்பூச்சிகள், உயர நோக்கி ஊர்வதுமாதிரி ஒரு மீசையை ஒட்டிக்கொண்டு.. இரண்டு கையிலும் இரண்டு கர்ச்சீப்களை வைத்து ஆட்டி ஆட்டி நடந்தவாறு.. 'ஊர்வசியும் இவள்தானோ... ரம்பைதானோ... ரதிதானோ... பிரம்மன் உலகை வெல்ல படைத்தானோ...??' என்று.. சிவாஜி கணேசன் சாவித்திரியை பார்த்து பாடிக்கொண்டிருந்தார்..!! சாவித்திரியும் நளினமாக தன் உதட்டை சுளித்து.. முகவாய்க்கட்டையை தோள்ப்பட்டையில் இடித்து.. வெடுக் வெடுக்கென முகத்தை வெட்டிக்கொண்டிருந்தார்..!!

டிவிக்கு முன்பாக கிடந்த சோபாக்களில் ஒன்றில் அசோக்கின் தாத்தாவும் பாட்டியும் அமர்ந்து அந்த பாடலை பார்த்தும், கேட்டும், ரசித்தும் கொண்டிருந்தனர். சரியாக அசோக் உள்ளே நுழைந்த நேரத்தில், தாத்தா பக்கவாட்டில் திரும்பி பாட்டியை பார்த்து புன்னகைத்து..

"ஏய்.. கோமளா.." என்று ரகசியமாக அழைத்து "ஞாபகம் இருக்கா..??" என்று கேட்டார்.

பாட்டிக்கு உடனே பட்டென பழைய ஞாபகம் வந்து, வெட்கத்தில் குப்பென முகம் சிவந்து போனது.

"ம்ம்.. இருக்கு..!!'

என்று கிசுகிசுப்பாக சொன்னவள், தன் முகவாய்க்கட்டையை தோள்ப்பட்டையில் சாய்த்து நளினமாக வெட்கப்பட்டாள். ஏற்கனவே நண்பர்களின் காதலைப்பார்த்து கடுப்புடன் வந்திருந்த அசோக்குக்கு, இவர்களுடைய காலம் போன காலத்து ரொமான்சைப் பார்த்ததும், மேலும் எரிச்சலே உண்டானது. தாத்தாவை பார்த்து சற்றே முறைப்பாகவும், கிண்டலாகவும் கேட்டான்.

"என்ன.. ரொம்ப ரசிச்ச்ச்சு.. பாட்டோட அப்படியே ஒன்றிப்ப்ப்போய்.. டிவி பாக்குற மாதிரி இருக்கு..??"

"அ..அது.. அதுவந்து.. டிவில தேன்கிண்ணம் போட்டான்டா அசோக்கு.. ரொம்ப நாளுக்கப்புறம் நல்ல நல்ல பாட்டா போடுறான்.. அ..அதான் நானும் உன் பாட்டியும்.. செத்த பாக்கலாம்னு.." தங்கள் ரொமான்சை பேரன் பார்த்துவிட்டான் என்ற நாணத்துடன், தாத்தா திணறலாக சொன்னார்.

"ஹ்ம்ம்.. பாத்தது போதும்.. பத்து மணியாகப் போகுது.. போய் படுத்து தூங்குங்க.. போங்க..!!"

"இருடா.. இந்த தேன்கிண்ணம் முடிஞ்சுக்கட்டும்.." தாத்தா சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

"ப்ச்.. அதான் சொல்றேன்ல..?? போய் படுங்க போங்க.. தேன்கிண்ணம், தயிர்க்கிண்ணம்னுக்கிட்டு..!!" அசோக் அவ்வாறு கத்த, பாட்டிக்கு கோவம் வந்துவிட்டது.

"ம்க்கும்.. இந்தப்பய வந்தாலே இப்படித்தான்.. நம்மள செத்த நேரம் டிவி கூட பாக்கவிடமாட்டான்.. நீங்க வாங்க.. காலுக்கு ஏதோ தைலம் தேய்க்கணும்னு சொன்னிங்களே.. தேச்சுவிட்டு தூங்க போலாம்..!!"

சலிப்பாக சொன்ன பாட்டி, ரிமோட் எடுத்து டிவியை ஆஃப் செய்தாள். தாத்தாவை கூட்டிக்கொண்டு ஹாலில் இருந்து கிளம்பினாள். அவர்கள் போவதையே அசோக் முறைப்பாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அசோக்கின் தாத்தா, பாட்டியைப்பற்றி தெரிந்து கொள்ளும் முன், நீங்கள் வேறொரு விஷயத்தை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும். தஞ்சாவூருக்கு அருகே இருக்கும் அரசுகொடிப்பாளையம் என்ற ஊரில், கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கும் மேலாக, எந்த ஒரு திருவிழாவிற்கும் மேடைநாடகம், தெருக்கூத்து போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவது இல்லை. ஆனால் அந்த ஊரின் தற்போதைய நிலைதான் அப்படி. ஐம்பது வருடங்களுக்கு முன்பு, அந்த ஊரில் வாரத்துக்கு ஒரு நாடகம், மாதத்துக்கு இரண்டு கூத்து என்று ஊரே அமர்க்களமாய் இருக்கும். திரைப்படம் அந்த அளவுக்கு வேரூன்றி இருக்காத காலத்தில், நாடகத்தையே பெரும் பொழுதுபோக்காக நினைத்திட்ட மக்கள்..!!

அந்த ஊர் ஜமீன்தார் ஒரு கலா ரசிகர். நாடகப்ரியர். யார் வீட்டிலோ கல்யாணம், காதுகுத்து என்று எந்த விசேஷமாக இருந்தாலும், ஜமீன்தார் பெரும்பங்கு செலவை ஏற்றுக்கொள்ள, மாகாளி அம்மன் கோயில் முன்பாக அமைந்திருக்கும் ஊர்ப்பொது மேடையில் நாடகம் நடைபெறும். அவ்வாறு நாடகம் போடுவதற்கு ஜமீன்தார் அணுகுவது, தஞ்சையை சேர்ந்த 'நாகமணி நாடக சபா'தான். அந்த சபாவின் சார்பாக பவளக்கொடி, வள்ளி திருமணம், சத்தியவான் சாவித்திரி என்று எந்த நாடகம் நடைபெற்றாலும், அதில் நாயகனாக நடிப்பது.. 'நடிப்பிசை வேந்தன்.. நாடக கலா சிரோன்மணி' நாராயணசாமிதான்..!!

பலத்த கரகோஷங்களுக்கு இடையே மேடையில் தோன்றும் நாராயணசாமி.. அவ்வாறு தோன்றியதுமே.. 'தேடி வந்தேனே புள்ளி மானே..' என்று உச்சஸ்தாயியில் பாடியவாறு.. மேடையில் நிற்கும் குறவள்ளியை விட்டுவிட்டு.. முன்வரிசையில் அமர்ந்திருக்கிற கோமளவல்லியை தேட ஆரம்பித்துவிடுவார்...!! அந்த நொடிக்காகவே அத்தனை நேரம் காத்திருந்த கோமளவல்லியும்.. நாராயணசாமியை ஆசையுடன் பார்ப்பாள்..!! அவர்களுடைய பார்வைகள் ஒன்றோடொன்று மோதி, காதல் கதை பேசும்..!! காதலியை கண்டுவிட்ட குஷியில் நாராயணசாமியும்.. 'ஊர்வசியும் இவள்தானோ... ரம்பைதானோ... ரதிதானோ... பிரம்மன் உலகை வெல்ல படைத்தானோ...??' என்று.. சத்தியவான் சாவித்திரிக்காக மனப்பாடம் செய்து வைத்திருந்த பாடலை.. வள்ளி திருமணத்திலேயே அள்ளி வீசுவார்..!! கோமளவல்லியும் சற்றுமுன் செய்தது போலவே, முகவாய்க்கட்டையை திருப்பி அழகாக வெட்கிப்போவாள்..!!

பிறகு நாடகம் முடியும்வரை.. அவ்வாறே இருவரும் இரவு முழுவதும்.. ஊர்மக்கள் சூழ்ந்திருக்க கண்களால் காதலித்துக் கொள்வார்கள்..!! நாடகம் முடிந்தபின்.. அதிகாலை இருளில்.. மேடைக்கு பின்புறமாக.. தனிமையில்.. தயங்கி தயங்கி கைவிரல்கள் கோர்த்துக்கொண்டு.. காதல்மொழி பேசிக்கொள்வார்கள்..!! ஜமீன்தார் தனது சொந்த செலவில் நிறைய நாடகங்களுக்கு ஏற்பாடு செய்ய.. இவர்களது காதலும்.. மேடைக்கு முன்பாகவும், பிறகு பின்பாகவும்.. தங்கு தடை இல்லாமல் வளர்ந்து வந்தது..!!

பிறிதொரு நாளில்.. வேலன் வேடத்திற்கும், வேடன் வேடத்திற்கும் இடைப்பட்ட தருணத்தில்.. உடை மாற்றுவதற்காக பனைஓலை தடுப்புக்கு அப்பால் சென்ற நாராயணசாமி.. 'கறை.. தேடினாலும் கிடைக்காது..' என்பது மாதிரி காணாமல் போனார்..!! 'வள்ளியம்மை.. அச்சு முறுக்கு வாங்கிட்டு வர்றேன்.. எடத்தை பாத்துக்க..' என்றுவிட்டு எழுந்து சென்ற கோமளவல்லியும்.. 'ஏய்.. எனக்கு ரெண்டு எள்ளு உருண்டைடி..!!' என்று ஆசையாக சொன்ன உற்றதோழிக்கு.. உருண்டை வாங்கி வராமலேயே ஊரைவிட்டு தொலைந்து போனாள்..!! நாராயணசாமியும், கோமளவல்லியும் சென்னைக்கு வந்து செட்டில் ஆகி.. பிற்காலத்தில் அசோக்குக்கு தாத்தாவும் பாட்டியுமாய் ஆகிப்போனார்கள்..!!

சரி.. இதற்கும் அந்த ஊரில் ஐம்பது வருடங்களாக கலைநிகழ்ச்சிகள் நடைபெறாமல் இருப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா..?? சொல்கிறேன்..!! இவர்கள் காணாமல் போனதற்கு இரண்டு நாட்கள் கழித்து.. ஜமீன்தாருக்கு சாமி அருள் வந்துவிட்டது..!! மகள் போனதால் வந்த துக்கத்திலும்.. தானே தனக்கு சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டதை, நினைந்து நினைந்து குமைந்து வெந்த ஆத்திரத்திலும்.. 'டேய்ய்ய்.. ஆத்தா வந்திருக்கேண்டா.. இனிமே எனக்கு விழா எடுக்குறேன்ற பேர்ல.. எவனாவது கூத்து, நாடகம்ன்னு கும்மாளம் போட்டிங்க.. எல்லாரையும் க்ளோஸ் பண்ணிப்புடுவேன்.. க்ளோஸ் பண்ணி.. ராஸ்க்கெல்ஸ்..!!' என்று சூலாயுதத்தை சுழற்றியவாறு ஜமீன்தார் உக்கிரமான குரலில் கத்தி எச்சரிக்க.. அம்புட்டுத்தேன்..!!!!

தாத்தாவையும் பாட்டியையும் விரட்டி அடித்துவிட்டு, அசோக் சோபாவில் வந்து அமர்ந்தான். கால்களை அகட்டி 'பப்பரக்கா' என்று அமர்ந்தவன், டிவியை ஆன் செய்வதற்காக ரிமோட் எடுக்கப் போக, படக்கென்று ஒரு கை அந்த ரிமோட்டை எட்டி எடுத்தது. அசோக்கின் அருகில் ஜம்மென்று வந்து அமர்ந்தாள் அவன் தங்கை சங்கீதா. சற்றுமுன் தாத்தா பாட்டியை முறைத்த மாதிரி, அசோக் இப்போது தங்கையை திரும்பி முறைக்க, அவள் டிவியை ஆன் செய்து VH1 சேனல் வைத்தாள். 'ஹிட் மீ பேபி.. ஒன் மோர் டைம்..!!' என்று அர்த்த ராத்திரியில் அலறிய பிரிட்னி ஸ்பியர்சுடன், 'ஓ.. பேபி.. பேபி..' என்று லாவகமாக ஜாயின் செய்து கொண்டாள். அருகில் அமர்ந்து தன்னை முறைத்துக்கொண்டிருக்கும் அண்ணனை, கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் தலையை மெலிதாக அசைத்து அனுபவித்து பாட ஆரம்பித்தாள். இப்போது அசோக் வாயைத் திறந்தான்.

"ஒய்.. என்ன.. கண்டுபிடிக்க முடியாதுன்னு நெனைக்கிறியா..??" என கிண்டலான குரலில் கேட்டான்.

"எ..என்ன உளர்ற.. எதை கண்டுபிடிக்க முடியாதா..??" சங்கீதா அசோக்கை பார்த்து குழப்பமாக கேட்டாள்.

"என்னதான் ஆயிரம் குயில்களுக்கு மத்தில கூவ ட்ரை பண்ணாலும்.. காக்காவோட வாய்ஸ் தனியா காட்டிக் கொடுத்துடும் சிஸ்டர்.. கண்டுபிடிக்கிறது ரொம்ப ஈஸி.. ஹாஹா..!!" சொல்லிவிட்டு அசோக் சிரித்தான். அவ்வளவுதான்.. அண்ணனின் நக்கலில் சங்கீதா இன்ஸ்டன்டாய் டென்ஷன் ஆனாள்.

"யாருடா காக்கா.. யாரு காக்கா..?? குடிக்காரப்பயலே..!!" என்று அவன் தலையில் குட்டு வைக்க முயன்றாள்.

"நீதாண்டி காக்கா.. அண்டங்காக்கா.. மண்டைக்காக்கா.. கொண்டைக்காக்கா.. கொர்ர்ர்ர்... கொர்கொர்ர்ர்...!!"

காக்கா மாதிரி கத்தி காட்டிய அசோக், அவள் கையிலிருந்த ரிமோட்டை படக்கென பறித்தான். தங்கை தன்னை எரித்து விடுவதைப்போல் பார்ப்பதை, சற்றும் சட்டை செய்யாமல் டிவி பக்கமாய் திரும்பி சேனலை மாற்றினான்.

"இப்போ அந்த சாங்கை வைக்கப் போறியா இல்லையா நீ..??" சங்கீதாவின் குரலில் அனல் தெறித்தது.

"முடியாது.. என்ன பண்ணுவ..??" அசோக்கின் குரலில் அலட்சியம் மிகுந்திருந்தது. எந்த சேனலிலும் நில்லாமல் ஒவ்வொரு சேனலாக தாவிக்கொண்டே சென்றவன், எரிச்சலில் முணுமுணுத்தான்.

"ச்சே.. எல்லா சேனல்லயும் ஏதாவது ப்ரோக்ராம் போட்டு உசுரை வாங்குறானுக.. ஒரு சேனல்லயும் அட்வர்டைஸ்மன்டே காணோம்..!!"

என்று சலிப்பாக முணுமுணுத்து தங்கையின் டென்ஷனை பல மடங்காக்கினான். அப்புறம் ஒரு தமிழ் சேனலில் 'ஒவ்வொரு ஃப்ரெண்டும் தேவை மச்சான்..' என்று ஏர்டெல் விளம்பரம் ஓடிக்கொண்டிருக்க, உடனே முகம் மலர்ந்து போய்,

"ஆங்.. இது சேனல்..!!"

என்று சந்தோஷமாக சொன்னவன், ஆர்வமாக அட்வர்டைஸ்மன்ட் பார்க்க ஆரம்பித்தான். சங்கீதா அவனிடமிருந்து ரிமோட்டை பறிக்க முயல, படக்கென கக்கத்தில் செருகிக்கொண்டான். அண்ணனின் செய்கையில் கடுப்பான சங்கீதா,

"ரிமோட்டை குடுறா.. குடிக்காரா.. நான் சாங் பாக்கணும்..!!" என்று சண்டை போட்டாள்.

"குடுக்க முடியாது போடி.. நான் ஆட் பாக்கணும்..!!"

"ஆ..மாம்.. இவர் பெரிய ஆட் ஃபில்ம் அய்யாச்சாமி.. ஆட் மட்டுந்தான் டிவில பாப்பாரு..!!" சங்கீதா நக்கலாக சொல்ல,

"ஆ...மாம்.. இவுங்க பெரிய சாதனா சர்ர்ர்றுக்கம்.. சாங் மட்டுந்தான் டிவில பாப்பாங்க.. போடி போடி..!!" என்று கவுண்ட்டர் கொடுத்தான் அசோக்.


சங்கீதா உச்சபட்ச கடுப்புடன் அண்ணனை முறைத்துக் கொண்டிருந்தாள். அசோக் தங்கைக்கு டென்ஷன் ஏத்திவிட்டதில் எக்கச்சக்க குஷியாகிப்போய், மனதுக்குள்ளேயே ரகசியமாய் சிரித்துக் கொண்டான். அப்போதுதான் டிவியில் அந்த விளம்பரம் போட்டார்கள். அசோக்கின் கம்பெனியில் இருந்து தயாரான ஒரு விளம்பரம். அந்த விளம்பரத்தை பார்த்ததுமே, அசோக் புரையேறிப்போன மாதிரி பதறிப் போனான். கக்கத்தில் இருந்த ரிமோட்டை உடனே எடுத்து, அவசரமாய் சேனலை மாற்ற முயன்றான். பதட்டத்தில் வேறேதேதோ பட்டன்களை அவன் விரல்கள் அழுத்த, சங்கீதா இப்போது ரிமோட்டை பிடுங்கிக் கொண்டாள்.

"எதுக்கு மாத்துற..?? ஓடட்டும் ஓடட்டும்.. உன் லட்சணம் இந்த உலகத்துக்கு தெரியட்டும்..!!" என்று திடீர் உற்சாகத்துடன் சொன்னாள்.

"ஏய்.. சேனலை மாத்துடி..!!" அசோக் அவமானத்தில் கத்த,

"முடியாது போ..!!" பழிப்பு காட்டிய சங்கீதா, விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள். டிவியில் ஓடிய விளம்பரத்தை பார்த்து பார்த்து கைகொட்டி சிரித்தாள்.

"ஹாஹாஹாஹா..!! 'என்ன வெண்மை.. என்னென்ன வெண்மை.. என்ன புதுமை.. என்னென்ன புதுமை..'..!! ச்சே.. என்ன சாங்கு.. சான்சே இல்ல ப்ரதர்.. கொன்னுட்ட போ..!! ஹாஹாஹாஹா..!!"

"ஏய்.. ரிமோட்டை குடுடி..!!"

"ஹாஹாஹா..!! ஏன் ப்ரதர்.. இந்த கேவலமான வெளம்பரத்தை பாத்தபிறகும்.. எந்த கேனைப்பயலாவது அந்த வாஷிங் பவுடரை வாங்குவான்னு நீ நெனைக்கிற..?? ம்ம்..?? ஹாஹா.. வெளம்பரம் எடுத்திருக்கான் பாரு.. கருமம்..!! த்தூ..!!!"

"ப்ச்.. இங்க பாரு.. இது ஒன்னும் எங்க ஆட் இல்ல.. நாங்க வெறும் ஆடியோ மிக்சிங் மட்டுந்தான் பண்ணினோம்..!!"

"அது போதுமே.. ஆடியோதான இந்த ஆட்லயே ஹைலைட்டு..!! ஹாஹா..!!" என்று சிரித்தவள்,

"என்ன கொடுமை.. என்னென்ன கொடுமை..!!" என்று அந்த விளம்பர மெட்டிலேயே பாட, அசோக் உச்சபட்ச டென்ஷன் ஆனான்.

"அடி வாங்காதடி சங்கு..!! ஒழுங்கா சேனலை மாத்து..!!" என்று கத்தினான்.

"முடியாது..!! என்னோட அறிவு ஜீவி அண்ணன் எடுத்த அட்வர்டைஸ்மன்டை.. நான் பாத்தே ஆகணும்..!!"

"ஹேய்.. நான் ஒன்னும் எடுக்கல.. அது ஹிந்தி விளம்பரம்டி.. ஒரிஜினல் சாங்கை தமிழ்ல டப் பண்றப்போ.. அப்படி பண்ணிட்டானுக.. அதுக்கு நான் என்ன பண்றது..??"

"இதுலாம் செல்லாது செல்லாது..!! இது உன் விளம்பரந்தான்..!! 'என்ன கொடுமை.. என்னென்ன கொடுமை'..!!" சங்கீதா மீண்டும் பாட, அசோக் இப்போது பொறுமை இழந்தான்.

"ஏண்டி சொல்ல சொல்ல..?? உன்னை..???? என்ன பண்றேன் பாரு..??"

என்று கோவமாக கத்திக்கொண்டே சோபாவில் இருந்து படக்கென எழுந்தான். அண்ணனின் ஆத்திரத்தை அளவுக்கதிகமாய் கிளறிவிட்டோம் என்று புரிந்து போனதும், சங்கீதாவும் இப்போது அவசரமாய் சோபாவில் இருந்து எழுந்து கொண்டாள். அசோக் அவளை அடிப்பதற்காக கையை ஓங்க, அவள் 'டாடீஈஈ..!!' என்று கத்திக்கொண்டே, உள்ளறைக்குள் ஓடினாள். அசோக்கும் விடாமல் அவளை ஆத்திரத்துடன் விரட்டினான்.

சங்கீதாவைப் பற்றி தெரிந்து கொள்ளும் முன், அசோக்கின் அப்பா அடிக்கடி நாக்கூசாமல் சொல்கிற ஒரு பொய்யை பற்றி தெரிந்து கொள்ளலாம். 'என் பொண்ணு பொறந்த கொழந்தையா இருந்தப்போ.. அவ பசியில அழுறது கூட.. பாட்டுக்கச்சேரி கேக்குற மாதிரி அவ்வளவு இனிமையா இருக்கும்..!! அதனாலதான் அவளுக்கு சங்கீதான்னே பேர் வச்சுட்டோம்..!!' - இதுதான் அந்த பொய்..!! அப்பாவின் பொய்யை உண்மை என்றே சங்கீதா நம்ப ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தான் பிறந்ததே பாடுவதற்குத்தான் என்று அவள் முடிவு கட்டியபின், சிறுவயதிலேயே அவளுக்கு இசையிலும், பாடலிலும் ஆர்வம் வந்து தொலைத்ததில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. இசையில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்கிறாள். கர்நாடக சங்கீதத்தையும், ஹிந்துஸ்தானி சங்கீதத்தையும் பயின்று முடித்து, இப்போது வெஸ்டர்ன் க்ளாசிக்கையும் ஒரு கை பார்ப்பது என்று களத்தில் இறங்கியிருக்கிறாள். தன்னுடன் பேசிக்கொண்டிருப்பவர்கள் பேச்சின் ஊடே, சின்ன கேப் விட்டால் கூட போதும்.. 'சிங்'க ஆரம்பித்துவிடுவாள் சங்கி..!! தனது இசை என்னும் இன்ப வெள்ளத்தால், இந்த உலகையே மூழ்கடித்து மூச்சு திணற வைக்கவேண்டும் என்பதுதான் அவளது முழுமுதற் லட்சியம்..!!

சங்கீதா எம்.ஏ படித்துக் கொண்டிருக்கையிலேயே, அண்ணனின் நண்பன் அண்ட் பிசினஸ் பார்ட்னர் என்ற முறையில், அடிக்கடி வீட்டுக்கு வருகை தந்த கிஷோர் அவள் கண்களில் விழுந்தான். அவனுடைய குழந்தைத்தனமான முகமும், வசீகர சிரிப்பும்தான் முதலில் அவளை அவன்பால் ஈர்த்தன. 'நீங்க நல்லா பாடுவீங்களாமே.. அங்கிள் சொன்னாரு..' என்று அவன் ஒருநாள் சொன்னபோது, 'ம்ம்.. ஆமாம்..' என்று வெட்கப்பட்டாள். 'ப்ளீஸ்ங்க.. எனக்காக ஒரு பாட்டு பாடுங்களேன்..' என்று அவன் இன்னொரு நாள் கேட்டபோது, 'ஐயோ.. நான் மாட்டேன்பா..' என்று போலியாக மறுத்தாள். வேறொரு நாள் அவனிடம் ஒரு கீர்த்தனை பாடிக்காட்ட, அவன் 'வாவ்.. லவ்லி வாய்ஸ்ங்க உங்களுக்கு..!!' என்று சொல்லிவிட்டான். இவளும் 'ரியல்லி..?? தேங்க்ஸ்..!!' என்று அப்படியே பூரித்துப் போனாள்.

அப்புறம் இவளாகவே அடிக்கடி அவனிடம் பாடிக்காட்டுவாள். அவன் வீட்டுக்கு வராத நாட்களிலும், ஃபோன் போட்டாவது தன் சொந்த காசில் அவன் காதுக்குள் கானமழை பொழிவாள். அவனும் வஞ்சகமில்லாமல் வாய் நிறைய இவளை பாராட்டுவான். ஒருநாள் அப்படித்தான்.. பார்க் பெஞ்சில் தனியாக அவனுடன் அமர்ந்திருந்த வேளையில் ஒரு பாடல் பாடினாள். பாடி முடித்ததும் அவன் 'லவ்லி வாய்ஸ்..' என்று சொல்வான் என்று, அவள் தலைகுனிந்து ஆசையுடன் காத்திருக்க, அவனோ 'லவ் யூ..!!' என்று சொல்லி குண்டை தூக்கி போட்டான்.

அவ்வளவுதான்..!! சங்கீதா மிரண்டு போனாள். வெறிநாய் ஒன்று பின்னாலேயே விரட்டுவது போல, திடுதிடுவென ஒரே ஓட்டமாய் வீட்டுக்கே ஓடிப்போனாள். பெட்டில் விழுந்து, இரண்டு தலையணைகளை எடுத்து நெஞ்சோடு இறுக்கி அணைத்துக்கொண்டும், மார்புக்குள் எழுந்த படபடப்பு அடங்கவே மறுத்தது. 'டெம்ப்ரேச்சர்லாம் நார்மலாத்தான் இருக்கு.. அப்புறம் ஏன் உடம்பு மட்டும் உனக்கு இப்படி நடுங்குது..??' என்று கவலையாக கேட்ட அப்பாவை பார்த்து, தெர்மாமீட்டர் கவ்விய வாயுடன் திருட்டுமுழி முழித்தாள்.

அன்றிலிருந்து ஒரு நான்கைந்து நாட்களுக்கு. அவள் கிஷோரை பார்க்கவில்லை.. பேசவில்லை.. முக்கியமாக அவன் காதில் பாடவில்லை..!! ஆனால்.. அவளுடைய எண்ணம் முழுவதும் அவனே நிறைந்திருந்தான்..!! அந்த நான்கைந்து நாட்களும் அவளுடைய மனதுடன் சண்டை போட்டு.. கேள்வி கேட்டு.. விவாதம் செய்து.. விரல் நகங்களை எல்லாம் கடித்து துப்பி.. அதன்பிறகுதான் அந்த உண்மையை அவள் கண்டுபிடித்தாள்..!! உடனே.. அவளுடைய அறையை விட்டு ஓடிவந்து.. கண்டு பிடித்த உண்மையை.. நடுஹாலில் நின்று சத்தம்போட்டு கத்தினாள்..!!

"YESSSS....!! I'M IN LOVE....!!!!!"

கண்டுகொண்ட காதலை காதலனிடம் அறிவிக்காமல், ஹாலில் நின்று அவள் அவ்வாறு கத்தியதற்கு காரணம் இருக்கிறது. அது என்னவென்று ஏற்கனவே உங்களுக்கு புரிந்திருக்கலாம். இல்லாவிட்டாலும் இன்னும் சிறிது நேரத்தில் நீங்களே புரிந்து கொள்வீர்கள். சங்கீதாவும், கிஷோரும் இப்போது இருவீட்டார் சம்மதத்தோடு சுதந்திரமாய் காதலித்துக் கொண்டிருக்கிறாள். 'மூத்தவனுக்கு முடிச்சுட்டுத்தான் எளையவளுக்கு..!!' என்று அம்மா கறாராய் சொல்லிவிட்டதால், அசோக்கின் திருமணத்திற்காக இப்போது சங்கீதாவும், கிஷோரும் வெயிட்டிங்..!!

இப்போதும் சங்கீதா தினமும் கிஷோரின் காதில் பாடுகிறாள். அவன் பாராட்ட மறந்து போனாலும், இவள் மறவாமல் கேட்டு வாங்குகிறாள். 'சினிமால ப்ளேபேக் பாடனுண்டா.. நீதான் எப்படியாவது ஹெல்ப் பண்ணனும்..' என்று அவனை நச்சரிக்கவும் ஆரம்பித்திருக்கிறாள். சரி.. இப்போது..

"பாருங்க டாடி.. சும்மா சும்மா என்னை அடிக்க வர்றான்..!!" என்று கத்திக்கொண்டே அப்பாவின் பின் சென்று பம்மினாள் சங்கீதா.

"பாரு மம்மி.. சும்மா சும்மா அவ என்னை கேலி பண்ணிட்டே இருக்குறா..!!" என்று குழைந்துகொண்டே அம்மாவின் முந்தானையை பிடித்துக்கொண்டு முறையிட்டான் அசோக்.

"ஏண்டா சின்னப்புள்ளையை போட்டு அடிக்க வர்ற..??" அசோக்கிடம் எகிறினார் அவன் அப்பா.

"ஏண்டி எந்த நேரமும் பச்சைப்புள்ளையை போய் கேலி பண்ணிட்டே இருக்குற.. கொழுப்பா உனக்கு..??" சங்கீதாவிடம் சீறினாள் அவள் அம்மா.

"ஆமாம்.. பச்சைப்புள்ளையாம் பச்சைப்புள்ளை..!! உன் பச்சைப்புள்ளை என்ன வேலை பண்ணிட்டு வந்திருக்குன்னு தெரியுமா உனக்கு..??" சங்கீதா அந்த மாதிரி திருப்பி கேட்கவும்,

"எ..என்ன.. என்ன பண்ணிட்டு வந்திருக்கான்..??" என்று ஒருகணம் குழம்பிய அம்மா, அப்புறம் அவனிடமே திரும்பி,

"என்னடா பண்ணிட்டு வந்த..??" என்று கேட்டாள்.

"நா..நான்.. நான் என்ன பண்ணுனேன்.. நான் ஒண்ணும் பண்ணலையே..??" அசோக் தடுமாற்றமாய் சமாளிக்க முயன்றான்.

"நடிக்கிறான் பாரு.. திருட்டுப்பய.. திருட்டுப்பய..!! உண்மையை சொல்லுடா..!!" சங்கீதா கத்தினாள்.

"ஏய்.. எதுக்குடி இப்ப அவனைப்போட்டு திட்டுற.. சரி நீ சொல்லு.. என்ன பண்ணிட்டு வந்திருக்கான்..??"

"ம்ம்ம்..?? நல்லா தண்ணி போட்டுட்டு வந்திருக்கான் மம்மி உன் புள்ளை..!!" சங்கீதா சொல்லவும் அசோக்கின் அம்மா அதிர்ந்தாள்.

"என்னடா சொல்றா இவ..??" என்று மகனை திரும்பி பரிதாபமாக பார்த்தாள்.

"ஐயோ.. இ..இல்ல மம்மி.. இவ சும்மா சொல்றா..!!"

"ஏய்.. யாருடா சும்மா சொல்றா..?? எல்லாம் தெரிஞ்சுக்கிட்டுத்தான் சொல்றேன்.. அல்ரெடி எனக்கு ந்யூஸ் வந்துடுச்சு.. கிஷோர் எல்லாம் சொல்லிட்டான்..!!"

சங்கீதா ஒருமாதிரி பெருமையாக சொன்னாள். கிஷோர் உளறிவிட்டான் என்று தெரிந்ததுமே, அசோக் அப்படியே நொந்து போனான். அதற்கு மேல் எப்படி சமாளிப்பது என்று புரியாமல், இமைகளை மூடி நெற்றியை பிசைந்தான். பிறகு தலையை மெல்ல தொங்கப் போட்டுக் கொண்டான்.

"பாரு.. உன் பச்சைப்புள்ள லட்சணத்தை..!!"

அம்மாவுக்கு சூட்டை கிளப்பிவிட முயன்றாள் சங்கீதா. ஆனால் அவளோ 'என்னடா மகனே இதெல்லாம்..?' என்பதுபோல அவனை பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போது அசோக்கின் அப்பா சற்றே கடுமையான குரலில் அவனிடம் சீறினார்.

"ஏண்டா.. பொறந்த நாளும் அதுமா போய்.. குடிச்சுட்டு வந்திருக்கியா..?? நீலாம் எப்படிடா உருப்படப் போற..??" என்று ஆரம்பிக்கவுமே, அசோக்கின் அம்மாவுக்கு பொறுக்கவில்லை.

"ப்ச்.. இப்போ எதுக்கு தேவை இல்லாம கத்துறீங்க..?? ஏ..ஏதோ.. பொறந்த நாளுன்னு ஒரு ஆசைல பண்ணிட்டான்.. விடுங்க..!! உங்கள மாதிரி வாரத்துக்கு ஒருதடவைன்னு கணக்கு வச்சா குடிச்சுட்டு இருக்கான்..??" என்று கணவரை பார்த்து கத்தி, அவரை கப்சிப் ஆக்கினாள். மகளையும் 'ஐயையே.. அவ்ளோதானா..??' என்று மண்டை காய விட்டாள். அப்புறம் மகனிடம் திரும்பி,

"சரி போ.. கை கழுவிட்டு வா.. சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.. சாப்பிடு..!!" என்று எதுவுமே நடவாத மாதிரி கனிவாக சொன்னாள்.

"ஹாஹா.. அதெல்லாம் தொரை வெளிலயே நல்லா கொட்டிட்டு வந்துட்டாரு மம்மி..!! கிஷோர் அதையும் சொல்லிட்டான்..!!" சொல்லிவிட்டு சிரித்த தங்கையை, அசோக் இப்போது நிமிர்ந்து பார்த்து முறைத்தான்.

"என்னடா.. சாப்பிட்டு வந்துட்டியா..??" அம்மாவுடைய குரல் இப்போது நிஜமாகவே ரொம்ப பரிதாபமாக ஒலித்தது.

"ம்ம்..!!"

"ப்ச்.. என்னடா நீ.. பொறந்த நாளும் அதுவுமா.. நான் உனக்காக எல்லாம் ஆசையா சமைச்சு வச்சுட்டு உக்காந்திருக்கேன்..?? சரி.. மம்மி உனக்காக ஸ்பெஷலா ஹப்ஷி அல்வான்னு ஒன்னு பண்ணுனேன்.. அதையாவது கொஞ்சம் சாப்பிடுறியா.??" அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அந்தப்பக்கம் சங்கீதா களுக் என்று சிரித்தாள்.

"ஏய்.. என்னடி இளிப்பு..??" அம்மா திரும்பி பார்த்து சீறவும் சங்கீதா வாயை மூடிக்கொண்டாள். அசோக்கின் அப்பா இப்போது கிண்டலாக சொன்னார்.

"ப்ச்.. பொறந்த நாளும் அதுவுமா கப்ஸி பெப்ஸின்னு ஏண்டி அவனைப் போட்டு வதைக்கிற.. எங்களுக்குத்தான் வேற வழி இல்ல.. அவனையாவது விடு.. பாவம்..!!"

"ம்ம்.. ஏன் பேச மாட்டீங்க.. அப்பாவும், மகளும் நல்லா தின்றதையும் தின்னுப்புட்டு..?? குடுக்குறப்ப வேணான்னு சொல்றதுக்கு என்னவாம்.. வாயில என்ன கொழக்கட்டையா வச்சிருந்தீங்க..??"

'ம்க்கும்.. நீ கிண்டுன அல்வாவைத்தான் வச்சிருந்தேன்..!! வேணாம்னா விடுற ஆளா நீ..' அப்பா வாய்க்குள்ளேயே முணுமுணுத்தார்.

"என்னது..?? என்ன சொன்னிங்க இப்போ..??"

"அவங்க கெடக்குறாங்க விடு மம்மி.. நீ போய் அல்வா எடுத்துட்டு வா.. நான் சாப்பிடுறேன்..!!"

அசோக் அந்த மாதிரி இடையில் புகுந்து சாந்தமாக சொன்னதும், அவன் அம்மாவின் டென்ஷன் சுத்தமாக வடிந்து போனது. அவளுடைய முகம் முழுதும் பூரிப்பும் மலர்சியுமாய் மாறிப்போனது.

"ம்ம்ம்.. ஒரு நிமிஷம்டா கண்ணா.. உக்காரு.. மம்மி எடுத்துட்டு வர்றேன்..!!" என்றவாறு கிச்சனுக்கு ஓடினாள்.

அசோக்கின் அப்பா அம்மாவைப் பற்றி தெரிந்துகொள்ளும் முன், உங்களுக்கு ஒரு கெஸ் குவிஸ்..!! அசோக்குக்கு அவனுடைய பெயரை யாருடைய நினைவாக அவன் பெற்றோர் வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்..?? கெஸ் செய்யுங்கள்..!!

நாராயணசாமி அசோக்கின் அப்பாவுக்கு வைத்த பேர் பிச்சுமணி..!! ஆனால்.. அசோக்கின் வீட்டுக்கு யாராவது வந்து 'பிச்சுமணி இருக்காரா..??' என்று கேட்டால்.. வீட்டில் இருப்பவர்களே சில வினாடிகள் குழம்பி, பிறகு யோசித்துதான் 'ம்ம்.. இருக்காரு இருக்காரு.. உள்ள வாங்க..' என்பார்கள். இதே 'இங்க மணிபாரதி வீடு எதுங்க..?' என்று அந்த ஏரியாவில் சென்று எவரைக் கேட்டாலும் இவர்கள் வீட்டை நோக்கி சரியாக கை நீட்டிவிடுவார்கள்..!!

பி.யு.ஸி படிக்கிற காலத்திலேயே பிச்சுமணிக்கு கதை, கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் வந்து தொலைத்தது. எந்த நேரமும் எதையாவது கிறுக்கிக்கொண்டே இருப்பார். கல்லூரி படிக்கிற காலத்தில் தான் கிறுக்கியதை எல்லாம் பத்திரிக்கைக்கு அனுப்புகிற பாவச்செயலையும் செய்யத் துணிந்தார். ஆனால் நல்லவேளையாக இவர் அனுப்பிய கதைகள் எல்லாம் சுவற்றில் அடித்த பந்தாக இவரிடமே திரும்பி வந்து சேர்ந்தன. கல்லூரி முடித்து கனரா வங்கியில் காசாளராக சேர்ந்தபின்னும், கதை எழுதும் ஆர்வம் அவரை விட்டு காணாமல் போனதா என்றால்.. போகவில்லை..!! தொடர்ந்து பத்திரிக்கைகளை நோக்கி கதை அம்பு எய்து கொண்டே இருந்தார்.

அப்படித்தான் ஒருமுறை.. அப்போது வெளிவந்திருந்த இருவர் உள்ளம் என்ற திரைப்படத்தின் கதையை.. கொஞ்சம் உல்ட்டா செய்து 'உள்ளம் இரண்டு' என்ற தலைப்பில் இவர் ஒரு கதை எழுதி அனுப்பி வைக்க.. எடிட்டரின் கவனக்குறைவாலோ.. எப்படியாவது பக்கத்தை நிரப்பவேண்டும் என்ற கட்டாயத்தினாலோ.. அந்த வார வாரமலரில் அந்தக்கதை வெளியாகியது.. ஒரு எழுத்தாளர் பிறந்து தொலைத்தார்..!!

மதுரைக்கருகே ஒரு சிற்றூரில்.. எஸ்.எஸ்.எல்.ஸி படித்து முடித்துவிட்டு.. காலையிலும், மாலையிலும் அடுப்பூதுவதை தவிர.. வேறு எந்த வேலையும் செய்யாமல் வெட்டியாக பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தாள் பாரதி..!! வெட்டி நேரத்தில் என்ன செய்வதென்று தெரியாது.. கிழிந்த காகிதத்துண்டு எதுவும் கீழே கிடந்தால் கூட.. அது எவ்வளவு சிதிலமடைந்த நிலைமையில் கிடைத்தாலும்.. எடுத்து படித்துக் கொண்டிருப்பாள்..!! வாரமலரில் வெளியான அந்த 'உள்ளம் இரண்டு' பாரதியின் கண்ணில் பட்டுவிட்டது.. உருகிப் போனாள் என்றுதான் சொல்லவேண்டும்.. பித்துப் பிடிக்காத குறை..!! கதை ஆசிரியரை கட்டாயம் பாராட்டியே ஆக வேண்டும் என்று தோன்ற.. அஞ்சு பைஸா அஞ்சல் அட்டையில் தனது பாராட்டை எழுதி அனுப்பினாள்..!!

தன்னுடைய எழுத்துக்கு முதன்முறையாக ஒரு விசிறி.. அதுவும் பெண் விசிறி.. அதனினும் திருமணம் ஆகாத பெண் விசிறி.. பூரித்துப் போனார் பிச்சுமணி..!! உடனே பதில் அனுப்ப நினைத்தார்.. அஞ்சு பைஸா அஞ்சல் அட்டை வாங்க அஞ்சலகத்துக்கு ஓடினார்..!! அந்த சின்ன அட்டையில் எத்தனை நன்றிகளை அடக்க முடியுமோ.. அத்தனையும் அடக்கி எழுதி.. அப்படியே மட்டையாக மடங்கி.. ஒரு பதில் அனுப்பினார்..!! ஒரு புகழ்பெற்ற எழுத்தாளரிடம் இருந்து உடனே தனக்கு பதில் வந்துவிட்டதில்.. புளங்காகிதம் அடைந்து போனாள்.. பாரதி..!!

கதை பிரசுரம் ஆன துணிச்சலும்.. பாரதியின் மடல் தந்த உற்சாகமும் சேர்ந்து கொள்ள.. பிச்சுமணி அதன்பிறகு நிறைய கதைகளை சுட ஆரம்பித்தார்..!! சுட்டதில் நிறைய பத்திரிகைகளிலும் வெளிவந்தன.. பிச்சுமணி, பாரதியின் அட்டை பரிமாற்றமும் தொடர்ந்தது.. அரசாங்க கஜானாவிலும் நிறைய அஞ்சு பைசாக்கள் குவிய ஆரம்பித்தன..!! ஆரம்பத்தில் கதை பற்றி பேசிய பேச்சு.. அப்புறம் நட்பாக மாறி.. பிறகு காதலாக கனிந்து.. உருகி.. ஓடி.. அஞ்சல் அட்டை வழியாக ஒழுக ஆரம்பித்தது..!! மாதவரத்தில் இருந்து மதுரை வரை அஞ்சல் அட்டையை தூக்கி சுமக்கும் போஸ்ட்மேன்கள், இவர்களுடைய அட்டைகளுக்கு 'Followers' ஆக ஜாயின் செய்து கொண்டார்கள்..!! அஞ்சலகத்தில் குவிந்து கிடக்கும் அட்டைகளில் இவர்களுடைய அட்டைகளை தேட ஆரம்பித்தனர்..!! 'பாரதியே.. பார் ரதியே.. என்னைப்பார் ரதியே..!!' என்று பிச்சுமணி பாரதியை நினைத்து அச்சுபிச்சுத்தனமாக எழுதுகிற கவிதையை, தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருக்கிற தபால்நிலையத்தில் முத்திரை குத்துகிற ஒருவர் படித்து, 'பேஷ்.. பேஷ்.. கவிதை ரொம்ம்ம்ம்ப நன்னா இருக்கு..' என்று உசிலைமணி ஸ்டைலில் பாராட்டிவிட்டு முத்திரை குத்துவார்..!!

"உன் ஆளு கதை இந்த வாரம் கல்கில வருதாம்மா.. மறக்காம படிச்சுடு..!!" - அஞ்சல் அட்டையை நீட்டியவாறே போஸ்ட்மேன் சொல்லும்போதே, பாரதிக்கு வெட்கம் பிடுங்கித் தின்னும்.

"ஐயோ.. அடுத்தவங்களுக்கு வந்த போஸ்ட் கார்ட்லாம் படிப்பிங்களாண்ணே..?? ப்ளீஸ்ண்ணே.. படிக்காதிங்கண்ணே..!!" - குனிந்த தலை நிமிறாமல் கெஞ்சலாக சொல்வாள்.
"ஹாஹா.. பயப்படாதம்மா.. படிக்க கூடியதை மட்டுந்தான் நான் படிப்பேன்..!!" - அவர் சிரிப்புடன் சொல்லிவிட்டு சைக்கிளை மிதிப்பார்.

பாரதி இந்தமாதிரி முகம் தெரியாத ஒருவருடன் அஞ்சல்வழிக்காதல் பயிலுவது அவளுடைய வீட்டுக்கு ஒருநாள் தெரிந்து போனது. கொதித்துப் போயினர். அவளுக்கு உடனே திருமணத்தை முடித்துவிடவேண்டும் என்று முடிவு செய்து வீட்டுச்சிறை வைத்தனர். பாரதி சற்றும் மனம் தளரவில்லை. வீட்டு சிறையில் இருந்து தப்பித்து ஓடி, தபால் நிலையத்தில் தஞ்சம் புகுந்தாள். அங்கிருக்கும் அரதப்பழசான டெலிபோனில் சென்னைக்கு ட்ரங் கால் புக் செய்து பேசி, ஒருவழியாக பிச்சுமணியை பிடித்தாள். அவரும் அவளை உடனே மதராசபட்டினத்துக்கு வந்து சேர சொன்னார். சென்னைக்கு ரயில் ஏறிவிட்டாள் பாரதி..!! பிறகு சென்னை வந்து.. காதலனை கைபிடித்து.. பிற்காலத்தில் அசோக், சங்கீதா ஆகிய அரிய செல்வங்களை ஈன்றெடுத்து..

திருமணம் ஆனபிறகு பிச்சுமணி வேறு புனைப்பெயரில் கதை எழுத துவங்கினார்.. தன்னுடைய கதைக்காக படங்கள், பிற புதினங்களில் இருந்து பாதியை உருவுகிற பிச்சுமணி, புனைப்பெயருக்காகவும் பாதியை தன் மனைவியின் பெயரில் இருந்து உருவிக்கொண்டார்.. அப்படி உருவித்தான் மணிபாரதி உருவானார்..!! அன்றிலிருந்து மணிபாரதியின் எழுத்துப்பயணம் நிற்கவே இல்லை.. காசாளராக வேலை பார்த்துக்கொண்டே கதை எழுதுவதை கண்டின்யூ செய்தார்..!! இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள், இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.. அவ்வளவும் காதல் கதைகள்தான்.. காதல் ரசத்தின் கடைசி சொட்டையும்.. கருணையே இல்லாமல் கசக்கி பிழிந்து சாறெடுத்துத்தான்.. தனது கதைகளையே அவர் எழுதுவது..!!

சரி.. குவிஸ்க்கு ஆன்சர் கெஸ் செய்தீர்களா..?? நானே சொல்கிறேன்.. விடையை சரிபார்த்துக் கொள்ளுங்கள்..!! வீட்டு சிறையில் இருந்த பாரதி.. பிச்சுமணியுடன் இணையவேண்டும் என்று போட்ட ப்ளான்.. நாராயணசாமி - கோமளவல்லி அண்ட் கோ போட்ட ப்ளான் மாதிரி பக்கா ப்ளான் எல்லாம் இல்லை..!! ஒரு அவசரமான அவசியத்தில் போட்ட அரைகுறை ப்ளான்..!! அதனால்தான்.. வீட்டை விட்டு எஸ்கேப் ஆகும்போது.. அடுக்களையிலோ, அரிசிப்பானையிலோ அம்மா ஒளித்து வைத்திருக்கிற பணத்தை அபேஸ் செய்துகொண்டு எஸ்கேப் ஆகவேண்டும் என்ற அறிவு.. பாரதிக்கு இல்லவே இல்லை..!! அவளுக்கு வழக்கமாக அஞ்சல் அட்டை நீட்டும் போஸ்ட்மேன்.. தபால் நிலையத்தில் தஞ்சமும் கொடுத்து, மெட்ராசுக்கு ட்ரங் கால் புக் செய்து கொடுத்ததும் இல்லாமல்.. அவளுடன் ரயில்நிலையம் வரை சென்று.. யாரோ மருதப்பனின் மகன் மயில்சாமிக்கு வந்த மணியார்டர் பணத்தில் டிக்கெட்டும் எடுத்து.. அவளை பத்திரமாக ரயில் ஏற்றி அனுப்பி வைத்தார்..!! 'அந்த வானத்தை போல மனம் படைச்ச மன்னவ'னின் பெயர்.. அசோகன்..!!

தன் காதலுக்கு உதவி செய்த போஸ்ட்மேனின் பெயரையே தன் தலைச்சன் பிள்ளைக்கு வைத்துவிட்டாள் பாரதி. வீட்டில் இருக்கும் அனைவரிடமும் எகத்தாளமாகவும், எரிச்சலாகவும் பேசுகிற அசோக், ஒரு வெகுளித்தனமான குழந்தையாக மாறிப்போய் விடுவான் என்றால், அது அவனுடைய அம்மா பாரதியிடம்தான்..!! அம்மா மீது அவனுக்கு அளவிலா அன்பு.. அவளுக்கும் மகன் மீது..!! சற்றுமுன் அசோக்கின் நண்பர்கள் பயந்த அளவுக்கோ, மணிபாரதி கேலி செய்த அளவுக்கோ.. பாரதி ஒன்றும் சமையல் கொடுமைக்காரி இல்லை.. நன்றாகவே சமைப்பாள்..!! ஆனால்.. அவள் செய்யும் தவறு.. புதுப்புது உணவுப்பண்டங்களை உருவாக்கிப் பார்க்க வேண்டும் என்று நினைப்பதுதான்..!! சமையல்கலையில் அவ்வளவு ஆர்வம்..!! ஆனால்.. அவளுடைய ஆர்வத்துக்கு தங்களை 'ஆராய்ச்சி எலி' மாதிரி உபயோகிக்கிறாளே என்றுதான்.. அனைவரும் பாரதியைப் பார்த்து தெறித்து ஓடுவதும், சன்னமான குரலில் கேலி செய்வதும்..!! ஆனால்.. அசோக் என்றுமே அம்மாவை குறை சொன்னது இல்லை.. அம்மா தயாரிக்கிற புதுவகை உணவு எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், முகம் சுளிக்காமல் முழுவதும் சாப்பிட்டு முடிப்பான்..!!

ம்ம்ம்... அசோக் வீட்டில் இருக்கும் எல்லோரையும் பற்றி பார்த்தாயிற்று அல்லவா.. யாராவது விட்டுப்போய் விட்டார்களா..?? ம்ம்ம்ம்... ஆமாம்... இவர்கள் இல்லாமல் அந்த வீட்டில் இரண்டு ஐந்தறிவு ஜீவன்களும் இருக்கின்றன.. நாராயணசாமி-கோமளவல்லி ஆளுக்கொன்றாய் வளர்க்கும் நாய்க்குட்டிகள்.. அதில் ஒன்று ஆண் நாய்.. ஒன்று பெண் நாய்.. அந்த இரு நாய்களும் கூட.. அவ்வப்போது ஒருவர் முகத்தை அடுத்தவர் முகர்ந்து முகர்ந்து பார்த்து.. ரொமான்ஸ் செய்து கொண்டிருக்குங்கள்..!!

இந்தமாதிரி.. கலையும், காதலும் அசோக்கின் வீட்டில் எங்கும் நிறைந்திருந்தது..!! கலை என்பது அசோக்கிற்கு ஓரளவு கைவரப் பெற்றிருந்தாலும், காதல் என்பது தன் கருணைப்பார்வையை அவன் மீது வீசவே இல்லை..!! அந்த ஏக்கத்தையும் நெஞ்சில் வைத்துக்கொண்டு, அடுத்தவர் காதலில் குறைகண்டுபிடித்து மனதை தேற்றியும் கொள்கிற அசோக், ஒரு பரிதாபகரமான ஜீவன்தான்..!!

மூளைக்குள் இன்னும் சற்று போதை மிச்சமிருக்கும் நிலையுடன், அம்மா தட்டில் கொண்டு வந்துகொடுத்த அல்வாவை ஸ்பூனால் விண்டு விண்டு அசோக் விழுங்கிக் கொண்டிருந்தான். அவனுக்கருகே அமர்ந்திருந்த பாரதி, தன் கையால் செய்த இனிப்பை மகன் ஆசையாக உண்ணும் அழகை, கண்களாலேயே அள்ளி பருகிக் கொண்டிருந்தாள்.

"இதுக்கு பேர் என்ன மம்மி.. தப்ஸி அல்வாவா..??" அசோக் கேட்க,

"தப்ஸி இல்லடா தடிமாடு.. ஹப்ஷி..!!!!" பாரதிக்கு முந்திக்கொண்டு சங்கீதா அவனுக்கு பதில் சொன்னாள்.

"ஹப்ஷி அல்வாவா..??" அசோக் இப்போது முகத்தை ஒருமாதிரி சுளித்தவாறு கேட்டான்.

"ஆமாண்டா கண்ணா.. பாகிஸ்தான்ல ரொம்ப பாப்புலர்..!!" பாரதி பெருமையாக சொன்னாள்.

"ஓஹோ..!!"

இப்போது மணிபாரதி, அவ்வளவு நேரமாக புரட்டிக்கொண்டிருந்த ஒரு புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, கண்ணாடியை கழற்றி கையில் எடுத்தவாறே, திடீர் ஞாபகம் வந்தவராய் அசோக்கிடம் கேட்டார்.

"ஏண்டா.. இன்னைக்கு ஏதோ ஒரு ப்ரொட்யூசரை பாக்கப் போறேன்னு சொன்ன.. என்னாச்சு..??"

"ஹாஹா.. அது தெரியாதா உங்களுக்கு.. இவன் செம சொதப்பு சொதப்பிட்டான் டாடி..!!" சங்கீதா மீண்டும் தான் ஒரு முந்திரிக்கொட்டை என்பதை நிரூபித்தாள்.

"ப்ச்.. சொதப்பலாம் ஒன்னும் இல்ல..!!" அசோக் தங்கையை ஏறிட்டு முறைப்பாக சொன்னான்.

"பொய் சொல்லாத.. அல்ரெடி எனக்கு ந்யூஸ் வந்துடுச்சு..!!"

"இங்க பாரு.. நடந்தது என்னன்னு தெரியாம பேசாத..!!" அசோக் சங்கீதாவிடம் எகிற,

"ஏய்.. அவளை விடுடா...!! நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..!!" மணிபாரதி இடையில் புகுந்து கேட்டார்.

"என்ன சொல்ல..??" அசோக் எரிச்சலாக திரும்ப கேட்டான்.

"ஏன் சொதப்புனேன்னு சொல்லு..!!" ஒரு குழப்பத்தில் அவர் அந்த மாதிரி கேட்கவும், அசோக் உச்சபட்ச டென்ஷன் ஆனான்.

"ஐயோ.. அதான் நான் ஒன்னும் சொதப்பலைன்னு சொல்றேன்ல..??" என்று கத்தினான்.

"சரிடா சரிடா..!! என்ன ஆச்சுன்னு சொல்லு..!!"

"அந்த ஆளு லவ் ஸ்டோரிதான் ப்ரொட்யூஸ் பண்ணுவாராம்.. நான் சொன்ன த்ரில்லர் ஸ்டோரி அவருக்கு பிடிக்கல..!! ஏதாவது லவ் ஸ்டோரி வச்சிருக்கீங்களான்னு கேட்டாரு.. நான் இல்லைன்னு சொல்லிட்டு கெளம்பி வந்துட்டேன்.. அவ்வளவுதான்..!!"

அசோக் சொன்னதும் சில வினாடிகள் நெற்றியை தேய்த்தவாறு யோசித்துக்கொண்டிருந்த மணிபாரதி, அப்புறம்

"ம்ம்..!! ஏண்டா அசோக்.. நீ ஏன் ஒன்னு பண்ணக் கூடாது..??" என்று மகனிடம் கேட்டார்.

"என்ன..??"

"நான்தான் எக்கச்சக்கமான லவ் ஸ்டோரி எழுதிருக்கேனே.. நீ ஏன் அந்த ஸ்டோரிலாம் சொல்லி சான்ஸ் தேடக்கூடாது.. நீ ஏன் அதுல ஏதாவது ஒன்னை படமா எடுக்க கூடாது..??" மணிபாரதி கேட்டுவிட்டு பெருமிதமாக சிரிக்க, அசோக் அவரையே கடுப்புடன் முறைத்தான்.

"ஸாரி டாடி..!! தமிழ் ரசிகர்களுக்கு அப்படி ஒரு தாங்க முடியாத துயரத்தை குடுக்குறதுக்கு நான் தயாரா இல்ல..!!" அசோக் கிண்டலாக சொன்னதை கேட்டு பாரதி சிரிக்க, மணிபாரதி டென்ஷன் ஆனார்.

"ஏண்டா.. நான் எழுதுன ஸ்டோரிலாம் உனக்கு அவ்வளவு கேவலமா போச்சா..??"

"அப்படி இல்ல டாடி.. உங்க ஸ்டோரின்னு இல்ல.. எந்த லவ் ஸ்டோரியும் எனக்கு பிடிக்கல.. ஒரே வெறுப்பா இருக்கு..!!"

"ஓஹோ.. அந்த வெறுப்புலதான் அந்த ப்ரொட்யூசர்கூட சண்டை போட்டுட்டு வந்தியா..??" சங்கீதா மீண்டும் கிண்டலாக ஆரம்பித்தாள்.

"என்னது..?? சண்டை போட்டானா..??" பாரதியும், மணிபாரதியும் இப்போது ஒன்றாக அதிர்ந்தார்கள்.

"அந்த கதை தெரியாதா உங்களுக்கு.. கிஷோர் எனக்கு எல்லாம் சொல்லிட்டான்..!! இருங்க.. இவன் என்ன பண்ணான்னு சொல்றேன்..!!" சங்கீதா ஆர்வமாக,

"ஏய்.. உன் வாயை வச்சுட்டு கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டியா..?? சும்மா நொனநொனன்னு..!!" அசோக் தங்கையிடம் சலிப்பாக சொன்னான்.

"ஏன்.. சொன்னா என்ன ..?? நான் சொல்லுவேன்..!!"

"ப்ச்.. சொல்றேன்ல.. கம்னு இரு..!!"

"முடியாது போடா..!!"

திமிராக சொன்ன சங்கீதா கிஷோர் தன்னிடம் சொன்ன விஷயத்தை அப்பாவிடம் சொல்ல ஆரம்பித்தாள். அசோக் தங்கையை முறைத்து பார்த்தான். அவனுக்கு.. சங்கீதாவிடம் உளறியிருக்கிறான் என்று கிஷோர் மீதும் கடுப்பு.. இவள் வாயை அடைக்க முடியவில்லையே என்று சங்கீதா மீதும் எரிச்சல்..!! அசோக் இரண்டுக்கும் சேர்த்து ஒரே தீர்வாய் யோசித்தான்..!!

"கேளுங்க டாடி.. அந்த ப்ரொட்யூசர்க்கு இவன் சொன்ன கதை புடிக்கலையாம்.. அவரும் டைரெக்டா எனக்கு புடிக்கலைப்பான்னு சொல்லிருக்காரு.. இவனுக்கு செம கடுப்பு..!! அந்த கடுப்புல என்ன பண்ணிருக்கான் தெரியுமா.. அந்த ப்ரொட்யூசரோட பொண்ணை.." சங்கீதா சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அசோக் இடையில் புகுந்து,

"இங்க பாரு சங்கு.. மொதல்ல நான் சொல்றதை கொஞ்சம் கேளு..!!" என்றான்.

"என்ன..??"

"நீ கிஷோர் கட்டிக்கப் போற பொண்ணு.. அவன் சொல்றதைலாம் நீ மத்தவங்கட்ட சொல்ல மாட்டேன்ற ஒரு நம்பிக்கைல.. அவன் என்னைப் பத்தின சில விஷயங்களை உன்கிட்ட சொல்லிருக்கலாம்..!! அதெல்லாம் நீ இப்படி வெளில சொல்றது ரொம்ப தப்பு..!!"

"ஏன்.. இதுல என்ன தப்பு இருக்கு..??"

"புரியலையா உனக்கு..?? சரி.. புரியிற மாதிரியே சொல்றேன்..!! இப்போ.. கிஷோர் எனக்கும் ஃப்ரண்டுதான்.. அவன் சொல்றதைலாம் நான் மத்தவங்கட்ட சொல்ல மாட்டேன்ற ஒரு நம்பிக்கைல.. அவன் உன்னைப் பத்தின சில விஷயங்களை என்கிட்ட சொல்லிருக்கான்..!! அதெல்லாம் என்னைக்காவது நான் உன்கிட்ட வந்து சொல்லிருக்கனா.. ம்ம்..?? வாயை மூடிட்டு கம்முனு இருக்குறேன்ல..??" என்று அசோக் அழகாக சங்கீதாவின் மூளைக்குள் ஆணி செருகினான்.

"எ..என்னைப் பத்தியா..?? என்னைப் பத்தி என்ன சொன்னான்..?? - ஆணி வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.

"அதெல்லாம் எதுக்கு சங்கு..?? சொன்னா உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்..!!"

"ப..பரவால.. சொல்லு..!!"

"கண்டிப்பா தெரிஞ்சுக்கிட்டே ஆகணுமா..??"

"ஆமாம்..!! சொல்லு..!!"

"ப்ச்.. என்னத்த சொல்றது சங்கு..!! உன்னைப் பத்தி பேச ஆரம்பிச்சாலே.. அப்படியே பொலம்புறான்..!! 'உன் தங்கச்சிக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையாடா'ன்னு.. அப்படியே ரத்தக் கண்ணீர் வடிக்கிறான்..!!"

"ஏ..ஏன்..??" கேட்ட சங்கீதாவுக்கு அல்ரெடி முகம் சுருங்கிப் போயிருந்தது.

"பாடுறேன்ற பேர்ல.. தெனம்தெனம் அவனை நீ அணுஅணுவா சித்திரவதை பண்றியாம்.. 'தாங்க முடியலைடா சாமி'ன்றான்..!! நரி மாதிரி ஊளையிடுறியாம்.. அதை லவ்லி வாய்ஸ்னு வேற சொல்ல சொல்லி.. அவனை கம்பெல் பண்றியாம்..!! இதுல இப்போ புதுசா.. சினிமால ப்ளேபேக் பாடுறதுக்கு வேற அவனை சான்ஸ் தேட சொல்லி இம்சை பண்றியாம்..!! 'இவ வாய்ஸை கேட்டா.. அந்த ம்யூசிக் டைரெக்டர் என் மூஞ்சில காறித் துப்பமாட்டானா'ன்னு கதர்றான்..!!"

"இ..இல்ல.. நீ பொய் சொல்ற.. கிஷோர் அப்படிலாம் சொல்லிருக்க மாட்டான்..!!" சங்கீதா சொன்னவிதத்திலேயே கிஷோர் மீது அவளுக்கிருந்த நம்பிக்கையில்லாத்தன்மை தெரிந்தது.

"நான் ஏன் பொய் சொல்லப் போறேன் சங்கு..?? இந்த 'லவ்லி வாய்ஸ்.. சினிமா சான்ஸ்..' இதுலாம்.. அவன் சொல்லாம எனக்கு எப்படி தெரியும்.. நீயே சொல்லு..!! எனக்கு கிஷோரை பாத்தா ரொம்ப பாவமா இருக்கு சங்கு.. அதான் உன்கிட்ட இவ்வளவு தூரம் பேசிட்டு இருக்கேன்..!! எனக்கு ஏதாவது பிரச்னைன்னா.. கிஷோர்தான் என் கஷ்டத்தை காது குடுத்து கேட்பான்..!! நீ இப்படி பாடி பாடி.. அந்த காது ஜவ்வை கிழிச்சு வச்சுடாத சங்கு.. ப்ளீஸ்.. உன்னை கெஞ்சிக் கேட்டுக்குறேன்..!!"

அசோக் கெஞ்சலான குரலில் சொல்லி முடித்தான். சங்கீதாவோ பேயிடம் அறை வாங்கியவள் மாதிரி, விழிகளை விரித்து வைத்தபடி அமர்ந்திருந்தாள். உள்ளுக்குள் எழுந்த துக்கத்தை அடக்க முனைபவள் பாதிரி, உதடுகளை அழுந்த கடித்துக் கொண்டாள். ஆனால் ஒருசில வினாடிகள் கூட அவளால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவளுடைய கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. 'டாடீஈஈ..!!' என்று குழந்தை மாதிரி கத்திக்கொண்டே, மணிபாரதியை கட்டிக்கொண்டாள். அவருடைய மார்பில் முகம் புதைத்து, அவளது முதுகு குலுங்க குலுங்க அழ ஆரம்பித்தாள். அவர் பதறிப்போனார்.

"ஐயையோ.. என்னம்மா நீ..?? இந்தப்பய சும்மா சொல்றான்மா.. மாப்ள அப்டிலாம் சொல்லிருக்க மாட்டாரு..!!" என்று மகளை சமாதானம் செய்ய முயன்றார்.

"ஏய்.. ஏண்டா அவளை அழ வைக்கிற..??" பாரதி இப்போது மகனை செல்லமாக கடிந்து கொள்ள,

"இல்ல மம்மி.. அவன் சொன்னதைத்தான் நான் சொன்னேன்..!!"

அசோக் நல்லபிள்ளை மாதிரி சொல்லிவிட்டு, தனது திட்டம் பலித்துவிட்ட திருப்தியில் அல்வாவை விண்டு வாயில் போட்டுக்கொள்ள ஆரம்பித்தான். அழுகிற மகளை தேற்ற மணிபாரதி படாத பாடு பட்டுக் கொண்டிருந்தார். பாரதி அவர்கள் இருவரையும் அமைதியும், அவஸ்தையுமாய் பார்த்துக் கொண்டிருந்தாள். அழுது கொண்டிருந்த சங்கீதா திடீரென எழுந்தாள்.

"இருங்க டாடி.. நான் இப்போவே அவனுக்கு ஃபோன் பண்ணி கேக்குறேன்..!!"

"ஐயோ.. சொல்றதை கேளும்மா..!! இவன் சொன்னதை நம்பி.. இந்த நேரத்துல மாப்ள கூட சண்டை போடப் போறியா..??"

"சண்டை போடல டாடி.. அப்டி சொன்னியா இல்லையான்னு மட்டும் கேக்குறேன்..!!"

"அதெல்லாம் வேணாம்மா.. எதா இருந்தாலும் நிதானமா காலைல பேசிக்கோ..!!"

"ப்ளீஸ் டாடி.. எனக்கு இப்போவே தெரிஞ்சாகனும்..!!" சங்கீதாவின் பிடிவாதத்தில், இப்போது மணிபாரதி டென்ஷன் ஆகிப் போனார்.

"அப்பப்பப்பா...!! சொன்னா கேட்க மாட்டியா நீ..?? அதான் காலைல பேசிக்கலாம்னு சொல்றேன்ல..??"

அப்பா அந்த மாதிரி குரலை உயர்த்தி கத்தவும், சங்கீதா இப்போது பட்டென அமைதியாகிப் போனாள். ஆனால் மணிபாரதிக்குத்தான் ஏறிய டென்ஷன் இறங்க சிறிது நேரம் பிடித்தது. அந்த டென்ஷனுடனே மனைவியிடம் திரும்பி சொன்னார்.

"இதுக ரெண்டையும் ஒண்ணா வீட்டுக்குள்ள வச்சுக்கிட்டு எந்த நேரமும் ஒரே டென்ஷனா இருக்குடி..!! எப்ப பாரு.. ஏதாவது சண்டை.. பிரச்சனை..!! யாராவது ஒருத்தருக்கு மொதல்ல கல்யாணத்தை முடிச்சாத்தான்.. நாம நிம்மதியா இருக்க முடியும் போல இருக்கு..!! பேசாம.. சங்கீதா கல்யாணத்தை உடனே முடிச்சுட்டா என்ன..??"

"என்னங்க.. வெளையாடுறீங்களா..?? எத்தனை தடவை சொல்றது.. அசோக்குக்கு முடிச்சுட்டுத்தான் அவளுக்கு முடிக்கணும்னு..!!" பாரதியின் குரலிலும் ஒருவித தீவிரம் தெரிந்தது.

"ப்ச்..!! அப்புறம் அவனுக்கு பொண்ணு பாக்க ஆரம்பிக்கலாமான்னா.. அதுக்கும் வேணான்னு சொல்ற..??"

"இங்க பாருங்க..!! நம்ம வீட்டுல எல்லாருக்கும் லவ் மேரேஜ்தான்.. அதேமாதிரி அசோக்குக்கும் லவ் மேரேஜ்தான்னு நான் எப்போவோ முடிவு பண்ணிட்டேன்.. நாம ஒன்னும் அவனுக்கு பொண்ணு பாக்க தேவை இல்ல.. எல்லாம் அவனே பாத்துப்பான்..!!"

"ம்க்கும்.. எனக்கு என்னவோ நம்பிக்கை இல்ல..!!"

"ஏன் அப்படி சொல்றீங்க..??"

"இவன் ஃபேஸ்புக் அக்கவுன்ட் பாத்திருக்கியா நீ..??"

"இ..இல்ல.. ஏன்..??"

"இருநூத்தி சொச்சம் ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க இவனுக்கு... அத்தனை பேரும் ஆம்பளை தடிப்பசங்க..!! இவன் செல்போனை எடுத்துப்பாரு.. அதுல மருந்துக்குகூட ஒரு பொண்ணு காண்டாக்ட் நம்பர் இருக்காது..!! நாம லவ் மேரேஜ்னு முடிவு பண்ணி என்ன பிரயோஜனம் பாரதி.. இவன் கொஞ்சமாவது முயற்சி எடுத்துக்க வேணாமா..?? இவன்தான் லவ்னாலே இன்ட்ரஸ்ட் இல்லாம இருக்கானே..??"

"நீங்க ஏன் அப்படி நெனைக்கிறீங்க..?? அவன் மனசுக்கு புடிச்ச மாதிரி ஒரு பொண்ணை இதுவரை அவன் பாக்கலைன்னு நெனச்சுக்காங்க..!! இப்போ என்ன வயசாச்சு அவனுக்கு.. இருபத்தஞ்சு வயசுதான ஆகுது..?? இன்னைக்கோ நாளைக்கோ.. அவனுக்கு புடிச்ச மாதிரி ஒரு பொண்ணை பாக்கப் போறான்.. அவ கூட பேசிப்பழக போறான்.. லவ் பண்ண போறான்.. பதிலுக்கு அந்தப்பொண்ணையும் இவனை லவ் பண்ண வைக்கப் போறான்..!!" பாரதி நம்பிக்கையாய் சொல்லிக்கொண்டிருக்க,

"கிழிச்சான்...!!!!" அண்ணன் மீது ஆத்திரத்தில் இருந்த சங்கீதா இடையில் புகுந்து கத்தினாள்.

"இவனலாம் எவ லவ் பண்ணுவா..?? இவன் மூஞ்சியும் மொகறைக்கட்டையும்..!! இவனை எவளாவது லவ் பண்ணுவான்னு வெயிட் பண்ணிட்டு இருந்தா.. நான் கெழவி ஆகுற வரை கல்யாணம் பண்ணிக்காம வெயிட் பண்ண வேண்டியதுதான்..!! இவனுக்குலாம் அரேஞ்ட் மேரேஜ்தான் சரி.. அதுவும், அப்பா அம்மாவுக்கு பயந்துக்கிட்டு மாடு மாதிரி மண்டையை மண்டையை ஆட்டுற எவளாவது மாட்டுனாத்தான் உண்டு..!!"


சங்கீதா ஆத்திரத்தில் அறிவில்லாமல் படபடவென பொரிந்து தள்ள, பெற்றோர்கள் இருவரும் ஸ்தம்பித்துப் போய் அவளை பார்த்தார்கள். தங்கையின் வார்த்தைகள் அசோக்கின் மனதை குத்திக் கிழிக்க.. அமைதியாக.. எதுவும் பதில் பேச தோன்றாதவனாய்.. ஒருவித வெறித்த பார்வை பார்த்தபடி அமர்ந்திருந்தான்..!! அல்வாவை ஸ்பூனால் விண்டு எடுத்தவன், பிறகு அதை உதட்டுக்கு எடுத்துச் செல்ல வலுவில்லாது போன மாதிரி மீண்டும் தட்டிலேயே போட்டான். மகனின் மனக்காயத்தை பட்டென புரிந்து கொண்ட பாரதி, அவனுடைய முகத்தையே பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

"எனக்கு போதும் மம்மி..!! தூக்கம் வருது.. நான் போய் படுக்குறேன்..!!"

அசோக் அமைதியாக சொல்லிவிட்டு, எழுந்து உள்ளே சென்றான். சங்கீதாவுக்கு உண்மையிலேயே அவள் செய்த தவறு புரியவில்லை. அசோக் தனது குரலை கேலி செய்வதும், தான் அவனது விளம்பரத்தை கேலி செய்வதும் மாதிரியேதான் இதையும் நினைத்தாள். தான் வீசிய வார்த்தைகள் எந்த அளவிற்கு அண்ணனின் மனதை புண்படுத்தியிருக்கும் என்று புரிந்து கொண்டாள் இல்லை. அதனால்தான் அவன் அவ்வாறு எழுந்து சென்றபோது,

"என்ன ஆச்சு இவனுக்கு திடீர்னு..??" என்று அம்மாவிடம் குழப்பமாக கேட்டாள். பாரதியோ பதிலுக்கு சீறினாள்.

"பேசுறதெல்லாம் பேசிட்டு என்னாச்சுன்னா கேக்குற..?? இன்னைக்கு அவன் பொறந்த நாளுடி.. இன்னைக்குப் போய் இப்படிலாம் பேசி.. அவனை..!! வாய்.. வாய்.. அப்படி வாய் உனக்கு..!! அந்த கொழுப்பெடுத்த வாயை அப்படியே கோணூசி வச்சு தைக்கணும்..!!"

படபடவென சொல்லிவிட்டு, அல்வா தட்டை எடுத்துக்கொண்டு கிச்சனுக்கு நகருகிற அம்மாவையே, சங்கீதா எரிச்சலாக பார்த்தாள். பிறகு அப்பாவிடம் திரும்பி முறையிட்டாள்.

"பாருங்க டாடி மம்மியை..!! அவன் ஏதோ லூசுத்தனமா பண்ணதுக்கு.. என்னைப் புடிச்சு திட்..!!' சங்கீதா சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

"இல்லம்மா சங்கீதா.. நீ பேசுனது ரொம்ப தப்பு..!! அண்ணன்ட்ட அப்படிலாம் இனிமே பேசாத..!!"

மணிபாரதி அமைதியாக சொல்லிவிட்டு எழுந்து சென்றார். அப்பாவும் அந்த மாதிரி சொன்னதும்தான், 'நிஜமாகவே நான் செய்தது தவறுதானோ..?' என்ற சந்தேகமே சங்கீதாவுக்குள் எழுந்தது..!!

தனது அறைக்குள் நுழைந்த அசோக், விளக்கை கூட அணைக்காமல், வேறு உடை அணிந்து கொள்ளவும் தோன்றாமல், அப்படியே படுக்கையில் விழுந்தான். கண்களை இறுக்கி மூடிக்கொண்டான். சங்கீதா சிந்திய வார்த்தைகள் இன்னும் அவன் இதயத்தில் ஊசி போல பாய்ந்து, சுருக் சுருக்கென குத்திக் கொண்டிருந்தன. மூச்சை சீராக உள்ளிழுத்தும் வெளியிட்டும்.. துடிக்கிற நெஞ்சை அமைதிப்படுத்த முயன்றுகொண்டிருந்தான்..!!

"பொண்ணுககிட்ட எப்படி பேசனும்னே தெரியாதா உனக்கு..??"

அசோக் ப்ளஸ் டூ படிக்கையில், அவனுடன் படித்த இரட்டை ஜடை போட்டிருக்கும் ஒரு பெண், இவனை கேவலமாய் ஒரு பார்வை பார்த்தபடி வீசிவிட்டு சென்ற வார்த்தைகள், ஏனோ இப்போது அவன் காதுக்குள் ஒலித்தன. அந்தப் பெண்ணின் பெயர் கூட இப்போது அசோக்கிற்கு நினைவில்லை. ஆனால் அவள் உதிர்த்து சென்ற வார்த்தைகள் இன்னும் அவன் உள்ளத்துக்குள் உயிரோடிருக்கின்றன.

சில நிமிடங்கள் அவ்வாறு அமைதியாக சலனமில்லாமல் கிடந்திருப்பான். பிறகு அவனது தலைமுடியை யாரோ வருடுவது போலிருக்க, இமைகளை திறந்து பார்த்தான். அவனுக்கு அருகே பாரதி அமர்ந்திருந்தாள். காயப்பட்டு கிடக்கிற மகனையே பரிவுடன் பார்த்தபடி இருந்தாள்.


"எ..என்ன மம்மி..??"

"அவ ஏதோ வெளையாட்டுத்தனமா பேசிட்டா அசோக்.. அதெல்லாம் மனசுல வச்சுக்காத..!!"

"இ..இல்ல மம்மி.. அப்படிலாம் ஒன்னும் இல்ல.. எனக்கு எதும் வருத்தம்லாம் இல்ல..!!" அசோக் புன்னகையுடன் பொய் சொன்னான்.

"ம்ம்.. உனக்கு எதும் வருத்தம் இல்லன்னா சரிதான்..!!"

"அவ சொல்றதும் சரிதான் மம்மி.. எனக்குலாம் அரேஞ்ட் மேரேஜ்தான் சரி.. என்னல்லாம் எவ லவ் பண்ணுவா..??" அசோக் அந்தமாதிரி சுய இரக்கத்துடன் சொல்ல, பாரதிக்கு பொசுக்கென்று கோவம் வந்தது.

"இப்படிலாம் அறிவில்லாம பேசினா.. அறைஞ்சு பல்லை உடைச்சிடுவேன் அசோக்..!! பேசுற பேச்சைப் பாரு..!! உனக்கு என்னடா கொறைச்சலு..?? உனக்கு லவ் பண்ண தகுதி இல்லன்னா.. உலகத்துல யாருக்குமே அந்த தகுதி இல்லன்னு அர்த்தம்..!!"

அம்மா அந்தமாதிரி கோவப்பட்டது அசோக்கிற்கு மிகவும் இதமாக இருந்தது. அந்த கோவத்திற்குள் புதைந்திருந்த அவளது அதீத அன்பை அவன் உணர்ந்துகொண்டதுதான் அதன் காரணம். மெல்ல உதடுகள் பிரித்து கொஞ்சமாய் சிரித்தான். பிறகு சற்றே புரண்டு, அம்மாவின் இடுப்பை சுற்றி இரண்டு கைகளையும் போட்டு அவளை அணைத்துக்கொண்டு, அவள் மடிமீது தலைசாய்த்து படுத்துக் கொண்டான். பாரதி மென்மையாக அவன் தலைமுடியை கோதிவிட, அசோக் மெலிதான குரலில் சொன்னான்.

"எனக்கு இந்த லவ்லாம் வேணாம் மம்மி..!! நீயே ஏதாவது ஒரு பொண்ணு பாரு.. உனக்கு புடிச்சிருந்தா போதும்.. நான் கட்டிக்கிறேன்..!!"

"ப்ச்.. ஏன்டா இப்படிலாம் பேசுற..?? நீ லவ் மேரேஜ்தான் பண்ணிக்கனும்னு, நான் ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்குறேன்னு கூடவா உனக்கு புரியலை..?? காதல்ன்றது ஒரு அற்புதமான உணர்வு அசோக்.. அது ஒரு அழகான அனுபவம்..!! நம்ம குடும்பத்துல எல்லாரும் அதை அனுபவிச்சிருக்கோம்.. என் பையனுக்கும் அந்த அனுபவம் கெடைக்கணும்னு அம்மா ஆசைப்படுறேண்டா..!! அது தப்பா..??"

"ஹ்ம்ம்.. உன் ஆசைல ஒன்னும் தப்பு இல்ல..!! இப்போ என்ன.. உனக்கு உன் பையன் லவ் பண்ணனும்.. அவ்வளவுதான..?? சரி.. மேரேஜ் பண்ணிக்கிட்டு என் பொண்டாட்டியை லவ் பண்ணிக்கிறேன்.. போதுமா..??"

"ஹையோ.. மேரேஜ்க்கு அப்புறம் வர்ற லவ் வேற.. நான் சொல்ற லவ் வேற..!! மேரேஜ்க்கு அப்புறம் வர்றது, வேற வழி இல்லாம வர்றது.. கட்டி வச்சுட்டாங்களேன்னு கட்டாயத்தினால வர்றது.. அது எல்லாருக்குமே கெடைக்கும்..!! ஆனா நான் சொல்ற லவ் அப்படி இல்ல.. புரியுதா உனக்கு..??"

"ம்ம்.. புரியுது..!! ஆனா.. சும்மா சும்மா 'லவ் பண்ணு லவ் பண்ணு'ன்னு சொன்னா.. நான் யாரைப் போய் லவ் பண்றது..?? எனக்கு மனசுக்கு பிடிச்ச மாதிரி யாராவது கெடைக்க வேணாமா..??"

"நீ யார்ட்டயாவது பேசினாத்தான மனசுக்கு பிடிச்சிருக்கா இல்லையான்னு தெரியும்..?? நீதான் எந்த பொண்ணுட்டயும் பேசகூட மாட்டேன்றியே..??"

"எனக்கு எவ கூடவும் பேசணும்னு தோணல மம்மி.. அது என் தப்பா..??"

"பொய் சொல்லாத..!! அப்படிலாம் இருக்க வாய்ப்பே இல்ல.. ஸ்கூல்ல, காலேஜ்ல, இப்போ வொர்க் பண்ற இடத்துலனு.. இதுவரை ஒரு பொண்ணு கூடவா உன்னை அட்ராக்ட் பண்ணல..?? உண்மையை சொல்லு..!! எவளாவது ஒருத்தியாவது இருப்பா..!! 'அழகா இருக்காளே..'ன்னு தோணிருக்கலாம்.. 'நல்ல பொண்ணு மாதிரி தெரியுதே..'ன்னு நெனச்சிருக்கலாம்.. 'இவ கூட பேசிப் பழகினா எப்படி இருக்கும்'னு ஆசை வந்திருக்கலாம்..!! சொல்லு.. இதுவரை அப்படி எந்த பொண்ணையுமே நீ மீட் பண்ணது இல்லையா..??"

பாரதி அந்தமாதிரி கேட்கவும், பளிச்சென்று அசோக்கின் மனதுக்குள் தோன்றியது, சற்று முன் ஃபுட் கோர்டில் பார்த்த அந்தப்பெண் தான்..!! அம்மா சொன்ன மூன்று விஷயங்களுமே, அந்தப்பெண்ணைப் பார்த்தபோது தனக்குள் தோன்றியதை எண்ணி, அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது..!! உடனே அவன் உள்ளத்துக்குள் ஒரு புதுவித மாற்றம்..!! சங்கீதாவின் பேச்சால் மனதில் ஏற்பட்டிருந்த ரணம் உடனடியாய் ஆறிப்போய், இப்போது ஜிலுஜிலுவென ஏதோ தென்றல் வீசுவது மாதிரி சிலிர்ப்பாக இருந்தது..!!அவனையும் அறியாமல் அவன் உதடுகளில் ஒரு புன்னகை குடியேறியது..!! முகத்தை நிமிர்த்தி.. அம்மாவை ஏறிட்டு.. குரலில் ஒருவித குறுகுறுப்புடனே கேட்டான்..!!

"ஒருவேளை.. அப்படி யாராவது என்னை அட்ராக்ட் பண்ணினா.. நான் என்ன செய்யட்டும் மம்மி..??"

"ஹாஹா.. இது என்ன கேள்வி..?? போய் அந்த பொண்ணுட்ட பேசு..!!"

"ஆனா.. எனக்குத்தான் பொண்ணுங்கட்ட எப்படி பேசனும்னே தெரியாதே..??"

"எப்படி பேசணும்னா..?? எனக்கு புரியல..!!"

"எப்படின்னா.. ம்ம்ம்ம்... பொண்ணுங்களுக்கு எப்படி பேசினா புடிக்கும், எப்படி பேசினா புடிக்காது.. எதுக்கு சிரிப்பாங்க, எதுக்கு கோவப்படுவாங்க, எதுக்கு வெட்கப்படுவாங்க... எப்படி பேசினா 'ச்சோ.. ச்வீட்..'னு கொஞ்சுவாங்க.. இதுலாம் எதுவுமே எனக்கு தெரியாதே..?? அப்புறம் எப்படி அந்தப் பொண்ணுக்கு என் மேல லவ் வர வைக்கிறது..??"

"ஹாஹாஹாஹா..!! பொண்ணுங்களுக்கு லவ் வர வைக்கிறதுக்கு.. நீ சொல்ற மாதிரிலாம் இனிக்க இனிக்க பேசணும்னு அவசியமே இல்லடா கண்ணா..!!"

"அப்புறம்..??"

"நீ ரொம்ப அன்பானவன்னு அவளுக்கு புரிய வை.. உன்னை கட்டிக்கிட்டா நீ அவளை பத்திரமா பாத்துப்பேன்ற நம்பிக்கையை அவளுக்கு கொடு..!! இந்த ரெண்டு விஷயம் மட்டும் போதும்..!! எந்த மகாராணி மங்கம்மாவா இருந்தாலும்.. மயங்கித்தான் ஆகணும்..!!"

"நெஜமாவா..?? இது ரெண்டும் போதுமா..??" அசோக் இன்னும் நம்பிக்கை இல்லாமல் கேட்க,

"போதுண்டா..!! மம்மி சொல்றேன்ல.. நம்பு..!!" பாரதி உறுதியாக சொன்னாள்.

"இவ்வளவுதானா மம்மி..?? லவ்ன்றது இவ்வளவு சிம்பிளா..?? நான் ரொம்ப காம்ப்ளிகேட்டட்னு நெனச்சேன்..!!"

"ஹாஹா.. காம்ப்ளிகேட்டடான ப்ராப்ளத்துக்கு.. சொல்யூஷன் எப்போவுமே ரொம்ப சிம்பிள்தாண்டா மகனே..!!" சொல்லிவிட்டு பாரதி புன்னகைக்க,

"ம்ம்ம்...!!" அசோக்கும் அம்மாவை பார்த்து புன்னகைத்தான்.

"அதுசரி..!! இவ்வளவு விஷயம் கேக்குறியே.. அந்தமாதிரி ஏதாவது பொண்ணை பாத்துட்டு இருக்கியா..??" பாரதி குறும்பாக கேட்கவும், அசோக் தடுமாறிப் போனான்.

"ஐயோ.. அதுலாம் யாரும் இல்ல மம்மி..!!" என்று வெட்கத்துடன் சொன்னவாறு, அவளுடைய மடியில் முகத்தை புதைத்துக் கொண்டான்.

அம்மாவின் வருகைக்கு பிறகு, நம்பிக்கையூட்டும் விதமாய் அவள் பேசியபிறகு, அசோக்கின் மனது இப்போது லேசாகிப் போயிருந்தது. ஃபுட் கோர்டில் பார்த்த அந்தப்பெண், திரும்ப திரும்ப அவன் மனதுக்குள் வந்து போய்க் கொண்டிருந்தாள். ஒரு இதமான உணர்வு உடலெங்கும் பரவ, அந்த உணர்வு எப்போதும் நீடித்திருக்க வேண்டும் என்று அவன் மனம் விரும்பியது. மீண்டும் தலையை நிமிர்த்தி அம்மாவை ஏறிட்டான்.

"மம்மி..!!'

"ம்ம்..??"

"கொஞ்ச நேரம் இங்க இருக்குறியா..?? நான் தூங்குனப்புறம் போறியா..??" ஏக்கமாக கேட்ட மகனையே, பாரதி கனிவுடன் பார்த்தாள்.

"இருக்குறேண்டா கண்ணா.. படுத்துக்கோ.. தூங்கு..!!"

அசோக் அம்மாவின் மடிமீது தலைவைத்து படுத்துக் கொண்டான். அசோக்குக்கு அவனுடைய குடும்ப சூழலில் இருந்தும்.. நட்பு வட்டாரத்தில் இருந்தும்.. தனது தொழிலான விளம்பர உலகத்தில் இருந்தும்.. தனது லட்சியமான திரைப்பட உலகத்தில் இருந்தும்.. காதல் என்ற வார்த்தை எப்போதுமே ஒருவித நெருக்கடியையே அவனுக்கு தரும்..!! ஆனால் இப்போது பாரதி அவனது தலையை இதமாய் வருடிக்கொடுக்க.. அந்த நெருக்கடி எல்லாம் மறந்துபோய்.. கவலையெல்லாம் தீர்ந்து போனது போன்ற உணர்வுடன்.. மனதெல்லாம் நிம்மதி நிறைய ஆரம்பிக்க.. கொஞ்சம் கொஞ்சமாய் நித்திரையில் மூழ்கிப் போனான்..!!


2 comments:

  1. "ப்ச்.. ஏன்டா இப்படிலாம் பேசுற..?? நீ லவ் மேரேஜ்தான் பண்ணிக்கனும்னு, நான் ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்குறேன்னு கூடவா உனக்கு புரியலை..?? காதல்ன்றது ஒரு அற்புதமான உணர்வு அசோக்.. அது ஒரு அழகான அனுபவம்..!! நம்ம குடும்பத்துல எல்லாரும் அதை அனுபவிச்சிருக்கோம்.. என் பையனுக்கும் அந்த அனுபவம் கெடைக்கணும்னு அம்மா ஆசைப்படுறேண்டா..!! அது தப்பா..??"//

    ahahahah what a mother

    ReplyDelete
  2. இந்த பாகத்தில் அஷோக்கிற்கு அவனது அன்னை கூறிய அதே வசனம் எனக்கும் கிட்டத்தட்ட நடந்துள்ளது ஒரு தாய் மகனுக்கு அவனது காதலுக்கு உதவும் செயல் அற்புதம்

    ReplyDelete

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...