Social Icons

அன்புள்ள ராட்சசி - 1







'அன்புள்ள ராட்சசி' - நான் அடுத்து எழுத நெனைச்சிருக்குற கதை..!! ரொம்ப சிம்பிளான கதைதான்.. என்னோட எழுத்து மூலமா சுவாரசியமாக்க முடியும்ன்ற நம்பிக்கைல.. கைல எடுத்திருக்குறேன்..!! கதை தலைப்புலேயே ஓரளவு க்ளூ கொடுத்திருக்கேன்.. ஆரம்பத்துல சில ஜாலியான விஷயங்களும், போக போக சில காதல் உணர்வுகளையும் கதைல கலக்க நெனச்சிருக்கேன்..!! என்னோட எல்லா முயற்சிக்கும், அன்போட ஆதரவளிக்கும் நண்பர்கள்.. இந்தக்கதைக்கும் என்னோட துணை இருப்பாங்கன்னு நம்பி.. இந்த முயற்சில இறங்குறேன்..!! நன்றி..!! – ஸ்க்ரூட்ரைவர்



அத்தியாயம் 1

"உ..உங்க பேரே மறந்து போச்சு..!!" பிரமிட் நடராஜன் சாயலில் இருந்த பரந்தாமன் நெற்றியை தடவியவாறே சொன்னார்.

"அ..அசோக்..!!" அவருக்கு பதிலளித்த அசோக் அல்லு அர்ஜுன் சாயலில் இருந்தான்.

"ஆங்.. கரெக்ட் கரெக்ட்.. அசோக்..!! இப்போ ஞாபகம் வந்துடுச்சு..!! ஹாஹா.. வயசாயிடுச்சுல..??"

"ம்ம்..!! அதனால என்ன ஸார்..?? பரவால..!!"

"வந்து ரொம்ப நேரம் ஆச்சோ..??"

"இல்ல ஸார்.. ஒரு பத்து நிமிஷம் இருக்கும்.. அவ்வளவுதான்..!!"

"ம்ம்.. காஃபி, டீ ஏதும் சாப்பிடுறீங்களா..??" அவர் சம்பிரதாயமாக கேட்க,

"இ..இல்ல ஸார்.. பரவால..!!" அசோக் புன்னகையுடன் தவிர்த்தான்.

"வெயில்ல அலைஞ்சு வந்திருப்பீங்க போல.. கொஞ்சம் தண்ணியாவது குடிங்க..!!" அவர் கண்ணாடி தம்ளரில் இருந்த தண்ணீரை அசோக்கின் பக்கமாக நகர்த்தினார்.

"பரவால ஸார்.. இருக்கட்டும்..!!" அசோக் அதை தொட்டுக்கூட பார்க்காமல் சொன்னான்.

"ஹ்ம்ம்.. சொல்லுங்க தம்பி.. கிஷோர் தம்பி உங்களை பத்தி ஆஹா ஓஹோன்னு சொன்னாரு.. நானும் 'சரி அனுப்பி வைங்க.. பேசிப்பாக்குறேன்..'னு சொல்லிருந்தேன்..!!" அவருடைய பேச்சில் ஒரு அலட்சியம் தெரிந்தது. இருந்தாலும்,

"ரொம்ப தேங்க்ஸ் ஸார்.. எனக்காக உங்களோட டைம் ஒதுக்கித் தந்ததுக்கு..!!" அசோக் நிஜமான நன்றியுணர்வுடன் சொன்னான்.

"பரவால தம்பி..!! மொதல்ல.. உங்களை பத்தி கொஞ்சம் சொல்லுங்க..!!"


அவர் கேட்க, அசோக் இப்போது தனது கையிலிருந்த ஃபைலை டேபிள் மீது வைத்தான். சர்ர்ர்ரென ஜிப்பை இழுத்து ஃபைலை திறந்தான். உள்ளே இருந்த அந்த டிவிடி கேஸை வெளியே எடுத்தான். எதிரே இருந்தவரின் முன்பாக வைத்து, அதை அவர் பக்கமாய் நகர்த்தினான். பரந்தாமன் இப்போது சற்றே குழம்பிப்போனவராய், அந்த டிவிடி கேஸ் மீதிருந்து பார்வையை விலக்காமலே கேட்டார்.

"என்ன தம்பி இது..??"

"என் ரெஸ்யூமே ஸார்..!! நான் எடுத்த ஆட் ஃபில்ம்ஸ்.. ஷார்ட் ஃபில்ம்ஸ்.. டாகுமன்ட்ரிஸ்.. எல்லாம் இதுல காப்பி பண்ணிருக்கேன்..!! இதை பாத்தீங்கன்னா என்னைப் பத்தி உங்களுக்கு ஒரு ஐடியா கெடைக்கும்..!!"

"ஹாஹா.. எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி.. நீங்களே கொஞ்சம் உங்களை பத்தி சொல்லிடுங்க..!! என்ன பண்ணுனீங்க.. என்ன பண்ணிட்டு இருக்குறீங்க.. எப்படி போயிட்டு இருக்கு..??"

பரந்தாமன் அப்படி கேட்பார் என்று அசோக் எதிர்பார்க்கவில்லை. சற்றே தடுமாறினான். அவருக்கு பக்கவாட்டில் இருந்த கம்ப்யூட்டரை அமைதியாக ஒருமுறை பார்த்தான். 'நேரம் இல்லையா..?? அப்புறம் எதற்கு இதெல்லாம் இங்கு இருக்கிறது..??' என்பது போல இருந்தது அவனது பார்வை. பரந்தாமன் ஒரு கையை, அமர்ந்திருந்த சேரின் கைப்பிடியில் ஊன்றி இருந்தார். புறங்கையை இன்னொரு கையால் தடவிக்கொண்டே, ஒருபக்கமாய் தலையை சாய்த்து வைத்துக்கொண்டு, திறந்த வாயும் இடைவெளி விழுந்த பற்களுமாய் இவனையே பார்த்துக் கொண்டிருந்தார். அசோக் இப்போது மெல்ல ஆரம்பித்தான். தன்னைப் பற்றி கூறினான்.

"எ..என்னை பத்தி சொல்றதுக்கு பெருசா எதுவும் இல்ல ஸார்..!! பொறந்தது வளந்தது படிச்சதுலாம் சென்னைதான்..!! லயலால விஷுவல் கம்யூனிகேஷன் முடிச்சேன்.. காலேஜ்ல படிக்கிறப்போவே ஆட் ஃபில்ம் இண்டஸ்ட்ரி மேல ரொம்ப இன்ட்ரஸ்ட்..!! டிக்ரீ முடிச்சதும்.. சென்னை ஃபில்ம் ஸ்கூல்ல, சிக்ஸ் மன்த்ஸ் கோர்ஸ் அண்ட் ட்ரெயினிங் எடுத்துக்கிட்டேன்.. ஆட் ஃபில்ம் மேகிங் பத்தி..!! அப்புறம்.. நானும், என் கூட படிச்ச பிரண்ட்ஸ் கொஞ்ச பேரும் சேர்ந்து ஒரு அட்வர்டைசிங் கம்பனி ஆரம்பிச்சு, இப்போ நடத்திட்டு இருக்குறோம்.. கிஷோர் கூட அதுல ஒன் ஆஃப் தி பார்ட்னர்ஸ்..!!"

"ம்ம்ம்.. சொன்னாரு சொன்னாரு..!! உங்க ஆபீஸ் எங்க இருக்கு..??"

"வடபழனிதான் ஸார்.. ஆர்காட் டெரஸ்க்கு ஆப்போசிட்..!!"

"ஒ.. அப்போ ரொம்ப பக்கத்துலதான் இல்லையா..??"

" ஆமாம் ஸார்..!!"

"ம்ம்.. எந்த மாதிரி அட்வர்டைஸ்மண்ட்ஸ்லாம் பண்றீங்க..??"

"மெயினா ஆட் ஃபில்ம்ஸ்தான் ஸார்.. மோஸ்ட்லி டிவி கமர்ஷியல்ஸ்..!! இப்போ கொஞ்ச நாளா இன்டர்நெட் அட்வர்டைசிங்லயும் கான்சன்ட்ரெட் பண்ண ஆரம்பிச்சிருக்கோம்..!!"

"எப்படி.. எல்லாம் டைரெக்ட் டீலிங்தானா..??" அவர் கேட்டுவிட்டு அசோக்கையே கூர்மையாக பார்க்க, இப்போது அசோக் சற்றே தடுமாற்றமாய் நெளிந்தான்.

"இ..இல்ல ஸார்.. பாலாஜி அட்வர்டைசிங்கோட டை-அப் வச்சிருக்கோம்.. அவங்கட்ட இருந்து ப்ராஜக்ட் எடுத்து பண்றோம்.. அவங்க ப்ரொடக்ஷனுக்கு அப்பப்போ எங்க டீமை யூஸ் பண்ணிப்பாங்க..!!"

"ஆங்.. அப்படி சொல்லுங்க..!! ம்ம்ம்.. பரவால.. நல்லா புளியங்கொம்பாதான் புடிச்சிருக்கீங்க..!! பிஸினஸ் ஸ்டார்ட் பண்ணி எவ்வளவு நாளாச்சு..??"

"நாலு வருஷம் ஆச்சு ஸார்..!!"

"இப்போ என்ன திடீர்னு பிரச்சனை..??"

"எ..என்ன பிரச்சனைனா..?? பு..புரியல ஸார் ..!!"

"இல்ல.. பிசினஸ்ல ஏதும் ப்ராப்ளமான்னு கேட்டேன்..??"

"ஐயோ.. அதுலாம் ஒன்னும் இல்ல ஸார்..!! பிசினஸ்லாம் நல்லாத்தான் போயிட்டு இருக்கு.. ரொம்ப ஃபாஸ்ட் க்ரோத்னு சொல்ல முடியாட்டாலும்.. ஸ்டெடியா முன்னேறிட்டு இருக்கோம்..!!"

"அப்புறம் ஏன் சினி இண்டஸ்ட்ரிகுள்ள வர ஆசைப்படுறீங்க..??"

"அ..அது.. அது.."

"ம்ம்.. சொல்லுங்க தம்பி..!!"

"இ..இது.. இது எனக்கு ஒரு பேஷன் மாதிரி ஸார்.. இப்போ கொஞ்ச நாளாத்தான்.. ஒரு ஒன் இயராத்தான் இந்தமாதிரி பெரிய ஸ்க்ரீன் மேல எனக்கு ஆசை..!! மூவீஸ் டைரெக்ட் பண்ணனும்னு எனக்குள்ள ஒரு கனவு..!!"

"ஹாஹா.. கனவுதான..?? காண வேண்டியதுதான்..!! இப்போத்தான் ஆளாளுக்கு டைரெக்டர் ஆகணும்னு கனவு வந்துடுதே.. உங்களுக்கும் வந்ததுல ஒன்னும் தப்பு இல்ல.. ஹாஹா..!!"

சொல்லிவிட்டு அவர் சிரித்தார். அவர் சிரிப்பில் இருந்த கிண்டல் அசோக்கை சற்றே எரிச்சலுற செய்தது. ஆனாலும், அவர் புதுமுக இயக்குனர்களை வைத்து இரண்டு ஹிட் படங்கள் கொடுத்திருக்கிற தயாரிப்பாளர் என்ற நினைவு அசோக்கின் மனதை குறுக்கிட, எழுந்த எரிச்சலை மறைத்துக் கொண்டான்.

"தம்பி தப்பா எடுத்துக்க கூடாது.. நான் ஏன் சொல்றேன்னா.. எப்போவுமே இருக்குறதை விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட கூடாது..!!" சொல்லிவிட்டு அவர் பல்லிளித்தார்.

"இல்ல ஸார்.. இதை அப்படி சொல்ல முடியாது.. நான் ஒன்னும் தகுதி இல்லாம ஆசைப்படல.. பெரிய ஸ்க்ரீன்ல கண்டிப்பா ஜெயிக்கமுடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு..!! உண்மையை சொல்லப்போனா.. ஒன் இயர் முன்னாடி வரை எனக்கு சினி இண்டஸ்ட்ரி மேல எந்த ஈடுபாடும் இல்லாமத்தான் இருந்தது..!!"

"ஓ.. அப்புறம் எப்படி திடீர்னு..??"

"ஆக்சுவலா.. ஒன் இயர் முன்னாடி.. எங்க க்ளையன்ட் ஒருத்தருக்காக நான் ஒரு கான்சப்ட் சொன்னேன்.. அதை அவங்க ரிஜக்ட் பண்ணிட்டாங்க.. இருந்தாலும் எனக்கு அந்த கான்சப்ட் பிடிச்சிருந்ததால.. ஒரு செல்ஃப் இன்ட்ரஸ்ட்ல, அந்த கான்சப்டை ஷார்ட் ஃபில்மா ஷூட் பண்ணிணேன்.. யூட்யூப்ல அப்லோட் பண்ணினேன்.. நெறைய பேர் நல்லாருக்குன்னு சொன்னாங்க.. அதுல இருந்துதான் எனக்கு மூவிஸ் மேல இன்ட்ரஸ்ட் வர ஆரம்பிச்சது..!! அதுக்கப்புறம் நானே நெறைய கான்சப்ட்ஸ் யோசிக்க ஆரம்பிச்சேன்.. அப்பப்போ அதை ஷார்ட் ஃபில்ம்ஸா எடுத்து யூட்யூப்ல அப்லோட் பண்ணுவேன்.. எல்லாத்துக்குமே செம ரெஸ்பான்ஸ்..!! இதுவரை அஞ்சு ஷார்ட் ஃபில்ம்ஸ் எடுத்திருக்குறேன்.. அந்த ஷார்ட் ஃபில்ம்ஸ்லாம் பாத்தீங்கன்னா, என்னோட கனவுல ஒரு நியாயம் இருக்குன்னு உங்களுக்கே புரியும்..!! ப்ளீஸ் ஸார்.. ஒரு அஞ்சு நிமிஷம்.. அந்த டிவிடி கொஞ்சம் பாருங்களேன்..!!" அசோக்கின் குரலில் மெலிதான கெஞ்சல் ஒளிந்திருந்தது.

"ஹாஹா.. இதைப்பாத்து நான் என்ன தம்பி பண்ணப் போறேன்..?? என்னை பொறுத்தவரை ஷார்ட் ஃபில்ம்ஸ் வேற.. சினிமா வேற..!! எனக்கு இந்த பாஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ், ராசியான ஆர்டிஸ்ட், இமேஜ், பொடலங்கா, கத்தரிக்கா.. இதுலலாம் நம்பிக்கை இல்ல தம்பி..!! நான் அறிமுகப்படுத்தின ரெண்டு டைரக்டரும் புதுப்பசங்கதான்.. உங்கள மாதிரி சினிமால எந்த அனுபவும் இல்லாதவங்கதான்..!!"

"ம்ம்.. தெரியும் ஸார்.. அதான் நானும் ஒரு நம்பிக்கையோட வந்திருக்கேன்..!!"

"எனக்கு சப்ஜக்ட்தான் தம்பி முக்கியம்.. எந்த மாதிரி ஸ்டோரி வச்சிருக்கீங்க, எந்த மாதிரி புதுபுது ஐடியாஸ் வச்சிருக்கீங்க.. அதுதான் எனக்கு முக்கியம்..!! டெக்னாலாஜி பத்தி நீங்க ஒன்னும் வொர்ரி பண்ணிக்க தேவை இல்ல.. அதுக்கெல்லாம் ஆள் வச்சுக்கலாம்..!! சப்ஜக்ட் பத்தி சொல்லுங்க தம்பி.. நீங்க சொல்ற ஸ்டோரி எனக்கு பிடிச்சிருந்தா.. கண்டிப்பா உங்களை வச்சு படம் எடுக்குறேன்..!!"

பரந்தாமன் அப்படி சொன்னதும், கொஞ்ச நேரமாக தளர்ந்து போயிருந்த அசோக் இப்போது மீண்டும் உற்சாகமானான். முதுகில் யாரோ குத்தியது மாதிரி நிமிர்ந்து அமர்ந்தான். லேசாக தொண்டையை செருமிக்கொண்டு, கொஞ்சமாய் எச்சில் கூட்டி விழுங்கிக்கொண்டு, மெல்ல ஆரம்பித்தான்.

"இ..இது.. இது ஒரு ஹாரர் த்ரில்லர் சப்ஜக்ட் ஸார்..!! ஒரு மலையடிவாரத்துல இருக்குற கிராமத்துல நடக்குற மாதிரிதான் இந்தக்கதையை நான் யோசிச்சு வச்சிருக்கேன்..!! ஒரு ரெய்னி ஸீசன்ல.. சுத்தி பச்சை பசேல்னு மரமும், செடியுமா.. எந்த நேரமும் மழையும், இடியுமா.. ஒரு அழகான, அமானுஷ்யமான பேக்ட்ராப்ல.. அடுத்தடுத்து சில கோரமான சாவுகள் நடக்குது.. அந்த சாவுகளுக்கு பின்னாடி இருக்குற ஷாக்கிங் மிஸ்ட்ரியை சொல்றதுதான் இந்தக்கதை..!! தங்களோட பூர்வீக பங்களாவை விக்கிறதுக்காக, அந்த கிராமத்துக்கு வர்ற ஹீரோ அண்ட் ஹீரோயினோட வியூலதான் மொத்த கதையும் நகருது.. ஒரு ஸ்டேஜ்ல, அங்க நடக்குற மர்மமான சம்பவங்களுக்கும் தங்களுக்கும் ஒரு லிங்க் இருக்குன்னு.. அவங்களுக்கு தெரியவருது.. உண்மை என்னன்னு கண்டுபிடிக்க ரெண்டு பேரும் ட்ரை பண்றாங்க..!! அந்த உண்மை என்ன.. அதை எப்படி கண்டுபிடிச்சாங்க.. அதுக்கப்புறம் அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு சொல்றதுதான் மீதி கதை..!!"

கதைச்சுருக்கத்தை முதலில் சொல்லி அவரை தயார் படுத்தி விட்டதாக எண்ணிய அசோக், அடுத்து ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு காட்சியாக அவருக்கு நெரேட் செய்ய நினைத்தான். முதல் காட்சியை அவனுடைய மனக்கண்ணில் நிறுத்தி, அதை அவருக்கு உரைக்க முற்பட்டான்.

"படம் ஆரம்பிக்கிறப்போவே ரொம்ப த்ரில்லிங்கா ஷாக்கிங்கா ஆரம்பிக்கிறோம் ஸார்.. ஃபர்ஸ்ட் ஸீன்லயே.." அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அவனை இடைமறித்து,

"அந்த கொலைலாம் பண்றது யார் தம்பி..??" என்று பரந்தாமன் அசால்டாக கேட்டார். அவர் அப்படி கேட்டதும் ஓரிரு வினாடிகள் அவரையே திகைப்பாக பார்த்த அசோக், அப்புறம்

"இ..இருங்க ஸார்.. நான் ஒவ்வொரு ஸீனா சொல்றேன்.. அப்போத்தான் நல்லாருக்கும்.. இப்போவே க்ளைமாக்ஸை சொல்லிட்டா உங்களுக்கு சுவாரசியம் போய்டும்..!!" என்று பரிதாபமாக சொன்னான்.

"ஹாரர்னா..?? எந்த மாதிரி ஹாரர் தம்பி..??" அவர் கேள்வியை மாற்றினார்.

"சூப்பர் நேச்சுரல் ஹாரர்..!!" அசோக் கெத்தாக சொல்ல,

"ஹ்ஹ.. பேய்ப்படமா..??" அவர் கேலியாக கேட்டார்.

"ஆமாம் ஸார்..!!"

"அப்போ.. பேய்தான் இந்தக்கொலைலாம் பண்ணுதா..??"

"ஆ..ஆமாம் ஸார்..!!"

'கதை சொல்கிற சுவாரசியத்தையே இந்த ஆள் காலி செய்துவிட்டாரே' என்று நொந்துபோன குரலில் சொன்னான் அசோக். அவரோ தனது கனத்த சரீரம் குலுங்கும் அளவிற்கு 'ஹாஹா..' என்று கனைத்தார். கிண்டல் தொனிக்கும் குரலில் சொன்னார்.

"என்ன தம்பி நீங்க.. நான் உங்ககிட்ட இருந்து என்னன்னவோ எதிர்பார்த்தேன்.. நீங்க என்னடான்னா.. பேய், பூதம், ரத்தக்காட்டேரின்னு சப்புன்னு முடிச்சுட்டீங்க..??" அவர் சொன்னதைக்கேட்டு சற்றே அதிர்ந்த அசோக்,

"ஸார்.. நீங்க ஒரு தடவை கதையை முழுசா கேளுங்க ஸார்.. அப்புறம் சொல்லுங்க.!!" என்று அவசரமாக சொன்னான்.


"அவுட்லைனே புடிக்கலன்றேன்.. அப்புறம் கதையை கேட்டு என்ன ஆகப்போகுது தம்பி..?? வேற ஏதாவது ஸ்டோரி இருந்தா சொல்லுங்க..!!"

"வே..வேறன்னா.."

"வேறன்னா வேறதான்..!! வேற ஏதும் ஸ்டோரி உங்கட்ட இல்லையா..??"

"இ..இருக்கு.. ஆனா.." அசோக் இழுக்க,

"அதுவும் பேய் ஸ்டோரியா..??"

"ஆ..ஆமாம்..!!"

"ஹ்ம்ம்... இன்னொரு பேய்.. இன்னொரு பத்து பதினஞ்சு பேரை கொல்லுதா..??"

"ம்ம்..!!"

"இது எந்த பேக்ட்ராப்ல..?? நல்லா பளீர்னு வெயில் கொளுத்துற பாலைவனத்துலையா..??" இப்போது அவரது குரலில் நக்கல் மிதமிஞ்சி போயிருந்தது.

"இ..இல்ல ஸார்.. அது வேற மாதிரி தீம்..!!"

"அட போங்க தம்பி..!!" அவர் சலித்துக்கொண்டார்.

"ஸார்.. எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க.. நான் ஸ்டோரியை முழுசா சொல்றேன்.. இந்த ஸ்டோரி கண்டிப்பா வொர்க்கவுட் ஆகும் ஸார்.. படம் பாக்க வர்றவங்கள எப்படிலாம் பயமுறுத்தலாம்னு.. நான் புது புது ஐடியாஸ் வச்சிருக்கேன் ஸார்.. மக்கள் அதெல்லாம் கண்டிப்பா ரசிப்பாங்க..!!"

"ஹாஹா.. மக்கள் இந்த மாதிரி கதைலாம் ரசிக்க மாட்டாங்க தம்பி.. நான் இருபத்திரண்டு வருஷமா இந்த ஃபீல்ட்ல இருக்கேன்.. மக்களோட ரசனையை பத்தி எனக்கு நல்லா தெரியும்..!! வேற ஏதாவது நல்ல ஸ்டோரி இருந்தா சொல்லுங்க..!!" அவர் பேசிய விதத்தில் அசோக் மிகவும் சோர்ந்து போனான்.

"ஓ..!! நல்ல ஸ்டோரினா.. எப்படி..??" என்று சுரத்தில்லாமல் கேட்டான்.

"ஏதாவது லவ் ஸ்டோரி தம்பி..!!"

அவ்வளவுதான்..!! அந்த 'லவ்' என்ற வார்த்தையை கேட்டதுமே அசோக்குக்கு ரத்த அழுத்தம் குபுக்கென எகிற ஆரம்பித்தது. அவன் முகத்தில் தெரிந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் இப்போது சட்டென வடிந்து போனது. ஒற்றை விரலால் நெற்றியை தேய்த்தவாறே, எதிரே இருந்தவரை எரிச்சலாக பார்த்தான். அவ்வளவு நேரம் பரந்தாமனிடம் இருந்த ஒரு அலட்சிய மனோபாவம், இப்போது அசோக்கையும் தொற்றிக் கொண்டது. இப்போது சற்றே கிண்டலான குரலில் கேட்டான்.

"ஓ.. லவ் ஸ்டோரிதான், உங்க பாஷைல நல்ல ஸ்டோரியா..??"

"என்ன தம்பி தெரியாத மாதிரி கேக்குறீங்க.. தியாகராஜ பாகவதர் காலத்துல இருந்தே.. அதுதான எவர்க்ரீன் ஹிட் ஃபார்முலா.. அதைத்தான மக்கள் ரசிக்கிறாங்க..??"

"அப்படிலாம் ஒன்னும் இல்ல ஸார்.. ஸ்டோரியும், சொல்ற விதமும் நல்லா இருந்தா போதும்.. எந்த மாதிரி ஸ்டோரியா இருந்தாலும் மக்கள் ரசிப்பாங்க..!! இப்போ பிஸ்ஸானு ஒரு படம் வந்து பிச்சுக்கிட்டு ஓடுது.. பாத்திங்கல்ல..??"

"ஹாஹா.. நான் அப்படிலாம் புதுமுயற்சி பண்ணி ரிஸ்க் எடுக்க ரெடியா இல்ல தம்பி..!! என்னோட படங்கள் எப்போதும் மெல்லிய காதல் உணர்வுகளை சொல்ற படமாத்தான் இருக்கும்.. நான் ஏற்கனவே எடுத்தது ரெண்டும் லவ் ஸ்டோரிதான்.. இனிமே எடுக்க போறதும் லவ் ஸ்டோரிதான்..!! அலைபாயுதே, துள்ளுவதோ இளமை மாதிரி.. ஃப்ரெஷா, யூத்ஃபுல்லா ஒரு ஸ்டோரி இருந்தா சொல்லுங்க.. இப்போவே அக்ரீமன்ட் போட்டுக்கலாம்..!!"

"ஓ..!! பெத்தவங்களையும், டீச்சர்சையும் எப்படிலாம் ஏமாத்தலாம்னு கத்துக்குடுக்குற மாதிரி படம் எடுக்க சொல்றீங்க..?? அப்படியா..??"

"ஹாஹா.. என்ன தம்பி நீங்க.. அதெல்லாம் பாத்தா சினிமாவே எடுக்க முடியாது.. அப்படிப்பாத்தா.. நீங்க சொன்ன பேய்க்கதை மட்டும் என்ன ஒழுங்கா..?? பேயை நேர்ல பாத்திருக்கீங்களா நீங்க..??"

"இல்ல..!!"

"அப்புறம்.. அது மக்களுக்கு மூட நம்பிக்கையை வளக்குற மாதிரிதான..??"

"காதல்ன்ற பேர்ல ஆடியன்ஸ் அறியாமலே அவங்க மனசுல விஷத்தை கலக்குறதுக்கு.. கற்பனைன்ற பேர்ல நேர்மையா அவங்களை கொஞ்ச நேரம் பயமுறுத்துறது ஒன்னும் தப்பு இல்ல ஸார்..!!"

"அட.. காதல்னு அழகான ஒரு விஷயம் இருக்குறப்போ.. பேய் பூதம்னு எதுக்கு தம்பி படம் பாக்க வர்றவங்கள பயமுறுத்தனும்..?? நீங்க ஒன்னு பண்ணுங்க.."

"என்ன..??"

"கொஞ்ச நாள் டைம் எடுத்துக்கங்க.. ஒரு நல்ல லவ் ஸ்டோரி ரெடி பண்ணிட்டு வந்து என்னை பாருங்க.. சரியா.??"

"இல்ல ஸார்.. எனக்கு லவ் ஸ்டோரிஸ்ல இன்ட்ரஸ்ட் இல்ல.. கண்டிப்பா நான் லவ் ஸ்டோரிலாம் எழுத மாட்டேன்..!!"

"ஹாஹா.. உங்களை மாதிரி ஒரு யங்க்ஸ்டர்.. காதல் பிடிக்காதுன்னு சொல்றது ஆச்சரியமா இருக்கு தம்பி..!!"

"காதல் பிடிக்காதுன்னு சொல்லல ஸார்.. காதல் கதைகள்தான் பிடிக்காதுன்னு சொன்னேன்..!!"

"ரெண்டும் ஒண்ணுதான் தம்பி..!! நீங்க யாரையாவது காதலிச்சிருந்தா.. காதல்க்கதைகள் மேலயும் உங்களுக்கு ஆர்வம் வந்திருக்கும்.. நீங்க பேசுறதை வச்சே எனக்கு புரிஞ்சு போச்சு.. உங்களுக்கு எதுவும் மாட்டலைன்னு..!! நான் நெனைச்சது சரியா..??"

நக்கலாக சொன்ன பரந்தாமன் தனது தலையை சற்றே தாழ்த்தி அசோக்கை கூர்மையாக பார்த்தார். அசோக்கிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போக, அவரே வெற்றிக்கனைப்புடன் தொடர்ந்தார்.

"ஹாஹஹா..!! போங்க தம்பி.. பேய், பிசாசுன்னு ஏதாவது கதை எழுதுறதை விட்டுட்டு.. போய் யாரையாவது லவ் பண்ணுங்க.. போங்க..!!"

பரந்தாமன் சொல்லிவிட்டு சிரிக்க, அசோக் அவரையே சில வினாடிகள் முறைப்பாக பார்த்தான். அவர் பேச்சில் இருந்த கிண்டல் அவனுக்கு எக்கச்சக்கமாய் எரிச்சலை உண்டுபண்ணியிருந்தது. அவருடன் அதற்கு மேலும் விவாதம் செய்ய விரும்பாதவனாய் கேட்டான்.

"அப்போ.. ஃபைனலா என்னதான் ஸார் சொல்றீங்க ..??"

"இன்னுமா உங்களுக்கு புரியல..?? சரி.. தெளிவாவே சொல்லிர்றேன்.. நான் உங்களை மாதிரி இல்ல தம்பி.. எனக்கு காதல் பிடிக்கும்.. காதல்கதைகளையும் பிடிக்கும்.. காதலை மையமா வச்சு உருவாக்குற கதைகளைத்தான் நான் ப்ரொட்யூஸ் பண்ணுவேன்.. என்னோட கொள்கைல இருந்து நான் எப்போதும் மாறுறதா இல்ல..!! நல்ல காதல்க்கதை இருந்தா மறுபடி என்னை வந்து பாருங்க.. இல்லனா வராதீங்க.. இப்போ இடத்தை காலி பண்ணுங்க...!!"

சொல்லி முடித்து அமைதியான பரந்தாமன், அசோக்கின் முகத்தையே குறுகுறுவென பார்த்தார். அவருடைய உதட்டில் ஒருவித விஷமப் புன்னகை வழிந்தது. அசோக் என்ன செய்வது என்று அறியாதவனாய், ஏமாற்றமும் எரிச்சலும் மிகுந்த மனதுடன், அசையாமல் அமர்ந்திருந்தான். அப்போதுதான் அவன் பார்வை, எதிரே இருந்தவரின் முதுகுக்கு பின்னால் இருந்த அந்த ஷோ கேஸில் எதேச்சையாக விழுந்தது. அதன் மேல் வைக்கப்பட்டிருந்த அந்த பெரிய சைஸ் புகைப்படத்தின் மீதும்..!! உடனே அவனுடைய எரிச்சலடைந்திருந்த மூளை சுறுசுறுப்பாய் எதையோ யோசிக்க ஆரம்பித்தது..!! ஒரு சில வினாடிகளிலேயே ஒரு முடிவுக்கு வந்தான். உதட்டுக்கு அவசரமாய் ஒரு புன்னகையை கொடுத்தவாறே அவரை ஏறிட்டான். குரலில் ஒருவித குறுகுறுப்புடன் கேட்டான்.

"அப்போ.. உங்களுக்கு காதல்க்கதைகளையும் பிடிக்கும், காதலையும் பிடிக்கும்.. அப்படித்தான ஸார்..??"

"ஆமாம்.. இவ்ளோ நேரம் அதைத்தான சொல்லிட்டு இருந்தேன்..??"

"பேச்சு மாற மாட்டீங்களே..??" அசோக் அவ்வாறு குதர்க்கமாய் கேட்கவும்,

"இ..இதுல பேச்சு மாற என்ன இருக்கு..??" அவர் இப்போது குழப்பமாய் இவனை பார்த்தார்.

"ஸாரி ஸார்.. என்னை மன்னிச்சுடுங்க..!!"

"மன்னிக்கனுமா.?? எதுக்கு..??"

"இவ்வளவு நேரம் உங்ககிட்ட டைரக்டர் சான்ஸ் கேட்டு வந்தவன் மாதிரி நடிச்சதுக்கு..!!"

"ந..நடிச்சியா..?? எ..என்ன சொல்ற நீ..??" அவர் பதட்டத்தில் பட்டென ஒருமைக்கு தாவினார்.

"ஆமாம் ஸார்.. உங்களோட மனநிலைமையை பத்தி தெரிஞ்சுக்கத்தான் இவ்ளோ நேரம் நடிச்சுட்டு இருந்தேன்.. ஆக்சுவலா கிஷோர்ட்ட சொல்லி உங்க அப்பாயின்ட்மன்ட் வாங்கினது.. உங்ககிட்ட கதை சொல்றதுக்காக இல்ல..!!"

"அ..அப்புறம்..??" அவர் இப்போது குழப்பத்தின் உச்சிக்கே சென்றிருந்தார்.

"நா..நானும்.."

"நீயும்..??"

"உ..உங்க மகளும்.."

"என் மகளும்..????" பரந்தாமனின் முகம் பதட்டத்தில் துடித்தது.

"நானும் உங்க மகளும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றோம் ஸார்.. ரெண்டு பேரும், ரெண்டு வருஷமா உயிருக்கு உயிரா காதலிக்கிறோம்..!! நீங்கதான்.. ஸ்டேட்டஸ்லாம் பாக்காம.. எங்களுக்கு கல்யாணம் செஞ்சு வச்சு.. எங்க காதலை.."

அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, பரந்தாமன் உச்சபட்ச டென்ஷனை அடைந்திருந்தார். அமர்ந்திருந்த சேரில் இருந்து விருட்டென எழுந்தார். 'டேய்ய்ய்..!!!' என்று கத்தியவாறு, அசோக்கின் சட்டையை எட்டி கொத்தாக பிடித்து இழுத்தார். அவருடைய முகம் இப்போது திடீர் ஆத்திரத்தை பூசிக்கொண்டு கோரமாக மாறியிருந்தது. காண சகிக்கவில்லை..!! 'பேயை நேர்ல பாத்திருக்கீங்களா நீங்க..??' என்று சற்றுமுன் அவர் கேட்ட கேள்விக்கு, இப்போது பதில் சொல்ல வேண்டும் போலிருந்தது அசோக்கிற்கு..!! அவன் சொல்வதற்கு முன்பாகவே, பரந்தாமன் ஆத்திரத்தில் படபடவென பொரிந்தார்.

"ஏண்டா... எ..என்ன நெஞ்சழுத்தம் உனக்கு.. எவ்வளவு தைரியம் இருந்தா.. என் ஆபீசுக்கே வந்து.. என்கிட்டயே.. என் பொண்ணை லவ் பண்றேன்னு சொல்லுவ..?? உ..உன்னை என்ன பண்றேன் பாரு.. என்ன பண்றேன் பாரு இப்போ..!!" என்று கறுவியவர், அசோக்கின் சட்டையை பிடித்த பிடியை விடாமல், இன்னொரு கையால் டேபிள் ஓரத்தில் இருந்த தனது செல்போனை எட்டி எடுத்தார்.

"ஸார்.. நீங்கதான ஸார் காதல் ஒரு அழகான விஷயம்னு சொன்னீங்க..?? இப்போ திடீர்னு டென்ஷன் ஆகுறீங்க..?? ப்ளீஸ் ஸார்.. எங்க காதலை பிரிச்சிடாதீங்க..!!"

அசோக் கிண்டலாக சொன்னதை கண்டுகொள்ளாத பரந்தாமன், கையிலெடுத்த செல்போனின் பட்டன்களை, பதற்றத்தில் நடுங்கிய விரல்களால் படபடவீன அழுத்தினார். கோபத்தில் வெடவெடத்த உதடுகளுடன் முணுமுணுத்தார்.

"எனக்கு தெரியும்.. எனக்கு முன்னாடியே தெரியும்.. அந்த திருட்டு சிறுக்கி என்னைக்காவது ஒருநாளு.. இந்த மாதிரி எவனையாவது இழுத்துட்டு வருவான்னு.. அவளை.."

அவர் அந்த மாதிரி முணுமுணுத்ததுந்தான் அவர் தன் மகளுக்கு கால் செய்கிறார் என்று அசோக் புரிந்து கொண்டான். உடனே அவர் கையிலிருந்த செல்போனை பிடுங்கி அவரை தடுத்தான்.

"ஸார் ஸார்.. இருங்க ஸார்.. அவசரப்படாதீங்க.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க..!!"

"எதைடா பொறுமையா கேக்க சொல்ற.. நீயும் என் பொண்ணும் டாவடிச்ச கதையை.. பொறுமையா உக்காந்து கேட்டுட்டு இருக்க சொல்றியா..??"

"ஹையோ.. நான் சும்மா சொன்னேன் ஸார்.. எங்களுக்குள்ள எந்த லவ்வும் இல்ல.. உங்க பொண்ணை நான் பாத்தது கூட கெடயாது.. அவங்க பேர் கூட எனக்கு தெரியாது..!!"

அசோக் அவ்வாறு சொன்னதும், பரந்தாமன் பட்டென முகம் மாறினார். அவர் முகத்தில் கொப்பளித்த கோபம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து, குழப்பம் நிரம்பியது.

"ஏ..ஏய்.. எதுக்குடா பொய் சொன்ன..??"

"மொதல்ல நீங்க உக்காருங்க ஸார்..!!"

அசோக் அவரை சேரில் அமர வைத்தான். அவருடைய உடல் இன்னும் அதிர்வில் இருந்து மீளாமல் நடுங்கிக் கொண்டிருந்தது. அசோக்கையே எரித்துவிடுவதுபோல் ஆத்திரமாக பார்த்துக் கொண்டிருந்தார்.

"டென்ஷன் ஆகாதீங்க ஸார்.. ரிலாக்ஸ்..!! இந்தாங்க.. இந்த தண்ணியை கொஞ்சம் குடிங்க..!!"

சற்றுன் அவர் தன் பக்கமாக நகர்த்தி வைத்த தண்ணீர் க்ளாஸை, இப்போது அசோக் அவர் பக்கமாக நகர்த்தி வைத்தான். அவரும் அதை எடுத்து மொத்த தண்ணீரையும் கடகடவென தன் தொண்டைக்குள் சரித்துக் கொண்டார். தண்ணீர் குடித்த பின்பும் அவரது கொதிப்பு அடங்கியது மாதிரி தெரியவில்லை. 'தஸ்.. புஸ்..' என்று பெரிது பெரிதாக மூச்சு விட்டார். மார்பு சரக் சரக்கென ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. அசோக் அவனது நடிப்பை மேலும் கொஞ்ச நேரம் தொடர்ந்திருந்தால், மாரடைப்பில் போய் சேர்ந்திருப்பார் போல் தெரிந்தது. அந்த மாதிரி திணறல் மூச்சு விட்டுக்கொண்டே அசோக்கைப் பார்த்து கேட்டார்.

"சொ..சொல்லுடா.. ஏன் பொய் சொன்ன..??"

"ஒண்ணுல்ல ஸார்.. சும்மா.. ஒரு உண்மையை கன்ஃபார்ம் பண்ணிக்கலாமேன்னுதான்..!!"

"என்ன உண்மையை..??" அவர் குழப்பமாக கேட்க, இப்போது அசோக் புன்னகையுடன் சொன்னான்.

"உங்களுக்குலாம் கதைலயும், சினிமாலயும்தான் 'காதல் அழகான விஷயம்'..!! இல்ல..?? அதே உங்க குடும்பத்துல நடந்தா.. அசிங்கம்..!! ஏத்துக்க மாட்டிங்க..!! ஆனா.. எவனோ லவ் பண்ணி, எப்படியோ நாசமா போகட்டும்னு.. படம் மட்டும் வரிசையா எடுத்து ரிலீஸ் பண்ணிடுவீங்க..!! காதலை வச்சு.. நல்லா காசு பாத்து.. அதை மட்டும் பேங்க்ல போட்டு வச்சுப்பிங்க.. ஆனா அந்த காதலை மட்டும் உங்க வீட்டுக்குள்ள விட மாட்டீங்க..!! அப்படித்தான ஸார்..?? சூப்பர் ஸார்.. உங்க கொள்கையை நெனச்சா எனக்கு அப்படியே புல்லரிக்குது..!!"

அசோக் பேசிய பேச்சில் இருந்த உண்மை பரந்தாமனின் முகத்தை அறைய, அவர் பதில் பேச நாவெழாமல் அமைதியாக அமர்ந்திருந்தார். ஏதோ ஜென்ம விரோதியை பார்ப்பதுபோல, அவனையே முறைத்துக் கொண்டிருந்தார். அசோக் உதட்டில் இருந்த புன்னகை மாறாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். பரந்தாமன் அதற்குமேலும் அந்த சூழ்நிலையை விரும்பாதவராய் வெறுப்புடன் சொன்னார். இல்லை.. கத்தினார்..!!

"டேய்.. வெளில போடா..!!"

"போறேன் ஸார்.. இதுக்கப்புறமும் உங்ககிட்ட பேசிட்டு இருக்க எனக்கு என்ன கிறுக்கா புடிச்சிருக்கு..?? வந்ததும் உங்க டைம் எனக்கு செலவு பண்ணினதுக்காக தேங்க்ஸ் சொன்னேன்.. இப்போ.. உங்ககிட்ட பேசி என் டயத்தை வேஸ்ட் பண்ணினதை நெனச்சு.. ரொம்ப ஃபீல் பண்றேன்..!! வர்ட்டா..!!"

ஸ்டைலாக சொன்ன அசோக், அவர் முன்பாக இருந்த டிவிடி கேசை எடுத்துக்கொண்டு, கிளம்பினான். அறையை விட்டு வெளியேறினான். அவன் கண்ணில் இருந்து மறையும் வரை பரந்தாமன் அவனது முதுகையே வெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்த பில்டிங்கை விட்டு வெளியே வந்த அசோக், உடனடியாய் செய்த காரியம்.. தன் செல்போன் எடுத்து கிஷோருக்கு கால் செய்ததுதான்..!! அடுத்த முனையில் கால் பிக்கப் செய்யப்பட்டதுமே, அசோக் அதற்காகத்தான் காத்திருந்தவன் போல, கன்னாபின்னாவென்று திட்ட ஆரம்பித்தான்..!!

"பன்னாடை.. பரதேசி.. தெருப்பொறுக்கி.. பிச்சைக்கார நாயே..!!"

"டேய்.. டேய்.. என்னடா ஆச்சு.. ஏண்டா திட்டுற..??"

"வெண்ணை.. புண்ணாக்கு.. மொள்ளமாரி.. தெள்ளவாரி..!!"

என்னவென்று புரியாமல் அந்தப்பக்கம் கிஷோர் கதறிக் கொண்டிருக்க. அதை பொருட்படுத்தாமல் இந்தப்பக்கம் அசோக், கெட்ட வார்த்தைகளை சரமாரியாக சிதறிக் கொண்டிருந்தான்.



அத்தியாயம் 2

Creative Ad Labs - அசோக்கும் அவன் நண்பர்களும் சேர்ந்து ஆரம்பித்த அட்வர்டைசிங் கம்பனியின் பெயர் அதுதான்..!! ஆபீஸுக்கு வெளியே 'இது ஒரு விளம்பர கம்பனி' என்று விளம்பரம் செய்வதற்காக வைக்கப்பட்டிருக்கும் பலகையே.. வண்ணம் இழந்து.. பிளைவுட் விரிசல் விட்டுப்போய்.. சற்றே சிதிலமடைந்து.. சாய்வாக தொங்கிக் கொண்டிருப்பதிலேயே.. அந்த கம்பனியின் லாபகரம் பற்றிய உண்மை நிலவரம் புரியும்..!!

அலுவலகத்தின் மொத்த பரப்பளவே ஆயிரம் சதுர அடிதான்..!! மொத்தம் மூன்றே அறைகள்..!! ஒரு பெரிய சைஸ் அறையில்.. சுவற்றில் அறையப்பட்ட இரண்டு மெகா ஸ்க்ரீன்கள்.. அதன் முன்புறமாக அமைந்திருக்கும் மேஜையில்.. அந்த ஸ்க்ரீன்களுடன் இணைக்கப்பட்ட வீடியோ எடிட்டிங் சிஸ்டம்.. ஆடியோ மிக்சிங், எடிட்டிங் கருவிகள்.. பக்கவாட்டில் இரண்டு ராட்சத ஸ்பீக்கர்கள்.. மேஜை முன்பாக நான்கைந்து நாற்காலிகள்.. அலுவலகத்தில் முக்கியமான அறையே அதுதான்..!! அதில்லாமல் அசோக்கும் அவன் நண்பர்களும் அமர்ந்து பிசினஸ் (?????) பேசிக்கொள்ள வசதியாக ஒரு அறை..!! அதை ஒட்டி.. கேமரா, கேபிள்கள், லைட்ஸ் போன்ற உபகரணங்களை அடைத்து வைத்துக்கொள்ள ஒரு அறை.. அவ்வளவே..!! கொஞ்சம் உற்றுக் கவனித்தால், சுவற்றின் ஓரமாய் நசுக்கப்பட்ட சிகரெட் துண்டுகளை காண நேரிடும்.. குப்பைக்கூடையை கிளறினால், காலியான ஓல்ட் மங் பாட்டிலையும், கடலை வறுவல் கவரையும், கண்டுபிடிக்க இயலும்..!!

அசோக்கையும் கிஷோரையும் தவிர, பிசினஸில் பணம் போட்ட இன்னும் இரண்டு நண்பர்கள்.. சாலமனும், வேணுவும்..!! நான்கு பேருக்கும் சென்னைதான் சொந்த ஊர். கல்லூரி படிக்கையிலேதான் நட்பாகி நெருக்கமானார்கள். சாலமனும், வேணுவும் விஷுவல் எஃபக்ட்ஸ், ஆடியோ மிக்சிங் மாதிரியான டெக்னிகல் வேலையில் பிஸ்து காட்டுவார்கள். கிஷோருக்கு ஒளிப்பதிவில் ஆர்வம். அசோக்குக்கு கான்சப்ட் டெவலப் செய்வது மாதிரியான கிரியேட்டிவ் வேலையும், ப்ரொடக்ஷன் கண்ட்ரோல் மாதிரியான மேனேஜ்மன்ட் வேலையும்..!!

கிஷோர் மட்டும் கொஞ்சம் வித்தியாசமானவன்.. பிசினஸ் தவிர.. ஒரு முன்னணி திரைப்பட ஒளிப்பாதிவாளரிடம் அசிஸ்டண்டாக பகுதி நேர பணி புரிகிறான்.. சினி இண்டஸ்ட்ரியில் சில காண்டாக்டுகள் அவனுக்கு உண்டு.. அந்த மாதிரி ஒரு காண்டாக்ட்தான் அந்த பரந்தாமன்..!! இவர்கள் நான்கு பேரை தவிர.. இவர்கள் கம்பனி இருக்கும் லட்சணத்தில், இவர்களுக்கு உதவிக்கென இரண்டு பேரை சம்பளம் கொடுத்து வேலைக்கு வேறு வைத்திருக்கிறார்கள்..!!

அசோக்கின் நண்பர்கள் மூன்று பேரும், வெவ்வேறு வித குடும்ப சூழல், வெவ்வேறு வித குணநலன்கள் கொண்டவர்கள்.. இருந்தாலும் அவர்கள் மூன்று பேருக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை.. அசோக்கை தனியாக பிரித்துக்காட்டும் வேற்றுமை.. காதல்..!! அசோக்கை தவிர மற்ற மூவருமே காதலில் விழுந்து.. உருண்டு.. புரண்டு கொண்டிருப்பவர்கள்..!!

பரந்தாமனிடம் பிசினஸ் பற்றி அசோக் கூறுகையில், நிறைய விஷயங்கள் மிக நாசுக்காக, நகாசுப்பூச்சொடு சொன்னான். உண்மை நிலை சற்று பரிதாபகரமானது. 'என்னை பத்தி சொல்றதுக்கு பெருசா ஒன்னும் இல்லை..' என்று சொன்னான் அல்லவா..?? அவர்கள் பெரிதாக சாதிப்பதற்கு வாய்ப்பு எதையும் இந்த விளம்பர உலகம் வழங்கவில்லை என்பதுதான் நிஜம்..!! 'லக்ஸ்.. லிரில்.. கேட்பரிஸ்.. சன்ரைஸ்.. கோல்கேட்.. பெப்சொடன்ட்..' என்று பெரிய பெரிய கனவுகளுடன்தான் கம்பனியை ஆரம்பித்தார்கள். ஆனால் அவர்களுக்கு கிடைத்தது எல்லாம் 'கோபுரம் பூசு மஞ்சள்தூள்.. அரசன் சோப்.. சங்கு மார்க் லுங்கிகள்.. சுடர்மணி பனியன் ஜட்டிகள்..'தான்..!!

பரந்தாமன் குறிப்பிட்ட மாதிரி 'பாலாஜி அட்வர்டைசிங்' ஒரு புளியங்கொம்பு..!! விளம்பர உலகில் பழம் தின்று கொட்டை போட்ட நிறுவனம். பல முன்னணி நிறுவனங்களும், மாடல்களும் அவர்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்கள். 'பாலாஜி அட்வர்டைசிங்'குக்கு பெரிய அளவு பட்ஜட்டுகளுடனான காண்ட்ராக்ட்கள் வந்து குவிந்தாலும், சில சின்ன பட்ஜெட் ப்ராஜக்டுகளும் வரும். தொழில் நோக்கோடு பார்க்கையில் சில ப்ராஜக்டுகளை அவர்களால் தவிர்க்க இயலாது. ஒத்துக் கொள்வார்கள். ஆனால்.. அந்த மாதிரி ஒப்பந்தங்களுக்கு அசோக்கின் கம்பனியை உபயோகப்படுத்திக் கொள்வார்கள். அதுவும் முழு வேலையையும் தராமல் 'பிச்சு பிச்சு' தருவார்கள்..!!

அசோக்கின் கம்பனி செய்யும் வேலைகள் என்றால்.. வெள்ளை வேஷ்டி கட்டிக்கொண்டு சரத்குமாரோ, சாய்குமாரோ.. வாயெல்லாம் பல்லாக குறுக்கும் மறுக்கும் நடப்பதை.. டிஜிட்டல் கேமராவில் ஷூட் செய்ய வேண்டும்.. ஷூட் செய்ததை தங்கள் லேபுக்கு கொண்டுவந்து, க்ளையன்ட் குறிப்பிட்ட நொடிகளுக்கு மிகாமலும், குறையாமலும் எடிட் செய்ய வேண்டும்.. சரத்குமார், சாய்குமாரின் வேஷ்டி சட்டைகளுக்கும், பளிச்சிடும் பற்களுக்கும்.. விஷுவல் எஃபக்ட்ஸ் கொடுத்து.. அதன் வெண்மையை, கண்ணைப்பறிக்கும் வகையில் என்ஹான்ஸ் செய்யவேண்டும்.. 'சல்யூட்.. ராம்ராஜுக்கு.. சல்யூட்..!!' என்பது மாதிரியான ஜிங்கில்களை, வீடியோவுடன் பொருத்தமாக மிக்ஸ் செய்யவேண்டும்.. வீடியோவின் இறுதி வடிவத்தை, ஒரு டிஸ்கிலோ, சிப்பிலோ போட்டு.. 'பாலாஜி அட்வர்டைசிங்'குக்கு டெலிவர் செய்ய வேண்டும்..!!

பரந்தாமனின் BP’யை எகிற வைத்து வேடிக்கை பார்த்த அசோக், மீண்டும் ஆபீசுக்கு வந்து சேர அரை மணி நேரம் ஆனது. ஆபீசில் கிஷோர் மட்டும் இல்லை. 'நாளைக்கு ஷூட்டிங் இருக்கு..' என்று நேற்றே அசோக்கிடம் சொல்லியிருந்தான். அசோக் உள்ளே நுழைந்தபோது, மீதி நான்கு பேரும் எடிட்டிங் ரூமில் அமர்ந்திருந்தார்கள். சுவற்றில் மாட்டப்பட்டிருந்த பெரிய ஸ்க்ரீன்களில் ஒன்றில், ரிலீஸ் ஆகி இரண்டு மாதங்கள் ஆகி சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் ஒரு சினிமா ஓடிக்கொண்டிருந்தது. ஹீரோவும், ஹீரோயினும் கிளிசரின் அப்பிய கண்களுடன் நாதழதழக்க வசனம் பேசிக்கொண்டிருக்க.. இவர்கள் நான்கு பேரும் நாற்காலியில் அமர்ந்து, வாயைப் பிளந்து வைத்தவாறு.. அசோக் வந்ததைக்கூட கவனிக்காமல், திரையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்..!!

'ப்ளீஸ் ப்ரியா.. என்னை விட்டு போயிடாத.. ப்ளீஸ்.. நீ இல்லனா, அப்புறம் நான் உயிரோடவே இருக்க மாட்டேன்..!!'

'ப்ளீஸ் ஷிவா.. நான் போய்த்தான் ஆகணும்.. என்னை புரிஞ்சுக்கோ ப்ளீஸ்..!!'

'இல்ல.. நான் உன்னை போக விடமாட்டேன்..!! நீ எனக்கு வேணும் ப்ரியா.. என் லைஃப் புல்லா நீ எனக்கு வேணும்..!!'

'ப்ளீஸ் ஷிவா..!! கையை விடு ப்ளீஸ்.. நான் போகணும்..!!"

'போ ப்ரியா.. போ..!! ஆனா.. போறதுக்கு முன்னாடி எனக்கும், என் காதலுக்கும் ஒரு முடிவு சொல்லிட்டு போ..!!'

'என்ன முடிவு சொல்ல சொல்ற என்னை..??'

'எதுக்கு என் லைஃப்ல வந்த..?? எதுக்கு எங்கிட்ட சிரிச்சு சிரிச்சு பழகின..?? காதல்னா என்னன்னே தெரியாம.. நான் சந்தோஷமா சுத்திட்டு இருந்தேன்.. ஏன் என் மனசுல காதல்ன்ற ஆசையை வளர்த்த..?? கனவுல மிதக்க வச்ச..?? இப்போ எல்லாத்தையும் கைகழுவிட்டு போற..?? எப்படி ப்ரியா.. எப்படி உனக்கு மனசு வந்தது.. சொல்லு ப்ரியா..!!'

'ஷிவா ப்ளீஸ்.. வார்த்தையால என்னை கொல்லாத..!! நீ இப்படி கண்ணீர் வடிச்சுக்கிட்டு எங்கிட்ட கெஞ்சுறதை நெனச்சா.. எனக்கு இதயமே வெடிச்சிடும் போல இருக்கு..!! அழாத ஷிவா.. ப்ளீஸ்.. அழாத..!!'

'அப்போ என்னை விட்டு போகாத.. என்கூடவே இருந்துடு..!!'

'அது என்னால முடியாது..!!'

'அப்போ நீயே உன் கையால என்னை கொன்னுட்டு போயிடு..!!'

'ஐயோ கடவுளே..!! என்னை ஏன் இப்படி சித்திரவதை செய்ற..?? எனக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது..!!'

ஹீரோயின் வானத்தை பார்த்து அலறினாள். அதற்கு மேலும் பொறுமை இல்லாத அசோக்,

"என்ன எழவெடுத்த படம்டா இது..??" என்று சப்தம் எழுப்பினான். உடனே நான்கு பேரும் திரையை விட்டு திரும்பி, இவனை பார்த்தனர். சாலமன் அசோக்குக்கு பதில் சொன்னான்.

"காதல் உல்லாசம்னு ஒரு புதுப்படம் மச்சி..!!" என்று இளிப்புடன் சொன்னான்.

"காதலு..?? உல்லாசமா..?? அப்புறம் ஏன் 'ஓ'ன்னு ஒப்பாரி வச்சுட்டு கெடக்குறாய்ங்க..??"

அசோக் கிண்டலாக கேட்க, சாலமன் மட்டும் இல்லாமல் மற்றவர்களும் இப்போது பட்டென சிந்தனையில் மூழ்கினர். 'ஆமாம்ல.. ஏன்..??' என்பது மாதிரி பரிதாபமாக தலையை சொறிந்து கொண்டனர். சில வினாடிகள் சொறிந்தும் பதில் ஏதும் கிடைக்கவில்லை. அப்புறம் சாலமன்தான் முதலில் சுதாரித்துக் கொண்டு,

"அடப்போடா.. ஏடாகூடமா ஏதாவது கேட்டுக்கிட்டு..??" என்று சலிப்பாக சொன்னவாறு திரும்பி திரையை பார்க்க ஆரம்பித்தான். அவனோடு சேர்ந்து மற்றவர்களும்..!!

"ஹ்ம்ம்.. பதில் சொல்ல முடியாது.. எனக்கு தெரியும்..!! இப்படித்தான் எல்லாப்பயலும் என்ன எழவுனே தெரியாம, நானும் லவ் பண்றேன்னு, பண்ணிட்டு திரியிறாய்ங்க..!!"

"ஏய்.. போடா போடா.. இவரு பெருசா நாலு லவ்வு, ஏழு மேரேஜ் பண்ணுனவரு.. நமக்கு அட்வைஸ் சொல்றாரு.. போடா டம்மி பீஸு..!!" - இது வேணு

"போங்கடா.. உங்களை மாதிரிலாம் லவ் பண்றதுக்கு.. லவ் பண்ணாமலேயே இருக்கலாம்..!!"

"இருந்துக்கோ.. உன்னை யார் இப்போ லவ் பண்ண சொல்லி கெஞ்சுனது..??"

"ம்க்கும்..!! சரி.. அது கெடக்கட்டும்..!! ஆபீஸ் நேரத்துல.. இப்படி மொக்கைப்படம் பாத்துட்டு உக்காந்து இருக்கீங்களே.. வேலை எதுவும் இல்லையா..??"

"ஆமாம்.. பெரிய ஏவிஎம் ஸ்டுடியோ நடத்துறோம்.. வேலைலாம் கரெக்ட் டயத்துக்கு நடந்துடனும்.. போடா.. எல்லாம் நைட்டு பாத்துக்கலாம்..!!"

வேணுவின் பதிலில் அசோக் கடுப்பானான். சில வினாடிகள் அவர்களுடைய முதுகையே வெறுப்பாக பார்த்தான். அப்புறம் விறுவிறுவென நடந்து சிஸ்டத்தை நோக்கி சென்றான். அதில் செருகப்பட்டிருந்த மெமரி ஸ்டிக்கை படக்கென பிடுங்க, ஒளிர்ந்து கொண்டிருந்த ஸ்க்ரீன் இப்போது இருட்டானது. படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பட்டென டென்ஷன் ஆனார்கள்.

"ப்ச்.. டேய்.. மடக்..!! ஏண்டா இப்ப அதை எடுத்த.. பாத்துட்டு இருக்கோம்ல.. போடுடா..!!" - வேணு கோவமாக சொன்னான்.

"மச்சி.. க்ளைமாக்ஸ்டா.. இன்னும் கொஞ்ச நேரந்தான்.. ஸ்டிக்கை குடுடா.. ப்ளீஸ்..!!" - சாலமன் பாவமாக கேட்டான்.

"ஆமாண்ணா.. ப்ளீஸ்ண்ணா..!!" இரண்டு அல்லக்கை பசங்களும் கோரசாக கெஞ்சினார்கள்.

"போங்கடா.. போய் வேலையை பாருங்க போங்க..!!"

அசோக் கூலாக சொல்லிவிட்டு, மெமரி ஸ்டிக்குடன் தன் அறைக்குள் புகுந்து கொண்டான். சற்றுமுன் கிஷோரை அவன் திட்டியதுபோல, இப்போது எல்லோரும் அவனை கேவலமாக திட்டினார்கள். ஆனால் அந்த திட்டெல்லாம் கண்ணாடி தடுப்பை கடந்து சென்று, அவன் காதில் விழ தவறின.

கிஷோர் ஆபீஸை அடைந்தபோது இரவு ஏழு மணி ஆகி இருந்தது. அவன் வந்தபோது நண்பர்கள் மூவரும் கண்ணாடி அறைக்குள் அமர்ந்து பிசினஸ் (?????) பேசிக்கொண்டிருந்தனர். அவசரமாக கதவை திறந்து உள்ளே நுழைந்த கிஷோர், நுழைந்ததுமே அசோக்கை பார்த்து ஆத்திரமாக கத்தினான்.

"ஏண்டா வெளக்கெண்ணை.. என்னடா பண்ணுன அந்த ஆளை..??"

"எந்த ஆளை..??" அசோக் தாழ்வான குரலில் பம்மினான்.

"நடிக்காத..!! அந்த பரந்தாமனை..??"

"அந்த ஆளை நான் என்ன பண்ணுனேன்.. நான்லாம் ஒன்னும் பண்ணல..!!"

"ப்ச்.. அப்புறம் ஏன் அந்த ஆளு எனக்கு ஃபோன் பண்ணி.. வண்டை வண்டையா திட்டுறான்..??"

"வண்டை வண்டையாவா..??"

"ஆமாம்..!!"

"என்னைய விடவா..??"

"ஆமாண்டா வெண்ணை..!!"

"சரி விடு.. ஏதோ கோவத்துல திட்டிருப்பான்.. சின்னப்பய.. மன்னிச்சு வுட்று..!!"

"மன்னிச்சு வுட்றவா..?? எவ்ளோ கூலா சொல்றான் பாரேன்.. திட்டு வாங்கினது நான்டா..!! சினி ஃபீல்ட்ல ஒரு காண்டாக்ட் புடிக்கிறதுக்கு, நான் எவ்ளோ கஷ்டப்படுறேன் தெரியுமாடா..?? நீ என்னடான்னா.. காலித்தனமா அந்த காண்டாக்டை காலி பண்ணிட்டு வந்திருக்குற..??"

"விட்ரா.. அந்த ஆளு காண்டாக்ட் இருக்குறது ஒண்ணுதான்.. இல்லாததும் ஒண்ணுதான்..!! அந்த மசுரு ஒன்லி லவ் சப்ஜக்ட்தான் எடுப்பாராம்.. திரில்லர்லாம் எடுக்க மாட்டாராம்..!! லவ் ஸ்டோரி சொல்லு.. லவ் ஸ்டோரி சொல்லுன்னு.. கொஞ்ச நேரம் என் உசுரை வாங்கிட்டான்..!! நல்ல ஆள்ட்ட கதை சொல்ல அனுப்பி விட்டடா என்னை நீ..!!"

"ஏய்.. அந்த ஆளு கேட்டதுல என்ன தப்பு..?? உன்கிட்ட லவ் ஸ்டோரி இருந்தா சொல்லிருக்கணும்.. இல்லனா மூடிட்டு வந்திருக்கணும்..!! எதுக்கு தேவை இல்லாம அந்த ஆள் பொண்ணை பத்திலாம் தப்பா சொன்ன..??"

"ப்ச்.. நான்லாம் அந்த பொண்ணை பத்தி எதுவும் தப்பா சொல்லல.. அந்த ஆளுதான் பெத்த பொண்ணுன்னு கூட நெனைப்பு இல்லாம.. திருட்டு சிறுக்கின்னு கேவலமா திட்டுனான்..!! நான் டீசண்டா ஒரு பொய் சொன்னேன்.. அவ்ளோதான்..!!"

"அதான் ஏன் சொன்னேன்னு கேக்குறேன்..??"

"அந்த ஆள் முகமூடியை கிழிக்கிறதுக்குத்தான்..!! போனதுல இருந்தே லவ்வு லவ்வுன்னு பொலம்பிட்டு இருந்தான்.. 'சரிய்யா.. நான் உன் பொண்ணை லவ் பண்றேன்.. கட்டிக்குடு..'ன்னு கேட்டா.. என் ஸ்டோரில வர்ற காட்டேரியை விட கர்ணகொடூரமா மாறிட்டான்..!! ஹாஹா.. இப்போ நான் அவனுக்கு வச்சுட்டு வந்திருக்குறேன் பாரு ஊசி.. அது இன்னும் நாலஞ்சு நாளைக்கு அவனை குத்தி குடைஞ்சுட்டு இருக்கும்.. அது போதும் எனக்கு..!!"


அசோக் சொல்லிவிட்டு பெருமையாக புன்னகைத்தான். சாலமனும், வேணுவும் இன்னும் குழப்பம் விலகாமலே காட்சியளித்தனர். கிஷோரோ, அசோக் பதிலுக்கு பதில் பேசியதில், களைத்தும் சலித்தும் போயிருந்தான். அந்த சலிப்பு இப்போது குரலிலும் கலந்து போயிருக்க,

"ஏண்டா இப்படிலாம் பண்ற..??" என்று பரிதாபமாக கேட்டான்.

"நீ ஏண்டா இப்படிலாம் ஃபீல் பண்ற..??" அசோக் அதே டோனில் திருப்பி கேட்டான்.

"பின்ன என்ன..?? அன்னைக்கும் இப்படித்தான்.. 'பாலாஜி அட்வர்டைசிங்' மோகன்ராஜோட சண்டை போட்டுட்டு வந்த..??"

"அது வேற மேட்டர்.. அந்த ஆள் லூசுத்தனமா ஒரு ஐடியா சொன்னான்.. 'ஸார்.. இது லூசுத்தனமா இருக்கு ஸார்..' அப்டினு நான் ரொம்ப மரியாதையாத்தான் சொன்னேன்.. அதுக்கே அந்த ஆளுக்கு கோவம் வந்துடுச்சு..!!"

"ம்ம்.. அப்படி என்ன லூசுத்தனமா சொன்னான்..??"

"காஞ்சனா ஜுவல்லர்ஸ் வெளம்பரத்துக்கு ஒரு கோட் சொன்னான் மச்சி.. மஹா கேவலமான கோட்..!!"

"என்ன அது..??"

"'காஞ்சனா ஜ்வல்ஸ் வாங்குங்கள்.. காதலின் ஆழத்தை உங்கள் காதலிக்கு உணர்த்துங்கள்..' அப்டின்னு..!!"

"நல்லாத்தான இருக்கு..?? இதுல என்ன லூசுத்தனம்..??"

"ஏண்டா.. இவனுக நகையை வாங்கிக் குடுத்துத்தான் காதலோட ஆழத்தை காதலிக்கு உணர்த்தனுமா..?? நாட்ல நகை வாங்க வக்கு இல்லாதவன்லாம் லவ்வே பண்ணக் கூடாதா..?? லவ் பண்றவனுகளை எல்லாம் கேலி பண்ற மாதிரி இல்ல.. அந்த கோட்..?? அதைத்தான் அந்த ஆள்ட்ட சொன்னேன்..!!"

"ம்ம்.. உனக்கு ஏன் இந்த தேவை இல்லாத வேலைலாம்..?? அவன் சொல்ற மாதிரி ஆட் ரெடி பண்ணி தர்றது மட்டுந்தான்டா நம்ம வேலை..!!"

"ப்ச்.. என்னால அப்படி இருக்க முடியல..!!"

"முடியாது.. உன்னால முடியாது.. நீ பாட்டுக்கு அந்த ஆள் கூட சண்டை போட்டுட்டு வந்துட்ட.. அப்புறம் நான் அவன் கைல காலுல விழுந்து, காண்ட்ராக்ட் கேன்சல் ஆகாம பாத்துக்கிட்டேன்..!! ஷ்ஷ்ஷ்ஷ்.. முடியலடா சாமி.. உன்னை வச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னே எனக்கு ஒன்னும் புரியல..!! ஹ்ம்ம்ம்ம்... போன வாரம் ஒரு தெலுகு படம் பாத்தேன்.. அதுல.. ஹீரோ ரொம்ப முரட்டுப்பயலா இருப்பான்.. அவனை பாத்து.. காமடியன் ஒரு டயலாக் சொல்வாரு..!! அந்த டயலாக்தான் எனக்கும் உன்னை பாத்து சொல்ல தோணுது..!!"

"ஓ.. அப்படி என்ன டயலாக்..??"

"ம்ம்.. 'இவன் ரொம்ப வயலண்டா இருக்கான்டா.. இவனுக்கு கொஞ்சம் பூ, பொண்ணுலாம் கண்ணுல காட்டுங்கடா..'ன்னு சொல்வாரு..!!"

"ஹாஹா... பூ, பொண்ணுலாம் பாத்துட்டா..??"

"நீ இப்படிலாம் பிரச்னை பண்ண மாட்டேன்னு தோணுது..!! நீ பெருசா மக்கர் பண்றதே இந்த லவ்ன்ற மேட்டர்லதான்.. லவ்வை பத்தி நீ வச்சிருக்குற தப்பான அபிப்ராயத்துலதான்.. நீ ஏதாவது ஒரு பொண்ணை லவ் பண்ண ஆரம்பிச்சேன்னா.. எல்லாம் சரியாயிடும்னு எனக்கு தோணுது.. நம்ம பிசினசும் நல்லபடியா உருப்படும்னு தோணுது..!!"

"போடா.. இந்த பரந்தாமன், மோகன்ராஜ்-க்காகலாம் என்னை லவ் பண்ண சொல்றியா..??"

"சரி.. அவனுகளுக்காக பண்ண வேணாம்.. எங்களுக்காக பண்ணு..!!"

"உங்களுக்காகவா.??"

"ம்ம்.. உன்னோட ஃப்ரண்ட்ஸ் நாங்க எல்லாம் லவ் பண்றோம்.. எங்களை பாத்து உனக்கு லவ் மேல ஆசை வரல..??" கிஷோர் அந்த மாதிரி கேட்க,

"ஏய்.. நீங்களாடா..?? உங்களை பாத்தப்புறந்தான்.. எனக்கு லவ் மேல இருந்த கொஞ்ச நஞ்ச ஆசையும் காணாமப் போயிடுச்சு..!!" அசோக் கிண்டலாக சொன்னான்.

"ஏண்டா இப்படி சொல்ற..??"

"பின்ன..?? ஒருத்தன்.. லவ் பண்றவ.. பாடுறேன்ற பேர்ல நரி மாதிரி 'ஊஊஊ'ன்னு ஊளையிடுறதைலாம்.. லவ்லி வாய்ஸ்னு மனசாட்சியே இல்லாம பொய் சொல்றவன்..!!" - அசோக் அவ்வாறு சொன்னதும் கிஷோர் தலையை தொங்கப் போட்டுக் கொண்டான்.

"ஒருத்தன்.. பாத்ரூம் போறதுக்கு கூட 'ரொம்ப அர்ஜன்ட்மா.. போயிட்டு வந்து பேசுறேனே.. ப்ளீஸ்..' அப்டின்னு பெர்மிஷன் கேக்குறவன்..!!" - இப்போது வேணு தலையை கவிழ்த்துக் கொண்டான்.

"ஒருத்தன்.. லவ்வர் செருப்பால அடிக்காத குறையா.. 'என் மூஞ்சிலயே முழிக்காத'ன்னு.. இவன் மூஞ்சில காறித்துப்பிட்டு போனப்புறமும்.. இன்னும் அவளையே நெனச்சுக்கிட்டு.. 'அன்பே.. அழகே.. அவிச்ச முட்டையே.. அழுகுன முள்ளங்கியே..'ன்னு.. கவிதை எழுதிட்டு இருக்குறவன்.." - நீங்கள் நினைத்தது சரிதான். சாலமன் இப்போது மண்டையை தொங்க போட்டுக் கொண்டான்.

"உங்களை மாதிரிலாம் மானங்கெட்டு லவ் பண்றதுக்கு.. லவ் பண்ணாமலே இருக்கலாம்..!!" அசோக் முடிவாக சொல்ல,

"ஷ்ஷ்ஷ்ஷ்.. முடியல மச்சி..!! காதல் மேல உனக்கு அப்படி என்ன வெறுப்பு..?? சொல்லு மச்சி.. சொல்லு..!!" வேணு உணர்சிகரமாக கேட்டான்.

"என்னடா.. தமிழ் சினிமால.. ஹீரோயின் அப்பாகிட்ட பேசுற டயலாக்லாம் எங்கிட்ட பேசுற..?? எனக்கு காதல் மேலலாம் எந்த வெறுப்பும் இல்ல.. காதல்ன்ற பேர்ல நீங்க லூசுத்தனமா என்னன்னவோ பண்றதுதான் காமடியா இருக்கு..!! உங்களோட சுயத்தை இழந்துட்டிங்களேடா.. காதல் பண்றோம்னு உங்க ஒரிஜினாலிட்டியை தொலைச்சுட்டிங்களே..??" அசோக்கின் கேள்விக்கு இப்போது கிஷோர் பதில் சொன்னான்.

"மச்சி.. இதுலாம் உனக்கு புரியாது.. நீயும் ஒரு பொண்ணை லவ் பண்ணினாத்தான்.. எங்கபக்கம் இருக்குற நியாயத்தை உன்னால புரிஞ்சுக்க முடியும்..!! பண்ணிப்பாருடா.. எங்க கஷ்டம் உனக்கும் புரியும்..!!"

"ஹாஹா.. நான்லாம் லவ் பண்ணினேன்னா.. உங்களை மாதிரி பண்ண மாட்டேன் மச்சி..!!"

"அப்புறம்..??"

"வேற.. வேற.. வேற மாதிரி பண்ணுவேன்..!!" விஜய் மாதிரி அசோக் ஸ்டைலாக சொன்னான்.

அதற்குமேல் அவனிடம் என்ன பேசுவது என்றே புரியாமல், மற்றவர்கள் அமைதியாகினர். கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்த அசோக், அப்புறம் அவனே ஆரம்பித்தான்.

"சரி.. அந்தக்கதைலாம் அப்புறம் பேசிக்கலாம்..!! தண்ணியடிக்க போலாமா இன்னைக்கு.. நான் ட்ரீட் தர்றேன்..!!"

"என்னடா மச்சி திடீர்னு..??"

"இன்னைக்கு என் பர்த்டேடா..!!" அசோக் கூலாக சொல்ல, எல்லோர் முகத்திலும் இப்போது திடீர் மலர்ச்சி.

"டேய்.. என்னடா நீ.. இவ்ளோ சாதாரணமா சொல்லிட்டு இருக்குற..?? ஹேப்பி பர்த்டேடா மச்சி..!!!!" எல்லோரும் அவனுடைய கையை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்கள்.

"ஹ்ம்ம்.. பர்த்டேயும் அதுவுமா.. ஒரு புல்டாக்கு என்னை டென்ஷன் பண்ணிட்டான் மச்சி..!!"

"ஹேய்.. நான் என்னடா பண்ணினேன்..??" கிஷோர் அவசரமாக, பரிதாபமாக கேட்க,

"உன்னை சொல்லலடா.. அந்த பரந்தாமன் டாகை சொன்னேன்..!! செம டென்ஷன்.. இன்னைக்கு கண்டிப்பா தண்ணி போட்டே ஆகணும்..!!"

"ஏய்.. இப்படி திடீர்னு சொன்னா எப்படிடா..??" வேணு சலித்துக் கொண்டான்.

"ஏன்.. உன் ஆளுட்ட பெர்மிஷன் கேக்கணுமா..??"

"ம்ம்..!!"

"போ போ.. போய் கேளு போ..!!"

அசோக் சொன்னதும், வேணு செல்போனை எடுத்துக்கொண்டு கிளம்பினான். இப்போது கிஷோரும் தனது செல்போனை எடுக்க,

"ஏய்.. என்னடா.. நீயும் பாத்ரூம் போறதுக்குலாம் அவகிட்ட பெர்மிஷன் கேட்க ஆரம்பிச்சுட்டியா..??"

"ஹிஹி.. பாத்ரூம் போறதுக்கு தேவை இல்ல மச்சி.. பாருக்கு போறதுன்னா.. சொல்லிட்டுத்தான் போகணும் மச்சி..!!"

இளிப்புடன் சொல்லிவிட்டு செல்கிற கிஷோரையே அசோக் எரிச்சலாக பார்த்தான். இப்போது சாலமனும் செல்போனை எடுத்துக்கொண்டு கிளம்ப, அசோக் உச்சபட்ச கடுப்பானான்.

"டேய்.. அவனுகதான் லவ் பண்ற பொண்ணுககிட்ட பெர்மிஷன் கேக்க போறானுக..?? நீ எங்க போற.. உனக்குத்தான் பிரேக்கப் ஆயிடுச்சுல..??"

"இல்ல மச்சி.. எதுக்கும் கேட்டு வைக்கிறேன்.. ப்யூச்சர்ல யூஸ் ஆனாலும் ஆகலாம்டா..!!" சாலமன் பாவமாக சொன்னான்.

"அடப்பாவி..!!!!"

"அவ வேணா.. ஒரு நல்ல காதலியா இல்லாம இருக்கலாம் மச்சி.. ஆனா.. நான் நல்ல காதலன் மச்சி.. நான் நல்ல காதலன்..!!" அழுகிற குரலில் சாலமன் சொல்ல,

"கிழிஞ்சது..!! போடா.. போய்த்தொலைடா..!!" என்று தலையில் அடித்துக் கொண்டான்.

அப்புறம் அவர்கள் ஆளாளுக்கு பெர்மிஷன் கேட்டு திரும்பும் வரை, அசோக் கடுப்புடன் காத்திருந்தான். பிறகு எல்லோரும் ஆபீஸுக்கு தாழிட்டு கிளம்பினார்கள் அருகிலேயே இருக்கும் ஒரு பாருக்கு சென்று, இஷ்டம்போல் மது அருந்தினார்கள். திரவ உணவு அருந்திவிட்டு.. திட உணவும் அருந்த நினைத்தார்கள். அவர்கள் எப்போதும் மதிய உணவு அருந்துகிற ஃபுட் கோர்ட்டிற்கு, இரவு உணவு அருந்த வந்து சேர்ந்தார்கள். அவரவருக்கு பிடித்த ஐட்டங்களை ஆர்டர் செய்து வாங்கிக்கொண்டு, மூலையில் கிடந்த டேபிள் ஒன்றை ஆக்கிரமித்துக்கொண்டு, ஆர்டர் செய்த ஐட்டங்களை வயிற்றுக்குள் அனுப்ப ஆரம்பித்தனர்.

எல்லோரும் நல்ல போதையில் இருந்தனர். பேச்சு எங்கெங்கோ சென்று சுற்றி மீண்டும் காதலில் வந்து அமர்ந்தது. அப்போதுதான் சாலமன் அசோக்கிடம் மெல்ல கேட்டான்.

"நீ ஏன் மச்சி யாரையாவது லவ் பண்ணக்கூடாது..??"

"என்னடா நீங்க.. ஆளாளுக்கு லவ் பண்ணு லவ் பண்ணுன்னு சொல்றீங்க.. திடீர்னு நான் யாரைப்போய் லவ் பண்றது..?? லவ் பண்றதுக்கு பொண்ணு வேணாமா..?? அதுவும் எனக்கு பிடிச்ச மாதிரி பொண்ணா இருக்கணும்..??"

"என்ன மச்சி.. நாட்டுல பொண்ணுகளுக்கா பஞ்சம்..?? இப்போ நாங்கல்லாம் லவ் பண்ணல.. எங்களுக்குலாம் பொண்ணுக கெடைக்கல..??"

என்று நாகுழற கேட்டான் கிஷோர். அவன் அவ்வாறு கேட்டதும், அசோக் இப்போது மீண்டும் நக்கலாக ஆரம்பித்தான்.

"யாரு.. நீங்க லவ் பண்ணின பொண்ணுகதான..?? ஒருத்தனை பிரண்டுன்னு நம்ம்ம்பி.. இன்னொருத்தன் அவன் வீட்டுக்கு கூட்டிட்டு போனான்.. வீட்டுக்கு போனவன் என்ன பண்ணினான் தெரியுமா.. கூட்டிட்டு போன பிரண்டு தங்கச்சியையே.. உஷார் பண்ணிட்டான்..!!!!" - அசோக் அந்த 'நம்பி'க்கு தனி அழுத்தம் கொடுத்து, அவ்வாறு சொன்னதும் கிஷோர் தலையை தொங்கப் போட்டுக் கொண்டான்.

"ஒருத்தனை தம்பின்னு நம்ம்ம்பி.. அண்ணன் ஒருத்தன்.. தனக்கு பொண்ணு பாக்க தம்பிகிட்ட மேட்ரிமோனி ஐடி, பாஸ்வோர்ட் குடுத்தான்.. அதுல லட்டு மாதிரி ஒரு அலையன்ஸ் வந்ததும்.. வீட்டுக்கே தெரியாம தனியா லவட்டிட்டு வந்து.. இப்போ இவன் அந்த பொண்ணை லவ் பண்ணிட்டு இருக்குறான்..!!" - இப்போது வேணு தலையை தொங்கப்போடும் முறை.

"இன்னொருத்தன் ப்ளஸ் டூ படிக்கிறப்போவே பயங்கர கேடி, கிரிமினல் நாயி.. பையன் கணக்குல வீக்கா இருக்கானேன்னு.. ஒரு அப்பா பையன் மேல உள்ள அக்கறைல.. அவனை நம்ம்ம்பி.. கணக்கு ட்யூஷனுக்கு அனுப்பிச்சா.. பையன் கணக்கு டீச்சரையே கணக்கு பண்ணிட்டான்.. இவ்வளவுக்கும் அது அஞ்சு வயசு மூத்த ஆண்ட்டி..!!"

"ஒய்.. என் ஆளை ஆண்ட்டின்னு சொல்ற வேலைலாம் வச்சுக்காத அசோக்கு..!! அஞ்சு வயசுலாம் ஒன்னும் இல்ல.. மூணு வயசுதான் டிபரன்ஸ்..!!" என்று தாழ்ந்த குரலில் தன் மறுப்பை தெரிவித்தாலும், தலையை தொங்கப்போடவும் தவறவில்லை சாலமன்.

இப்போது கிஷோர் தன் தலையை நிமிர்த்தி அசோக்குக்கு பதில் சொன்னான்.

"மச்சி.. 'All is fair in love and war'..!! காதல்ன்ற ஒரு விஷயமே.. நீ சொன்ன கம்ப்ளயின்ட் எல்லாத்தையும் சரி பண்ணிடும்டா..!!"

"போங்கடா.. என்னாலலாம் யாரோட நம்பிக்கையையும் கொன்னுட்டு.. அதுமேல காதல் செய்ய முடியாது..!!"

"அப்படிலாம் பாத்தா யாரையுமே லவ் பண்ண முடியாதுடா..!!"

"ஏன்.. பண்ணனும்னு நெனச்சா பண்ணலாம்..!!"

"சரி.. மத்தவங்கள விடு.. நீ எந்த மாதிரி பொண்ணை லவ் பண்ணுவ..??"

வேணு அந்த மாதிரி கேட்கவும் அசோக் சற்றே நிதானித்தான். சில வினாடிகள்..!! பிறகு.. எங்கோ சூனியத்தை வெறித்தவாறு மெல்லிய குரலில், ரசனையாக சொன்னான்.

"நான் லவ் பண்றதா இருந்தா.. யாராவது ஒரு 'Perfect Stranger'-ஐத்தான் லவ் பண்ணுவேன்..!!"

"ம்ம்.. பாத்துடா.. கடைசில அவ 'Perfect Psycho'-வா இருக்கப்போறா..!!"

வேணு கிண்டலாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சாலமனின் செல்போன் கிணுகிணுத்தது. யார் அழைப்பது என்று எடுத்து பார்த்தான் சாலமன். பார்த்ததுமே, ஏதோ தங்க வேட்டையில் வென்றவன் மாதிரி துள்ளிக் குதித்தான். அசோக்கைப் பார்த்து கத்தினான்.

"மச்சி.. நான் சொன்னேன்ல.. ப்யூச்சர்ல யூஸ் ஆகும்னு..?? இன்னைக்கே யூஸ் ஆகிடுச்சுடா.. எனக்கு மிஸ்ட் கால் குடுத்திருக்கா.. ஐயோ.. எனக்கு தலயும் புரியல.. காலும் புரியல..!! இருங்கடா.. இதோ வந்துர்றேன்..!!" என்றவாறு செல்போனை எடுத்துக்கொண்டு ஓடினான். அவனுடைய சந்தோஷத்தை பார்த்து கிஷோருக்கும் ஆசை வந்திருக்கும் போலிருக்கிறது.

"மச்சி.. நீங்க பேசிட்டு இருங்கடா.. நான் இதோ வந்துர்றேன்..!!" என்றவாறு பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்துக்கொண்டே கிளம்பினான். அவன் சென்ற சில வினாடிகளிலேயே,

"மச்சி.. நீ சாப்பிட்டுட்டு இருடா.. இதோ வந்துர்றேன்..!!"

சொல்லிக்கொண்டே வேணுவும் அசோக்கை தனியாக விட்டுவிட்டு, அங்கிருந்து அகன்றான். அசோக் எல்லோரும் செல்வதையே ஒருவித ஏக்கத்துடன் பார்த்தான். திடீரென தனியாகிப்போனதும், சாப்பிட்டுக்கொண்டிருந்த ப்ரைட் ரைசை அதற்கு மேலும் உண்ண மனமில்லாமல், ஓரமாக ஒதுக்கி வைத்தான்.

அசோக் எல்லாரிடமும் காதலைப்பற்றி சற்று ஏளனமாக பேசினாலும், 'உங்களைப்பாத்து எனக்கு காதலிக்கிற ஆசையே போயிடுச்சு..' என்று நண்பர்களிடம் சொல்லியிருந்தாலும், அவன் மனதில் எப்போதும் ஒரு மெலிதான ஏக்கம் உண்டு.. தனக்கென்று ஒரு பெண் இல்லையே என்ற ஏக்கம்..!! அதுவும்.. இந்த மாதிரி.. நண்பர்கள் எல்லோரும் தனித்து விட்டு செல்கையில்.. பேசுவதற்கு யாரும் இல்லாத சூழலில்.. அந்த ஏக்கம் சற்று அதிகமாகவே மேலெழும்..!!

இப்போதும் அப்படித்தான்..!! ஒரு மாதிரியான விரக்தி உணர்வு மனதுக்குள் மெல்ல பரவியது..!! அந்த ஃபுட் கோர்ட்டை ஆக்கிரமித்திருந்த மக்களை இலக்கில்லாமல் வெறித்தான்..!! அப்போதுதான் அசோக்கின் கண்ணில் அவள் பட்டாள்.


அவர்கள் அமர்ந்திருந்த டேபிளுக்கு சற்று தள்ளி.. தனியாக.. தட்டில் இருந்த உணவை உண்ண மறந்தவளாய்.. எங்கேயோ வெறித்து பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.. அமைதியே உருவாக..!! அழகாக.. அழகாக.. மிக மிக அழகாக இருந்தாள்..!! தேவதைக்கு ஜீன்சும், டி-ஷர்ட்டும் மாட்டி விட்ட மாதிரி.. தேன் நிலாவுக்கு பொட்டும், லிப்ஸ்டிக்கும் போட்டு விட்ட மாதிரி..!!

அவளை இதே ஃபுட் கோர்ட்டில் அசோக் ஓரிரு தடவைகள் பார்த்திருக்கிறான். எப்போதும் தனியாகத்தான் வருவாள். தனியாக வரிசையில் நின்று, பிடித்த உணவை வாங்கிக் கொள்வாள். தனியாக சென்று அமர்ந்து கொள்வாள். யாரிடமும் பேச மாட்டாள். தனியாகவே அமர்ந்து சாப்பிட்டுவிட்டு, பிறகு காணாமல் போவாள்.

அசோக் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அவள் ஒருமுறை இவனை எதேச்சையாக திரும்பி பார்த்தாள். அவளுடைய பார்வையில் எந்த உணர்ச்சியும் இருக்கவில்லை. ஓரிரு விநாடிகள்தான். அப்புறம் வேறெங்கோ பார்வையை செலுத்தி வெறித்தாள். அசோக் அதன்பிறகும் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். சற்றுமுன் அவன் சொன்ன, 'Perfect Stranger' என்ற வார்த்தைகள், அவனது மூளையை அவசரமாய் குறுக்கிட்டன.


3 comments:

  1. "உங்களுக்குலாம் கதைலயும், சினிமாலயும்தான் 'காதல் அழகான விஷயம்'..!! இல்ல..?? அதே உங்க குடும்பத்துல நடந்தா.. அசிங்கம்..!! ஏத்துக்க மாட்டிங்க..!! ஆனா.. எவனோ லவ் பண்ணி, எப்படியோ நாசமா போகட்டும்னு.. படம் மட்டும் வரிசையா எடுத்து ரிலீஸ் பண்ணிடுவீங்க..!! காதலை வச்சு.. நல்லா காசு பாத்து.. அதை மட்டும் பேங்க்ல போட்டு வச்சுப்பிங்க.. ஆனா அந்த காதலை மட்டும் உங்க வீட்டுக்குள்ள விட மாட்டீங்க..!!////

    சூப்பர்.
    nalla arampam Screw

    ReplyDelete
  2. அசோக் எல்லாரிடமும் காதலைப்பற்றி சற்று ஏளனமாக பேசினாலும், 'உங்களைப்பாத்து எனக்கு காதலிக்கிற ஆசையே போயிடுச்சு..' என்று நண்பர்களிடம் சொல்லியிருந்தாலும், அவன் மனதில் எப்போதும் ஒரு மெலிதான ஏக்கம் உண்டு.. தனக்கென்று ஒரு பெண் இல்லையே என்ற ஏக்கம்..!! அதுவும்.. இந்த மாதிரி.. நண்பர்கள் எல்லோரும் தனித்து விட்டு செல்கையில்.. பேசுவதற்கு யாரும் இல்லாத சூழலில்.. அந்த ஏக்கம் சற்று அதிகமாகவே மேலெழும் heart touching

    ReplyDelete
  3. தங்களின் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு special இந்த கதை நான் ஏற்கனவே படித்திருந்தாலும் எனக்கு மீண்டும் படிக்க தூண்டிவிட்டது

    ReplyDelete

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...