Social Icons

நெஞ்சோடு கலந்திடு - 5







அத்தியாயம் 18

கோயில் குளங்கள் ஒரு ஊருக்கு தனி அழகை கொடுக்கத்தான் செய்கின்றன. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே என்று முன்னோர்கள் சொன்னதனாலோ என்னவோ, புளியங்குள மக்கள் ஐம்பது வருடங்களுக்கு முன்பே தங்கள் கிராமத்தில் அழகான ஒரு கோயிலை கட்டி முடித்திருந்தார்கள். ஊர்க் கண்மாய்க்கு முன்பாக அனாமத்தாக கிடந்த இடத்தை சுத்தம் செய்து, அவ்விடத்தில் ஆதி பரமேஸ்வரி அம்மனுக்கு ஆலயம் எழுப்பிவிட்டார்கள். ஆண்டு தவறாமல் பொங்கல் வைத்து, விழா எடுத்து, அம்மனை மனம் குளிர செய்வார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பாக கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் கூட நடத்தினார்கள்.

பங்குனி மாதத்தில் முதல் செவ்வாய்க்கிழமை அன்று காப்பு கட்டுவார்கள். அடுத்த வாரம் செவ்வாயும், புதனும் திருவிழா..!! திருவிழாவுக்கு முந்தைய அந்த ஒரு வாரமும் ஒயிலாட்டம், கும்மிப்பாட்டு என்று ஊர் கோலாகலப்படும். மைக்செட்டு, சீரியல் அலங்காரம், வீதியெங்கும் குழல் விளக்குகள் என.. ஊரே ஒலியும், ஒளியுமாய் இருக்கும்..!! திருவிழா நடக்கும் அந்த இரண்டு நாட்களும், கொண்டாட்டம் இன்னும் உச்சத்தை எட்டும்..!! செவ்வாய் இரவு கரகாட்டமோ, வில்லுப்பாட்டோ, பாட்டு கச்சேரியோ வைத்துக் கொள்வார்கள். புதன் இரவு வள்ளி திருமண நாடகம் என்பது எழுதப்படாத ஒரு விதி..!!

அவர்கள் எடுக்கும் விழா, அம்மனை மகிழ்விக்க உதவியதோ இல்லையோ.. ஊரை ஒன்றுபடுத்த பெரிதும் உதவியது..!! மீசை நரைத்த பெருசுகளும், அரும்பு மீசை சிறுசுகளும், கைகோர்த்துக்கொண்டு அம்மன் காரியம் செய்வார்கள்..!! எவ்வளவுதான் ஒருவொருக்கொருவர் தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும்.. தாளாத மனக்கசப்பு இருந்தாலும்.. ஊர்க்காரியம் என்றால் ஒன்று கூடி விடுவார்கள் புளியங்குள மக்கள்..!!

"வாங்கப்பு.. வந்து பந்தக்காலை ஊன்டுங்க.. நீங்க ஊன்டுறதுதான வழக்கம்..?"

என்று ஒரு ஊர்ப்பெரியவர், தனக்கு பிடிக்காத இன்னொரு ஊர்ப்பெரியவரை முகம் ஏறிட்டு பாராமல் அழைப்பார். அந்த இன்னொரு பெரியவரும்..

"அட இதுல என்ன இருக்குப்பா.. யார் ஊன்டுனா என்ன..? சரி வா.. ரெண்டு பெரும் சேர்ந்தே ஊன்டுவோம்.." என்பார்.

இருவரும் சேர்ந்து பந்தல் கால் நடுகையில், அவர்களுடைய கைகள் லேசாக உரசிக் கொள்ளும். நெடு நாட்களுக்கு அப்புறம், ஒருவர் முகத்தை இன்னொருவர் ஏறிட்டு பார்த்துக் கொள்வார்கள். இருவருடைய இதழ்களிலும் ஒரு சிநேகப் புன்னகை படரும். பந்தல் கால் நட்டுவிட்டு, இருவரும் ஒன்றாக.. இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி, 'தாயே..!!!' என்று ஆதி பரமேஸ்வரி அம்மனை வணங்குவார்கள். வெறுப்பையும், மனக்கசப்பையும் தூக்கி எறிந்துவிட்டு, அம்மனின் முன்பு அரிவாள் மீசை முளைத்த குழந்தைகளாய் நிற்பார்கள்..!!

அசோக், திவ்யா, சித்ரா, கார்த்திக்.. இவர்களுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஒரு வருடம் கூட ஊர் திருவிழா தடைப்படவில்லை. எல்லா வருடமும், அதற்கு முந்தைய வருடத்தை விட இன்னும் கோலாகலமாகவே கொண்டாடப்பட்டது. இவர்களும் அந்த சமயத்தில் எங்கிருந்தாலும், ஒருமுறை கூட திருவிழாவை காண தவறியதில்லை. கல்லூரியோ, அலுவலகமோ.. விடுப்பு எடுத்துக் கொண்டு ஊருக்கு விரைந்து விடுவார்கள்.

அது.. திருவிழாவுக்கு முந்தைய வாரத்தின் வெள்ளிக்கிழமை இரவு..!! பயணத்துக்கு தேவையான வேலைகளை சித்ரா கவனித்துக் கொண்டிருந்தாள். முதலில் அன்று இரவே ஊருக்கு பயணிக்கத்தான் திட்டமிட்டிருந்தார்கள். இரவு ட்ரெயினில் வெயிட்டிங் லிஸ்ட் மூவ் ஆகாததால்.. அடுத்த நாள் காலை பஸ்ஸில் பிரயாணம் செல்லலாம் என்று திட்டத்தை மாற்றிக் கொண்டார்கள்.

கார்த்திக்குக்கு பிரயாணத்தின்போது கொறிக்க ஏதாவது நொறுக்குத்தீனி வேண்டும். நேற்றே வெல்ல சீடை பொரித்தெடுத்து ஒரு பொட்டலம் கட்டியாயிற்று. இன்று வீட்டில் மிச்சமிருந்த முந்திரி பருப்புகளை சித்ரா பொன்னிறத்தில் வறுத்தெடுத்து, ஒரு பிளாஸ்டிக் டப்பாவுக்குள் அடைத்துக் கொண்டிருந்தாள். அப்புறம் ஏதோ ஞாபகம் வந்தவளாய், கையிலிருந்த சல்லடை கரண்டியுடனே சமையலறையை விட்டு வெளியே வந்தாள். ஹாலை நோக்கி நடந்தாள்.

ஹாலில் அண்ணனும், தங்கையும் அமர்ந்து டிவியில் 'கனா காணும் காலங்கள்' பார்த்துக் கொண்டிருந்தார்கள். கார்த்திக்குடன் ஏதோ பேசிக்கொண்டிருந்த திவ்யா, அண்ணியை கண்டதும், பார்வையை தொலைக்காட்சியின் பக்கம் திருப்பிக் கொண்டாள். சித்ராவும் அவளை கண்டுகொள்ளாமல், கணவனிடம் கேட்டாள்.

"முந்திரி பருப்பும் வறுத்து வச்சுட்டேங்க.."

"ஓகே.. வெரி குட்.."

"சும்மா அப்படியே சாப்ட்டுக்குறீங்களா..? இல்ல.. உப்பு, மொளகாத்தூள் போட்டு வைக்கவா..?"

"நோநோ.. அதெல்லாம் வேணாம்.. அப்புறம் போற வழில வயிறு புடுங்கிக்கப் போவுது..!! ப்ளெயின் முந்திரி பருப்பு மட்டும் போதும்..!!"

"ம்ம்.. சரிங்க.."

சொல்லிவிட்டு சித்ரா உள்ளே நுழைய முற்பட்டபோதுதான் அசோக் வீட்டுக்குள் நுழைந்தான். ஆபீசில் இருந்து இப்போதுதான் திரும்புகிறான். தம்பி வந்ததும் அக்கா அங்கேயே நின்றுகொண்டாள். அசோக் திவ்யாவுக்கு அருகே சென்று அமர்ந்து கொண்டான். வந்ததுமே சென்னை ட்ராபிக் பற்றி புலம்ப ஆரம்பித்தவனிடம், பேச்சை மாற்றும் விதமாக கார்த்திக் கேட்டான்.

"அப்புறம் அசோக்.. உன் லீவ் அப்ரூவ் ஆயிடுச்சா.. நீ என்னைக்கு ஊருக்கு வர்ற..?"

"ப்ச்.. இல்லைத்தான்.. லீவ் அப்ரூவ் ஆகலை..!!" அசோக் சலிப்பாக சொன்னான்.

"அச்சச்சோ.. அப்போ திருவிழாவுக்கு நீ வரலையா..?"

"ம்ஹூம்..!! ஃபர்ஸ்ட் டைம்.. நம்ம ஊர் திருவிழாவை மிஸ் பண்ண போறேன்..!!"

"ப்ச்.. என்ன அசோக்.. இப்படி சொல்ற..? திருவிழா நேரத்துல நீ இருந்தாத்தான் வீடே களை கட்டும்..!!"

"என்னத்தான் பண்றது..? ப்ராஜக்ட் ரிலீஸ் டைமாகிப் போச்சு..!! நெறைய வேலை.. அதில்லாம.. எங்க டீம்லேயே.. நான்தான் க்ரிட்டிக்கல் ரிசோர்ஸ்..!!"

அசோக் கேஷுவலாக அதே நேரம் பெருமையாக சொல்ல, திவ்யா 'ம்க்கும்.. சரியான பெருமை பீத்த களைய பய..' என்று முனுமுனுத்தவாறு, முகத்தை வேறு அஷ்ட கோணலாக்கியபடி வேறுபக்கமாக திருப்பிக் கொண்டாள். அசோக் அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பேசினான்.

"கண்டிப்பா போயே ஆகணும்னு சொன்னேன் அத்தான்.. ஆனா.. மேனேஜர் என் கால்ல விழாத குறையா கெஞ்சுனாரு.. எனக்கும் பாவமா போச்சு.. 'சரி போ போ.. போகலை'ன்னு சொல்லிட்டேன்..!!" அசோக் சோகமாக சொல்லி முடிக்க, கார்த்திக் இப்போது சற்றே வருத்தமான குரலில் சொன்னான்.

"ச்சே.. இப்படி ஆயிடுச்சே.. எல்லாரும் இருக்குறப்போ நீ மட்டும் இல்லைன்னா.. அது அவ்வளவு நல்லா இருக்காதே..!! அட்லீஸ்ட் புதன்கிழமை கெடா வெட்டுக்காவது வந்து.. கறி சோறு சாப்பிட்டு போகலாம்ல அசோக்..?"

கார்த்திக் சீரியசாக சொல்ல, அசோக் இப்போது அவனை கேவலமாய் ஒரு பார்வை பார்த்தான். 'ங்கொய்யால.. அப்போவாச்சும் புதன்கிழமை திருவிழாவுக்கு வந்து சாமி கும்பிட்டு போகலாம்லன்னு சொல்றானா பாரு..? திங்கிறதுலயே இருக்கான்யா.. ச்சே..!!' என்று மனதுக்குள் காறி துப்பினான். அப்புறம் அக்கா புருஷனை கொஞ்சம் சீண்டிப் பார்க்கலாம் என்று அசோக்கிற்கு தோன்றியது. குரலை இலகுவாக்கிக் கொண்டு, சற்றே எள்ளல் தொனிக்க கேட்டான்.

"கெடா வெட்டு செவ்வாக்கிழமைலத்தான்..? புதன்கிழமைன்னு சொல்றீங்க..?"

அசோக் கேட்க, கார்த்திக் இப்போது 'கெக்கேபிக்கே'வென சிரிக்க ஆரம்பித்தான். தன் பானை வயிறு குலுங்க சிரித்தவன், அப்புறம் அந்த சிரிப்பை அடக்க முடியாமலே சொன்னான்.

"ஹ்ஹ்ஹ்ஹா.. ஹ்ஹ்ஹ்ஹா.. எந்த உலகத்துல இருக்குற நீ..? இத்தனை வருஷம் திருவிழா பார்த்திருக்குற.. என்னைக்கு கெடா வெட்டுன்னு கூட உனக்கு தெரியலையா..? புதன்கிழமைதான்பா கெடா வெட்டு..!!"


"இல்லைத்தான்.."

"அட ஆமாம்பா.. எனக்கு நல்லா தெரியும்..!!"

"அப்போ செவ்வாய்க்கிழமை..?"

"அன்னைக்கு பொங்கல் வைப்பாங்க..!! சக்கரை பொங்கலும், வெண்பொங்கலும்.. சாமிக்கு உடைச்ச தேங்கா சில்லை எடுத்து.. வாழைப்பழத்தையும் கடிச்சுக்கிட்டே சாப்பிடுவோமே.. மறந்து போச்சா..?"

"அப்போ.. அந்த அதிரசம், முறுக்குலாம் என்னைக்கு..?"

"ப்ச்.. அதுதான் திங்கக்கெழமை நைட்டே சுட்ருவாங்களே அசோக்..? ரெண்டு சட்டி.. ஒரு சட்டில அதிரசம்.. ஒரு சட்டில முறுக்கு..!!"

கார்த்திக் ஆர்வமாக சொல்லிக்கொண்டிருக்க, அசோக் இப்போது கருவிழிகளை சுழற்றி ஓரக்கண்ணால் தன் அக்காவை பார்த்தான். அவளோ தம்பியின் கேள்விகளுக்கு 'படார்.. படார்..' என பதிலளித்துக் கொண்டிருந்த தன் கணவனையே பெருமையாக பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் முகத்தில் அப்படி ஒரு பரவசம்..!! அசோக் இப்போது லேசாக தொண்டையை செருமிக்கொண்டு ஆரம்பித்தான்.

"கலக்குறீங்கத்தான்.. எல்லாம் என்னைக்குன்னு கரெக்டா தெரிஞ்சு வச்சிருக்கீங்க..!! ம்ம்ம்ம்.. குட் குட்.. அப்படியே இன்னொன்னும் என்னைக்குன்னு சொல்லிருங்களேன்..?"

"எது..?"

"அக்காவோட பர்த்டே..!!"

அவ்வளவுதான்..!! அத்தனை நேரம் பிரகாசமாக இருந்த கார்த்திக்கின் முகம், இப்போது இன்ஸ்டன்ட்டாய் இஞ்சி தின்ற குரங்குடையது மாதிரி மாறிப்போனது..!! அவ்வளவு நேரம் ஈசியான கொஸ்டின்ஸ் வர வர, 'பட் பட்' என ஆன்சர் செய்தவன், இப்போது டஃப் கொஸ்டின் வந்ததும் திணறினான்.. திருதிருவென விழித்தான்..!! தெரியாத ஆன்சரை கெஸ் செய்ய முயன்றான்..!!

"பி..பிப்ரவரி 24-த்..?"

"ப்ச்.. அது நம்ம சீஃப் மினிஸ்டர் பர்த்டே.. நான் கேட்டது சித்ரா அக்காவோட பர்த்டே..!!"

"இல்ல அசோக்..பிப்ரவரி 24-தான்..!! அதானடி..?"

என்றவாறு கார்த்திக் திரும்பி சித்ராவை பார்க்க, அவளுடைய முகம் அகோரமாய் மாறி நெடுநேரமாகியிருந்தது. தன் முட்டைக் கண்களை உருட்டி, எரித்து விடுவது போல அவள் கணவனையே முறைத்துக் கொண்டிருந்தாள். அசோக்கிற்கு தன் அக்காவை பார்க்க, அவர்கள் ஊர் ஆதி பரமேஸ்வரி ஞாபகத்துக்கு வந்தாள். கார்த்திக்கோ அர்த்த ஜாமத்து ஆவியைப் பார்த்தவன் போல குலைநடுங்கிப் போனான்.

"எ..என்னாச்சுடி.. ஏ..ஏண்டி அப்படி பாக்குற..? அப்போ.. பிப்ரவரி 24 இல்லையா..?"

சித்ரா ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்றாள். கையில் வைத்திருந்த கரண்டியாலேயே கணவனின் உச்சந்தலையில் 'டங்..!!!' என்று ஒரு போடு போட்டாள். கோபத்துடனே படக்கென்று திரும்பி, அவசரமாய் உள்ளே நடந்தாள்.

"அடப்பாவி.. இப்படி எக்கச்சக்கமா என்னை மாட்டி விட்டுட்டியே.. நீ நல்லாருப்பியா..? உனக்கும் ஒரு அடங்காப்பிடாரிதான் பொண்டாட்டியா வரப்போறா.. அவகிட்ட நீ நல்லா அடிவாங்கப் போற.. இது என் சாபம்..!!"

என்று அசோக்கை கரித்துக் கொட்டிய கார்த்திக், எழுந்து தன் மனைவியின் பின்னால் ஓடினான். அவளை சமாதானம் செய்யும் குரலிலேயே..

"சித்தூ.. சித்தூம்மா.. பிப்ரவரி 24- தானடி..? போத்திஸ்ல போய் உனக்கு பொடவைலாம் வாங்கித்தந்தேனேடி..? அன்னைக்குத்தான..? சித்தூ.. சித்தூம்மா..!!"

என்று பரிதாபமாக கூவிக்கொண்டே சென்றான். இங்கே அசோக்கும், திவ்யாவும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். சித்ரா இருந்தவரை வாயைப் பொத்திக்கொண்டு சிரித்த திவ்யா, அவள் சென்றபின் தாராளமாக சிரித்தாள்.

"ஹ்ஹாஹ்ஹா... ஹ்ஹாஹ்ஹா... ஐயோ.. அசோக்.. முடியலைடா.. பாவம்டா..!!"

"ஹ்ஹாஹ்ஹா.. சரியான காமடி பீஸ்டி உன் அண்ணன்..!! பொங்கச்சோறு என்னைக்கு ஆக்குவாங்கன்லாம் தெரிஞ்சு வச்சிருக்கான்.. பொண்டாட்டி என்னைக்கு பொறந்தான்னு கேட்டா திருதிருன்னு முழிக்கிறான்..!!"

"ஐயோ நான் அவனை சொல்லலைடா.. நான் பாவம்னு சொன்னது உன் அக்காவை..!! ஹ்ஹாஹ்ஹா... ஹ்ஹாஹ்ஹா...!!" திவ்யா இன்னும் வாயெல்லாம் சிரிப்பாக சொல்ல, அசோக்குடைய சிரிப்பு இப்போது பட்டென்று நின்றது.

"என்னடி சொல்ற..?" என்றான் சற்றே இறுக்கமான குரலில்.

"ஆமாம்.. அவ மூஞ்சி போன போக்கை பார்த்தியா அசோக்..?? ஹ்ஹாஹ்ஹா... ஹ்ஹாஹ்ஹா... வெளக்கெண்ணை குடிச்ச தேவாங்கு மாதிரி..!! ஹ்ஹாஹ்ஹா... ஹ்ஹாஹ்ஹா...!!"

"ஏய்.. ஏஏஏஏய்ய்ய்.. நிறுத்து... நிறுத்துடி..!!" அசோக் சற்றே கடுப்பாக சொன்னான்.

"ஏன்..??" திவ்யா பட்டென சிரிப்பை நிறுத்திவிட்டு கேட்டாள்.

"ஏனா..?? உங்க ரெண்டு பேரையும் திருத்தவே முடியாதுடி..!!"

"நான் ஒரு ஆளுதான..? அது யாரு இன்னொருத்தரு..?"

"ம்ம்ம்..? என் அக்கா..!!" அசோக் சொல்ல, இப்போது திவ்யா கடுப்பானாள்.

"ப்ச்.. இங்க பாரு.. திட்டுறதா இருந்தா என்னை மட்டும் தனியா திட்டு.. அவ கூட சேர்த்து வச்சு திட்டாத..!! எனக்கு கெட்ட கோவம் வரும்.. ஆமாம்..!!"

"ஐயோ.. ராமா ராமா..!!"

அசோக் தலையை பிடித்துக் கொண்டான். 'திட்டு வாங்குவது கூட அவளுடன் சேர்ந்து வாங்க மாட்டேன்.. தனியாகத்தான் வாங்குவேன்..' என்கிறாளே என்று நொந்து போனான். அப்புறம் சில வினாடிகள் இரண்டு பேரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தனர். சில விநாடிகளிலேயே சூழ்நிலையின் இறுக்கம் சற்று தளர்ந்தது. இருவரும் மெலிதாக புன்னகைத்துக் கொண்டார்கள். திவ்யாதான் மெல்லிய குரலில் சொன்னாள்.

"ம்ம்ம்ம்... போடா.. நீ இல்லாம.. எனக்குத்தான் திருவிழா ரொம்ப போரடிக்க போகுது.."

"ம்ம்ம்.. அதுலாம் ஒண்ணுல்ல..!! ஆமாம்.. காலைல எத்தனை மணிக்கு பஸ்..?"

"எட்டரைக்கு..!! ஆனா.. நான் நைட்டுதான் போறேன்..!!"

"நைட்டா..? ஏன்..??"

"நாளைக்கு மேட்ச் இருக்கு அசோக்.. இன்டர் காலேஜ் டோர்ணமன்ட்.. ஃபைனல்..!! போன வருஷம் கப் மிஸ் பண்ணிட்டோம்.. இந்த தடவை விட கூடாது..!!"

"ஓ..!! சொல்லிட்டு இருந்தேல..? மறந்துட்டேன்..!! ஆமா.. அந்த மேட்ச்சுக்காக நீ தனியா நைட்-ட்ராவல் பண்ண போறியா..? பேசாம மேட்ச் கேன்சல் பண்ணிட்டு.. நீயும் காலைலயே இவங்க கூட போயிடேன் திவ்யா..??"

"இல்ல அசோக்.. நாளைக்கு நான் கண்டிப்பா விளையாடியே ஆகணும்.. நாளைக்கு மேட்ச் எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்..!!" சொல்லும்போதே திவ்யாவின் குரலில் ஒருவித சோகம் தொணித்ததை அசோக்கால் உணர முடிந்தது.

"அ..அப்படி என்ன ஸ்பெஷல்..?"

"நாளைக்கு மேட்ச்தான்.. நான் விளையாடப் போற கடைசி மேட்ச்..!!" திவ்யா சொல்ல, அசோக் அதிர்ந்தான்.

"எ..என்ன சொல்ற திவ்யா..? கடைசி மேட்சா..? ஏன்..?"

"திவாகருக்கு நான் ஸ்போர்ட்ஸ்ல இருக்குறது பிடிக்கலை அசோக்.. 'அதெல்லாம் எதுக்கு.. விட்டுடேன்..?'னு சொன்னாரு..!! நான்தான் 'இந்த டோர்ணமன்ட் முடியட்டும்.. எல்லாம் ஸ்டாப் பண்ணிர்றேன் ..'னு சொல்லி வச்சிருக்கேன்..!!" திவ்யா சொல்ல சொல்ல, அசோக் கடும் எரிச்சலுக்கு உள்ளானான்.

"ஓ..!! அப்போ.. இதுக்கப்புறம் நீ விளையாட போறது இல்லையா..?"

"ம்ஹூம்..!! பாலை கைல கூட தொட்டு பார்க்க மாட்டேன்..!!"

"இதெல்லாம் என் மனசுக்கு சரியா படலை திவ்யா..!!"

"எது..?"

"அவருக்காக நீ உன் திறமையை குழி தோண்டி புதைக்கிறது..!! காதல்ன்றது காதலிக்கிறவங்களோட நிலைமையை மேல உயர்த்துறதா இருக்கணும்.. இப்படி கீழ புடிச்சு தள்ளி விடுறதா இருக்க கூடாது..!!"

"ச்சே..!! என்ன பேசுற நீ..? நான் அப்டிலாம் நினைக்கலை..!! எனக்கு புடிச்ச மாதிரி அவர் நடந்துக்குறதும்.. அவருக்கு புடிச்ச மாதிரி நான் நடந்துக்குறதும்.. அதுதான காதல்..? விட்டுக் கொடுக்குறதுதான லவ்வோட பேசிக்ஸ்..?? அதைத்தான் நான் செய்றேன்..!!" திவ்யா அழுத்தமாய் எதிர் வாதம் செய்ய, அசோக் சலிப்பாய் ஒரு பெருமூச்சு விட்டான்.

"சரி விடு.. நான் ஆர்க்யூ பண்ண விரும்பலை..!! ம்ஹ்ஹ்ம்.. இன்னும் அவரை நீ லவ் பண்றேன்னே சொல்லலை.. அதுக்குள்ளே அவருக்கு புடிச்ச மாதிரி உன்னை மாத்த ஆரம்பிச்சுட்டாரா..?"

"அப்டிலாம் இல்ல அசோக்.. அவரும்தான் எனக்காக அவரை மாத்திட்டு இருக்காரு..?"

"ஓ..!! என்ன பண்ணினார்..?"

"எனக்கு யெல்லோ பிடிக்காதுன்னு சொன்னேனா..? இனி யெல்லோ கலர்ல ட்ரெஸ் போட மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணிருக்காரு..!!" திவ்யா சொல்ல, அசோக் எரிச்சலானான்.

"சுத்தம்..!! ம்ம்ஹ்ஹ்ம்ம்.. எனிவே.. ஆல் தி பெஸ்ட்..!! நான் சொன்னது நாளைக்கு மேட்சுக்கு..!!" சொல்லிவிட்டு அவன் எழ முயல,

"அசோக்.." திவ்யா அவனை அழைத்தாள்.

"ம்ம்.."

"நாளைக்கு எங்க காலேஜுக்கு மேட்ச் பார்க்க வர்றியா..? நாளைக்கு சாட்டர்டே.. உனக்கு லீவ்தான..?"

"இல்ல திவ்யா.. நான் ஆபீஸ் போகணும்..!! வேலை இருக்கு.. வர முடியாதுன்னு நெனைக்கிறேன்..!!"

"ப்ளீஸ் அசோக்.. ப்ளீஸ்..!! ஈவினிங்.. கொஞ்ச நேரம் மட்டும்..!! எனக்காக.. ப்ளீஸ்..!! நீ வந்தா.. கேலரில உக்காந்து நீ பாக்குறேன்னு தெரிஞ்சா.. நான் நல்லா விளையாடுவேன்..!! என்னோட லாஸ்ட் மேட்ச்.. நான் நல்லா விளையாடனும்னு ஆசைப்படுறேன்.. ப்ளீஸ் அசோக்.. ப்ளீஸ்.. எனக்காக.. !!"

திவ்யா குழந்தை மாதிரி கெஞ்ச ஆரம்பிக்க, அசோக் அப்படியே உருகிப் போனான்..!! தன் உற்ற தோழியையே.. உயிரில் கலந்த காதலியையே.. அன்பும், ஆசையுமாய் பார்த்தான். இதமான குரலில் சொன்னான்..!!

"ம்ம்ம்ம்... நான் மேட்ச் பார்க்க வரணும்.. அவ்ளோதான..? கண்டிப்பா வர்றேன்டா..!! போதுமா..??" என்றவாறே திவ்யாவின் முன் நெற்றியில் வந்து விழுந்திருந்த கொத்து மயிர்களை, அழகாக பின்னுக்கு ஒதுக்கி விட்டான்.

"தேங்க்ஸ் அசோக்..!!" திவ்யா உற்சாகமாக துள்ளி குதித்தாள்.

"சரி வா.. இப்போ நம்ம வீட்டு மேட்ச்சை போய் வேடிக்கை பார்க்கலாம்..!!"

"நம்ம வீட்டு மேட்ச்சா..?"

"ம்ம்.. பாக்ஸிங்..!! என் அக்காவுக்கும், உன் அண்ணனுக்கும்..!!" சொல்லிவிட்டு அசோக் கண்சிமிட்ட,

"ஹஹாஹாஹஹா..!!!" திவ்யா கலகலவென சிரித்தாள்.



அத்தியாயம் 19

அடுத்த நாள்..

"ஈவினிங் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பனும் ராஜன்.." என்று அசோக் காலையிலேயே சொல்லி வைத்திருந்தான். அவரும்,

"ஓ.. ஷ்யூர்.. ஷ்யூர்..!!" என்று தாராள மனசுக்காரனாய் பல்லிளித்தார். ஆனால் அசோக் கிளம்பும் நேரத்தில்,

"ப்ளீஸ் அசோக்.. இது ரொம்ப க்ரிட்டிக்கல் இஷ்யூ.. இதை மட்டும் ஃபிக்ஸ் பண்ணிட்டு போயிடேன்.. ப்ளீஸ்..!!"

என்று வெட்கமில்லாமல் கெஞ்சினார். அசோக்கும் வேறு வழியில்லாமல் அந்த வேலையை செய்ய வேண்டியதாயிற்று. ஆபீசை விட்டு கிளம்ப தாமதமாகி விட்டது. அவசரமாய் கிளம்பி பைக்கை எடுத்துக்கொண்டு, திவ்யாவுடைய காலேஜை நோக்கி பறந்தான்.

காலேஜை அடைந்து பேஸ்கட் பால் மைதானத்துக்கு விரைந்தான். அன்றொருநாள் அவன் பார்த்த அதே மைதானந்தான். ஆனால் அன்று போல் இல்லாமல், இன்று மைதானம் எண்ணெய்ப் பலகாரத்தில் ஈ மொய்த்த மாதிரி கொசகொசவென்று இருந்தது. தமிழ்நாட்டின் எல்லா மூலைகளில் இருந்தும் வந்திருந்த மாணவ, மாணவியர் இறுதிப் போட்டியை காண ஆர்வமாகவும், உற்சாகமாகவும் காத்திருந்தனர். கேலரியில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

போட்டி இன்னும் ஆரம்பமாகி இருக்கவில்லை. ஆனால்.. ஆரம்பிக்கும் தருவாயில் இருந்தது..!! திவ்யாவின் கல்லூரிக்கும், கோவையை சேர்ந்த ஒரு மகளிர் கலைக்கல்லூரிக்கும் இடையிலான இறுதிப் போட்டி..!! இரண்டு அணியினரும் பேஸ்கட்பால் கோர்ட்டில் அணிக்கொரு பக்கமாக.. வட்ட வடிவில் குழுமியிருந்தார்கள்..!! திவ்யா தனது அணியினருக்கு மத்தியில் நடுநாயகமாக நின்றிருந்தாள். சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு, மற்ற பெண்களுக்கு இறுதிக்கட்ட இன்ஸ்ட்ரக்ஷன்களை கொடுத்துக் கொண்டிருந்தாள்.

அசோக் கேலரியில் எங்காவது இடம் இருக்கிறதா என தேடிப் பார்த்தான். மொத்த இடத்திலும் இரண்டே இரண்டு பேர் மட்டும் அமரக் கூடிய அளவுக்கு ஒரு இடம் தென்பட்டது. அங்கே சென்று அமரலாம் என முடிவு செய்தான். கேலரியில் ஏறி.. கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து.. அந்த இடத்தை நெருங்கினான். அமரப்போகும் முன், கைகள் ரெண்டையும் வாயை சுற்றி வட்டமாக வைத்து,

"கமான் திவ்யாஆஆஆ...!!!!!!!!!!"

என்று உரத்த குரலில் கத்தினான். உடனே திவ்யாவும் திரும்பி பார்த்தாள். ஆரவாரத்துடன் அமர்ந்திருந்த அத்தனை பேரிலும், நின்று கொண்டிருந்த அசோக் மட்டும் திவ்யாவின் கண்களுக்கு தனியாக தென்பட்டான். உடனே திவ்யாவின் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம்..!! அசோக் இப்போது தன் கட்டை விரலை உயர்த்தி காட்ட.. திவ்யாவும் தன் உடலுக்குள் புதிதாய் ஒரு நம்பிக்கை ஊற்று உடைப்பெடுத்தவள் மாதிரி.. தன் கட்டைவிரலை உயர்த்திக் காட்டினாள்.

அசோக் அமர்ந்து கொள்ள, ஓரிரு நிமிடங்களிலேயே போட்டி ஆரம்பமானது..!! கோவை அணி அதிரடியாக ஆரம்பித்தது..!! அந்த அணியின் கேப்டன் ஒருத்தி.. பொம்பளை டார்ஜான் மாதிரி இருந்தாள்.. அசால்ட்டாக நாலைந்து ஷூட்கள் போட.. கோவை அணி முன்னிலை வகித்தது..!! சென்னை அணியும் விடவில்லை.. திவ்யா அடுத்தடுத்து வளையத்துக்குள் பந்துகளை போட்டு, பாயின்ட் கணக்கை சமன் செய்தாள்..!! ஆட்டம் சுவாரசியமாக போய்க்கொண்டிருந்த போதுதான்.. அத்தனை நேரம் அசோக்குக்கு அடுத்து.. சற்று தள்ளி அமர்ந்திருந்த அந்தப்பெண்.. இப்போது அவனை நெருங்கி அமர்ந்தாள்..!!

"ஹலோ.. எக்ஸ்க்யூஸ் மீ.." என்றாள் அசோக்கிடம் மெல்லிய குரலில்.

"யெஸ்.."

"நீங்க எந்த காலேஜ்..?"

"நானா..? நா..நான்.. அண்ணா யுனிவர்சிட்டி..!!" என்றான் சற்றே கிண்டலான குரலில்.

"என்ன படிக்கிறீங்க..?"

"படிக்கலைங்க.. அங்க வொர்க் பண்றேன்.. ஐ'ஆம் எ ப்ரொஃபசர்..!!"

"ப்ரொஃபசரா..? பாத்தா அப்படி தெரியலையே..?"

"ரொம்ப யங்கா இருக்கேன்ல..? அது என் தப்பில்லைங்க..!!"

"ம்ம்.. எங்க காலேஜ் பொண்ணை உங்களுக்கு எப்படி தெரியும்..?"

"யாரு..?? ஓ.. திவ்யாவா..? அ..அது.. அவ.. நான் கட்டிக்க போற பொண்ணு..!! ஐ லவ் ஹர்..!!"

"ஓஹோ.. இப்போ தெரியுது நீங்க யாருன்னு..? என்னடா எங்கேயோ கேட்ட நக்கல் குரல் மாதிரி இருக்கேன்னு நெனச்சேன்..!!" அந்தப்பெண் சொல்ல, அசோக் இப்போது பதறினான்.

"எ..என்னங்க சொல்றீங்க..?"

"அசோக்தான உங்க பேரு..?"

"ஆ..ஆமாம்.. நீங்க..?"

"ம்ம்...?? நானா..?? நான்தான் அந்த கல்லை முழுங்குன காக்கா..!!" அந்தப்பெண் முறைப்பாக சொல்ல,

"ஓ.. அ..அது.. அன்னைக்கு நீங்க.. அந்த ஃபோன்ல..?" அசோக் அசடு வழிந்தான்.

"ஆமாம்.. அதேதான்..!!"

"ஓகே ஓகே..!!! ம்ம்ம்.. திவ்யா எல்லாம் சொல்லிட்டாளா உங்ககிட்ட..? ஸாரிங்க..!!"

"பரவால..!!"

"ஆனா.. நீங்க சொன்னது தப்புங்க..!!"

"தப்பா..? என்ன தப்பு..?"

"அது.. கல்லை முழுங்குன காக்கா இல்ல.. கருங்கல்லை முழுங்குன காக்கா..!!" அசோக் சொல்ல அந்தப்பெண் மறுபடியும் முறைத்தாள்.

"ரொம்பதான் நக்கல் உங்களுக்கு..!! திவ்யா உங்களை பத்தி சொன்னது சரியாத்தான் இருக்கு.!!"

"என்ன சொன்னா..?"

"உங்களுக்கு வாய் மட்டும் இல்லைன்னா.. நாய் தூக்கிட்டு போயிடுமாம்..!!"

"ஹாஹா..!! அப்படியா சொன்னா..? வச்சுக்குறேன் அவளை..!! ம்ம்ம்.. அப்புறம்.. உங்க பேரு என்னனு நீங்க இன்னும் சொல்லவே இல்லையே..?"

"அது எதுக்கு உங்களுக்கு..?"

"என்னங்க நீங்க..? அன்னைக்கு கேட்ட மாதிரியே இன்னைக்கும் கேக்குறீங்க..?"

"ஏன் கேட்க கூடாதா..? இன்னைக்கு மட்டும் என்ன ஸ்பெஷல்..?"

"அன்னைக்கு என்னை யார்னே தெரியாது.. டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணுனீங்க.. அதுல ஒரு நியாயம் இருந்தது..!! இன்னைக்குத்தான் நாம இவ்வளவு நெருங்கிட்டோமே..?"

அசோக் சொல்ல, அந்தப்பெண் இப்போது சற்று தள்ளி அமர்ந்துகொண்டாள். உடனே அசோக்,

"ஐயையோ.. நான் அந்த நெருக்கத்தை சொல்லலைங்க.. ஃபிரன்ஷிப்ல நெருங்கிட்டோம்னு சொன்னேன்..!! பேரை சொல்லுங்கங்க.. ப்ளீஸ்.." அசோக் இளிப்பாக கேட்க,

"ம்ம்ம்..?? அஞ்சு..!!" அந்தப்பெண் முறைப்பாக சொன்னாள்.

"ஐயயோ.. நான் டைம் கேக்கலைங்க.. உங்க பேரை கேட்டேன்..!!"

"ஆஆஆஆ..!!!!! என் பேர்தான் அஞ்சு..!!"

"அப்போ டைம்..??"

"ம்ம்.. அதுவும் அஞ்சுதான்..!!" அவள் மணிக்கட்டை திருப்பி பார்த்துவிட்டு சொன்னாள்.

"நீங்க ரொம்ப வெவரங்க.. வேற யார்கிட்டயாவது நீங்க டைம் கேட்டா தப்பா சொல்லுவாங்கன்னு.. நீங்களே கைல வாட்ச் கட்டிருக்கீங்க..!!"

"என்ன சொல்றீங்க நீங்க..? எனக்கு புரியலை..!!"

"ஆமாம்.. டைம் என்னன்னு அவங்ககிட்ட கேட்டு பாருங்க.. அஞ்சு அஞ்சுன்னு தப்பா சொல்வாங்க..!!"

"ஷ்ஷ்ஷ்ஷ்... அப்பாஆஆஆ..!!! உங்க மொக்கை தாங்க முடியலை..!! என்னை ஆளைவிடுங்க.. நான் மேட்ச் பாக்குறேன்..!!"

இருவரும் பேச்சை குறைத்துக் கொண்டு, மேட்சை பார்க்க ஆரம்பித்தார்கள். கை தட்டி சென்னை அணியை உற்சாகப் படுத்தினார்கள். ஆட்டம் விறுவிறுப்பாகவே சென்றது. கோவை அணியில் மூன்று பெண்கள் நன்றாக விளையாடினார்கள். சென்னை அணியில் திவ்யாவை தவிர மற்ற எல்லாப் பெண்களும் சொதப்பினார்கள். பாதி நேரம் முடிந்த நிலையில் 32 - 27 என, கோவை அணியின் கையே ஓங்கியிருந்தது. இடைப்பட்ட நேரத்தில் ஓய்வு எடுக்கையில் திவ்யா, கேலரிப்பக்கம் பார்வையை வீசினாள். அசோக்கும் அவளுடைய தோழி அஞ்சுவும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்து, மகிழ்ச்சியாக அவர்களை பார்த்து புன்னகைத்தாள்.

இடைவேளைக்கு அப்புறம் ஆட்டம் இன்னும் சூடுபிடித்தது. இந்த முறை கோவை அணியின் அணுகுமுறை வித்தியாசமாக இருந்தது. திவ்யாதான் சென்னை அணியின் கீ ப்ளேயர் என்பதை புரிந்து கொண்டு, அவளை ப்ளாக் செய்வதிலேயே குறியாக இருந்தார்கள். அவளுடைய கைக்கு பந்து போவதை அரும்பாடுபட்டு தடுத்தார்கள். விளைவு.. கோவை அணியின் ஸ்கோர் மளமளவென உயர.. சென்னை அணியின் ஸ்கோர் மந்தமாகியது..!!

"அச்சச்சோ.. என்னங்க இது..? ஊத்திக்கும் போல இருக்கே..?" அஞ்சு அசோக்கிடம் கவலையாக சொன்னாள்.

"எனக்கு நம்பிக்கை இருக்குங்க.. திவ்யா விடமாட்டா.. பட்டாசு கெளப்புவா பாருங்க..!!" சொன்ன அசோக் எழுந்து 'கமான் திவ்யா..!!' என்று ஒருமுறை கூவிவிட்டு அமர்ந்தான்.

"எனக்கென்னவோ நம்பிக்கையே போச்சு.. '54-38'.. ரொம்ப கஷ்டங்க..!!"

"ப்ச்.. திவ்யாவால முடியாதது எதுவும் இல்ல.. நீங்க வேணா பாருங்க..!!"


அசோக் அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் சொல்ல, அஞ்சு அவனுடைய முகத்தையே ஒரு சில வினாடிகள் வித்தியாசமாக பார்த்தாள். அப்புறம் குரலில் ஒருவித ஆர்வத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டாள்.

"உங்களுக்கு திவ்யாவை ரொம்ப பிடிக்குமா..?"

"ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. ஏன் கேக்குறீங்க..?"

"இல்ல.. அவளை லவ் பண்றேன்.. கல்யாணம் பண்ணிக்கப் போறேன்லாம்.."

"ஐயையோ.. அது சும்மா சொன்னேங்க..!! நீங்க யார்னு தெரியாம.."

"ம்ம்.. அதான பார்த்தேன்..!! அப்டி ஏதாவது இருந்திருந்தா திவ்யா எங்கிட்ட சொல்லிருப்பாளேன்னு நெனச்சேன்..!!"

"இல்லைங்க.. அது வெளையாட்டுக்கு சொன்னேன்.. அவகிட்ட போட்டு கொடுத்துடாதீங்க..!!"

"ஹாஹா..!! என்ன.. அவளுக்கு எப்படி பயப்படுறீங்க..? ம்ம்ம்ம்.. கவலைப்படாதீங்க.. அவகிட்ட எதுவும் சொல்லலை.. நீங்க வெளையாட்டுக்குத்தான் சொன்னீங்கன்னு எனக்கு புரிஞ்சது..!!"

"தேங்க்ஸ்..!!"

அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, திவ்யா ஒரு த்ரீ ஷூட் போட, மொத்த கூட்டமும் ஆர்ப்பரித்தது. அசோக் எழுந்து விசில் அடித்தான். ஆட்டம் பரபரப்பான இறுதி நிமிடங்களை எட்டியது. திவ்யா ஆடுகளத்தில் வெறியாட்டம் ஆடிக்கொண்டிருந்தாள். ஒற்றை ஆளாக தன் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினாள். பம்பரமாக சுழன்றாள். பந்துகளை கைப்பற்றி வளையம் நோக்கி வீசி, பாயிண்டுகளாக மாற்றினாள். தனது அணித்தோழிகளுடன் கை தட்டிக் கொண்டு ஓடினாள்..!! ஆட்டம் முடிய இரண்டு நிமிடங்கள் இருந்த நிலையில் அவள் அடுத்தடுத்து இரண்டு த்ரீ ஷூட் போட.. இப்போது சென்னை அணி முன்னிலை வகித்தது..!!

இன்னும் ஒரே நிமிடம்தான்..!! சென்னை அணி ஐந்து பாயிண்டுகள் அதிகமாக இருந்தது..!! அந்த அணி வெல்லப் போவது உறுதி என்று ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஆராவாரம் செய்துகொண்டிருந்தனர். அப்போதுதான் அது நடந்தது..!!

திவ்யாவின் கையில் பந்து கிடைக்க, அவள் எதிர் அணியின் போஸ்ட் நோக்கி நகர்ந்தாள். அவளை கோவை அணியின் கேப்டன் அந்த டார்ஜான் இரு கைகள் விரித்து வழி மறித்தாள். அவளிடம் இருந்து அழகாக தப்பித்த திவ்யா மேலும் முன்னேற.. எதிரணி கேப்டன் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்றாள். அதற்குள் திவ்யா கூடையை நெருங்கியிருக்க, வேகமாக அவள் பின்னால் ஓடிவந்த அந்தப்பெண் திவ்யாவின் முதுகைப் பிடித்து அப்படியே அதிக பலத்துடன் தள்ளிவிட்டாள்.

திவ்யா தடுமாறிப் போனாள். பந்து அவளுடைய கையை விட்டு எங்கோ பறந்து சென்றது. அவளுடைய ஷூ கால்கள் ஒன்றோடொன்று பின்னிக்கொள்ள.. பேலன்ஸ் செய்ய இயலாமல்.. ஓடியவாக்கிலே சென்று.. பேக்போர்ட் போஸ்டிலேயே போய் 'நச்ச்..!!' என்று மோதினாள்..!! அவளுடய நெற்றி போஸ்ட்டில் சென்று முட்டியது. முட்டிய வேகத்தில் திவ்யா, மூச்சு பேச்சு இல்லாமல்.. 'சொத்த்த்..!!' என்று தரையில் விழுந்தாள்..!!

அவ்வளவுதான்..!! மொத்த கூட்டமும் அதிர்ச்சியில் ஸ்தம்பித்துப் போனது..!! யாரோ ஒரு பெண் மட்டும் 'ஓஓஓஓஓவ்வ்வ்..!!' என்று பெரிதாக அலறினாள்..!! அசோக் நடந்ததை நம்பமுடியாதவனாய்.. பதறிப்போய் எழுந்தான்..!! திவ்யாவுடைய அணித்தோழிகள் அவளை நோக்கி ஓட.. அசோக் கேலரியை விட்டு குதித்து இறங்கினான்..!!

"திவ்யா...!!!" அசோக்கின் அலறல் தனியாக ஒலித்தது.

அதற்குள் திவ்யாவின் தோழிகள் அவளை சூழ்ந்திருக்க, அசோக் அவர்களை விலக்கிக்கொண்டு உள்ளே புகுந்தான். தரையில் வீழ்ந்து கிடந்த தன் தேவதையை கைகளில் அள்ளி எடுத்தான். திவ்யா மயங்கிப் போயிருந்தாள். அவளுடைய நெற்றி உடைந்து உதிரத்தை கொப்பளிக்க ஆரம்பித்திருந்தது.

"திவ்யா.. திவ்யா.. கண்ணைத் தொறந்து பாரு திவ்யா.."

அசோக் அவளுடைய கன்னத்தில் 'பட் பட் பட்' என தட்டினான். அதற்குள் இப்போது அந்த அஞ்சுவும் ஓடி வந்து அவளை இன்னொரு பக்கமாக தாங்கி பிடித்தாள். தனது காதல் மகாராணி.. தன் கைகளிலே.. நெற்றியில் குருதி ஓட… இமைகள் மூடிய விழிகளோடு.. பரிதாபமாய் கிடக்க.. அசோக்குடைய இதயம் இப்போது வெடித்து விடும்போல் வலித்தது.. அவனையும் அறியாமல் அவனது கண்கள் உடைப்பெடுத்து நீரை கொட்ட ஆரம்பித்தன..!! 'திவ்யா.. திவ்யா..' என அழுது அரற்றினான்..!! அந்த அஞ்சு இப்போது நிமிர்ந்து அசோக்கை பாவமாக பார்த்தாள்..!!

யாரோ முகத்தில் நீரை தெளிக்க, திவ்யாவின் மயக்கம் தெளிந்தது. இமைகளை மெல்லப் பிரித்தாள்..!! மயக்கம் தெளிந்து எழுந்ததுமே.. 'எனக்கு ஒன்னும் இல்ல.. ஐ ஆம் ஆல்ரைட்.. ஐ கேன் ப்ளே..' என்று, நெற்றியில் ரத்தத்துடன் எழ முற்பட்ட திவ்யாவை பார்த்து அசோக்கிற்கு அழுகை இன்னும் பீறிட்டது..!! அழுதான்..!! அதற்குள் அவளுடைய கோச் வந்து.. அவளை தட்டிக் கொடுத்தார்..!!

"இல்லம்மா.. நீ வெளையாண்டது போதும்.. இன்னும் ஒரு நிமிஷம்தான் இருக்கு..!!" என்றார்.

நல்லவேளையாக அவர்கள் கல்லூரியின் மருத்துவர் அங்கேதான் இருந்தார். அவர் வந்து முதலுதவி செய்தார். 'ஒண்ணுல்ல.. சின்ன அடிதான்..' என்று அவளுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியவாறே, அவளுடைய காயத்தை சுத்தம் செய்து, பிளாஸ்திரி போட்டார்..!!

அந்தப்பக்கம் இரண்டு அணிகளின் கோச்சுகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அப்புறம் அந்த டார்ஜான் பெண்ணுக்கு வார்னிங் கொடுத்தார்கள். அவளை வெளியேற்றிவிட்டு வேறொரு பெண்ணை சேர்த்துக் கொண்டு.. ஆட்டத்தை தொடர்ந்தார்கள். அசோக்குடைய தோளில் ஆதரவாய் சாய்ந்தவாறே திவ்யா மீதி ஆட்டத்தை பார்த்தாள். அதற்கு மேல் நடந்த ஒருநிமிட ஆட்டத்தில் எந்த அணியும் ஸ்கோர் செய்யாமல் போக.. சென்னை அணி வென்றது..!!

அந்த வெற்றியை மொத்த கும்பலும் ஆரவாரம் செய்து கொண்டாடியது..!! யாராரோ வந்து திவ்யாவின் கையை குலுக்கி பாராட்டினார்கள்..!! திவ்யாவின் கோச் அவளுடய தலையை தடவிக்கொடுத்து வாழ்த்தினார்.. பெருமிதமாக ஒரு பார்வை பார்த்தார்..!! பார்த்தவர்..

"சரிம்மா.. நீ ரொம்ப நேரம் இங்க இருக்க வேணாம்.. ஆளாளுக்கு உன்னை டிஸ்டர்ப் பண்ணிட்டு இருப்பாங்க.. நீ வீட்டுக்கு கெளம்பு.. போய் நல்ல ரெஸ்ட் எடு..!! எதுக்கும் நாளைக்கு ஒரு ஸ்கேன் எடுத்து பார்த்துக்கோ.. பில் க்ளெயிம் பண்ணிக்கலாம்.. சரியா..?" என்றார்.

"வீட்டுக்கு எப்டி போவீங்க..?" அசோக்கிடம் கேட்டாள் அஞ்சு.

"நான் பைக்ல வந்திருக்கேன்.. அதுலயே.."

"இல்ல இல்ல.. இவ இருக்குற நிலைமைல பைக் வேணாம்.. எங்கிட்ட கார் இருக்கு.. அதுல போயிடலாமா..?" கேட்ட அஞ்சுவை அசோக் நன்றியுடன் பார்த்தான்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவர்கள் மூவரும் காரில் சென்றுகொண்டிருந்தார்கள். அஞ்சு காரை ஓட்ட, அசோக்கும், திவ்யாவின் பின்சீட்டில அமர்ந்திருந்தார்கள். அஞ்சு நிதானமாகவே காரை செலுத்தினாள். அவ்வப்போது பின்னால் திரும்பி அவர்களை பார்த்துக் கொண்டாள். அசோக் அவளுக்கு வழி சொல்லிக்கொண்டே வந்தான். பாதி தூரம் சென்று கொண்டிருக்கையில்.. திவ்யா அசோக்கிடம் பரிதாபமான குரலில் கேட்டாள்.

"எனக்கு மறுபடியும் தலை சுத்துற மாதிரி இருக்கு அசோக்.. உன் மேல சாஞ்சுக்கவா..?"

"ம்ம்.. சாஞ்சுக்கோ திவ்யா.."

திவ்யா அசோக்கின் மார்பில் சாய்ந்து கொண்டாள். அவனுடைய இடுப்பை ஒருகையால் வளைத்துக்கொண்டு.. இமைகளால் விழிகளை மூடிக்கொண்டு.. ஒரு குழந்தையைப் போல.. சுகமாக அவன் நெஞ்சில் படர்ந்து கிடந்தாள்..!! ஊரெல்லாம் அலைந்துவிட்டு நமது வீட்டுக்கு வந்ததும், நம் மனதில் ஒரு நிம்மதியுணர்வு படருமே.. அப்படி ஒரு உணர்வுதான் அப்போது திவ்யாவை ஆக்ரமித்திருந்தது..!! அவளுடைய படபடப்பும் துடிதுடிப்பும் அடங்கி, மனதும் உடலும் அமைதியாகி போனது..!!

திவ்யாவை அந்த நிலையில் பார்க்க, அசோக்கிற்கு அழுகை வந்தது. கண்கள் விட்டு வழிந்த கண்ணீரை திவ்யாவுக்கு தெரியாமல் துடைத்துக் கொண்டான்..!! மெலிதான விசும்பல் ஒலி கூட வெளியே கேட்க கூடாது என, உதடுகளை பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டான்..!! அஞ்சு தன் தலைக்கு மேலிருந்த கண்ணாடி மூலமால, பின்சீட்டில் அமர்ந்திருந்த அசோக்கை கவலையுடன் கவனித்துக்கொண்டே, காரை செலுத்திக் கொண்டிருந்தாள்.

வீட்டை அடைந்ததும், அசோக்கும், அஞ்சுவும் திவ்யாவை கைத்தாங்கலாக அழைத்து சென்று அவளுடைய அறையில் படுக்க வைத்தார்கள். கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அஞ்சு, அப்புறம் கிளம்பினாள். அப்பார்ட்மன்ட்ஸ் கீழ் வரை சென்று அசோக் அவளை வழியனுப்பினான். மிகுந்த நன்றியுணர்ச்சியுடன் அவளிடம் சொன்னான்.

"ரொம்ப தேங்க்ஸ்ங்க அஞ்சு.."

"ச்சே.. இதுக்கெதுக்கு தேங்க்ஸ்..? என் பிரண்டுக்காக இந்த சின்ன ஹெல்ப் கூட நான் பண்ண மாட்டனா..?"

"இ..இருந்தாலும்.."

"ஒன்னும் இழுக்க வேணாம்.. விடுங்க..!! ஆமாம்.. வீட்ல மத்தவங்கல்லாம் எங்க..?"

"எல்லாம் எங்க ஊர் திருவிழாவுக்கு போயிருக்காங்க.. காலைலதான் போனாங்க.. இவளும் நைட்டு போறதா இருந்தது.. இப்படி ஆகிப்போச்சு..!!"

"ம்ம்ம்.. சரிங்க.. பாத்துக்கங்க அவளை.. நான் கெளம்புறேன்..!!"

"ம்ம்.. போயிட்டு வாங்க..!!"

சொல்லிவிட்டு அசோக் புன்னகைக்க, அஞ்சு காரை நோக்கி நடந்தாள். காரை நெருங்கியவள் கார்க்கதவை திறக்கப் போகும் முன்.. ஒருகணம் அப்படியே நின்று.. திரும்பி.. அசோக்கை பார்த்தாள்..!! அசோக் எதுவும் புரியாமல் 'என்ன..??' என்பது போல அவளை பார்த்தான். இப்போது அஞ்சு தயங்கி தயங்கி சொன்னாள்.

"அ..அப்போ.. மேட்ச் பாக்குறப்போ.. திவ்யாவை ல..லவ் பண்றதா.. சும்மா வெ..வெளையாட்டுக்கு சொன்னேன்னு சொன்னீங்களே..? நானும் அப்போ அப்படித்தான் நெனச்சேன்..!! ஆனா இப்போ.. எ..எனக்கு என்னவோ அப்படி தோணலை..!!"

சொன்னவள் அதன்பிறகு ஒரு நொடி கூட காத்திருக்கவில்லை. கதவை திறந்து காருக்குள் நுழைந்தாள். ஸ்டார்ட் செய்து சர்ரென பறந்தாள். அசோக் திகைத்துப் போனவனாய் கொஞ்ச நேரம் அங்கேயே நின்றிருந்தான்.



அத்தியாயம் 20

அசோக் காலை கட் செய்தான். செல்போனை பாக்கெட்டில் திணித்துக் கொண்டான். கதவு திறந்து வீட்டுக்குள் நுழைந்தான். திவ்யாவின் அறையை நோக்கி நடந்தான். அறைக்குள் நுழைந்தவன் சற்றே ஆச்சரியமானான். சற்று முன்பு வரை அசந்து தூங்கிக்கொண்டிருந்த திவ்யா, இப்போது எழுந்து படுக்கையில் அமர்ந்திருந்தாள். அசோக் உள்ளே நுழைந்ததும் சற்றே எரிச்சலாக கேட்டாள்.

"எங்கடா போயிட்ட என்னை விட்டுட்டு..?"

"நீ தூங்கிட்டு இருந்த திவ்யா.. அதான் உன்னை டிஸ்டர்ப் பண்ண வேணாமேன்னு.. வெளில போய் ஃபோன் பேசிட்டு வந்தேன்..!!"

"ஓ.. ஃபோனா..? நானும் இப்போத்தான் ஒரு கால் பேசிட்டு.. ஃபோனை கீழ வச்சேன்..!! ஆமாம்.. யாரு உனக்கு கால் பண்ணினா..?"


"யாரும் பண்ணலை.. நான்தான் பண்ணினேன்.. ஊருக்கு..!!"

"ம்ம்.. என்ன சொன்ன..?"

"ஃபுல்லா சொல்லலை.. மேலோட்டமா சொன்னேன்.. பயப்படுறதுக்கு ஒன்னும் இல்லை.. திவ்யா இன்னைக்கு வரமாட்டா.. இன்னைக்கு ஒருநாள் நான் அவளை பாத்துக்குறேன்.. நாளைக்கு நைட்டு ஊருக்கு அனுப்பி வச்சிர்றேன்னு சொன்னேன்..!!"

"ம்ம்.. அவங்க என்ன என்ன சொன்னாங்க..?"

"ஒன்னும் சொல்லலை.. அதான் நான் இருக்கேன்ல.. நான் பாத்துப்பேன்னு நெனச்சிருப்பாங்க..!! அதுசரி.. உனக்கு யார் கால் பண்ணினது..?"

"யாரும் பண்ணலை.. நான்தான் பண்ணினேன்.. திவாகருக்கு..!!"

"ஓ..!! என்ன சொன்னாரு..?"

"நல்லா திட்டினாரு..!!"

"திட்டினாரா..? எதுக்கு..?"

"ம்ம்ம்..?? 'இந்த எழவுக்குத்தான் ஸ்போர்ட்ஸ்லாம் வேணாம்னு சொன்னேன்.. நான் சொல்ல சொல்ல கேட்காம பேஸ்கட்பால் பேஸ்கட்பால்ன்னு பொலம்பினல.. உனக்கு இதுவும் வேணும்.. இன்னமும் வேணும்..' அப்டின்னார்..!!"

"ஓ.."

"ப்ச்.. அவர்கிட்ட பேசினா.. ஆறுதலா இருக்கும்னு கால் பண்ணினேன்.. அவர் என்னடான்னா..? போ அசோக்.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..!!"

வருத்தமாக சொன்ன திவ்யா அருகில் அமர்ந்திருந்த அசோக்கின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள். அசோக் அவளுடைய கூந்தலை இதமாக வருடிக் கொடுத்தான். இப்போது அவன் மனதுக்குள் திவாகரின் மீது ஒரு இனம்புரியாத வெறுப்பு பரவ ஆரம்பித்தது. 'ச்சே.. என்ன மாதிரி காதலன் இவன்..? காதலி காயம்பட்டு கிடக்கையில்.. அவளுக்காக கண்ணீர் சிந்தாவிட்டால் கூட பரவாயில்லை.. காரண காரியங்கள் ஆராய்ச்சி செய்து.. அந்த காயத்தை மேலும் பெரிது படுத்தினால் எப்படி..??'. அசோக்கிற்கு 'திவாகர் சரியில்லையோ..' என முதல்முறையாக ஒரு எண்ணம் ஓடியது. இப்போது அசோக் வருத்தமாக சொன்னான்.

"ச்சே..!! அவர் ஏன் இப்படி இருக்குறாரு..?"

"தெரியலைடா.. சில நேரம் அவரை புரிஞ்சுக்கவே முடியலை..!!"

"திவ்யா.."

"ம்ம்ம்.."

"நா..நான்.. உன்கிட்ட நான் ஒன்னு சொல்லணும்.."

"என்ன..?" திவ்யா அசோக்கின் முகத்தை ஏறிட்டாள்.

"ஒரு வாரமா உன்கிட்ட இருந்து மறைச்சுட்டேன்.."

"எ..என்னடா சொல்ற..?" அவளுடைய குரலில் இப்போது ஒரு பதட்டம் ஏறியிருந்தது.

"திவாகருக்கு குடிப்பழக்கம் இருக்கு திவ்யா..!!"

"அசோக்..!!!" திவ்யாவின் அதிர்ச்சி அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

"ஆமாம் திவ்யா..!! நான் போன வாரம் அவரை ஒரு பார்ல மீட் பண்ணினேன்..!! அவர் அங்க நடந்துக்கிட்ட விதத்தை வச்சு பார்த்தா. அடிக்கடி அவர் அங்க வந்து போவார் மாதிரி தெரிஞ்சது..!!"

"நோநோ..!! இல்ல அசோக்.. நீ ஏதோ தப்பா சொல்ற.. அவருக்கு அந்த மாதிரி பழக்கம்லாம் இல்லை..!!"

"ப்ச்.. சரியாத்தான் சொல்றேன் திவ்யா.. அவரே 'ஐ ஆம் திவாகர்'னு எங்கிட்ட வந்து கைகுலுக்குனாரு.. நான்தான் என் பேரை அவர்கிட்ட தப்பா சொல்லிட்டு வந்தேன்..!!"

"நீ பேரை தப்பா சொன்னியா..? ஏன்..?"

"காரணமாத்தான்.. பின்னால எதுவும் பிரச்னை வர கூடாதுன்னுதான்..!!"

"என்னடா சொல்ற.. எனக்கு எதுவுமே புரியலை..!! அதனால என்ன பிரச்னை வரப் போகுது..?"

"பொறு.. புரியிற மாதிரியே சொல்றேன்..!! இங்க பாரு திவ்யா.. ட்ரிங்க்ஸ் சாப்பிடுறான்றதாலயே ஒருத்தனை கெட்டவன்னு நாம முடிவு பண்ணிட முடியாது..!! அவரை பார்ல வச்சு பார்த்தப்போ ஃபர்ஸ்ட் எனக்கும் ஷாக்கா இருந்தது..!! அப்புறம் கொஞ்சம் நிதானமா யோசிச்சேன்.. 'அவர் நல்லவராவே இருக்கலாம்.. உன்னை இழந்துடக் கூடாதுன்னு உன்கிட்ட அந்த உண்மையை மறைச்சிருக்கலாம்.. இப்போதைக்கு இதை தேவையில்லாம பெரிய விஷயமாக்க வேணாம்.. பின்னாடி தேவைப்பட்டா உன்கிட்ட சொல்லிக்கலாம்.. இல்லனா அந்த மேட்டரை அப்படியே விட்டுடலாம்..' அப்டின்னு தோணுச்சு..!! எப்படியும் நீ திவாகர்ட்ட என்னை பத்தி சொல்லிருப்ப.. என் பேர் அசோக்னு நான் அவர்கிட்ட சொல்லிருந்தா.. அவர் என் மேல இன்ட்ரஸ்ட் காட்டிருப்பாரு.. அது பின்னால பிரச்னையாக வாய்ப்பிருக்கு..!! அதைவிட நான் யாரோ ஒருத்தன் அப்டின்னு அவர் நெனைச்சுக்குறதுதான் நல்லதுன்னு தோணுச்சு.. அதான் என் பேரை மாத்தி சொன்னேன்..!! அவர் மிஞ்சி மிஞ்சி போனா ஒரு அஞ்சு நிமிஷம் என் எதிர உக்காந்திருப்பாரு.. அதுவும் டிம் லைட்ல..!! ஸோ.. அவர் என்னை ப்யூச்சர்ல ஞாபகம் வச்சுக்க சான்சே இல்லை..!!"

"ம்ம்.. இவ்வளவு நடந்திருக்கு.. எல்லாம் என்கிட்டே இருந்து மறைச்சுட்டேல..?" திவ்யாவுடைய குரலில் அதிர்ச்சியும் ஆத்திரமும் சரிசமமாக கலந்திருந்தது.

"ப்ச்.. எல்லாம் உன் நல்லதுக்காகத்தான் திவ்யா..!!"

"போடா..!! இப்போ மட்டும் எதுக்கு வந்து சொன்னியாம்..?"

"அவர் உன்னை திட்டுனார்னு சொன்னதும் எனக்கு மனசு கேக்கலை.. உன்கிட்ட சொல்லிர்றது நல்லதுன்னு தோணுச்சு..!! அவர் சரியில்லையோன்னு எனக்கு ஒரு டவுட் வர ஆரம்பிச்சிடுச்சு.. அதான் சொல்லிட்டேன்..!!"

"உனக்கு டவுட் மட்டுந்தானா..? எனக்கு கன்ஃபார்ம்டே ஆயிடுச்சு.. அவர் சரியில்லைன்னு..!! எப்படி நடிச்சு என்னை ஏமாத்திட்டான்.. பொறுக்கி ராஸ்கல்.. அவனை என்ன பண்றேன் பாரு..!!"

ஆத்திரமாக சொன்ன திவ்யா, அவசரமாக செல்போனை எடுத்தாள். திவாகரின் நம்பருக்கு டயல் செய்ய முயன்றாள். அசோக் அவளை தடுத்து, அவள் கையிலிருந்து அந்த செல்போனை பறித்தான்.

"ஐயோ.. என்ன பண்ற திவ்யா நீ..? பொறுமையா இரு.. அவசரப்படாத..!!"

"இன்னும் எதுக்குடா என்னை பொறுமையா இருக்க சொல்ற..?"

"டென்ஷனாகாம நான் சொல்றதை கொஞ்சம் கேளு.. அவர் உன் மேல இருக்குற காதலால கூட அதை மறைச்சிருக்கலாம்.. இப்போதைக்கு இதை ஒரு பெரிய விஷயமாக்காத..!!"

"இப்போ என்னை என்னதான் பண்ண சொல்ற..?"

"அவர்கிட்ட இந்த மேட்டர் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத.. எப்பவும் போல பேசு.. ஆனா முன்னாடி விட இனிமே ரொம்ப கேர்ஃபுல்லா இரு..!! அவரைப் பத்தி இன்னும் நல்லா தெரிஞ்சுக்கோ.. அவர் உன் மேல வச்சிருக்குற லவ் உண்மைதானான்னு உறுதி பண்ணிக்கோ..!! அது உண்மையா இருந்தா.. இதெல்லாம் ஒன்னும் பெரிய மேட்டரே இல்லை..!! என்ன.. புரியுதா..??"

"ம்ம்.. புரியுது.. புரியுது..!!"

"அதை ஏன் மூஞ்சியை உம்முன்னு வச்சுக்கிட்டு சொல்ற.. கொஞ்சம் சிரிச்சுக்கிட்டேதான் சொல்லேன்.."

"ஈஈஈஈ...!! புரியுது.. போதுமா..?"

"இல்லையே.. உன் வாய்ஸ்ல தெம்பே இல்லையே..?"

"ம்ம்ம்..? அதுக்கு காரணம் உடம்புல தெம்பு இல்லை.. அதான்..!!"

"என்னடி சொல்ற..?"

"பசிக்குதுடா..!!"

"அச்சச்சோ.. திவ்யா குட்டிக்கு பசிச்சிடுச்சா..? ஓகே ஓகே.. ஒரு டென் மினிட்ஸ் வெயிட் பண்ணு.. ஐயா சாப்பாட்டோட வர்றேன்..!!"

"பத்து நிமிஷத்துல எப்படி ஹோட்டலுக்கு போயிட்டு வருவ..?"

"ஹோட்டலுக்கா..?? தி கிரேட் குக் அசோக் இருக்குறப்போ.. ஹோட்டல் எதுக்கு..?"

"நீ சமைக்க போறியா.. அதெல்லாம் தெரியுமா உனக்கு..?"

"என்ன இப்படி கேட்டுட்ட..? பிரம்மாதமா சமைப்பேன்..!!"

"போடா.. வெளையாடாத..!!"

"வெளையாடலை திவ்யா.. ஆறுமாசம் நான் பெங்களூர்ல பிரண்ட்சோட தங்கிருந்தேன்ல.. அப்போ கொஞ்சம் கத்துக்கிட்டேன்.."

"கத்துக்கிட்ட கருமத்தை என்னை வச்சு ட்ரை பண்ணி பாக்க போறியா..?"

"ஹேய்.. ஓவரா பேசாதடி.. எது பேசுறதா இருந்தாலும்.. நான் சமைச்சதை சாப்பிட்டுட்டு.. அப்புறம் பேசு..!!"

"சரி சரி பார்க்கலாம்.. டென் மினிட்ஸ்தான கேட்ட..? யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்..!!" சொல்லிவிட்டு திவ்யா மணிக்கட்டை திருப்பி நேரம் பார்க்க,

"அடிப்பாவி.. பத்து நிமிஷம்னா.. கரெக்டா பத்தே நிமிஷம்தானா..? கொஞ்சம் முன்ன பின்ன ஆகும்..!!"

"ஓகே.. டேக் யுவர் ஓன் டைம்..!! அதுசரி.. என்ன சமைக்க போற..?"

"வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ்..!! ஐயாவோட ஸ்பெஷல்..!! உனக்கு ஓகேவா..?"

"எனக்கு டபுள் ஓகே.. அசத்து..!!"

அசோக் முழுதாக நாற்பது நிமிடங்கள் எடுத்துக் கொண்டான். அரிசியை கழுவி குக்கரில் போட்டு.. ஆனியன், சில்லி, கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் கட் செய்து.. பட்டாணி உறித்து.. பின்பு எல்லாவற்றையும் சட்டியில் போட்டு.. உப்பு, மிளகு, சோயா சாஸ் ஊற்றி கிளறி..!! அவன் பரபரப்பாக சமைப்பதை, திவ்யா கைகள் கட்டி ஓரமாக நின்று வேடிக்கை பார்த்து ரசித்தாள்..!! சமைத்து முடித்து இரண்டு ப்ளேட்களில் ஆவி பறக்க ஃப்ரைட் ரைஸை எடுத்து வந்தான் அசோக்..!!

"ஃப்ரைட் ரைஸ் ரெடி..!!"

"வாவ்..!! ஸ்மெல்லே சூப்பரா இருக்குடா அசோக்..!!" சந்தோஷ கூச்சலிட்டாள் திவ்யா.

"சாப்பிட்டு பாரு.. டேஸ்ட்டும் சூப்பரா இருக்கும்..!!"

சாப்பிட்டார்கள்..!! ஆனால் வாசனை இருந்த அளவுக்கு ருசி ஒன்றும் பிரம்மாதமாக இல்லை..!! இரண்டு வாய் அள்ளி வைத்ததுமே அசோக் அதை உணர்ந்து கொண்டான்..!! முகத்தை சுளித்தவாறே திவ்யாவை நிமிர்ந்து பார்க்க, அவளோ..

"நல்லா சமைச்சிருக்குறடா.. செம டேஸ்ட்.. உனக்கு வரப்போறவ ரொம்ப கொடுத்து வச்சவ..!!"

என உற்சாகமாக சொல்லிக்கொண்டே கைநிறைய சாதத்தை அள்ளி வாயில் திணித்துக் கொண்டாள். பசியில் இருந்ததால் அப்படி சொன்னாளோ.. அசோக் மீதிருந்த பாசத்தினால் அப்படி சொன்னாளோ.. அதைக் கேட்டபோது, அசோக் அப்படியே உருகிப் போனான்..!! தன் கையால் சமைத்த உணவை, தன் காதல் தேவதை ஆசையாக சாப்பிடுவதையே கண்கொட்டாமல் பார்த்து ரசித்தவாறு.. அவனும் அமைதியாக உண்ண ஆரம்பித்தான்..!! இப்போது ஏனோ.. சாப்பாடு ருசியாக மாறிவிட்டது போல அவனுக்கு தோன்றியது..!!

சாப்பிட்டு முடித்ததும் அசோக்கே எல்லா பாத்திரங்களையும் கழுவி அடுக்கி வைத்தான். அப்புறம் புகை பிடிக்க வேண்டும் போல தோன்ற, பால்கனிக்கு சென்று ஒரு ஒரு சிகரெட் பற்றவைத்துக் கொண்டு அமைதியாக புகை விட்டான். திவ்யாவும் அவனுக்கருகே வந்து நின்று கொண்டாள். அவனுடைய வலது கையை கட்டிக்கொண்டு, அவனது தோளில் ஆதரவாய் சாய்ந்து கொண்டாள். அசோக் மெல்ல ஆரம்பித்தான்.

"நாளைக்கு காலைல கொஞ்சம் சீக்கிரம் எந்திரிச்சுடலாம் திவ்யா.."

"ஏன்..?"

"ஏனா..? உன் கோச் சொன்னது ஞாபகம் இல்லை.. காலைல போய் உனக்கு ஒரு ஸ்கேன் எடுத்து பாத்துடலாம்..!!"

"ஐயோ.. அதுலாம் ஒன்னும் வேணாம் அசோக்.. எனக்கு ஒன்னும் இல்ல..!!"

"என்ன வெளையாடுறியா..? அதுலாம் முடியாது.. காலைல கண்டிப்பா ஹாஸ்பிட்டல் போறோம்..!! போயிட்டு.. அப்படியே உனக்கு ஊருக்கு போறதுக்கு டிக்கெட்டும் புக் பண்ணிடலாம்..!!"

"....................."

"என்ன சத்தத்தையே காணோம்..?"

"நான் வரலை..!!"

"உதை வாங்குவ..!!"

"சரி வர்றேன்.. ஆனா.. ஒரு கண்டிஷன்..!!"

"என்ன..?"

"நீயும் என் கூட ஊருக்கு வா.."

"ஊருக்கா..??? எனக்குத்தான் கம்பெனில லீவு குடுக்கலையே..?"

"லீவுன்றது குடுக்குறது இல்ல அசோக்.. எடுக்குறது..!!"

"பன்ச் டயலாக்லாம் பட்டாசாத்தான் இருக்குது.. ஆனா வேலைக்காகாது..!!"

"ஏன்..?"

"ரிலீஸ் டைம் திவ்யா.. நெறைய வேலை இருக்கு.. நான் போகலைன்னா அங்க ஒரு வேலையும் நடக்காது..!!"

"அதெல்லாம் சும்மா.. நடக்கனும்னு விதி இருந்தா எல்லாம் நடக்கும்..!!"

"என்ன சொல்ற நீ..?"

"இப்போ ஃப்ரைட் ரைஸ் சாப்பிட்டேல..? திடீர்னு உனக்கு வாந்தி பேதி புடுங்கிடுச்சுனு வச்சுக்கோ.. என்ன பண்ணுவாங்க உன் ஆபீஸ்ல..?"

"அடிப்பாதகத்தி..!! ஏண்டி உனக்கு இப்படி ஒரு நல்ல எண்ணம்..??"

"ப்ச்.. கேட்டதுக்கு பதில் சொல்லு..!!"

"அதுக்கு ஒன்னும் செய்ய முடியாது.. அதுலாம் விதி..!!"

"அதைத்தான் நானும் சொன்னேன்..!!"

"ம்ம்.. நல்லாத்தான் பேசுற.. ஆனா.. நீ நெனைக்கிற மாதிரி.. லீவ் போட்டுட்டு ஓடுறது அவ்ளோ ஈசி இல்லை..!!"

"ஓகே.. நான் ஒரு ஈசியான அட்வைஸ் சொல்றேன் கேக்குறியா..?"

"என்ன..?"

"உன் செல்போனை பார்ட் பார்ட்டா கழட்டி போட்டுடு..!! நாலு நாளைக்கு அப்படியே கெடக்கட்டும்..!! உனக்கு ஒரு தொந்தரவும் இருக்காது..!!"

"நல்லாத்தான் இருக்கு யோசனை.. ஆனா நாலு நாளுக்கப்புறம்.. கழட்டுனதை எல்லாம் திரும்ப மாட்டுறப்போ.. எங்கடா போய் தொலைஞ்சன்னு ஆபீஸ்ல காரணம் கேட்பாங்களே.. என்ன சொல்றது..?"

"நாலு நாள் நல்லா மூக்கு முட்ட தின்னுட்டு.. வீட்டுல தெண்டத்துக்கு தூங்கிட்டு இருப்பேல..? என்ன காரணம் சொல்லலாம்னு அப்போ மல்லாக்கப்படுத்து நல்லா யோசி..!!"

"ஹாஹா.!!. உனக்கு... நல்லா கொழுப்பு வச்சுப் போச்சுடி..!!"

சிகரெட்டை சுண்டி எறிந்துவிட்டு, அசோக் திவ்யாவை அடிப்பது போல விளையாட்டாக விரட்ட, அவளும் ஓடினாள். ஓடியவள் இரண்டே எட்டுகளில் 'ஆஆஆஆ..!!' என்று அலறியவாறு அப்படியே நின்றாள். வலியை தாங்க முடியாமல் அவள் முகம் சுருங்கிக்கொள்ள, குனிந்து தனது வலது கையால் முழங்காலை பற்றிக் கொண்டு அப்படியே அமர்ந்தாள். அசோக் பதறிப் போனான்.

"ஹேய்.. திவ்யா.. என்னாச்சு..?"

"கீழ விழுந்தப்போ கால்லயும் அடி பட்டுடுச்சுடா.. அப்போ தெரியலை.. இப்போ நல்லா வலிக்குது..!!"

"அச்சச்சோ.. எங்க காட்டு.."

திவ்யா துணியை மேலேற்றி தன் முழங்காலை காட்ட.. அந்த இடம் கன்றிப்போய் வீங்கியிருந்தது..!!

"சரி வா.. நான் மூவ் போட்டு விடுறேன்.. காலைல சரியாயிடும்..!!"

"ம்ம்.."

அடுத்த இரண்டாவது நிமிடம், திவ்யா மெத்தையில் கால் நீட்டி படுத்திருக்க, அசோக் அவளுடைய வலது காலை எடுத்து தன் மடிமீது வைத்திருந்தான். வீங்கியிருந்த பகுதியில் மூவ் பிதுக்கி தடவி, கவனமாக மசாஜ் செய்துவிட்டான். அசோக்கின் கவனம் திவ்யாவின் காலிலேயே இருக்க, திவ்யாவின் கவனமோ அசோக்கின் முகத்தில் படிந்திருந்தது. அன்று மாலை அவளுக்கு அடிப்பட்டதில் இருந்து நடந்த சம்பவங்கள் வரிசையாக அவள் மனதுக்குள் வந்து போயின.

'இவனுக்குத்தான் என் மீது எவ்வளவு அன்பு.. எவ்வளவு அக்கறை..? ஒரு அன்னை மாதிரி என்னை எப்படி கவனித்துக் கொள்கிறான்..? எனக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்று எப்படி இவனால் மட்டும் சரியாக புரிந்து கொள்ள முடிகிறது..? விவரம் தெரியாத பிஞ்சு வயதில் இருந்தே, தினம் தினம் இவன் எனக்கு புரிந்த நன்மைகள்தான் எத்தனை..? எனக்கு அள்ளிக் கொடுத்த சந்தோஷங்கள்தான் எத்தனை எத்தனை..? இதற்கெல்லாம் நான் எப்படி கைமாறு செய்யப் போகிறேன்..? எனைப்படைத்த இறைவன் கூட என் மீது இவ்வளவு அன்பு வைத்திருப்பானா..?'

"ஹேய்.. என்னாச்சு.." அசோக் நிமிர்ந்து பார்த்து கேட்க,

"ஒ..ஒண்ணுல்ல.." திவ்யா கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

"அப்புறம் ஏன் அழற..?"

"நீயும் என்கூட ஊருக்கு வாடா.. ப்ளீஸ்...!!"

"அட லூசு.. இதுக்காகவா அழற..? நான் ஊருக்கு வரணும்.. அவ்ளோதான..? கண்டிப்பா வர்றேன்..!! போதுமா..?"

"தேங்க்ஸ்டா..!!"

"சரி.. மனசுல எதையும் போட்டு குழப்பிக்காம.. நிம்மதியா படுத்து தூங்கு.. நான் உனக்கு கால் புடிச்சு விடுறேன்..!!"

"ம்ம்ம்.."

திவ்யா படுத்துக்கொண்டாள். தன் கால்கள் இரண்டையும் இதமாக பிடித்துவிட்டு கொண்டிருந்த அசோக்கின் முகத்தையே அன்போடு பார்த்துக் கொண்டு, கொஞ்ச நேரத்திலேயே சுகமாக உறங்கிப் போனாள். அவள் உறங்கியதும், அசோக் போர்வை எடுத்து அவளுடைய கழுத்து வரை போர்த்திவிட்டான். இரவு விளக்கை மட்டும் எரியவிட்டு மிச்ச விளக்குகளை அணைத்தான். திவ்யாவுக்கு அருகில் அமர்ந்து கொண்டான். இரவு விளக்கின் மங்கலான வெளிச்சத்திலும் பொலிவுடன் பிரகாசித்த திவ்யாவின் அழகு முகத்தை பார்த்துக்கொண்டே, நெடுநேரம் அப்படியே அமர்ந்திருந்தான்.



அத்தியாயம் 21

'வேற்காடு வாழ்ந்திருக்கும்..
ஆதி பராசக்தி அவள்..!!
வேல்முருகன் அன்னை அவள்..
வேண்டும் வரம் தந்திடுவாள்..!!
பாற்கடலாய் அவள் கருணை..
பெருகிடவே செய்திடுவாள்..!!
பக்தர்களை கண்ணிமை போல்
எப்போதும் காத்திடுவாள்..!!'

ஒலிப்பெருக்கியில் LR ஈஸ்வரி தன் கணீர் குரலில் அம்மனின் புகழ் பாடிக்கொண்டிருந்தார்..!! புளியங்குளம் விழாக்கோலம் பூண்டிருந்தது..!! எந்தப்பக்கம் திரும்பினாலும் முகத்தில் சந்தோஷமும் புன்னகையுமாய் அந்த ஊர் வெள்ளந்தி மக்கள்..!! சிறுவர் சிறுமியர் ஆரஞ்சு கலரில் ஐந்து ரூபாய் குளிர் கண்ணாடியை வாங்கி மாட்டிக்கொண்டு, அங்கும் இங்கும் அலைந்து திரிந்தார்கள்..!! ஆண்கள் கால்சட்டை தெரியுமாறு வெள்ளை வேஷ்டியை ஏற்றிக் கட்டிக்கொண்டு, பீடி புகைத்தார்கள்.. கடைகளில் நின்று சர்பத் குடித்தார்கள்..!! பெண்கள் கோவிலுக்கு முன்பாக கூடியிருந்தார்கள்.. பரந்து விரிந்திருந்த மைதானத்தில், மூன்று கற்கள் கொண்டு அமைக்கப்பட்டிருந்த இன்ஸ்டன்ட் அடுப்புகளில்.. விறகு செருகிக் கொண்டிருந்தனர்.. எரியூட்டினர்.. பொங்கல் பானையில் குழவையிட்டபடியே அரிசியிட்டனர்..!!

அசோக்கின் குடும்பமும், திவ்யாவின் குடும்பமும் அருகருகே பொங்கலிட தயாராகிக் கொண்டிருந்தார்கள். அசோக் குடும்பத்தில் அவனுடைய அம்மாவும், திவ்யாவின் குடும்பத்தில் சித்ராவும் முன்னின்று எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருக்க, அசோக்கின் அப்பா, திவ்யாவின் அப்பா, கார்த்திக் மூவரும் ஏதோ ஒரு பிரச்னை பற்றி சூடாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அசோக் வெள்ளை நிற வேஷ்டி சட்டையில் இருந்தான். திவ்யா பாவாடை தாவணியில் பாந்தமாக நின்றிருந்தாள். இருவரும் ஏதோ சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள். 'அம்மனுக்கு பொங்கல் வைக்க நேரமாகிவிட்டபடியால்.. ஆங்காங்கே இருக்கும் ஊர் பொதுமக்கள்..' என்று நிமிடத்துக்கு ஒருமுறை, ஒரு பையன் ஒலிப்பெருக்கியில் அறிவித்துக் கொண்டிருந்தான்.


"என்ன இஞ்சினியர் மச்சான்.. நல்லாருக்கீகளா..?" அசோக்கை கடந்து சென்ற வளர்மதி என்ற ஒரு உறவுக்காரப்பெண் கேட்டாள்.

"ம்ம்.. நல்லாருக்கேன் வளர் மதினி.. நீங்க எப்படி இருக்கீக..?"

"எங்களுக்கென்ன.. ஏதோ இருக்கோம்..!! என்னைக்கு வந்தீக ஊர்ல இருந்து..?"

"நேத்து காலைல மதினி.."

"சரி சரி.. ரொம்ப நேரம் வெயில்ல நிக்காதீக.. அப்புறம் வாடி வதங்கிப்போய்.. இஞ்சினியர் மச்சான், சுக்குனியர் மச்சானாயிட போறீக..!!" அவள் கிண்டலாக சொல்ல,

"ஹாஹா..!! நாலு புள்ளை பெத்தப்புறமும் நக்கலு மட்டும் உங்களுக்கு கொறையலையே மதினி.. உங்களை எல்லாம் கட்டிக்கிட்டு எங்க அண்ணன் எப்டித்தான் குடும்பம் நடத்துறாரோ..?"

அசோக் சொல்லிவிட்டு சிரித்தான். இப்போது அசோக்கின் அம்மா, அவனுக்கு சப்போர்ட்டாக வந்தாள்.

"அடிப்போடி.. கிறுக்கச்சி மவளே..!! எம்புள்ளைக்கு என்னடி.. எவ்வளவு வெயில் அடிச்சாலும்.. தங்கக்கட்டி மாதிரி சொலிப்பான்..!!"

"ஆத்தாடி..!! தங்கக்கட்டியாம்ல இவுக புள்ள..? தங்கக்கட்டியா இருந்தா ரெண்டு தொங்கட்டமா செஞ்சு காதுல மாட்டிக்கங்கத்தை..!!" வளர்மதி தூரமாக சென்று நின்று, கத்திவிட்டு போனாள்.

உலை கொதித்ததும், அசோக்கின் அம்மா குழவையிட்டபடியே பொங்கல் பானையில் பச்சரிசியை கொட்டினாள். அதனுடன் வெல்லம், தேங்காய் துருவல், நெய் சேர்த்து கிளறினாள். அந்தப்பக்கம் சித்ரா வைத்த உலையும் இப்போது கொதிக்க ஆரம்பித்தது. அரிசியிட அவள் தயாராகும்போது, அவளுடைய மாமனார் தடுத்தார்.

"இரும்மா.. திவ்யாவை எங்க.. ஆளைக்காணோம்..?"

உடனேதான் அசோக் அருகில் திரும்பி பார்த்தான். அவனோடு சேர்ந்து அனைவரும் அவளை தேடினார்கள். திவ்யாவை எங்கும் காணவில்லை..!!

"இங்கதான மாமா இருந்தா.. எங்க போனான்னு தெரியலையே..?" அசோக் குழப்பமாக சொன்னான்.

"அவ எங்க போனாளோ..? நேரம் ஆயிட்டு இருக்கு மாமா..!!" சித்ரா அவசரப்படுத்த,

"இரும்மா.. அவ வந்து அரிசியை போடட்டும்..!! அசோக்.. நீ போய்.. அவ எங்க போயிட்டான்னு கொஞ்சம் தேடிப்பாரேன்..!!"

அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சித்ரா தன் தம்பிக்கு அருகில் வந்து நின்று கொண்டாள். அவனுக்கு மட்டும் கேட்குமாறு சன்னமான குரலில் பொருமினாள்.

"ம்க்கும்.. காலைல இருந்து எல்லா வேலையும் பாத்தது நானு.. அரிசி போடுறது மட்டும் அவளா..? என்னமாத்தான் வருது..!! அப்படி என்ன பாசமோ.. ஆடுகாலி பொண்ணு மேல..!!"

"ப்ச்.. சும்மா பொலம்பிட்டு இருக்காதக்கா..!!" அக்காவிடம் முணுமுணுத்த அசோக்,

"இருங்க மாமா.. நான் போய் பாத்துட்டு வர்றேன்..!!"

என்று திவ்யாவின் அப்பாவிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான். கோயிலுக்கு முன்பு ஆங்காங்கே போடப்பட்டிருந்த உடனடி கடைகளில் தேடிப்பார்த்தான்.. இல்லை..!! கோவிலுக்கு உள்ளே சென்று பார்த்தான்.. இல்லை..!! கோவிலுக்கு பின்புறம்.. அங்கேயும் இல்லை..!! 'எங்கே சென்றிருப்பாள்..?? கால் செய்து பார்க்கலாம் என்றால்.. இவள் பேச்சை கேட்டு செல்போனை வேறு அக்கு அக்காக கழட்டிப் போட்டுவிட்டேன்..?' அசோக் குழம்பினான்.

அப்போதுதான்.. எதேச்சையாக பார்வையை தூரமாக வீசியவனுக்கு.. தனியாக நின்றிருந்த அந்த வேப்ப மரமும், அதன் கீழே நின்றுகொண்டிருந்த திவ்யாவும் கண்ணில் தென்பட்டார்கள்..!! 'இவள் எதற்கு அங்கே சென்று தனியாக நின்று கொண்டிருக்கிறாள்..?' அசோக்கிற்கு விளங்கவில்லை. அந்த வேப்ப மரத்தை நோக்கி மெல்ல நடையை போட்டான். நெருங்கினான்..!!

திவ்யா அங்கே பதட்டமும், நடுக்கமுமாக கைகளில் வைத்திருந்த செல்போனின் பட்டன்களை அமுக்கிக் கொண்டிருந்தாள். அவளுடைய முகமெல்லாம் அழுது வடிந்து கொண்டிருந்தது. உதடுகள் படபடவென துடித்துக் கொண்டிருந்தன. கண்களில் ஒரு அதீத பயம்..!! அசோக்கை பார்த்ததும்,

"அசோக்..!!!!" என்று அலறிக்கொண்டே ஓடிவந்து அவனுடைய மார்பில் சாய்ந்து கொண்டாள். அசோக்கிற்கு எதுவும் புரியவில்லை.

"ஏய்.. திவ்யா.. என்னாச்சு.. இங்க என்ன பண்ணிட்டு இருக்குற..?"

"நான் தப்பு பண்ணிட்டேன்டா அசோக்.. தப்பு பண்ணிட்டேன்.."

"என்னம்மா சொல்ற..? எனக்கு எதுவும் புரியலை..!!"

"நீ சொல்ல சொல்ல கேட்காம.. நேத்து ஃபோன் பண்ணி.. திவாகர்ட்ட நல்லா சண்டை போட்டுட்டேன்..!! 'உங்களுக்கு ட்ரிங்க்ஸ் பழக்கம் இருக்குறதை ஏன் எங்கிட்ட இருந்து மறைச்சீங்க.. ஏன் என்னை பொய் சொல்லி ஏமாத்துனீங்க.. இனிமே என்கூட பேசவே செய்யாதீங்க'ன்னு.. நல்லா கன்னாபின்னான்னு திட்டிவிட்டுட்டேன்..!!"

"ஐயோ.. ஏன் திவ்யா அப்படி செஞ்ச..? நான் தான் அவ்ளோ தூரம் சொன்னேன்ல..? அவர் கூட எப்போவும் போல பேசுன்னு..!!"

"என்னால மனசுல உறுத்தலை வச்சுக்கிட்டு.. வெளில சிரிச்சு அவர்கிட்ட பேச முடியலை அசோக்..!! என்னை பொய் சொல்லி ஏமாத்திட்டார்னு ஆத்திரம்.. அதான்..!!"

"சரி விடு..!! ஆனா.. அதனால இப்போ என்ன பிரச்னை..?"

"கொஞ்ச நேரம் முன்னாடி அவர்கிட்ட இருந்து எனக்கு ஒரு மெசேஜ் வந்தது..!!"

"என்னன்னு..??"

"ட்ரிங்க்ஸ்தான குடிக்க கூடாது.. பாய்சன் குடிக்கலாம்லன்னு..!!"

"ஷிட்..!!" அசோக் தலையில் கைவைத்துக் கொண்டான்.

"அவர் நம்பருக்கு கால் பண்ணினா.. எடுக்கவே மாட்டேன்றார்..!! எனக்கு ரொம்ப பயமா இருக்கு அசோக்..!!" திவ்யாவுடைய பதற்றம் அவள் குரலில் அப்பட்டமாக தெரிந்தது.

"எங்க குடு.. நான் ட்ரை பண்றேன்..!!" அசோக் கேட்க, திவ்யா செல்போனை அவனிடம் நீட்டினாள்.

"ப்ளீஸ் அசோக்.. எனக்கு ஹெல்ப் பண்ணுடா..!! அவருக்கு ஏதாவது ஆச்சுனா.. அந்த குற்ற உணர்ச்சியே என்னை கொன்னு போட்டுடும்.. அப்புறம் நானும் உயிரோடவே இருக்க மாட்டேன்..!!"

"ப்ச்..!! பைத்தியம் மாதிரி உளறாத திவ்யா.. அதுலாம் அவருக்கு ஒன்னும் ஆகாது..!!"

அசோக் கால் லாக்ஸ் எடுத்து, திவாகரின் நம்பருக்கு மீண்டும் டயல் செய்தான். முதல் தடவை கால் பிக்கப் செய்யப்படவில்லை. இரண்டாம் முறை பிக்கப் செய்யப்பட்டது. அசோக் ஹலோ சொல்வதற்கு முன்பே, அடுத்த முனையில் திவாகரின் குரல் மிக மிக உருக்கமாக ஒலித்தது.

"உயிரோடதான் இருக்கேன் திவ்யா.. இன்னும் சாகலை.. ஆனா.. இன்னும் கொஞ்ச நேரத்துல போயிடுவேன்.. இன்னொரு கைல பாய்சன் பாட்டில் வச்சுக்கிட்டுத்தான் இப்போ பேசிட்டு இருக்கேன்..!!"

"ஹலோ.. தி..திவாகர்.. நான் திவ்யா இல்லை.. அ..அசோக் பேசுறேன்..!!"

அவ்வளவுதான்..!! அதற்குமுன் உருக்கமாக ஒலித்த திவாகரின் குரல் இப்போது பட்டென்று கிண்டலாக.. ஒருமாதிரி எகத்தாளமாக மாறியது..!!

"அசோக்கா..?? திவ்யாவோட மொபைலை வச்சுக்கிட்டு நீங்க என்ன ஸார் பண்றீங்க...??"

"திவ்யா இங்க பக்கத்துலதான் இருக்குறா திவாகர்.. நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்..!!"

"எனக்கு உங்கிட்ட பேச விருப்பம் இல்லை அசோக் தம்பி.. ஃபோனை திவ்யாட்ட குடு..!!"

"ப்ளீஸ் திவாகர்.. ஒரே ஒரு நிமிஷம்..!!"

"அவகிட்ட குடு..!!"

"அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீங்க திவாகர்.. கொஞ்சம் பொறுமையா.."

"ஹாஹா.. இங்கபாரு.. இந்த அட்வைஸ் கொடுக்குற வேலை எல்லாம் திவ்யாவோட நிறுத்திக்கோ.. நான் என்ன பண்றேன்னு எனக்கு நல்லா தெரியும்..!! ஃபோனை அவகிட்ட குடு..!! குடுடா..!!" திவாகர் கத்தினான்.

அசோக் காதிலிருந்த செல்போனை கையில் எடுத்து பார்த்தான். அவனுக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது. 'ஆரம்பத்தில் உருக்கமாக பேசியவன், உடனடியாய் ஏன் எகத்தாளமாக பேசுகிறான்..?? சாவின் விளிம்பில் இருப்பவன் ஏன் திவ்யாவிடம்தான் பேசுவேன் என்று அடம்பிடிக்கிறான்..?? உயிரையே விட முடிவெடுத்தவனுக்கு இவ்வளவு கோபம் எங்கிருந்து வரும்..?? சாகப் போகிறவன் சத்தம் போடாமால் மாத்திரைகளை முழுங்குவானா.. இல்லை.. ஊருக்கெல்லாம் மெசேஜ் அனுப்பி ஸீன் போடுவானா..??'

அசோக்கிற்கு அந்த மாதிரி ஒரு எண்ணம் வந்ததுமே, திவாகர் பொய்யாக நடிக்கிறான் என்று தோன்றியது. சாகப்போவதாக பொய் சொல்லி, திவ்யாவை தன்வசம் இழுக்க முயலுகிறான் என்று தோன்றியது. செல்போனை திவ்யாவிடம் கொடுக்காமல் பட்டென காலை கட் செய்தான். ஆனால்.. திவ்யாவோ பதற்றம் கொஞ்சமும் குறையாதவளாய் கேட்டாள்.

"எ..என்ன அசோக்.. என்னாச்சு..?"

"ஒன்னும் ஆகலை.. விடு.."

"அவர் என்ன சொன்னார்..?"

"அவர் ஏதோ உளர்றாரு திவ்யா.. நீ வா..!!" என்று அவளுடைய புஜத்தை பற்றி இழுத்தான்.

"எங்க கூப்பிடுற என்னை..?"

"அங்க சாமிக்கு பொங்கல் வைக்க டைம் ஆச்சு.. எல்லாரும் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க..!!"

அசோக் சொல்ல, திவ்யா உச்சபட்ச கோவத்துக்கு உள்ளானாள். படக்கென்று அவனுடைய கையை உதறினாள்.

"கையை விடு அசோக்..!!! கையை விடு..!!!!!!! அங்க ஒருத்தன் சாகக் கெடக்குறான்.. சாமிக்கு பொங்கல் வைக்கிறதுதான் உனக்கு முக்கியமாப் போச்சா..??"

"ஐயோ.. திவ்யா.. அவர் சூசயிட்லாம் பண்ணிக்கிற ஆள் மாதிரி தெரியலை.. அவர் பேசுறதை வச்சுப் பார்த்தா.. அவர் சும்மா ஸீன் போடுற மாதிரி இருக்கு..!!"

"ஜஸ்ட் அவரோட வாய்ஸை மட்டும் வச்சு.. அவர் நடிக்கிறார்னு எப்படி நீ முடிவு பண்ணுற..? அவரைப் பத்தி உனக்கு புரியலை அசோக்..!!"

"அவரைப் பத்தி உனக்குத்தான் புரியலை திவ்யா.. அவர் உன்னை எமோஷனல் பிளாக்மெயில் பண்ண ட்ரை பண்றார்..!! அது உனக்கு புரியலை..!!"

"அவர் என்ன வேணா பண்ணிட்டு போட்டும்.. இது ஒரு உயிர் சம்பந்தப்பட்ட விஷயம்..!! சப்போஸ்.. அவர் உயிர் போச்சுனா.. உன்னால திருப்பி தர முடியுமா அசோக்..? திருப்பி தர முடியுமா..????" திவ்யா காட்டுத்தனமாய் கத்த, அசோக் ஸ்தம்பித்து போனான். அவனிடம் அந்த கேள்விக்கு சரியான பதில் இல்லை.

"தி..திவ்யா நீ தேவையில்லாம பயப்படுற.. அ..அவருக்கு ஒன்னும் ஆகாது..!!"

"ஃபோனை குடு அசோக்..!! ஃபோனை குடு..!!!!!"

"திவ்யா.. அவசரப்படாத.. நான் சொல்றதை கொஞ்சம் கேளு..!!"

"ஸாரி அசோக்.. முடியாது..!! ஃபோனை குடு..!!!!!"

திவ்யா அசோக்கிடம் இருந்து வெடுக்கென்று ஃபோனை பறித்தாள். திவாகரின் நம்பரை அமுக்கி டயல் செய்தாள். காதில் வைத்துக் கொண்டாள். அசோக் அதிசயித்து போனான். தன் கண்முன் நடப்பதை நம்பமுடியாமல் பார்த்தான். 'நீ சொன்னா கரெக்டாதான் இருக்கும்.. நீ சொன்னா கரெக்டாதான் இருக்கும்..' என்று சிறுவயதில் இருந்து சொல்லிக்கொண்டிருந்த திவ்யா இப்போது எங்கே போனாள்..?? எப்போதிருந்து இப்படி மாறிப் போனாள்..?? அசோக்கிற்கு புரியவில்லை..!!

"ஹலோ.. ஹலோ.. திவாகர்..!! நா..நான் திவ்யா..!!!"

"........................................"

"ஸாரி திவாகர்.. ஸாரி.. ஸாரி.. ஸாரி...!!

"........................................"

"நோ திவாகர்.. அப்டிலாம் பண்ணிடாதீங்க.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..!! என்னை மன்னிச்சுடுங்க.. நான் தப்பு பண்ணிட்டேன்.. பெரிய தப்பு பண்ணிட்டேன்..!! நான் உங்ககிட்ட அப்படி பேசிருக்க கூடாது..!! தப்புதான்... என்னை மன்னிச்சுடுங்க.. ப்ளீஸ்..!!"

"........................................"

"ஐயோ...!!!! வேணாம் திவாகர்.. வேணாம்.. என்னை கொல்லாதீங்க.. தயவு செஞ்சு அப்படிலாம் பண்ணிடாதீங்க..!!"

"........................................"

"அப்புறம் நானும் செத்து போயிடுவேன்..!!"

"........................................"

"சொல்லுங்க.. நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க..!!"

"........................................"

"அவ்ளோதான..? சொல்றேன்..!! ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ திவாகர்.. ஐ லவ் யூ ஸோ மச்..!! ப்ளீஸ் திவாகர்.. அந்த பாட்டிலை உடைச்சு தூக்கி எறிங்க..!!"

திவ்யா சத்தம் போட்டு அலறினாள்..!! அலறிவிட்டு தேம்பி தேம்பி அழுதாள்..!! தன் கண்முன்பே தனது ஆருயிர்க்காதலி.. இன்னொருவனுக்கு 'ஐ லவ் யூ..!!' சொல்ல.. அசோக்கிற்கு நெஞ்சம் குமுறியது..!! இதயம் சில்லு சில்லாய் உடைந்து சிதறியது..!!

2 comments:

  1. Divagar otha dei unna adichi savadichiruven da. Ashok love unmai da.avandhan divyavoda purusan.

    ReplyDelete

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...