Social Icons

அன்புள்ள ராட்சசி - 13


 




அத்தியாயம் 22

வடபழனி NGO காலனி மெயின் ரோட்..!! வளர்ந்து அடர்ந்திருந்த பச்சை மரங்கள்.. வழிநெடுக தார்ச்சாலைக்கு குடைவிரித்திருந்தன..!! கிளைகளையும், இலைகளையும் ஊடுருவ முடியாத சூரியக்கதிர்கள்.. செறிவற்ற வெளிச்சத்தையே செல்கிற பாதையில் தெளித்திருந்தன..!! மத்தியில் வெண்ணிறப்பட்டை இழைக்கப்பட்ட கருஞ்சாலையின் தேகம் எங்கும்.. மஞ்சள் நிறத்திலான இலைதழைகள் மண்டிப்போய் கிடந்தன..!! சன்னமாய் புகை துப்பியவாறே அசோக்கின் பைக்.. சரக்கென அச்சாலையில் சீறியபோது.. பதறிப்போன மஞ்சள் இலைகள்.. பறந்து சிதறி.. பாதையில் இருந்து விலகி வழிவிட்டன..!!

வண்டியின் வேகத்தை அதிகம் குறைக்காமல்.. வலதுபுறம் செல்கிற சாலையில் அசோக் திரும்பினான்..!! எதிர்பாராத விதமாய் ஒரு ஆட்டோ.. எதிர்ப்புறம் இருந்து வெளிப்படவும்.. ஷகிரா இடுப்பசைப்பது மாதிரியான ஒரு லாவகத்துடன்.. பைக்கை நெளித்து சுளித்து வளைத்து.. ஆட்டோவின் மூக்குரசி முத்தமிடுவதை இறுதி நொடியில் தவிர்த்தான்..!! சடனாக பிரேக்கிட்ட ஆட்டோ ட்ரைவர்.. சத்தமாய் உதிர்த்த கெட்ட வார்த்தை.. காற்றோடு கலந்து காதில் விழுவதற்குள்.. காத தூரம் பறந்திருந்தான்..!!

அடுத்த இரண்டாம் நிமிடத்தில்.. அசோக்கின் பைக் அந்த தெருவுக்குள் நுழைந்தது..!! அப்படி நுழைந்ததுமே.. அந்த தெருவில் நிலவிய ஒருவித அமைதியை.. அசோக்கால் உடனடியாக உணர முடிந்தது..!! வீதியின் இருபுறமும் கோடிகளை தின்று கொழுத்துப் போயிருந்த வீடுகள்..!! எல்லா வீடுகளுக்கு முன்பாகவும், ஏதாவது ஒரு காஸ்ட்லி கார் மினுமினுப்புடன் நின்றிருந்தது..!! அந்த வீடுகளை விடுத்து வெளிப்பட்டிருந்த மனித தலைகள்.. கேட்டுக்கருகே கொத்துக்கொத்தாய் குழுமியிருந்தன.. கிசுகிசுப்பான குரலில் ஏதோ ரகசியம் பேசிக்கொண்டிருந்தன..!!


தூரத்தில் ஒரு காவல்த்துறை வாகனம்.. ஈச்சமர நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்தது..!! தெருவுக்குள் நுழைந்த அடுத்த நொடியே.. அந்த வாகனத்தை கவனித்துவிட்ட அசோக்.. அதை நோக்கித்தான் தனது வண்டியையும் செலுத்தினான்..!! அந்த வாகனத்துக்கு அருகாகவே.. தனது பைக்கையும் பார்க் செய்தான்..!! ஈச்சமரத்துக்கு எதிர்ப்புறம் இருந்த வீடு.. அடர்பச்சையும் இளமஞ்சளுமான வர்ணப்பூச்சோடு.. அழகோடும் கம்பீரத்தோடும் காட்சியளித்தது..!! அந்த வீட்டு கேட்டுக்கருகிலும்.. கிசுகிசுப்பு பேச்சுடன் ஒரு சிறு மனித கும்பல்..!! அசோக் அந்த வீட்டை நோக்கி நடந்தான்..!!




கும்பலோடு கும்பலாய் இரண்டு கான்ஸ்டபிள்களும் நின்றிருந்தார்கள்..!! தங்களுக்குள் பேசிக்கொண்டு நின்றிருந்தவர்களில்.. தனசேகரன் என்ற பெயர்ப்பட்டயத்தை மார்பில் தாங்கியிருந்த ஒரு கான்ஸ்டபிள்.. அசோக் அவர்களை நெருங்குவதை கவனித்ததும் பேச்சை நிறுத்தினார்.. நெற்றியை சுருக்கியவர், அசோக்கை ஏறிட்டு வித்தியாசமாக பார்த்தார்..!! அவரது பார்வையின் அர்த்தத்தை புரிந்துகொண்ட அசோக்.. அவனாகவே..

"எஸ்பி ஸாரை பாக்கணும்..!!" என்றான்.

"நீ யாரு..??"

"என் பேரு அசோக்.. ஆர்காட் ரோட்ல அட்வர்டைஸ்மன்ட் ஏஜன்சி வச்சிருக்கேன்..!!"

"ஓ..!! என்ன விஷயமா அவரை பாக்கணும்..??" கேட்டுவிட்டு தனசேகரன் அசோக்கை கூர்மையாக பார்க்க, அவனிடம் இப்போது மெலிதான ஒரு தயக்கம்.

"அ..அது.. அது கொஞ்சம் பர்சனல் ஸார்..!!"

அசோக் சொன்ன பதிலில்.. அந்த தனசேகரன் சற்று எரிச்சல் ஆகி இருக்கவேண்டும்.. அது அவரது குரலிலேயே தெளிவாக தெரிந்தது..!!

"பர்சனலா..?? ஏன்யா.. பர்சனல் விஷயம் பேசுற எடமா இது..?? க்ரைம் ஸ்பாட்டுயா.. உள்ள விசாரணை நடந்துட்டு இருக்குது.. இங்க ஆளாளுக்கு டென்ஷன்ல இருக்குறோம்.. நீ என்னடான்னா..?? போ போ.. போயிட்டு மத்தியானத்துக்கு மேல ஸ்டேஷன்ல வந்து பாரு..!!"

"இ..இல்ல ஸார்.. அவருக்கு என்னை நல்லா தெரியும்.. நான் வந்திருக்கேன்னு அவர்ட்ட கொஞ்சம் சொல்லுங்களேன்..!!"

"ப்ச்.. சொல்றேன்ல.. இங்கல்லாம் இப்படி வந்து பாக்க கூடாதுயா.. நீ மத்தியானத்துக்கு மேல.."

"ஹையோ.. என்னை இங்க வர சொன்னதே அவர்தான் ஸார்..!!" அசோக் சற்றே சலிப்பாக சொல்ல, தனசேகரனின் முகத்தில் இப்போது ஒரு வியப்பு.

"என்னது.. அவர்தான் வர சொன்னாரா..??"

"ஆமாம்..!! நீங்க உள்ள போய்.. அவர்ட்ட கொஞ்சம் சொல்றீங்களா.. ப்ளீஸ்..!!"

அசோக் பொறுமையற்ற குரலில் சொன்னான். தனசேகரன் இப்போது ஒருமாதிரி அவஸ்தையாக நெளிந்தார். அவருடைய குரலிலும் ஒருவித தடுமாற்றம்.

"எ..எங்களை வெளில நிக்க சொல்லிருக்காருயா.. உ..உள்ள போனா திட்டுவாரு..!!" தனசேகரன் அவ்வாறு தயக்கமாக சொல்லிக் கொண்டிருக்கையிலேயே,

"தனசேகர்..!!!!" என்று வீட்டுக்குள் இருந்து ஒரு தடித்த குரல் ஒலித்தது.

அந்த குரலை கேட்டதுமே மூன்று பேரும் உடனடியாய் திரும்பி, வீட்டுக்குள் பார்வையை வீசினார்கள். அங்கே கான்ஸ்டபிள் கனகராஜன் நின்றுகொண்டிருந்தார். இவர்கள் திரும்பிப் பார்த்ததும்,

"ஸாருக்கு தெரிஞ்ச பையன்தான்.. உள்ள அனுப்பு..!!" என்றார்.

அசோக் இப்போது தனசேகரனை ஏறிட்டு ஏளனமாய் ஒரு பார்வையை வீசினான். அதற்கு மேலும் அவருடைய அனுமதி தேவையில்லை என்பதை உணர்ந்தவன், அவரது பதிலுக்காக காத்திராமல் அவரை கடந்து சென்றான். வீட்டுக்குள் நுழைந்தவன், அங்கு நின்றிருந்த கனகராஜனுடன் சேர்ந்துகொண்டான். அவர் திரும்பி உள்ளறைக்கு நடக்க, அசோக் அவரை பின்தொடர்ந்தான்.

"என்னய்யா.. ஃபோன் நம்பரை வச்சு, அந்த பொண்ணு அட்ரஸ கண்டுபுடிச்சிட்டீங்களா..??" கனகராஜனின் குரலில் ஒருவித எள்ளல் தொனித்தது.

"அ..அதைப்பத்தி பேசுறதுக்குத்தான்.. ஸார் வர சொல்லிருக்காரு..!!" அசோக் அடக்கத்துடனே அவருக்கு பதில் சொன்னான்.

"ஹ்ம்ம்..!! உன்னை சொல்றதா.. இல்ல.. உனக்கு ஒத்து ஊதுற அவரை சொல்றதான்னு தெரியல..!! அந்தப்பொண்ணு மேல இவ்வளவு பைத்தியமா இருக்கியே.. உன் லவ்வு மேட்டர்லாம்.. உன்னை பெத்து வளத்தவங்களுக்கு தெரியுமா..??"

"ம்ம்.. தெரியும்..!! அவங்களுக்கும் தெரியும்.. அவங்களை பெத்து வளத்தவங்களுக்கும் தெரியும்..!! ஏன் கேக்குறீங்க..??"

அசோக் அவ்வாறு இயல்பாக கேட்க.. இப்போது கனகராஜனின் முகத்தில் ஒரு பெருத்த ஏமாற்றம் அப்பட்டமாக தெரிந்தது..!! காதல் என்ற பெயரில்.. வீட்டை ஏமாற்றுகிற விடலைப்பையன் என்பது.. அசோக்கைப் பற்றிய அவரது அனுமானமாக இருந்திருக்கும் போலிருக்கிறது..!!

"ஒ..ஒன்னுல்ல.. சு..சும்மா கேட்டேன்..!!" என்று தடுமாற்றமாய் சமாளித்தார்.

வெளிப்புற கட்டமைப்பை போல.. அந்த வீட்டின் உட்புற வடிவமைப்பும்.. அழகும் ஆடம்பரமும் மிகுந்ததாகவே இருந்தது..!! வெல்வெட் துணியாலான தரைவிரிப்புகள்.. தேக்கு மரத்தாலான அறைகலண்கள்.. இத்தாலித்தோல் போர்த்திய சாய்விருக்கைகள்.. கண்ணாடி ஸ்படிகம் பொதிந்த சாண்ட்லியர் விளக்குகள்..!! ஏலத்தில் வாங்கப்பட்ட எழில்மிகு அரியவகை ஓவியங்கள்.. உட்புற சுவர்களை அலங்கரிக்க உபயோகமாகியிருந்தன..!! அறைக்குள் இருந்த அத்தனை பொருட்களுமே.. அந்த வீட்டு உரிமையாளனின் செல்வச்செழிப்பை செப்பின.. பணச்செறிவை பறைசாற்றின..!!

ஆனால்.. வெளிப்புறத்தைப்போல வீட்டுக்குள் அதிக ஆள் நடமாட்டம் இருக்கவில்லை..!! ஹாலில் மட்டும்.. கன்னத்தில் கைவைத்தவாறு வீட்டு வேலைக்காரியும்.. கைகளை கட்டியவாறு கார் ட்ரைவரும் நின்றிருந்தனர்..!! ஹாலை கடந்து சென்ற கனகராஜன்.. வலது புறம் இருந்த அந்த அறையை அடைந்ததும் திரும்பினார்.. திரும்பியவர் வாசலிலேயே தயங்கி நின்றுகொண்டார்..!! அவருக்கு பின்பக்கமாக வந்து சேர்ந்த அசோக்.. ஆர்வமான ஒரு பார்வையை அந்த அறைக்குள் வீசினான்.. உள்ளே கண்ட காட்சியில் உடனே அதிர்ந்துபோய்.. மூச்சை சற்றே இழுத்து பிடித்துக் கொண்டான்..!!

மூங்கில் நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த ஆள்.. முன்பாக கிடந்த கண்ணாடி மேஜை மீது.. முதுகு குப்புற கவிழ்ந்திருந்தான்..!! முகத்தை பக்கவாட்டில் திருப்பி புதைத்து.. மூச்சு நின்று போய் இறந்து கிடந்தான்..!! முரட்டு மீசை.. கனத்த தேகம்.. மூக்கிலிருந்து வழிந்து உறைந்துபோன ரத்தம்.. மூடாத இமைகளுடன் நிலைகுத்திய பார்வை..!! அந்த கண்ணாடி மேஜையில்.. வெண்ணிறத்திலான ஒருவகை பொடி சிந்திக் கிடந்தது.. வெப்பத்தில் கருகிப் போன வெள்ளி தேக்கரண்டி ஒன்று.. வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட உயர்ரக மதுபுட்டி ஒன்று.. அதனருகில் நேற்றிரவு ஏற்றப்பட்டிருந்த மெழுகுவர்த்தி.. இப்போது உருகி, உயிர் தீர்ந்து, உறைந்து போயிருந்தது.. மேஜையில் கவிழ்ந்திருந்த அந்த ஆளைப்போலவே..!!

இரண்டு கைகளையும் இடுப்பில் ஊன்றியிருந்த ஸ்ரீனிவாச பிரசாத்.. இவர்களுக்கு முதுகு காட்டி நின்றுகொண்டிருந்தார்.. மஃப்டி உடையில்தான் இருந்தார்..!! காவல்த்துறை தடவியல் பிரிவை சேர்ந்த, நான்கு பேர் கொண்ட குழு.. அந்த அறைக்குள் இருந்த பொருட்களை ஆய்வு செய்துகொண்டிருந்தது..!! அவர்களுள்.. கண்ணாடியும் கையுறையும் அணிந்திருந்த ஒரு தடயவியல் நிபுணர்.. கால்களை மடக்கி தரையில் மண்டியிட்டு.. அந்த கண்ணாடி மேஜை நோக்கி குனிந்திருந்தார்..!! கையிலிருந்த ஒரு சிறிய தகரத்தகடால்.. அந்த வெண்ணிற பவுடரை கொஞ்சம் அள்ளினார்.. விரலால் தொட்டு நாவால் சுவைத்துப் பார்த்தார்..!! ஓரிரு வினாடிகள்.. பிறகு தலையை சுழற்றி ஸ்ரீனிவாச பிரசாத்தை ஏறிட்டவர்..

"Coke..!!"

என்றார் அழுத்தம் திருத்தமாக. அதைக்கேட்டதுமே ஸ்ரீனிவாச பிரசாத்திடம் இருந்து ஒரு சலிப்பான பெருமூச்சு வெளிப்பட்டது..!!

"ப்ச்.. ஆரம்பிச்சிடுச்சு.. தலைவலி..!!"

சொல்லிக்கொண்டே தலையை பரபரவென சொறிந்து கொண்டார்..!! அந்த தடவியல் நிபுணர் இப்போது மெல்ல மேலெழுந்தார்.. உயிரை விட்டிருந்த அந்த ஆளை உன்னிப்பாகப் பார்த்தவாறே.. கையுறைகளை கழட்டியபடியே ஸ்ரீனிவாச பிரசாத்திடம் சொன்னார்..!!

"ஆக்சிடண்டல் டெத் மாதிரிதான் தோணுது எஸ்பி.. எதும் ஃபோர்ஸ் பண்ணதுக்கான சிம்ப்டம்ஸ் இல்ல.. ஓவர்டோஸ் ஆகி உயிரை விட்ருக்கணும்..!! ட்ரக்ஸ் ப்ளஸ் ஆல்கஹால்..!! ஹ்ம்ம்.. உள்ள என்னென்ன வெடிச்சதோ தெரியல.. மூக்குல இருந்து ரத்தம் கொட்டிருக்கு..!!"

"ம்ம்..!!"

"Overall.. It looks pure accidental to me..!!"

"இப்போவே எந்த முடிவுக்கும் வந்துட வேணாம் பார்த்தி.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வரட்டும்.. பாத்துக்கலாம்..!!"

அமர்த்தலாக சொன்ன ஸ்ரீனிவாச பிரசாத், அடுத்த நொடியே சரக்கென திரும்பினார். வாசலில் நின்றிருந்த கனகராஜனையும் அசோக்கையும் பார்த்ததும், அவரிடம் மெலிதாக ஒரு திகைப்பு. ஆனால் உடனடியாய் அந்த திகைப்பை சமாளித்துக் கொண்டவர்,

"ஒரு அஞ்சு நிமிஷம் அசோக்..!!"




என்று அசோக்கை பார்த்து ஒரு இதமான புன்னகையை வீசினார். பிறகு கனகராஜனை ஏறிட்டவர், முகத்தில் இன்ஸ்டன்டாக ஒரு கடுமையை வரவழைத்துக்கொண்டு,

"வேன் என்னாச்சு கனகு..??" என்றார்.

"வந்துக்கிட்டு இருக்கு ஸார்.. இப்போத்தான்.."

கனகராஜன் பதற்றத்துடன் சொல்லி முடிப்பதற்கு முன்பே.. அவருடைய பதிலில் ஆர்வம் இல்லாதவர் போல.. ஸ்ரீனிவாச பிரசாத் படக்கென திரும்பி உள்ளே நடந்தார்..!! ஒருகணம் குழம்பிய கனகராஜன்.. பிறகு அவசரமாக நகர்ந்து அவரை பின்தொடர்ந்தார்..!! என்ன செய்வது என்று புரியாத அசோக்கும்.. கனகராஜனின் பின்னால் நடந்தான்..!!

விடுவிடுவென நடந்த ஸ்ரீனிவாச பிரசாத் பக்கத்து அறையை அடைந்தார்.. அவருக்கு பின்னாலேயே, கனகராஜனும் அசோக்கும்..!!

பக்கத்து அறைக்குள் அந்தப்பெண் அமர்ந்திருந்தாள்.. அழகாக இருந்தாள்.. முப்பதுகளின் ஆரம்பத்தில் ஏதாவது ஒரு வயது இருக்கலாம்.. முகத்தில் ஒருவித அசாத்திய அமைதி..!! அவளது கையில் பால்சாதம் நிரம்பிய கிண்ணம்.. மடியில் அவளுடைய ஐந்துவயது பெண்குழந்தை..!! இவர்கள் வாசலில் வந்து நின்றதை அந்தப்பெண் கவனிக்கவில்லை.. குழந்தைக்கு சாதம் ஊட்டுவதில் குறிப்பாக இருந்தாள்..!! அந்தக்குழந்தை சாதத்தை அசைபோட்டவாறே.. வாயிடுக்கில் பாலும், வார்த்தைகளில் மழலையும் வழிந்தோட.. அம்மாவை கேட்டது..

"ஸ்கூலுக்கு போகலைன்னா மிஸ் திட்டுவாங்களே..??"

"இல்லடா.. மிஸ் திட்டமாட்டாங்க..!! மம்மி.. மிஸ்ட்ட பேசிட்டேன்..!! சுஜிக்குட்டி.. மண்டே ஸ்கூலுக்கு வந்தா போதும்னு மிஸ் சொல்லிட்டாங்க..!!"

"நெஜமா..??" அந்தக்குழந்தையின் கண்களில் ஒரு சந்தோஷ மின்னல்.

"ம்ம்.. நெஜமா..!!" அந்தப்பெண்ணின் இதழ்களில் ஒரு வறண்ட புன்னகை.

அப்பா இறந்துபோன விஷயம், அந்தக்குழந்தைக்கு இன்னும் தெரியாது போலிருந்தது.. இப்போதுதான் தூக்கத்திலிருந்தே விழித்திருக்கும் போல தெரிந்தது..!! கண்களில் ஒருவித சோர்வுடனும்.. 'இன்று பள்ளிக்கு செல்கிற தொல்லை இல்லை' என்ற மகிழ்ச்சியுடனும்.. அம்மா ஊட்டிய பால்சாதத்தை விழுங்கிக்கொண்டிருந்தது..!!

இப்போது ஸ்ரீனிவாச பிரசாத் 'ம்க்கும்' என்று மெலிதாக தொண்டையை செரும.. அந்தப்பெண் கவனம் கலைந்து திரும்பிப் பார்த்தாள்..!! இவர்கள் மூன்று பேரையும் வாசலில் கண்டதும்.. 'என்ன..' என்பது போல கேள்வியாக பார்த்தாள்..!!

"கொஞ்சம் பேசணும்..!!" என்றார் ஸ்ரீனிவாச பிரசாத்.

"உ..உள்ள வாங்க..!!" என்றாள் அவள்.

ஸ்ரீனிவாச பிரசாத் மட்டும் அறைக்குள் நுழைய.. அசோக்கும் கனகராஜனும் வாசலுக்கு அருகிலேயே நின்றுகொண்டார்கள்..!! உள்ளே சென்ற ஸ்ரீனிவாச பிரசாத்.. அந்தப்பெண்ணுக்கு அருகே கிடந்த இன்னொரு சேரை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தார்.. மென்மையான குரலிலேயே ஆரம்பித்தார்..!!

"இது.. ஜஸ்ட் ஃபார்மல் என்கொய்ரிதான் மிஸஸ் தேவராஜ்.. நீங்க ஒன்னும்.." ஸ்ரீனிவாச பிரசாத் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, அந்தப்பெண் இடைமறித்து,

"நிர்மலா..!!" என்றாள்.

"வாட்..??" ஸ்ரீனிவாச பிரசாத் புரியாதவராய் நெற்றி சுருக்கினார்.

"என் பேர் நிர்மலா.. அப்படியே என்னை கூப்பிடலாம்..!!"

அந்தப்பெண் இறுக்கமான குரலில் சொல்லிவிட்டு, குழந்தையின் வாயில் சாதத்தை திணித்தாள். ஸ்ரீனிவாச பிரசாத் ஒருசில வினாடிகள் ஒருவித திகைப்புடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். அப்புறம் ஒரு பெருமூச்சுடன், அந்த திகைப்பை சமாளித்துக்கொண்டு சொன்னார்.

"ஓகே.. மிஸஸ் நிர்மலா.. இ..இது.. இது ஜஸ்ட் ஃபார்மல் என்கொய்ரிதான்.. நீங்க எதும் டென்ஷன் ஆகிக்க வேணாம்னு சொல்ல வந்தேன்..!!"

"இல்ல.. டென்ஷன் ஆகல..!! கேளுங்க..!!"

"உ..உங்க ஹஸ்பண்டுக்கு எத்தனை நாளா இந்தப்பழக்கம் இருக்கு..??"

"குடிப்பழக்கம் கல்யாணம் ஆன நாள்ல இருந்தே இருக்கு..!! இப்போ ஒரு ரெண்டு வருஷமாத்தான்.. இதுலாம்..!!"

"ம்ம்..!! அவர் கன்ஸ்யூம் பண்ணிருக்குறது.. கொக்கைன்'ன்னு சொல்ற ஒருவகை போதைப்பொருள்..!! கேள்விப்பட்ருக்கீங்களா..??"

"இ..இல்ல.. கேள்விப்பட்டது இல்ல..!!"

"ரொம்ப காஸ்ட்லி.. ஒரு சின்ன பொட்டலமே இருபதாயிரம், முப்பதாயிரம் ஆகும்..!! இங்க சென்னைல அவ்ளோ ஈஸியா கெடைச்சிடாது.. ஸவ்த் அமெரிக்கால இருந்து ஸ்மக்ள் பண்ணி.. மும்பை, டெல்லி மூலமாத்தான் சென்னைக்கே வந்தாகனும்..!!"

"ஸோ..??"

"நத்திங்.. இந்த ட்ரக்ஸ்லாம் சென்னைல புழக்கத்துல இருக்குதுன்ற ந்யூஸே.. எங்க டிப்பார்ட்மண்ட்டுக்கு பெரிய தலைவலியான சமாச்சாரம்..!! மீடியாக்கு தெரிஞ்சா சொல்லவே வேணாம்.. ஒரு வழி பண்ணிடுவாங்க..!! It's a serious issue for us Mrs.Nirmala..!! என்ன சொல்ல வரேன்னு புரியுதா..??"

"பு..புரியுது..!!"

"ம்ம்..!! அவருக்கு இந்த ட்ரக்ஸ்லாம் எப்படி கெடைக்குதுன்னு.. உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா..??"

ஸ்ரீனிவாச பிரசாத் கேட்கவும், நிர்மலா இப்போது பட்டென அமைதியானாள். சிலவினாடிகள் சாதத்தை பிசைந்துகொண்டே, சற்று யோசித்தாள். பிறகு பிசைந்த சாதத்தை சுஜிக்கு தந்தவாறே, மெலிதான குரலில் சொன்னாள்.

"எனக்கு அந்த ஆள் பேர்லாம் தெரியாது.. ஆனா.. அந்த ஆள் மூலமாத்தான் இவருக்கு இதெல்லாம் கெடைக்குதுன்னு மட்டும் நல்லா தெரியும்..!! அப்பப்போ இங்க வருவான்.. இவரும் அவனுக்கு அப்பப்போ பணம் குடுக்குறதை நான் பாத்திருக்கேன்..!! நேத்து கூட.. இவர் வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்துல அந்த ஆள் பைக்ல இங்க வந்தான்.. இவர் வாசலுக்கே போய் அவன்ட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு வந்தாரு..!! அனேகமா.. அந்த கருமத்தை குடுக்குறதுக்குத்தான் அவன் வந்திருக்கணும்..!!"

"ம்ம்.. அ..அவன் பேர் தெரியாது சரி.. ஆள் பாக்குறதுக்கு எப்படி இருப்பான்னு கொஞ்சம் சொல்ல முடியுமா..??"

"கருப்பா.. குண்டா.. கொஞ்சம் குள்ளமா இருப்பான்.. சுருட்டை முடி..!! இந்த எடத்துல ஒரு வெட்டுக்காயமோ, தீக்காயமோ..!! அவனுக்கு ஏதோ நரம்புத்தளர்ச்சின்னு நெனைக்கிறேன்.. பேசுறப்போ அடிக்கடி வாய் ஒருமாதிரி கோணிக்கும்.. பல்லுலாம் கறையா இருக்கும்.. பாத்தாலே அப்படியே வெறுப்பா இருக்கும்..!!"

நிர்மலா ஒருவித வெறுப்புடனே சொல்லிமுடிக்க, ஸ்ரீனிவாச பிரசாத் இப்போது வாசல் பக்கம் திரும்பினார். இதழில் கசிகிற ஒரு புன்னகையுடன் கனகராஜனை கேட்டார்.

"யார்ன்னு தெரியுதா கனகு..??"

"ந..நம்ம.. நெற்குன்றம் காசியா இருக்குமோன்னு தோணுது ஸார்..!!"

"சந்தேகமே வேணாம்.. அவனேதான்..!! அம்பதுக்கும் நூறுக்கும் பொட்டலம் போட்டுட்டு இருந்த நாயி.. 'Coke peddling' பண்ற அளவுக்கு பெரிய ஆளாயிட்டான் பாத்தியா..?? த்தா.. கைல மாட்டட்டும்..!!" கருவிய ஸ்ரீனிவாச பிரசாத், மீண்டும் நிர்மலாவின் பக்கம் திரும்பிக் கொண்டார்.

"நீங்க சொல்ற ஆளு பேரு காசி..!! அவன் மேல ஏற்கனவே நாலஞ்சு கேஸ் இருக்குது.. போலீஸ்க்கே டிமிக்கி குடுத்துட்டு திரியிறவன்..!!"

"ம்ம்..!!"

"ஹ்ம்ம்... எதுக்கும்.. அவனோட ஃபோட்டோவை அப்புறம் வந்து காட்ட சொல்றேன்.. நீங்க ஒருதடவை பார்த்து அவன்தானான்னு கன்ஃபார்ம் பண்ணிருங்க.. சரியா..??"

"ஷ்யூர்..!! ம்ம்ம்ம்... அப்படினா.. அ..அந்த போதை மருந்துதான் அவர் உயிர் போனதுக்கு காரணமா..??"

"அது போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தப்புறந்தான் தெரியும்..!!"

"ஓ..!!"

"அதுக்கு முன்னாடி.. எனக்கு இன்னும் சில விஷயங்கள் க்ளியர் பண்ணிக்கணும்..!!"

"கேளுங்க..!!"

"ம்ம்ம்... நேத்து நைட்.. வீட்ல யாரார்லாம் இருந்தீங்க..??"

"நான்.. அவர்.. அப்புறம் சுஜி.. மூணு பேர்தான்..!! அவர் வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்துலயே.. வேலைக்காரியும் ட்ரைவரும் கெளம்பிட்டாங்க..!!"

"அவரை கடைசியா எப்போ உயிரோட பாத்தீங்க..??"

"நேத்து நைட்டு..!!"

"அதான் எப்போ..??"

"அ..அந்த ஆள்ட்ட பேசிட்டு.. அப்புறம் அந்த ரூமுக்குள்ள போனாரு.. அதுதான் கடைசி..!!"

"அப்போ டைம் என்ன இருக்கும்..??"

"எட்டு மணி இருக்கும்..!!"

"ம்ம்.. நைட்டு எட்டு மணிக்கு உள்ள போயிருக்காரு.. மிட்னைட்க்குள்ள அவர் உயிர் போயிருக்கனும்..!! காலைல எட்டு மணிக்கு.. கார் ட்ரைவர் வந்து பாத்துத்தான்.. அவர் இறந்து போன விஷயம் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு..!! அப்படித்தான..??" ஸ்ரீனிவாச பிரசாத் கேட்டுக்கொண்டிருக்க.. இடையில் புகுந்த சுஜி..

"யாரு மம்மி எறந்து போயிட்டாங்க..??"

என்று மழலைக்குரலில் அம்மாவிடம் கேட்டாள்..!! உடனே.. அறையில் இருந்த மற்ற நால்வரும்.. முகத்தில் ஒருவித திகைப்புடன் அந்தக் குழந்தையை ஏறிட்டனர்..!! அந்த மாதிரி ஒரு சூழ்நிலையை சந்திப்பது.. அதுவே அவர்களுக்கு முதல்முறை..!! ஒரு சில வினாடிகள் அமைதிக்கு பிறகு.. பதிலேதும் சொல்லாமல்.. பால்சாதத்தாலே மகளின் வாயை அடைத்தாள் நிர்மலா..!! பிறகு.. ஸ்ரீனிவாச பிரசாத்திடம் திரும்பி சொன்னாள்..!!

"ஆ..ஆமாம்..!!"




"ம்ம்.. காலைல வரைக்கும்.. அவரை போய் பாக்கணும்னு உங்களுக்கு தோணலையா..??"

"இல்ல..!!"

"ஏன்..??"

"அவருக்கு அந்த மாதிரி டிஸ்டர்ப் பண்றது பிடிக்காது..!! முக்கியமா.. அவர் அந்த ரூமுக்குள்ள போறப்போலாம்..!!"

"ஹ்ம்ம்..!! அந்த ரூம்கதவு வெளிப்பக்கமா லாக் ஆகிருந்ததா ட்ரைவர் சொன்னான்..!! ரூமுக்குள்ள இருந்துக்கிட்டு.. கண்டிப்பா உங்க ஹஸ்பண்டால அதை பண்ணிருக்க முடியாது.. சுஜியும் அந்த அளவுக்கு ஹைட்லாம் கிடையாது..!!" ஸ்ரீனிவாச பிரசாத் சுற்றி வளைக்க,

"நான்தான் லாக் பண்ணினேன்..!! நேத்து நைட்டு அவர் அந்த ரூமுக்குள்ள போன கொஞ்ச நேரத்துல.. நானேதான் கதவை வெளிப்பக்கமா லாக் பண்ணினேன்..!!" நிர்மலா நேரடியாகவே விஷயத்துக்கு வந்தாள்.

"ஏன்..??"

"அ..அது.. ஸம்டைம்ஸ் நான் அந்த மாதிரி பண்ணுவேன்.. இல்லனா அவரை கண்ட்ரோல் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கும்..!! அதுவும்.. முக்கியமா.. அவர் அந்த ரூமுக்குள்ள போறப்போலாம்..!!"

"ஓ..!!"

"அதும் இல்லாம.. நேத்து.. என் மேல அவர் ரொம்ப கோவத்துல வேற இருந்தாரு.. அதான்..!!"

எந்த ஒரு படபடப்பும் இல்லாமல்.. நிர்மலா நிதானமாக பதில் சொன்னாள்.. பதில் சொன்னதோடு மட்டுமல்லாது, மகளுக்கு அவ்வப்போது பால்சாதம் ஊட்டுகிற கவனமும் அவளிடம் இருந்து சிதறவில்லை..!! ஸ்ரீனிவாச பிரசாத் சில வினாடிகள் அவளையே கூர்மையாக பார்த்தார்.. அந்த கூர்மையான பார்வையில் ஒருவித குறுகுறுப்பும் கலந்திருந்தது..!!

"உங்ககிட்ட இன்னொன்னு கேக்கணும்..!!"

"என்ன..??"

"அவருக்கு கார்டியாக் அரஸ்ட் மாதிரி இருக்குது..!! கண்டிப்பா.. ரொம்ப வேதனைக்கு அப்புறந்தான் அவரோட உயிர் பிரிஞ்சிருக்கணும்.. வலில துடிச்சிருக்கணும்.. சத்தம் போட்ருக்கணும்.. கத்திருக்கணும்..!!" சொன்ன ஸ்ரீனிவாச பிரசாத் சற்று நிறுத்தி,

"நீங்க போய் அவரை பாக்கலையா..?? ஐ மீன்.. அவர் சத்தம் போட்டது உங்களுக்கு கேக்கலையா..??" என்று குதர்க்கமாக கேட்டார்.

"இல்ல.. நான் போய் பாக்கலை..!! ஐ மீன்..அவர் சத்தம் போட்டது எனக்கு கேக்கலை..!!"

குதர்க்கமான கேள்விக்கு, நிர்மலாவும் குதர்க்கமாகவே பத்தி சொல்ல.. இதழில் அரும்பிய ஒரு மெலிதான புன்னகையை, ஸ்ரீனிவாச பிரசாத்தால் தவிர்க்க முடியவில்லை.. புன்னகைத்தார்..!!

"ஏன் சிரிக்கிறீங்க..??"

"நத்திங்..!!"

"என் மேல சந்தேகப்படுறீங்களா.. அவரோட சாவுக்கு நான் காரணமா இருந்திருப்பேன்னு..??"

"ம்ம்ம்ம்.. அப்படி சொல்லமுடியாது..!!"

"அப்புறம்..??"

"சந்தேகம்னு இல்ல.. பட்.. மனசுல சின்னதா ஒரு உறுத்தல்..!! போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வர்ற வரை அந்த உறுத்தல் இருந்துட்டேதான் இருக்கும்..!!"

"ஓ..!! அது என்ன உறுத்தல்னு நான் தெரிஞ்சுக்கலாமா..??"

"ஹ்ம்ம்.. எப்படி சொல்றது.. சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே..??"

"இல்ல.. சொல்லுங்க..!!"

"நான் இந்தமாதிரி நெறைய சாவு பாத்திருக்கேன் மிசஸ் நிர்மலா.. அதே மாதிரி.. செத்துப்போன ஆளுங்களோட பொண்டாடிங்கள்லாம்.. எந்த மாதிரி ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்க, அழுது ஒப்பாரி வைப்பாங்கன்னும் பாத்திருக்கேன்..!! ஆனா நீங்க.. You are different..!! புருஷன் போயிட்டாரேன்ற அதிர்ச்சியோ, துக்கமோ, கவலையோ.. துளியூண்டு கூட உங்ககிட்ட இல்ல.. ஏன் அப்படி..?? You are so Cool, Calm And Collected..!!! அதுதான் அந்த உறுத்தல்..!!"

ஸ்ரீனிவாச பிரசாத் கேட்ட அந்த கேள்வி.. அசோக்கிற்கும், கனகராஜனுக்குமே அவரவர் மனதில் இருந்தது..!! இப்போது அவர் அந்த கேள்வியை கேட்டதும்.. அவர்களுமே.. 'என்ன பதில் சொல்லப் போகிறாள்' என்பது மாதிரியான ஒரு ஆர்வத்துடன் நிர்மலாவை பார்த்தனர்..!! நிர்மலா சில வினாடிகள் எதுவும் பேசவில்லை.. கேள்வி கேட்ட ஸ்ரீனிவாச பிரசாத்தின் முகத்தையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள்..!!

பிறகு என்ன நினைத்தாளோ.. மடியில் அமர்ந்திருந்த தனது மகளிடம் திரும்பினாள்.. அவளது வாயைச்சுற்றி அப்பியிருந்த சாதத்துணுக்குகளை, புடவைத்தலைப்பால் சுத்தம் செய்தாள்..!! அவர்கள் பேசிக்கொண்ட விஷயத்தை அரைகுறையாக புரிந்துகொண்டு.. குழப்பம் அப்பிய கண்களுடன் மருட்சியாக பார்த்துக்கொண்டிருந்த மகளிடம்.. மெல்லிய குரலில் சொன்னாள்..!!

"சுஜிக்குட்டிக்கு ஒரு விஷயம் தெரியுமா..??"

"தெரியாதே..!!"

"டாடி.. செத்துப் போயிட்டாரு..!!"

"நம்ம டாடியா..??"

"ம்ம்..!!"

"நெஜமா..??"

"நெஜமா..!!"

"அப்போ டாடி இனிமே நம்மள அடிக்க மாட்டாரா..??"

"அடிக்க மாட்டாரு..!!"

"ஹையா..!! ஜாலி..!!!"

பால்நிற பற்கள் பளீரிட சுஜி சந்தோஷத்தில் குதுகலித்தாள்.. ஆண்கள் மூவரும் அப்படியே அதிர்ந்து போய் அவளை பார்த்தார்கள்..!! அப்பா இறந்த செய்தியைக் கேட்டு ஒரு குழந்தை ஆனந்தம் அடைகிறது என்றால்.. 'எப்படிப்பட்ட மோசமான ஒரு மனிதனாக அவன் இருந்திருப்பான்' என்று.. உடனடியாக அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது..!! ஒரு வேதனையான உணர்வு அவர்களது இதயத்தை பிசைவதை அவர்களால் உணர முடிந்தது..!!

நிர்மலா மகளிடம் இருந்து பார்வையை விலக்கி.. ஸ்ரீனிவாச பிரசாத்தை ஏறிட்டாள்..!! அவளுடைய கண்கள் இப்போது சற்றே கலங்கிப்போய் பளபளத்தன.. அந்த கலங்கிய கண்களை இமைகளால் இடுக்கி.. மிகக்கூர்மையாக அவரை ஒரு பார்வை பார்த்தாள்.. ஒருவித இறுக்கமும், விரக்தியும் கலந்த மாதிரியான குரலில் கேட்டாள்..!!

"வேற ஏதாவது கேக்கணுமா..??"

உண்மையில்.. ஸ்ரீனிவாச பிரசாத் நிர்மலாவிடம் இன்னும் சில கேள்விகள் கேட்க எண்ணியிருந்தார்.. ஆனால் அந்த கேள்விகள் எல்லாம் இப்போது அவரது நினைவடுக்கிலிருந்து தொலைந்து போயிருந்தன..!! குழந்தையின் குதுகலத்தில் ஒருவித திகைப்புக்கு சென்றிருந்தவர்.. அந்த திகைப்பு மாறாமலேயே..

"இ..இல்ல.. வேற ஒன்னும் இல்ல..!!" என்று தடுமாற்றமாக சொன்னவாறு, சேரில் இருந்து எழுந்துகொண்டார்.

அறையை விட்டு வெளியே வந்த ஒரு சில நிமிடங்களிலேயே.. ஸ்ரீனிவாச பிரசாத் அந்த தடுமாற்றத்தை உதறியிருந்தார்.. மீண்டும் பரபரப்புடன் பணியில் ஈடுபட ஆரம்பித்திருந்தார்..!! அசோக்கிடம் தனித்து பேசுவதற்கு.. அதன்பிறகும் ஐந்து நிமிடங்கள் எடுத்துக் கொண்டார்..!! அடுத்த அறைக்கு சென்றவர், அங்கிருந்த தடயவியல் குழுவிடம், மேலும் சில உத்தரவுகள் பிறப்பித்தார்.. கார் ட்ரைவரை வரவழைத்து, ஏதோ ஒரு சந்தேகம் தீர்த்துக்கொண்டார்.. 'வேன் எங்கே' என்று கேட்டு, கனகராஜனை மீண்டும் டென்ஷன் ஆக்கினார்.. செல்ஃபோனில் யாரையோ அழைத்து, கெட்ட வார்த்தையில் திட்டினார்..!!

சுஜி தந்த அதிர்வில் இருந்து மீள்வதற்கு.. அசோக்கிற்கும் அந்த ஐந்து நிமிட நேரம் அவசியமாக இருந்தது..!! அறையை விட்டு வெளியே வந்தபிறகும்.. அந்தக்குழந்தையின் வெள்ளைச்சிரிப்பே.. திரும்ப திரும்ப அவன் மனதில் தோன்றிக் கொண்டிருந்தது..!! பொறுப்பற்ற தேவராஜ் மாதிரியான ஆட்கள் மீதும்.. பணம் சேர்ப்பதற்காக, பல குடும்பங்களது உளநிம்மதியில் உலைவைக்கிற காசி மாதிரியான ஆட்கள் மீதும்.. கடுங்கோபம் பிறந்தது அவனுக்கு..!! சுஜி பற்றிய நினைவுடனே.. ஸ்ரீனிவாச பிரசாத் பணியாற்றும் விதத்தை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்..!!

ஐந்து நிமிடங்கள் கரைந்து போயிருந்த வேளையில்.. வீட்டு வாசலில் DEVARAJ - IN என்று காட்டிக் கொண்டிருந்த, மரத்தாலான பெயர்ப்பலகையின் கைப்பிடியை பற்றி இழுத்து.. DEVARAJ - OUT என்று காட்டுமாறு அதை அசோக் மாற்றிக்கொண்டிருந்த நேரத்தில்.. அவனுக்கு பின்பக்கமாக வந்த ஸ்ரீனிவாச பிரசாத்.. மெலிதாக அவனது தோளை தட்டினார்..!!

"வா அசோக்..!!"

என்று சொல்லிவிட்டு அவனுக்காக காத்திராமல்.. விடுவிடுவென முன்னால் நடந்தார்.. வீட்டை விட்டு வெளியேறினார்..!! உடனடியாய் சுறுசுறுப்பான அசோக்கும்.. வாசலில் நிரம்பியிருந்த கும்பலுக்குள் புகுந்து.. நெருக்கமாக அவரை பின்தொடர்ந்தான்..!!

"ஸ்டேஷனுக்கே போயிட்டியா..??"

"இல்ல ஸார்.. போற வழிலேயே உங்க கால் வந்துடுச்சு.. நேரா இங்க வந்துட்டேன்..!! எ..என்ன விஷயம் ஸார்.. எதுக்கு வர சொன்னீங்க..??"

"வா சொல்றேன்..!!"

மரநிழலில் நின்றிருந்த போலீஸ் ஜீப்பை நோக்கி ஸ்ரீனிவாச பிரசாத் நடந்தார்..!! ஜீப்பை அடைந்ததும்.. சற்றே குனிந்து.. டேஷ்போர்டில் இருந்து சிகரெட் பாக்கெட்டையும், லைட்டரையும் எடுத்தார்..!!

"தம்மடிக்கிறியா..??" சிகரெட் பாக்கெட்டை அசோக்கிடம் நீட்டினார்.

"இ..இல்ல ஸார்.. வேணாம்..!!"

அசோக் மறுத்துவிட.. ஸ்ரீனிவாச பிரசாத் மட்டும் ஒரு சிகரெட் உருவி பற்ற வைத்துக் கொண்டார்.. வாகனத்தின் மீது வசதியாக சாய்ந்து கொண்டார்..!! புகையை மிக ஆழமாக நுரையீரலுக்குள் இழுத்தார்.. பிறகு.. குபுகுபுவென உள்ளிழுத்த புகையை வெளியே ஊதியவாறே சலிப்பாக சொன்னார்..!!

"ப்ச்.. காலங்காத்தாலேயே இப்படி எழவு விழும்னு நெனச்சே பாக்கல..!! எப்படியும் இன்னும் நாலஞ்சு நாளைக்கு என் தாலிய அறுத்துருவானுக.. நின்னு பேசக்கூட எனக்கு நேரம் இருக்காது.. அதான் உன்னை இங்கயே வரசொல்லிட்டேன்..!! ரொம்ப வெயிட் பண்ண வச்சுட்டனா..??"

"பரவால ஸார்..!!"

"ம்ம்..!! ஆக்சுவலா.. ஃபோன்லயே கூட மேட்டரை சொல்லிருக்கலாம் அசோக்.. ஆனா.. எனக்கென்னவோ நேரா சொல்றது பெட்டர்னு தோணுச்சு..!!" ஸ்ரீனிவாச பிரசாத் சொல்ல, அசோக்கிடம் மெலிதான பதற்றம்.

"எ..என்ன விஷயம் ஸார்..??"

அந்த பதற்றம் தொனிக்கிற குரலிலேயே அசோக் கேட்க.. ஸ்ரீனிவாச பிரசாத் ஒருசில வினாடிகள் அமைதியாக இருந்தார்..!! பிறகு அசோக்கின் கண்களை கூர்மையாக பார்த்தவாறு மெல்லிய குரலில் சொன்னார்..!!

"அந்த நம்பரை வச்சு.. அட்ரஸை கண்டு பிடிச்சாச்சு..!!"

அவர் சொல்லவும், அசோக்கின் முகத்தில் இப்போது பட்டென ஒரு பரவசம்.. ஏதோ மீராவையே அடைந்துவிட்டவன் போல, அவனிடம் அப்படி ஒரு பூரிப்பு..!!

"என்ன ஸார் நீங்க.. இவ்வளவு முக்கியமான மேட்டரை இவ்வளவு சாதாரணமா சொல்லிட்டு இருக்கீங்க..??"

"இருடா.. நான் சொல்றதை முழுசா கேட்டுட்டு பேசு..!!" ஸ்ரீனிவாச பிரசாத் அவ்வாறு அசோக்கை அடக்கியதும், அவனது உற்சாகம் சற்றே குறைந்து போனது.

"ஏன் ஸார்.. ஏதாவது ப்ராப்ளமா..??"

"ப்ராப்ளம்லாம் ஒன்னுல்ல..!! ம்ம்ம்.. மேட்டர் என்னன்னா.. நீ சொன்ன அந்த நம்பர் விஜயசாரதின்ற பேர்ல ரெஜிஸ்டர் ஆகி இருக்கு..!!"

"விஜயசாரதின்னா..????" அசோக் சற்றே குழப்பமாகி, கேள்வியை இழுத்தான்.

"ஆமாம்.. பையன்தான்..!! ஆக்சுவலா அந்தப்பையன் இண்டியாலயே இல்ல.. அவன் வெளிநாட்டுக்கு போய் ஒரு வருஷத்துக்கு மேல ஆச்சு..!!"

"ஒ..ஒருவேளை.. அந்த விஜயசாரதி நம்ம மீராவுக்கு தெரிஞ்ச பையனா இருக்கலாம் இல்லையா.. அவன் இவளுக்கு அந்த நம்பர் வாங்கித் தந்திருக்கலாமே..?? அந்தப்பையன்ட்ட பேசுனா.."

"ப்ச்.. என்னை சொல்ல விடுடா..!!" ஸ்ரீனிவாச பிரசாத் சற்றே எரிச்சலாக,

"ச..சரி.. சொல்லுங்க..!!" அசோக் தனது ஆர்வத்தை கட்டுப் படுத்திக் கொண்டான்.

"கே.கே.மூர்த்தின்னு கேள்விப்பட்டிருக்கியா..??"

"இல்ல.. யாரு அவரு..??"

"பெரிய பணக்காரர்.. மூணு காலேஜ், ரெண்டு ஹாஸ்பிடல், ஒரு லிக்கர் ஃபேக்டரி..!! ரொம்ப பெரிய கையி.. நார்த் சென்னைல ரொம்ப பவர்ஃபுல்..!! அவரோட பையன்தான் இந்த விஜயசாரதி..!!"

"ஓ..!!"

"அவருக்கு மாதவரத்துல ஒரு பங்களா இருக்கு.. இந்த ஸிம் ரெஜிஸ்டர் ஆகிருக்குறது அந்த அட்ரஸ்லதான்..!!"

"ம்ம்..!!"

"நான் அந்த அட்ரஸ்க்கு போய்.. கே.கே.மூர்த்தியோட பி.ஏவை மீட் பண்ணினேன்..!! அவர் மூலமா.. அந்தப்பையனோட ஃபாரீன் காண்டாக்ட் நம்பர் வாங்கி பேசினேன்..!!"

"ஓ.. என்ன சொன்னான்..??" அசோக்கிடம் இப்போது மீண்டும் ஒரு உற்சாகம்.

"அவனுக்கு கொஞ்ச நேரம் ஒண்ணுமே புரியல..!! திடீர்னு.. சென்னைல இருந்து போலீஸ்ன்னதும்.. என்ன ஏதுன்னு தெரியாம.. பையன் கொஞ்சம் டென்ஷனாயிட்டான்..!!"

"அப்புறம்..??"

"நான் அவனை கொஞ்சம் கூல் பண்ணினேன்.. அந்த நம்பர் அவன் பேர்ல ரிஜிஸ்டர் ஆகி இருக்குறதை பத்தி சொன்னேன்.. மீராவோட அடையாளம்லாம் சொல்லி.. அந்த மாதிரி ஒரு பொண்ணை உங்களுக்கு தெரியுமான்னு கேட்டேன்..!!"

"அ..அதுக்கு அவன் என்ன சொன்னான்..??"

"அந்த மாதிரி யாரையும் அவனுக்கு தெரியாதாம்..!!"

ஸ்ரீனிவாச பிரசாத் அழுத்தம் திருத்தமாக சொல்ல, அசோக்கிடம் இருந்த உற்சாகம் மொத்தமும் இப்போது காணாமல் போனது.

"ஓ..!!" அவனது குரலும் வறண்டு போய் ஒலித்தது.

"ஆக்சுவலா.. ஒரு வருஷத்துக்கு முன்னாடி.. ஐ மீன்.. அந்த விஜயசாரதி இண்டியால இருக்குறப்போ.. அவன் ஃப்ரண்ட்சோட சேர்ந்து ஒரு ரெஸ்டாரன்ட் போயிருந்திருக்கான்.. அங்க அவனோட செல்ஃபோனை தொலைச்சிருக்கான்..!! அப்போ.. அதை அவன் ஒரு பெரிய விஷயமா எடுத்துக்கல.. அப்படியே விட்டுட்டான்..!!"

ஸ்ரீனிவாச பிரசாத் சொல்ல சொல்ல.. அசோக் கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்கிக் கொண்டிருந்தான்.. முற்றிலும் தளர்ந்து போனான்..!! ஏற்கனவே ஐந்தாறு நாட்கள் தானாக மீராவை தேடியலைந்து.. அதில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத நிலையில்.. அந்த செல்ஃபோன் நம்பரைத்தான், மிகப்பெரிய துருப்புச்சீட்டாக அவன் எண்ணியிருந்த வேளையில்.. ஸ்ரீனிவாச பிரசாத்திடம் இருந்து வந்த இந்த செய்தி.. இடியென அவனது இதயத்தில் இறங்கியது..!!

"ம்ம்..!!" வாயிலிருந்து வந்த வார்த்தை கூட குறைந்த டெசிபலில் ஒலித்தது.

"அந்த தொலைஞ்சுபோன செல்ஃபோன்ல இருந்த ஸிம்மை வச்சுத்தான்.. உன் ஆளு உன்கூட இத்தனை நாள் வெளயாண்ட்ருக்கா..!!"

ஏதோ ஒரு உணவகத்தில் கண்டெடுத்த.. யாருடைய கைபேசியையோ வைத்துக்கொண்டா.. இத்தனை நாட்கள் மீரா தன்னிடம் பேசிக் கொண்டிருந்தாள்..?? அசோக்கிற்கு ஏனோ அதை நம்புவதற்கு கடினமாக இருந்தது..!!

"ந..நம்ப முடியல ஸார்..!!"

"என்ன நம்ப முடியல..??"

"யாரோ ஒருத்தரோட ஃபோனை வச்சுக்கிட்டு.. இத்தனை நாளா..!! என் மீரா அந்த மாதிரி ஆளு கெடையாது ஸார்..!!"

"ம்ம்.. சரி.. வேற ஏதோ ஒரு வழில.. வேற யார் மூலமாவோ.. தொலைஞ்சு போன அந்த ஃபோன் அவ கைக்கு போயிருக்கலாம்..!! ஆனா.. இப்போ அது மேட்டர் இல்ல..!!"

"பின்ன..??"

"அவளை ட்ரேஸ் பண்றதுக்கு இருந்த ஒரே ரூட்டும்.. இப்போ க்ளோஸ் ஆயிடுச்சு..!!"

ஸ்ரீனிவாச பிரசாத் சொன்ன வார்த்தைகள், அசோக்கின் மனதில் ஒரு இனம்புரியாத வேதனையை கிளறிவிட ஆரம்பித்தன.

"வே..வேற வழியே இல்லையா ஸார்..??" என்று பரிதாபமாக கேட்டான்.

"இருக்கு.. அவ திரும்ப அந்த நம்பரை யூஸ் பண்ணினா.. கண்டிப்பா ட்ரேஸ் பண்ண முடியும்..!!"

"அவ எப்படி ஸார் திரும்ப அந்த நம்பரை யூஸ் பண்ணுவா..?? அவதான் என்கூட இருந்த எல்லா லிங்கையும்.. ப்ளான் பண்ணி பக்காவா கட் பண்ணிட்டு போயிருக்காளே..?? அவ எப்படி திரும்ப அந்த நம்பரை யூஸ் பண்ணுவா..??"

"அப்போ எதுவும் செய்ய முடியாது அசோக்..!!" ஸ்ரீனிவாச பிரசாத் இயல்பாக சொல்ல, அசோக்கின் மனவேதனை உச்ச பட்சத்தை எட்டியது.

"எ..என்ன ஸார்.. நீங்களே இப்படி சொல்றீங்க..??"

அசோக்கின் கண்கள் இப்போது லேசாக கலங்கிப் போயிருந்தது.. அவனுமே சோர்ந்து தளர்ந்து போயிருந்தான்..!! அவனுடைய மூளை சிந்திக்க மறுத்து, மரத்துப்போன மாதிரியான ஒரு உணர்வு அவனுக்கு..!! அடுத்து என்ன செய்வது என்று புரியாத ஒரு குழப்பம்.. அவளைக் கண்டுபிடிக்க இருக்கிற வழிகளெல்லாம் ஒவ்வொன்றாக அடைபடுகிறனவே என்கிற ஆதங்கம்.. சிக்கலான வலைக்குள் சிக்கி மீள முடியாமல் தவிக்கிற மீனுடைய இயலாமை.. எங்கே அவளை திரும்ப பார்க்கவே முடியாமல் போய்விடுமோ என்பது போலொரு பயம்..!! உள்ளத்தால் உடைந்தும், உடலால் உறைந்தும் போய் நின்றிருந்தான்..!!

ஸ்ரீனிவாச பிரசாத்துக்கு அசோக்கை அவ்வாறு பார்க்க பாவமாக இருந்தது.. தனது வலது கையால் அவனுடய தோளைப் பற்றினார்.. ஆறுதலாக ஒரு அழுத்தம் கொடுத்தார்.. அசோக் இப்போது அவரை ஏறிட்டு.. 'என்ன?' என்பது போல பாவமாக பார்த்தான்..!!

"நான் ஒன்னு சொல்வேன்.. தப்பா எடுத்துக்க மாட்டியே..??"

"சொ..சொல்லுங்க ஸார்..!!"

"அ..அவளை.. மறந்துடுடா அசோக்..!!"

அவ்வளவுதான்..!! அத்தனை நேரம் அசோக்கின் மனதுக்குள் கொப்பளித்துக்கொண்டிருந்த உணர்வுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து.. வேறொரு உருவம் எடுத்துக்கொண்டன.. ஏமாற்றம், குழப்பம், இயலாமை, பயம் எல்லாம் உருமாறி.. ஸ்ரீனிவாச பிரசாத்தின் மீதான கோபமாக மாறின..!! அவனுடைய குழப்பமான மனதின் முன்பு.. அவர் அவனது காதலுக்கு முளைத்த புது எதிரியாகவே தோன்றினார்..!! தனது தோளைப்பற்றியிருந்த அவரது கையை வெடுக்கென தட்டிவிட்டான்..!!

"டேய்..!!"

அவனுடைய செய்கையில் ஸ்ரீனிவாச பிரசாத் சற்றே எரிச்சலானார். அசோக்கோ அவருடைய கண்களை நேருக்கு நேராக சந்தித்து, சூடாக சொன்னான்.

"மறக்கலாம் முடியாது ஸார்..!!"

"ப்ச்.. உன் நல்லதுக்குத்தான்டா சொல்றேன்..!!"

"எனக்கு எது நல்லதுன்னு நீங்க சொல்ல வேணாம் ஸார்.. எல்லாம் எனக்கு தெரியும்..!!"

"புரியாம பேசாதடா..!!"

"யாரு ஸார் புரியாம பேசுறா..?? நீங்கதான் புரியாம பேசுறீங்க..!! எப்படி ஸார் மறக்க சொல்றீங்க..?? அவ என் உசுரோட கலந்துட்டா ஸார்.. உசுரை விட்டாத்தான் அவளை மறக்க முடியும்..!!"

"டேய்.. என்ன பேசுற நீ..??"

அசோக் உபயோகப் படுத்திய வார்த்தைகளில், ஸ்ரீனிவாச பிரசாத் சற்றே அரண்டு போனார்.. அவனுடைய முகத்தையே ஒருவித திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்..!! அசோக் ஒரு தெளிவற்ற ஆவேசத்தில் இருந்தான்.. ஜூரம் வந்தவன் மாதிரி உடலை சிலிர்த்துக்கொண்டான்.. முகத்தை அப்படியும், இப்படியுமாய் வெட்டிக்கொண்டான்.. உள்ளுக்குள் பொங்கிய உணர்வுகளில், அவனது முகம் கிடந்தது துடித்தது..!! பற்களால் உதட்டை அழுத்திக்கடித்து அந்த உணர்வுகளை அடக்க முயன்றவன்.. அப்புறம் அவனது ஆவேசம் குறையாமலேயே ஸ்ரீனிவாச பிரசாத்திடம் கேட்டான்..!!

"உங்க ஆளு.. அவ பேர் என்ன..??" அசோக் திடீரென அப்படியொரு கேள்வி கேட்பான் என்று எதிர்பாராத ஸ்ரீனிவாச பிரசாத்..

"அ..அனிதா..!!" என்றார் திணறலாக.

"ஆங்.. அனிதா..!! அவள்லாம் ஒரு பொண்ணா ஸார்..??? ச்சை..!! உங்க காதலை புரிஞ்சுக்காம.. சொகுசான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு.. அப்பா, அம்மா மேல பழியைப் போட்டு.. உங்களை அப்படியே தூசி மாதிரி தட்டிவிட்டுட்டு போனவ..!! உங்களோட உண்மையான காதலுக்கு கொஞ்சம் கூட தகுதியே இல்லாதவ ஸார் அவ..!! அந்த மாதிரி ஒரு பச்சைத்துரோகியையே.. அவளை உண்மையா நேசிச்ச உங்களால மறக்க முடியல.. போறவன், வர்றவன்ட்டலாம் பொலம்பிட்டு இருக்கீங்க..!! இல்ல..??"

"............................."

அசோக்கின் வார்த்தைகளில் இருந்த உண்மை, ஸ்ரீனிவாச பிரசாத்தின் இதயத்தில் சுருக்கென தைக்க, அவர் இப்போது வாயடைத்துப் போனார்.

"என் மீரா உங்க ஆளு மாதிரி இல்ல ஸார்..!! என் காதலை நல்லா புரிஞ்சுக்கிட்டவ.. பதிலுக்கு என்னையும் உண்மையா நேசிச்சவ.. என்னை விட்டு அவ விலகி இருக்குறதே என் மேல இருக்குற காதாலாலதான்..!! அவளுக்கு ஏதோ பிரச்னை இருக்கு.. அந்தப் பிரச்சினையை கூட எங்கிட்ட சொல்லி, என்னை கஷ்டப்படுத்த விரும்பாதவ ஸார் அவ..!! அவளை எப்படி ஸார் என்னால மறக்க முடியும்..??" அசோக் ஆவேசமாக கத்தினான்.

"............................."

"மறக்க முடியாது ஸார்.. மறக்கலாம் முடியாது..!!"

தனது வலது கையை சரக்கென உயர்த்தி.. ஐந்து விரல்களை விறைப்பாக விரித்து வைத்து.. 'முடியாது' என்பது போல அசோக் அசைத்துக் காட்டினான்..!! ஸ்ரீனிவாச பிரசாத் ஒருமாதிரி ஸ்தம்பித்துப்போய் பார்த்துக் கொண்டிருக்க.. அவன் சரேலென திரும்பி நடந்தான்.. பைக்கில் ஏறி அமர்ந்தான்.. ஆத்திரத்துடன் கிக்கரை உதைத்தான்.. ஆக்சிலரேட்டரை திருகி புயல் வேகத்தில் பைக்குடன் பறந்தான்..!! ஸ்ரீனிவாச பிரசாத் ஒருவித பயமும், கவலையும் தொற்றிக்கொண்டவராய்.. அவன் சென்ற திசையையே வெறித்துக் கொண்டிருந்தார்..!!


 

1 comment:

  1. நாயகன் நாயிகிக்காக போராட நாயகி நயவஞ்சகன் பிடியில் சிக்காமல் தப்பி வருவாளோ இல்லையோ

    ReplyDelete

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...