Social Icons

நெஞ்சோடு கலந்திடு - 4







அத்தியாயம் 13

அண்டம் இன்னும் இயங்கிக் கொண்டிருப்பதற்கு ஆயிரம் காரணங்களை நீங்கள் அடுக்க இயலும். அசைக்க முடியாத ஒரு காரணத்தை நான் சொல்லுகிறேன். அதன் பெயர்.. நம்பிக்கை..!!

ஒரு உயிரணு கொள்ளும் நம்பிக்கைதான் கருவாகிறது..!! தவழும் குழந்தை நம்பிக்கையினை பற்றிக்கொண்டுதான் மேலெழுகிறது.. நிற்கிறது.. நடக்கிறது.. ஓடுகிறது..!! பள்ளி செல்லும் பையன் முதுகில் மூட்டை கட்டி எடுத்து செல்வது புத்தகங்களை மட்டும் அல்ல.. கூடவே நம்பிக்கையையும்..!! வேலை தேடுவோர் உறையின் உள்ளே இடுவது பயோ டேட்டா மட்டுமல்ல.. பதில் வரும் என்ற நம்பிக்கையையும்..!! தாலி கட்டுவதும், அதற்கு தலையை குனிவதும்.. நீடிக்கும் என்ற நம்பிக்கையால்..!! பொருள் ஈட்டுவதும், அதனுடன் புகழ் தேடுவதும்.. நிலைக்கும் என்ற நம்பிக்கையால்..!!

எடிசன் கொண்ட நம்பிக்கைதான் இன்று உலகம் முழுதும் எரிந்து கொண்டிருக்கிறது..!! கிரஹாம்பெல் கொண்ட நம்பிக்கைதான் உங்களது, எனது பாக்கெட்டில் இன்று கிணுகிணுக்கிறது..!! மனிதர்கள் கொண்ட நம்பிக்கையால்தான் அணுவை பிளந்து ஆராய்ச்சி செய்ய இயன்றது..!! நாடுகள் கொண்ட நம்பிக்கையால்தான் அணு ஆயுதப்போர் இன்னும் மூளாமல் இருக்கிறது..!!

ஒரு உயிர் இன்னொரு உயிரின் மீது வைக்கும் நம்பிக்கை என்பது அற்புதமான விஷயம்..!! உலகை இன்னும் சுழல செய்து கொண்டிருக்கும் உன்னதமான விஷயம்..!! அத்தகைய நம்பிக்கையை கொல்லுகிற செயல் மிகப்பெரிய குற்றம்..!! விஷத்தை விட கொடியது..!! நம்பிக்கை துரோகம் என்பது நல்ல மனம் கொண்டார்கள் செய்யத் துணியும் காரியம் அல்ல..!!

அதே நேரம்.. இயல்பிலேயே நல்ல இதயம் கொண்டவர்கள், அறிந்தோ அறியாமலோ அத்தகைய குற்றம் செய்துவிட்டால், அவர்கள் படுகிற மன உளைச்சலும் சொல்லி மாளாது..!! அசோக் அத்தகைய உளைச்சலுக்குத்தான் இப்போது உள்ளாகியிருந்தான்..!!

"ஏண்டா அப்படி சொல்ல சொன்ன..?" என்று திவ்யா திரும்பவும் கேட்டபோது,

"அவர் உன்னை எந்த அளவு லவ் பண்றாருன்னு பாக்கலாம்னு நெனச்சேன்.. ஆனா.. அவர் இப்படி பட்டுன்னு ஆஃப்லைன் போவார்னு நெனைக்கலை.."

என்று சொல்லி சமாளித்தான். திவ்யாவும் அந்த பதிலில் ஓரளவு சமாதானம் ஆனாள். ஆனால் அடுத்த சில வினாடிகளிலேயே..

"அவர் எப்படியும் திரும்ப வந்துடுவாருல அசோக்..?" என்று திவ்யா பாவமாக கேட்கும்போது நொந்து போய் விடுவான்.

திவாகர் ஆஃப்லைன் சென்று, அவனிடம் இருந்து எந்த தகவலும் இல்லாமல் போய், இன்றோடு ஐந்து நாட்கள் ஆகின்றன. இந்த ஐந்து நாட்களும் அசோக் அடைந்த மனப்போராட்டம் மிகவும் கொடிது..!! 'தவறு செய்து விட்டோமோ..?' என்று ஒரு எண்ணம் அவன் மனதை எந்த நேரமும் அரித்துக் கொண்டே இருந்தது. வழக்கமாக குறும்பு கொப்பளிக்கும் திவ்யாவின் முகம், அந்த ஐந்து நாட்களும் ஒருவித மென்சோகத்தில் மூழ்கிக்கிடக்க, அசோக்கிற்கு அவள் முகத்தை காண சகிக்கவில்லை. அவளை பார்க்கும் போதெல்லாம் ஒருவித குற்ற உணர்வின் பிடியில் அவன் சிக்கிக் கொள்வதையும் தவிர்க்க இயலவில்லை..!!

அன்று அசோக்குடைய அலுவலக நண்பன் ஒருவனுக்கு பிறந்த நாள். அந்த நண்பன் அவர்களுடைய டீமில் அனைவருக்கும், அன்று மதிய உணவு ட்ரீட் கொடுத்தான். அவர்கள் சென்ற உணவகத்திற்கு மிக அருகில்தான் திவ்யா படிக்கும் கல்லூரி உள்ளது. தின்று முடித்ததும் அனைவரும், திரும்ப அலுவலகம் கிளம்ப, அசோக் மட்டும் திவ்யாவை ஒரு எட்டு சென்று பார்த்து வீட்டு வரலாம் என்று பைக்கில் கிளம்பினான்.

பைக்கை கல்லூரி வளாகத்துக்குள் செலுத்தி பார்க் செய்தவன், செல்போன் எடுத்து திவ்யாவின் நம்பருக்கு கால் செய்தான். காத்திருந்தான்..!! கால் பிக்கப் செய்யப்பட்டது. எதிர் முனையில் வேறொரு பெண்ணின் குரல்..!!

"ஹலோ.."

"தி..திவ்யா..??" அசோக் திணறலாக கேட்டான்.


"அவ இங்க இல்லீங்களே..? நான் அவ ஃப்ரண்டு பேசுறேன்...!!"

"எங்க போயிருக்கா..?"

"அவ பேஸ்கட்பால் கிரவுண்ட்ல இருப்பா.. பேகை இங்க போட்டுட்டு போயிட்டா.."

"ஓ..!! தேங்க்ஸ்ங்க..!! ம்ம்ம்... ஆமாம்.. உங்க பேரு..??" அசோக் கேட்க,

"அது எதுக்கு உங்களுக்கு..?" அடுத்த முனை சூடானது.

"சரி.. வேணாம்.. விடுங்க..!!"

காலை கட் செய்த அசோக், அருகில் புல் வெட்டிக் கொண்டிருந்த ஒரு தொழிலாயிடம், பேஸ்கட்பால் மைதானம் எங்கிருக்கிறது என்று கேட்டு அறிந்து கொண்டான். செல்போனை பேன்ட் பாக்கெட்டில் செருகியவாறே, அந்த ஆள் கைகாட்டிய திசையில் மெல்ல நடையை போட்டான்.

புதிதாக போடப்பட்டிருந்த சிமென்ட் சாலை. அதன் இருபுறமும் உயர உயரமாய், பச்சை பச்சையாய் மரங்கள்.. அவன் நடந்து சென்ற அந்த சாலையை நிழலால் நனைத்திருந்தன..!! வெளிர் சாம்பல் நிற சாலையில் உதிர்ந்திருந்த பழுப்பு நிற இலைகளில், ஷூ கால்கள் பதிய அசோக் நடந்து சென்றான்..!!

நேராக நடந்து சென்றவன், புல் வெட்டியவன் சொன்ன நூலகத்தை அடைந்ததும், இடப்பக்கம் திரும்பினான். இப்போது தூரமாக பேஸ்கட்பால் மைதானம் கண்ணில் பட்டது. தனியாக பந்தை தரையில் தட்டியவாறே, இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்த திவ்யாவும்..!! மைதானத்தை நெருங்கியவன், சற்று தூரமாகவே நின்று கொண்டான். மர நிழலில் போடப்பட்டிருந்த சிமென்ட் பெஞ்சில் அமர்ந்து கொண்டான். பந்து தட்டி ஓடிக்கொண்டிருந்த திவ்யாவை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

திவ்யா அவள் மட்டும் தனியாக பயிற்சியில் ஈடுபட்டிருந்தாள்... கொளுத்தும் வெயிலில்..!! அவள்தான் அந்த நேரத்தில் அங்கு வந்து தனியாக விளையாடிக் கொண்டிருக்கிறாள் என்றால்.. அந்தப்பக்கம் ஜீன்ஸ் அணிந்த இரண்டு பேர்.. ஏதோ சீரியசாக பேசிக்கொள்வது மாதிரி பாவ்லா செய்து கொண்டு.. உச்சி வெயிலில் நின்று அவளை சைட் அடித்துக் கொண்டிருந்தார்கள்..!!

அசோக் வந்ததை திவ்யா கவனிக்கவில்லை. பயிற்சியை தொடர்ந்து கொண்டிருந்தாள். தன்னை சுற்றி எதிரணியினர் இருப்பது மாதிரி கற்பனை செய்துகொண்டு, அவர்கள் கைகளில் பந்து சிக்காதவாறு, நெளிந்து வளைந்து காப்பாற்றிக்கொண்டு, அப்படியும் இப்படியுமாய் ஓடினாள். அப்புறம் திடீரென திரும்பி.. லேசாக ஜம்ப் செய்து.. கூடையை நோக்கி சர்ரென பந்தை எறிந்தாள். அதுவும் அழகாக வளையத்துள் புகுந்து, வலைக்குள் நுழைந்து பொத்தென்று கீழே விழுந்தது..!!

இளநிலை பட்டம் படிக்கையில்தான், இந்த பேஸ்கட்பால் ஆர்வம் திவ்யாவுக்கு பிறந்தது. இப்போது இந்த கல்லூரி பெண்கள் அணிக்கு அவள்தான் கேப்டன்..!! பேஸ்கட்பால் அவளுக்கு அவ்வளவு பிடித்து போனது. அசோக்கிற்கும் அது நன்றாகவே தெரிந்த ஒரு விஷயம்..!! ஒருமுறை இந்தமாதிரி அவனிடம் சொல்லியிருக்கிறாள்.

"மனசு சரியில்லன்னு வச்சுக்கோ.. பேஸ்கட்பால் கோர்ட் போய்.. ரெண்டு ஷூட் போட்டா போதும்..!! அப்டியே கூல் ஆகிடுவேன் நானு..!!"

ஓரிரு நிமிடங்கள் கழித்துதான் திவ்யா அசோக்கை கவனித்தாள். எதேச்சையாக திரும்பியவள், அவனை பார்த்ததும் அப்படியே நின்றாள். ஒருகணம் திகைத்தவள், அப்புறம் லேசாக ஒரு புன்னகையை அவனிடம் வீசினாள்... அந்த புன்னகையுடனே கையில் வைத்திருந்த பந்தையும்..!! பறந்து வந்த பந்தை சரியாக கேட்ச் செய்த அசோக், பதிலுக்கு திவ்யாவை பார்த்து புன்னகைத்தான்.

திவ்யா நடந்து வந்து அவனுக்கருகே அமர்ந்து கொண்டாள். முகத்தில் வழிந்த வியர்வையை துவாலையால் துடைத்துக் கொண்டே கேலி தெறிக்கும் குரலில் கேட்டாள்.

"ஆபீஸ் பொண்ணுகள்லாம் உனக்கு அலுத்து போயிட்டாளுகளா..?"

"ஏன்...?"

"கலர் பார்க்க காலேஜுக்கே கெளம்பி வந்துட்டியேன்னு கேட்டேன்.."

"கலரா..?? உங்க காலேஜ்ல படிக்கிறதுகள எல்லாம் கலர்னு சொல்லாத..!! கலர்களா அதுங்க.. காட்டேரிங்க..!!"

"ஏன்..??"

"பின்ன..? பேரை கேட்டா கடிக்க வர்றாளுக.."

"ஹாஹா..!! யார்கிட்ட பேர் கேட்ட..?"

"உனக்கு கால் பண்ணேன்.. ஒருத்தி எடுத்தா.. அவகிட்ட..!! நல்லா கருங்கல்லை முழுங்குன காக்கா மாதிரி ஒரு வாய்ஸ்..!! ஆ..ஆமாம்.. அவ பேர் என்ன..??" அசோக் எதேச்சையாக கேட்பது மாதிரி கேட்க,

"அது எதுக்கு உனக்கு..?" என திவ்யா தெளிவாக இருந்தாள்.

"கிழிஞ்சது..!! எல்லாம் ஒரே மாதிரி இருக்கீங்கடி..!! அவளும் இப்டித்தான் கேட்டா..!!"

"ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!" திவ்யா பெரிதாக, அழகாக சிரித்தாள். அப்புறம் அந்த சிரித்த முகத்துடனே கேட்டாள்.

"ம்ம்ம்.. சாப்டியாடா..??"

"ஆச்சு ஆச்சு.. ஒரு ட்ரீட் இன்னைக்கு..!! இங்கதான்.. ராயல் என்க்லேவ் இருக்குல.."

"ஆமாம்.."

"அங்கதான்.. செம தீனி..!! சிக்கன், டர்க்கி, ஃபிஷ்.. வயிறு ஃபுல் ஆயிடுச்சு..!! ம்ம்ம்ம்.. நீ சாப்டியா திவ்யா..?" அசோக் சிரித்தவாறே கேட்க,

"இ..இல்லடா.." திவ்யாவின் முகம் பட்டென மாறியது.. சோர்வாக..!!

"ஏன்..?"

"ஒரு மாதிரி.. மனசே சரியில்ல..!! அதான்.. பால் எடுத்துட்டு இங்க வந்துட்டேன்..!!"

சொல்லிவிட்டு திவ்யா வேறெங்கோ பார்வையை திருப்பிக் கொண்டாள். அவ்வளவு நேரம் உற்சாகமாக இந்த அவளது முகம், பட்டென இப்போது வாடிப் போயிருந்தது. வாடிப்போன அவளுடைய முகத்தை பார்க்க.. அசோக்கிற்கு இப்போது வலித்தது..!! கடந்த ஐந்து நாட்களாக அடிக்கடி அவனை வாட்டி வதைக்கிற அந்த குற்ற உணர்ச்சி, இப்போது மீண்டும் வந்து அவன் மனதை கவ்விக் கொண்டது..!! சற்றே தடுமாற்றமான குரலில் கேட்டான்.

"தி..திவாகர் திரும்ப வராதாதலையா...?"

திவ்யா அந்த கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. எங்கேயோ வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள். இப்போது அசோக் குற்ற உணர்ச்சியை குழைத்த குரலில் சொன்னான்.

"ஸா..ஸாரி திவ்யா.." அவன் அப்படி சொல்ல, திவ்யா உடனே பதறிப் போனாள்.

"ஐயோ.. என்னடா நீ..?? நீ எதுக்கு ஸாரி கேக்குற..??"

"என்னாலதானா அப்படி ஆச்சு..? நாந்தான உன்னை லவ் இல்லன்னு சொல்ல சொன்னேன்..?? நான் மட்டும் அப்படி சொல்லாம இருந்திருந்தா.. இப்போ எந்த பிரச்னையும் இருந்திருக்காது...!!! ஸாரி திவ்யா.. என்னை மன்னிச்சுடு..!!"

"அசோக்.. ப்ளீஸ்.."

"நா..நான்.. நான் தப்பு பண்ணிட்டேன் திவ்யா.."

"அதுலாம் ஒண்ணுல்ல.. உன் மேல எந்த தப்பும் இல்ல..!!"

"இல்ல.. உனக்கு புரியலை.. நான்.." அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, திவ்யா டென்ஷனானாள். கத்தினாள்.

"ப்ச்..!! இப்போ நிறுத்தப் போறியா..? இல்லனா.. அப்படியே அறையவா..?? லூசா நீ..??"

"......" அசோக் இப்போது அமைதியானான்.

"அவர் திரும்ப வர்றாரு.. இல்லனா வராம போறாரு.. அதுக்காக நீ இப்படிலாம் தேவையில்லாம ஃபீல் பண்ணிட்டு இருக்காத..!! ப்ளீஸ்..!!"

சற்றே கோவமாக சொன்ன திவ்யா, சோர்ந்து போயிருந்த அசோக்கின் முகத்தையே கொஞ்ச நேரம் பாவமாக பார்த்தாள். அப்புறம் அவனுடைய வலது கையை எடுத்து தனது கைகளுக்குள் வைத்துக் கொண்டாள். லேசாக அழுத்தம் கொடுத்தாள். இப்போது தன் குரலை மிக மென்மையாக மாற்றிக் கொண்டு சொன்னாள்.

"இங்க பாருடா.. இப்படிலாம் நீ ஃபீல் பண்ண வேண்டிய அவசியமே இல்ல..!! நீ எனக்கு நல்லதுன்னு நெனச்சுத்தான அப்படி சொல்ல சொன்ன..? நீ என்ன வேணுன்னேவா அப்படி பண்ணின..?? அப்புறம் ஏன் ஃபீல் பண்ற..?? இனிமே இப்படிலாம் பேசாத அசோக்.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..!!"

அழுது விடும் குரலில் சொன்ன திவ்யா, அப்படியே அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். அவனுடைய கையை இறுக்கி கட்டிக் கொண்டாள். அசோக்குக்கு உள்ளத்தில் எழுந்த உணர்சிக் கொந்தளிப்பை அடக்க மிகவும் கஷ்டமாக இருந்தது. 'நீ என்ன வேணுன்னேவா அப்படி பண்ணின..??' என்ற திவ்யாவின் குரல் திரும்ப திரும்ப அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.

அசோக்கிற்கு இப்போது தன்மீதே ஒருவித வெறுப்பு வந்தது. 'ச்சே.. என் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறாள் இவள்..? அந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டேனே..? நட்பின் மூலம் உருவாகியிருந்த இவளது நம்பிக்கையை.. எனது காதலுக்கு திருட்டுத்தனமாக பயன்படுத்திக் கொள்வது என்ன நியாயம்..? என்னுடைய காதல் எனக்கு பெரிதாக இருக்கலாம்..!! ஆனால்..அவள் விரும்பி தேடுகிற வாழ்க்கையை.. இடையில் புகுந்து கெடுக்க.. எனக்கு என்ன உரிமை இருக்கிறது..? ச்சே.. தவறு செய்துவிட்டேன்.. எப்படியாவது இந்த தவறை சரி செய்தாக வேண்டும்..!! அந்த திவாகர் திரும்ப வந்தால்தான் என் மனதில் இருந்து இந்த குற்ற உணர்வு விலகும்..!! வருவானா..?'

அசோக் இப்போது ஒரு கையால் திவ்யாவின் மோவாயை மெல்ல பற்றி, அவளது முகத்தை நிமிர்த்தினான். தெளிவான ஒரு பார்வை பார்த்தான். நம்பிக்கை கொப்பளிக்கும் குரலில் சொன்னான்.

"கவலைப்படாத திவ்யா.. அவர் கண்டிப்பா வருவாரு..!!"

அசோக் அவ்வளவு நம்பிக்கையாக சொல்ல, இப்போது திவ்யாவின் முகமும் அவ்வளவு நேர சோர்வு மறைந்து, மலர்ச்சிக்கு போனது..!!



அத்தியாயம் 14

ஒரு இரண்டு நாட்கள் ஆகியிருக்கும். அசோக் தன் ஆபீசில் இருந்தான். நேரம் மாலை ஐந்து மணியை நெருங்கியிருந்தது. யாருக்கோ மெயில் டைப் செய்து கொண்டிருந்தவனை, அவனுடைய சீனியர் மேனேஜர் சுந்தர் இன்டர்காமில் அழைத்தார். 'இவர் எதுக்கு இந்த நேரத்தில் தன்னை அழைக்கிறார்..?' அசோக்கிற்கு எதுவும் புரியவில்லை..!! சிஸ்டத்தை லாக் செய்துவிட்டு அசோக் எழுந்து சென்றான்.

உள்ளே நுழைந்தவனை அவர் வரவேற்று இருக்கையில் அமர சொன்னார். கொஞ்ச நேரத்திற்கு.. 'வேலை எல்லாம் எப்படி போகிறது..?', 'வேறு ஏதாவது பிரச்னைகள் இருக்கிறதா..?' என்பது மாதிரி பொதுவான கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தவர், அப்புறம் அவர் அழைத்து பேச காரணமான அந்த முக்கியமான விஷயத்துக்கு வந்தார்.

"ஜெர்மனில இருந்து ஒரு காண்ட்ராக்ட் சைன் ஆகப்போகுது அசோக்.. புது கிளையன்ட்..!! ராஜன் சொன்னாரா..?" (ராஜன் என்பது அசோக்கின் ப்ராஜக்ட் லீட்)

"ம்ம்.. சொல்லிட்டு இருந்தாரு சுந்தர்.."

"இட்ஸ் ஹ்யூஜ்.. யூரோப்ல நாம இவ்ளோ பெரிய ப்ராஜக்ட் எக்சிக்யூட் பண்றது இதுதான் ஃபர்ஸ்ட் டைம்..!!"

"ம்ம்.." என்றான் அசோக், இதெல்லாம் எதுக்கு தன்னிடம் சொல்கிறார் என்ற குழப்பத்துடனே.

"இங்க இருந்து ஒரு மூணு பேரை அனுப்பனும் அசோக்.. இட்ஸ் லாங் டெர்ம்..!! அண்ட்... வெரி வெரி டிமாண்டிங் ஸ்கில்ஸ் அண்ட் ஹார்ட் வொர்க் ரெக்வயர்ட்..!! ராஜன் உன்னை ரெகமன்ட் பண்ணினாரு.. நீ என்ன சொல்ற..?"

"ஓ..!!"

அசோக்கிற்கு இப்போது எல்லாம் தெளிவானது. அதே நேரம் பயங்கர ஆச்சரியமாகவும் இருந்தது. லாங் டெர்ம் என்றால்.. இவர் சொல்வதை வைத்து பார்த்தால்.. குறைந்தது மூன்று வருடங்கள்..!! ஜெர்மனி சென்று, கிளையன்ட் கம்பெனியில் வேலை பார்த்து.. அவர்கள் விரும்பிய ப்ராஜக்டை ஸ்மூத்தாக முடித்துக் கொடுக்கும் வேலை..!! எக்கச்சக்கமாய் சம்பாதிக்கும் வாய்ப்பு..!! இந்த மாதிரி ஒரு வாய்ப்புக்காக இங்கு வேலை பார்க்கும் அனைவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த கம்பெனியில் இவனை விட சீனியர் ப்ரோக்ராமர்கள் எல்லாம் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால்.. அவர்கள் எல்லோரையும் விட்டுவிட்டு அசோக்கிடம் அந்த வாய்ப்பு தேடி வந்ததுதான், அவனது ஆச்சரியத்துக்கு காரணம். கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது. ஆனால்.. சந்தோஷம் கொள்ள முடியவில்லை. காரணம்.. அந்த மூன்று வருடங்களில்.. வருடத்திற்கு ஒரு முறைதான் இந்தியா வர இயலும்.. வருடத்திற்கு ஒரு முறைதான் திவ்யாவை பார்க்க இயலும்..!!

"என்ன அசோக்.. எதுவும் சொல்லாம உக்காந்திருக்குற..?" அசோக்கின் யோசனையை சுந்தர் கலைத்தார்.

"ஆ..ஆங்.. இட்ஸ் சர்ப்ரைஸிங்.. யு நோ..!! நா..நான் எக்ஸ்பெக்ட் பண்ணல..!!"

"ஹாஹா..!! சர்ப்ரைஸ்..?? ம்ம்ம்ம்.. ஸ்வீட் சர்ப்ரைஸ்தான..??" அவர் கேட்டுக்கொண்டிருக்கும்போதே ,

'என்னை பந்தாட பிறந்தவளே..
இதயம் ரெண்டாக பிளந்தவளே'

அசோக்கின் செல்போன் அலறியது. அசோக் அவசரமாக பேன்ட் பாக்கெட்டுக்குள் கைவிட்டு எடுத்து பார்த்தான். திவ்யாதான் அழைத்தாள். 'இவள் எதற்கு இந்த நேரத்தில் கால் செய்கிறாள்..?' என்று அசோக் புருவத்தை சுருக்கி ஓரிரு வினாடிகள் யோசித்தான். அப்புறம் காலை கட் செய்துவிட்டு சுந்தரின் முகத்தை ஏறிட்டான். அவர் புன்னகை மாறாத முகத்துடன் கேட்டார்.

"ம்ம்.. சொல்லு அசோக்.. ஸ்வீட் சர்ப்ரைஸ்தான..??"

"எ..எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை சுந்தர்.. ஆக்சுவலி.. ஐ ஆம்.."

என்று அவன் இழுத்துக்கொண்டிருக்க, மீண்டும் ஸ்ரீநிவாஸ் பாடினார். மீண்டும் திவ்யாதான்..!! இப்போது அந்த சுந்தர் ஒரு மாதிரி அவஸ்தையாக பெருமூச்சு விட்டார். மீண்டும் காலை கட் செய்ய முயன்ற அசோக்கை தடுத்தார்.

"இட்ஸ் ஓகே அசோக்.. ஏதாவது முக்கியமான காலா இருக்கப் போகுது.. வெளில போய் அட்டன்ட் பண்ணு..!! நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.. ஐ'ம் டன்..!! ஒன்னும் அவசரமில்ல.. பொறுமையா யோசிச்சு சொல்லு..!! உன் பாஸ்போர்ட்டை அட்மின்ல கொடுத்திடு.. அவங்க விஸா ப்ராசஸ் பண்ணட்டும்.. மொதல்ல விஸா வரட்டும்.. அப்புறம் பாத்துக்கலாம்.. சரியா..??" படபடவென சொன்னவர், கட்டை உயரலை உயர்த்தி காட்ட,

"தேங்க்ஸ் சுந்தர்..!!"

என்றுவிட்டு அசோக் அவருடைய அறையை விட்டு வெளியே வந்தான். கதறிக்கொண்டிருந்த செல்போனின் பிக்கப் பட்டனை அழுத்தி, அதன் பதற்றத்தை நிறுத்தினான். காதில் வைத்துகொண்டவன் சற்றே எரிச்சலான குரலில்தான் கேட்டான்.

"என்ன திவ்யா..?"

"அவர்கிட்ட இருந்து மெயில் வந்திருக்குடா..!!"

அடுத்த முனையில் திவ்யா உற்சாகமாக கத்தினாள். உடனே அசோக்கின் மனதை ஒரு இனம்புரியாத சோகம் வந்து கவ்விக் கொண்டது. அதே நேரம் இத்தனை நாள் அவனை வாட்டி வதைத்த குற்ற உணர்ச்சி, இனிமேல் இருக்கப்போவதில்லை என்ற நிம்மதியும், அவன் மனதில் பரவியதை அவனால் உணர முடிந்தது.


இனி திவ்யா தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை வைத்து, எந்த விபரீத விளையாட்டும் விளையாடக் கூடாது என்று முடிவெடுத்தான். முடிந்த அளவுக்கு திவ்யாவின் காதலுக்கும், அவளது நல்வாழ்க்கைக்கும் உதவியாக இருக்கவேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டான். குரலில் ஒரு புத்துணர்ச்சியை வரவழைத்துக்கொண்டு திவ்யாவிடம் பேசினான்.

"வாவ்..!! தேட்ஸ் கிரேட்..!! ம்ம்ம்... எ..என்ன சொல்றார்..?"

"நான் லவ் பண்ணாட்டாலும் அவர் என்னை லவ் பண்ணிட்டேதான் இருப்பாராம்.. அவரால என்னை மறக்கவே முடியாதாம்.. பிரிஞ்சு போயிடலாம்னுதான் முடிவு பண்ணினாராம்.. ஆனா முடியலையாம்..!! 'ஒரு வாரமா ஒழுங்கா சாப்பிடலை.. தூங்கலை.. உன் நெனைப்பாவே இருக்குன்'னு.. ஒரே பொலம்பல்..!! உருகி உருகி ஒரு கவிதை வேற எழுதி அனுப்பிருக்காரு..!! பாவம் அசோக்.. அவரை நாம ரொம்ப கஷ்டப் படுத்திட்டோம்னு நெனைக்கிறேன்..!!"

"ம்ம்.. கஷ்டப்படாம எதுவும் கெடைக்காது திவ்யா..!! அப்புறம்.. வேற என்ன சொன்னார்..? "

"இன்னைக்கு நைட்டு ஆன்லைன் வர்றாராம்.. நான் கண்டிப்பா சேட் பண்ண வரணும்னு சொல்லிருக்கார்..!!"

"ம்ம்.. குட்.. கோ அஹெட்.. போய் சேட் பண்ணு.."

"ஓகேடா..!! அப்புறம்.. நான் இன்னொன்னு நெனச்சேன்.."

"என்ன..?"

"இனிமேலும் அவர்கிட்ட எதையும் மறைக்க வேணாம்னு தோணுது அசோக்.. நானும் அவரை லவ் பண்றேன்னு சொல்லிடுறேன்.. சரியா..?" திவ்யா ஆர்வமாக கேட்க, அசோக் அவசரமாக தடுத்தான்.

"ஹேய் ஹேய்.. வெயிட்..!! வேணாம் வேணாம்.. இப்போ எதுவும் சொல்லாத..!!"

"ஏண்டா..?" திவ்யாவின் குரலில் ஒரு ஏமாற்றம்.

"வெறும் ஆன்லைன்ல அவர் சொன்னதை மட்டும் நம்பி எந்த முடிவுக்கும் வந்துட வேணாம் திவ்யா..!! அவரை பத்தி.. அவரோட நிஜ வாழ்க்கை பத்தி.. இன்னும் நல்லா தெரிஞ்சுக்கிட்டு அப்புறம் உன் லவ்வை சொல்லலாம்..!!"

"ஓ..!! ஓகே.. அதுவும் கரெக்ட்தான்..!! ம்ம்.. ஆனா.. இன்னைக்கு அவர் ஆன்லைன் வர்றப்போ.. என்னோட முடிவு என்னன்னு கேட்டா.. நான் என்ன சொல்றது..?"

"நல்ல கேள்வி..!! ம்ம்ம்ம்.... சரி... நீ என்ன பண்றேன்னா.. 'இப்போதைக்கு.. நாம ரெண்டு பேரும் கொஞ்ச நாள் பேசலாம்.. பழகலாம்.. ஒருத்தரை பத்தி ஒருத்தர் நல்லா தெரிஞ்சுக்கலாம்.. காதலை பத்தி அப்புறமா டிஸைட் பண்ணிக்கலாம்..' அப்டின்னு புடிகொடுக்காமவே சொல்லு..!!" அசோக் அவ்வாறு சொன்னதும், அடுத்த முனையில் திவ்யாவுக்கு ஒருவித திருப்தி ஏற்பட்டது.

"வாவ்.. கலக்குறடா அசோக்..!! லவ் அட்வைசர்னா நீதான் லவ் அட்வைசர்..!! இப்படித்தான் இருக்கணும்..!! ம்ம்.. நல்லாருக்கு இந்த டீல்.. அவரும் ஒத்துப்பார்னு நெனைக்கிறேன்..!!"

"கண்டிப்பா ஒத்துப்பார்..!! அப்புறம்.. இன்னொரு விஷயம் திவ்யா.. "

"என்ன..?"

“நான் சொல்றதை கொஞ்சம் கவனமா கேட்டுக்கோ.."

"ம்ம்.. சொல்லு.."

"சப்போஸ்.. அவர் உன்மேல லவ் ஃபீலிங்க்சொட ஏதாவது பேசினாரு.. உருகுனாரு.. ரொமாண்டிக்காலாம் ஏதாவது உளர்னாருன்னு வச்சுக்கோ.. ப்ளீஸ் டோன்ட் என்கரேஜ் ஹிம்..!! உடனே வேற டாபிக் மாத்திடு.. இல்லனா வேற ஏதாவது பேசுங்கன்னு நேராவே சொல்லிடு.."

"ம்ம்.. ஓகே..!! ஆனா.. ஏன் அந்த மாதிரி சொல்ற..?"

"காரணம் இருக்கு.. அவர் உன்னை புகழ ஆரம்பிச்சா.. உனக்கு கால் தரையில நிக்காது..!! கால் தரையில நிக்கலைன்னா.. மூளை வேலை செய்யாம போயிடும்.. அதான் சொன்னேன்..!!"

"வெவ்வவ்வவ்வே .!! போடா.. நான் ஒன்னும் அப்டிலாம் கெடயாது..!!"

"நான் வெளையாட்டுக்கு சொல்லல திவ்யா.. சீரியஸா சொல்றேன்..!! இனிமே அவர்கிட்ட பேசுறப்போ ரொம்ப தெளிவா இரு.. உன்னைப் பத்தி அதிக டீடெயில் அவருக்கு கொடுக்காத.. அவரைப் பத்தி நெறைய தெரிஞ்சுக்க ட்ரை பண்ணு..!! அவர் எந்த மாதிரி ஆள்னு தெரிஞ்சுக்குறது நமக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்.. அந்த மாதிரி கேள்வியா கேளு.. அதே நேரம் அவருக்கு சந்தேகம் வராத மாதிரி கேளு..!! சரியா..? "

"ம்ம்.. சரிடா..!!"

சில வினாடிகள் அமைதியாக இருந்த அசோக், அப்புறம் குரலை மிகவும் இறுக்கமாக்கிக்கொண்டு சொன்னான்.

"திவ்யா.."

"ம்ம்.."

"திஸ் இஸ் நாட் எ கேம்.. திஸ் இஸ் யுவர் லைஃப்..!! யு காட் தேட்..?"

"ம்ம்.."

"வெளையாட்டுத்தனமா இருக்காத திவ்யா.. திஸ் இஸ் வெரி வெரி சீரியஸ்..!! நீ ரொம்ப ரொம்ப தெளிவா இருக்கணும்.. புரியுதா..?"

"ம்ம்.. புரியுதுடா..!!" இப்போது திவ்யாவின் குரலிலும் ஒருவித சீரியஸ்னஸ் தென்பட்டது.



அத்தியாயம் 15

அன்று இரவு உணவுக்காக அசோக் வீட்டிற்கு வந்ததுமே, திவ்யா அவனை தன் அறைக்கு தனியாக அழைத்து சென்றாள். தனது மெயில் பாக்ஸ் திறந்து, தானும் திவாகரும் பேசிக்கொண்ட சேட் ஹிஸ்டரியை அவனுக்கு எடுத்து காட்டினாள். அசோக்கும் மிக கவனமாக அதை பார்வையிட்டான். திவாகர் தன்னைப் பற்றி சொன்ன விஷயங்களை, தன் மனதுக்குள் ஏற்றிக் கொண்ட அசோக், திவ்யா பேசியவற்றை மட்டும் சற்றே உன்னிப்பாக நோக்கினான். திருத்தங்கள் சொன்னான். வேறு எந்த மாதிரி பேசியிருக்கலாம் என்று ஆலோசனை கூறினான். திவ்யாவும் அசோக் கூறியவற்றை கூர்மையாக கவனித்துக் கொண்டாள்.

அப்புறம் அது தினசரி வாடிக்கை ஆனது..!! திவாகரும் திவ்யாவும் தினசரி சேட் செய்துகொள்வதும், அதை அன்றோ அடுத்த நாளோ.. அசோக்கும், திவ்யாவும் பேசி விவாதிப்பதும் அன்றாடம் நடக்கும் ஒரு நிகழ்வாகிப் போனது..!! திவாகரை பற்றி நிறைய விஷயங்கள் அவர்களுக்கு தெரிய வந்தன. தெரிந்த விஷயங்கள் திருப்திகரமானதாகவே இருந்தன..!! திவ்யா சின்ன சின்ன விஷயங்களை கூட அசோக்கிடம் கேட்டு அனுமதி வாங்கிக் கொண்டே செய்தாள். அசோக்தான் தன் காதலை காக்க வந்த கண்கண்ட தெய்வமாக கருதினாள். சில நேரங்களில் இப்படி கூட நடக்கும்..

"டேய்.. நீ கொஞ்ச நேரம் இவர்கிட்ட பேசிட்டு இரேன்.. நான் இதோ ரெண்டு நிமிஷத்துல வந்துர்றேன்.."

என்று திவாகரிடம் பாதி சேட் செய்து கொண்டிருக்கையிலேயே, லேப்டாப்பை தூக்கி அசோக்கிடம் கொடுத்துவிட்டு திவ்யா வெளியே சென்றுவிடுவாள். சென்றவள் ஒரு பத்து நிமிடங்கள் கழித்துதான், ஹார்லிக்சோ காம்ப்ளானோ கலந்து, இரண்டு கைகளிலும் ஏந்திக்கொண்டு வருவாள். அசோக்கும் அதுவரை.. திவாகர் காதல் மயக்கத்தில் உளறுவதற்கெல்லாம் 'உம்' கொட்டிக்கொண்டிருப்பான். அப்புறம் லேப்டாப்பை திவ்யாவிடம் கொடுத்துவிட்டு, அவள் கையில் இருக்கும் கப்பை வாங்கி உறிஞ்சுவான்.

திவ்யாவுக்கு காதல் ஆலோசகனாக இருப்பது அசோக்கிற்கு மிகவும் கடினமான காரியமாகவே இருந்தது. தன் இதய வீட்டில் பூத்திருப்பவள், இன்னொருவனை கட்டிக்கொள்ள விரும்புவதும், அதற்கு அவனே ஆலோசனை சொல்லும் சூழ்நிலையாகிப் போனதும்.. அவன் கண் முன்னரே அவர்கள் காதல் மொழி பேசிக்கொள்வதும்.. அனுபவித்துப் பார்த்தாலே அந்த வலி புரியும்..!!

மனதெல்லாம் தாளமுடியாத அளவிற்கு வலி எடுத்தாலும், கலங்கிப்போகாத அளவிற்கு தெளிவாகவே இருந்தது..!! திவ்யாவின் சந்தோஷமான வாழ்க்கையை தவிர தனது காதலுக்கு வேறென்ன உயரிய லட்சியம் இருந்துவிட முடியும் என்ற தெளிவுதான் அது..!! அவள் சந்தோஷமாக இருந்தால்.. அதை விட தன் காதலுக்கு வேறென்ன வேண்டும் என்று தோன்றியது..!!

இந்த மாதிரியே ஒரு இரண்டு வாரங்கள் சென்றன..!! அப்போது ஒரு நாள்..

அசோக்கை பார்ப்பதற்காக அவன் அறைக்கு திவ்யா வந்தாள். அசோக் அப்போது அங்கே இல்லை. செல்வாதான் வெற்று மார்புடன் தரையில் மல்லாக்க படுத்தவாறு டிவி பார்த்துக் கொண்டிருந்தார். திவ்யாவை பார்த்ததும், 'வா..வாம்மா திவ்யா.. வா..' என்று உளறியவர், பதறியடித்து உள்ளே ஓடிபோய் ஒரு சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டே வெளியே வந்தார். திவ்யா பார்வையை வேறு பக்கமாய் திருப்பிக் கொண்டு கேட்டாள்.

"அசோக் இல்லையா செல்வாண்ணா..?"

"கீழ்தான்மா போனான்.. நீ பாக்கலையா..?"

"இல்லையே.. நான் பாக்கலை.."

"ஹவுஸ் ஓனர் கூப்பிட்டு அனுப்பிச்சிருந்தாரு.. பாத்துட்டு வர்றேன்னு போனான்..!! அவன் நம்பருக்கு கால் பண்ணி பாரு..!!"

திவ்யா தன் செல்போன் எடுத்து அசோக் நம்பரை தேடி டயல் செய்தாள்..!! காதில் வைத்துக் கொண்டாள்..!!

'என்னை பந்தாட பிறந்தவளே..
இதயம் ரெண்டாக பிளந்தவளே'

அறைக்குள் இருந்த டேபிளின் ஒரு மூலையில் கிடந்த அசோக்கின் செல்போன் பாட்டு பாடியது. கீழே செல்லும்போது அசோக் செல்போனை அறையிலேயே விட்டு சென்றிருந்தான். ஏமாற்றம் அடைந்தவளாய் திவ்யா காலை கட் செய்தாள். அப்புறம் ஏதோ யோசனை வந்தவளாய்.. சற்றே கிண்டலான குரலில் செல்வாவிடம் சொன்னாள்.

"ம்ம்.. பையன் கலக்குறான்.. பாட்டுலாம் பட்டாசா இருக்கு.."

"எதை சொல்ற..?"

"அசோக்கோட ரிங்டோன்.."

"ஹாஹா.. ஆமாமாம்.. இந்த காதல் வந்த பசங்களுக்குலாம்.. இந்த மாதிரி பாட்டுத்தான புடிக்குது..?" என்று செல்வா உளறிக்கொட்ட, திவ்யா திகைத்தாள்.

"என்ன செல்வாண்ணா சொல்றீங்க..? அசோக் லவ் பண்றானா..?"

உளறிக் கொட்டிவிட்டோம் என்று செல்வா இப்போது தாமதமாக புரிந்துகொண்டார். உடனே சுதாரித்துக்கொண்டு சமாளிக்க முயன்றார்.

"ஆ.. இல்ல இல்ல.. இல்லையே..!! நான் எங்க எப்படி சொன்னேன்..?"

"ப்ச்.. இப்போ சொன்னீங்களேண்ணா..?"

"என்ன சொன்னேன்..?"

"இந்த காதல் வந்த பசங்களுக்குலாம்..' அப்டி சொன்னீங்களே..?"

"அப்டியா சொன்னேன்..? இல்லையே.. இந்தக்காலத்து பசங்களுக்குலாம்னு சொல்லிருப்பேன்.."

"இல்ல இல்ல.. நீங்க அப்படி சொல்லல.."

"அப்டித்தான்மா சொன்னேன்.."

"அட இல்லண்ணா.. நீங்க எதையோ எங்கிட்ட இருந்து மறைக்கிறீங்க.."

"ஐயோ இல்லம்மா.. நான் ஏன் மறைக்க போறேன்..?"

"ப்ச்.. பொய் சொல்லாதீங்க செல்வாண்ணா.. உண்மையை சொல்லுங்க.. அவன் யாரையாவது லவ் பண்றானா..?"

"அடடடா.. எனக்கு தெரிஞ்சா சொல்லிட மாட்டனா..? இதோ.. அசோக்கே வந்துட்டான்.. அவன்கிட்டேயே கேட்டுக்க நீ.. என்னை ஆளை விடு.."

அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அசோக் உள்ளே நுழைய, இப்போது திவ்யா செல்வாவை விட்டுவிட்டு அசோக்கிடம் திரும்பி பாய்ந்தாள்.

"டேய்.. சொல்லுடா..!! நீ யாரையாவது லவ் பண்றியா..?"

அசோக் திக்கித்துப் போனான். உள்ளே நுழைந்ததுமே இந்த மாதிரி ஒரு கேள்வியை, அதுவும் திவ்யாவிடம் இருந்து.. அவன் எதிர்பார்க்கவே இல்லை..!! எதுவும் புரியாமல் செல்வாவை பார்த்தான். அவர் 'உளறி கொட்டிட்டேன்.. எப்படியாவது சமாளி..' என்று பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு, திவ்யாவுக்கு தெரியாமல் இவனுக்கு சைகை செய்தார். அதற்குள்ளாகவே பொறுமை இல்லாமல் திவ்யா கத்தினாள்.

"கேக்குறேன்ல..? சொல்லுடா.. நீ யாரையாவது லவ் பண்றியா..?"

"ப்ச்.. இல்லை திவ்யா.."

"எங்க.. என் மேல ப்ராமிஸ் பண்ணு.." திவ்யா அசோக்கின் கையை பிடிக்க, அவன் பதறிப்போய் உதறினான்.

"ஐயோ.. என்ன இது.. விடு திவ்யா.."

"அப்போ.. நீ யாரையோ லவ் பண்ற..?"

"ஆ..ஆமாம்.."

"இதை ஏன் இத்தனை நாளா எங்கிட்ட சொல்லல..?"

"ச்சை.. கத்தாதடி..!! நீ வா.. நாம வெளில போய் பேசலாம்.."

அசோக் அவளுடைய புஜத்தை பற்றி இழுத்தான். அவளை அழைத்துக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான். பக்கவாட்டில் தெரிந்த படியேறி இருவரும் மொட்டை மாடியை அடைந்தார்கள். அறையில் கேட்ட கேள்வியை திவ்யா இப்போது மீண்டும் கேட்டாள்.

"ம்ம்.. இப்போ சொல்லு.. நீ லவ் பண்ற மேட்டரை ஏன் இத்தனை நாளா எங்கிட்ட இருந்து மறைச்ச..?"

"ப்ச்.. மறைக்கனும்லாம் இல்ல திவ்யா..!! சொல்லலாம்னுதான் நெனச்சேன்.. அதுக்குள்ளே நீ உன் லவ் மேட்டரை சொல்லி.. அதுல பிரச்னையாகி.. அப்புறம் சொல்ல எனக்கு சான்ஸ் கிடைக்கலை..!!" அசோக் இதமான குரலில் சொல்ல, திவ்யா இப்போது சற்றே சமாதானம் அடைந்தாள்.

"ம்ம்ம்... ஓகே... பொழைச்சுப் போ..!! சரி.. எப்போ உன் ஆளை எனக்கு இன்ட்ரட்யூஸ் பண்ணி வைக்க போற..?"

"அம்மா தாயே.. இது ஜஸ்ட் ஒன்சைட்..!! மொதல்ல டபுள் சைட் ஆகட்டும்.. அப்புறமா உனக்கு இன்ட்ரட்யூஸ் பண்ணி வைக்கிறேன்.."

"அட்லீஸ்ட் அவங்க பேராவது சொல்லேன்.."

"அது எதுக்கு உனக்கு..?"

"அடப்பாவி.. என்கிட்டயேவா..?" திவ்யா முறைக்க,

"ஹஹாஹஹாஹஹாஹஹா...!!" அசோக் எளிறுகள் தெரிய சிரித்தான்.

"சிரிக்காத..!! அப்போ அவங்களும் உன்னை லவ் பண்ற வரைக்கும்.. அவங்களை பத்தி எதுவும் சொல்ல மாட்டியா..?"

"என்ன தெரிஞ்சுக்கணும் உனக்கு..?"

"அவங்க யாருனு சொல்லு.."

"ம்ம்.. அவ ஒரு லூசு.."

"என்ன பண்றாங்க..?"

"லூசுத்தனமான வேலை எல்லாம் பண்ணுவா.."

"உன் லவ்வை அவங்ககிட்ட சொல்லிட்டியா..?"

"இல்ல.. அவளுக்கு புத்தி தெளியட்டும்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.."

"ஐயோ கடவுளே.. என்ன பதில்டா சாமி இது..?"

"பைத்தியக்காரத்தனமான பதிலா தோணுதா..? பரவால.. இப்போதைக்கு இவ்ளோதான் சொல்ல முடியும்..!! சரி.. நீ உன் மேட்டருக்கு வா.. என்ன விஷயமா வந்த..?"

"பாரேன்.. கடைசில நான் வந்த மேட்டரையே மறந்துட்டேன்..!! ம்ம்ம்.. ஆக்சுவலா உன்கிட்ட ஸாரி கேக்கலாம்னு வந்தேன்.."

"ஸாரியா.. எதுக்கு..?"

"நேத்து மிட்னைட் உனக்கு கால் பண்ணினேன்.."

"ம்ம்.. காலைல மிஸ்ட் கால்ல பார்த்தேன்..!! அதுக்குலாமா ஸாரி கேட்ப..?"

"ஐயோ.. அதுக்கு இல்லடா.. என்னை கொஞ்சம் பேச விடுறியா..?"

"சரி.. சொல்லு.."

"நேத்து நைட்டு அவருக்கு என் நம்பர் கொடுத்துட்டேன்.. அவரும் உடனே கால் பண்ணிட்டார்.. கொஞ்ச நேரம் பேசினோம்.." திவ்யா சற்றே குற்ற உணர்வுடன் சொல்ல, அசோக்கிடம் அவ்வளவு நேரம் இருந்த உற்சாகம் ஏனோ இப்போது பட்டென குறைந்தது.

"ஓ..!!"

"சாரிடா.. அவர் ரொம்ப கெஞ்சினார்.. என் குரலை கேட்கனும்னு..!! நான் உனக்கு கால் பண்ணினேன்.. நீ பிக்கப் பண்ணவே இல்ல.. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை.. உன்கிட்ட கேட்காமலே நம்பர் கொடுத்திட்டேன்..!! நான் நம்பர் கொடுத்தது தப்பா அசோக்..?"

"சேச்சே.. இதுல என்ன இருக்கு..?"

"ம்ம்.. அ..அப்புறம் இன்னொரு விஷயம்.." திவ்யா மீண்டும் தயக்கமான குரலில் சொன்னாள்.

"என்ன..?" அசோக் உதறலாக கேட்டான்.

"இந்த வாரம் எங்கயாவது நேர்ல மீட் பண்ணலாமான்னு கேட்டார்.. நான் யோசிச்சு சொல்றேன்னு சொல்லிருக்கேன்..!!"

"ம்ம்.."

"நான் என்ன பண்ண அசோக்..? போய் மீட் பண்ணவா..?"

"ம்ம்.. போ.. போய் மீட் பண்ணு..!! நேர்ல பாத்து பேசினாத்தான அவரை பத்தி நீயும், உன்னை பத்தி அவரும் புரிஞ்சுக்க முடியும்..? இதுக்குலாமா என்கிட்டே பெர்மிஷன் கேட்டுட்டு இருப்ப..?" மனதுக்குள் எழுந்த எரிச்சலை அடக்கிக்கொண்டே அசோக் சொன்னான்.

"அப்டி இல்லடா.. இத்தனை நாள் பரவால்ல.. சேட் மட்டுந்தான்..!! நேர்ல பாக்கனும்னதும்.. ஒரே உதறலாவே இருக்கு..!! நீ இருக்கேன்ற தைரியத்துலதான் நான் இருக்கேன்.. நீதாண்டா எனக்கு ஹெல்ப் பண்ணனும்..!!"

"நானா..? நான் என்ன பண்றது..?"

"எங்கே மீட் பண்றது.. என்ன ட்ரஸ் போட்டுட்டு போறது.. எப்படி அவர்கிட்ட பேசுறது.."

"ஐயோ.. அதுலாம் ஒன்னும் மேட்டரே இல்ல திவ்யா.. ஏதோ ஒன்னு.." அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

"இல்லடா.. அவருக்கு புடிக்கனும்ல..?"

திவ்யா குறுக்கில் புகுந்து வெடுக்கென சொல்ல, அசோக் இப்போது அமைதியானான். அவளுடைய குழந்தைத்தனமான முகத்தையே சில வினாடிகள் பாவமாய் பார்த்தான். லேசாக புன்னகைத்தான். அப்புறம்..

"சரி.. நான் ஹெல்ப் பண்றேன்.." என்றான் சுரத்தே இல்லாத குரலில்.

"தேங்க்யூடா.. தேங்க்யூ வெரி மச்.."

உற்சாகமாக கத்திய திவ்யா அசோக்கை அணைத்துக் கொண்டாள். அவனும் அவளை இதமாக அணைத்துக் கொண்டான். அசோக்கிற்கு இப்போது இதயம் விரிசல் விடுவது மாதிரி ஒரு உணர்வு. திவ்யா தன்னிடம் இருந்து விலகிக் கொண்டே செல்கிறாள் என்பதை அவனால் தெளிவாக உணர முடிந்தது. ஒருவித விரக்தி மனோபாவம் அவனுள் பரவ ஆரம்பித்தது. அவனுடைய குரலிலும் அந்த விரக்தி தென்பட்டது.

"நானும் உன்கிட்ட ஒரு மேட்டர் சொல்லணும் திவ்யா.."

"என்னடா..?"

"எனக்கு ஆன்சைட் போறதுக்கு ஒரு ஆப்பர்ச்சூனிட்டி வந்திருக்கு.."

"வாவ்.. ரியல்லி..? எங்கே..?"

"ஜெர்மனி.."

"எவ்ளோ நாள்..?"

"மூணு வருஷம்..!!"

அவ்வளவுதான்..!! அவ்வளவு நேரம் பிரகாசமாக இருந்த திவ்யாவின் முகம், பட்டென சுருங்கிப் போனது. ஒரு இனம் புரியாத சோகம் ஒன்று அவளுடைய மனதை வந்து கவ்வியது மாதிரி இருந்தது. ஒரு வாரமோ, இரண்டு வாரமோ என்று எண்ணியிருந்தவள், மூன்று வருடங்கள் என்பதை எதிர்பார்த்திருக்கவில்லை. அசோக்கின் முகத்தையே பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தாள். சோர்ந்து போன குரலில் கேட்டாள்.

"என்னடா சொல்ற..? மூணு வருஷமா..?"

"ம்ம்.. கொஞ்சம் அதிகமா கூட ஆகலாம்.."

"கண்டிப்பா போகனுமா அசோக்..?"

"அப்படி இல்ல.. போறியான்னு கேட்டுருக்காங்க.. நான் யோசிச்சு சொல்றேன்னு சொல்லிருக்கேன்.."

"நீ என்ன சொல்லப் போற..?"

"இன்னும் டிஸைட் பண்ணல திவ்யா.."

இப்போது திவ்யா அவசரமாக சொன்னாள்.

"ப்ளீஸ் அசோக்.. நீ போக வேணாம்..!!"

"ஏன்..?"

"சொன்னா கேளேன்.. ப்ளீஸ்.. போக வேணாம்..!! நான் சொன்னா நீ கேட்பியா மாட்டியா..?"

"ஏன் போக வேணாம்னு சொல்லு..!! ஒருவேளை நான் போயிட்டா.. உன் லவ்க்கு யார் ஹெல்ப் பண்ணுவாங்கன்னு யோசிக்குறியா..?"

"ச்சே.. என்ன பேசுற நீ..? என்னை என்ன அவ்ளோ செல்ஃபிஷாவா நெனச்சுட்ட..?"

"அப்புறம் என்ன..?"

"என்னன்னு எனக்கு சொல்ல தெரியலைடா. ஆனா உன்னை பிரியுறது.. நெனச்சு பார்க்கவே எனக்கு ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு.. அவ்ளோ நாள் என்னால உன்னை பார்க்காம இருக்க முடியாது..!! ப்ளீஸ் அசோக்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..!!"

திவ்யா பரிதாபமாக கெஞ்ச ஆரம்பிக்க, சற்று முன் இழந்த உற்சாகத்தை அசோக் இப்போது மீண்டும் பெற்றான். அவன் உடலுக்குள் ஏதோ புது ரத்தம் பாய்வது மாதிரி உணர்ந்தான். கொஞ்ச நேரம் காணாமல் போயிருந்த புன்னகை இப்போது மீண்டும் அவன் உதடுகளில் வந்து ஒட்டிகொண்டது. திவ்யாவின் தோள் மீது உரிமையாக கைபோட்டு, அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டான்.

"சரி.. உன்னை விட்டு எங்கயும் போகலை.. போதுமா..?" என்றான்.

"தேங்க்ஸ்டா..!!"

சொல்லிவிட்டு திவ்யாவும் அசோக்கின் தோளில் சுகமாக சாய்ந்து கொண்டாள்.



அத்தியாயம் 16

அந்த வார இறுதியில் ஒருநாள் திவ்யாவும் திவாகரும் நேரில் சந்தித்துக் கொள்வது என்று முடிவானது. 'ஏதாவது காபி ஷாப்ல மீட் பண்ணிக்குங்க..' என்று அசோக் கொடுத்த ஐடியாவைத்தான், திவ்யா திவாகருக்கு முன்வைத்தாள். அவனும் ஒத்துக் கொண்டான். அவளை சந்திக்க மிக ஆர்வமாக இருப்பதாக சொன்னான். இடையில் இருந்த நான்கு நாட்களில் திவ்யா அசோக்கை கேள்வி கேட்டு, கேள்வி கேட்டு வறுத்தெடுத்து விட்டாள்.

"என்ன ட்ரஸ் போட்டுட்டு போறது..? ஸாரி ஓகேவா..?"

"அதுலாம் வேணாம்.. உன் ஆளுக்கு புடிக்காது.."

"உனக்கு எப்படி தெரியும்..?"

"நானும் அவர் கூட சேட் பண்ணிருக்கேன்ல..? அவரோட டேஸ்ட் என்னன்னு ஓரளவு என்னால அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்க முடியுது.."

"ஓ..!! அப்போ நீ என்ன சஜஸ்ட் பண்ற..?"

"ஜீன்ஸ் டி-ஷர்ட்..!!"

"போடா.. எனக்கு ஜீன்ஸே பிடிக்காது.."

"உனக்கு புடிக்காட்டா என்ன.. அவருக்கு புடிக்கனுமா இல்லையா..?"

"ஆமாம்.. புடிக்கணும்.."

"அப்போ போட்டுட்டு போ..!!"

"அது எப்படி அவருக்கு புடிக்கும்னு நீ இவ்ளோ ஸ்ட்ராங்கா சொல்ற..?"

"ஒரு ஆம்பளை மனசு.. இன்னொரு ஆம்பளைக்குத்தான் புரியும்..!!"

"ஆஆஆ...!! அப்பா... முடியலை..!!"

"ஹாஹா..!! ம்ம்ம்.. கொஞ்சம் கிளாமரா.. கொஞ்சம் செக்ஸியா.. போ..!! ஜீன்ஸ்ல.. பேன்ட் கூட வேணாம்.. குட்டியா ஷார்ட்ஸ் இருக்குல.. அது போட்டுட்டு போ.. உன் ஆளுக்கு ரொம்ப பிடிக்கும்..!!"

"அய்யே.."

"நல்லா மேக்கப் போட்டு போ.. லிப்ஸ்டிக் மறக்காத.."

"அதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்காதுடா.."

"உனக்கு பிடிக்குமா இல்லையான்னு யார் கேட்டா இங்க..?"

"சரி.. நீ சொன்னா கரெக்டாத்தான் இருக்கும்.. போட்டுட்டு போறேன்..!! சரி.. எப்போ போகலாம்..?"

"எங்க..?"

"எனக்கு ட்ரஸ் செலக்ட் பண்றதுக்கு.."

"அடிப்பாவி.. அதுவும் நான்தான் பண்ணனுமா..?"

அன்று மாலையே ஒரு கடைக்கு சென்று திவ்யாவுக்கு உடைகள் வாங்கினார்கள். மாடர்னாக.. அணிந்து கொண்டால் கவர்ச்சியை கொப்பளிக்கும்.. நான்கைந்து செட் உடைகள்..!! ட்ரையல் ரூம் சென்று அணிந்து கொண்டு வந்து, அசோக்கிடம் காட்டி ஒப்பீனியன் கேட்டாள்.

"நல்லாருக்காடா..? ரொம்ப வல்கரா இருக்கோ..?"

"அதெல்லாம் ஒண்ணுல்ல.. உனக்கு எது போட்டாலும் அழகாத்தான் இருக்கும்..!!"


உடை விஷயம் மட்டும் இல்லை. திவாகரிடம் எப்படி பேச வேண்டும் என்பது பற்றியும் நிறைய ஆலோசனைகள் கேட்டுக் கொண்டாள். அசோக்கும் அட்வைஸ்களை வாரி வழங்கினான்.

"அவர்கிட்டயும் போய் லூசு மாதிரி வளவளன்னு பேசிட்டு இருக்காத.. அவருக்கு பேச சான்ஸ் கொடு.. நீ பேசுறதை விட.. அவர் பேசுறதை கவனி.."

"ம்ம்.."

"சந்தோஷமான மேட்டர் மட்டுமே பேசு.. உன் கவலைலாம் அவர்கிட்ட சொல்லி புலம்பிட்டு இருக்காத.. ஆம்பளைங்களுக்கு அழுமூஞ்சி பொம்பளைங்களை புடிக்கவே புடிக்காது..!! "

"ம்ம்.."

"அவர் ஏதாவது ஜோக் அடிச்சா நல்லா சிரி.. மொக்கை ஜோக்கா இருந்தா கூட பரவால.."

"ஹாஹா..!! ஓகே..!!"

"முக்கியமான விஷயம்.. அவர் செய்ற சின்ன சின்ன விஷயங்களை கூட பாராட்டி பேசு.. மறந்து கூட எதுக்காகவும் அவரை கிரிட்டிசைஸ் பண்ணாத.."

"ஏன்..?"

"உன் ஆளுக்கு அதை தாங்கிக்கிற மென்டாலிட்டி கிடையாது.. நான் கவனிச்சிருக்கேன்..!! அப்டியே ஏதாவது சொல்றதா இருந்தாலும்.. சாஃப்டா, நாசூக்கா சொல்லு.."

"ம்ம்.. ஓகேடா.."

அவர்கள் சந்திக்கும் நாளும் வந்தது..!! ஆர்வ மிகுதியில் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே திவ்யா அந்த காபி ஷாப்பை அடைந்திருந்தாள். நொடிக்கொருமுறை மணிக்கட்டை திருப்பி மணி பார்த்துக் கொண்டாள். திவாகர் எப்போது வருவான் என்று பொறுமை இல்லாமல் காத்திருந்தாள். அசோக்கிற்கு அவ்வப்போது கால் செய்து அப்டேட் கொடுத்தாள்.

"ரொம்ப போரடிக்குதுடா.."

"உன்னை யார் இவ்ளோ சீக்கிரம் அங்க போக சொன்னது..?"

"நான் என்ன பண்றது..? அந்த ஆட்டோக்காரன் சீக்கிரம் வந்துட்டான்.. வந்து பார்த்தா திவாகர் இன்னும் வரவே இல்ல.."

"அவனை உதைச்சா எல்லாம் சரியா வரும்.."

"எவனை..?"

"ம்ம்.. அந்த ஆட்டோக்காரனை..!! சரி.. அவர் வர்றதுக்கு இன்னும் பதினஞ்சு நிமிஷம் இருக்கு.. அங்கேயே உக்காந்துட்டு இருக்காத.. எல்லாம் ஒருமாதிரி பாக்க போறாங்க.. பக்கத்துல எங்கயாது போய் சுத்திட்டு வா.."

"பக்கத்துல என்ன இருக்குது.. ஒரே ஒரு புக் ஸ்டால்தான் இருக்குது.."

"நல்லதா போச்சு.. ஏதாவது ஒரு புக் வாங்கி அவருக்கு பிரசன்ட் பண்ணேன்.. சர்ப்ரைசா இருக்கும்..!!"

"வாவ்... நல்ல ஐடியாவாத்தான் இருக்குது..? என்ன புக் வாங்குறது..?"

"அது கூட நான்தான் சொல்லனுமா..? போய் பாருடி.. சோம்பேறி..!!"

"சரி சரி.. திட்டாத..!!"

திவ்யா அந்த புத்தக கடைக்குள் நுழைந்தாள். ஒரு ஐந்து நிமிடங்கள் எந்த முடிவுக்கும் வர முடியாமல் சுற்றி சுற்றி வந்தாள். அப்புறம்.. 'திவாகருக்குத்தான் கவிதைகள் மீது மிகவும் ஆர்வம் ஆயிற்றே. ஏதாவது கவிதைத்தொகுப்பு வாங்கிக் கொடுக்கலாம்' என்று முடிவு செய்தாள். கவிதைத்தொகுப்பு பகுதிக்கு சென்று தேடினாள். மேலும் ஒரு ஐந்து நிமிடங்கள் செலவழித்து அந்த புத்தகத்தை தேர்ந்தெடுத்தாள். மீரா எனும் கவிஞருடைய கவிதைத்தொகுப்பு..!!

கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்

பக்கங்கள் புரட்டி ஒரு சில கவிதைகளை வாசித்த திவ்யாவுக்கு மிகவும் பிடித்து போனது. அந்த புத்தகத்திற்கு பில் போட சொன்னாள். பர்ஸ் திறந்து பணம் எடுத்து கொடுத்தாள். மீதிப்பணம் தந்த பெண்ணிடம்..

"பென் இருக்கா..?" என்று கேட்டாள்.

அந்தப்பெண் ஒரு பேனாவை எடுத்து நீட்ட, புத்தகத்தின் முதல் பக்கம் திறந்து 'அன்புடன் திவ்யா..' என்று எழுதினாள். இல்லை இல்லை.. எழுத முயன்றாள். ஆனால்.. பேனா ஒத்துழைக்கவில்லை. மை தீர்ந்து போயிருந்தது போலிருக்கிறது. 'இது எழுதலைங்க..' என்று மீண்டும் அந்தப் பெண்ணிடமே திரும்ப, அவளோ இப்போது வேறு ஒரு கஸ்டமருக்கு பில் போடுவதில் பிஸியாக இருந்தாள்.

எழுதாத பேனாவை வைத்து தலையை சொறிந்தவாறு திவ்யா நின்றிருக்கையில்தான், அவள் முன்னே அந்த கரம் நீண்டது. விரல்களுக்கிடையே ஒரு பால்பாயின்ட் பேனாவை பிடித்திருந்தது அந்த கரம். கரிய நிறத்தில்.. நீளமான.. கூர்மையான.. பால்பாயின்ட் பேனா..!! கூடவே மென்மையாக அந்த குரலும் ஒலித்தது.

"Wherever you go.. don't forget your pen..!!"

திவ்யா திகைத்துப் போய் திரும்பி பார்க்க, வெண்பற்கள் தெரிய சிரித்தவாறு திவாகர் நின்றிருந்தான். மழமழவென்று ஷேவ் செய்து பளிச்சென வந்திருந்தான். ஜீன்ஸ், டிஷர்ட் அணிந்திருந்தான். கண்ணுக்கு கருப்பு நிறத்தில் குளிர் கண்ணாடி கொடுத்திருந்தான். அவனுடய உடலில் இருந்து ஒரு உயர் ரக சென்ட் வாசனை வெளிப்பட்டு.. அருகில் இருப்பவர்களின் நாசியில் குப்பென ஏறியது..!!

"ஹா..ஹாய்..." என்றாள் திவ்யா திகைப்பு மாறாமலே.

"பேனா வேணாமா..?"

"ஆங்.. வேணும் வேணும்.."

அவசரமாக சொன்ன திவ்யா அவன் கையில் இருந்த பேனாவை வாங்கிக் கொண்டாள். வெட்கம் அவளை பிடுங்கி தின்றது. கன்னங்கள் சிவக்க ஓரக்கண்ணால் திவாகரை பார்த்துக் கொண்டே, புத்தகம் திறந்து 'அன்புடன் திவ்யா..' என்று எழுதினாள். பேனாவை மீண்டும் அவனிடம் நீட்டினாள். அதை வாங்கி தன் பாக்கெட்டில் செருகிக் கொண்ட திவாகர், சற்றே கிண்டலான குரலில் சொன்னான்.

"சொல்வேன்னு எதிர்பார்த்தேன்.. நீ சொல்லலை.."

"என்னது..?"

"தேங்க்ஸ்..!!"

"ஓ.. ஸாரி..!! தேங்க்ஸ்.. ஃபார் யுவர் பென்.." திவ்யா அசடு வழிந்தாள்.

"இட்ஸ் ஓகே.." திவாகர் சிரித்தான்.

"அண்ட் தென்.. திஸ் இஸ் ஃபார் யூ.."

திவ்யா புத்தகத்தை அவனிடம் நீட்ட, அவன் 'ஓஹ்.. தேங்க்ஸ்..' என்று ஆச்சரியப்பட்டவாறே அதை வாங்கிக்கொண்டான். பக்கங்களை புரட்டி மேலோட்டமாக வாசித்தான். அப்புறம் மெல்லிய குரலில் சொன்னான்.

"லவ்லி..!!"

"யா.. நானும் சில கவிதைகள் வாசிச்சு பாத்தேன்.. ரொம்ப நல்லா இருந்தது.."

"நான் கவிதையை சொல்லல.."

"அப்புறம்..?"

"உன்னை சொன்னேன்..!! யூ லுக் லவ்லி..!!"

திவாகர் திவ்யாவின் கண்களை கூர்மையாக பார்த்தவாறு சொல்ல, திவ்யாவின் முகத்தில் இப்போது குப்பென்று ஒரு நாணம் வந்து குடிகொண்டது. 'ஓஹ்.. தேங்க்ஸ்..' என்று வெட்கப்பட்டவள், தலையை குனிந்து கொண்டாள்.

"ஷேல் வீ மூவ்..?" திவாகர் கேட்க.

"ம்ம்.. யா.." திவ்யா தலையசைத்தாள்.

இருவரும் காபி ஷாப்புக்குள் நுழைந்தார்கள். ஓரமாய் கிடந்த ஒரு டேபிளை தேர்வு செய்து அமர்ந்து கொண்டார்கள். ஆளுக்கொரு காபி ஆர்டர் செய்து கொண்டார்கள். கண்ணாடி தடுப்பு வழியாக.. வெளியே சாலையில் செல்லும் வாகனங்கள் பளிச்சென தெரிந்தன. வேடிக்கை பார்த்தார்கள். கொஞ்ச நேரத்தில் திவாகர்தான் மெல்ல ஆரம்பித்தான்.

"ஃபோட்டோவை விட நேர்ல நீ ரொம்ப அழகா இருக்குற திவ்யா.."

"ம்ம்.."

"உன் மேக்கப், லிப்ஸ்டிக், உன் ட்ரஸ்.. எல்லாமே.. ஜஸ்ட் பெர்ஃபக்ட்..!!"

"நான் போட்டிருக்குற ட்ரஸ் பிடிச்சிருக்கா..?"

"ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.."

"ம்ம்.. அசோக்தான் செலக்ட் பண்ணினான்.. அவனுக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும்.." திவ்யா அந்த மாதிரி வெகுளித்தனமாக சொல்ல,

"ஓ.." என்றவாறு திவாகர் பட்டென முகம் சுருக்கினான்.

"என்னாச்சு..?"

"ஒண்ணுல்ல..!! ட்ரெஸ் கூட அவனை கேட்டுத்தான் செலக்ட் பண்ணுவியா..?"

"ஆமாம்.. அவன் எது சொன்னாலும் கரெக்டா இருக்கும் தெரியுமா..? நானும் எது பண்ணினாலும் அவனை கேட்டுத்தான் பண்ணுவேன்.." திவ்யா ரொம்பவே பெருமையாக சொன்னாள்.

"ரொம்ப பிடிக்குமோ அவனை..?"

"என்ன இப்படி கேட்டுட்டீங்க..? அசோக்தான் எனக்கு எல்லாமே..!!"

"ம்ம்ம்ம்.." என்று இறுக்கமாக சொன்னவாறு, திவாகர் ஒரு பெருமூச்சு விட்டான்.

"ஆமாம்.. ஏன் இதெல்லாம் கேக்குறீங்க..?"

"இல்ல.. சேட்லயும் எப்போ பார்த்தாலும் அசோக் புராணம் படிக்கிற.. நேர்லயும் அதேயே ஆரம்பிச்சுட்டியே.. அதான் கேட்டேன்..!!"

"ஓ.. ஸாரி.."

"இட்ஸ் ஓகே..!! ம்ம்ம்... நாம ஒரு அக்ரீமன்ட்டுக்கு வரலாமா திவ்யா..?"

"என்ன..?"

"இனிமே நாம பேசுறப்போ.. அசோக்கை பத்தி எதுவும் பேசவேணாம்..!! நம்மை பத்தி பேசிக்கவே ஆயிரம் விஷயம் இருக்குறப்போ.. எதுக்கு தேவையில்லாம அவனை பத்தி பேசி.. நேரத்தை வேஸ்ட் பண்ணனும்..? ம்ம்..? நீ என்ன சொல்ற..?"

உதடுகளில் அழகாக ஒரு புன்னகையோடும், கண்களை இடுக்கி கூர்மையாக பார்த்தவாறும் திவாகர் கேட்க, திவ்யா திகைத்துப் போனாள். அவன் முன்வைத்த ஒப்பந்தம் அவளுடைய மூளைக்குள் புகுந்து, இதயத்தை பற்றி பிசைந்தது..!! தான் சிறுவயதில் இருந்து ஆதரவாக பற்றியிருந்த அசோக்கின் கையை, யாரோ வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து.. பிரிப்பது மாதிரி ஒரு உணர்வு..!!

"ம்ம்.. சரி.." என்றாள் மனதில் ஒரு உறுத்தலுடனே.



அத்தியாயம் 17

திவ்யாவும், திவாகரும் ஒரு மணி நேரம்தான் பேசியிருப்பார்கள். ஆனால் அவள் அதைப்பற்றி இரண்டு மணி நேரங்கள் அசோக்கிடம் கதையளந்தாள். 'அவர் அப்படி.. அவர் இப்படி..' என்று..!! அசோக் பற்றி இனி பேசவேண்டாம் என்று திவாகர் சொன்னதை மட்டும் அசோக்கிடம் மறைத்து விட்டாள். அதையே வேறு மாதிரி சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டாள்.

"அவர் ரொம்ப பொசஸிவ் தெரியுமா..? அவர் அப்படி இருக்குறது எனக்கு பிடிச்சிருக்கு.."

அவள் சொல்ல சொல்ல அசோக்கிற்கு எரிச்சல் கிளம்பும். இருந்தாலும் எல்லாவற்றையும் உள்ளே போட்டு மறைத்துக் கொண்டு அவள் சொல்லுவதற்கெல்லாம் 'உம்' கொட்டிக் கொண்டிருப்பான்.

திவ்யா இந்த மாதிரி அவனை இம்சை செய்தாள் என்றால், சித்ராவின் டார்ச்சர் வேறு மாதிரி இருந்தது. எப்படி என்கிறீர்களா..? இது.. திவ்யாவும், திவாகரும் சந்தித்துக் கொண்டதற்கு அடுத்த நாள் நடந்தது..!!

மார்க்கெட் சென்று காய்கறி வாங்கிக்கொண்டு அசோக்கும், சித்ராவும் திரும்ப வந்து கொண்டிருந்தார்கள். அசோக் பைக்கை ஓட்ட, பின் சீட்டில் அமர்ந்தவாறே சித்ரா தொணதொணத்துக் கொண்டு வந்தாள்.

"என்னடா.. அவ நேத்து அந்தப்பையனை போய் பார்த்தாளாமா..?"

"ம்ம்.. ஆமாம்.. போய் பார்த்துட்டு.. ஹண்ட்ரட் ரூபிசுக்கு காபி குடிச்சுட்டு வந்திருக்கா.."

"எப்படி.. அவளுக்கு புடிச்சிருந்ததாமா..?"

"காபியா..?"

"அடச்சை..!! அந்த பையனைடா..!!"

"புடிச்சதாலதானக்கா பார்க்கவே போனா.." அசோக் எரிச்சலாக சொன்னான்.

"நீ ஏண்டா இவ்வளவு கோவப்படுற..? ஹ்ம்ம்... நெனச்சா எனக்கும் பாவமாத்தான் இருக்கு..!!"

"என் நெலமையை நெனச்சா..?"

"இல்லடா.. அந்தப்பையனை நெனச்சா..!! இந்த அடங்காப் பிடாரியை கட்டிக்கிட்டு அவன் என்ன பாடு படப்போறானோ..? அவன் வாழ்க்கை கெட்டு குட்டிச்சுவராத்தான் ஆகப் போகுது..!! ஷேர் வாங்கி விக்கிறானா அவன்..? சோறு கூட இல்லாம தெருத்தெருவா பிச்சை எடுக்க போறான் பாரு..!!" சித்ரா திவ்யாவை திட்ட, அசோக்கிற்கு கோவம் வந்தது.

"இப்போ எதுக்கு தேவையில்லாம அவளை திட்டுற..? நீயும் லேசுப்பட்டவ இல்லக்கா.. எப்பவும் அவளை விட ஒரு படி மேலத்தான் நிக்கிற நீயும்..!!"

"ம்க்கும்.. அவுகளை சொன்னதும்.. இவுகளுக்கு கோவத்தை பாரு.."

"ஏன் சொல்லமாட்ட..? உனக்குலாம் என் கஷ்டம் எங்க புரியப்போகுது..? உனக்கு எல்லாமே நக்கலாத்தான் இருக்குது..!!"

"அப்படி என்ன தம்பி உனக்கு கஷ்டம்..?"

"காதலிக்கிற பொண்ணுக்கே.. இன்னொரு பையனை அவ காதலிக்க ஐடியா கொடுக்குற கொடுமை இருக்கே.. அதெல்லாம் அனுபவிச்சு பார்த்தாதான் தெரியும்.."

"ஹாஹா..!! உன்னை யாரு அப்படிலாம் கஷ்டப்பட சொன்னது..? உனக்கெதுக்கு இந்த தேவை இல்லாத வேலை எல்லாம்..?? பெரிய தியாகி இவரு.. 'எங்கிருந்தாலும் வாழ்க'னு எடுத்ததுக்கெல்லாம் அவளுக்கு அட்வைஸ் கொடுத்துக்கிட்டு இருக்காரு..!! அவதான் உனக்கு இல்லைன்னு ஆகிப் போச்சுல..? அவ எக்கேடோ கெட்டு போறான்னு.. விட்டு தலை முழுகி தொலைக்க வேண்டியதுதான..?"

"ப்ச்.. அப்டிலாம் என்னால விட முடியலைக்கா..!! பாவம் அவ.. அப்பாவி..!! என் ஹெல்ப் இல்லன்னா அவ ரொம்ப கஷ்டப்படுவா..!!"

"உன்னை வேணாம்னு சொன்னவளுக்காக இப்படி உருகுறியேடா..? இங்க பாரு.. அக்கா சொல்றதை கேளு.. இந்த லவ் அட்வைஸ் கொடுக்குற வேலையலாம் இன்னைக்கோட ஸ்டாப் பண்ணிடு.. அவ சங்காத்தமே வேணாம்னு தலை முழுகிடு.. அவளுக்கு என்ன கஷ்டமோ அதை அவளே பார்த்துக்கட்டும்..!!"

"ம்க்கும்.. அவளை நான் தலைமுழுகுனா அவளுக்கு கஷ்டமா இருக்கோ இல்லையோ.. உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்..!!"

"ஏன்..?"

"அவளோட சீக்ரட்லாம் அப்புறம் யாரு உனக்கு வந்து சொல்றது..?"

"அடச்சீய்.. அவ சீக்ரட்டை தெரிஞ்சு நான் என்ன பண்ண போறேன்..?" என்று வெறுப்பாக சொன்ன சித்ரா, அடுத்த நொடியே..

"ம்ம்ம்.. அப்புறம்.. வேற என்ன சொன்னா அவ..?" என்று அசோக்கை கேட்டாள்.

"ம்ம்ம்..?? நான் செலக்ட் பண்ணின ட்ரஸ் அவருக்கு புடிச்சிருந்ததாம்.. நான் சஜஸ்ட் பண்ணின மாதிரி மேக்கப்லாம் போட்டுட்டு போனாள்ல.. அதுவும் அவரை ரொம்ப அட்ராக்ட் பண்ணிச்சாம்.." அசோக் சொல்லிக் கொண்டிருக்க,

"ஹாஹாஹாஹாஹாஹா.." சித்ரா பெரிதாக சிரித்தாள்.

"எதுக்கு சிரிக்கிற இப்போ..?" அசோக் புரியாமல் கேட்டான்.

"இல்ல.. நீ அவளை பிக்கப் பண்ணலாம்னு பார்த்த.. அவ உன்னை மேக்கப் மேன் ரேஞ்சுக்கு கொண்டு போயிட்டாளடா தம்பி..?? அதை நெனச்சா அக்காவால தாங்க முடியலை..!!"

கிண்டலாக சொன்ன சித்ரா, அசோக்கின் முதுகில் முகத்தை வைத்து, 'ம்ம்.. ம்ம்.. ம்ம்..' என்று போலியாக அழுது காட்ட.. அசோக் நொந்து போனான்..!! வெறுப்புடன் கியரை மாற்றி, ஆக்சிலரேட்டரை சர்ரென முறுக்கினான்.

இந்த மாதிரி.. இரண்டு பெண்களின் இம்சைகளும்.. மேலும் இரண்டு, மூன்று வாரங்கள் தொடர்ந்தன. திவாகரும் திவ்யாவும் வாரம் ஒருமுறை நேரில் சந்தித்துக் கொண்டார்கள். தினமும் ஆன்லைனிலும், போனிலும் பேசிக் கொண்டார்கள். அவர்கள் பேசியதை திவ்யா அசோக்கிடம் கொட்டி தீர்ப்பாள். அசோக்கும் எரிச்சலுடன் எல்லாம் கேட்டுக் கொள்வான். எல்லாவற்றையும் அப்படியே சொல்லாவிட்டாலும், ஓரளவுக்கு அந்த விஷயங்களை அக்காவிடம்.. அவளுடைய துருவல் தாங்காமல் அசோக் ஒப்பிப்பான்..!! சித்ராவும் எல்லாவற்றையும் ஆர்வமாக கேட்டுக்கொண்டு. அப்புறம் அவனையே நோகடிப்பாள்..!!

இப்போதெல்லாம் அசோக் அடிக்கடி மதுவின் துணையை நாட ஆரம்பித்துவிட்டான். சில நேரங்களில்.. ஆபீசில் இருந்து கிளம்புகையிலேயே.. அருகில் இருக்கும் ஒரு பார் சென்று.. ஆல்கஹாலை உள்ளே ஊற்றிவிட்டு.. அப்புறமாய் வீட்டுக்கு செல்வான்..!! அன்றும் அப்படித்தான்.. ஆபீசில் இருந்து கிளம்பியவன்.. பைக்கை அந்த பார் முன்பாக பார்க் செய்தான். உள்ளே நுழைந்தான்..!!

கொஞ்சம் காஸ்ட்லியான பார் அது..!! நீல நிறத்தில் மந்தமான வெளிச்சம் அந்த இடம் முழுவதையும் நனைத்திருந்தது..!! ஆங்காங்கே மறைத்து வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கர்களில் இருந்து.. ஒரு ஆங்கிலப் பாடல் மெலிதாக கசிந்து கொண்டிருந்தது..!! கருப்பு நிற சோபாக்கள்.. அவற்றின் மீது கையில் கோப்பையுடன் ஆட்கள்..!! நாற்பத்திரண்டு அங்குல எல்.ஸி.டி-யில்.. சச்சின் திரும்ப திரும்ப கிளீன் போல்ட் ஆகிக்கொண்டிருந்தார்.. ரீப்ளே..!!

மேட்ச் பார்க்க வசதியாக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அசோக் அமர்ந்து கொண்டான். மெனு கார்ட் நீட்டிய பேரரிடம்.. அதை வாங்காமலே..

"ப்ளண்டர்ஸ் ப்ரைட்.. டூ லார்ஜ்.. ஒன் ப்ரஞ்ச் ப்ரை..!!"

என்று ஆர்டர் செய்தான். பத்தே நிமிடங்களில் ஆர்டர் செய்தவைகள் எல்லாம் வந்து சேர்ந்தது. மேட்ச் பார்த்துக்கொண்டே.. விஸ்கியை உள்ளே விட்டுக் கொண்டே.. விரல் சிப்சை எடுத்து கடித்துக்கொண்டே..!!


ஒரு அரை மணி நேரம்..!! பில் வந்தது. கிரெடிட் கார்ட் எடுத்து கொடுத்தான். வாங்கி சென்ற பேரர், இரண்டு நிமிடங்கள் கழித்து திரும்ப வந்து, பில் புத்தகத்தை டேபிளில் வைத்து சென்றான். அசோக் அதை திறந்து பார்த்தான். சற்றே எரிச்சலானான். உள்ளே கார்ட் ஸ்வைப் செய்யப்பட்ட ஸ்லிப் இருந்தது. ஆனால் அதில் கையொப்பம் இடுவதற்கு பேனா வைக்க மறந்திருந்தான். அசோக் அந்த பேரரின் முதுகை பார்த்து கத்தினான்.

"ஹலோ.. எக்ஸ்க்யூஸ் மீ..!! பேனா..!!" அவன் கத்திக் கொண்டிருக்கும்போதே,

"Wherever you go.. don't forget your pen..!!"

என்ற அந்த குரல் அவனுக்கு மிக அருகே ஒலித்தது. அதே நேரம் பேனாவுடன் அந்தக்கை அவன் முன்னே நீண்டது..!! பேனாவை வாங்கிக்கொண்டே, அசோக் நிமிர்ந்து பார்த்தான். அங்கே அவன் நின்றிருந்தான். திவாகர்..!!!! மொழுமொழு முகத்துடன்.. உதட்டில் சிரிப்புடன்.. கண்ணுக்கு குளிர் கண்ணாடியுடன்..!!

அசோக் அதிர்ந்து போனான். திவாகரை சந்திப்போம் என்று அவன் எதிர்பார்த்திருக்கவே இல்லை. அதுவும் இந்த மாதிரி ஒரு இடத்தில்..!! இவனுக்குத்தான் எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்று திவ்யா சொல்லியிருக்கிறாளே..? இவன் என்ன செய்கிறான் இங்கே..? மிகவும் குழம்பிப் போனான்.

ஆனால் திவாகர் மிகவும் கேஷுவலாக இருந்தான். அவனுக்கு இவன்தான் அசோக் என்று தெரியாதே..? இயல்பாக அசோக்கிற்கு எதிரே வந்து அமர்ந்தான். இவனை பார்த்து ஸ்னேஹமாய் புன்னகைத்தான். திவாகரையே கொஞ்ச நேரம் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த அசோக், அப்புறம் குனிந்து கையொப்பம் இட்டான்.

அதற்குள் பேரர் வந்து சேர்ந்திருக்க, திவாகர் அவனிடம் மிகவும் உரிமையாக பேசினான். அடிக்கடி இந்த பாருக்கு வருவான் போலிருக்கிறது. ஸ்டைலாக.. ஆங்கிலத்தில் பேசி.. சில மதுவகைகளை ஆர்டர் செய்தான். பேரர் சென்றதும் அசோக் திவாகரிடம் பேனாவை நீட்டினான். அவன் வாங்கி பாக்கெட்டில் செருகிக் கொண்டான். அப்புறமும் அசோக் அவனையே திகைப்பாக பார்த்துக் கொண்டிருக்க,

"தேங்க்ஸ்லாம் சொல்ல மாட்டீங்களா..?" திவாகருடைய குரலில் ஒருவித கேலியும், கடுப்பும் சரி விகிதத்தில் கலந்திருந்தது.

"ஸாரிங்க.. தேங்க்ஸ்..!!" என்றான் அசோக்.

"ம்ம்.. ஒன்னு சொன்ன தப்பா எடுத்துக்க மாட்டீங்களே..?"

"இல்ல.. சொல்லுங்க.."

"வெளில போறப்போ.. பாக்கெட்ல எப்போவும் ஒரு பேனா வச்சுக்குறது ரொம்ப நல்ல பழக்கம்.. அதை ஏன் யாருமே பண்ண மாட்டேன்றீங்கன்னு எனக்கு தெரியலை..!!"

"ம்ம்.. நீங்க சொல்றது சரிதான்.. இனிமே அதை ஃபால்லோ பண்ண ட்ரை பண்றேன்.."

"ஹாஹா..!! நான் என் மனசுல பட்ட ஒரு நல்ல விஷயத்தை சொன்னேன்.. டோன்ட் மிஸ்டேக் மீ..!!" என்று திவாகர் அழகாக சிரிக்க,

"இல்லீங்க.. நான் தப்பா எடுத்துக்கலை.."

அசோக் அமைதியாக சொன்னான். திவாகர் ஒரு சில வினாடிகள் அசோக்கின் முகத்தையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான். அப்புறம் இதழ்கள் விரித்து புன்னகைத்தான். படக்கென்று அவனது வலது கையை அசோக்கின் முன்பு நீட்டி..

"பை தி வே.. ஐ'ஆம் திவாகர்..!!" என்றான். அசோக்கும் அவனுடைய கையை பிடித்து குலுக்கினான்.

"ஐ'ஆம் அரவிந்த்.." என்று பொய்யான பெயரை சொன்னான்.

No comments:

Post a Comment

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...