Social Icons

அன்புள்ள ராட்சசி - 11


 




அத்தியாயம் 20

தும்பைப்பூவின் வண்ணத்துடன் மிக தூய்மையாகவே காட்சியளித்தது அந்த அறை..!! திரும்புகிற பக்கம் எங்கெங்கிலும்.. வெண்ணிறமே பொங்கி வழிந்தது அந்த அறையில்..!! வெள்ளி நிலவை வெட்டிக்கொணர்ந்து.. பாலீஷிட்டு பதித்திட்டமாதிரி.. தளத்தில் அணிவகுத்திருந்த டைல்ஸ்..!! கறந்த பாலை நிறமியாக்கி.. பெயிண்ட் என்ற பெயரில் தடவினார்களோ என தடுமாறும் அளவிற்கு.. சுவற்றிலும் ஸீலிங்கிலுமான வர்ணப்பூச்சு..!! சிறிய அறைதான்.. அதன் பெரும்பான்மையான பரப்பு வெறும்பான்மையாகவே காட்சியளித்தது..!! ஓரமாக கிடந்த படுக்கையும், சாய்வாக நின்றிருந்த இருக்கையும்.. வெண்ணிற விரிப்பையே வெளிப்புறம் போர்த்தியிருந்தன..!! வெண்மையான வெளிச்சத்தை மட்டுமே கசிவேனென்று.. ஒற்றைக்காலில் நின்று அடம்பிடித்தது மின்விளக்கொன்று..!! அந்த அறைக்குள் உலவித் திரிந்தால்.. உடைத்த தேங்காய்க்குள் ஊர்ந்து திரிகிற.. ஒரு கட்டெறும்பின் உணர்வு கிட்டுவது கட்டாயம்..!!

அறையின் நிறம் மட்டுமல்ல.. அதன் மையத்தில் அமர்ந்திருக்கிற.. மீராவுடைய அகத்தின் நிறமும் அஃதேதான்..!!

திரைச்சீலை விலகியிருந்த அறையின் ஜன்னல்.. கதிரவனின் வெளிச்சத்தையும், காலைநேர காற்றினையும்.. அறைக்குள் ஒருசேர அனுப்பிக்கொண்டிருந்தது..!! மீரா தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தாள்..!! வலது கால் இடது தொடையின் மீது.. இடது கால் வலது தொடையின் மீது.. தளிர்ப்பாதங்கள் இரண்டும் தடம்புரண்டு மேலே பார்த்தன..!! முழங்கால் தரையை தீண்டியிருக்க.. முதுகுத்தண்டு விறைப்பாய் நின்றிருக்க.. மூக்கு சீராக மூச்சினை வெளியிட்டது..!! இமைகள் விழிகள் மீது முழுமையாய் கவிழ்ந்திருந்தன.. இரண்டு கைகளும் மார்பின் குறுக்கே மையமாய் குவிந்திருந்தன..!! குழைவான இடுப்பின் சதைப்பிதுக்கத்தில்.. துளிர்த்திருந்த சில வியர்வை முத்துக்கள்.. ஜன்னல் வெளிச்சத்துக்கு மின்னிக் கொண்டிருந்தன..!! புஜங்கள் அணையிட்ட நெஞ்சத்தடாகத்தில்.. பூத்திருந்த இரு தாமரை மொக்குகள்.. விடுகிற மூச்சுக்கு விரிந்து கொண்டிருந்தன..!!




யோகா..!! ரத்த ஓட்டம் சீராகும்.. நல்ல சிந்தனை பெருகும்.. ப்ரெஷர் குறையும்.. டென்ஷன் கட்டுப்படும்.. இவையெல்லாம் யோகாவின் நன்மைகளாக கூறப்படுகின்றன.. அந்த நன்மைகள் எல்லா நேரமும் உண்மைகளாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை..!! யோகாவில் உளமாற ஈடுபடுபவர்களுக்குத்தான் அவை உண்மைகளே ஒழிய.. மீராவுடைய அழகு யோகாவை அருகிலிருந்து பார்க்கிற ஆடவருக்கு.. மேற்சொன்ன நான்கிற்கும் எதிர்ப்பதமான விளைவுகளே ஏற்பட நேரிடும்..!!

கடந்த ஒரு வருடமாகவே.. கலங்கிய குளமாய் அடிக்கடி மாறிப்போகிற மனதினை.. தெளிய வைத்து தேற்றிட.. மீரா அடிக்கடி தேர்ந்தெடுப்பது இந்த யோகாதான்..!! அறையின் நிறத்திலான அவளுடைய மனது.. இன்று ஏனோ அபரிமிதமான குழப்பத்துக்குள் அகப்பட்டு அல்லாடிக் கொண்டிருந்தது..!! கொதிநிலை கூடிப்போன உலையிட்ட பானை.. திண்ணமான மூடியையும் தூக்கியெழுப்பி.. வெப்பமான குமிழ்களை உமிழுமே..?? அதுபோல.. குழம்பித் தவித்திட்ட மீராவின் உள்ளம்.. வன்மையான தியானத்துக்கும் கட்டுப்படாமல்.. வேதனையான நினைவுகளை வெளிக்கசிந்தது..!! அந்த நினைவுகள் எல்லாம்.. நிழற்படமாய் அவள் நெஞ்சிலே ஓடின..!!

"அப்பா ஏன்மா நம்ம கூடவே இருக்க மாட்டேன்றாரு..??" அஞ்சு வயது மீரா, ஏக்கம் மிகுந்த பிஞ்சு குரலில் அம்மாவிடம் கேட்டாள்.

"அ..அப்பாவால.. எப்பவும் நம்ம கூட இருக்க முடியாதுடா சின்னு.. அ..அவருக்கு.. வெளியூர்ல வேலை.. அதான்..!!"

மடியில் படுத்திருந்த மகளின்.. தலையை மெல்ல வருடியவாறே.. தடுமாற்றமாக சொன்னாள் நீலப்ரபா.. மீராவின் அம்மா..!! வைத்திருந்த பெயர் வேறானாலும்.. நீலப்ரபா தன் மகளை சின்னு என்று செல்லமாக அழைப்பதுதான் வழக்கம்..!!

"அப்பா அங்க எங்க படுத்துகுவாரு..??"

"அ..அங்க.. இன்னொரு வீடு இருக்குமா.. அங்க படுத்துப்பாரு..!!"

"ம்ம்.. நாமளும் அந்த வீட்டுக்கே போயிடுவமா..??"

"இ..இல்லடா சின்னு.. நா..நாம.. நாம அந்த வீட்டுக்கு போக முடியாது..!!" - நீலப்ரபாவிடம் ஒரு பதற்றம்

"ஏன்மா..??"

"அ..அது அப்படித்தான்..!! சொன்னா உனக்கு புரியாது..!!"

அதற்குமேலும் அம்மாவிடம் குறுக்கு கேள்வி கேட்கிற அளவுக்கு.. ஐந்து வயது மீராவுக்கு அப்போது அறிவில்லை..!! தெளிவாக புரியாவிட்டாலும்.. அம்மா சொன்ன வார்த்தைகளை, அப்படியேதான் நம்பினாள்..!! அவளுக்கு அப்போது தெரியாது.. அப்பாவுக்கு தன் அம்மா வைப்பாட்டியாக வாழ்கிறாள் என்பதும்.. அவரால் இந்த வீட்டுக்கு வாரத்துக்கு ஒருமுறைதான் வந்து செல்லமுடியும் என்பதும்..!!

மீராவுக்கு தாய்மொழி தெலுங்குதான்.. அவளுடைய தாய் நீலப்ரபாவின் தாய்மொழி..!! நீலப்ரபாவுக்கு சொந்த ஊர்.. ஆந்திர மாநில சித்தூருக்கு அருகே இருக்கிற பங்காரெட்டிபள்ளி..!! பருவ வயதுடன் அவள் பூரித்து திளைத்திருந்த சமயத்தில்.. பங்காரெட்டிபள்ளியில் ஒரு தொழிற்சாலையின் கட்டுமானப்பணி ஆரம்பமானது..!! பழங்களை பிழிந்து சாறெடுத்து.. வேதியியல் மாற்றத்துடன் பவுடராக்கி.. வெள்ளீய டப்பாக்களில் அடைத்து.. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிற தொழிற்சாலை..!!

பழங்களை பவுடராக்கிடும் செயல்முறைக்கு.. பாய்லர்கள் மிக அவசியம்.. ராட்சத வடிவில் ஒன்றிரண்டு பாய்லர்கள் நிச்சயம் தேவை..!! அந்த பாய்லர்களை நிறுவும் கான்ட்ராக்ட் எடுத்திருந்தவன்.. சென்னையை சேர்ந்த இளம் பிசினஸ்மேன் மதுசூதனன்..!! பாய்லர்கள் நிறுவும் பொருட்டு.. அவன் பங்காரெட்டிபள்ளியில் சிறிது காலம் தங்கி இருக்க நேர்ந்தது..!! அப்படி அவன் தங்கியிருந்த ஒரு ஓட்டு வீடு.. நீலப்ரபாவுடைய ஏழைவீட்டின் எதிர்த்தவீடாக இருக்க நேர்ந்தது..!!

தங்கு தடையில்லாமல் மதுசூதனன் பேசிய ஆங்கிலம்தான்.. நீலப்ரபாவை முதலில் வசீகரித்தது.. அந்நிய ஆடவன் மீது அவள் மனதில் ஒரு அர்த்தமற்ற ஈர்ப்பு..!! பிறகு ஒருநாள்.. அவன் தடுமாறி தடுமாறி தெலுங்கில் தண்ணீர் கேட்டபோது.. 'களுக்' என்று அவளிடம் ஒரு சிரிப்பு..!!

"நீ..நீலு.. கா..காவாலி..!!"

நீலப்ரபாவை அவளுடைய வீட்டில் நீலு என்று அழைப்பதுதான் வழக்கம்..!! நீர் வேண்டும் என்று கேட்டது.. நீ வேண்டும் என்று கேட்டது மாதிரி அவளுக்கொரு நினைப்பு.. தான் ரசிப்பவன் தன்னையே கேட்கிறானே என்றொரு சிலிர்ப்பு.. அதனாலேயே 'களுக்' என்ற அந்த அடக்கமுடியா சிரிப்பு..!!
"எ..எனக்கு தமிழ் நல்லா தெரியும்.. நீங்க தமிழ்லயே பேசலாம்..!!"

நீர் கொணர்ந்து கொடுத்த நீலப்ரபாவின் கண்களில் ஒரு மினுமினுப்பு..!! அவளுடைய குழைவான பேச்சைக் கேட்ட மதுசூதனனுக்கோ.. மனதுக்குள் ஒரு குறுகுறுப்பு..!!

'இவளுக்கு நம்மள புடிச்சிருக்கோ..??'

அப்புறம் மதுசூதனன் அடிக்கடி அவளிடம் பேச ஆரம்பித்தான்..!! தடையற்ற ஆங்கிலத்துடன்.. தடுமாற்றமான அவனுடைய தெலுங்கையும்.. இப்போது நீலப்ரபா ரசிக்க ஆரம்பித்திருந்தாள்..!!

அப்புறம் ஒருநாள்.. வார்த்தைகள் எதுவும் இல்லாமல்.. அவன் கண்களாலேயே வசீகர மொழி பேசியபோது.. நீலப்ரபாவிடம் ஒரு சிலுசிலுப்பு.. அவன் இவளுடைய கைவிரல்களை பற்றுகையில்.. நெஞ்சுக்குள் ஒரு படபடப்பு..!! கையை உதறிக்கொண்டு வெட்கப்பட்டு ஓடினாளே தவிர.. கத்தி ஊரைக்கூட்டவேண்டும் என்று அவளுக்கு தோன்றவில்லை..!! அன்றே அவள் கத்தி ஊரைக் கூட்டியிருந்தால்.. இன்று உங்களிடம் சொல்வதற்கு என்னிடம் கதை இருந்திருக்கப் போவதில்லை..!!

சுருக்கமான காலத்துக்குள்ளேயே.. இருவரும் மிக நெருக்கமாகிப் போயினர்..!! கண்களும் கண்களும் கதை பேசிக்கொண்டன.. விரல்களும் விரல்களும் விளையாடி மகிழ்ந்தன.. உதடும் உதடும் தேன் உறிஞ்சி குடித்தன.. உடலும் உடலும் அனல் உரசி தகித்தன..!!

பிறிதொரு நாளில்.. இருவரும் சித்தூர் சென்று சிரஞ்சீவி நடித்த 'மஞ்சி தொங்கா' படத்தினை, மதியக்காட்சி பார்த்து திரும்பியதற்கு மறுதினத்தில்.. மழைபெய்து ஓய்ந்திருந்த அந்த குளிர்நாளின் பின்னிரவில்.. திருவிழாவுக்கு திரளாக திரண்டிருந்த ஊர்மக்கள், கதாகாலேட்சேபம் கேட்டு ரசித்துக் கொண்டிருந்த அச்சமயத்தில்.. திருட்டுத்தனமாய் சந்தித்துக்கொண்ட மதுசூதனனும் நீலப்ரபாவும், களவுப்புணர்ச்சி காண நேர்ந்தது..!!

"வே..வேணாங்க..!!" கட்டிலில் சரிந்திருந்த நீலப்ரபா ஆரம்பத்தில் மறுத்தாள்.

"என்னை உனக்கு புடிக்கலை.. இல்ல..??" மதுசூதனனுக்கு அவளை மடக்க தெரிந்திருந்தது.

"ஐயோ.. அப்படி இல்ல..!!"

"அப்புறம்..??"

"க..கல்யாணத்துக்கு முன்னாடி..??"

"அப்போ.. என் மேல நம்பிக்கையில்லை.. அப்டித்தான..??"

"ச்சே ச்சே.. நான் அப்படி சொல்லல..!!"

"அப்புறம் என்ன..??"

"எ..எனக்கு.."

"உனக்கு..??"

"ப..பயமா இருக்கு..!!" நீலப்ரபா வெடவெடப்புடன் சொல்ல, மதுசூதனனிடம் ஒரு வெற்றிப்புன்னகை.

"அவ்வளவுதான..?? உன் பயத்தை எப்படி போக வைக்கனும்னு எனக்கு தெரியும்..!! ம்ம்ம்ம்.. கண்ணை மூடிக்கோ..!!"

"எதுக்கு..??"

"கண்ணை மூடு.. சொல்றேன்..!!"

நீலப்ரபா தயங்கி தயங்கி கண்களை மூடிக்கொண்டாள்..!! இடுப்பை மூடியிருந்த அவளுடைய புடவைத் தலைப்பை.. மதுசூதனன் கொஞ்சமாய் விலக்கினான்..!! அவளுடைய அடிவயிறுக்கருகே தனது முகத்தை எடுத்து சென்றவன்.. தலையை இப்படியும் அப்படியுமாய் மெல்ல அசைத்து.. அவள்மேல் பட்டும் படாமலும் உரசினான்..!! நீலப்ரபா இப்போது 'ஹ்ஹாஹ்க்..' என்ற சப்தத்துடன், மூச்சை இழுத்து பிடிக்க.. அவளது வயிறு இறுகிச்சுருங்கி உட்சென்றது.. மார்புகள் விம்மி விரிந்து வெளித்தள்ளின..!!

மதுசூதனன் உதடுகளை குவித்து அவளது இடுப்பில் காற்று ஊதினான்..!! அந்த அனல்க்காற்று அவளுடைய தொப்புளுக்குள் புயல்க்காற்றாய் சுழன்றடித்தது..!! அவன் இப்போது தனது மீசை மயிர்களால்.. அவளது அடிவயிற்று தசைகளில் கோடுகள் கிழித்தான்..!! அந்த மீசையின் குறுகுறுப்பு.. மூச்சுக்காற்றின் வெப்பம்.. மூக்கு நுனியின் ஸ்பரிசம்.. அதில் எழுந்த புதுவித சுகம்..!! உணர்சிக் கொந்தளிப்புக்கு உள்ளான நீலப்ரபா.. வெட்கத்தை உதறினாள்..!! அடிவயிற்றில் முகம் புதைத்திருந்த அவனுடைய சட்டையை பற்றி இழுத்து.. தன் அங்கத்தின் மீது முழுமையாய் போர்த்திக் கொண்டாள்..!!

"ராமா கனவேமிரா..!!!!! ராமா கனவேமிரா... ஸ்ரீ ரகுராமா கனவேமிரா ஆஆஆஆ..!!"

நீலப்ரபாவை பெற்றவர்கள் ஊர்ப்பொதுமேடை முன் அமர்ந்து.. ராமன் வாலியை வதம் புரிந்த கதை கேட்டுக்கொண்டிருந்த அதே நேரம்.. அவர்கள் வீட்டில்.. மதுசூதனன் அவர்களது மகளை பதம் பார்த்த கதை ஓடிக்கொண்டிருந்தது..!! மதுசூதனன் மஞ்சி தொங்கனாய் மாறி.. நீலப்ரபாவின் கற்பை கொஞ்சம் கொஞ்சமாய் களவாடிக் கொண்டிருந்தான்.. அவளது இளமையை திகட்ட திகட்ட அள்ளி பருகிக் கொண்டிருந்தான்..!! நீண்ட நேர கட்டில் சத்தம்.. நீண்ட நேர காமன் யுத்தம்.. நீண்டதொரு துடிப்பின் பிறகு.. நீண்டதொரு சுடுமூச்சுடனே முடிவுக்கு வந்தது..!!

ஒருநாள் பாலருந்தி பழகிப்போன திருட்டுப்பூனை.. அடுத்த நாளும் அடுப்பங்கரையை நோட்டமிடும்..!! ஆமாம்.. மதுசூதனனும், நீலப்ரபாவும்.. அதன்பிறகு வந்த தினங்களில் கூட.. மேலும் இரண்டு மூன்று முறைகள்..!!

பாய்லர்கள் நிறுவும் பணி முடிவுக்கு வந்தது..!! மதுசூதனன் ஊருக்கு கிளம்புவதற்கு முதல் நாள்..!! கச்சையற்ற மார்புடன் தன் மீது கவிழ்ந்து கிடக்கிற நீலப்ரபாவின் வெற்று முதுகை தடவிக்கொண்டே அவன் சொன்னான்..!!

"ஊருக்கு போனதும் எனக்கு மொத வேலையே.. அப்பாட்ட நம்மள பத்தி பேசுறதுதான்..!!"

பிரிகிற வருத்தம் ஒருபுறம் இருந்தாலும்.. விரைவிலேயே அமையப்போகிற வாழ்க்கையை எண்ணி.. நீலப்ரபாவின் மனம் கனவில் மிதந்து கொண்டிருந்தது..!! அப்போதுதான் ஆடிக் களைத்திருந்தாலும்.. அடுத்த நாள் ஊருக்கு கிளம்பும் முன்னர்.. இன்னொருமுறை இவளை ருசிபார்த்து விடவேண்டுமென.. மதுசூதனனின் மனம் கணக்கு போட்டுக் கொண்டிருந்தது..!!

இன்னொருமுறை அவளை ருசிபார்க்க வாய்ப்பு கிடைக்காமலே.. மதுசூதனன் சென்னை கிளம்பி சென்றான்..!! அவன் சென்னை சென்று வெகுநாளாகியும்.. அவனிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை..!!

'என்னாயிற்று..?? என்னைப்பற்றி வீட்டில் பேசியிருப்பாரா..?? எதிர்ப்பு தெரிவிப்பவர்களை எப்படியாவது சமாதானம் செய்திருப்பாரா..?? ஏன் ஒரு கடிதம் கூட அனுப்பவில்லை..? ஒருவேளை ஓய்வில்லா பணியாக இருக்குமோ..?? காதலியை விட கடமைதான் அவருக்கு முக்கியமாக போய்விட்டதா..?? வேலைதான் காரணமா.. இல்லை.. வேறெதும் பிரச்சினையில் சிக்கிக் கொண்டாரா..??'

குழப்பமும், கேள்வியும், ஏக்கமும், தவிப்பும்.. நீலப்ரபாவிடம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போனது..!! கூடவே.. அவள் வயிற்றில் உருவாகியிருந்த கருவும்..!!

விஷயம் வீட்டுக்கு தெரிந்து போனபோது.. அவர்கள் அப்படியே கொதித்துப் போனார்கள்..!! நீலப்ரபாவை அடித்தார்கள்.. உதைத்தார்கள்.. அசிங்கமான வார்த்தைகளை தெலுங்கிலே உதிர்த்தார்கள்..!! பிறகு.. நீலப்ரபா அழுதுகொண்டிருந்த மூலைக்கு எதிர்த்த மூலையில் அமர்ந்து.. அவர்களும் அவளுடன் சேர்ந்து அழ ஆரம்பித்தார்கள்..!!

அன்று இரவு..

"நித்திர போத்தாயி...???" (தூங்குறாளா..??)

"அ...அவுனு..!!" (ஆ..ஆமாம்..!!)

"ஹ்ம்ம்.. நிதிர போனி...!!" (ஹ்ம்ம்.. தூங்கட்டும்..!!)

"இலாக சேஸிந்தே இ பில்ல ..??" (இப்படி பண்ணிட்டாளே பாவி..??)

"ஷ்ஷ்.. ஏடகா..!! ரேப்பு மன பில்ல சுத்தங்க அய் போத்துந்தி... ஹா பாப்பம் ரேப்பு தானி கடுப்புல உண்டது.. ஹந்தா பணியும் சேஸேஸி ஒஸ்த்தானு..!! ஹ்ஹ்ம்ம்ம்.. அந்தா மன்ச்சிதூரிகா நடுஸ்துன்னு.. தானிகி ஏ சந்தேகமும் ராகுண்டலாக நூ சூஸ்துக்கோ...!!"

("ஷ்ஷ்.. அழாத..!! நம்ம பொண்ணு நாளைக்கு சுத்தமாயிடுவா.. அந்த பாவம் அவ வயித்துல நாளைக்கு இருக்காது.. எல்லா ஏற்பாடும் பண்ணிட்டுதான் வர்றேன்..!! ஹ்ஹ்ம்ம்ம்.. எல்லாம் நல்லபடியா நடக்கும்.. அவளுக்கு எந்த சந்தேகமும் வாராத மாதிரி நீ பாத்துக்கோ..!!)

மெலிதாக உறக்கம் கலைந்து எழுந்த நீலப்ராவுக்கு.. தாய், தந்தையர் பேசிய பேச்சை கேட்டு திக்கென்று இருந்தது..!! பசுக்களை நம்பி பிழைப்பு நடத்துபவர்கள் அவளுடைய பெற்றோர்.. வறுமைதான் அவர்களது வாழ்க்கை முழுமையும்..!! மானத்துக்கு பயந்த அவர்கள்.. மதுசூதனனிடம் சென்று முறையிட நினைக்கவில்லை.. !! ஊருக்கு அஞ்சியவர்கள்.. உண்டான கருவை கலைத்துவிடவே முடிவெடுத்தனர்..!!

அவர்களது திட்டம் அறிந்ததுமே.. சித்தூரில் இருந்து சிட்டாக பறந்துவிட்டாள் நீலப்ரபா..!! மதுசூதனனுடைய கம்பனியின் பெயரை மட்டும் மனதில் குறித்துக்கொண்டவள்.. மருட்சியான ஒரு பார்வையுடன் சென்னை சென்ட்ரலில் வந்து இறங்கினாள்..!! அங்கும் இங்கும் அலைந்து திரிந்து.. மிகவும் கஷ்டப்பட்டு அந்த கம்பனியை கண்டுபிடித்து.. மதுசூதனனின் முன்னால் சென்று நின்றாள்..!!

மதுசூதனன் நீலப்ரபாவை சுத்தமாக எதிர்பார்த்திரவில்லை.. அவளை மார்பில் சாய்த்துக்கொண்டு பார்த்த மஞ்சி தொங்கா படத்தை போலவே.. மஞ்சத்தை பகிர்ந்துகொண்ட அவளையும் மறந்து போயிருந்தான்..!! திடீரென அவள் இப்படி தனது அலுவலக அறையை திறந்து வந்து நிற்பாள் என்று.. அவன் கொஞ்சமும் நினைத்திரவில்லை..!! ஆரம்பத்தில் சற்று தடுமாறவே செய்தான்..!!

பரிதவிப்புடன் பலமைல்கள் பயணப்பட்டு வந்த நீலப்ரபாவுக்கு.. பலத்த அதிர்ச்சியே சென்னையில் காத்திருந்தது..!! மதுசூதனனுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை வேறு இருக்கிற உண்மையை.. அவனே அவளிடம் தெரிவித்தான்..!! நீலப்ரபாவுடன் பழகியது ஒரு பொழுதுபோக்கு என்பது மாதிரி சொன்னான்..!!

"ஏதோ கொஞ்ச நாள் பழகுனோம்.. ஜாலியா இருந்தோம்.. சந்தோஷமா இருந்துச்சு..!! அதை அப்படியே மறக்காம.. பையை தூக்கிட்டு மெட்ராஸ்க்கு வந்துட்டியே..??"

நீலப்ரபா பக்கென அதிர்ந்து போனாள்.. ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்ற உண்மை புரிய, அப்படியே வெகுண்டெழுந்தாள்.. வெறுப்பும், சீற்றமுமாய் அவனை கேள்வி கேட்டாள்.. விவாதித்தாள்.. சண்டையிட்டாள்..!! இறுதியாக அவனுடைய சட்டையை பற்றி இவள் உலுக்க.. இப்போது அவன் பொறுமை இழந்து போனான்.. புறங்கையை வீசி, 'ரப்ப்ப்' என இவள் கன்னத்தில் ஒரு அறை விட்டான்..!! பயணக்களைப்பிலும், பசிமயக்கத்திலும் இருந்த நீலப்ரபா.. 'பொத்'தென தரையில் சுருண்டு விழுந்தாள்..!!

சிகரெட் எடுத்து பற்ற வைத்துக்கொண்ட மதுசூதனன்.. புகை ஊதியவாறே தரையில் வீழ்ந்திருந்த அவளுடைய மேனியை வெறித்துக் கொண்டிருந்தான்..!! செப்புச்சிலை மாதிரியான அவளுடைய கட்டழகில்.. அவனுக்கு எப்போதுமே ஒரு தனி கிறக்கம் உண்டு..!! ஆரம்பத்தில் அவளை அடித்து துரத்தி விடுகிற எண்ணத்தில் இருந்தவனை.. அவளது உடல் வனப்பும், நிர்க்கதியற்ற அவளுடைய நிலையும், கொஞ்சம் குற்ற உணர்ச்சியும் சேர்ந்து.. வேறுவிதமாக யோசிக்க வைத்தன..!!

சிறிது நேரம் கழித்து.. உடலில் கொஞ்சம் வலு சேகரித்துக்கொண்டு நீலப்ரபா மெல்ல எழ.. அவ்வளவு நேரம் மனதில் யோசித்துக் கொண்டிருந்த அந்த திட்டத்தை.. மதுசூதனன் அவளிடம் சொன்னான்..!!

"இங்க பாரு நீலு.. உன்னால என்னை ஒன்னும் புடுங்க முடியாது.. மொதல்ல அதை நல்லா புரிஞ்சுக்கோ..!! உன்னை யார்னே எனக்கு தெரியாதுன்னு சொன்னா.. உன்னால என்னை என்ன பண்ண முடியும்..?? யோசிச்சு பாரு..!!"

".............................."

"ஹ்ம்ம்... உன் நல்லதுக்காகத்தான் சொல்றேன்.. ஒத்துக்குறதும் ஒத்துக்காததும் உன் இஷ்டம்..!!"

".............................."

"சிந்தாதிரிப்பேட்டைல எனக்கு ஒரு வீடு இருக்கு.. இப்போதைக்கு ஆள் யாரும் தங்காம காலியாத்தான் இருக்கு..!! உனக்கு விருப்பம் இருந்தா நீ அங்க தங்கிக்கோ.. உனக்கு எந்த பிரச்சினையும் இல்லாம நான் பாத்துக்குறேன்..!! புருஷன் பொண்டாட்டி மாதிரிதான்.. ஆனா தாலி மட்டும் இல்ல.. அவ்வளவுதான்..!!"

'கட்டிக்க முடியாது.. வேணும்னா வச்சுக்குறேன்..' என்பதை சற்று நாகரிமாக சொன்னான் மதுசூதனன்..!! அவன் சொன்ன வார்த்தைகள் நீலப்ரபாவின் நெஞ்சை சுருக்கென தைக்க.. அவனது முகத்தை ஏறிட்டு எரித்து விடுவது போல முறைத்தாள்..!! அவளுக்கு அப்போது வந்த ஆத்திரத்திற்கு.. அவனையும் வெட்டி சாய்த்துவிட்டு, தானும் உயிரை மாய்த்துக் கொள்ளலாமா என்று கூட ஒரு எண்ணம் ஓடியது..!! ஆனால்.. வயிற்றில் இருக்கிற கருவின் ஞாபகம் வந்ததும்.. அவளது கொதிப்பு கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கியது..!!

மேஜை மீது இருந்த அந்த வெண்கல சிலையையே வெறித்துப் பார்த்துக் கொண்டு வெகுநேரம் அமர்ந்திருந்தாள்..!! பச்சிளம் குழந்தையை மடியில் கிடத்தி.. பால் புகட்டுகிற ஒரு மலைஜாதித்தாயின் சிலை..!!

அந்த சிலையில் இருந்து பார்வையை மெல்ல விலக்கிக்கொண்டவள்.. கொஞ்சமாய் மேடிட்டிருந்த தனது வயிறை ஒருமுறை தடவிப்பார்த்தாள்..!! பிறகு.. மதுசூதனனை ஏறிட்டு.. கண்ணீரில் மிதக்கிற கண்களுடனும்.. முற்றிலும் ஜீவன் வற்றிப்போன குரலுடனும்.. மூக்கு விசும்ப சொன்னாள்..!!

"ம்ம்..!!"

மதுசூதனனின் முகத்தில் ஒரு திருப்திப் புன்னகை.. டெலிபோன் எடுத்து டயல் செய்து.. தனது கார் ட்ரைவரை வரவழைத்தான்..!!

கட்டிய மனைவி மீது பற்றில்லாத மதுசூதனனுக்கோ.. படுக்கைக்கு ஓர் ஆள் தேவைப்பட்டது..!! கருவிலிருக்கும் சிசு மீது பரிவு கொண்ட நீலப்ரபாவுக்கோ.. பாதுகாப்புக்கு ஓர் ஆள் தேவைப்பட்டது..!! இருவரும் அந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்தனர்.. இருவரும் அந்த ஒப்பத்தந்துக்கு இறுதி வரை உண்மையாகவே இருந்தனர்.. இருவரும் ஒருவருடைய தேவையை அடுத்தவர், எந்தக்குறையும் இல்லாமல் இறுதிவரை நிறைவேற்றவே செய்தனர்..!!

கருப்பையில் இருந்து வெளியே வந்த மீராவுக்குத்தான்.. அவளுடைய பிறப்பில் இருந்தே.. அந்த ஒப்பந்தம் ஒவ்வொரு நாளும் துயரத்தை தந்தது.. ஒருவித துர்ப்பாக்கியமான நிலைக்கு அவளுடைய வாழ்வை தள்ளியது..!! மீரா எவ்வளவு பெரிய துரதிர்ஷ்டசாலி என்பதற்கு.. அவளது பிறப்பு சான்றிதழே.. மிக சிறப்பான சான்று..!!

"அப்பா பேர் என்னங்க..??" மீராவை முதன்முதலாய் கையில் ஏந்திய அந்த நர்ஸ், பிறகு பதிவேட்டை ஏந்திக்கொண்டு கேட்டதற்கு,

"மாணிக்கவாசகம்..!!" சிறு உறுத்தல் கூட இல்லாமல், மிக இயல்பாக சொன்னான் மதுசூதனன்.

அப்படித்தான்.. அந்த மாதிரிதான்.. மீரா பிறக்கையிலேயே.. துயரமும் அவளுடன் சேர்ந்து பிறந்தது.. பிறகு வாழ்நாள் முழுக்க அவளை துரத்தி துரத்தி அடித்தது..!! சமுதாயத்தில் ஒரு அங்கீகாரம் இல்லாமல்.. அவள் அனுபவித்த வேதனையின் வீரியம் அவளுக்கு மட்டுமே புரியும்..!!

"பேசாம.. என்னை கருவுலேயே அழிச்சிருக்கலாமேமா.. உனக்கும் பிரச்சினை இருந்திருக்காது.. எனக்கும் பிரச்சினை இருந்திருக்காது..!!"

அதே அம்மாவின் மடியில்.. பருவ வயதடைந்திருந்த அதே மீரா படுத்துக்கொண்டு.. விழிகளில் நீருடனும், குரலில் வேதனையுடனும்.. இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு சொன்னது.. இப்போது யோகாவிலிருக்கிறவளின் மனதை குறுக்கிட்டது..!!

சிறுவயதில் மகள் கேட்கிற கேள்விக்கெல்லாம்.. ஏதாவது சமாதானம் சொல்லி அவள் வாயை அடைத்து விடுகிற நீலப்ரபா.. இப்போது வயதும், அறிவும் வளர்ந்த மகளின் வேதனையான வார்த்தைகளுக்கு.. தான் வாயடைத்துப் போய் அமர்ந்திருந்தாள்..!! குற்ற உணர்வு அவளை பிய்த்து தின்ன.. முணுக்கென்று கண்ணீர் மட்டும் சிந்தினாள்..!!

"அ..அம்மாவை மன்னிச்சிடும்மா..!!"

நீலப்ரபாவின் குரல் திடீரென காதுக்குள் ஒலிக்க.. தியானத்தில் இருந்த மீராவிடம் ஒரு சிறு அசைவு.. அவள் நெற்றியில் மெலிதான சுருக்கம்..!! அம்மாவுடைய ஓலம் அவளுடைய மனதை பிசைந்து ஏதோ செய்தது..!!

"அம்மா..!!" என்று மெலிதாக முனகினாள்.

பிறந்தது முதலே மீராவுக்கு அம்மாதான் எல்லாமே..!! வாரம் ஒருமுறை வீட்டுக்கு வருகிற.. அப்படி வருகிறபோதும் இரண்டு வார்த்தைகளுக்கு மேல் எதுவும் பேசாத அப்பாவின் மீது.. அவளுக்கு அவ்வளவாக ஒட்டுதல் இல்லை..!! அதுவும்.. அவளுக்கு சற்று விவரம் தெரிந்து, அவள் பள்ளி பயிலுகிற காலத்தில் ஒருநாள்..

"அவகிட்ட தெளிவா சொல்லி வையி.. அங்க போயி நான்தான் அவ அப்பான்னு உளறி கிளறி வைக்கப்போறா..!!"

அறைக்குள் அம்மாவிடம் அப்பா சொன்னது.. இவள் காதில் விழ நேர்ந்தது..!! அந்த வார்த்தைகளை கேட்டு அவள் எந்த மாதிரி துடித்துப் போயிருப்பாள் என்பதை.. என்னாலோ, உங்களாலோ எளிதில் புரிந்து கொள்ள முடியாது..!! அதன்பிறகு.. அப்பா மீதிருந்த கொஞ்சநஞ்ச அன்பும் அவளிடம் சுத்தமாக காணாமல் போனது..!!

அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இடையிலான அந்த ஒப்பந்தத்தால்.. மீரா இழந்தது சமூக அங்கீகாரத்தை மட்டும் அல்ல.. அதனுடன் தொடர்புடைய நிறைய விஷயங்களை.. சின்ன சின்ன சந்தோஷங்களை.. குறிப்பாக.. விலைமதிப்பற்ற குழந்தைப்பருவ குதுகலங்களை..!!

கடந்த ஒருவருடமாகத்தான் மீராவிடம் மனதளவில் பெரிதளவிலான மாற்றம்..!! ஏற்கனவே வலுவற்றிருந்த அவளது வாழ்க்கையை.. சம்மட்டியால் அடித்து நொறுக்கிய அந்த சம்பவத்தின் பிறகேதான்.. மீராவிடம் நிறைய மாற்றங்கள்..!! தைரியமும், துணிச்சலும், நெஞ்சுரமும்.. அதேநேரம் மனதில் தீராத்துயரமும் கொண்ட பெண்ணாக மாறிப்போனாள்..!!

அதற்கு முன்பெல்லாம்.. மீரா ஒரு அப்பாவி.. யாரிடமும் அதிர்ந்து பேச மாட்டாள்..!! அதிர்ந்தென்ன.. யாரிடமும் பேசவே மாட்டாள் என்றே கூட வைத்துக் கொள்ளலாம்..!! அந்த அளவிற்கு.. யாரிடமும் நட்பு கொள்ளாத.. தனித்து திரிகிற ஒருத்தி..!! அதுவும் அவளுடைய சிறு வயதில்..

"நானும் வெளையாட வரவா..??" ஏழு வயது மீரா மிக ஏக்கமாக கேட்டாள்.

தீபாவளியும் அதுவுமாய்.. பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு சிறுவர்களிடம்தான், அவள் அவ்வாறு கேட்டது..!! அவள் அந்தமாதிரி அந்த சிறுவர்களிடம்.. அடிக்கடி வெட்கத்தை விட்டு நட்பு யாசகம் கேட்பது வழக்கமான ஒன்றுதான்..!! அதே மாதிரி.. அந்த சிறுவர்கள் இவளை திட்டுவதும், குச்சியால் அடித்து விரட்டுவதும், கல் எடுத்து எறிவதுமே வழக்கமான ஒன்றுதான்..!! அந்த சிறுவர்களின் அம்மாக்கள் நீலப்ரபா மீது கொண்டிருந்த ஒரு காரணமற்ற வெறுப்பை.. அப்படியே அந்த சிறுவர்களுக்கும் மீரா மீதான வெறுப்பாக உள்ளீடு செய்திருந்தனர்..!!

எப்போதும் குச்சி.. அல்லது சிறிய கல்..!! அன்று.. தீபாவளி ஸ்பெஷல்.. திரி கொளுத்திய சரவெடியை தூக்கி மீராவின் மீது போட்டார்கள்..!!! மேலே விழுந்த சரவெடி.. 'பட்.. பட்.. பட்..' என்று வெப்பமாக வெடித்து சிதற.. துள்ளித்துடித்து பதறிப்போன மீராக்குட்டி.. முதுகுப்புறம் கைவைத்து தட்டிவிட்டவாறே..

"அம்மாஆஆஆஆ..!!!!!" என்று கதறிக்கொண்டு வீட்டுக்கு ஓடினாள்.

"பட்.. பட்.. பட்.. பட்.. பட்..!!!"

யோகாவிலிருக்கும் மீராவின் செவிப்பறைகளில் இப்போது அந்த சரவெடி வெடித்து.. அந்த நினைவு இப்போதும் அவளை துன்புறுத்தியது..!! வீட்டுக்குள் ஓடிவந்து, அன்று முழுதும் அம்மாவின் மடியை கட்டிக்கொண்டு, 'ஒஒஒஒ' என அழுது கண்ணீர் சிந்தியது நினைவுக்கு வந்தது..!! மீராவுடைய இமைகள் இன்னும் மூடியிருக்க.. மனதுக்குள் மட்டும் ஒரு ஆதங்கம் பொங்கியது.. 'ஹ்ஹாஆஆ..' என்று வேதனை கலந்த ஒரு வெப்ப மூச்சினை வெளிப்படுத்தினாள்.. அவளுடைய மார்புகள் வேறு விம்மி விம்மி நிமிர்ந்தன..!!

அந்த சரவெடி சம்பவத்துக்கு அப்புறம்.. அடுத்தவர்களிடம் நட்பு யாசகம் கேட்கிற வழக்கத்தை.. மீரா முற்றிலுமாக கைவிட்டுவிட்டாள்..!! 'யாராவது பேசினால்தான் நாமும் பேச வேண்டும்.. வலிய சென்று நாமாக பேசினால், வலியையே அனுபவிக்க நேரிடும்..' என்ற ஒரு கொடுமையான எண்ணத்தை.. அந்த பிஞ்சு வயதிலேயே நெஞ்சில் பதித்துக் கொண்டாள்..!!

அந்த தீபாவளிக்கு அடுத்த நாள்..

"ஹைய்ய்ய்.. டெடி பேர் (teddy bear)..!!!!"

கண்களில் பிரகாசமும், குரலில் உற்சாகமுமாக.. அம்மாவின் கையிலிருந்த அந்த கரடி பொம்மையை.. மீரா ஆவலாக வாங்கிக்கொண்டாள்..!!

"பொம்மை உனக்கு பிடிச்சிருக்கா சின்னு..??"

"ம்ம்ம்ம்... பிடிச்சிருக்கே.. ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.. ரொம்ம்ம்ப அழகா இருக்கு..!!" குட்டி மீரா முத்துப்பற்கள் தெரிய சிரித்தாள்.

"ம்ம்.. இனிமே இந்த பொம்மைதான் சின்னுக்குட்டியோட பிரண்டாம்.. சரியா..??"

"ஹைய்ய்ய்.. இந்த டெடி பேர் என் ஃப்ரண்டா..??" கேட்கும்போதே ஒரு பரவசம் மீராவின் முகத்தில் பொங்கியது.

"ஆ..ஆமாம்.. இதுதான் உன் பிரண்டு..!!" சொல்லும்போதே ஒரு துக்கம் நீலப்ரபாவின் நெஞ்சை அடைத்தது.

"ஹாய் டெடி ஃப்ரண்ட்.. ஹவ் ஆர் யூ..??" மீரா கவலை மறந்து குதுகலாமானாள்.

அம்மாவுக்கு அடுத்தபடியாக அந்த கரடி பொம்மையை மீராவுக்கு மிகவும் பிடித்துப் போனது..!! எங்கு சென்றாலும் தூக்கிக்கொண்டே அலைந்தாள்.. எதுவும் பதில் பேசாமல் அந்த பொம்மை புன்னகைத்துக்கொண்டே இருந்தாலும்.. இவள் அதனுடன் லொடலொடவென பேசிக்கொண்டே இருப்பாள்..!!

"இந்த ட்ரஸ் எனக்கு நல்லா இருக்கா டெடி பேர்.. பாப்பா அழக்கா இருக்கேனா..??"

"ஷேம் ஷேம் பப்பி ஷேம்.. ஹஹா.. ஹஹா..!!"

"வாக்கிங் போலாமா டெடி பேர்..?? வா.. வாக்கிங் போலாம்..!!"

"போ.. உன்கூட டூ.. பேசமாட்டேன் போ..!!"

"இது எக்ஸ்.. இது வொய்.. இது இஸட்.. தேட்ஸ் இட்..!!"

அதற்கு முத்தமிட்டாள்.. அதனுடன் சண்டையிட்டாள்.. சட்டை போட்டு விட்டாள்.. சாதம் ஊட்டி விட்டாள்.. மடியில் கிடத்தி தாலாட்டினாள்.. மார்பில் போட்டு கண்ணுறங்கினாள்..!!

முன்பெல்லாம் அம்மாவை கட்டிக்கொண்டுதான் தூங்குவாள்..!! தூங்கும் நேரம் மட்டுமல்ல.. எந்த நேரமும் அம்மாவின் பார்வை தன் மீது பதிந்திருக்க வேண்டும் என்று நினைப்பாள்..!! அம்மா அருகில் இல்லாத ஒவ்வொரு நொடியுமே.. ஒருவித பாதுகாப்பற்ற தன்மையை உணர்வாள்..!! அதுவும் இரவு நேரங்களில் கேட்கவே வேண்டாம்.. அந்த பயம் அதிகமாக அவளுக்குள் எழும்..!! மதுசூதனன் வீட்டுக்கு வருகிற அந்த வாரத்து ஒருநாளில்.. அம்மா இல்லாமல் தனித்திருக்க வேண்டிய சூழலில்.. தவித்து, மிரண்டு, துடித்துப் போவாள்..!!

"போகாதம்மா..!! பாப்பாக்கு பயமா இருக்குல..??" அம்மாவிடம் கெஞ்சுவாள்.

"ஹையோ.. அழக்கூடாது சின்னு..!! அப்பா வந்திருக்கார்ல.. அம்மா போய் கொஞ்ச நேரம் அப்பாட்ட பேசிட்டு வர்றேன்..!! நீ நல்லபுள்ளையா தூங்குவியாம்..!!"

"எனக்கு பயமா இருக்கும்.. தூக்கம் வராது..!!" மீரா பரிதாபமாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

"ஏய்..!!! இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க அங்க..??" அடுத்த அறையில் இருந்து மதுசூதனனின் குரல் பொறுமையில்லாமல் ஒலிக்கும்.

"ஆங்.. இதோ வந்துட்டேன்..!!" இங்கிருந்தே அவருக்கு பதில் சொல்கிற நீலப்ரபா,

"படுத்துக்கோடா செல்லம்.. அம்மா இதோ அஞ்சு நிமிஷத்துல வந்துடுறேன்..!!" என்று மீராவை சமாதானம் செய்து, படுக்கையில் கிடத்திவிட்டு செல்வாள்.

அப்புறம் அவள் 'சின்னூ..' என்று ஒருவித பதைபதைப்புடன் அறைக்கு திரும்ப.. குறைந்தது அரைமணி நேரமாவது ஆகும்..!! அதுவரை மீரா தனிமையில் அழுது கொண்டே கிடப்பாள்..!! கழுத்துவரை இழுத்து போர்த்திய போர்வையுடன்.. 'திக் திக் திக்' என்று அடித்துக்கொள்கிற இதயத்துடன்.. அறையில் இருக்கிற ஒவ்வொரு பொருளையும் மிரட்சியாக பார்த்துக்கொண்டே.. அந்த அரைமணிநேரத்தை கழிப்பாள்..!!

அப்புறம் அந்த கரடி பொம்மை வந்தபிறகும்.. அம்மா அப்பாவிடம் பேசிவருகிறேன் என்று கிளம்புகையில்.. 'போகாதம்மா..!!' என்று கெஞ்சத்தான் செய்வாள்..!! ஆனால் அவள் போனபிறகு.. முன்புபோல் பயந்து மிரண்டுகொண்டு இராமல்..

"அம்மா ரொம்ப சேட்டை டெடி பேர்.. பாப்பாக்கு பயமா இருக்குல.. பாப்பா பாவம்ல..?? நாம அம்மாகூட டூ விட்ருவோம்.. அம்மாகூட டூ.. சரியா..?? அம்மாகூட டூ சொல்லு..!!"

என்று கண்களில் நீருடனே கரடி பொம்மையுடன் வளவளவென்று பேசிக்கொண்டிருப்பாள்.. அது அவளுக்கு ஒரு ஆறுதலை தரும்..!!




பத்தாம் வகுப்பு படிக்கிற வரைகூட.. கரடி பொம்மையுடன் கதையடிக்கிற அவளது வழக்கம் தொடர்ந்தது..!! கல்லூரி சென்றபிறகுதான் அந்தப்பழக்கம் அவளை விட்டு மறைந்தது..!! கல்லூரியிலும் கூட அவளுக்கு நல்ல நட்பு எதுவும் அமையவில்லை.. அவளுடைய இயல்பான குணமும் அதற்கு மிக முக்கிய காரணம்..!!

சிறுவயதில் சரவெடி போன்ற சம்பவங்கள் என்றால்.. கல்லூரி பருவத்தில் வேறுமாதிரியான வேதனை தரும் நிகழ்வுகள்..!!

"மச்சீ.. யார்டா அவ.. செம்ம்மையா இருக்கா..??"

"யாரு..??"

"அதோ.. அந்த ப்ளூ சுடி..!!"

"ஹ்ஹ.. அவளா..?? அவ நம்ம ஆந்த்ரா அம்மாயி.. சித்தூரு சிட்டுக்குருவி..!!"

"என்னது..??"

"கொல்ட்டி பொண்ணுடா.. எங்க ஏரியாதான்..!!"

"ஓ.. உன் ஏரியாதானா.. தேட்ஸ் இன்ட்ரஸ்டிங்..!!!"

"இதுல என்ன இன்ட்ரஸ்டிங்..??"

"அவளை பத்தி சொல்லு மச்சி.. கேட்போம்..!! அவ ஆள் எப்டி..??"

"ப்ச்.. அவளை விடுறா.. அவ ஒரு வேஸ்ட் பீஸ்..!! அவ அம்மாவை பத்தி சொல்றேன்.. அதுதான் செம்ம இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்..!!"

கல்லூரியில் உடன்படிக்கிறவர்கள் விடுகிற கமெண்ட்கள்.. காதுகளில் ஈயத்தை காய்ச்சி ஊற்றுவது போல இருக்கும் மீராவுக்கு..!! மனதுக்குள்ளேயே அமைதியாக அழுபவள்.. வீட்டுக்கு சென்று அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு, வேதனையுடன் கேட்பாள்..!!

"பேசாம.. என்னை கருவுலேயே அழிச்சிருக்கலாமேமா.. உனக்கும் பிரச்சினை இருந்திருக்காது.. எனக்கும் பிரச்சினை இருந்திருக்காது..!!"

இந்த மாதிரி சம்பவங்களால்தானோ என்னவோ.. மீராவின் மனதில் ஒரு ஏக்கம் எப்போதும் இருக்கும்..!! 'யாராவது தன்னுடன் நட்பாக பேச மாட்டார்களா.. தன்னிடம் இருக்கிற நிறைகளை மனதார பாராட்ட மாட்டார்களா.. குறைகளை உரிமையாக சாட மாட்டார்களா..' என்பது மாதிரியான ஒரு ஏக்கம்..!! நட்புக்கான அவளது ஏக்கத்தினால்தானோ என்னவோ.. நயவஞ்சகமாக ஒருவன் விரித்த வலையில்.. மிக எளிதாக சிக்கிக்கொண்டாள்.. தன் தாயைப் போலவே..!!

மீரா இப்போது கைகால்களையும், உடலையும் திருப்பி.. வேறொரு ஆசன நிலைக்கு மாறியிருந்தாள்.. ஆனால்.. அவளுடைய ஆழ்மனத்தை ஏனோ அவள் விரும்பிய திசையில் திருப்ப முடியவில்லை.. ஒருமுகப்படுத்த இயலவில்லை.. அது இன்னும் பழைய சம்பவங்களையே திரும்ப திரும்ப அசைபோட்டு.. இப்போது கேள்வி கேட்கவும் ஆரம்பித்திருந்தது..!!

'எப்படி ஏமாந்தாய்..?? எத்தனை முறை சொல்லியிருப்பாள் அம்மா..?? வயதுக்கு வந்த நாள் முதலே.. வாய் சலிக்காமல் அதையேதானே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருப்பாள்..?? அப்படி இருந்தும் எப்படி ஏமாந்தாய்..??'

"பரிவா பேசுற ஆம்பளையும்.. படமெடுத்து ஆடுற பாம்பும் ஒன்னுதாண்டி மகளே..!! பாக்குறதுக்கு அழகா இருக்கும்.. பக்கத்துல போனா.. அத்தனையும் விஷம்..!!"

'கேட்டாயா நீ..?? தனது அனுபவத்தை இதைவிட எப்படி உறைக்கிற மாதிரி சொல்லமுடியும்..?? அதை ஏன் உன்னால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை..??'

"நடந்து போற பாதைல.. நல்லபாம்புக நெறைய நெளியும்.. எப்படா காலை சுத்தலாம்னு காத்திருக்கும்.. நாமதான் கவனமா போகணும்.. புரியுதா..??"

'இல்லையே.. புரிந்துகொள்ளவில்லையே நீ.. புரிந்துகொண்டிருந்தால் இப்படி ஒரு இழிநிலைக்கு உள்ளாகியிருப்பாயா..?? பாம்பை கையிலள்ளி மாலையாக சூடிக்கொண்டாயே மடச்சிறுக்கி..?? அப்படி என்ன இருக்கிறதென்று அவனிடம் மயங்கினாய்..?? வெளுத்த தோலா.. கருத்த மீசையா..?? அகண்ட நெற்றியா.. திரண்ட புஜமா..?? கன்னத்தில் குழிவிழுமே.. அந்த அழகு சிரிப்பா..?? கண்பார்த்து பேச தடுமாறுவாயே.. அந்த வசீகர பார்வையா..?? எதைக்கண்டு மயங்கினாய்..??'

'இல்லை.. நிச்சயமாக இல்லை.. அவனுடைய அழகோ, கம்பீரமுமோ என் மனதை எப்போதும் அசைத்து பார்த்ததில்லை..!! அன்பு.. அவன் என் மீது காட்டிய போலி அன்பு.. அதில்தான் நான் ஏமாந்து போனேன்..!! எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்றிருந்தேன்.. மருந்தென்று நீட்டினான்.. விஷமென்றறியாமல் அருந்திவிட்டேன்..!!'

"ஹாய்.. இங்க யாராவது வர்றாங்களா..??" நான் அமர்ந்திருந்ததற்கு எதிர் இருக்கையை காட்டி அவன் கேட்டான்.

"இ..இல்ல..!!"

"அப்போ.. நான் உக்காந்துக்கலாமா..??"

"ஷ்..ஷ்யூர்..!!"

அசோக் மாதிரியேதான் அவனும் என்னை முதன்முறையாக அணுகினான். நெடுநாள் பழகியவன் மாதிரி மிக இயல்பாக பேசினான். பிறகு அவனே சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொண்டு, அடிக்கடி வலிய வந்து உரையாடினான். புத்திசாலித்தனமாக பேசி வியக்க வைத்தான். நகைச்சுவையாக பேசி சிரிக்க வைத்தான். நிச்சயமாக அவனுடைய வருகைக்கு முன்பு, நான் அந்தமாதிரி மனம் விட்டு சிரித்ததில்லை. ஆனால்.. ஆனால்.. என்னுடைய சந்தோஷம் மொத்தத்தையும்.. பொசுக்கி சாம்பலாக்கத்தான் அவையெல்லாம் என்பது அப்போது எனக்கு தெரியவில்லை..!!

"உன்கிட்ட பேசிட்டு இருந்தாலே எனக்கு சக்கரை வியாதி வந்துடும் போல இருக்கு..!! உன் வாய்ஸ் அவ்வளவு ஸ்வீட்டா இருக்கு..!!" - அவன் கிறக்கமாக சொல்லும்போது, அறிவில்லாமல் வெட்கமுற்றேன்.

"வாவ்.. இட்ஸ் சூப்பர்ப்..!! கவிதை ஃபெண்டாஸ்டிக்கா இருக்கு.. இவ்வளவு நல்லா கவிதை எழுதுவேன்னு இத்தனை நாளா எனக்கு தெரியாம போச்சே..?? ஹ்ம்ம்.. ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே.. ஆச்சரியக்குறி..!!" - கன்னத்தில் குழிவிழ அவன் சிரித்தபோது, எனது நட்பு ஏக்கம் தீர்க்கவந்தவன் அவன்தான் என்றே நம்பினேன்.

"இந்தக் கவிதையோட தீம்.. பர்சனலா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. பெண்மையோட மேன்மையை சொல்ற எந்த விஷயமுமே எனக்கு ரொம்ப பிடிக்கும் தெரியுமா..!! ஏன்னா.. நான் பெண்மையை ரொம்ப மதிக்கிறவன்..!!" - அவன் பெண்மையை மதிக்கிற லட்சணம் வேறொரு நாள்தான் வெளிச்சத்துக்கு வந்தது.
"என்னை பத்தி எல்லாம் தெரிஞ்சும்.. என்கூட யாரும் இவ்வளவு ஃப்ரண்ட்லியாலாம் பேசினது இல்ல.. அதான் தேங்க்ஸ்னு.." - நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவன் இடைமறித்து,

"ப்ச்.. கமான்..!! எனக்கு நீதான் முக்கியம்.. உன்னோட ஹிஸ்டரி, ஜியாக்ரஃபிலாம் யாருக்கு வேணும்..?? நா..நான்.. நான் மத்தவங்க மாதிரி இல்லமா.. ஐ'ம் டிஃபரண்ட்..!! நான் எந்த அளவுக்கு உன்னை பத்தி புரிஞ்சு வச்சிருக்குறேன்னு.. உனக்கு தெரியாது..!! இனிமே இந்த தேங்க்ஸ்.. ஸாரிலாம் சொன்னேன்னு வச்சுக்கோ.. பல்லை உடைச்சிடுவேன்..!!"

என்று கோவமாக சொன்னான். அன்று அவனுடைய அந்த கோவம், எனக்கு எவ்வளவு சந்தோஷத்தை கொடுத்திருக்கும் என்று யாராலும் புரிந்து கொள்ள முடியாது. மத்தாப்பு கொளுத்திப் போட்டது போல.. மனதெல்லாம் அப்படி ஒரு பூரிப்பு..!! அதனால்தான்.. மங்கிப்போன மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்.. எனது கைவிரல்களை கோர்த்துக்கொண்டு.. என் கண்களை நேருக்கு நேராய் பார்த்துக்கொண்டு.. ஏக்கமும், தவிப்புமான குரலில்..

"I love you..!! Do you love me..??" என்று அவன் கேட்டபோது என்னால் மறுக்க முடியவில்லை..!!

"Yes..!!!" என்றேன்.. அம்மாவின் அனுபவத்தை மறந்து.. அந்த அரவத்தை மாலையென அணிந்துகொண்டேன்..!!

அன்புக்கான ஏக்கம் என் கண்ணை மறைத்திருந்தது.. அன்பென்ற முகமூடி அந்த அரக்கனுக்கும் சரியாகவே பொருந்தியிருந்தது..!! அணைத்து நெருக்கியிருப்பது அரவம் என்று அறியாமல்.. அதை நான் கொஞ்சினேன்.. முத்தமிட்டேன்.. சிரித்தேன்.. அதிர்ஷ்டக்காரியென கர்வம் கொண்டேன்.. கால்கள் தரையில் நில்லாமல் மிதந்தேன்..!!

காலை சுற்றிய பாம்பு.. கடித்து வைக்கவும் தகுந்த நேரத்தை தேர்ந்தெடுத்தது..!!

"தனியா போறதுக்கு எனக்கு போரடிக்குது.. நீயும் வர்றியா.. ப்ளீஸ்..!!" - கெஞ்சினான்.

"காலைல இருந்து சுத்தினது ரொம்ப டயர்டா இருக்குல..?? ஒன்னு பண்ணுவோமா.. பக்கத்துலதான் எங்க கெஸ்ட் ஹவுஸ்.. அங்க போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு கெளம்பலாமா.. ப்ளீஸ்..!!" - கெஞ்சினான்.

"நோ நோ..!! ஃபர்ஸ்ட் டைம் என் வீட்டுக்கு வந்திருக்குற.. அட்லீஸ்ட் இந்த ஜூஸாவது சாப்பிட்டே ஆகணும்.. ப்ளீஸ்..!!" - கெஞ்சினான்.

பிறகு நடந்ததெல்லாம் எனக்கு அரைகுறையாகத்தான் ஞாபகம் இருக்கிறது..!! படுக்கையறைக்கு என்னை தூக்கி சென்ற பாம்பு.. மெத்தையிலே கிடத்தியது.. மேலே கவிழ்ந்தது.. ஆடைகளை களைந்தது.. அதரங்களை கவ்வியது.. என் அங்கமெல்லாம் படர்ந்தது..!! கரும்பை சுவைத்துவிட்டு சக்கையை துப்புவது போல.. எனது கற்பை தின்றுவிட்டு தன் எச்சத்தை கக்கியது.. அந்த பாம்பு..!! அது விஷ எச்சமென்று கூட அப்போது எனக்கு விளங்கவில்லை..!!

"ப்ச்.. என்ன நீ.. இதுக்கு போய் இவ்வளவு ஃபீல் பண்ற..?? மேரேஜ்க்கு முன்னாடி.. It's just a little fun.. அவ்வளவுதான்..!!" - சமாதானம் செய்தான்.

"நான் என்ன பண்றது.. உன் அழகுதான் எல்லாத்துக்கும் காரணம்..!! திடீர்னு மயக்கமாயிட்ட.. எனக்கு என்ன பண்றதுனே தெரியல.. பெட்க்கு தூக்கிட்டு போனேன்.. அங்க போனதும்.. உன் அழகை பாத்ததும்.. எனக்கு ஆசை வந்துடுச்சு.. என்னால கண்ட்ரோல் பண்ண முடியல.. It's just happened.. அவ்வளவுதான்..!!" - சமாதானம் செய்தான்.

"அப்போ என்னை நம்பலைல..?? ஏமாத்திடுவேன்னு நெனைக்கிறல..?? நீ நம்புறியோ இல்லையோ.. நான் அப்படி நடந்துக்கிட்டதுக்கு.. நான் உன்மேல வச்சிருக்குற லவ்தான்மா காரணம்.. நீ எனக்கு சொந்தமானவன்ற உரிமைதான் காரணம்.. it's just because my love.. அவ்வளவுதான்..!!" - சமாதானம் செய்தான்.

முன்பொருநாள் அவன் சொன்னது முற்றிலும் உண்மைதான்.. 'நான் எந்த அளவுக்கு உன்னை பத்தி புரிஞ்சு வச்சிருக்குறேன்னு.. உனக்கு தெரியாது..!!' என்று சொன்னானே.. அது முற்றிலும் உண்மை..!! என்னை எங்கே அடித்தால்.. எங்கே விழுவேன் என்று நன்றாகவே புரிந்து வைத்திருந்தான்..!!

அவனுடைய சமாதானத்தை ஏற்றுக்கொண்டேன்.. அவனை நம்பினேன்..!! சற்றும் அவன்மீது எனக்கு சந்தேகம் வரவில்லை.. காலையில் இருந்து அலைந்ததால் வந்த மயக்கம்தான் என்று நினைத்தேனே ஒழிய.. அவன் கலந்து தந்த பழச்சாற்றினால் வந்த மயக்கம் என்று நான் நினைக்கவில்லை..!! எவ்வளவு அழகாக காய்நகர்த்தி எனது கற்பை களவாடியிருக்கிறான் என்பதை அப்போது நான் சுத்தமாய் அறியவில்லை..!!

வேறொரு நாளில்.. அம்மா எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறேன் என்று பேச்சை எடுத்த அந்த நாளில்.. அவனை தொலைபேசி மூலம் நான் தொடர்பு கொண்டு பேசிய அதே நாளில்தான்.. அவனது சுயரூபம் எனக்கு தெரியவந்தது.. காதல் என்ற போர்வையில் என் கற்பை சூறையாடிய அவனது கயமை எனக்கு புரியவந்தது..!!

"ஹாஹா.. அதுலாமா இன்னும் ஞாபகம் வச்சுட்டு இருக்குற..?? சரியான லூஸுடி நீ..!!"

"ம்ம்.. மாப்பிள்ளை பாத்தா கட்டிக்கோ.. அதை எதுக்கு எங்கிட்ட வந்து சொல்லிட்டு இருக்குற..?? நான் இங்கயே பொண்ணு பார்த்து.. இங்கயே செட்டில் ஆகப் போறேன்.. நீயும் உன் அம்மா பாக்குற பையனை கல்யாணம் பண்ணிக்கோ.. அதான் உனக்கு நல்லது..!!"

"ப்ச்.. அதான் பேபிலாம் ஒன்னும் ஃபார்ம் ஆகலைல.. அப்புறம் என்ன ஓவரா ஸீன் போட்டுட்டு இருக்குற..?? கமுக்கமா அவனையே கட்டிக்கோ.. கண்டுலாம் புடிக்கமுடியாது..!!"

"காதலும் இல்ல.. ஒரு கருமாந்திரமும் இல்ல.. It's just matter of one rupee.. just one rupee.. u know..!!"

"அவ கூட பழகிக்காட்டுறியான்னு பசங்க பந்தயம் கட்டுனாங்க.. படுத்தே காட்டுறேன்னு பதிலுக்கு நான் பந்தயம் கட்டுனேன்..!! பந்தயம் எவ்வளவு தெரியுமா.. one rupee..!!!! ஹாஹா ஹாஹா.. I won that one rupee.. u know..??"

"ஹ்ம்ம்.. ஆக்சுவலா உனக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும்.. நான் நெனச்சதை விட ரொம்ம்ம்ப ஈஸியா படிஞ்சுட்ட..!! ஒரே ஒரு தடவைதான்.. இருந்தாலும் லைஃப்லயெ மறக்க முடியாத மாதிரி ஒரு எக்ஸ்பீரியன்ஸ் எனக்கு கொடுத்த.. ஆஹ்ஹ்ஹ்.. இப்ப நெனச்சாலும் அப்படியே ஜிவ்வுன்னு இருக்குது..!! ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்..!!"

"ஆங்.. அன்னைக்கு நடந்ததுலாம் உனக்கு சரியா ஞாபகம் இல்லைன்னு சொன்னேல.. வீடியோ அனுப்புறேன் பாக்குறியா..?? இன்னும் என் மொபைல்லதான் வச்சிருக்கேன்.. உன் ஞாபகம் வர்றப்போலாம் அப்பப்போ எடுத்து பாத்துக்குவேன்.. ஹாஹா..!!"

"ப்ச்.. நான்தான் சொல்றேன்ல.. எல்லாம் சும்மா ஜாலிக்கு, நீயும் ஜாலியா எடுத்துக்கோன்னு..!! அப்புறமும் சாவப்போறேன், கூவப்போறேன்னா என்ன அர்த்தம்..?? போ.. சாவு.. போ..!!"

இரக்கமே இல்லாமல் சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்தான்..!! ஆண்களை அரவங்கள் என்று அம்மா சொன்னதன் முழு அர்த்தமும் அன்றுதான் எனக்கு விளங்கியது..!! அன்றுதான்.. அம்மாவுக்கு முதன்முறையாக ஹார்ட் அட்டாக்கும் வந்தது..!! உள்ளத்தில் ஏற்பட்ட கொதிப்பை அடக்க முடியாமல்.. உண்மையை அம்மாவிடம் வந்து சொல்ல..

"எ..என்னடி சொல்ற..??"

என்று விரிந்த விழிகளுடன், நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தவள்தான்..!! அப்புறம்.. மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சை அளித்து.. மறுநாள்தான் கண்விழித்து பார்த்தாள்..!!

அதன்பிறகு வந்த நாட்களில்.. எந்த நேரமும் எனது நிலையை நினைத்து நினைத்து.. அம்மா வடித்த கண்ணீரின் அளவு.. கடலளவு கொள்ளும்..!! தனக்கு நேர்ந்த கொடூரம் தனது பெண்ணுக்கும் நேர்ந்துவிட்டதே என்ற நினைவே.. அவளை கொஞ்சம் கொஞ்சமாய் அரித்து தின்ன ஆரம்பித்தது..!!

"இப்படி பண்ணிட்டியேடி.. எத்தனை தடவை திரும்ப திரும்ப சொல்லிருப்பேன்.. என் பொழைப்பை பாத்துமா உனக்கு புத்தி வரல..??"

அனுதினமும் அம்மாவின் புலம்பல்தான்..!! எனது நிலை அவளை துயரம் கொள்ள செய்ததென்றால்.. அவளது நிலை என்னை நிலைகுலைய செய்தது.. நொறுங்கிப்போக வைத்தது.. அதனால்தானே நான்.. நான் செய்த காரியம் அம்மாவுக்கு மேலும் வேதனையையே கொடுக்கும் என்று ஏன் எனக்கு அப்போது தோன்றவில்லை..??

மீரா இப்போது மீண்டும் தனது ஆசன நிலையை மாற்றி அமைத்துக் கொண்டாள்.. மீண்டும் சம்மணமிட்டு அமர்ந்து.. மார்புகள் ரெண்டும் 'புஸ்.. புஸ்..' என சுருங்கி விரிய.. மிக ஆழமாக மூச்சிழுத்து வெளியிட்டாள்.. நெஞ்சில் கொந்தளிக்கிற நினைவுகளை கொஞ்சமாவது அடக்கிட முயன்றாள்.. அவளுடைய முயற்சி தோல்வியே..!!

ஆனால்.. அந்த முயற்சியினால்.. அவளது மனதில் பொங்குகிற நினைவுகள் இப்போது தடம் புரண்டிருந்தன..!! அம்மாவுக்கு வந்த முதல் மாரடைப்பை பற்றி எண்ணியதும் அதனுடன் தொடர்புகொண்ட இன்னொரு நிகழ்வும்.. உடனடியாய் அவளது நினைவுக்கு வந்தது.. அது வேறொன்றுமல்ல.. நீலப்ரபாவுக்கு இரண்டாம் முறையாக மாரடைப்பு வந்த நிகழ்வுதான்..!! அசோக்கின் அறிமுகம் ஏற்பட்ட பிறகேதான் அந்த சம்பவம் நிகழ்ந்தது..!!

அன்று நீலப்ரபாவை டாக்ஸியில் ஏற்றிக்கொண்டு.. மருத்துவமனைக்கு விரைந்த அந்த காட்சி.. இப்போது அவளது மனதில் பளிச்சிட்டது..!! அந்த நள்ளிரவில்.. போக்குவரத்து குறைந்திருந்த அண்ணாசாலையில் அந்த டாக்ஸி பறந்து கொண்டிருந்தது..!! டாக்ஸியின் பின்சீட்டில் மீராவும், நீலப்ரபாவும்..!! மீராவின் மார்பில் தலைசாய்த்திருந்த நீலப்ரபா.. தனது மார்பில் கைவைத்து அழுத்தி பிடித்திருந்தாள்..!! வேதனையில் தத்தளித்துக்கொண்டிருந்த அவளது முகம் வியர்வையில் நனைந்திருந்தது.. கவலையில் துடித்துக்கொண்டிருந்த மீராவின் முகமோ கண்ணீரில் குளித்திருந்தது..!!

"கொஞ்சம் சீக்கிரமா போங்கண்ணா.. ப்ளீஸ்..!!" டாக்ஸி ட்ரைவரிடம் சொன்ன மீரா, பிறகு அம்மாவிடம் திரும்பி,

"கொஞ்சநேரம் பொறுத்துக்கம்மா.. ஹாஸ்பிடல் இந்தா வந்துடும்..!!" என்றாள் ஆறுதலாக.

"இ..இல்லடி.. அ..அம்மா பொழைக்கமாட்டேன்..!!" நீலப்ரபா திணறலாக சொன்னாள்.

"ஐயோ.. ஏன்மா இப்படிலாம் பேசுற..??"

"எ..எனக்கு தெரிஞ்சு போச்சு..!! உ..உன்னை இப்படி விட்டுட்டு போறோமேன்னுதான்.. க..கவலையா இருக்கு..!!"

"அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா.. நீ கொஞ்ச நேரம் பேசாம இரு..!!"

"அ..அப்புறம்.. பேசவே முடியாதே..??"

"அம்மா.. ப்ளீஸ்..!! இப்படிலாம் பேசினா.. அப்புறம் நான் பயந்துடுவேன்..!!"

"அ..அம்மாவை மன்னிச்சிடும்மா..!! நீ படுற கஷ்டத்துக்குலாம் நாந்தான் காரணம்..!!"

"ஹையோ.. என்னம்மா நீ..??" மீராவுக்கு இப்போது அழுகை பீறிட்டது.

"நா..நான் செஞ்ச பாவம்லாம்.. உன்னை புடிச்சு ஆட்டுது..!!"

"இல்லம்மா.. உன்மேல எந்த தப்பும் இல்ல.. நீ எந்த பாவமும் பண்ணல.. நான்தான் பாவி..!! நான் செஞ்ச பாவந்தான்.. உன்னை இந்த மாதிரி ஆக்கிடுச்சு..!! நான்தான் பாவி.. நான்தான் பாவி..!!"

மீரா கண்ணீரோடு கதறியதெல்லாம் நீலப்ரபாவின் காதில் விழுந்த மாதிரியே தெரியவில்லை.. திரும்ப திரும்ப அதே வார்த்தைகளை சொல்லிக்கொண்டிருந்தாள்..!!

"அ..அம்மாவை மன்னிச்சிடும்மா..!! அ..அம்மாவை மன்னிச்சிடும்மா..!!" - அவைதான் நீலப்ரபா பேசிய கடைசி வார்த்தைகள்..!!

"அ..அம்மா.. அம்மா.. ப்ளீஸ்மா.. கண்ணை தொறந்து பாருமா..!! என்னை விட்டு போயிடாதம்மா.. ப்ளீஸ்மா.. எனக்கு உன்னை விட்டா வேற யாரும்மா இருக்காங்க..?? ப்ளீஸ்மா.. என்னை விட்டு போயிடாதம்மா..!!"

அம்மாவின் உயிர் பிரிந்தது தெரியாமல்.. அவளது கன்னத்தை தட்டி தட்டி.. அழுது அரற்றிக்கொண்டிருந்தாள் மீரா..!! நீலப்ரபா செய்த தவறினால்.. மீரா என்ற உயிர் பிறந்தது..!! மீரா செய்த தவறினால்.. நீலப்ரபா என்ற உயிர் பிரிந்தது..!!

மருத்துவமனைக்கு கொண்டு செல்கிற வழியிலேயே நீலப்ரபா இறந்து போனாள்..!! அன்றுதான்.. மீரா அசோக்கை சந்திக்க நேர்ந்த நாளிலிருந்து 47-ஆவது நாள்..!! அதன்பிறகான மூன்று நாட்கள்தான்.. மீராவுக்கு என்ன ஆனது என்று தெரியாமல்.. அசோக் தவித்து திரிந்த நாட்கள்..!!

அம்மா தன்னை விட்டுச்சென்ற நினைவுகள்.. மீராவின் தலைக்குள் உளி கொண்டு அடித்தாற்போல் இறங்க.. மூடியிருந்த அவளது கண்கள் மெல்ல சுருங்கியன.. முகம் இறுகியது.. உதடுகள் படபடவென துடித்தன.. அவற்றை பற்களால் அழுத்தி கடித்துக்கொண்டு.. மூச்சை ஒருமுறை ஆழமாக உள்ளிழுத்து வெளியேற்றி.. அலைபாய்கிற மனதை மீண்டும் தியானத்துக்குள் திருப்ப முயன்றாள்..!!

மனம் அவளுக்கு கட்டுப்பட மறுத்தது.. மொத்த நினைவுகளையும் கன்னாபின்னாவென்று படம் ஓட்டிக்காட்டிட விழைந்தது..!!

அம்மா தவறியதற்கு நான்காம் நாள் அசோக்குடன் செலவழித்த அந்த இரவின் நினைவு..!!

"ம்ஹூம்.. வீடு வேணாம்.. நோ வீடு.. வீடு எனக்கு புடிக்கல..!!" - போதையில் சுழல்கிற தலையுடன் மீரா.

"என்ன வெளையாடுறியா.. வீட்டுக்கு போகலனா உன்னை தேட மாட்டாங்க..??" - கவலை தோய்ந்த முகத்துடன் அசோக்.

"தேட மாட்டாங்க.. வீட்ல யாரும் இல்ல.. நான் மட்டுந்தான்..!!"

அசோக்கின் நினைவு வந்ததுமே.. பற்றி எரிகிற அவளுடைய இருதயத்தில்.. திடீரென தென்றல் வீசிட்ட மாதிரி ஒரு சிலிர்ப்பு..!! அவளையும் அறியாமல்.. அவளது உதடுகள்.. 'அசோக்..' என்று மெல்ல முனகின.!!

அதே இரவில்.. அந்த ஹோட்டல் அறையில்..

"என் மேல அன்பு காட்டுறதுக்கும் யாரும் இல்ல.. எனக்குன்னு யாருமே இல்லடா..!!" - ஏக்கமான குரலில் மீரா.

"நான் இருக்கேன்டா.. நான் இருக்கேன் உனக்கு..!!" - ஆறுதலான குரலில் அசோக்.

"இ..இல்ல.. நீ இருக்க மாட்ட.. போயிடுவ..!!"

"ஹையோ.. நான்தான் சொல்றேன்ல..?? சாகுற வரை உன்கூடவேதான் இருப்பேன்.. சத்தியம்..!! போதுமா..??"

'அசோக்.. என் அசோக்..!! எவ்வளவு நல்லவன் நீ..?? எவனோ ஒரு கொடியவன், நண்பர்களுடன் சவால் விட்டு என்னை சிதைத்தான் என்று.. உன்னை எந்த அளவிற்கு அலைக்கழித்தேன்..?? எப்படியெல்லாம் உன்னை அவமானப் படுத்தினேன்..?? எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு.. என் மீது உண்மையான காதலை பொழிந்தாயே..?? ஆண்கள் எல்லாம் அரவங்கள் என்றிருந்தவளை.. உனது அன்பின் முன்னால் தோற்றுப்போக வைத்தாயே..??'

'பாவி நான்.. உன்னோடு வாழ்கிற பாக்கியம் எனக்கு இல்லாமல் போனதே..!! அப்பழுக்கற்ற உன் நேசத்துக்கு.. சிறுகாணிக்கை என்று தருகிற அளவிற்கு.. அந்த கற்பும் கூட என்னிடம் இல்லாமல் போனதே..??'

அசோக்கின் நினைவில் மூழ்கியவளை.. அதற்குள்ளாகவே அந்த அரக்கனின் நினைவு வந்து இம்சித்தது..!!

"It's just matter of one rupee..!!" - கன்னத்தில் குழிவிழ அழகாக சிரித்தான் அவன்.

"உயிரை விட நான் உன்னை அதிகமா நேசிக்கிறேன்.. நீ இல்லன்னா நான் செத்துப் போயிடுவேன்..!!" - மனதுக்குள் மீண்டும் வந்த அசோக், ஏரிப்பாலத்தின் மீது நின்றவாறு சொன்னான்.

"உன் அழகை பாத்ததும்.. எனக்கு ஆசை வந்துடுச்சு.. என்னால கண்ட்ரோல் பண்ண முடியல.. It's just happened..!!" - அவன்

"ஹையோ..!! நைட்டு என் ட்ரஸ் ஃபுல்லா நீ வாமிட் பண்ணிட்ட.. போதுமா..?? பயங்கர ஸ்மெல்.. அதோட எப்படி படுக்குறது.. அதான் அலசி காயப்போட்டுட்டு படுத்திருந்தேன்..!!" - இது அசோக்.

அவளது வெற்று முதுகில் முகம் தேய்க்கிற அந்த அரக்கன்..!! தரையில் ஜட்டியுடன் அப்பாவியாக படுத்திருக்கிற அசோக்..!!

"நீயும் உன் அம்மா பாக்குற பையனை கல்யாணம் பண்ணிக்கோ..!!" - எகத்தாளமாக சொன்னான் அவன்.

"நீ மருமகளா வர்றதுக்குத்தான்.. இந்த வீடு புண்ணியம் பண்ணிருக்கணும்..!! இதை நான் சொல்லல.. என் அம்மா சொன்னாங்க..!!" - ஒரு குழந்தையின் புன்னகையுடன் சொன்னான் அசோக்.

"உன் அம்மாவை உனக்கு பிடிக்குமா..??" - மீரா அசோக்கிடம் கேட்டாள்.

"பிடிக்கு...மாவா..?? ஹ்ஹ.. உலகத்துலயே எனக்கு ரொம்ப பிடிச்ச ஜீவன்.. என் அம்மாதான்..!! உனக்கு..??" - அசோக் திரும்ப கேட்டான்.

"ம்ம்.. எனக்கும் என் அம்மாவை ரொம்ப பிடிக்கும்..!!" - இறந்து போன அம்மாவை நினைத்தவாறே பதில் சொன்னாள்.

தியானத்துக்கு அடங்க மறுத்த மீராவின் மனது.. இப்போது தனது உச்சபட்ச அட்டகாசத்தை தொடங்கியிருந்தது..!! பலவித குழப்பமான எண்ணங்கள்.. குறுக்கும் மறுக்குமாக அவளது மூளைக்குள் ஓட.. அவளால் நிம்மதியாக யோகாவை தொடர முடியவில்லை..!! தலை விண்விண்ணென்று தெறிப்பது மாதிரி ஒரு உணர்வு..!! இதயம் தாறுமாறாக அடிக்க ஆரம்பிக்க.. அவளது முகம் அவஸ்தையில் துடித்தது..!! இமைகளை இறுக்கி கண்களை சுருக்கிக்கொண்டாள்..!! உள்ளுக்குள் எழுந்த உணர்வுகளை அடக்கமுடியாமல் பற்களை கடிக்க.. அவளது உதடுகள் படபடவென துடிக்க ஆரம்பித்தன..!!

"அ..அம்மாவை மன்னிச்சிடும்மா..!!" - நீலப்ரபா மீண்டும் மனதுக்குள் வந்து நின்றாள். அவளது மார்பில் கிடந்த அம்மா திடீரென அசோக்காக மாறி..

"எ..எனக்கு நீ வேணும் மீரா..!!" என்றான் உலர்ந்த குரலில்.

"இ..இல்லடா.. இல்ல..!! நான் உனக்கு வேணாம்.. இந்த அதிர்ஷ்டங்கெட்டவ உனக்கு வேணவே வேணாம் அசோக்..!!!" - மீரா அலறினாள்.

"இ..இல்ல.. நீ இருக்க மாட்ட.. போயிடுவ..!!" - போதையில் செருகிய விழிகளுடன் மீரா சொல்ல,

"சாகுற வரை உன்கூடவேதான் இருப்பேன்.. சத்தியம்..!! போதுமா..??" - அசோக் அவளை அணைத்துக்கொண்டான்.

"ப்ளீஸ்மா.. என்னை விட்டு போயிடாதம்மா..!!" - உயிரற்ற அம்மாவிடம் மீரா கெஞ்சினாள்.

"போகாதம்மா..!! பாப்பாக்கு பயமா இருக்குல..??" - ஐந்து வயது மீரா மீண்டும் கெஞ்சினாள்.

"போயிடாத மீரா.. போயிடாத..!!" - மடியில் கிடந்த அசோக் மயங்கிப்போகும்முன் மீராவை கெஞ்சினான்.

அவ்வளவுதான்..!! மீராவால் அதற்குமேலும் தாக்குப் பிடிக்க முடியவில்லை..!! மார்புகள் குபுக் குபுக்கென ஏறி இறங்க.. நுரையீரல் சர் சர்ரென காற்றை விழுங்கி வெளியேற்ற.. படக்கென விழிகளை திறந்தாள்.. திறந்ததுமே முணுக்கென்று கண்ணீர் துளிகள் இரண்டு விழிகளிலும் வெளிப்பட்டு கன்னம் நனைத்து ஓடின..!! உள்ளத்தில் எழுந்திட்ட குமுறலை ஒரு சில வினாடிகள் அடக்க முயன்றவள்.. பிறகு அந்த முயற்சியில் தோற்றுப்போனாள்..!! விசும்பலாக ஆரம்பித்து.. அப்புறம் உடைந்து போய் 'ஓஓஓ..'வென அழ ஆரம்பித்தாள்..!! அப்படியே நிலைகுலைந்து போய் தரையில் சரிந்தாள்..!!

பட்டுப்போன்ற மிருதுவான அவளது கன்னங்களில் ஒன்று தரையோடு அழுந்தி கிடக்க.. இரண்டு விழிகளும் இப்போது கண்ணீர் வெள்ளம் உடைப்பெடுத்து ஓட ஆரம்பிக்க.. அவளுடைய உதடுகள் மட்டும் மெலிதாக முணுமுணுத்தன..!!

"ஸாரிடா அசோக்.. ஸாரிடா..!!"

எவ்வளவு நேரம் அவ்வாறு அழுதுகொண்டே கிடந்தாளோ..!! தனது கண்ணீரால்.. தான் ஏற்படுத்திய குளத்திலேயே.. தனது கன்னம் அமிழ்ந்துபோய்.. அசையாமல் நெடுநேரம் கிடந்தாள்..!! ஜன்னல் வழியாக அறைக்குள் பாய்ந்த சூரிய கதிர்கள்.. அவளது முகத்தை சுட்டு உஷ்ணமாக்கியதை கூட கண்டுகொள்ளவில்லை அவள்..!!

நெடுநேரத்திற்கு பிறகு.. ஒருவழியாக மனதை ஆசுவாசப் படுத்திக்கொண்டு.. மீரா எழுந்தாள்..!! மெல்ல நடந்து சென்று குளியலறைக்குள் நுழைந்தாள்..!! உலோக குமிழை திருக.. ஷவரில் இருந்து நீர் கொட்டியது..!! உள்ளுக்குள் இன்னும் உஷ்ணம் கனன்று கொண்டிருக்க.. உச்சியில் குளிர்ந்த நீர் கொட்டிக்கொண்டிருக்க.. உயிரற்ற ஜடம் போல நனைந்து கொண்டிருந்தாள்..!!




குளித்து முடித்து வெளியே வந்து.. வேறு உடை அணிந்து கொண்டபோது.. அசோக்கின் நினைவுகள் அவள் மனதில் பொங்கின..!! பிறகு கண்ணாடி முன் நின்று தலைதுவட்டியபோது.. அவளது உருவத்துக்கு அருகே அவன் வந்து நின்றான்..!! மீண்டும் அவனுடைய நினைவு.. அவனை காதலிக்க ஆரம்பித்ததில் இருந்தே.. அவளை துரத்தி துரத்தி தூங்கவிடாமல் செய்கிற அவனுடைய நினைவு..!! ஒரு மாறுதலுக்காக இப்போது அவனுடனான சில இனிமையான நினைவுகள்..!!

கண்ணாடியில் தன் கண்களை பார்த்தாள்.. 'இந்தக்கண்ணை பாத்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கு மீரா' என்று அசோக் சொன்னது நினைவுக்கு வந்தது..!!

தேனில் நனைந்த மலரிதழ் போலான அந்த உதடுகளுக்கு அவளது பார்வை போனது.. அசோக் அந்த உதடுகளில் தந்த காதல் முத்தம் இதயத்தில் ஓடியது..!!

விரல்களால் கன்னத்தை வருடினாள்.. அவள் மிளகாய் கடித்தபோது, அந்த கன்னத்தினை பற்றி அவன் நீர் அருந்த செய்த நிகழ்வு மனதை வருடியது..!!

கையை உயர்த்தி அதன் பிம்பம் கவனித்தாள்.. 'அ..அடிக்கடி இல்லன்னாலும்.. அப்பப்போவாவது மீட் பண்ணிக்கலாம்ல மீரா..?? ப்ளீஸ்..!!' என்று அவன் அவளது கையை பிடித்துக்கொண்டு பரிதாபமாக கேட்டது ஞாபகத்துக்கு வந்தது..!! கூடவே.. கையில் சுருண்டிருந்த ப்ரேஸ்லட்டின் இதய வடிவ பென்டன்ட்.. இப்போது காணாமல் போயிருப்பதும் ஞாபகத்துக்கு வந்தது..!!

"இந்த பென்டன்ட் ரொம்ப அழகா இருக்குல..?? குட்டியான க்யூட்டான ஹார்ட்.. என் ஹார்ட் மாதிரியே..!! ஹ்ம்ம்.. சின்னதா இருந்தாலும்.. இட்ஸ் கோல்டன் ஹார்ட்.. அதுவும் என் ஹார்ட் மாதிரியே..!! ஹாஹா..!!"

அசோக் சிரித்தவாறே சொன்னது அவளது நினைவுக்கு வந்தது.. அதைத்தொடர்ந்து ஒரு சலிப்பான உணர்வு..!!

'ப்ச்.. இதுவேற.. அடிக்கடி எங்கயாவது விழுந்து தொலைச்சுடுது..!! இதை இப்போ எங்க போய் தேடுறது..?? எங்க விழுந்திருக்கும்..??'

என்று மனதுக்குள் முனுமுனுத்தவாறே அந்த பென்டன்ட்டை தேட ஆரம்பித்தாள்.. முதலில் குளியலறை சென்று பார்த்தாள்.. பிறகு ஹாலுக்கு சென்று சோபாவில் தேடினாள்.. அங்கேயும் இல்லை..!! 'அப்டினா பெட்ரூம்லதான் எங்கயாவது கெடக்கும்..' என்று நினைத்துக்கொண்டவள்.. படுக்கையறைக்குள் நுழைந்தாள்..!! படுக்கை விரிப்பில் தேடினாள்.. காணவில்லை..!! 'தரையில் எங்காவது விழுந்து கிடக்கிறதா..?' என யோசித்தவள்.. தரையை பார்க்க முகத்தை திருப்பினாள்.. முகத்தில் சூரிய வெப்பம் சுள்ளென்று அடித்தது..!! தரையை தெளிவாக பார்க்க முடியாத வகையில்.. சூரிய கதிர்களின் பிரதிபலிப்பு அவளை தொந்தரவு செய்தது..!!

"ப்ச்..!!"

என்று சலிப்பை உதிர்த்தவள், எழுந்தாள்.. ஜன்னலை நோக்கி நடந்தாள்..!! திரைச்சீலையை பற்றி இழுத்து ஜன்னலை மூட எத்தனித்தவள்.. எதேச்சையாக பார்வை வெளியே பாய, ஒருகணம் தயங்கி அப்படியே நின்றாள்..!! ஜன்னலுக்கு வெளியே தூரமாக பார்த்தாள்.. அங்கே அவள் கண்ட காட்சியில் உடனே பதறிப்போனாள்..!!

'அது.. அந்த ஃப்ளக்ஸ் போர்டுக்கு அருகே நிற்பது.. அவர்கள்தானே.. அசோக்கும் சாலமனும்தானே..??'

தூரத்தில் தெரிந்த அவர்களுடைய உருவத்தை வைத்தும்.. அவர்கள் அணிந்திருந்த ஆடையை வைத்துமே.. மீராவால் எளிதாக அவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது..!! அடையாளம் கண்டதுமே.. அவளது ஹார்ட்.. ஹை ப்ரஷரில் ரத்தத்தை பம்ப் செய்து.. அவளுடைய அத்தனை நரம்புகளிலும் சிதறியடித்து.. 'படக் படக்' என ஹைஸ்பீடில் கிடந்து துடிக்க ஆரம்பித்தது..!!

 


1 comment:

  1. பெண்ணிற்கு ஒருமுறை எற்பட்ட வலி வேதனை போதாதென்று மகளும் ஏமார்ந்து போயிருக்கிறாள் பாவம் இனி என்ன நடக்குமோ

    ReplyDelete

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...