Social Icons

அன்புள்ள ராட்சசி - 12


 




அத்தியாயம் 21

மனிதர்களை போல அவர்களுடைய மனதிற்கு ஒற்றை முகம் கிடையாது.. அது எப்போதும் பன்முகங்கள் கொண்டதாகவே இருக்கிறது.. அறுதியான ஒரு வரையறைக்குள் அகப்பட மறுக்கிறது..!! 'ஒருவன் மனது ஒன்பதடா.. அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா' என்று கவியரசர் சொன்னது உங்களுக்கு ஞாபகம் வரலாம்..!! பலதரப்பட்ட சூழ்நிலைகளில்.. பலவிதமான முகங்களை மனிதமனம் மாட்டிக்கொள்கிறது.. அது எல்லோருமே அறிந்த ஒன்றுதான்..!!

நான் இங்கே சொல்லவிருப்பது சற்று வித்தியாசமானது..!! எதிர்பாராத இக்கட்டான ஒற்றைச்சூழலில்கூட.. மனிதருடைய ஒற்றைமனம்.. இந்த மாதிரி பன்முகங்களை.. ஒரே நேரத்தில் வெளிக்காட்டக் கூடும்..!! இக்கட்டான ஒரு சூழ்நிலையில்.. நம்மில் எத்தனை பேரால் தெளிவாக சிந்திக்க முடிகிறது..?? ஒருமனதாக ஒரு முடிவெடுக்க தடுமாறுகிறோமே..?? ஏன் அப்படி..??

'மனம் என்பது மூளையில் எழுகிற எண்ணங்களின் தொகுப்புதான்' என்கிறது அறிவியல் ஆராய்ச்சி..!! எதிர்பாராத ஒரு நிகழ்வினால்.. எண்ணங்களில் ஏற்படுகிற குளறுபடியினால்.. மனம் ஒரே நேரத்தில் பலவித முகங்களை உடனுக்குடன் மாற்றிக்கொள்ளலாம்..!! தூரத்தில் அசோக்கை பார்க்க நேரிட்ட மீராவுக்கும் அதுதான் நேர்ந்தது..!!

பார்த்த விழிகள் பார்த்தபடியே இருந்தன.. ஜன்னல் கம்பிகளை பற்றிய விரல்கள் பற்றியபடியே இருந்தன.. மீராவுடைய உடலும் பார்வையும் உறைந்து போயிருக்க.. அவளுடைய உளமும் சிந்தனையும் உலுக்கிவிடப் பட்டிருந்தன..!! அடுக்கடுக்காய் பல குழப்பக் கேள்விகள் அவசரமாய் கிளம்பி.. அவளுடைய மனதின் மையத்தில் குவிய ஆரம்பித்தன..!!


'இது எப்படி சாத்தியமானது..?? இவனால் எப்படி என் முன்னே மீண்டும் தோன்றிட முடிந்தது..?? ஊரும் பெயரும் உறவும் செயலுமென.. இவனிடம் நான் உரைத்தவை எவையிலும் உண்மை துளியும் இல்லையே..?? அநாதை விடுதியில் காகிதத்தை கிழித்த அந்த நொடியிலேயே.. இவன் என்னை அணுகுவதற்கு இருந்த இறுதி இணைப்பையும் துண்டித்து விட்டதாகத்தானே எண்ணினேன்..?? அப்படி இருந்தும் எப்படி இவனால் எனக்கு எதிரே வந்து நின்றிட முடிந்தது..?? முதலில்.. இது கனவில்லையே..?? கானல் நீர் போலொரு தோற்றப்போலி இல்லையே..?? கண்ணாடியில் சற்றுமுன் நின்றிட்டது போல.. கண்ணெதிரே இப்போதும் தோன்றிட்டானோ..?? தோற்றப்போலியே என்றிட்டாலும்.. உடன் தோழனும் எப்படி தோன்றிடுவான்..?? என் சித்தம் கொண்ட பித்தத்திற்கும்.. சாலமனுக்கும்தான் என்ன சம்பந்தம்..??'

"எங்க வீட்டுக்கு எதுத்தாப்ல ஒரு பெரிய அட்வர்டைஸ்மன்ட் போர்ட் வச்சிருப்பாங்க அசோக்..!!"

எப்போதோ அசோக்கிடம் சொன்னது.. மீராவின் மூளையில் இப்போது பளிச்சிட்டது..!! எதிரே வந்து அவன் தோன்றிட, என்ன காரணம் என்பது.. இப்போது அவளுக்கு புரிந்து போனது..!! உடனே.. 'ப்ச்' என்றொரு சலிப்பு அவளிடமிருந்து வெளிப்பட்டது..!! 'Oh, Goddd' என்றவாறு நெற்றியை பற்றி பிசைந்தாள்.. ஏன் அவ்வாறு உளறிக்கொட்டினோம் என்று இப்போது வருந்தினாள்..!! அடுத்த நொடியே அவளது இன்னொரு மனது சுறுசுறுப்பானது..

'அப்படி இருந்தாலுமே.. இந்த மாதிரியான நெகிழ்தகடு.. இந்த சென்னை முழுதும்.. குறைந்தது இருபது இடங்களிலாவது இடம்பெற்றிருக்க வேண்டுமே..?? ஒவ்வொரு இடத்திலுமே.. இந்த நெகிழ்தகட்டினை சுற்றி.. குறைந்தது ஆயிரம் சாளரங்களாவது அமையப் பெற்றிருக்க வேண்டுமே..?? அப்புறமும் எப்படி..?? அப்படியானால்.. அப்படியானால்.. அத்தனை வீடுகளிலும் ஏறியிறங்கி.. என்னை தேடியலையப் போகிறானா..?? அப்படி அலைந்தாலுமே.. நான் அகப்படுவேன் என்பதும் அத்தனை உறுதியில்லையே..??'

என்பது மாதிரி அந்த மனது யோசிக்க யோசிக்க.. 'Oh, Nooo' என்றொரு திகைப்பும், பிரமிப்பும் அவளிடம்..!!

'எத்தனை கடினமான தேடுதல் இது..?? எவ்வளவு முட்டாள்த்தனமான முயற்சி இது..?? என்னவொரு கண்மூடித்தனமான காதல் இவனது..??"

இப்போது மீராவுக்கு அசோக்கின் மீது ஒருவித கனிவும், கவலையும் வந்து இரட்டையாய் பிறந்தன..!! தூரத்தில் நின்றிருந்த அசோக்.. இவள் நின்றிருந்த ஜன்னல் பக்கமாய் கைகாட்டி சாலமனிடம் ஏதோ சொல்ல.. இவள் இங்கிருந்தே.. கண்களில் ஒருவித மிரட்சியும்.. மனதில் ஒருவித தவிப்புமாய் அவனை பார்த்தாள்..!! சுள்ளென்று அடிக்கிற நண்பகல் வெயிலுக்கு.. நெற்றியில் கொப்பளித்த வியர்வைக் ஊற்றினை.. அசோக் தனது கட்டைவிரலால் வழித்து உதற.. அதைப் பார்க்க நேர்ந்த மீராவின் மெல்லிதயத்தை.. காதலன் மீதான பரிதாபம் வந்து இப்போது கவ்விக்கொண்டது..!! அவள் கண்களில் முணுக்கென்று நீர் துளிர்க்க.. உதடுகள் தவிப்புடன் மெலிதாக தடதடக்க.. அப்படியே தளர்ந்துபோய்.. அருகில் கிடந்த அந்த வெண்ணிற நாற்காலியின் மீது.. 'சொத்'தென்று அமர்ந்தாள்..!! ஒருகையால் வாயைப் பொத்திக்கொண்டு.. தூரத்தில் தெரிந்த அசோக்கையே பரிதாபமாக பார்த்தாள்..!!

'ஏனடா இப்படி செய்கிறாய் என் செல்லமே..?? ஏன் இப்படி என்னை குற்ற உணர்ச்சியில் குறுகிப் போக வைக்கிறாய்..?? என்னிடம் என்ன உள்ளதென்று இப்படி என்னை தேடியலைகிறாய்..?? அப்படி என்ன உனக்கு என்மீது அந்த... மடத்தனமான காதல்..?? எதுவுமே செய்ததில்லையே.. இந்தப்பாவி எதுவுமே செய்ததில்லையே.. உன்னுடன் பழகிய அந்த நாட்களில், உன் மனதில் காதலை வளர்க்கும் விதமாய்.. இந்தப்பாவி எதுவுமே செய்ததில்லையே..?? உன்னை அடித்திருக்கிறேன்.. அலைக்கழித்திருக்கிறேன்.. அசிங்கப்படுத்தி பார்த்திருக்கிறேன்.. அவமானமூட்டி ரசித்திருக்கிறேன்..!! அதைத்தவிர.. அன்புள்ளதொரு காதலியாய்.. என்றுமே நான் நடந்து கொண்டதில்லையேடா அறிவற்றவனே..?? அப்புறமும் ஏன்..??'

மீராவுடைய ஒருமனது அந்தமாதிரி ஆதங்கத்துடன் தத்தளித்துக் கொண்டிருக்க.. அவளுடைய இன்னொரு மனது..

'அசோக்.. என் அசோக்.. என் காதலன்..!! என் மீது எவ்வளவு பைத்தியமாய் இருக்கிறான் பார்.. என் மீது அவனிக்கிருக்கிற அன்பின் ஆழத்தை பார்.. கருணை இல்லாமல் நான் அவனை தவிக்கவிட்டு வந்தபோதிலும்.. காதல் குறையாமல் அவன் என்னை தேடியலைகிற கோலத்தை பார்..!! அசோக்.. என் அசோக்.. என் அருமைக்காதலன்..!!"

என்று அந்த ஆதங்கத்தையும் மீறி பெருமைப்பட்டுக் கொண்டது..!!

'என் காதலை இவனுக்கு உரைத்ததுதான் தவறாய் போனதோ.. அதனால்த்தான் இவனிடம் இத்தனை தீவிரமோ..?? மனதினை திறந்து காட்டாமலேயே மறைந்து போயிருக்க வேண்டுமோ..??' - குழப்பமாய் கேள்வி கேட்டது ஒரு மனது.

'இல்லையில்லை.. எந்த சூழ்நிலையிலும் இவன் இதைத்தான் செய்திருக்கப் போகிறான்.. அவனது காதல் அந்த மாதிரி..!! உனது காதலை அவனுக்கு உரைத்ததிலெல்லாம் ஒன்றும் தவறில்லை.. அவனுக்கு உன்மீதான காதலில்தான் கொஞ்சமும் தளர்வில்லை போலிருக்கிறது..!!' - தெளிவாக பதில் சொன்னது இன்னொரு மனது.

அசோக் இப்போது அந்த கட்டிடத்தில் இருந்து இறங்க ஆரம்பித்திருந்தான்.. அவன் பின்னே சாலமனும்..!! கட்டிடத்தின் பக்கவாட்டில்.. குறுக்கும் நெடுக்குமாய் ஒட்டிக்கொண்டிருந்த படிக்கட்டுகளில்.. நிதானமாக இறங்கிக்கொண்டிருக்கிற அசோக்கை.. மீராவால் இப்போது இன்னும் தெளிவாக பார்க்க முடிந்தது..!! அவளுடைய மனதிலும் இப்போது மெலிதான ஒரு பதற்றம்..!!

'என்ன செய்யப் போகிறான் இப்போது..?? இங்கிருக்கிற ஒவ்வொரு வீடாக சென்று கதவை தட்ட போகிறானா..?? கதவைத்தட்டி எனது முகம் தட்டுப்படுகிறதா என்று தவிப்புடன் தேடப் போகிறானா..?? இந்த வீட்டு கதவையும் வந்து தட்டுவானோ..?? அப்படி தட்டினால் நான் என்ன செய்யட்டும்..?? வீட்டுக்குள் இருந்துகொண்டே கதவை திறக்காமல் அவனை திரும்பி போக செய்வதா.. அல்லது.. அவன் வருவதற்கு முன்பே வீட்டை விட்டு வெளியேறி முற்றிலும் அவனை தவிர்த்து விடுவதா..?? என்ன செய்யலாம்.. எதுவும் புரியவில்லையே..??'

ஒருபக்கம் அவளுடைய மனம் அவ்வாறு பதறிக்கொண்டிருந்தாலும்.. அதே மனதின் இன்னொரு பக்கத்தில் ஒரு பரிதாபகரமான ஏக்கம்..!! அசோக்கை பிரிந்த இந்த நான்கைந்து நாட்களில்.. அவளுடைய மனதில் எப்போதும் குடிகொண்டிருக்கிற ஒரு ஏக்கம்தான் அது.. இப்போது அவனை நேரிலேயே காண நேர்ந்ததும்.. அந்த ஏக்கத்தின் அளவு எக்கச்சக்கமாக ஏறிப்போயிருந்தது..!!

'ஏன்..?? ஏன் இந்த தவிப்பு..?? எதற்காக இந்த துயரம்..?? அப்படி என்ன உனக்கு ஒரு பிடிவாதம்..?? பிறந்தது முதலாய் இருண்டு போயிருந்த உன் வாழ்க்கையை.. பிரகாசமாக மாற்றக்கூடிய பகலவன் ஒருவன்.. படிக்கட்டில் இறங்கி வருகிறான் பார்..!! உன்னை விட்டு விலகேன் என்று.. உன் வீட்டு வாசலிலேயே வந்து நிற்க போகிறான் பார்..!! உனது பிடிவாதம் அகற்று.. ஓடிச்சென்று அவனை அணைத்துக்கொள்.. அணைத்துக்கொண்டு அவன் மார்பில் முகம் புதைத்து அழு.. கண்ணீருடனே உன் கதையை அவனுக்கு உரைத்திடு.. 'இதற்காகத்தான் ஓடி ஒளிந்தாயா பைத்தியம்?' என்றவன் புன்னகைக்கையில்.. அவனுடைய முகத்தில் ஆயிரம் முத்தங்கள் வைத்திடு..!! போ.. அவனுடன் இணைந்து விடு.. நீயும் வேதனையில் உழன்று, அவனையும் வெறுமனே அலைக்கழிக்காதே..!!'

மீராவுடைய ஒருமனது.. அந்தமாதிரி காதலனுடன் கலந்துவிடலாமா என ஏக்கத்துடன் எண்ணிக்கொண்டிருக்கிற வேளையிலே.. அவளுடைய இன்னொரு மனது படக்கென்று விழித்துக்கொண்டது.. கழிவிரக்கத்தின் பிடியில் சிக்கி, அடிக்கடி அவளை திட்டி தீர்க்கிற அந்த மனது..!!

'அடச்சீய்.. வெட்கங்கெட்டவளே..!! புத்தி போகிறது பார்..!! அணைத்துக்கொள்ளப் போகிறாளாம்.. அழுதுபுலம்ப போகிறாளாம்.. அறிவில்லை உனக்கு..?? அவனுடைய அன்பு ஆழமானதுதான்.. ஆழமான அந்த அன்பினால்த்தான் உனக்காய் இப்படி அலைந்து திரிகிறான்.. ஆனால்.. அந்த அன்பிற்கு உரியவளாக உனக்கென்ன அருகதை இருக்கிறது..?? நீ கற்பிழந்த கதையைச் சொல்லியா அவனிடம் இருந்து காதலைப் பெற்றாய்..?? அவனிடம் நீ சொன்னதெல்லாம்.. வாய் நிறைய புழுகும்.. வண்டி வண்டியாய் பொய்களும்தானே..?? அவன் உன்னை கண்மூடித்தனமாய் காதலிக்கிறான் என்றதும்.. அவனது மாசற்ற அந்த காதலை.. உன் வசதிக்கேற்ப உனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பார்க்கிறாயா..?? ச்சீச்சீய்..!! எந்த மாதிரியானதொரு சந்தர்ப்பவாதியடி நீ..?? வேதனை தாளவில்லையென வெட்கம் துறந்திட துணிந்தாயோ..?? மகிழ்வான வாழ்வுக்கென மனசாட்சி கொன்றிட நினைத்தாயோ..??' - அந்த மனது அவ்வாறு சாட்டை சுழற்ற..

'இல்லை.. நான் அப்படிப்பட்டவள் இல்லை..!!' - அடுத்த மனது அஞ்சி நடுங்கியது..!!

'சரி.. அதெல்லாம் இருக்கட்டும்.. முதலில் இதற்கு பதில் சொல்.. உனது காதலை அவனுடைய கண்ணைப் பார்த்து சொல்லியே தீருவேன் என்று அடம்பிடித்தாயே.. அதேபோல் உனது கற்பை தொலைத்த கதையையும் அதே கண்களை பார்த்து உரைத்திடும் தைரியம் இருக்கிறதா உன்னிடம்..?? எப்படி சொல்வாய்.. எங்கிருந்து ஆரம்பிப்பாய்.. எதையெல்லாம் சொல்லிவிடுவதாக எண்ணம் உனக்கு..?? உனது கதையைக் கேட்டு.. அவனது கண்களில் அனிச்சையாய் ஒரு கலக்கம் ஏற்பட்டாலும்.. அதைத் தாங்கிக்கொள்கிற திறனிருக்கிறதா உன்னிடம்..??'

'இல்லை.. சத்தியமாக இல்லை..!!'

'அப்புறம் எப்படி சொல்லப் போகிறாயாம்..??'

'முடியாது.. என்னால் முடியவே முடியாது..!!'

எதிர்பாராத சூழ்நிலை.. எண்ணங்களில் ஏற்பட்ட பிறழ்வு..!! மீராவுடைய மனம்.. அதிர்ச்சி, குழப்பம், பிரமிப்பு, பெருமிதம், காதல், ஏக்கம், கழிவிரக்கம் என.. விதவிதமான முகங்களை உடனுக்குடன் மாற்றிக்கொண்டு.. மீராவை நிலைகுலைந்து போக செய்தன..!! தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தவள்.. குழப்பமான எண்ணங்களை அடக்கி.. ஒரு தெளிவான முடிவெடுக்க முயற்சி செய்தாள்..!!

'இல்லை.. அவன் என்னை பார்க்க கூடாது.. அவன் என்னை பார்க்கிறானோ இல்லையோ.. நான் இனி அவனை பார்க்கவே கூடாது.. என் மனதை என்னாலேயே நம்ப முடியவில்லை.. 'அணைத்துக்கொண்டு அழு போ' என்று என்னையே முடுக்கி விடுகிறது.. அவனை எதிரே பார்த்தால் என் வைராக்கியம் உடைபடப்போவது உறுதி..!! அது நடக்கக்கூடாது.. அவன் வரும்போது நான் இங்கிருக்க கூடாது.. அவன் வந்து எழுப்பப்போகிற அழைப்புமணி ஓசை என் காதில் விழவே கூடாது..!!'

"கிர்ர்ர்ர்ர்... கிர்ர்ர்ர்ர்... கிர்ர்ர்ர்ர்..."

மீரா ஒரு தெளிவான முடிவுக்கு வந்து கொண்டிருக்கும்போதே.. வீட்டுக்குள் அழைப்புமணியின் சப்தம் காதை கிழித்தது..!! அதைக்கேட்டதும் அவளிடம் மெலிதான ஒரு பதற்றம்.. ஒரு சிறு அதிர்ச்சி.. குழப்ப ரேகைகள் ஓடுகிற முகத்துடன் வெடுக்கென எழுந்தாள்.. திரைச்சீலை விலக்கி ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள்..!! தூரத்தில் அசோக் தெரிந்தான்.. இப்போதுதான் படிக்கட்டை விட்டிறங்கி.. சாலையில் பிரவேசித்திருந்தான்.. இவளது வீடிருக்கும் திசையை நோக்கி நடை போட ஆரம்பித்திருந்தான்..!!

'வீதியிலே அவன் என்றானால்.. வீட்டு வாசலில் யார்..??'

ஓரிரு வினாடிகள் குழப்பமாக நெற்றி சுருக்கிய மீரா.. பிறகு அவசரமாக திரும்பினாள்.. விடுவிடுவென நடந்து அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்.. ஹாலுக்குள் நுழைந்தவள் கதவினை நோக்கி நடந்தாள்.. படக்கென கதவை திறந்து பார்வையை வெளியே வீசினாள்..!!

வெளியே மனோகர் நின்றிருந்தான்..!! வெளுத்த முகம்.. அதில் ஒரு கருப்பு கண்ணாடி.. அடர்த்தியான கேசம்.. அதில் ஐந்தாறு நரைமுடி.. அகலமான நெற்றி.. அதில் இப்போது வியர்வை ஈரம்.. தடித்த உதடுகள்.. அதில் இப்போது அசட்டு சிரிப்பு..!! வெளியில் நின்றிருந்த மனோகரை பார்த்ததும்.. மீரா ஒரேநேரத்தில் ஒருவித எரிச்சலுக்கும், சலிப்புக்கும் உள்ளானாள்..!!

"என்ன..??" என்றாள் அந்த எரிச்சல் தொனிக்கும் குரலுடனே.

"என்ன என்ன..??" அவன் புரியாதவன் மாதிரி கேட்டான்.

"ப்ச்.. எதுக்காக வந்திருக்கீங்கன்னு கேட்டேன்..!!"

"ஹ்ஹ.. என் வீட்டுக்கு நான் வர்றதுக்கு காரண காரியத்தோடத்தான் வரணுமா..?? வழியை விடு..!!"

எகத்தாளமாக சொன்னவன்.. தனது கனத்த உடம்புடன் கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைய.. அவன் தன்மீது இடித்துவிடக்கூடாதென, மீரா அவசரமாய் விலகி நின்று கொண்டாள்..!!




"ஷ்ஷ்ஷ்ஷ்ஷப்பாஆஆ..!! என்னா வெயிலு..?? ச்ச.. எல்லாம் அப்படியே அவிஞ்சுரும் போல இருக்கு..!!"

சலிப்புடன் சொன்ன மனோகர்.. குளிர்கண்ணாடியை கழற்றி பாக்கெட்டில் செருகிக்கொண்டான்..!! சட்டையின் மேலிரண்டு பட்டன்களை கழற்றி விட்டுக்கொண்டான்.. உரிமையுள்ளவனாக நடந்து சென்று உள்ளறைக்குள் நுழைந்தான்..!! கதவை அறைந்து சாத்திய மீரா.. ஹாலில் நின்றவாறே அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்..!! மனோகர் சென்று ஃப்ரிட்ஜை திறந்தான்.. உள்ளே அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற உணவுப்பண்டங்களை ஓரிரு வினாடிகள் நோட்டமிட்டான்..!!

"ஐ ஹேட் திஸ்..!!"

சொல்லிக்கொண்டே உள்ளேயிருந்து அந்த பழச்சாறு பாட்டிலை எடுத்தான்.. ஃப்ரிட்ஜ் மீதே அடுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணாடி தம்ளர்களில் ஒன்றை எடுத்து.. அதில் அந்த வெண்ணிற பழச்சாறை நிரப்பிக்கொண்டான்..!! ஃப்ரிட்ஜை மூடிவிட்டு மீராவின் பக்கம் திரும்பினான்..!!

"ஐ ரியல்லி ஹேட் லைம் ஜூஸ்..!!"

என எரிச்சலாக சொல்லியபடியே.. க்ளாஸிலிருந்த எலுமிச்சைச்சாறை உறிஞ்சிக்கொண்டான்..!! கையில் ஜூஸ் தம்ளருடனே.. நடந்து ஹாலுக்கு வந்தான்..!! அவ்வளவு நேரமாக அவனையே முறைத்துக்கொண்டிருந்த மீரா.. இப்போது பார்வையை வேறுபக்கமாக திருப்பிக்கொண்டாள்..!! மனோகர் அவ்வப்போது பழச்சாறை உறிஞ்சிக்கொண்டே.. முகத்தை திருப்பி சுற்றும் முற்றும் பார்த்து.. பார்வையாலேயே அந்த வீட்டை அளவெடுத்தான்..!!

மனோகர்.. மதுசூதனனின் மருமகன்.. மதுசூதனனின் முதல் மனைவிக்கு பிறந்த மகளான புவனாவுடைய புருஷன்..!! பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாக கிடந்த மதுசூதனன்.. பத்து மாதங்களுக்கு முன்பாக உயிரை விட்டதில் இருந்து.. அவருடைய கம்பனி முதலான சொத்துக்களை எல்லாம்.. கண்காணிக்கிற பொறுப்பு மனோகருக்கு வந்தது சேர்ந்தது.. இல்லாவிட்டால்.. இவனாகவே அந்த பொறுப்பை எடுத்துக்கொண்டான் என்றும் சொல்லலாம்..!! கண்காணிக்க ஆரம்பித்த சொத்துக்களை எல்லாம்.. இப்போது ஒவ்வொன்றாக கையகப்படுத்திக் கொண்டிருக்கிறான்..!!

"வீடு மாதிரியா இருக்குது இது.. ஏதோ பண்டாரப்பசங்க தங்குற மடம் மாதிரி இருக்குது..!!" வீட்டை சுற்றி பார்த்த மனோகர் சலிப்பாக சொன்னான்.

"......................" மீரா பதில் சொல்லாமல் அமைதியாகவே இருந்தாள்.

"ஹ்ம்ம்.. நெறைய வேலையாகும் போல இருக்கே..?? இன்டீரியர்லாம் கம்ப்ளீட்டா மாத்தனும்.. மொதல்ல இந்த கலரை மாத்தணும்.. வெள்ளவெளேர்னு அசிங்கமா..!!"

"......................"

கொஞ்சமாய் மிச்சமிருந்த பழச்சாறையும், மனோகர் இப்போது தொண்டைக்குள் சரித்துக்கொண்டான். உதட்டை நாவால் நக்கிக்கொண்டான். க்ளாஸை டீப்பாயில் வைத்தவன், மீராவை ஏறிட்டு திடீரென சொன்னான்.

"ஹேய்.. அந்த விழுப்புரம் பார்ட்டி சொன்னேன்ல.. அவங்க அடுத்த வாரம் வீட்டை பார்க்க வர்றேன்னு சொல்லிருக்காங்க..!!"

"ஓ..!!"

"வீடு புடிச்சிருந்தா.. உடனே ரிஜிஸ்ட்ரேஷன் வச்சுக்கலாம்னு சொல்லிருக்காங்க..!!"

"ம்ம்..!!"

"ரிஜிஸ்ட்ரேஷன் முடிஞ்சதுன்னா.. நீ உடனே வீட்டை காலி பண்ற மாதிரி இருக்கும்..!!"

மனோகர் அந்த மாதிரி கூலாக சொல்ல, மீரா இப்போது முகத்தை சரக்கென திருப்பி அவனை முறைத்தாள். சற்றே வெப்பம் தகிக்கிற குரலில் சொன்னாள்.

"உடனேலாம் என்னால முடியாது.. ஒருமாசமாவது எனக்கு டைம் வேணும்..!!"

அவளுடைய முகத்தில் தெரிந்த ஆவேசத்தில் மனோகர் சற்றே மிரண்டு போனான் என்றுதான் சொல்லவேண்டும். ஒரிருவினாடிகள் திகைத்தவன், உடனடியாக தனது குரலையும் முகத்தையும் குழைவாக மாற்றிக்கொண்டு சொன்னான்.

"ஓகே ஓகே.. ரிலாக்ஸ்..!! ஒரு மாசந்தான.. இட்ஸ் ஓகே.. டேக் யுவர் டைம்..!!"

மதுசூதனன் நீலப்ரபாவுக்கு மிகப்பெரிய துரோகம் இழைத்திருக்கிறார்.. மீராவுடைய வாழ்வே துயரமாகிப் போக முக்கிய காரணமாயிருந்திருக்கிறார்.. அதேநேரம்.. அவர் ஒருசில நல்ல காரியங்களும் செய்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்..!! பல வருடங்களுக்கு முன்பே இந்த சிந்தாதிரிப்பேட்டை வீட்டை நீலப்ரபாவின் பெயரில் எழுதி வைத்திருந்தார்.. அதேமாதிரி.. அவர் பக்கவாதம் வந்து படுத்துக்கிடந்த காலத்திலும் கூட.. மாதச்செலவுக்கான பணம் நீலப்ரபாவுக்கு சென்று சேர்ந்துவிடுமாறு பார்த்துக்கொண்டார்..!! சுருக்கமாக சொன்னால்.. வாழ்க்கையை கெடுத்திருந்தாலும் வசதியை கொடுத்திருந்தார்..!!

அவருடைய மரணத்திற்கு பிறகு.. மாமனாரின் சொத்துக்களை கண்காணிக்க ஆரம்பித்த மனோகருக்கு.. இந்த சிந்தாதிரிப்பேட்டை வீடு கண்ணை உறுத்த ஆரம்பித்தது..!! அந்த வீட்டின் மார்க்கெட் மதிப்பு வேறு.. அவனுடைய மனதை உறுத்தியது..!! கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து, ஆசை நாயகிக்கும் அவள் வாரிசுக்குமா என.. ஆரம்பத்ததில் இருந்தே அவனுக்குள் ஒரு எண்ணம்.. எப்படியாவது அந்த சொத்தை அபகரித்து விடவேண்டும் என்பது மாதிரியான ஒரு திருட்டு எண்ணம்..!! நீலப்ரபாவும் திடீரென தவறிவிட.. மீரா தனியாளாகிப் போய்விட.. அவனது திருட்டு எண்ணம் திண்ணமாகிப் போயிற்று..!!

ஏதேதோ தகிடுதத்தம் செய்து.. பொய்யாக ஒரு போலிப்பத்திரம் தயாரித்தான்..!! கைவிளங்காத மாமனார் எழுதிய கடைசி உயில் இதுதான் என சத்தியம் செய்தான்.. தொழிலில் ஏற்பட்ட இழப்பை சரிக்கட்ட, அந்த வீட்டை விற்றால்தான் சரிப்படும் என்று சப்பைக்கட்டு கட்டினான்..!!

புவனா நல்லவள்தான்.. ஆனால் அப்பாவி.. புருஷனை எதிர்த்து செயல்படுகிற துணிவில்லாதவள்..!! அதேபோல.. மீராவுக்கும் அப்பாவின் சொத்து மீது சிறிதும் அக்கறை கிடையாது.. உரிமை பேசி விவாதம் செய்யவெல்லாம் அவள் விரும்பவில்லை..!! எல்லாவற்றையும் சரியாக பயன்படுத்திக்கொண்ட மனோகர்.. அந்த வீட்டை அவனது பிடிமானத்துக்குள் கொண்டுவந்துவிட்டான்..!! இப்போது.. பேச்சை மாற்றும் விதமாக மீராவிடம் சொன்னான்..!!

"ஆங்.. அப்புறம்.. இன்னொரு விஷயம்..!!"

"என்ன..??"

"அடுத்த வாரம் அவங்க வீட்டை பாக்க வர்றப்போ.. நீ வீட்ல இருக்க வேணாம்.. கொஞ்ச நேரம் எங்கயாவது வெளில போய் சுத்திட்டு வா..!! எதுக்கு சொல்றேன்னு புரியுதா..??"

"........................"

மனோகர் சொல்ல வருவது புரிந்து மீரா அவனையே முறைத்துக்கொண்டிருக்க, அவன் அவளை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பேசினான்.

"அவங்கபாட்டுக்கு வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்காம.. உன்னைப்பத்தி ஏதாவது கேட்பாங்க.. யாரு,என்ன,ஏதுன்னு..!! என்னாலயும் ரொம்ப நேரம் எதுவும் சொல்லாம கண்ட்ரோல் பண்ணிட்டு முடியாது.. ஏதாவது வாயை விட்ருவேன்..!! That won't be nice.. ok..?? I just want to avoid that..!!"

"ம்ம்.. புரியுது..!!"

மீரா இறுக்கமான குரலில் அமைதியாக சொல்ல.. இப்போது மனோகரின் முகத்தில் ஒருவித ஏமாற்றம்..!! அவன் ஏதோ எதிர்பார்த்திருந்தது போலவும்.. அதற்கு எதிர்ப்பதமான ரியாக்ஷனை மீரா வெளிப்படுத்தியது போலவும்.. அவனது முகபாவனை இருந்தது..!! ஒரு சில வினாடிகள் மீராவின் முகத்தையே கூர்மையாக பார்த்துக்கொண்டிருந்தவன்.. பிறகு திடீரென மென்மையான குரலில் கேட்டான்..!!

"இந்த வீடு உனக்கு ரொம்ப பிடிக்குமா..??"

"ஏன் கேக்குறீங்க..??"

"சொல்லேன்.. ப்ளீஸ்..!!"

"நான் பொறந்து வளர்ந்த வீடு.. என் அம்மா வாழ்ந்த வீடு.. பிடிக்குமான்னு கேட்டா என்ன அர்த்தம்..??"

"ஹ்ம்ம்..!! என்ன ப்ளான் வச்சிருக்குற..??"

"புரியல..!!"

"இல்ல.. வீட்டை காலி பண்ணினப்புறம்.. எங்க போற மாதிரி ப்ளான் வச்சிருக்குற..??"

"ஹ்ஹ.. அதைப்பத்திலாம் உங்களுக்கு என்ன அக்கறை..??"

"ஏன்.. எனக்கு அக்கறை இருக்க கூடாதா..??"

"ம்ம்.. உங்க அக்கறைக்கு ரொம்ப தேங்க்ஸ்..!!"

"கேட்டதுக்கு பதில் சொல்லு..!!"

"இப்போதைக்கு எந்த ப்ளானும் இல்ல..!!"

"ஹ்ம்ம்..!! இந்த வீட்டை விட்டு போறது.. உனக்கு கஷ்டமா இல்லையா..??"

"கஷ்டமாத்தான் இருக்குது.. என்ன பண்றது..??"

"நான் வேணா ஒரு யோசனை சொல்லட்டுமா..??"

"என்ன..??" மீரா கேட்டுக்கொண்டிருந்தபோதே,

"கிர்ர்ர்ர்ர்... கிர்ர்ர்ர்ர்... கிர்ர்ர்ர்ர்..." என்று அழைப்புமணி மீண்டும் அலறியது.

அழைப்புமணி ஓசை கேட்டு.. மனோகர் சுருங்கிய புருவத்துடன் கதவை திரும்பி பார்க்க.. மீரா மிரட்சியான விழிகளுடன் அதே கதவை வெறித்தாள்..!! ஓரிரு வினாடிகள் தயங்கிய மனோகர்.. பிறகு கதவை நோக்கி நடந்தான்..!! அசோக்தான் வந்திருகிறான் என்பதை அனுமானித்திருந்த மீரா.. 'இப்போது என்ன செய்வது' என்று ஒருகணம் திகைத்தாள்..!! அப்புறம் அவசரமாய் யோசித்து.. உடனடியாய் ஒரு முடிவுக்கு வந்து.. கதவை நோக்கி ஓடினாள்..!!

கதவை திறக்கும் குமிழின் மீது மனோகர் கைவைக்க.. அடுத்தநொடியே அவனுடைய கையை மீராவின் கை வந்து பற்றி.. திறக்கவிடாமல் தடுத்தது..!! மீராவுடைய முகத்தை ஏறிட்ட மனோகர்.. நெற்றியை சுருக்கி, 'என்ன..?' என்பது மாதிரி கேள்வியாக பார்த்தான்..!! மீரா உதட்டின் மீது கைவைத்து.. 'பேசாதீங்க' என்பது மாதிரி சைகை செய்தாள்.. பிறகு.. பற்றிய கையை பிடித்து இழுத்து.. மனோகரை அடுத்த அறைக்கு அழைத்து சென்றாள்..!!

"ஹேய்.. என்னாச்சு..??"

"வாங்க.. சொல்றேன்..!!"

அடுத்த அறைக்குள் நுழைந்ததும்.. அங்கிருந்தே வாசற்கதவை ஒருமுறை எட்டிப்பார்த்துக்கொண்ட மீரா.. அப்புறம்.. தன்னையே குழப்பமாக பார்த்துக்கொண்டிருந்த மனோகரிடம் திரும்பி.. கிசுகிசுப்பான குரலில் சொன்னாள்..!!

"இங்க பாருங்க.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க..!! வெளில ரெண்டு பேர் வந்திருக்காங்க.."

"யா..யார் அவங்க..?? எதுக்கு வந்திருக்காங்க..??"

"ஹையோ.. என்னை கொஞ்சம் பேச விடுங்க..!!"

"சரி சொல்லு..!!"

"என்னைத்தான் தேடி வந்திருக்காங்க.. அவங்களுக்கு என் பேர் தெரியாது.. மீரான்னு சொல்வாங்க.. ஆனா.. அவங்க தேடி வந்திருக்குறது என்னைத்தான்..!! என்னைப் பத்தி விசாரிப்பாங்க.. ஐ மீன்.. என்னோட அடையாளம்லாம் சொல்லி விசாரிப்பாங்க.. அந்த மாதிரி ஒரு பொண்ணு இந்த வீட்டுல இருக்காளான்னு கேட்பாங்க..!! தயவுசெஞ்சு அவங்கட்ட.. 'அந்த மாதிரி யாரும் இங்க இல்ல'ன்னு சொல்லிடுங்க.. ப்ளீஸ்..!! சொல்லிடுறீங்களா.. ம்ம்..??"

"எ..எனக்கு ஒன்னும் புரியல..!!"

"உங்களுக்கு ஒன்னும் புரியவேணாம்.. ஜஸ்ட்.. நான் சொன்னதை மட்டும் செய்ங்க போதும்.. ப்ளீஸ்..!!"

"ம்ம்..!!"

"கிர்ர்ர்ர்ர்... கிர்ர்ர்ர்ர்... கிர்ர்ர்ர்ர்..."

மறுபடியும் அழைப்புமணி சப்தம் எழுப்பி.. அவர்களை அவசரப்படுத்தியது..!! ஓரிரு வினாடிகள் குழப்பமாகவும், அவஸ்தையாகவும் பார்த்துக்கொண்டிருந்த மனோகர்.. அப்புறம் ஒரு பெருமூச்சுடன் திரும்பி.. ஹாலுக்கு நடந்தான்..!! மீரா அந்த அறைக்குள்ளேயே.. சுவற்றுடன் சேர்ந்து ஒன்றிக்கொண்டாள்.. அடுத்த அறையில் நடக்கப்போகிற சம்பாஷணைகளை கேட்பதற்காக.. காதுகளை இப்போதே கூர் தீட்டிக்கொண்டாள்..!!

மனோகர் சென்று கதவை திறக்க.. வெளியே நின்றிருந்த அசோக்கும், சாலமனும் அவனது பார்வைக்கு வந்தனர்..!!

"எஸ்..!! யார் வேணும்..??" மனோகர் இயல்பாக கேட்டான். சாலமன் ஒருவித இளிப்புடன் அவனுக்கு பதில் சொன்னான்.

"ஹலோ ஸார்..!! நாங்க ஸென்ஸெக்ஸ் டிப்பார்ட்மண்ட்ல இருந்து வர்றோம்..!!"

"ஸென்ஸெக்ஸ் டிப்பார்ட்மண்ட்டா..??" மனோகர் முகத்தை சுளித்தான்.

"இ..இந்த.. மக்கள்தொகைலாம் கணக்கு எடுக்குறவங்க ஸார்..!!"

"அது ஸென்ஸஸ்ல..??"

"ஓ.. ஆமால்ல..?? ஸாரி ஸார்.. நான் இங்க்லீஷ்ல கொஞ்சம் வீக்கு..!!"

"ம்ம்..!! என்ன விஷயம்னு சொல்லுங்க..!!"

"அ..அது ஒன்னும் இல்ல ஸார்.. சப்பை மேட்டரு..!! ம்ம்ம்.. உங்க வீட்டுல யாரார்லாம் இருக்கீங்கன்னு நாங்க கொஞ்சம் பாக்கலாமா..??"

"என்னது..????"

"அஅஅ.. ஐ மீன்.. யாரார்லாம் இருக்கீங்கன்னு நாங்க தெரிஞ்சுக்கலாமா..??"

சற்றுமுன் அலுவலகத்தில் பிரின்டவுட் எடுத்து வைத்திருந்த சில காகிதங்களையும்.. ஒரு பதிவேட்டினையும்.. ஒரு மூடி திறக்கப்பட்ட பேனாவையும்.. கையில் வைத்துக்கொண்டிருந்த சாலமன்.. முகத்தையும் இப்போது மிக சீரியஸாக மாற்றிக்கொண்டிருந்தான்..!! அசோக் எதுவும் பேசமால்.. முகத்திலும் எந்த சலனமும் காட்டாமல்.. அவனுக்கு அருகே அமைதியாக நின்றிருந்தான்..!! அவர்கள் இருவரையும் ஓரிரு வினாடிகள் ஏற இறங்க பார்த்த மனோகர்.. பிறகு தொண்டையை கனைத்துக்கொண்டு பட்டென சொன்னான்..!!

"நான் மட்டுந்தான்..!!"

"என்ன ஸார்.. இவ்வளவு பெரிய வீட்ல நீங்க மட்டுந்தானா..??"

"வொய்ஃப் ஊருக்கு போயிருக்கா..!!"

"ஓ..!!"

பெயர், வயது விவரங்களை மனோகர் சொல்ல.. சாலமன் அதை பதிவேட்டில் குறித்துக்கொண்டான்.. அல்லது.. பதிவேட்டில் குறித்துக் கொள்வதுமாதிரி பாவ்லா செய்தான்..!! குறித்து முடித்து நிமிர்ந்தவன்..

"அப்புறம்..??" என்றான் மனோகரிடம்.

"அப்புறம் என்ன..??"

"வே..வேற யாரும் இல்லைங்களா..??"

"வேற யாரும்னா..??" மனோகரின் கேள்விக்கு இப்போது அசோக் பதில் சொன்னான்.

"ஒரு.. இருபதுல இருந்து இருபத்தஞ்சு வயசுக்குள்ள.. செவப்பா, ஸ்லிம்மா, அழகா.. ஃப்ரீயா லூஸ் ஹேர்லாம் விட்டுக்கிட்டு.. அப்டிலாம் யாரும் உங்க வீட்ல இல்லைங்களா..??" அசோக் கூலாக கேட்க, மனோகர் அவனை முறைத்தான்.




"இதுலாம் கணக்கெடுக்க சொல்லிருக்காங்களா.. உங்க ஸென்ஸ்...ஸெக்ஸ் டிப்பார்ட்மண்ட்ல..??" என்று கிண்டலாக கேட்டான். இப்போது சாலமன் இடையில் புகுந்து..

"அ..அது.. அது ஆக்சுவலா.. இது நாங்களா.." என்று உளறலாக ஆரம்பித்து,

"ப்ளீஸ் ஸார்.. சொல்லுங்க.. அப்படி யாராவது இருக்காங்களா..??" என்று கெஞ்சலாக முடித்தான். மனோகர் இப்போது மீண்டும் ஒருமுறை இருவரையும் முறைத்துப் பார்த்துவிட்டு,

"இல்ல.. அப்படி யாரும் இங்க இல்ல..!!" என்றான்.

"அப்படின்னா ஒருவேளை.." என்று அசோக் மீண்டும் ஆரம்பிக்க, இப்போது பொறுமையிழந்து போன மனோகர்,

"ஹலோ.. ரெண்டு பேரும் கொஞ்சம் எடத்தை காலி பண்றீங்களா.. எனக்கு நெறைய வேலை இருக்கு..!!" என்று எரிச்சலாக சொன்னான்.

மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் திகைத்த அசோக்.. ஒருசில வினாடிகள் மனோகரின் முகத்தையே பாவமாக பார்த்துக் கொண்டிருந்தான்..!! அப்புறம் 'ஹ்ம்ம்ம்ம்..' என்று ஒரு சலிப்பு பெருமூச்சுடன் முகத்தை திருப்ப.. அவனுடைய பார்வையில் எதேச்சையாக அந்த ஆளுயரக்கண்ணாடி பட்டது..!! அந்த வீட்டு ஹாலின் ஒரு சுவற்றில் மாட்டப்பட்டிருந்த கண்ணாடி.. அவனுக்கெதிரே தூரத்தில் இருந்த கண்ணாடி.. சற்றுமுன்பாக குளித்து முடித்து வந்த மீரா, அசோக்கின் நினைவுகளில் ஆழ்ந்திருந்தாளே.. அதே ஆளுயரக்கண்ணாடி..!! அந்த கண்ணாடியில் இப்போது.. அடுத்த அறையில் பதுங்கியிருந்த மீராவின் பிம்பம் விழுந்திருந்தது.. அந்த பிம்பம் அசோக்கின் கண்களில் விழுந்திருந்தது..!!!!

மீராவின் பிம்பம் என்றால்.. அவளுடைய முழு பிம்பமும் அல்ல.. சுவற்றோடு ஒடுங்கியிருந்த அவளது பக்கவாட்டு பிம்பம்..!! அவளுடைய முகம் தெரியவில்லை..!! சிவப்பு நிற டி-ஷர்ட் அணிந்த ஒரு இளம்பெண் ஒருத்தி.. பக்கத்து அறையில் பதுங்கியிருக்கிறாள் என்கிற அளவில்தான்.. அந்த பிம்பத்தில் இருந்து அறிந்துகொள்ள முடிந்தது..!! அதை கவனிக்க நேர்ந்த அசோக்கின் முகத்தில் ஒருவித திகைப்பு..!!

"ஸ்..ஸார்.. வீட்ல யாரும் இல்லைன்னு சொன்னீங்க..??"

"ஆ..ஆமாம்..!!"

"உ..உள்ள யாரோ இருக்காங்க ஸார்..!!" அசோக் அவ்வாறு திணறலாக சொல்ல, இப்போது மனோகரிடம் ஒரு பதற்றம்.

"இ..இல்லையே.. யாரும் இல்ல..!!"

"இருக்காங்க ஸார்.. பக்கத்து ரூம்ல யாரோ இருக்காங்க..!!"

"ஹலோ.. நான்தான் யாரும் இல்லைன்னு சொல்றேன்ல.??" மனோகர் இப்போது டென்ஷனானான்.

"இல்ல ஸார்.. இருக்காங்க..!!"

அசோக் சொல்லிக்கொண்டே வீட்டுக்குள் நுழைவது மாதிரி முன்னே நகர.. மனோகர் அவனது மார்பில் கைவைத்து அவனை பின்பக்கமாக தள்ளிவிட்டான்..!!

"ப்ச்.. சொன்னா கேட்கமாட்டீங்களா..?? பிரச்னை பண்றதுக்குனே வந்திருக்கீங்களா.. இப்போ போறீங்களா, இல்ல போலீசை கூப்பிடவா..??"

மனோகர் அந்தமாதிரி எகிறவும்.. இப்போது சாலமன் இடையில் புகுந்தான்..!! தடுமாறிய அசோக்கை தாங்கிப் பிடித்துக்கொண்டவன்.. மனோகரை ஏறிட்டு சற்றே சாந்தமான குரலில் சொன்னான்..!!

"ஸார் ஸார்.. விடுங்க ஸார்.. அவன் ஏதோ தெரியாம..!! ஒன்னும் ப்ராப்ளம் இல்ல ஸார்.. நீங்க ஒன்னும் டென்ஷன் ஆகாதிங்க.. நாங்க கெளம்புறோம்.. ஓகேவா..?? ஏய்.. வாடா..!!"

அசோக்கின் கையைப்பற்றி அவனை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு சாலமன் கிளம்ப.. மனோகர் 'படார்ர்...' என கதவை அறைந்து சாத்தினான்..!! அவசரமாய் திரும்பி நடந்து அடுத்த அறைக்கு சென்றான்..!! கவலையும், பரபரப்பும் தொற்றிக்கொண்டவளாய் எதிரே வந்த மீராவிடம்.. சற்றே எரிச்சலான குரலில் கேட்டான்..!!

"யார் அவனுக.. சரியான லூசுப்பசங்களா இருக்கானுக..??"

மீரா அவனையும் அவனது கேள்வியையும் மதியாமல்.. அவனை கடந்து எதிர்ப்புறம் சென்றாள்.. அவளுடைய படுக்கை அறைக்குள் நுழைந்தாள்..!! ஜன்னலை நெருங்கியவள்.. சற்றே பதுங்கிக்கொண்டு.. திரைச்சீலையை விலக்கி வெளிப்புறம் பார்வையை வீசினாள்..!! அந்த வீட்டின் நுழைவாயிலை திறந்து கொண்டு வெளியேறுகிற.. சாலமன் மற்றும் அசோக்கின் முதுகுப்புறம் தெரிந்தது.. அவர்கள் பேசிக்கொண்டது கூட மீராவின் காதில் தெளிவாக விழுந்தது..!!

"ஏண்டா இப்படி பண்ற..??" சாலமன் சலிப்பாக கேட்டான்.

"ப்ச்.. உள்ள ஒரு பொண்ணு இருக்கா மச்சி.. நான் பாத்தேன்.. கண்ணாடில நல்லா தெரிஞ்சது.. கன்ஃபார்ம்ட்..!!"

"ஐயே.. அது ஏதாவது ஐட்டமா இருக்கும் மச்சி..!!"

"என்னது.. ஐட்டமா..??"

"ஆமாண்டா..!! பொண்டாட்டி ஊர்ல இல்லைன்றான்.. ஜாலியா ஜல்ஸா பண்ணலாம்னு ஏதாவது ஐட்டத்தை கூட்டிட்டு வந்திருப்பான்..!! சிவ பூஜைல கரடி மாதிரி உள்ள நொழைஞ்சதும் இல்லாம.. நோண்டி நோண்டி கேள்வி வேற கேட்டுட்டு இருக்குற நீ..!! அந்த ஆளை பாத்தியா.. எப்படி டென்ஷன் ஆயிட்டான்னு..?? நல்லவேளை.. அவன்பாட்டுக்கு கோவத்துல கையை நீட்டிருந்தான்னா என்ன பண்றது..??"

"ம்ம்..?? பதிலுக்கு நாமளும் நீட்ட வேண்டியதுதான்..!!"

"பாத்தியா.. இந்த லொள்ளுக்குத்தான் நான் உன்கூட வரமாட்டேன்னு சொன்னேன்..!! ஏண்டா இப்படிப்போட்டு டார்ச்சர் பண்ற..?? சொன்னா கேளு மச்சி.. இதுலாம் வேலைக்காவாது..!!"

"ப்ச்.. இப்போ என்ன ஆயிடுச்சுன்னு இப்படி பொலம்புற..??"

"பின்ன என்னடா.. அவளை கண்டுபிடிக்கிறதுக்காக இப்படி தெருத்தெருவா நாய் மாதிரி அலைய விடுறியே.. உனக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்காடா..?? இன்னும் எத்தனை வீடு ஏறி இறங்கப் போறோமோ.. என்னன்ன எழவெடுத்த பிரச்சனைலாம் நீ இழுத்துட்டு வரப்போறியோ எனக்கு தெரில.. ச்சை..!!"

"ஏய்.. கொஞ்சம் பொலம்பாம வர்றியா..!! என்ன கஷ்டமானாலும் சரி.. அவளை நான் கண்டுபிடிக்காம விடப்போறது இல்ல..!!"

"உன் ஆளு, நீ கஷ்டப்படுற.. என்னையும் எதுக்குடா கூட கூப்டுக்குட்டு இம்சை பண்ற..??"

"அது உன் தலையெழுத்து.. வா வா..!!"

சாலமனின் தோள் மீது கைபோட்டு அவனை இழுத்து செல்கிற அசோக்கையே.. மீரா வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்..!! முணுக்கென்று அவளுடைய கண்களில் கண்ணீர் பூப்பதை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.. வாயைப் பொத்திக்கொண்டு அழுதாள்..!! வேதனையில் வெடவெடக்கிற உதடுகளை.. பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டாள்.. 'ஸாரிடா அசோக்.. ஸாரி..' என்று மெலிதாக முணுமுணுத்தாள்..!!

"ஹேய்.. அப்படி எதை அவ்வளவு இன்ட்ரஸ்ட்டா பாத்துட்டு இருக்குற..??"

அருகில் குரல் கேட்டதும்.. கண்களில் வழிந்த நீரை அவசரமாய் துடைத்துவிட்டு.. மீரா படக்கென திரும்பினாள்..!! உதட்டில் ஒரு இளிப்புடன் மனோகர் நின்றுகொண்டிருந்தான்..!! அவனை பார்த்ததுமே மீராவுக்குள் மீண்டும் ஒருவித எரிச்சல்..!! குரலில் உடனடியாய் ஒரு கடுமையை வரவழைத்துக்கொண்டு சொன்னாள்..!!

"உங்ககிட்ட ஏற்கனவே ரெண்டு மூணு தடவை சொல்லிருக்கேன்..!!"

"என்னன்னு..??"

"என் பெட்ரூம்குள்ள வராதீங்கன்னு..!!"

"ஹேய்.. கூல்..!! ரிலாக்ஸ்..!! இது அங்க விழுந்து கெடந்தது.. அதான் உன்கிட்ட கொடுக்கலாம்னு வந்தேன்..!!"

மனோகர் அமர்த்தலாக சொன்னவாறே.. தன்னுடைய வலது கையை மீராவுக்கு முன்பாக நீட்டினான்.. விரித்து காட்டினான்..!! அவனது உள்ளங்கையில் அந்த இதய வடிவ பென்டன்ட் தகதகத்தது..!! அதைப்பார்த்ததும் மீராவுடைய கோவம் கொஞ்சம் வடிந்தது.. படக்கென அந்த பென்டட்டை எடுத்தாள்.. கையை சுற்றியிருந்த ப்ரேஸ்லட்டின் கொக்கியில் அதை மாட்டி.. டைட் செய்தாள்..!!

"தேங்க்ஸ்..!!" என்றாள்.

"ஹ்ம்ம்.. ப்ரேஸ்லட் நல்லாருக்கு..!! மாமா வாங்கி தந்ததா..??" மனோகரின் கேள்வி ஏனோ மீராவை சுருக்கென்று தைக்க.. வெடுக்கென்று அவனை ஏறிட்டு முறைத்தாள்..!!

"இது என் சம்பாத்தியம்..!!" என்று சூடாக சொன்னாள்.

"ஹேய்.. என்ன நீ..?? எதுக்கெடுத்தாலும் சும்மா சும்மா கோவப்படுற..??"

".........................."

"ஹ்ம்ம்... பெட்ரூம்க்குள்ள வந்ததுக்குலாம் அப்படி டென்ஷன் ஆகுற..?? அப்படி என்ன பெட்ரூம்ல சீக்ரட் வச்சிருக்குற..?? ம்ம்..??"

சொல்லிக்கொண்டே மனோகர் அந்த அறையை சுற்றும் முற்றும் பார்க்க.. அவனது கண்களில் அந்த ஃபோட்டோ ஃப்ரேம் தென்பட்டது..!! அசோக்கும், மீராவும் சேர்ந்து எடுத்துக்கொண்ட ஃபோட்டோ.. ஐந்து நாட்களுக்கு முன்பாக, அந்த ஃபுட்கோர்ட்டில், அசோக்கின் கன்னத்தோடு கன்னம் பதித்து, மீரா எடுத்துக்கொண்ட அந்த ஃபோட்டோ..!! சோகத்தை மறைத்தவாறு மீரா சிரித்துக்கொண்டிருந்தாள்.. அவளுடைய ஸ்பரிசத்தில் விழைந்த சந்தோஷத்தை மறைத்தவாறு அசோக் முறைத்துக் கொண்டிருந்தான்..!!

"ஹேய்.. இது.. இப்போ வந்துட்டுப் போனானே.. அந்தப்பையன்தான..??" மனோகர் ஆர்வமாக கேட்டவாறே அந்த ஃபோட்டோ ஃப்ரேமை கையில் எடுத்தான்..!!

"ஆமாம்..!!" அவசரமாக அவனை நெருங்கிய மீரா, வெடுக்கென அதை பறித்து அதனிடத்தில் வைத்தாள்.

"யார் அவன்..??"

"தேட்ஸ் நன் ஆஃப் யுவர் பிஸினஸ்..!!"

"ஹ்ம்ம்.. வீட்டை காலி பண்ணிட்டு எங்க போறதுன்னு எதுவும் ப்ளான் இல்லைன்னு சொன்ன..?? பாத்தா அப்படி தெரியலையே.. ஏதோ பக்கா ப்ளான் போட்ருக்க போல இருக்கே..?? அவனும் ஆளை பாத்தா சரியான ஏமாளி மாதிரி இருக்கான்..??" மனோகரின் குரலில் இருந்த கேலி, மீராவுக்கு எரிச்சல் மூட்டியது.

"இங்க பாருங்க.. வாய்க்கு வந்தபடி பேசாதீங்க..!! அவனைப்பத்தியும் உங்களுக்கு தெரியாது.. என்னை பத்தியும் உங்களுக்கு எதுவும் புரியாது..!! அவனை மாதிரி ஒரு நல்லவனை எங்கயும் பாக்க முடியாது.. என்னோட கடந்தகாலம் பத்தின எந்த அக்கறையும் இல்லாம.. எனக்கு ஒரு சந்தோஷமான வாழ்க்கையை கொடுக்க அவன் ரெடியா இருக்கான்..!! தெரியுமா.?? நான்தான் என்னோட நெலமையை நெனச்சுக்கிட்டு.. எல்லாத்தையும் கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு இருக்கேன்..!! புரியுதா..??"

படபடவென பேசி முடித்த மீரா.. உடனே திரும்பி விடுவிடுவென நடந்து, அந்த அறையை விட்டு வெளியேறினாள்..!! அவளுக்கு தொண்டை வறண்டு போன மாதிரி இருந்தது.. தாகமெடுத்தது.. கிச்சனுக்குள் நுழைந்தவள், குழாய் திருகி.. ஒரு தம்ளரில் நீர் பிடித்து.. கடக் கடக்கென மொத்த நீரையும் தொண்டைக்குள் சரித்தாள்..!! அவளை பின்தொடர்ந்து வந்திருந்த மனோகர்.. அவள் நீரருந்தி முடிக்கும் வரையில் கைகளை கட்டிக்கொண்டு காத்திருந்தான்..!!

பிறகு அவள் நீரருந்தி முடித்ததும்.. தொண்டையை லேசாக செருமிக்கொண்டு.. மீராவை நோக்கி நடந்தவாறே.. குதர்க்கமான குரலில் சொன்னான்..!!

"அப்போ.. வீட்டை காலி பண்ணினப்புறம் அவன் கூட போறமாதிரி ப்ளான் எதுவும் இல்ல..??"

"இல்ல..!!"

"அப்படினா.. நான் அப்போ சொல்ல வந்ததை.. இப்போ சொல்லலாம்னு நெனைக்கிறேன்..!!"

"எ..எப்போ..??"

"கொஞ்ச நேரம் முன்னாடி..!! உனக்கு ஒரு யோசனை சொல்லவான்னு கேட்டேனே..??"

"ம்ம்.. ஆமாம்..!! என்ன யோசனை..??"

கண்களில் ஒருவித கேள்வியுடன் மீரா மனோகரை பார்த்தாள். அவன் இவளுடைய முகத்தையே ஒருசில வினாடிகள் கூர்மையாக பார்த்துவிட்டு, பிறகு சொன்னான்.

"உனக்கு விருப்பம் இருந்தா.. நீ இந்த வீட்லயே தங்கிக்கலாம்..!!"

"வாட்..?? எ..என்ன சொல்றீங்க நீங்க..??"

காதில் விழுந்த வார்த்தைகளை நம்பமுடியாமல்.. மீரா அவனை திகைப்பாக பார்த்தாள்..!! அவனோ உதட்டில் ஒருவித விஷமப்புன்னகையுடன்.. இவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..!! பிறகு உதடுகளை மெல்ல பிரித்து.. மிக தாழ்வான குரலில் சொன்னான்..!!

"உன் அம்மா மாதிரி..!!"

அவன் அவ்வாறு சொன்னதுமே மீராவுக்கு சுருக்கென்று இருந்தது.. அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது அவளுக்கு புரிவது போல இருக்க.. அதற்குள்ளாகவே அவன்..

"நான் அப்பப்போ வந்து போயிட்டு இருக்கேன்.. உன் அப்பா மாதிரி..!!" என சொல்லிவிட்டு இளித்தான்.

அவ்வளவுதான்..!! மீராவுக்கு அந்த கணத்தில் மனதில் எழுந்த உணர்வுகளை, வார்த்தையில் சொல்வது கடினம்..!! உள்ளுக்குள் கோபம் பீறிட்டு கிளம்ப.. அதை கட்டுப்படுத்திக்கொள்வதற்கு அவள் மிகவும் கஷ்டப்பட்டுப் போனாள்..!! உள்ளத்தில் பொங்கிய ஆத்திரத்தை எல்லாம்.. உக்கிரமாக கண்களில் தேக்கி.. உஷ்ணமான ஒரு பார்வை பார்த்தாள்..!!

'இதோ.. இன்னொரு அரவம்..!! அம்மா அடிக்கடி சொல்வாளே.. அந்த நச்சுப் பிராணிகளில் அடுத்தொன்று..!!'

மனோகரோ அவளுடைய அனல் கக்கும் பார்வையை கவனத்தில் கொள்ளாமல்.. அவன் பாட்டுக்கு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்..!!

"கோவப்படாம கொஞ்சம் நிதானமா யோசிச்சு பாரு.. இது எவ்வளவு நல்ல டீல்னு உனக்கே புரியும்..!! எப்படியும்.. உன்னை பத்தி தெரிஞ்ச யாரும், உன்னை கல்யாணம் பண்ணிக்கப் போறது இல்ல.. அப்படியே பண்ணிக்கிட்டாலும்.. அது என்னைக்கா இருந்தாலும் உனக்கு பிரச்சனைதான்..!! உன் பேக்ரவுண்ட் அப்படி..!! அப்படி யாரையுமே கல்யாணம் பண்ணிக்காம.. கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் நிம்மதி இல்லாம.. சொந்த பந்தம் இல்லாம.. சொத்து பத்து இல்லாம.. வாழ்க்கை பூரா நீ கஷ்டப்படுறதுக்கு பதிலா.. இந்த யோசனைக்கு நீ ஓகே சொன்னேன்னு வச்சுக்கோ.. உனக்கு ஒரு வசதியான வாழ்க்கையை அமைச்சு தர நான் ரெடியா இருக்கேன்..!! என்ன சொல்ற..??"

"............................" - மீரா இன்னுமே அவனை எரித்துவிடுவது போல முறைத்துக்கொண்டுதான் இருந்தாள்.

"ஹ்ஹ.. புவனாவுக்கு தெரிஞ்சா என்ன நெனைப்பாளோன்லாம் நீ ஒன்னும் கவலைப்பட வேணாம்.. அவளை நான் சமாளிச்சுக்குறேன்.. அது என் பொறுப்பு.. ஓகேவா..??"

"............................"

"இங்க பாரு.. ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும்.. அப்புறம் எல்லாம் சரியாயிடும்.. எல்லாத்துக்கும் நம்ம மனசுதான் காரணம்..!! நீ மனசு வச்சா மகாராணி மாதிரி வாழலாம்.. உன்னால முடியும்.. சின்ன வயசுல இருந்தே உன் அம்மாவ பார்த்து வளர்ந்திருக்குற.. I think.. you can do this better than anybody else..!!" சொல்லிக்கொண்டே மனோகர் மீராவின் தோள் மீது கைவைத்தான்.

"கையை எடுறா..!!" மீரா இன்னுமே ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு சாந்தமாகத்தான் சொன்னாள்.

"ஹேய்.. நான் என்ன சொல்ல வரேன்னு.."

"அடச்சீய்.. கையை எடுறா.. பொறுக்கி..!!"

பெருங்குரலில் கத்திய மீரா மனோகரின் கையை வெடுக்கென தட்டிவிட்டாள். அவனுக்கு இப்போது பொசுக்கென்று கோவம் வந்தது.

"ஏய்.. என்ன.. ரொம்பதான் துள்ற..?? அப்படி என்ன நான் தப்பா கேட்டுட்டேன்..?? அதுவும் உன்கிட்ட அப்படி கேட்டதுல என்ன தப்பு..?? எப்படிப்பட்ட அம்மாவுக்கு மகளா பொறந்தோம்னு மறந்து போச்சா..??"

"என் அம்மாவை பத்தி பேசுறதுக்கு உனக்கு எந்த அருகதையும் இல்லடா.. எச்சக்கல நாயே..!! வீட்டை விட்டு வெளில போ..!!"

"ஏய்..!! என்ன பெரிய பத்தினி மாதிரி.."

மனோகர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே.. மீரா பொறுமை இழந்து போனாள்..!! கிச்சன் மேடை மீதிருந்த அந்த பளபளப்பான, கூர்மையான கத்தியை.. படக்கென கையில் எடுத்தாள்..!! அதை சரக்கென மனோகரின் முகத்துக்கு முன்பாக நீட்டி.. ஆவேசமாக கத்தினாள்..!!

"இன்னும் ஒரு வார்த்தை பேசின.. அக்கா புருஷன்னு கூட பாக்க மாட்டேன்.. அறுத்து எறிஞ்சிடுவேன்..!!!"

அவ்வளவுதான்..!! அவளுடைய முகத்திலும், கண்களிலும், குரலிலும் கொப்பளித்த கோபத்தில்.. மனோகர் மிரண்டு போனான்..!! பயந்துபோய்.. மெல்ல பின்வாங்கினான்..!!

கத்திமுனையிலேயே அவனை வாசல் வரை தள்ளி சென்ற மீரா.. பிறகு அவனை வெளியே விட்டு கதவை அறைந்து சாத்தினாள்..!! அறைந்து சாத்திவிட்டு கொஞ்ச நேரம் அப்படியே நின்றிருந்தாள்..!! உள்ளத்தில் எழுந்த வேதனையிலும், கோபத்திலும்.. அவளது உதடுகள் படபடத்தன.. அவளுடைய உடல் இன்னும் நடுங்கிக்கொண்டிருந்தது.. மார்புகள் ரெண்டும் சரக் சரக்கென மேலும் கீழும் ஏறி இறங்கிக்கொண்டிருந்தன..!! கையில் கத்தியுடன் வெறிபிடித்தவள் மாதிரி நின்றிருந்தாள்..!!

பிறகு அவளுக்கு என்னாயிற்றோ.. அப்படியே கால்கள் மடங்கி, தரையில் சரிந்தாள்.. தலையை குனிந்து கொண்டு குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்..!! அவளுடைய மனம்.. அத்தனை நேரம் அணிந்திருந்த வீராவேசமான முகத்தினை தூக்கி எறிந்துவிட்டு.. ஒரு கோழைத்தனமான முகத்தினை அணிந்து கொண்டது.. மீராவையும் அவ்வாறு அழுதிட வைத்தது..!!

அந்த மாதிரி அழுது கொண்டே.. நீண்ட நேரம் நிலைகுலைந்து போய் படுத்திருந்தாள்..!! பிறகு வீட்டுக்குள் டெலிபோன் ஒலிக்கிற சப்தம் கேட்டதும்.. மெல்ல எழுந்தாள்..!! பொறுமையாகவே நடந்து உள்ளறைக்குள் சென்றாள்..!! டெலிபோன் ரிசீவரை எடுத்து காதில் வைத்து.. வறண்டு போன குரலிலேயே சொன்னாள்..!!

"ஹலோ..!!"

"ஹாய் பேபிஈஈ..!! ஐ ஆம் பேக்..!!!"

அடுத்த முனையில் ஒலித்த அந்த குரலை கேட்டதும்.. மீரா அப்படியே அதிர்ந்து போனாள்..!! அந்த குரலை அவள் கொஞ்சம் கூட எதிர்பார்த்திரவில்லை..!! அவளுடைய இமைகள் படக்கென விரிந்துகொள்ள.. இருதயம் சிலவினாடிகள் துடிப்பதை மறந்து நின்று போனது..!! அந்த குரல்.. அந்த அரவத்தின் குரல்.. காதல் என்ற பெயரில் ஏமாற்றி, அவளது கற்பை சூறையாடி விஷத்தை கக்கி சென்ற அந்த கயவனின் குரல்..!! மீராவுடைய உடம்பு இப்போது ஆத்திரத்தில் முறுக்கேறிக் கொள்ள.. கையில் இருந்த கத்தியை இறுகப் பற்றினாள்..!!

 

1 comment:

  1. எத்தனை பேருடா வருவிங்க இப்படி அநியாயம்டா பாவம் அந்த பொண்ணு

    ReplyDelete

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...