Social Icons

அன்புள்ள ராட்சசி - 3


 




அத்தியாயம் 4

அடுத்த நாள் காலை அசோக் கண்விழித்தபோது, அவனது தலைக்கடியில் இரண்டும், பக்கவாட்டில் இரண்டுமாய் நான்கு தலையணைகள் வைக்கப்பட்டிருந்தன. இரவு ஒரு மூலையில் கிடந்த அந்த போர்வை, இப்போது அவன் உடலை முழுவதுமாய் போர்த்தி, காலைக்குளிருக்கு இதமாக கதகதப்பை வழங்கிக் கொண்டிருந்தது. இரவில் பளிச்சென்று எரிந்த குழல்விளக்கு இப்போது அணைந்துபோயிருக்க, கண்ணை உறுத்தாத வெளிச்சத்தை வெளியிட்டுக் கொண்டிருந்தது இரவு விளக்கு ஒன்று..!!

கண்விழித்ததுமே மனதுக்குள் ஒரு புத்துணர்வும் புதிதாய் விழித்துக் கொண்டதை அசோக்கால் உணர முடிந்தது. தலையை திருப்பி மணி பார்த்தான். ஏழரை என்று காட்டியது கடிகாரம்..!! அவனுக்கும் அன்றிலிருந்து ஏழரை ஸ்டார்ட் ஆகப்போகிறது என்பதை அறியாதவனாய், படுஉற்சாகமாகவே படுக்கையை விட்டு எழுந்தான். பாத்ரூமுக்குள் புகுந்தவன் கால் மணி நேரம் கழித்து, கமகமவென வாசனையாக வெளிப்பட்டான். வேறு உடைகளை பரபரவென அணிந்துகொண்டு அவனுடைய அறையை விட்டு வெளியேறினான். கிச்சனுக்குள் நுழைந்தான். பொங்கிய பாலின் கொதிப்பை அடக்குவதற்காக, குனிந்து ஸ்டவ் ரெகுலேட்டர் திருகிக் கொண்டிருந்த பாரதி, மகன் உள்ளே நுழைந்ததும் அவனை ஏறிட்டு புன்னகைத்தாள்.

"என்னடா.. பொழுது விடிஞ்சிருச்சா..??"

"ம்ம்.. அரை மணி நேரத்துக்கு முன்னாடியே..!!"

"நல்லா தூக்கமா..??"

"செம தூக்கம்..!! தலை வச்சு படுத்தது என் மம்மி மடியாச்சே.. எந்த கவலையும் இல்லாம நிம்மதியா தூங்கினேன்..!!"


அசோக் அன்பு வழிகிற புன்னகையுடன் சொல்ல, பாரதி பதிலேதும் சொல்லாமல் தன் மகனையே அமைதியாக பார்த்தாள். அந்தப் பார்வையில் ஒருவித பெருமிதம் மிகுந்திருந்தது. பிறகு ஸ்டவ் மீதிருந்த பாத்திரத்தை கைப்பிடி பற்றி தூக்கி, தயாராக எடுத்து வைத்திருந்த கப் ஒன்றில் பாலை ஊற்றினாள். அசோக் இப்போது சற்றே நகர்ந்து சென்று, தன் அம்மாவை பின்புறமாக இருந்து மென்மையாக அணைத்துக் கொண்டான். அவளுடைய தோள்ப்பட்டையில் தன் தாடையை வைத்து அவன் தேய்க்க,

"ஹ்ம்ம்.. என்ன.. இன்னைக்கு அம்மா மேல ஒருத்தனுக்கு பாசம் பொங்கி வழியுது..??" பாரதி திரும்பி பாராமல் கப்புக்குள் ஸ்பூன் விட்டு கலக்கிக்கொண்டே கேட்டாள்.

"தேங்க்ஸ் மம்மி..!!" அசோக் சம்பந்தமே இல்லாமல் சொன்னான்.

"தேங்க்ஸா.. எதுக்கு..??"

"இல்ல.. எனக்கு கொஞ்ச நாளாவே மனசுல ஒரு கொழப்பம்.. எந்த நேரமும் போட்டு இம்சை பண்ணிட்டே இருந்தது..!! நேத்து உன்கிட்ட பேசினப்புறம் அந்த கொழப்பம்லாம் போய்.. மைன்ட் இப்போ ஃப்ரெஷ் ஆயிடுச்சு..!!"

"ம்ம்.. அப்படி என்ன கொழப்பம் உனக்கு..??"

"எப்படி சொல்றது.. ஹ்ம்ம்.... பொண்ணுகளை பத்தி.. அவங்கட்ட பேசுறதை பத்தி..
லவ்வை பத்தி.. அதுக்கான குவாலிஃபிகேஷன் பத்தி..!!"

அசோக் சொல்ல, பாரதி இப்போது திரும்பினாள். அசோக்கை பார்த்து மெலிதாக புன்னகைத்தாள். மகனுடைய கண்களையே சில வினாடிகள் உன்னிப்பாய் கவனித்து, ஏதோ உண்மையை அறிய முயன்றாள். அப்புறம் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், இதழில் ஒரு புன்சிரிப்புடன் கேட்டாள்.

"ஹ்ம்ம்.. எப்படியோ.. மனசு இப்போ தெளிவாயிடுச்சில..??"

"ம்ம்.. ஆயிடுச்சு..!!"

"அப்போ.. இன்னும் கொஞ்ச நாள்ல.. 'இவதான் மம்மி உன் மருமக..'ன்னு எவளையாவது
இழுத்துட்டு வந்து என் முன்னாடி நிறுத்துவேன்னு எதிர்பார்க்கலாமா.??" பாரதி குறும்பாக கேட்க,

"ஹாஹா..!! அந்த அளவுக்குலாம் இப்போ என்னால அஷ்யூரன்ஸ் குடுக்க முடியாது
மம்மி.. வேணுன்னா ஒன்னு மட்டும் சொல்லலாம்..!!" அசோக் சிரிப்புடன் சொன்னான்.

"என்ன..??"

"இப்போதைக்கு உன் புள்ள செம லவ் மூடுல இருக்கான்.. எவளாவது சிக்குனான்னு
வச்சுக்கோ.. பட்டுன்னு 'ஐ லவ் யூ..' சொல்லிருவான்..!! ஹ்ம்ம்.. எவளுக்கு லக் அடிக்கப் போவுதோ..??" அசோக் காலரை தூக்கிவிட்டவாறு எகத்தாளமாக சொல்ல, பாரதியால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

"ஹாஹாஹாஹா..!! பின்ன என்ன.. என் புள்ளை புருஷனா கெடைக்கிறதுக்கு.. பூர்வ
ஜென்மத்துல நெறைய புண்ணியம்ல பண்ணிருக்கனும் அவ..!!"

"ஹ்ம்ம்.. எங்க இருக்காளோ, என்ன பண்ணிட்டு இருக்காளோ.. அந்த புண்ணியவதி..!!"
அசோக் ஒரு பெருமூச்சுடன் சொன்னான்.

"அட.. ஏண்டா சலிச்சுக்குற..?? உனக்கு வரப்போறவ என்ன இனிமேலா பொறக்கப்போறா..??
அல்ரெடி எங்கயோ பொறந்திருப்பா.. அடிக்கடி உன் கண்ணு முன்னாடி கூட வந்து
போயிருப்பா.. உனக்குத்தான் அடையாளம் கண்டுபிடிக்க தெரியல..!! இனிமேயாவது உன்
கண்ணை நல்லா தெறந்து.. கொஞ்சம் சுத்திமுத்தி பாரு..!!"

அசோக்கின் கன்னத்தை பிடித்து செல்லமாய் திருகியவாறே சொன்ன பாரதி.. பிறகு
அந்தப்பக்கமாய் திரும்பி.. சற்றுமுன் பால் ஊற்றி கலக்கிய அந்த கப்பை எடுத்து.. இப்போது அசோக்கிடம் நீட்டினாள்..!!

"இந்தா.."

"என்ன.. கண்ணை தெறந்து பாருன்னுட்டு காபியை நீட்டுற..??"

"இது காபி இல்லடா.. பூஸ்ட்..!!"

"எதோ ஒன்னு.. எனக்கு வேணாம்..!!"

"இது உனக்கு இல்ல.. உன் தங்கச்சிக்கு...!! கொண்டு போய் கொடு போ..!!" பாரதி
சொல்ல, அசோக் இப்போது சற்றே நெற்றியை சுருக்கினான்.

"அவளுக்கா..?? அதுக்குள்ளயா எந்திரிச்சுட்டா அவ..??"

"ஆறு மணிக்கே அலாரம் வச்சு எந்திரிச்சுட்டா..!!"

அசோக்கிற்கு இப்போது நிஜமாகவே ஆச்சரியமாக இருந்தது. பள்ளியில் படிக்கிற காலத்திலேயே.. எக்ஸாம் டயத்தில் கூட.. எட்டு மணிவரைக்கும் இழுத்துப் போர்த்திக்கொண்டு.. சொங்கி மாதிரி தூங்குவாள் சங்கி..!! இன்று ஆறு மணிக்கே அலாரம் வைத்து எழுந்திருக்கிறாள் என்றால்.. 'சங்கீதாவின் வாழ்க்கையிலேயே முதன் முறையாக..' என்று சன் டிவியில் விளம்பரம் போட்டால் கூட வியப்பதற்கு ஒன்றுமில்லை என்று தோன்றியது..!!

"எ..என்ன மம்மி சொல்ற..?? ஆறு மணிக்கே அலாரம் வச்சு எந்திரிச்சாளா..?? அப்படி என்ன வேலை பாக்குறா எந்திரிச்சு..??"

"ம்ம்...??? எல்லாம் நீ குடுத்த வேலைதான்..!! போ.. நீயே போய் அவ அட்டூழியத்தை பாரு..!!"

அசோக் குழப்பம் இன்னும் விலகாமலே, அம்மாவிடம் இருந்து காபி கப்பை வாங்கிக்கொண்டான். தங்கையின் அறை நோக்கி மெல்ல நடந்தான். பாரதி அசோக்கிடம் அந்த வேலையை ஏவியதற்கு மறைமுகமாக ஒரு காரணம் கூட உண்டு. பிள்ளைகள் இருவரும் நேற்று உரசி மனக்காயப்பட்டுக் கொண்டார்கள் அல்லவா..?? இன்று அவர்கள் இருவரையும் அருகில் இழுத்து வைத்து, அவர்களை கைகுலுக்கிக்கொள்ள வைப்பது மாதிரியான முயற்சி அது..!!

'அப்படி என்ன வேலை..??' என்று கேள்வியுடனே தங்கையின் அறைக்குள் நுழைந்த அசோக்கிற்கு, பால்கனியில் இருந்து ஹை பிட்ச்சில் ஒலித்த சங்கீதாவின் சத்தம், அவன் காதில் விழுந்த அடுத்த நொடியே எல்லாம் புரிந்து போனது.

"வாயை மூடு..!!! வாயை மூடுன்றேன்ல..???? நான் சொல்றதை கேளு..!!! ப்ச்.. இப்போ கேக்கப் போறியா இல்லையா நீ..????"

காதில் ப்ளூடூத் ஹெட்போனுடன் காளி மாதிரி கத்திக் கொண்டிருந்தாள் சங்கீதா. அவள் அப்படி கத்தியதும், அடுத்த முனை பட்டென ஆஃப் ஆகியிருக்க வேண்டும். இந்த முனையில் இவள் வாயைத் திறந்து படபடவென பொரிந்து தள்ள ஆரம்பித்தாள். ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் வெடுக் வெடுக்கென நடந்தவாறே, வெடித்து சிதறினாள்.

"அப்போ இத்தனை நாளா எங்கிட்ட நடிச்சுட்டு இருந்திருக்க.. என்னை ஏமாத்திட்டு இருந்திருக்க.. அப்படித்தான..?? லவ் பண்றதுக்கு முன்னாடிலாம்.. என் பின்னாடி அப்படியே நாய் மாதிரி நாக்கை தொங்க போட்டுட்டு அலைவல.. அப்போ மட்டும் என் வாய்ஸ் லவ்லி வாய்ஸா இருந்தது... இப்போ லவ் பண்ண ஆரம்பிச்சப்புறம் நரி வாய்ஸ் ஆயிடுச்சா..?? கேக்குறேன்ல.. பதில் சொல்லு..!! ஹலோ... இருக்குறியா..?? பேசுடா..!!!! வாயில என்ன வச்சிருக்குற..???"

சங்கீதா கிஷோரை பேச சொல்லி கத்தினாள். ஆனால் அப்படி கத்தி முடித்த அடுத்த நொடியே 'வாயை மூடு..!!! வாயை மூடுன்றேன்ல..??' என்று மறுபடியும் எரிந்து விழுந்தாள். 'என்னாடி உங்க லாஜிக்கு..??' என்று கேட்கத் தோன்றியது அசோக்குக்கு..!! ஆனால் ருத்ர வடிவாய் நின்றிருந்த தங்கையை பார்த்ததும், எதுவும் கேட்காமல் வாயை அழுத்தி மூடிக் கொண்டான். 'இப்படி காதலனை திட்டுவதற்காகத்தான்.. காலங்காத்தாலேயே அலாரம் செட் பண்ணி எழுந்தாளா..?? கத்தி கத்தி மகள் களைப்பாகியிருப்பாள் என்று, இந்த அம்மா வேறு பூஸ்ட் கலக்கி அனுப்புகிறாள்..?? ஹ்ம்ம்.. கவலைக்கிடம்தான் என் நண்பனின் நிலைமை..!!'

அசோக்குக்கு கிஷோரை நினைக்கையில் பாவமாக இருந்தது. 'கொஞ்சம் ஓவராத்தான் அவனை பழி வாங்கிட்டமோ..??' என்று தோன்றியது. அப்புறம், 'அவன் மட்டும் அங்க நடக்குறதை இங்க உளறலாமா..?? நல்லா வாங்கட்டும்.. அப்போத்தான் அறிவு வரும்..!!' என்று மனதை சமாதானம் செய்து கொண்டான். கொஞ்ச நேரம் அமைதியாகவே நின்றிருந்தான். அப்புறம் கத்திக்கொண்டிருந்த சங்கீதாவே இவனை கவனித்தும் விட்டாள். ஃபோனில் பேசுவதை நிறுத்தாமல், அந்த ஆத்திரம் கொப்பளிக்கும் முகத்துடனே அண்ணணிடம் திரும்பி,

'என்ன..??' என்று சைகையால் கேட்டாள்.

'பூஸ்ட்..!!'

அசோக்கும் கிசுகிசுப்பான குரலில் சொன்னான். சங்கீதா பூஸ்ட் கப்பை கையில்
வாங்கிக் கொண்டாள். சத்தமே வராமல் உதட்டை மட்டும் அசைத்து

'தேங்க்ஸ்..' என்றாள். கப்பில் வாய் வைத்து கொஞ்சமாய் உறிஞ்சிக் கொண்டாள்.

'யாரு.. கிஷோரா..??' அசோக் தெரியாதவன் மாதிரி கேட்டான்.

'ம்ம்..' சங்கீதா தலையசைத்தாள்.

'நான் அவன்ட்ட கொஞ்சம் பேசணும்..!!'

அசோக் சைகையாலேயே சொல்ல, சங்கீதா ஓரிரு வினாடிகள் யோசித்தாள். பிறகு காதிலிருந்த ஹெட்போனை கழற்றி அண்ணனிடம் நீட்டினாள். அசோக் அதை வாங்கி தனது காதில் பொருத்திக்கொண்டு,

"ஹலோ..!!" என்று சொல்வதற்கும், அடுத்த முனையில்

"உன் கால்ல வேணாலும் விழறேன்.. ப்ளீஸ்...!!" என்று கிஷோர் பரிதாபமாக கெஞ்சுவதற்கும் சரியாக இருந்தது.


"ஹிஹி.. என்ன மச்சி இது..?? என் கால்ல போய் விழுறேன்ற.. அப்படி என்ன பெரிய
தப்பு பண்ணிட்ட நீ..??" அசோக் கிண்டலாக கேட்டான். உடனே

"ஓ..!! நீயா..???? சொல்லு..!!!"

அடுத்த முனையில் கிஷோரின் வாய்ஸ் உடனடியாய் முருக்கேறுவதை அசோக்கால் உணர முடிந்தது. 'பையன் என் மேல செம கடுப்புல இருக்கானோ..?' என்று ஒரு எண்ணம் ஓடியது. இருந்தாலும் அதெல்லாம் வெளியே காட்டிக் கொள்ளாமல், கேஷுவலாகவே பேசினான். சங்கீதா பூஸ்ட் உறிஞ்சிக்கொண்டே, ஒரு கையை இடுப்பில் ஊன்றியவாறு, இவர்கள் பேசுவதை முறைப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

"ஹேய்.. இன்னைக்கு காலைல மோகன்ராஜ் வர சொல்லிருந்தார்டா.. ஏதோ புது ப்ராஜக்ட் போல.. டிஸ்கஷன் கூப்பிட்ருந்தாரு..!! ஒன்பது மணிக்குலாம் வந்திருங்கன்னு சொன்னாரு.. போயிட்டு வந்துடு.. சரியா..??"

"ஓ.. இதை சொல்றதுக்குத்தான் இப்போ அவகிட்ட ஃபோன் வாங்கினியா..??"

"ம்ம்.. ஆமாம்..!! ஒருவேளை நீ மறந்திருப்பியோன்னு நெனச்சேன்.. அதான் ஞாபகப் படுத்தலாம்னு..!! சரி.. நீ போயிட்டு அப்படியே ஆபீஸ் வந்துடு.. அப்புறமா பேசிக்கலாம்..!!"

"இ..இல்ல மச்சி.. என்னால போக முடியாதுன்னு நெனைக்கிறேன்..!! எனக்கு பதிலா நீ போயிட்டு வந்துடுறியா..??"

"ஏ..ஏண்டா.. என்னாச்சு..??"

"இல்லடா.. காலைலேயே ஒரு அன்-எக்ஸ்பெக்டட் பர்சனல் வொர்க் ஆகிப்போச்சு.. எல்லாம் ஒரு பரதேசி பன்னாடை நாயால வந்தது..!! எப்படியும் நான் இன்னும் ஒரு டூ ஹவர்ஸ்க்காவது ரொம்ப பிஸியா இருப்பேன்னு நெனைக்கிறேன் மச்சி..!! ஸோ.. நீயே போயிட்டு வந்துடுடா.. ப்ளீஸ்..!!"

"ஓ.. அப்டியா..!!! ம்ம்ம்ம்.. ஓகேடா.. நான் பாத்துக்குறேன்.. விடு..!! ம்ம்.. ஆமாம்.. அப்படி என்ன திடீர்னு.. அன்-எக்ஸ்பெக்டட் பர்சனல் வொர்க்கு உனக்கு..??" அசோக் அப்பாவியாக கேட்க,

"ஏன்..??? உனக்கு தெரியாதா..???" அடுத்த முனையில் கிஷோர் பற்களை கடித்தவாறு கடுப்புடன் திருப்பி கேட்டான். அசோக் உடனே புரிந்து கொண்டான்.

"ஓ.. புரியுது புரியுது..!! ஓகே மச்சி.. நீங்க ஏதோ இன்ட்ரஸ்டிங் டிஸ்கஷன்ல இருந்தீங்கன்னு நெனைக்கிறேன்.. நான் நடுவுல வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டேன்.. ஸாரி..!! ஓகே.. நீங்க கண்டின்யூ பண்ணுங்க.. நான் அவகிட்ட குடுக்குறேன்..!!"

அசோக் ஹெட்ஃபோன் எடுத்து தங்கையிடம் நீட்டினான். இப்போது அவள் அதை வாங்கி தன் காதோடு பொருத்திக் கொண்டாள். அசோக் அங்கிருந்து நகர முயல, அவனுக்கு பின்னாலிருந்து 'டேய்..!!' என்று சங்கீதாவின் குரல் ஒருவித எரிச்சலுடன் ஒலித்தது. முதலில் கிஷோரைத்தான் அவள் அவ்வாறு அழைக்கிறாள் என்று அசோக் நினைத்தான். அப்புறம், சங்கீதா அவனுடைய கையை இறுக்கமாகப் பற்றி நகரவிடாமல் நிறுத்தியிருப்பதை உணர்ந்ததும், தன்னைத்தான் அழைக்கிறாள் என்று புரிந்துகொண்டான். தன் கையைப் பற்றியிருந்த தங்கையின் கையை ஒருமுறை பார்த்தான். அப்புறம் சற்றே குழப்பமாய் அவளுடைய முகத்தை ஏறிட்டான்.

"என்ன..??"

என்பது போல பார்த்தான். அவன் அவ்வாறு பார்த்ததும், இப்போது சங்கீதா தனது முகத்தை வேறெங்கோ திருப்பிக் கொண்டாள். சற்றே வீராப்பான, விறைப்பான குரலில் சொன்னாள்.

"ஸாரி..!!"

இப்போது அசோக்குக்கு மனதில் சில்லென்று ஒரு உணர்வு. அந்தப்பக்கமாய் திரும்பி நிற்கிற தங்கையையே அன்புடனும், உதட்டில் ஒரு புன்னகையுடனும் பார்த்தான். ஏதோ சொல்ல வாயெடுத்தான். அதற்குள்ளாகவே சங்கீதாவிடம் கிஷோர் ஃபோனில் ஏதோ கேட்டிருப்பான் போலிருக்கிறது. அசோக்கின் கையை பிடித்த பிடியை விடாமலே, சங்கீதா ஹெட்ஃபோனில் கத்த ஆரம்பித்தாள்.

"என்னது பரவால சங்கிம்மாவா..?? அப்படியே செவுளை சேர்த்து விட்டேன்னா..!! உன்கிட்ட போய் ஸாரி கேக்குறதுக்கு எனக்கு என்ன லூஸா பிடிச்சிருக்கு..?? நான் இங்க என் அண்ணன்ட்ட ஸாரி கேட்டேன்..!! உன்னை..????? நீ கொஞ்சம் வெயிட் பண்ணு.. நான் இங்க பேசிட்டு வரேன்..!! லைன்லேயே இரு.. கட் பண்ணிடாத.. புரியுதா..????"

கத்திமுடித்தவள், காதில் இருந்து ஹெட்போனை படக்கென்று கழற்றினாள். அப்புறமும் ஒருமாதிரி ரெஸ்ட்லசாய் அப்படியும் இப்படியுமாய் தலையை அசைத்தாள். பிறகு அசோக் பக்கமாய் திரும்பி பட்டென மீண்டும் சொன்னாள்.

"ஸாரிடா..!!"

"எதுக்கு ஸாரி..??"

"நே..நேத்து.. கோ..கோவத்துல.. நான் கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்..!! என்னதான் இருந்தாலும் நான் அப்படி பேசிருக்க கூடாது.. நான் பேசினது தப்புன்னு லேட்டாத்தான் எனக்கு புரிஞ்சது..!! ஸோ.. ஸாரி.. மன்னிச்சுடு..!!"

தன் முகத்தையே ஏறிடாமல், தலையை அப்படியும் இப்படியுமாய் சிலுப்பிக்கொண்டு, குரலில் மட்டும் குற்ற உணர்ச்சியுடன், தங்கை தன்னிடம் மன்னிப்பு கேட்டவிதம், அசோக்கிற்கு சிரிப்பை வரவழைத்தது. உதடுகள் பிரித்து மெலிதாக புன்னகைத்தான். அப்புறம் சற்றே குறும்பான குரலில் சொன்னான்.

"பரவால போ.. மன்னிச்சுட்டேன்..!!" அசோக் அவ்வாறு ஏளனமாக சொன்னவிதம், சங்கீதாவுக்கு சற்று எரிச்சலை கிளப்பியிருக்க வேண்டும்.

"ஆனா ஒன்னு மவனே.. தங்கச்சி ஸாரி கேட்டுட்டா.. நமக்கு பணிஞ்சு போயிட்டா.. இனி நம்ம வழிக்கே வரமாட்டா... அப்படிலாம் தப்பு கணக்கு போட்டுடாத..!!"

"ஓஹோ..!! சரி சரி... நீயும் அப்படிலாம் எதும் தப்பா நெனச்சுடாத சங்கு.. அண்ணன்ட்ட ஸாரி கேட்டாச்சு.. அவன் அப்படியே உருகிப் போயிட்டான்.. இனிமே நம்மள வம்பிழுக்கவே மாட்டான்..!! அப்படிலாம் மனசுல ஏதாவது நெனைப்பு இருந்தா.. இப்போவே அதை அணுகுண்டு போட்டு அழிச்சிடு..!!"

அசோக் பதிலுக்கு பதில் பேசவும், சங்கீதா அவனையே சில வினாடிகள் உர்ரென்று முறைத்துப் பார்த்தாள். அப்புறம் முகத்தை அசிங்கமாக சுளித்தவாறு,

"ஏ ச்சே.. போடா..!!" என்று அவனை பிடித்து தள்ளி விட்டாள்.

"அடச்சீய்.. போடீ..!!"

அசோக்கும் பதிலுக்கு கத்திவிட்டு, அறை வாசலை நோக்கி நடந்தான். அவன் அந்தப்பக்கம் நகர்ந்ததுமே, சங்கீதா ஹெட்ஃபோனை காதில் மாட்டிக்கொண்டு, பாதியில் விட்ட வேலையை மீண்டும் தொடர்ந்தாள்.

"டேய்...!! இருக்கியா..?? ம்ம்ம்... என்னது என்னது...??? ஏய்.. இரு இரு இரு.. நீ மொதல்ல இருந்து வா.. ப்ச்.. மொதல்ல இருந்து வா..!! நான் உன்கிட்ட ஐ லவ் யூ சொல்றதுக்கு முன்னாடி.. நீ என் பின்னாடி நாய் மாதிரி நாக்கை தொங்கப்போட்டுட்டு திரிஞ்சியா இல்லையா..?? அதுக்கு மொதல்ல ஆன்சர் சொல்லு இப்போ.. கமான்.. பேசு..!!"

அசோக் அந்த அறையை விட்டு வெளியே வந்தான். வெளியே வந்ததுமே 'யப்பாஆஆ..' என்று தலையை ஒருமுறை உலுக்கிக்கொண்டான். தங்கை கிஷோரை பின்னி பெடலெடுப்பாள் என்று அவனுக்கு முன்பே தெரியும். ஆனால் எந்த அளவிற்கு என்பதை இன்றுதான் கண்கூடாக காண்கிறான். தனக்கென்று ஒரு பெண் தேர்ந்தெடுக்கும்போது, தங்கை மாதிரி ஒரு ராட்சஸியிடம் மட்டும் சிக்கிக்கொள்ளக்கூடாது என்று நினைத்துக் கொண்டான்.

சங்கீதாவின் அறையில் இருந்து ஹாலுக்கு வரும் வழியில்தான் தாத்தா பாட்டியின் அறையும் இருக்கிறது. அவர்கள் அறையை அசோக் கடக்கும்போது, உள்ளே இருந்து பாட்டியின் சத்தம் பெரிதாக ஒலிக்க, அசோக் அப்படியே ப்ரேக் போட்டான். பாட்டி என்ன சொல்லுகிறாள் என்று காதை கூர்மையாக்கி கேட்டான்.

"வாக்கிங் போனா நேரா வீட்டுக்கு வர வேண்டியதுதான..?? வர்ற வழில அங்க நின்னுக்கிட்டு.. அவ கூட என்ன பல்லை காட்டிக்கிட்டு பேச்சு வேண்டி கெடக்கு..??" பாட்டி இந்த வயதிலும் தன் பொசஸிவ் புத்தியால் தாத்தாவை போட்டு படுத்திக்கொண்டிருந்தாள்.

"போனவாரம் அவகிட்ட பல்லுவலின்னு சொல்லிருந்தேண்டி.. இப்போ எப்படி இருக்குன்னு கேட்டா.. அதான் பல்லை காட்டினேன்..!!" தாத்தாவும் பாட்டிக்கு பணிந்து போய்த்தான் பேசிக்கொண்டிருந்தார்.

"ம்க்கும்.. இப்படி பதிலுக்கு பதிலு பேசிட்டே இருங்க.. அப்புறம் இருக்குற நாலு பல்லையும் உடைச்சு போட்டுட வேண்டியதுதான்..!! பல்லும் இருக்காது.. வலியும் இருக்காது..!!"

"ஐயே.. இப்போ என்னாயிடுச்சுன்னு இப்படி கத்துற கோமளா..??"

"இங்க பாருங்க.. எனக்கு அதுலாம் தெரியாது.. இனிமே நீங்க வாக்கிங் போறதா இருந்தா இங்க வீட்டுக்குள்ளயே போங்க.. சொல்லிப்புட்டேன் ஆமாம்..!!"

பாட்டி முடிவாக சொல்லிவிட்டு, மூஞ்சியை திருப்பிக் கொண்டாள். பார்த்துக்கொண்டிருந்த அசோக் 'ஹ்ம்ம்.. எத்தனை வயதானாலும் பெண்கள் பெண்கள்தான்..!!' என்று பெருமூச்சு விட்டுக்கொண்டான். வாசலுக்கருகே நின்றிருந்த அசோக்கை பாட்டி கவனித்துவிட்டாள்.

"என்னடா..??" என்று எரிச்சலாகவே கேட்டாள்.

ஒட்டுக்கேட்டதை பாட்டி பார்த்துவிட்டாள் என்று அசோக் முதலில் சற்று தடுமாறினான். அப்புறம் அந்த தடுமாற்றத்தை சமாளித்துக்கொண்டு, குரலில் ஒரு கேலியையும் கலந்துகொண்டு, அவர்களுடைய அறைக்குள் தலையை மட்டும் நீட்டியவாறு கேட்டான்.

"ஏன் பாட்டி.. தாத்தா இத்தனை நாள் பல்லை கடிச்சுட்டு ஓட்டிட்டாரு.. இனிமேலா பல்லுவலின்னு ஓடிடப் போறாரு..??" அசோக்கின் கேள்வியில் இருந்த குதர்க்கம் பாட்டிக்கு புரியவில்லை.

"என்னடா சொல்ற.. மண்டு..??" என்று முகத்தை குழப்பமாய் சுருக்கினாள்.

"புரியலையா..?? சரி விடு..!! தாத்தா உன்மேல உயிரையே வச்சிருக்காரு பாட்டி..
தேவை இல்லாம அவரைப்போட்டு இப்படி டார்ச்சர் பண்ணாத..!!"

"அடப்போடா.. என் புருஷனை பத்தி எனக்கே சொல்ல வந்துட்டான்..?? எல்லாம் எனக்கு தெரியும்.. நீ உன் வேலையை பாத்துட்டு போ..!!"

பாட்டி முகத்தை வெட்டியவாறு சொன்னாள். அசோக் சலிப்பாய் தலையசைத்துக் கொண்டான். 'இந்தப் பெண்களே இப்படித்தான்.. தனக்குரியவனை தானும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.. தன்னைமாதிரி அவனை புரிந்து கொள்ள வேறு ஆளே இல்லை என்று அடமும் பிடிப்பார்கள்..!!' எப்படியோ போங்க என்று மனதுக்குள் முனுமுனுத்தவாறே அசோக் டைனிங் ரூமுக்கு வந்தான். அங்கே அவனுடைய அப்பா அமர்ந்திருந்த நிலையை பார்த்து சற்றே துணுக்குற்றான்.

கன்னத்தில் கைவைத்து.. கவலையே உருவாக.. தட்டில் கிடந்த தோசையை உண்ணக்கூட மனம் இல்லாமல்.. உறைந்து போய் அமர்ந்திருந்தார் மணிபாரதி..!! 'என்னாயிற்று இந்த அப்பாவிற்கு..?? இப்படி இடிந்து போய் அமர்ந்திருக்கிறார்..?? அம்மா எதுவும் அவரை திட்டிவிட்டாளா..?? இன்று என்ன.. பெண்கள் ஆண்களை வறுத்தெடுக்கிற தினமா..??'

"டாடிக்கு என்னாச்சு மம்மி.. நீ ஏதும் திட்டிப்புட்டியா..??" அசோக் கிச்சன் பக்கமாக திரும்பி அம்மாவிடம் கேட்டான்.

"அட.. நான்லாம் ஒன்னும் அவரை திட்டலை..!!"

"அப்புறம்..??"

"அவரோட அர்ர்ருமை ரசிகர்ட்ட இருந்து லெட்டர் வந்திருக்கு.. அதை படிச்சதுல இருந்து இப்படி ஊமை மாதிரி உக்காந்திருக்காரு..!!"

"யாரு.. அந்த ஸ்ரீனியா..??"

"ம்ம்.. ஆமாம்..!!"

"மறுபடியும் இவரை திட்டி லெட்டர் போட்டிருக்கானா..??"

"ஆமாண்டா..!!"

பாரதி கடுப்புடன் சொல்லிவிட்டு கல்லில் தோசை மாவை ஊற்றி விரவி விட, அசோக் 'ஹ்ம்ம்ம்..' என்று பெருமூச்சு விட்டவாறே தன் அப்பாவிடம் சென்றான்.

"என்ன டாடி.. ரொம்ப திட்டிட்டானா...??"

"ஆமாண்டா.. கன்னாபின்னான்னு திட்டுறான்.. கண்கொண்டு பாக்க முடியலை அந்த லெட்டரை..!! டாடி இத்தனை வருஷமா கதை எழுதிருக்கேன்டா அசோக்.. இந்த அளவுக்கு எவனும் என்னை கேவலமா திட்டுனது இல்ல..!!" மணிபாரதி மிகவும் சோகமாக சொன்னார்.

"ஹ்ம்ம்.. அவனுக்கு என்னதான் பிரச்னையாம்..??"

"என்னத்த சொல்றது.. நான் இனிமே லவ் ஸ்டோரியே எழுதக் கூடாதாம்.. எழுதுன வரை போதுமாம்..!! இனிமேயும் எழுதினா.. பப்ளிக் ந்யூஸன்ஸ்னு என் மேல பொதுநல வழக்கு போடப்போறதா மிரட்டுறான்..!! நான் கதை எழுதுற பேனாவை.. கூவத்துல தூக்கி கடாச சொல்றான்.!!"

"இதுலாம் ரொம்ப ஓவர் டாடி.. உங்க ஸ்டோரி பிடிக்கலைன்னா படிக்காம விட வேண்டியதுதான.. ஏன் இப்படிலாம் பண்றான்..?? நீங்களும் பதிலுக்கு அவனை தாறுமாறா திட்டி ஒரு லெட்டர் போடுங்க..!!"

"இல்ல அசோக்.. அவனை அப்படி திட்டுறதுக்கு எனக்கு மனசு வரலை..!!"

"ஏன்..??"

"ஒருகாலத்துல இந்த ஸ்ரீனி என்னை எப்படிலாம் பாராட்டுவான் தெரியுமா..?? என்னை தெய்வம்னுவான்.. என்னை மாதிரி எழுத ஆளே இல்லைன்னு சொல்வான்..!!"

"ஓ.. அப்புறம் ஏன் இப்போ இப்படி திட்டுறான்..??"

"ஹ்ம்ம்... அப்போ லவ் பண்ணிட்டு இருந்தான்.. பாராட்டுனான்..!! இப்போ லவ் ஃபெயிலியர் ஆகிப்போச்சு.. திட்டுறான்..!!"

"இது என்ன டாடி அநியாயமா இருக்கு..?? அவனுக்கு லவ் ஃபெயிலியர் ஆனதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க..?? விட்டா.. படிக்கிறவங்க வீட்டுல பவர் ஃபெயிலியர் ஆனா கூட உங்களை திட்ட ஆரம்பிச்சுடுவாங்க போல..??" அசோக் கிண்டலாக கேட்க மணிபாரதி மகனை ஏறிட்டு முறைத்தார்.

"ஏன்டா உனக்கு இப்படி ஒரு கெட்ட எண்ணம்..??"

"என்னாச்சு டாடி..??"

"பின்ன.. ஒருத்தன் திட்டுறதையே தாங்க முடியல.. பவர் ஃபெயிலியர்குலாம் திட்ட ஆரம்பிச்சா.. மொத்த தமிழ்நாடேல என் மொகத்துல காறி துப்பும்..!!"

"ஹாஹா..!! ஹ்ம்ம்.. என்னவோ போங்க..!! எனக்கு டைம் ஆச்சு.. உங்க தோசையை நான் எடுத்துக்குறேன்.. நீங்க அப்புறமா சாப்பிட்டுக்கங்க..!!"

அப்பா முன்பிருந்த ப்ளேட்டை இப்போது அசோக் எடுத்துக் கொண்டான். அப்படியே நின்றவாறே சாப்பிட ஆரம்பித்தான். தோசையை விண்டு சட்னியில் நனைத்து தொண்டைக்குள் போட்டான். ஆவி பறக்கிற தோசையை தாங்கிய கரண்டியுடன், டைனிங் ரூமுக்குள் நுழைந்த பாரதி, மகன் சாப்பிட்டுக்கொண்டிருப்பதை பார்த்ததும் பட்டென்று முகம் மாறினாள். அவனுடைய தலையில் நறுக்கென்று குட்டியாவாறே சொன்னாள்.

"அறிவு கெட்டவனே..!!"

"ஆஆஆஆ..!! இன்னைக்கு என்னாச்சு.. யாராவது யாரையாவது திட்டிட்டே இருக்கீங்க..?? நீ எதுக்கு இப்போ என்னை திட்டுற..??" அசோக் தலையை தேய்த்தவாறே அம்மாவிடம் திரும்பி கேட்டான்.

"எத்தனை தடவை சொல்றது.. குளிச்சுட்டுத்தான் சாப்பிடனும்னு..!!"

"ஐயோ.. குளிச்சுட்டேன் மம்மி..!!"

"குளிச்சுட்டியா..?? பொய் சொல்லாத.. பாத்தா அப்படி தெரியல..!!" பாரதி குழப்பமாய் அசோக்கையே மேலும் கீழும் பார்த்தாள்.

"ஆமாம்.. உனக்கு ஒன்னும் தெரியாது..!! தோசையை குடு.. போய் இன்னும் ரெண்டு போட்டு எடுத்துட்டு வா.. போ..!!"

எரிச்சலாக சொன்ன அசோக் தோசையைப் பறித்து தன் தட்டில் போட்டுக் கொண்டான். பாரதி தயங்கி தயங்கியே கிச்சனை நோக்கி நகர்ந்தாள். கிச்சன் வாசலுக்கு சென்றவள், மீண்டும் திரும்பி அசோக்கை ஒரு நம்பிக்கையில்லா பார்வை பார்க்க, அவன் இப்போது வாயில் தோசையுடன் பரிதாபமாக கத்தினான்.

"ஹையோ... நம்பு மம்மி..!! குளிச்சுட்டேன்..!!"



அத்தியாயம் 5

சாப்பிட்டு முடித்து அசோக் வீட்டை விட்டு கிளம்பினான். தனது பைக்கில் பாலாஜி அட்வர்டைசிங்கை அவன் அடைந்த போது மணி 8.50..!! அவனை ஒன்பது மணிக்கு வர சொன்ன மோகன்ராஜ் பத்து மணிக்குத்தான் ஆபீஸ் வந்தார். பத்தரை மணிக்கு டிஸ்கஷன் ஆரம்பமானது. குளிரூட்டப்பட்ட அறையில்.. மோகன்ராஜும்.. அவருடைய அடிபொடிகள் ஐந்து பேரும்.. பிறகு அசோக்கும்..!!

அரைமணி நேரம் கூட நீடிக்கவில்லை அந்த டிஸ்கஷன்..!! வழக்கம் போல.. மோகன்ராஜ் தனது எண்ணத்தையும் எதிர்பார்ப்பையும்.. மிகுந்த ஈடுபாட்டுடன் அப்படியே உருகி உருகி.. அசோக்கிடம் எடுத்து கூறினார்..!! அசுவாரசியமாய் அனைத்தையும் கேட்டு முடித்த அசோக், 'கேனத்தனமா இருக்கு ஸார்..!!'என்று கேஷுவலாக கூறினான்..!! கடுப்பான மோகன்ராஜும் 'கெட் அவுட்..' என்று தொண்டை கிழிய கத்தினார்..!! அசோக்கும் 'ஹேரே போச்சு.. போ..' என்று எழுந்து அறையை விட்டு வெளியேறினான்..!!

அசோக் ஆபீஸை அடைந்தபோது மணி பனிரெண்டை நெருங்கியிருந்தது. அவர்களுடைய அசிஸ்டன்ட்கள் இருவரும் எடிட்டிங் ரூமில் அமர்ந்து, ஹெட்ஃபோன்கள் அணிந்த காதுகளுடன், சிஸ்டத்தில் ஏதோ நோண்டிக் கொண்டிருந்தார்கள். அசோக் அவர்களை கடந்து ஆபீஸ் ரூமுக்குள் புகுந்தான். உள்ளே கிஷோர், வேணு, சாலமன்.. மூவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர்..!! ஏதோ ஃபைனான்ஸ் கம்பனியில் பணத்தைப் போட்டவர்கள் மாதிரி.. கவலை படர்ந்த முகத்துடன் குத்தவைத்திருந்தனர்..!!

அசோக்கிற்கு முதலில் எதுவும் புரியவில்லை. மூன்று பேர் முகத்தையும் மாறி மாறி பார்த்தான். அப்புறம் அவனும் ஒரு சேரில் அமர்ந்து, லேப்டாப் திறந்து மெயில் பாக்ஸ் ஓப்பன் செய்து பார்த்தான். அவன் சென்று சிறிது நேரம் ஆகியும் யாரும் அவனுடன் பேசாமல் போக, அசோக்கே இப்போது அந்த அமைதியை கலைத்தான். வேணுவை சைகையால் காட்டி சாலமனிடம் கேட்டான்.

"என்னடா ஆச்சு.. ஏன் இவன் சோகமா இருக்கான்..??"

"அவன் ஆளு அவனை திட்டிடுச்சாம்..!!" சாலமன் சோகமான முகத்துடனே பதில் சொன்னான்.

"ஏன்..??"

"அவ மூணாவது அண்ணனோட மூத்த பொண்ணுக்கு.. இன்னைக்கு மூக்கு குத்துற பங்க்ஷனாம்..!! காலைலேயே இவன் கால் பண்ணி விஷ் பண்ணலைன்னு கடுப்பு..!! கன்னாபின்னான்னு திட்டிவிட்டுட்டா..!!"

"ஓஹோ..!! சரி.. நீ ஏன் சோகமா இருக்குற..??" அசோக்கின் கேள்விக்கு இப்போது வேணு பதில் சொன்னான்.

"அவனுக்கும் அவன் ஆளுக்கும் சண்டை..!!"

"அதுக்குள்ளயா..?? நேத்து நைட்தான ஒண்ணா சேர்ந்தாங்க..??"

"ஆமாம்.. காலைலேயே புட்டுக்கிச்சு..!!"

"ஏன்.. என்னாச்சு..??"

"அவ ஏதோ புது ஸாரி கட்டிட்டு வந்திருப்பா போல இருக்கு.. இவன் கவனிச்சு பாத்துட்டு நல்லாருக்கு சொல்வான்னு எக்ஸ்பெக்ட் பண்ணிருப்பா போல..!!"

"இவன் நல்லாருக்குன்னு சொல்லலையா..??" அசோக் வேணுவை கேட்க,

"இல்ல மச்சி.. சொன்னேன்..!!" சாலமன் இடையில் புகுந்து பாவமாக சொன்னான்.

"அப்புறம் என்ன..??"

"இவன் நல்லாருக்குன்னு சொன்னது ஸாரியை இல்ல.. சாப்பிட்டுக்கிட்டு இருந்த பூரியை..!! அவ குருமாவை எடுத்து இவன் தலைல கொட்டிட்டு கெளம்பிட்டா..!!" வேணு சீரியஸாக சொல்ல, அசோக்குக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

"ஹாஹாஹாஹா..!! ஹையோ ஹையோ..!! ஹ்ம்ம்.... உங்களைப் பாத்தா காமடியாத்தாண்டா இருக்கு.. சொன்னா எவனாவது கேக்குறீங்களா..?? அப்படி எதுக்கு மானங்கெட்டு லவ் பண்ணனும்.. அப்புறம் இப்படி மனசு உடைஞ்சு உக்காந்திருக்கணும்..?? ம்ம்..??" சிரிப்புடன் சொன்னவன் பிறகு கிஷோரின் பக்கமாய் திரும்பி,

"ஹ்ம்ம்.. நீ ஏண்டா பேயறைஞ்சவன் மாதிரி உக்காந்திருக்க..??" என்று கேஷுவலாக கேட்டான். ஏற்கனவே அசோக்கை முறைத்துக் கொண்டிருந்த கிஷோர் இப்போது இன்னும் அதிகமாக முறைத்தான்.

"ஏன்..?? உனக்கு தெரியாதா..??" என்று இறுகிப்போன குரலில் கேட்டான்.

கிஷோர் கேட்டுக்கொண்டிருக்கும்போதே, அவனுடைய செல்போன் கிணுகிணுத்தது. உடனே பதறிப்போய் அந்த செல்போனை எட்டி எடுத்தான். டிஸ்ப்ளே பார்த்தவன், 'ஹையோ.. கடவுளே..!!' என்று தலையை பிடித்துக் கொண்டான். அழுவது போல பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு, கால் பிக்கப் செய்து காதில் வைத்தான்.

"ஹலோ.. சொல்லும்மா..!!" என்றான் பம்மிக்கொண்டு.

".............................."

"ஐயோ.. என்ன சங்கிம்மா நீ..?? இன்னுமா என் மேல உனக்கு நம்பிக்கை இல்ல..??"

".............................."

"இல்லம்மா.. இல்லம்மா..!! சத்தியமா நான் அப்படி சொல்லவே இல்ல..!!"

".............................."

"ஹையோ.. எத்தனை தடவை சொல்றது..?? அந்த வார்த்தையை நான் யூஸ் பண்ணவே இல்ல.. உன் அண்ணன்தான் எக்கச்சக்கமா எக்ஸ்ட்ரா பிட்டு போட்டு சொல்லிருக்கான்..!! என்னை நம்பு சங்கிம்மா.. ப்ளீஸ்..!!"

அடுத்த முனையில் சங்கீதா அதன்பிறகும் அவனை விடவில்லை போலிருக்கிறது. வார்த்தைகளை தாளித்து அவன் மீது கொட்டிக்கொண்டே இருந்திருக்க வேண்டும். கிஷோர் அவஸ்தையாய் நெளிந்தவாறே, நண்பர்களின் முகத்தை மாறி மாறி பார்த்தான். அப்புறம் ஏதோ திடீர் யோசனை தோன்றியவனாய், செல்போனை காதில் இருந்து சற்று தள்ளிப் பிடித்துக் கொண்டான்.

"ஹலோ.. ஹலோ.." என்று போலியாக கத்தினான்.

".............................."

"சங்கிம்மா.. நான் ட்ராவல் பண்ணிட்டு இருக்கேன்மா.. இங்க சிக்னல் சரியா கெடைக்கல.. நான் அப்புறமா பேசவா..??"

என்று சொல்லிவிட்டு பட்டென காலை கட் செய்தான். செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்யாமல், நெட்வொர்க் கனெக்டிவிட்டி மட்டும் இல்லாமல் போகுமாறு, செட்டிங் மாத்தினான். செல்போனை தூக்கி ஓரமாய் போட்டுவிட்டு, 'யப்பாஆஆ...!!' என்று சலிப்பும், நிம்மதியுமாய் பெருமூச்சு விட்டான். தலையை இப்படியும் அப்படியுமாய் பரபரவென உலுக்கிக் கொண்டான். சாலமனை ஏறிட்டு பரிதாபமான குரலில் சொன்னான்.

"காலைல ஆறு மணில இருந்துடா மச்சி.. நான் ஸ்டாப்பா ஓடிட்டு இருக்கு இந்த நான்சன்ஸ்..!! ஒரு மனுஷன் எவ்வளவுதான்டா தாங்குறது..?? ச்ச...!!! ஒரே வெறுப்பா இருக்குடா..!! எல்லாம் இந்தப் பன்னாடையால..."

என்று அசோக்கை கை நீட்டி அவன் வெறுப்பாக கத்திக் கொண்டிருக்கும்போதே, டேபிள் மீதிருந்த டெலிபோன் இப்போது 'கிர்ர்ர்ர்.. கிர்ர்ர்ர்..' என்று அலறியது. கிஷோர் மீண்டும் மிரண்டு போனான். கிலியடித்த மாதிரி அந்த டெலிபோனையே பார்த்தான். அப்புறம் வேணுவிடம் திரும்பி அவசரமாய் சொன்னான்.

"டேய் மச்சி.. நீ எடுத்து பேசுடா...!! சங்கியாத்தான் இருக்கும்.. நான் இங்க இல்லைன்னு சொல்லிரு.. எங்க போயிருக்கேன்னு கேட்டா.. எங்கயாவது ஈரோடு பக்கம் தூத்துக்குடி பக்கம் போயிட்டேன்னு சொல்லிரு..!!"

வேணு கால் அட்டன்ட் செய்தான். ரிசீவரை காதில் வைத்து 'ஹலோ..' என்றான். ஓரிரு வினாடிகளுக்கு அப்புறம், ரிசீவரை காதில் இருந்து விலக்கி, அதன் வாயைப் பொத்திவிட்டு கிஷோரிடம் இளிப்பாக சொன்னான்.

"சங்கி இல்ல மச்சி.. அந்த மோகன்ராஜ் மங்கி..!!"

சொல்லிவிட்டு வேணு ரிஸீவரை அசோக்கிடம் நீட்டினான். மோகன்ராஜ் இப்போது ஏன் ஃபோன் செய்திருக்கிறார் என்று அசோக்கிற்கு நன்றாகவே புரிந்தது. ஒருமாதிரி திருட்டுப் பார்வை பார்த்தவன், சற்றே தடுமாற்றமாய் சொன்னான்.

"ஹேய்.. அ..அவர் கிஷோர்ட்டதான் ஏதோ பேசணும்னு சொன்னாரு.. அ..அவனுக்காத்தான் இருக்கும்.. அவன்ட்ட குடு..!!"

என்று அழகாக எஸ்கேப் ஆனான். நண்பன் சொன்னதை உண்மை என்று நம்பிய கிஷோரும், வேணுவிடம் இருந்து ரிஸீவரை வாங்கினான். தன் காதில் வைத்துக்கொண்டான். குரலில் ஒரு மிடுக்கை வரவழைத்துக்கொண்டு கெத்தாக சொன்னான்.

"ஹாய் மிஸ்டர் மோகன் ராஜ்..!!"

அவ்வளவுதான்..!! அதன்பிறகு ஒரு நிமிடம்..!! மோகன்ராஜ் படபடவென பட்டாசாக வெடித்து தள்ளினார். படுகேவலமாக திட்டினார். கிஷோர் பேசுவதற்கே அவர் வாய்ப்பளிக்கவில்லை. 'ஸார்.. அது வந்து.. இல்ல ஸார் அவன்.. நோ ஸார்..' என்று பிட்டு பிட்டாக வார்த்தைகளை துப்பத்தான் கிஷோருக்கு இடைவெளி கிடைத்தது. மிச்ச நேரம் மொத்தமும் அவர் பொரிந்து தள்ளிவிட்டு ஃபோனையும் கட் செய்தார்.

கால் முடிந்தபிறகும் கிஷோர் சிறிது நேரம் ரிஸீவரையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். அப்புறம் ரிஸீவரை அதனிடத்தில் வைத்தவன், முகமே செத்துப்போய் அசோக்கை பரிதாபமாக ஏறிட்டான். 'ஏண்டா.. இப்பிடி..??' என்று வடிவேலு மாதிரியான பாவனையுடன் பார்த்தான்.

"என்னடா மச்சி.. என்ன சொல்றார் மோகன்ராஜ்..??"

என்று அசோக் அவனிடம் இளிப்பாக கேட்க, கிஷோரால் அதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை. தன் சேரில் இருந்து குபீரென்று எழுந்தான். அப்படியே அசோக் மீது சரக்கென பாய்ந்தான். டேபிளில் இருந்த டெலிபோன், ஃபைல்ஸ், பென் ஸ்டாண்ட், ஸ்டேப்ளர் எல்லாம் கீழே விழுந்து மூலைக்கொன்றாய் சிதறி ஓடின. ஏதேதோ காகிதங்கள் அந்தரத்தில் பறந்தன. நழுவிய லேப்டாப் கீழே விழாமல், லாவகமாக பிடித்துக் கொண்டான் வேணு. நாற்காலிகள் 'டமார்ர்ர்ர்..' என்ற சத்துடன் அங்குமிங்குமாய் தெறித்து ஓடி கவிழ்ந்தன. கிஷோரும் அசோக்கும் தரையில் கட்டிப்புரண்டு உருண்டு கொண்டிருந்தார்கள்.

"மவனே.. இன்னைக்கு செத்தடா நீ..!!" கிஷோர் உச்சபட்ச கடுப்போடு கத்தினான்.

"டேய்.. லூசு.. சொல்றதை கேளுடா.. விடுடா..!!" அசோக் அவனுடன் சேர்ந்து உருண்டுகொண்டே கத்தினான்.

வேணுவுக்கும் சாலமனுக்கும் கொஞ்ச நேரம் என்ன செய்வதென்றே புரியவில்லை. அதிர்ச்சியில் சற்று தடுமாறியவர்கள், பிறகு சுதாரித்துக்கொண்டு சண்டையை விலக்கி விட்டார்கள். கிஷோரையும் அசோக்கையும் ஆளுக்கொரு பக்கமாய் பிடித்து இழுத்தார்கள்.

"டேய்.. இது ஆபீஸ்டா.. அஸம்ப்ளினு நெனச்சிங்களா.. அசிங்கமா சண்டைலாம் போட்டுக்கிட்டு..?? விடுங்கடா..!!"

அவர்களை பிரித்து விடுவதற்கு அரும்பாடு பட வேண்டியிருந்தது வேணுவுக்கும், சாலமனுக்கும்..!!

அதன் பிறகு ஒரு அரைமணி நேரம் கழித்து.. அவர்கள் எப்போதும் மதிய உணவு உண்ணுகிற ஃபுட்கோர்ட்டில் நான்கு பேரும் அமர்ந்திருந்தனர்..!! அசோக்கும் வேணுவும் டேபிளுக்கு ஒருபுறம் இருக்க, கிஷோரும் சாலமனும் அவர்களுக்கு எதிரே அமர்ந்திருந்தனர். சூழ்நிலை இன்னும் சற்று இறுக்கமாகவே இருந்தது. யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை. ஆளுக்கொரு உணவை வாங்கி வந்திருந்தவர்கள், அந்த உணவை அமைதியாக பொறுமையாக வாய்க்குள் தள்ளிக் கொண்டிருந்தனர்.

நான்கு அடுக்குகளுடன் வட்ட வடிவில் அமைந்த பிரம்மாண்டமான கட்டிடம் அது..!! கட்டிடத்தின் உட்புற மையப்பகுதி திறந்தவெளியாக இருக்கும்..!! நான்காவது மாடியில் பாலிகார்பனேட் தகடுகளால் வேயப்பட்ட மேற்கூரை..!! அதன் வழியே உட்புகும் சூரிய வெளிச்சம் தாராளமாய் அந்த கட்டிடத்தை நிறைத்திருக்கும்..!! கீழ் தளத்தில்தான் அந்த ஃபுட்கோர்ட்..!! பிஸ்ஸா முதல் பிரியாணி வரை.. பலதரப்பட்ட உணவுகளை விற்கும் பத்துக்கும் அதிகமான ரெஸ்டாரன்ட் கவுன்ட்டர்கள்..!! வாங்கிய உணவுகளை அமர்ந்து சாப்பிடுவதற்கு வசதியாக.. கீழ்த்தளத்தின் மையப்பகுதியில்.. முன்னூறு பேர் அமரக்கூடிய அளவுக்கு டேபிள்கள்.. சேர்கள்..!! மற்ற மூன்று தளங்களிலும்.. ஆடைகள், ஆபரணங்கள்,
செல்போன்கள், செருப்புகள் என.. விதவிதமான விற்பனை நிலையங்கள்..!!

நீண்ட நேர அமைதியை முதலில் வேணுதான் குலைத்தான். அசோக்கிடம் மெல்ல கேட்டான்.

"மோகன்ராஜோட என்னடா பிரச்னை..??"

"மோகன்ராசா அவன்..?? சரியான மொக்கைராசு..!! பேசாத அவனைப் பத்தி..!!"

"ப்ச்.. என்ன நடந்துச்சுன்னுதான கேக்குறேன்..??"

"அவன் என்னடா.. லூசு மாதிரி என்னன்னவோ சொல்றான்..!!"

"என்ன சொன்னான்..??"

"ரொமா...ண்டிக்கா ஒரு இஞ்சின் ஆயில் வெளம்பரம் வேணுமாம் அந்த வெண்ணைக்கு..!!"

"ஓ..!!"

"இஞ்சின் ஆயிலுக்கும் ரொமான்சுக்கும் என்னடா சம்பந்தம்..?? அதை சொன்னா.. கொஞ்சம் கூட புரிஞ்சுக்கவே மாட்டேன்றான்.. லூசுப்பய..!!"

"யாரு.. அவன் புரிஞ்சுக்க மாட்டேன்றானா..?? நீதாண்டா எதையும் புரிஞ்சுக்க மாட்டேன்னு அடம் புடிக்கிற..!!" கிஷோர் இடையில் புகுந்து எரிச்சலாக சொன்னான்.

"என்ன.. நான் என்ன புரிஞ்சுக்கல..?? இஞ்சின் ஆயிலையும் லவ்வையும் எப்படி லிங்க் பண்றது..??"

"உனக்கு லிங்க் பண்ண தெரியலைன்னு சொல்லு.. லிங்க் பண்ணவே முடியாதுன்னு மட்டும் சொல்லாத..!! எனக்கு ரெண்டு நாள் டைம் தர்றியா.. நான் ஒரு கான்சப்டடோட வரவா..??"

"ம்க்கும்.. கிழிச்ச..!!" அசோக் ஏளனமாக சொல்ல, இப்போது வேணு அவனிடம் கேட்டான்.

"அசோக்கு.. நீ பேசுறது தப்புன்னு தோணுதுடா எனக்கு..!! ஏன் ரொமாண்டிக்கா ஒரு இஞ்சின் ஆயில் வெளம்பரம் எடுக்க முடியாதுன்னு சொல்ற நீ..??" வேணு கேட்க, அவனை தொடர்ந்து சாலமன் இப்போது உற்சாகமாக ஆரம்பித்தான்.

"ஆமாம் மச்சி.. ஏன் முடியாதுன்னு சொல்ற..?? இங்க பாரேன்.. நான் ஒரு லைன் சொல்லவா..?? இஞ்சினையும் இதயத்தையும் லிங்க் பண்ணினா எப்படி.. ம்ம்..?? இதயத்துக்கு காதல் எவ்வளவு முக்கியமோ... இஞ்சினுக்கு ஆயில் அவ்வளவு முக்கியம்..!! எப்பூடி...???" சாலமன் கேட்டுவிட்டு பெருமையாக பார்த்தான்.

"ம்க்கும்.. இதயத்துக்கும் காதலுக்குமே எந்த சம்பந்தமும் இல்ல.. இதுல இதயத்துக்கும் இஞ்சினுக்கும் லிங்க் குடுக்குறியா நீ..?? நான்சென்ஸ்..!!" அசோக் சொல்ல, இப்போது கிஷோர் மற்றவர்களிடம் கேலியாக சொன்னான்.

"ஏய்.. விடுங்கடா.. இதெல்லாம் இவன்ட்ட போய் சொல்லிக்கிட்டு..!! இவனுக்கு இதுலாம் புரியாதுடா.. யாரையாவது லவ் பண்ணிருந்தா.. இதுலாம் புரியும்..!! இவனுக்கு புரியலன்னதும் நம்மள நான்சென்ஸ்ன்றான்..!!"

"டேய்.. ஆரம்பிச்சுட்டீங்களாடா மறுபடியும்..?? இந்த இஞ்சின் ஆயிலுக்காக இப்போ என்னை லவ் பண்ணுன்னு சொல்லப் போறீங்களாடா..??"

"இல்ல மச்சி.. கிஷோர் சொல்றதுல ஒரு பாயின்ட் இருக்கு..!! இப்போ.. எங்கள விடுடா.. நாங்கல்லாம் டெக்னீஷியன்ஸ்.. ஆனா நீ அப்படி இல்லடா..!! நீ ஒரு கிரியேட்டர் மச்சி.. ஆட் ஃபில்ம்ஸ் தாண்டி, சினி ஃபீல்ட் போகவும் ட்ரை பண்ணிட்டு இருக்குற.. எந்த ஒரு க்ரியேட்டருக்குமே காதல்ன்றது ரொம்ப முக்கியமான விஷயம்டா..!!"

"ஓ.. அப்போ லவ் எக்ஸ்பீரியன்ஸ் இல்லாதவன் க்ரியேட்டரா இருக்க முடியாதுன்னு சொல்றியா..??"

"இல்ல.. லவ் எக்ஸ்பீரியன்ஸ் இருக்குற கிரியேட்டர் ரொம்ப சக்ஸஸ்ஃபுல்லா இருக்க முடியும்னு சொல்றேன்..!! உனக்கு லவ் எக்ஸ்பீரியன்ஸ் இருந்திருந்தா.. மோகன்ராஜோட இப்படி நீ அர்த்தம் இல்லாம சண்டை போட்டு வந்திருக்க மாட்டேன்னு தோணுது.. அந்த இஞ்சின் ஆயில் வெளம்பரத்தை எப்படி ரொமாண்டிக்கா எடுக்கலாம்னு தின்க் பண்ண ஆரம்பிச்சிருப்பேன்னு தோணுது..!!"

"ஹையோ.. அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்..!!" அசோக் கேட்க, கிஷோர் இப்போது எரிச்சலாக கத்தினான்.

"ஏய்.. சம்பந்தம் இருக்குதுடா வெண்ணை.. உனக்குத்தான் புரியல..!! உன்னாலலாம் நாங்க சொல்ற எதையுமே புரிஞ்சுக்க முடியாதுடா.. லவ்னா என்னன்னு புரிஞ்சுக்க முடியாது.. லவ் ஃபீலிங் பத்தி புரிஞ்சுக்க முடியாது.. லவ் பண்றவங்க மனசையும் புரிஞ்சுக்க முடியாது..!! உனக்கு அதுலாம் புரிஞ்சிருந்தா.. இப்படி அந்த மோகன்ராஜோட மல்லுக்கட்டிட்டு நிக்க மாட்ட.. உன் தங்கச்சிக்கும் எனக்கும் சண்டை மூட்டிவிட்டு வேடிக்கை பாக்க மாட்ட..!! ஏன்.. என்னைய, வேணுவை, சாலமனை, எங்க லவ்வை.. எதுக்கெடுத்தாலும் நக்கல் பண்ணி சிரிக்கிறல.. அதுலாம் சத்தியமா பண்ணமாட்ட..!! என்னடா.. நான் சொல்றது சரிதான..??"

கிஷோர் அவ்வாறு சொன்னதும், இப்போது வேணுவுக்கும் சாலமனுக்குமே சுருக்கென்று ஒரு விஷயம் மனதை தைத்தது. தங்கள் காதலையும், தாங்கள் படுகிற அவஸ்தையையும், அசோக் அடிக்கடி காமடி பண்ணி கலாய்ப்பது, அவர்களுக்கு எப்போதுமே ஒருவித கடுப்பை கிளப்பும். 'இவனை ஒன்னும் செய்ய முடியலையே.. இவன் மட்டும் ஜாலியா இருக்கானே..??' என்பது மாதிரியான கடுப்பு. அவர்கள் மனதில் உறைந்திருந்த அந்த கடுப்பு, இப்போது கிஷோருடன் சேர்ந்து அவர்களிடமிருந்தும் வெளிப்பட்டது.

"சரி விடு மச்சி..!! லவ் பண்றதுக்குலாம் ஒரு தில்லு வேணுண்டா.. அது நம்ம அசோக்கிட்ட இல்லைன்னு நெனச்சுக்க வேண்டியதுதான்..!!" சாலமன் கிண்டலாக சொல்ல, அசோக்குக்கு சுரீர் என்று கோவம் வந்தது.

"ஏய்.. ஓவரா பேசுறடா..!!"

"ஓவரா பேசுறனோ.. விக்கெட்டா பேசுறனோ.. உண்மையை பேசுறேன்.. போ போ..!!"

"ஆமாம் மச்சி.. உனக்கு எங்களோட கஷ்டம்லாம் புரியலடா.. லவ் பண்றவனுக்குத்தான் அதுலாம் புரியும்.. அதை மொதல்ல அக்ஸப்ட் பண்ணிக்கோ நீ..!!" தன் பங்குக்கு கொளுத்திப் போட்டான் வேணு.

"ஏய்.. ரொம்ப பேசாதீங்கடா.. என்னடா பெரிய கஷ்டம், உங்க கஷ்டம்..??" அசோக் ஏளனமாக கேட்க, இப்போது கிஷோர் அவனிடம் சவால் விடுவது மாதிரி சொன்னான்.

"என்ன.. எளக்காரமா இருக்கா உனக்கு..?? மவனே.. ஒரு பொண்ணோட பேசிப்பாருடா.. அவ கூட பழகிப்பாரு.. அப்போ தெரியும் எங்க கஷ்டம்..!! அவளுக்கு புடிச்ச மாதிரிலாம் நடந்துக்கிட்டு.. அவ இழுத்த இழுப்புக்குலாம் வளைஞ்சு குடுத்து.. நம்ம மேல நம்பிக்கை வரவைச்சு.. கொஞ்சம் கொஞ்சமா அவளை அட்ராக்ட் பண்ணி.. ஐ லவ் யூ சொல்ல வைக்கிறதுக்குள்ள.. உன் பருப்பு பரதநாட்டியம் ஆடுதா இல்லையான்னு பாரு..!!"

"ஹாஹா.. இதுலாம் வேற யார்ட்டயாவது போய் சொல்லு..!! நேத்துவரைகூட எனக்கு இதுல பெரிய ஐடியாலாம் இல்ல.. ஆனா நேத்து என் அம்மாட்ட பேசுனப்புறம்.. ஒரு விஷயத்துல நான் ரொம்ப கான்ஃபிடன்ட்டா இருக்கேன்..!!"

"எந்த விஷயத்துல..??"

"ஒரு பொண்ணை காதலிக்க வைக்கிறது ரொம்ப ஈஸின்ற விஷயத்துல..!!"

அசோக் அவ்வாறு படுசீரியஸாக சொல்ல, இப்போது அசோக்கை தவிர மற்ற மூவரும் கோரஸாக அவனை பார்த்து கைகொட்டி சிரித்தார்கள்.

"ஹாஹா... ஹாஹா... காமடி பண்ணாத மச்சி.. ஹாஹா...!!!"

"ஏய்.. என்னடா சிரிப்பு..?? நான் சீரியஸாத்தான் சொல்றேன்..!!"

"ஓ..!! ஓகேடா..!! அப்போ ஒன்னு பண்றியா..??"

"என்ன..??"

"இந்த ஃபுட்கோர்ட்ல இருக்குற ஏதாவது ஒரு பொண்ணோட பேசிப்பழகி.. அவளை உன்கிட்ட 'ஐ லவ் யூ'ன்னு சொல்ல வச்சு காட்டுறியா..??" கிஷோர் கேஷுவலாக ஒரு சேலஞ்ச் ப்ரொபோஸ் செய்ய, அசோக் இப்போது சற்றே மிரண்டான்.

"ஏ..ஏய்.. எ..என்னடா சொல்ற.. லவ்லாம்.. இ..இப்படி.."

"ஏன்.. ஏன் தயங்குற..?? நீதான நேத்து சொன்ன..?? நீ லவ் பண்ணினா.. யாராவது ஒரு பர்ஃபக்ட் ஸ்ட்ரேஞ்சர் டுபுக்கைத்தான் லவ் பண்ணுவேன்னு..!! இங்க இருக்குறவளுக எல்லாரும் ஸ்ட்ரேஞ்சர்ஸ்தான்.. நாங்க யாராவது ஒரு பொண்ணை ச்சூஸ் பண்ணி தர்றோம்.. நீ அவளை லவ் பண்ண வச்சு காட்டு..!! தில் இருக்கா உனக்கு..??"

"இ..இல்ல.. இ..இதுலாம் வேலைக்காகாது..!!"

"ஹாஹா.. அப்போ நீ ஒரு டம்மிபீஸ்னு ஒத்துக்கோ..!!" கிஷோரின் வார்த்தைகள் அசோக்கை சுருக்கென்று தைக்க,

"ஏய்...!!" என்று அவனிடம் எகிறினான்.

"இந்த கோவமசுருக்குலாம் ஒன்னும் கொறைச்சல்மசுரு இல்ல..!!" கிஷோர் கூலாக சொன்னான்.

அசோக் இப்போது வாயடைத்துப் போனான். வகையாக மாட்டிக்கொண்ட மாதிரியான ஒரு உணர்வு அவனுக்கு..!! நண்பர்கள் மூவரும் அவனை ஒரு இளக்கார பார்வை பார்த்தபடி.. அவனுடைய பதிலுக்காக காத்துக்கொண்டிருக்க.. அவர்களுடைய பார்வையை அசோக்கால் எதிர்கொள்ள முடியவில்லை.. அவனையும் அறியாமல் அவனுடைய தலை மெல்ல மெல்ல கீழே தாழ்ந்தது..!! அவனுடைய நிலைமையை உணர்ந்த மற்ற மூவரும், வார்த்தைகளால் அவனை மேலும் சீண்டினர்..!!

"பாத்தியா எப்படி உக்காந்திருக்கான்னு..?? அடுத்தவனை பாத்து ஆயிரம் நொட்டை சொல்லலாம் மச்சி.. அவன் அவனுக்கு வந்தாத்தான் தெரியும் வாந்தியும் வயித்தாலயும்..!!" என்றான் வேணு.

"எங்களுக்குள்ள எத்தனை தடவை பிரேக்கப் ஆனாலும்.. திரும்ப திரும்ப அவளை எங்கிட்ட வரவைக்கிறேன் பாத்தியா.. அதுக்குலாம் ஒரு ஸ்டஃப் வேணும் மச்சி.. அந்த ஸ்டஃப் இல்லாதவன்லாம் இப்படித்தான்..!!" சாலமன் எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தான்.

"விடுங்கடா.. அவன்கிட்ட ஏதோ வாய் இருக்கு.. நம்மகிட்ட ஏதோ காது இருக்குன்னு.. வக்கனையா பேசிட்டான்..!! பேச்சு மட்டுந்தான் அப்படி மச்சி.. அவனால முடியாதுன்னு அவனுக்கே தெரியும்..!!" கிஷோரின் வார்த்தைகள் அசோக்கின் தன்மானத்தை சீண்டிப் பார்த்தன.

'இப்போது என்ன செய்வது..?? இவர்களுடைய சவாலை கெத்தாக ஏற்றுக்கொள்வதா.. இல்லை.. என்னால் முடியாது என்று நழுவி கேவலப்படுவதா..??' அசோக் கண்களை மூடி ஒருகணம் நிதானமாக யோசித்தான். அம்மா, அப்பா, தங்கை, பாட்டி, பரந்தாமன், நண்பர்கள், நாய்க்குட்டிகள் என.. அனைவரும் இவனுடைய மனக்கண்ணில் தோன்றி.. இவனை சுற்றி நின்றுகொண்டு.. 'காதலித்துப்பார்.. காதலித்துப்பார்..' என்று உரத்த குரலில் கத்தினார்கள்..!!

ஒரு ஐந்தாறு வினாடிகள் அசோக் அந்தமாதிரி விழிகள் மூடி அமர்ந்திருப்பான். அப்புறம் பட்டென இமைகளை பிரித்து, நண்பர்கள் மூவரையும் தைரியமாக ஏறிட்டான். மிடுக்கான குரலில் சொன்னான்.

"ஓகேடா..!! பொண்ணை ச்சூஸ் பண்ணுங்க.. நீங்க யாரை ச்சூஸ் பண்றிங்களோ.. அந்தப்பொண்ணை நானும் லவ் பண்றேன்.. அவளையும் என்னை லவ் பண்ண வைக்கிறேன்..!!"

அசோக் அவ்வாறு கெத்தாக சவாலை ஏற்றுக் கொண்டதும், இப்போது நண்பர்கள் மூவருக்கும் சப்பென்று போனது..!! 'அவன் இந்த சவாலுக்கு ஒத்துக்கொள்ள மாட்டான்.. அதை வைத்தே காலம் முழுவதும் அவனை கலாய்க்கலாம்..' என்றுதான் அவர்கள் எண்ணியிருந்தார்கள்..!! இப்படி அவன் ஏற்றுக்கொண்டது மற்றவர்களுக்கு ஒருவித ஏமாற்றத்தையே தந்தது. இருந்தாலும் இப்போது வேறுவிதமான எண்ணமும் எதிர்பார்ப்பும் அவர்களுடைய மனதில் கிளம்பி, அவர்களை நிமிர்ந்து அமரவைத்தன.

"நெஜமாத்தான் சொல்றியா..??" கிஷோர் தன்னுடைய முகத்தை அசோக்கின் முகத்துக்கு அருகே எடுத்துச் சென்று கேட்டான்.

"எஸ்..!!"

"அப்புறம் பேக் அடிக்க மாட்டியே..??"

"ஹஹா... சப்பை.. சப்பை மேட்டர்டா இது..!!"

"ஓகே..!! கூல்..!!"

சொல்லிக்கொண்டே கிஷோர் அவனுடைய சேரில் வசதியாக சாய்ந்து கொண்டான். மற்றவர்களிடம் திரும்பி சொன்னான்.

"ஓகேடா..!! ரெடியா நீங்க.. செலக்ட் பண்ணலாமா..??"

"நீயே யாரையாவது செலக்ட் பண்ணு கிஷோர்.. நீதான் இவன்கிட்ட ரொம்ப அனுபவிச்சிருக்குற..!!" அசோக்கின் தோளை பிடித்து அமுக்கியவாறே சொன்னான் வேணு.

"ஆமாம் மச்சி.. நீயே செலக்ட் பண்ணு..!!" வேணுவை ஆமோதித்தான் சாலமனும்.

"என்னடா...?? உனக்கு ஓகே வா..??" அசோக்கிடம் கேட்டான் கிஷோர்.

"ம்ம்.. நோ ப்ராப்ளம்..!!"

அசோக் சம்மதித்ததும், கிஷோர் இப்போது தன் தலையை நைன்ட்டி டிக்ரீ இடது பக்கமாக திருப்பினான்..!! மிக மிக பொறுமையாக தனது தலையை சுழற்றி.. அந்த ஃபுட்கோர்ட்டில் அலைந்து திரிந்த, அமர்ந்து உண்கிற பெண்களை.. ஒவ்வொருவராக கவனமாக பார்த்துக் கொண்டே வந்தான்..!!

"ஏய்.. பாத்துடா.. கல்யாணம் ஆன ஆன்ட்டி.. பல்லு போன பாட்டிலாம் செலக்ட் பண்ணிட போற.. அதுலாம் நம்மால முடியாது..!!" அசோக் கிண்டலாக சொன்னான்.

"ஹேய் தெரியுண்டா.. நீ மூடு...!!" பெண்கள் மீதிருந்த பார்வையை விலக்காமலே கிஷோர் சொன்னான்.

"அப்புறம் இன்னொரு மேட்டரு.."

"என்ன...??"

"என் மேல இருக்குற கடுப்புல ஏதாவது சப்பை ஃபிகரை செலக்ட் பண்ணிடாத.. என் ரேஞ்சுக்கு ஏத்த மாதிரி.. பொண்ணு அப்படியே பட்டாசா.. சூப்ப்ப்பர் ஃபிகரா இருக்கணும்..!!"

"கவலையே படாத மச்சி...!! சூப்ப்ப்பர் ஃபிகர்தான் உனக்கு சூப்ப்ப்பரா சூப்பு குடுப்பா.. சூப்பர் ஃபிகரே செலக்ட் பண்ணித் தர்றேன் உனக்கு..!!"

மேலும் கால் நிமிடம் ஆனது..!! கொஞ்சம் கொஞ்சமாய் சுழன்று கொண்டே வந்த கிஷோரின் பார்வை.. அவனுக்கு எதிரே அமர்ந்திருந்த அசோக்கின் பின்புறமாக வந்ததும்.. அப்படியே நின்றது..!! அவனுடைய முகத்தில் இப்போது ஒருவித திருப்தி பரவியது..!! 'சட்' என்று விரலை ஒருமுறை சொடுக்கினான்..!! ஆட்காட்டி விரலால் அசோக்கின் பின்பக்கமாக சுட்டிக்காட்டி..

"அவ..!!" என்றான்.

உடனே மற்ற மூவரும் அடித்துப் பிடித்துக்கொண்டு அவனுடைய விரல் காட்டிய திசையில் திரும்பினார்கள். அந்த திசையில் இருந்த ஐம்பத்து சொச்ச பெண்களையும், பரபரவென பார்வையால் அலசினார்கள். 'ஏய்.. யாருடா.. யாருடா...' என்று ஆளாளுக்கு குழப்பமாய் கேட்டார்கள்.

"அவடா.. தனியா நடந்து வர்றா பாரு.. ப்ளாக் டி-ஷர்ட்.. ஷோல்டர் பேக்..!!"

கிஷோர் சொன்னதும் அசோக்கின் பார்வை 'சர்ர்ர்ர்' என்று மற்ற பெண்களை ஃபில்டர் செய்தது..!! அந்த ப்ளாக் டி-ஷர்ட் பிம்பத்தை தேடி கண்டுகொண்டு.. 'ஜிவ்வ்வ்' என்று ஜூம் செய்தது..!! ஜூம் செய்ததுமே அசோக் இன்ஸ்டண்டாய் ஒரு இன்ப அதிர்ச்சியில் திளைக்க ஆரம்பித்தான்..!! நடப்பது கனவா நனவா என்று நம்ப முடியாமல் திகைத்தான்..!!


அவள்.. அந்தப்பெண்.. நேற்று இரவு இதே இடத்தில் சந்தித்தானே.. அவள்..!! இவனுடைய கனவில் வந்து கங்கனம் ஸ்டைல் டான்ஸ் ஆடினாளே.. அவள்..!! 'யாருமே உன்னை அட்ராக்ட் பண்ணினதில்லையா' என்று அம்மா கேட்டபோது மனதுக்குள் வந்து போனாளே.. அவள்..!! பளிச்சிடும் பால்நிலா முகத்துடனும்.. பளபளக்கிற செர்ரிப்பழ உதட்டுடனும்.. காதில் வளையம் அசைந்தாட.. காற்றில் கார்குழல் அலைபாய.. கழுத்துக்கு கீழே கவர்ச்சித் திமிறலும்.. இடுப்புக்கு கீழே இருகுட வீணையுமாய்.. அழகு மொத்தைத்தையும் அபகரித்துக் கொண்டவள் போல.. அரபுக்குதிரை எனவே அடியெடுத்து நடந்து வந்தாள்..!!

'என்ன ஒரு ஆச்சரியம் இது..?? என் மனதில் ஏற்கனவே ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தவளை.. கிஷோரின் விரல் எப்படி சரியாக சுட்டிக் காட்டுகிறது..?? இவள்தான் எனக்காக விதிக்கப்பட்டவளோ..?? 'அடிக்கடி உன் கண்ணு முன்னாடி கூட வந்து போயிருப்பா.. உனக்குத்தான் அடையாளம் கண்டுபிடிக்க தெரியல..' என்று அம்மா சொன்னாளே.. இவள்தான் அவளோ..?? உண்மைதானா..?? இறைவன் எனக்கே எனக்கென அனுப்பி வைத்தவள் இவளேதானா..?? இத்தனைநாள் நான்தான் இமை திறந்து பாராமலே இருந்தேனா..??'

"என்னடா மச்சி.. பேச்சையே காணோம்..?? ஆளு எப்படி..??" கிஷோரின் கேள்விக்கு அசோக் பதில் சொல்வதற்கு முன்பே,

"மச்சீஈஈ... செம்ம்மயா இருக்குறாடா..!!!" ஜொள்ளு விட்டவாறு சொன்னார்கள் சாலமனும் வேணுவும். அசோக் சட்டென கடுப்பானான்.

"தலையை திருப்புங்கடா தறுதலைங்களா.. தங்கச்சி முறை ஆவுது அவ உங்களுக்கு..!!"

என்றவாறு அசோக் அவர்கள் இருவரது தலையையும் பிடித்து வலுக்கட்டாயமாக திருப்பினான். அசோக்கின் வார்த்தையில் இருந்த உண்மை உறைக்கவும், சாலமனும் வேணுவும் முகம் வாடிப் போனார்கள். இப்போது அசோக்கும் திரும்பி அமர்ந்தான். கிஷோர் அதற்காகத்தான் காத்திருந்த மாதிரி அவனிடம் கேட்டான்.

"என்னடா.. ஓகேவா..??"

"ம்ம்... டபுள் ஓகே..!!" அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சாலமன் ஒரு சந்தேகத்தை கிளப்பினான்.

"மச்சி.. எனக்கு ஒரு டவுட்டு..!!"

"என்னடா..??" கிஷோர் கேட்டான்.

"அவளை பாத்தா காலேஜ் பொண்ணு மாதிரிதான் இருக்குது.. எப்படியும் கல்யாணம்லாம் ஆகிருக்காது..!! ஆனா.. அவ வேற யாரையாவது லவ் பண்ணிட்டு இருந்தான்னா..?? ஏன் கேக்குறேன்னா.. இப்படி லட்டு மாதிரி இருக்குறவளுகளைலாம்.. இவ்வளவு நாளு எவனும் விட்டு வைக்க மாட்டானுக மச்சி..!! அல்ரெடி ஒரு அம்பது பேராவது அப்ளிகேஷன் போட்ருப்பானுக.. அதுல ஏதாவது ஒரு அப்ளிகேஷனுக்கு அவ அப்பாயின்ட்மன்ட் ஆர்டர் குடுத்திருந்தா..??" சாலமனின் சந்தேகத்தை கிஷோர் கேஷுவலாக தீர்த்து வைத்தான்.

"ஸோ வாட்..?? அப்பாயின்ட்மன்ட் ஆர்டர் குடுத்தவனுக்கு டிஸ்மிஸ் ஆர்டர் வாங்கிக் குடுக்குறது.. நம்ம பையனுக்கு ஒரு எக்ஸ்ட்ரா வொர்க்... அவ்வளவுதான்..!!"

"என்னடா சொல்ற..??"

"ஆமாம்..!! சப்போஸ் அவ வேற யாரையாவது லவ் பண்ணிட்டு இருந்தா.. இவன் அந்த லவ்வை எப்படியாவது கெடுத்து நாசமாக்கி.. அவளுக்கு இவன் மேல புதுசா லவ் வரவைக்கனும்.. அதுதான் தில்லு..!! எப்புடி..?? ம்ம்ம்ம்... என்னடா.. டீல் ஓகேதான..??"

கிஷோர் அசோக்கை பார்த்து மீண்டும் கேட்டான். அல்ரெடி அந்தப்பெண்ணுடன் கனவுலகில் சஞ்சரிக்க ஆரம்பித்திருந்த அசோக், எங்கேயோ ஆகாயத்தை வெறித்தவாறே சொன்னான்.

"ஹ்ஹ.. நான் டீல்க்கு ஓகே சொல்லி ரொம்ப நேரம் ஆச்சு மச்சி..!!"

"அப்புறம்..??" கிஷோர் கேட்க,

"அப்புறம் என்ன..??" அசோக் திருப்பி கேட்டான்.

"போ.. போய் வேலையை ஆரம்பி.. அவ கூட போய் பேசு.. போ..!!"

"இப்போவேவா..??" அசோக் அப்பாவியாய் கேட்க, கிஷோர் இப்போது கிண்டலாக சொன்னான்.

"டேய்.. அவ என்ன உன் பக்கத்து வூட்டு ஆயான்னு நெனச்சியா..?? நெனச்சப்பலாம் போய் கடலை போட்டு வர்றதுக்கு..?? இன்னும் பத்து நிமிஷத்துக்கப்புறம் அவ எங்க இருப்பான்னே நம்ம யாருக்கும் தெரியாது.. இனிமே அவளை லைஃப்ல திரும்ப மீட் பண்ணுவமான்னும் தெரியாது..!! யூ.. பெட்டர் ஸ்டார்ட் நவ்..!!"

கிஷோரின் கிண்டலில் இருந்த உண்மை அசோக்கை சுருக்கென்று குத்தியது. 'உண்மைதான்.. இனி இவள் என் வாழ்வில் திரும்ப வருவாள் என்று என்ன நிச்சயம்..?? இன்றே இவளை இம்ப்ரஸ் செய்தாக வேண்டும்.. அவளுடய தொடர்பு விவரங்கள் அறிந்தாக வேண்டும்.. தாமதிக்கிற ஒவ்வொரு வினாடியும் தவறுதான்.. கிளம்பு அசோக்..!!'

அசோக் இப்போது பட்டென சேரில் இருந்து எழுந்து கொண்டான். 'ஆல் தி பெஸ்ட் மச்சி..' என்ற நண்பர்களை அலட்சியம் செய்தவாறு திரும்பி நடந்தான். அந்த தேவதையை குறி வைத்து விறுவிறுவென நகர்ந்தான். அவளோ விம்மிய மார்புகள் கிடுகிடுக்க நடைபோட்டு, இவனுக்கு நேர் எதிரே வந்து கொண்டிருந்தாள். இருவருக்கும் இடையில் ஒரு ஐந்தடிதான் இடைவெளி என்கிற நிலையில் அவள் திடீரென நின்றாள். சட்டென இடது பக்கம் திரும்பி நடந்தாள். அதை எதிர்பாராமல் ஒருகணம் திணறிய அசோக், பிறகு சமாளித்துக்கொண்டு அவளை பின்தொடர்ந்தான்.

அவள் ஒரு பிஸ்ஸா ரெஸ்டாரன்ட் கவுன்ட்டர் நோக்கி சென்றாள். ஆர்டர் கொடுப்பதற்காக அல்ரெடி காத்திருந்த இருவருடன் மூன்றாவது ஆளாக சேர்ந்து கொண்டாள். அவளுக்கு அடுத்து, தான் இடம்பிடிக்க வேண்டும் என்று எண்ணிய அசோக்கும், அவசரமாக அவளை நோக்கி நகர்ந்தான். ஆனால் இவன் க்யூவில் சென்று நிற்பதற்குள், இடையில் இன்னொரு இடியட் வந்து புகுந்து கொண்டான். அசோக் 'ச்ச..!!' என்று வெறுப்பாக ஒரு சலிப்பை உதிர்த்தான்.

இடையில் நின்ற அந்த இடியட்டையும் மீறி, அவளுடைய மேனி நறுமணம் அசோக்கை தாக்கியது. ஒருவித மயக்கத்தை அவனுக்கு உண்டு பண்ணியது. கருகருவென மினுமினுத்த அவளது கூந்தல் வனப்பும், காதில் குலுங்குகிற அந்த பிளாஸ்டிக் வளையங்களுமே அவனுடைய மனதை கிறங்கடித்தன. ஒருமுறை பின்னால் திரும்பி நண்பர்களை பார்த்தான். அவர்கள் இவனையேதான் பார்த்துக் கொண்டிருந்தனர். 'அவளிடம் பேசு.. பேசு..' என்பதுபோல சைகை செய்தனர்.

அசோக் இப்போது மீண்டும் இந்தப்பக்கம் திரும்பிக் கொண்டான். 'சரி.. அவளிடம் மெல்ல பேச்சு கொடுக்கலாம்..' என்று மனதை தயார்படுத்திக் கொண்டான். கொஞ்சமாய் எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டான். சற்றே நகர்ந்து.. தனக்கு முன் நின்றிருந்தவனை தாண்டி.. அவளை அருகாக அணுகி.. 'ஹலோ.. எக்ஸ்க்யூஸ் மீ..' என்று அவன் சொல்வதற்கும்.. இடையில் நின்றிருந்த அந்த இடியட்.. அவளுடைய பின்புறத்தை 'தட்..!!' என்று தட்டுவதற்கும்.. சரியாக இருந்தது..!!

சரக்கென்று திரும்பினாள் அவள்..!! அவளுடைய முகம் ஆத்திரத்தில் இன்ஸ்டண்டாக சிவந்து போயிருந்தது..!! 'யூ.. ஸ்கவுண்ட்ரல்..!!' என்று கத்தியவாறு அந்த இடியட்டின் சட்டையை கொத்தாகப் பற்றினாள். அவளுடைய புறங்கையை வீசி 'பளார்ர்.. பளார்ர்.. பளார்ர்..' என்று அவன் கன்னத்தில் அறைய ஆரம்பித்தாள்.

"உனக்குலாம் அக்கா தங்கச்சி இல்ல.. அவளுகள போய் இப்படி பின்னால தட்ட
வேண்டியதுதான..??"

அறைந்துகொண்டே பற்களை கடித்து அலறினாள். அவளுடைய ஆவேசத்தில் அசோக் அப்படியே ஆடிப்போனான். அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தான். அறை வாங்கியவன் அவளுடைய பிடியில் இருந்து தப்பிக்க.. தன் உடலை ஒரு சிலுப்பு சிலுப்பினான்..!! பிடியில் இருந்து விலகி பின்னால் சரிந்தான்.. பேலன்ஸ் கிடைக்காமல் தடுமாறி.. யாரோ சாப்பிட்டுக்கொண்டிருந்த டேபிள் மீது சென்று விழுந்தான்..!! அமர்ந்திருந்தவர்கள் எழுந்து கொள்ள.. பிரியாணியோ பீஸ்புலாவோ கீழே விழுந்து சிதறியது..!!

அவள் இப்போது தனது வலது காலை உயர்த்தி, அணிந்திருந்த செருப்பை அவசரமாய் கழற்றினாள்..!!

"உன்னலாம் செருப்பால அடிக்கனுண்டா...!!"

கத்திக்கொண்டே கழற்றிய செருப்புடன் அவன் மீது பாய, அவன் டேபிளிலிருந்து தரையில் உருண்டு விழுந்தான். விருட்டென எழுந்து.. 'விட்டால் போதும்..' என்று விழுந்தடித்துக்கொண்டு ஓடினான். மொத்த ஃபுட் கோர்ட்டும் இப்போது அப்படியே அமைதியில் உறைந்து போயிருந்தது.. அனைவரும் திரும்பி இவளையே பார்த்தனர்..!! இவளோ ஆத்திரம் கொஞ்சமும் குறையாமல்.. அலறியடித்து ஓடுகிற அவனையே வெறித்துக் கொண்டிருந்தாள்..!! 'புஸ்.. புஸ்...' என்று அவள் கோப மூச்சு விட்டதில்.. அவளுடைய மார்புகள் ரெண்டும் 'குபுக்.. குபுக்..' என மேலும் கீழும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தன..!! இன்னும் தணியாத சினத்துடன் முகமும் உதடுகளும் துடித்துக்கொண்டிருந்தன..!! 'பொறுக்கி.. ராஸ்கல்..!!' என்று அவளது வாய் முனுமுனுத்தது..!! அசோக் அகலமாய் திறந்த விழிகளுடன்.. 'ஆ'வென்று பிளந்த வாயுடன்.. அவளையே பார்த்தவாறு.. சிலை மாதிரி நின்றிருந்தான்..!!

இப்போது அவள் சரக்கென்று தலையை சிலுப்பி அசோக்கை பார்த்தாள்..!! அவளுடைய கண்களில் அப்படி ஒரு கோபக்கனல்.. முகத்தில் அப்படி ஒரு ரௌத்திரம்.. உடம்பில் அப்படி ஒரு விறைப்பு..!! கையிலிருந்த செருப்பை படக்கென்று உயர்த்தினாள்.. அசோக்குடைய முகத்துக்கு அரை அடி நெருக்கமாக.. அந்த செருப்பை இப்படியும் அப்படியுமாய் ஆட்டியவாறு.. சூடாகவும், சீற்றமாகவும் கேட்டாள்..!!

"ஹலோ மிஸ்டர்..!!!! உங்களுக்கு என்ன வேணும்..???"

அவ்வளவுதான்...!! அசோக் அப்படியே வெலவெலத்துப் போனான்..!! முதுகுத்தண்டில் யாரோ ஐஸ் கத்தி செருகிய மாதிரி இருந்தது அவனுக்கு..!! ஜிவ்வென்று ஒரு பய சிலிர்ப்பு நாடி நரம்பெல்லாம் ஓட.. விரல்கள் எல்லாம் நடுநடுங்க ஆரம்பித்தன..!! அவனையும் அறியாமல் அவனுடைய கன்னங்கள் இரண்டையும் கைகளால் படக்கென்று பொத்திக் கொண்டான்..!!

"ஒ..ஒன்னும்.. ஒ..ஒன்னும் இல்லைங்க.. ந..நத்திங்..!!"

தொண்டையில் சிக்கிக்கொண்ட வார்த்தைகளை கஷ்டப்பட்டு வெளியே துப்பினான்..!! துப்பி முடித்ததும் அவசரமாய் திரும்பினான்..!! கீ கொடுத்த பொம்மை மாதிரி கிடுகிடுவென தன் நண்பர்களை நோக்கி நடக்க ஆரம்பித்தான்..!!

 


No comments:

Post a Comment

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...