Social Icons

ஐ ஹேட் யூ, பட்.. 7







அத்தியாயம் 21

நீங்கள் அன்பு கொண்டிருப்பவரை தன்முனைப்புடன் அணுகுவது.. அளவற்ற வேதனையையே அள்ளித்தரும்.. அவருக்கு மட்டுமல்லாது உங்களுக்கும் சேர்த்து..!! தான் காதலிப்பவருக்கு சிறு கஷ்டம் நேர்ந்தாலே இதயம் பதைபதைத்து போகிறது.. கட்டுப்பாடின்றியே கண்கள் நீரை உகுக்க ஆரம்பிக்கின்றன.. அன்று நேத்ரா அழுதாளே.. அது மாதிரி..!! காய்ச்சலில் படுத்திருக்கும் காதலனுக்காவே நேத்ரா அந்த மாதிரி உருகிப் போனாள் என்றால்.. விபத்தில் காயம்பட்டு வீழ்ந்திருக்கும் காதலனை எண்ணி ப்ரியா எந்த மாதிரி உடைந்து போயிருப்பாள்..?? அதுவும் அந்த விபத்திற்கு காரணமே அவள்தான் என்று உணர நேருகையில்..!! அசோக்குடைய உடலில் பட்ட காயத்தின் அளவை விட.. ப்ரியாவின் உள்ளத்தில் ஏற்பட்ட காயத்தின் அளவுதான் பெரிதாக இருந்தது..!!

இதயத்தில் இடி விழுந்த மாதிரி இருக்க.. இரு கண்களும் இருட்டிக்கொண்டு வர.. மயங்கி சரிந்து.. சேரை தள்ளிவிட்டவாறு.. தரையில் வீழ்ந்தாள் ப்ரியா..!! அவளுடைய அறைக்கு மிக அருகில் அமர்ந்து வேலை பார்ப்பது கவிதாதான். அறைக்குள் 'தட்..!!!' என்று சேர் கவிழும் சப்தம் கேட்டதுமே படக்கென்று எழுந்து பார்த்தாள். ஒருவித பதட்டத்துடனே அறைக்குள் நுழைந்தவள், உள்ளே மயக்கமுற்று கிடந்த ப்ரியாவை காண நேரிட்டதும், அலறியே விட்டாள். கவிதாவின் அலறலை கேட்டு அனைவருமே எழுந்து ஓடி வந்தனர். அவசரம் தொற்றிக்கொன்றவர்களாய் ப்ரியாவின் மயக்கத்தை தெளிய வைத்தனர்.

கண் விழித்த ப்ரியா கண்ணீருடனே விபத்து பற்றிய விஷயத்தை எல்லோருக்கும் தெரிவித்தாள். பதறிப்போன ஹரி உடனே அசோக்கின் வீட்டிற்கு கால் செய்து விபரம் சொன்னான். கோவிந்த் பாலாவின் அறைக்கு ஓடி அவருடைய காரை இரவல் வாங்கி வந்தான். டீமில் இருக்கும் ஐந்து பேருமே அசோக்கை காண ஆபீசில் இருந்து பரபரப்பாய் காரில் விரைந்தனர். வழிநெடுக ப்ரியா புலம்பிக்கொண்டே வந்தாள்.

"எல்லாம் என்னாலதான்.. எல்லாம் என்னாலதான்..!!" தலையில் அடித்துக்கொண்டு அழுகிற ப்ரியாவை அருகிலிருந்த கவிதா ஆறுதலாக அணைத்துக் கொண்டாள்.

"ப்ச்.. அழாத ப்ரியா.. ப்ளீஸ்.. அவனுக்கு ஒன்னும் ஆகாது..!!"

கார் ஓட்டுகிற ஹரியும், அவனுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த கோவிந்தும், பின்புறமாக திரும்பி ப்ரியாவை ஒருமுறை இரக்கமாக பார்த்தார்கள். 'ப்ரியாவுடைய அழுகை, வெறும் நட்பினால் பிறந்ததா.. இல்லை.. அதையும் தாண்டிய உணர்வினாலா..?' என்ற சந்தேகம் இப்போது எல்லோருக்குமே வந்திருந்தது. நேத்ராவுக்கு மட்டும், அன்று அழுதுகொண்டே அவள் கோவிந்தின் வீட்டுக்கு ஸ்கூட்டியில் பறந்தது நினைவுக்கு வந்து போனது.

கோவிந்த் அசோக்கின் செல் நம்பருக்கு கால் செய்து, அசோக்கை ஹாஸ்பிட்டலில் சேர்த்தவரிடம் பேசிக்கொண்டே வந்தான். அசோக்கின் நிலைமை பற்றி விசாரித்து தெரிந்து கொண்டான்.

"பயப்படுறதுக்குலாம் ஒண்ணும் இல்லையாம்.. ஹெல்மட் போட்டிருந்ததால தலை எதுவும் அடி இல்ல.. கைலதான் எலும்பு ஃப்ராக்சர் ஆயிருக்கும் போல.. ஆனா.. பெருசா கவலைப்படுறதுக்கு எதுவும் இல்லன்னு சொல்றாரு..!!"

கோவிந்தின் வார்த்தைகள் கொந்தளித்துக் கொண்டிருந்த ப்ரியாவின் மனதுக்கு ஓரளவு நிம்மதியை வார்த்தன. இருந்தாலும் அவளுடைய கண்கள் தொடர்ந்து நீரை சிந்திக்கொண்டேதான் இருந்தன.

கார் மருத்துவமனை சென்றடைந்தது. காரில் இருந்து இறங்கிய ஐந்து பேரும் அசோக் அனுமதிக்கப்பட்டிருக்கும் நான்காவது தளத்திற்கு அவசரமாய் விரைந்தார்கள். தம்பு பள்ளியிலும், ராஜேஷ் அலுவலகத்திலும் சிக்கிக்கொண்டதால், அவர்கள் இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை. தீவிர சிகிச்சைப் பிரிவை சார்ந்த அறை ஒன்றுக்கு வெளியே.. அதிர்ச்சியில் உடைந்து போனவளாய்.. அழுது ஓய்ந்து உறைந்து போனவளாய்.. செல்வி அமர்ந்திருந்தாள்..!! மருத்துவர்கள் அழைப்பிற்கும்.. மருந்து வாங்க அலைவதற்குமாய்.. செண்பகம்தான் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தாள்.

"அ..அசோக்குக்கு என்னாச்சு..?? எப்படி இருக்கான் இப்போ..??"

கண்களில் நீருடன் தன் முன் நிற்கிற ப்ரியாவை செல்வி அதிர்ச்சியும் ஆச்சரியமுமாய் ஏறிட்டாள். ப்ரியாவும் செல்வியும் சந்தித்துக் கொண்டனர். 'அசோக்குடன்தான் ப்ரியா ஆறு வருடங்களாக வேலை பார்த்திருக்கிறாள்' என்ற விஷயம் செல்விக்கு தெரிய வந்தது. 'அசோக்கிற்கும் ப்ரியாவுக்கும் திருமணப்பேச்சு நடந்திருக்கிறது' என்ற விஷயம் மீதம் உள்ளவர்களுக்கும் தெரியவந்தது. அனைவருக்குமே ஆச்சரியம்..!! ஆனால் அந்த ஆச்சரியத்தை வெளிப்படுத்த முடியாதவாறு, அங்கு நிலவிய இறுக்கமான சூழ்நிலை அவர்களை தடுத்திருந்தது.



அசோக்கை மருத்துவமனையில் சேர்த்திருந்தவர் இவர்கள் அங்கே சென்றடைந்தபோது கிளம்பியிருந்தார். அவர் சொன்னதைப் போலவே, விபத்தினால் அசோக்கிற்கு பெரிய அளவு சேதம் எதுவும் இல்லை. இடது முழங்கை எலும்பு முறிவும்.. இரண்டு கால்களிலும் சிராய்ப்புகளும் மட்டுமே..!! முறிந்த எலும்பின் நகர்வு சற்று சிக்கலாகிப் போனதால்.. அறுவை சிகிச்சை மூலமே எலும்பை பொருத்தி நிலை நிறுத்த முடியும் என்றாகிப் போனது. ஆபரேஷன் தியேட்டருக்குள் அசோக் அடைபட்டிருக்க, அதற்கு வெளியே அனைவரும் கவலை தோய்ந்த முகத்துடன் காத்திருந்தனர்.

இவர்கள் சென்று சேர்ந்த அரை மணி நேரத்திற்கெல்லாம், ராஜேஷ் தம்புவுடன் ஹாஸ்பிடல் வந்து சேர்ந்தான். கணவனை கண்டதுமே, அதுவரை எங்கேயோ வெறித்த பார்வை பார்த்தபடி அமர்ந்திருந்த செல்வி, 'என்னங்க..' என்று கத்தியவாறு எழுந்து ஓடினாள்.

"அ..அவனுக்கு.. அவனுக்கு.." என்று வார்த்தை வராமல் திணறினாள். உடைந்து போய் அழ ஆரம்பித்தாள்.

"அழாதம்மா.. ஒண்ணுல்ல.. ஒண்ணுல்ல..!!" ஆறுதலாய் சொன்னவாறே ராஜேஷ் அவளை அணைத்துக் கொண்டான்.

"நைட்டு ஒரு கெட்ட கனவுன்னு காலைலேயே சொன்னனேங்க.. இப்படி ஆயிடுச்சே..??"

"அழாத செல்வி.. ப்ளீஸ்..!!"

"அவன் கை காலெல்லாம் ஒரே ரத்தங்க..!!"

சொல்லிவிட்டு செல்வி கண்ணீரை சிந்த ஆரம்பித்தாள். மனைவியின் அழுகை ராஜேஷையும் பாதித்தது. அவனுடைய கண்களும் மெல்ல கசிய ஆரம்பிக்க, அதை அவசரமாய் துடைத்துக் கொண்டான். அவர்களையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த ப்ரியாவுக்கு, 'சண்டை போடுறது எங்களுக்கு ஹாபி மாதிரி..!!' என அசோக் அன்று புன்னகையுடன் சொன்னது ஞாபகம் வந்தது. வெளியே சண்டை போட்டுக்கொண்டாலும் உள்ளுக்குள் அவர்களுக்குள் இருக்கும் பாசப்பிணைப்பை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. 'இந்த குடும்பத்தில் ஒருத்தியாக எனக்கு கொடுத்து வைக்கவில்லையே..' என்பது மாதிரியான ஒரு ஆதங்கம் அவளையும் அறியாமல் அவளுக்குள் எழுந்தது.

"ஹை.. ப்ரியா சித்தி..!!"

தம்பு கத்திக்கொண்டே அப்பாவின் கைகளில் இருந்து விடுபட்டு, ஓடிவந்து ப்ரியாவை கட்டிக்கொண்டான். சற்றே ஆச்சரியத்தில் திளைத்த ப்ரியாவும், உடனே அவனை ஆரத்தழுவிக் கொண்டாள். 'ப்ரியாவின் புகைப்படத்தை காட்டி இவள்தான் உன் சித்தி என யாரோ சொல்லியிருக்கிறார்கள்' என்பது மட்டும் எல்லோருக்கும் புரிந்தது. ஆனால்.. செல்வியாயிருக்கும் என ராஜேஷும்.. ராஜேஷாய் இருக்கும் என செல்வியும்.. அவர்கள் இருவருமாயிருக்கும் என அடுத்தவர்களும் நினைத்துக் கொண்டார்கள்..!! 'இவள் எப்படி இங்கே..?' என்று குழம்பிய ராஜேஷுக்கு ப்ரியா பற்றி செல்வியே எல்லாம் சொன்னாள்..!!

நண்பகல் ஒரு மணி அளவில்.. நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்து.. அசோக் பொது வார்டுக்கு மாற்றப்பட்டான்..!! ஆனால் சிகிச்சைக்காக அளிக்கப்பட்டிருந்த செடேட்டிவ் அவனை மயக்கத்துடனே வைத்திருந்தது. இடையில் ஒருமுறை அரைகுறை மயக்கத்துடன் அவன் விழித்தபோதே, அவனிடம் ஆறுதலாக ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு, காரில் வந்த அனைவரும் திரும்ப ஆபீஸ் கிளம்பினார்கள்.

'நான் வரல.. நீங்க கெளம்புங்க..' என்று ப்ரியா மட்டும் அங்கேயே தங்கிவிட்டாள். மயக்கத்தில் இருக்கிற அசோக்கின் அருகில் அமர்ந்தவாறு, அவனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். தனது முட்டாள்த்தனமான கோவத்தினால் கைமுறிந்து சுனங்கிப்போய் படுத்திருக்கும் காதலனை இரக்கத்துடன் பார்த்தாள். அவ்வப்போது அவளையும் அறியாமல் கண்களில் வழிந்த நீரை ரகசியமாய் துடைத்துக் கொண்டாள். யாரும் கவனிக்கவில்லை என்று தோன்றும்போது, தனது கையால் அசோக்கின் கையை பற்றி வாஞ்சையுடன் தடவினாள். ப்ரியாவின் இந்த செய்கைகளை எல்லாம் கவனித்த செல்வி, அவளை சற்றே வியப்பாகவும் வித்தியாசமாகவும் பார்த்தாள்.

மாலையில் அசோக் கண்விழித்து எழுந்ததும்.. எழுந்ததுமே அவன் சகஜமாக பேச ஆரம்பித்ததும்.. அதுவரை அங்கு நிலவிய இறுக்கமான சூழ்நிலை தளர்ந்து.. ஒரு இலகுவான சூழ்நிலை மெல்ல திரும்பியது..!! ப்ரியா மட்டும் அங்கேயே தங்கிவிட்டது அசோக்கை சற்றே ஆச்சரியமுற செய்தது. ஆனால் அவனுடைய மனமோ அவள் மீது ஒருவித வெறுப்பில் உழன்றதால், முகத்தில் எந்தவித உணர்ச்சியும் அவன் காட்டிக்கொள்ளவில்லை. கடந்த சில நாட்களாகவே கொஞ்சம் கொஞ்சமாய் ப்ரியாவின் மீது ஏறியிருந்த வெறுப்பு, இன்று உச்சபட்சத்தை எட்டியிருந்ததுதான் காரணம்.

அசோக் ப்ரியாவின் முகத்தை நேரிடையாக பார்ப்பதையே தவிர்த்தான். ஒருமுறை எதேச்சையாக பார்க்க நேர்ந்தபோது, அவள் பார்வையாலேயே பரிதாபமாக கெஞ்ச.. இவன் அவளை அலட்சியம் செய்தான்..!!

அசோக்கிற்கு ஸ்பூனில் சாப்பாடு ஊட்டிக்கொண்டே.. செல்வி அவன் மீதிருந்த அன்பை வெளிப்படுத்தினாள்.. அவளுடைய பாணியில்.. அவளுக்கு தெரிந்த விதத்தில்.. அதிகாரமும், கோபமுமாக..!!

"என்னைக்காவது யார் சொல்றதையாவது காது குடுத்து கேட்டாத்தான.. பொறுமையா போடா பொறுமையா போடான்னு.. எத்தனை நாள் சொல்லிருப்பேன்..?? பைக்கு ஓட்டுறதுனா எதோ ப்ளைட்டு ஓட்டுறது மாதிரி நெனைப்பு.. அப்படியே எடுத்த வாக்குல விர்ர்ருனு பறக்குறது..!!" என்று குழைத்த சாதத்தை அவனுடைய வாயில் திணித்தவாறே முறைப்பாக சொன்னாள்.

"ஷ்ஷ்ஷ்.. ப்பாஆஆஆ.. ஆரம்பிச்சாச்சா..??" அசோக் சலிப்பாக சொன்னவாறே சாதத்தை மென்றான்.

"அப்படி என்ன தலை போற அவசரம்னு கேக்குறேன்..?? எந்த கோட்டையை புடிக்க அம்புட்டு வேகம்..??" செல்வி அவனிடம் கேட்கும்போதே, ப்ரியாவுக்கு இங்கே சுருக்கென்று இருந்தது.

"ப்ச்.. இப்போ எதுக்கு அதுலாம்.. விடுங்க அண்ணி..!!" அசோக் ப்ரியாவை காட்டிக் கொடுக்கவில்லை.

"ஹ்ம்ம்.. அந்த பைக்கை யார்ட்டயாவது வித்துடுங்கன்னு உங்க அண்ணன்ட்ட சொல்லிப்புட்டேன்..!!"

"ஹையோ.. என்ன அண்ணி இது..?? பைக் இல்லாம நான் எப்படி ஆபீஸ் போறது..??"

"பஸ்ல போ.. வீட்ல இருந்து அஞ்சு நிமிஷம் நடந்தா கம்பனி பஸ் வரப்போகுது.. ஏறி போகப் போற..!! என்ன கஷ்டம் இருக்கு உனக்கு..??"

"ப்ச்.. பஸ்லலாம் என்னால போக முடியாது..!!"

"ஓஹோ.. முடியாதா..?? இனி நீ பைக்ல கெளம்புறதை பாத்துட்டு.. என்னாலையும் வீட்ல நிம்மதியா இருக்க முடியாது..!! எந்த சாமி புண்ணியமோ.. இந்த அளவோட போச்சு..!! நாங்க இனிமே நிம்மதியா இருக்கணும்னு நீ நெனச்சியின்னா.. ஒழுங்கா பஸ்லயே ஆபீஸ் போ..!!"

"இப்போ ஏன் தேவை இல்லாம பயப்படுறீங்க.. அதுலாம் திரும்ப இதுமாதிரி நடக்காது..!!"

"உனக்கு என்ன.. எல்லாம் வெளையாட்டுத்தான்..!! காலைல இருந்து நாங்க பட்ட வேதனை எங்களுக்குத்தான தெரியும்..!! இனிமே அந்த பைக்ல நீ காலை வையி.. கால் ரெண்டையும் ஒடைச்சு போட்டுர்றேன்..!!"

"ஏன்.. கை உடைஞ்சு படுத்து கெடக்குறது பத்தாதாக்கும்..??"

"ம்க்கும்.. இந்த லொள்ளுப்பேச்சுக்கு ஒன்னும் கொறைச்சலு இல்ல.. சொல்லுப்பேச்சு மட்டும் கேக்காத..!!"

அசோக்கும் செல்வியும் அந்த மாதிரி இயல்பாகவும் இலகுவாகவும் பேசிக்கொண்டது, அவர்களை பார்த்துக் கொண்டிருந்த ப்ரியாவையையும் செண்பகத்தையும் சற்றே இறுக்கம் தளர்ந்து புன்னகைக்க செய்தது. செல்வி காலையில் தன் கணவனிடம் காட்டிய கண்ணீர் முகத்திற்கும்.. இப்போது அசோக்கிடம் காட்டுகிற முறைப்பு முகத்திற்கும் நிறைய வேறுபாடுகள்.. ஒரே ஒரு ஒற்றுமையை தவிர..!! அசோக் மீது அவள் வைத்திருக்கும் பாசம்தான் அந்த ஒற்றுமை..!!

சிறிது நேரத்தில் நேத்ரா மீண்டும் மருத்துவமனைக்கு வந்தாள். அசோக்கின் மெடிக்கல் இன்ஷ்யூரன்ஸ் சம்பந்தமான டாகுமண்டுகளை ஆபீசில் இருந்து எடுத்து வந்திருந்தாள். அவர்களுடன் அமர்ந்து கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தவள், அப்புறம் அவசர வேலை இருக்கிறது என அங்கிருந்து கிளம்பினாள். அவள் ஆபீஸில் இருந்து வருகையில் எடுத்து வந்திருந்த ப்ரியாவின் ஸ்கூட்டி சாவியை ப்ரியாவிடம் ஒப்படைத்துவிட்டு சென்றாள்.

பிறகு ராஜேஷும், செல்வியும் சிறிது நேரம் ப்ரியாவிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். அவளுடைய குடும்பத்தை பற்றி விசாரித்து அறிந்து கொண்டார்கள். நின்று போன திருமணத்தைப் பற்றி பேச விரும்பாதவர்களாய், அந்தப் பேச்சை தவிர்த்தார்கள். அதனால் அப்போதும் கூட.. 'ப்ரியாதான் தனக்காக பார்க்கப்பட்ட பெண்' என்பது அசோக்கிற்கு தெரிய வரவில்லை. தன்னைப் பார்க்க வந்த அலுவலக தோழியை பற்றி அண்ணனும், அண்ணியும் விசாரித்து தெரிந்து கொள்கிறார்கள் என்று சகஜமாகவே எடுத்துக் கொண்டான்.

அப்புறம் வானம் இருட்டிய பிறகுதான் ப்ரியா அங்கிருந்து கிளம்பினாள். அவள் கிளம்புகையில்தான் செல்வி திடீரென ஏதோ ஞாபகம் வந்தவளாய் தன் தங்கையை பார்த்து சொன்னாள்.

"ஏய் செண்பகம்.. நீயும் ஹாஸ்டலுக்கு போகணும்லடி.. அக்கா கூடவே போயிடேன்..!!"

"இ..இல்லக்கா.. நான் அப்புறம் போய்க்குறேன்.. அ..அவங்களுக்கு எதுக்கு சிரமம்..??" செண்பகம் தயங்கினாள்.

"பரவால செண்பகம்.. வா.. நான் ட்ராப் பண்றேன்..!!" ப்ரியா இதமான குரலில் சொன்னாள்.

"இ..இல்லக்கா.. இட்ஸ் ஓகே..!!"

"ஏய்.. கூப்பிடுறாங்கல்ல.. போடீ..!!"

தங்கையின் தயக்கத்திற்கான அர்த்தம் புரியாமல் செல்வி எரிச்சலாக சொன்னாள். ஒரு சில வினாடிகள் அவஸ்தையாக நெளிந்த செண்பகம், அப்புறம் எழுந்து கொண்டாள். ப்ரியாவுடன் கிளம்பினாள்.

செண்பகமும் ப்ரியாவும் நான்காவது தளத்தில் இருந்து படிக்கட்டில் கீழே இறங்கினார்கள். இருவருக்குள்ளும் இப்போது ஒருவித இறுக்கம் நிறைந்திருந்தது. இயல்பாக பேசிக்கொள்வதில் ஒரு தயக்கம் இருந்தது. எதுவும் பேசிக்கொள்ளாமலே அமைதியாக ஒவ்வொரு படியாக இறங்கிக் கொண்டிருந்தார்கள். செண்பகம் அசோக்கை காதலிக்கிறாள் என்பது ப்ரியாவின் நம்பிக்கையாக இருந்ததால், அவனுக்கு நேர்ந்த இந்த விபத்தினால், தன்னைப்போலவே ஒரு தாங்க முடியாத வலியை அவளும் இப்போது அனுபவித்துக் கொண்டிருப்பாள் என்றே கருதினாள். ஓரக்கண்ணால் ஒருமுறை சென்பகத்தை பார்த்துக் கொண்டாள்.

செண்பகத்துக்கோ வேறொரு விதமான உணர்வு. ப்ரியாவின் அடக்குமுறையான அணுகுமுறையால் அசோக் இப்படி அடிபட்டு கிடக்கிறானே என்பது மாதிரியான உணர்வு. கொஞ்ச நேரத்திலேயே அந்த உணர்வை அடக்க முடியாமல், பட்டென ப்ரியாவிடம் கேட்டுவிட்டாள்.

"ஏ..ஏன்க்கா இப்படிலாம் பண்றீங்க..??"



அவ்வளவுதான்..!! அந்த ஒற்றை கேள்விக்கே ப்ரியா துடித்துப் போனாள். அவ்வளவு நேரம் காணாமல் போயிருந்த அந்த குற்ற உணர்வு, இப்போது குப்பென வந்து அவள் மனதை அப்பிக்கொண்டது. அம்பு தைத்த பறவையை போல, செண்பகத்தை மருட்சியாக ஒரு பார்வை பார்த்தாள். தடுமாற்றமாய் சொன்னாள்.

"ஸா..ஸாரி செண்பகம்.. நா..நான் ஏதோ.. தெ..தெரியாம.."

"நான் உங்களை குத்திக்காட்டனும்னு கேக்கலைக்கா..!! ஆக்சிடன்ட்டுக்கு நீங்கதான் காரணம்னு நான் சொல்லல.. ஆனா.. அவசரமும் டென்ஷனுமா மாமா இன்னைக்கு கெளம்புனதுக்கு நீங்கதான் காரணம்.. அந்த டென்ஷன்தான் இந்த ஆக்சிடன்ட்டுக்கு காரணம்..!! 'வேணுன்னே எல்லாம் பண்றா செண்பகம்.. ஏன் இப்படிலாம் பண்றான்னே எனக்கு ஒன்னும் புரியலை..'னு வெறுப்பா சொல்லிட்டுத்தான் பைக்ல கெளம்பினாரு..!!"

"......................."

"அவரை ஏன் இப்படி டென்ஷனாக்கி வேடிக்கை பாக்குறீங்க..?? அவர் மேல அப்படி என்ன உங்களுக்கு வெறுப்பு..??"

"சேச்சே.. அ..அவன் மேல எனக்கு வெ..வெறுப்புலாம் எதுவும் இல்ல செண்பகம்..!! நெ..நெஜமாவே இன்னைக்கு ஒரு க்ரிட்டிக்கல் இஷ்.." ப்ரியா சமாளிக்க தடுமாறினாள்.

"இன்னைக்கு நடந்ததை மட்டும் வச்சு நான் சொல்லலைக்கா.. நானும் வந்ததுல இருந்து எல்லாம் கவனிச்சுட்டுத்தான் இருக்குறேன்.. நீங்க அவர்ட்ட எப்படி நடந்துக்குறீங்கன்னு நானும் பாத்துட்டுத்தான் இருக்குறேன்..!! அவரை வெரட்டி வெரட்டி அடிக்கிறீங்க நீங்க..!! ஆனா.." செண்பகம் சொல்ல வந்ததை பாதியிலேயே நிறுத்தினாள்.

"ம்ம்..?? ஆனா..??"

"மாமாவுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்க்கா.. உங்களை பத்தி எப்போவும் நல்லவிதமாத்தான் பேசுவாரு.. அவருக்கு உங்க மேல எந்த வெறுப்பும் இல்ல..!! ஒருதடவை.. நானே உங்களை திட்டி பேசுனப்போ.. 'ப்ரியா பத்தி இனி இப்படிலாம் பேசாத'ன்னு.. என் மேல கோவப்பட்டிருக்காரு..!! ஆனா.. உங்களுக்கு மட்டும் ஏன் அவர் மேல இவ்வளவு கோவம்..?? உங்க கோவத்தால அவரு இப்போ எப்படி கெடக்குறாருன்னு பாத்தீங்களா..??"

"......................." ப்ரியா பேச வார்த்தையின்றி சிலையாக நின்றிருந்தாள்.

"ப்ளீஸ்க்கா.. இனிமே இப்படிலாம் பண்ணாதீங்க.. மாமாவை புரிஞ்சுக்கங்க.. ப்ளீஸ்..!!"

செண்பகம் சொல்லிவிட்டு ப்ரியாவின் முகத்தை ஏக்கமாக பார்க்க, ப்ரியாவுக்கு என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை. தேவையற்ற பொறாமை உணர்வால்.. தேவையற்ற வெறுப்பினை சிந்தி.. தேவையற்ற வேதனையை அனைவருக்கும் கொடுத்து.. தானுமே அந்த வேதனையில் சிக்கித்தவிக்கிறோம் என்று தெளிவாக புரிந்தது அவளுக்கு..!! அசோக்கின் நிலையை நினைக்க நினைக்க அழுகை வரும்போல இருந்தது. உதடுகளை கடித்து கட்டுப்படுத்திக் கொண்டாள்.

"ஸாரி செண்பகம்.. ஸாரி.. எல்லாத்துக்கும்..!! நான் செஞ்சது தப்புதான்..!!"

என்று கெஞ்சலாக சொன்னாள். செண்பகம் அப்புறம் அவளை எதுவும் கேட்கவில்லை. இருவரும் அதற்குமேல் எதுவும் பேசிக்கொள்ளாமல், அமைதியாக அந்த மருத்துவமனையின் கீழ்த்தளத்துக்கு வந்து சேர்ந்தார்கள். நுழைவாயில் விட்டு வெளியே வந்ததும், செண்பகம் வேறுபக்கமாய் திரும்பி நடக்க, ப்ரியா அவளை அவசரமாய் அழைத்தாள்.

"ஹேய்.. செண்பகம்.. பார்க்கிங் ஏரியா இந்தப்பக்கம்.."

"இல்லக்கா.. நான் ஆட்டோலேயே போய்க்குறேன்.. அதுதான் பெஸ்ட்.. அவன்தான் பாதில இறக்கிவிட மாட்டான்..!!"

செண்பகம் திரும்பிக்கூட பாராமல் சொல்லிவிட்டு, விடுவிடுவென நடையை தொடர்ந்தாள். போகிற போக்கில் ஒரு கூர்மையான அம்பாக பார்த்து எறிந்துவிட்டு செல்கிற செண்பகத்தை, ப்ரியா திகைப்பாய் பார்த்தவாறே சிறிது நேரம் நின்றிருந்தாள்.

அன்று இரவு.. அண்ணனும் அண்ணியும் தனக்காக பார்த்த பெண் ப்ரியாதான் என்ற விஷயம் அசோக்கிற்கு தெரியவந்தது. அவனுடைய கால் சிராய்ப்புக்கு மருந்து தடவிக்கொண்டே செல்விதான் ஆரம்பித்தாள்.

"அந்தப்பொண்ணு உனக்கு நல்ல பழக்கமாடா..??"

"எந்தப்பொண்ணு..??" அசோக் புரியாமல் கேட்டான்.



"அதான்.. உனக்கு கட்டிவைக்கிறதுக்காக நாங்க பாத்த பொண்ணு.. நல்ல பழக்கம் மாதிரிதான் தெரியுது.. அப்புறம் ஏன் நீ எங்ககிட்ட சொல்லவே இல்ல..??" செல்வி இயல்பாக பேசிக்கொண்டே போக, அசோக் குழப்பமாய் அவளை ஏறிட்டான்.

"என்னாச்சு உங்களுக்கு..?? எனக்கு கைல அடிபட்டிருக்குன்னா.. உங்களுக்கு தலைல ஏதாவது அடிபட்ருக்கா..??" அசோக் அந்தமாதிரி கிண்டலாக கேட்கவுந்தான் செல்விக்கு நடந்த விஷயம் நினைவுக்கு வந்தது.

"ஓ.. ஆமால்ல.. நீதான் அவ ஃபோட்டோவே பாக்கலைல..?? சரி சரி.. இப்போ எனக்கு புரியுது..!!"

"ப்ச்.. என்ன புரியுது.. எனக்கு ஒரு எழவும் புரியல..!!"

"ஹையோ.. அ..அந்த ப்ரியா இருக்கால்ல.. உன் கூட வேலை பாக்குறவ.."

"ஆமாம்..!!"

"அவதான்டா நாங்க உனக்கு பாத்த பொண்ணு..!!" செல்வி கேஷுவலாக சொல்ல, அசோக் அப்படியே அதிர்ந்து போனான்.

"எ..என்ன அண்ணி சொல்றீங்க..??" என்று நம்பமுடியாதவனாய் கேட்டான்.

"ஆமாண்டா..!! நாலு மாசம் முன்னாடி.. உனக்கு பாத்திருக்குற பொண்ணுன்னு உன் அண்ணன் உன்கிட்ட ஒரு ஃபோட்டோ நீட்டுனார்ல.. அது இந்த ப்ரியாதாண்டா..!! அப்போ நீ வேணான்னு சொல்லிட்ட.. அவரும் அதை அப்படியே கெடப்புல போட்டாரு..!! அப்புறம் நீயாவே பொண்ணு பாருங்கன்னு சொன்னதும்.. திரும்பவும் பேசி.. இந்த ப்ரியா அப்பாகிட்ட ஜாதகம் வாங்கி.. பொருத்தம்லாம் பார்த்து.."

செல்வி சொல்லிக்கொண்டே இருக்க, அசோக் ஒரு உச்சபட்ச குழப்பத்திலும், திகைப்பிலும் திளைக்க ஆரம்பித்தான். அண்ணி சொன்ன விஷயத்தை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளவே அவனுக்கு சிறிது நேரம் பிடித்தது. உள்வாங்கிக்கொண்ட விஷயத்தை அவனது மூளை உற்று ஆராய, பலவித குழப்ப எண்ணங்கள் மளமளவென அவனுக்குள் கிளம்ப ஆரம்பித்தன.

'ப்ரியாவா..?? ப்ரியாவையா எனக்காக பெண் பார்த்தார்கள்..?? 'இவளை கட்டிக்கப் போறியா.. இல்லையா..' என இவர்கள் கண்டிப்புடன் கேட்டது ப்ரியாவைத்தானா..?? 'முடியவே முடியாது..' என நான் ஒற்றைக்காலில் நின்று ஒதுக்கியதும் ப்ரியாவைத்தானா..?? என்ன ஒரு குழப்பம் இது..?? அப்படியானால்.. அவர்.. அந்த வரதராஜன்.. ப்ரியாவின் அப்பாவா..?? 'என்னை விட நல்ல மாப்பிள்ளை கிடைப்பான்..' என நான் வாழ்த்து வழங்கியது ப்ரியாவிற்கா..??'

அடுக்கடுக்காய் கேள்விகள் எழ, அசோக்கிற்கு தலையை வலிப்பது போல இருந்தது. இந்த விஷயத்தையும் ப்ரியாவையும் இணைத்து யோசித்து பார்த்தான். 'இந்த கல்யாண ஏற்பாடு விஷயம் எல்லாம் ப்ரியாவிற்கு தெரிந்திருக்குமா..?? இல்லையே.. தெரிந்திருந்தால் என்னிடம் சொல்லியிருப்பாளே..??'

"அ..அவளுக்கு இந்த விஷயம் தெரியுமா அண்ணி..?? ஐ மீன்.. நான்தான் மாப்ளைன்னு..??"

"ம்ம்.. தெரிஞ்ச மாதிரிதான் காட்டிக்கிட்டா.. அதான எனக்கும் கொழப்பம்..?? அந்த பொண்ணு உன்கிட்ட சொல்லவே இல்லையா..??"

"இ..இல்ல அண்ணி.. சொல்லல..!!"

"ஆமாம்.. நீதான் புடிச்ச புடில வேணான்னு சொல்லிட்டியே.. அதை அவ அப்பா அவட்ட சொல்லிருப்பாரு.. அதான் அவளும் அதைப்பத்தி பேசல போல..!! ஆனா.. நான் கூட என்னவோ நெனச்சன்டா.. பெங்களூர்லயே பொறந்து வளந்த பொண்ணு.. என்ன குணமோ.. எப்படி இருக்காளோன்னு...

செல்வி தொடர்ந்து பேசியதை கவனியாமல் அசோக் மீண்டும் சிந்தனையில் மூழ்க ஆரம்பித்தான். 'ஓ.. எல்லாம் தெரிந்து கொண்டுதான் இத்தனை நாளாய் அவள் எதுவும் சொல்லவில்லையா..?? ஏன் அப்படி செய்தாள்..?? ஆமாம்.. காரணமே இல்லாமல் உன்மீது இவ்வளவு வெறுப்பை உமிழ்கிறாள்.. அவளா வந்து கல்யாண செய்தியை உரைக்கப் போகிறாள்..?? அவளுக்கு இந்த கல்யாணத்தைப் பற்றி எந்த அக்கறையும் இருந்திருக்கப் போவதில்லை..!! நான் வேண்டாம் என்று சொன்னதும் 'விட்டொழிந்தது சனியன்' என்று மறந்திருப்பாள்..!!'

".......................... ரொம்ப அமைதியான குணம்.. எளகுன மனசு.. ரொம்ப அப்பாவியா இருக்குறாடா.." செல்வி பேசிக்கொண்டே இருக்க,

"யா..யாரை சொல்றீங்க..??" அசோக் இடையில் புகுந்து கேட்டான்.

"அந்த ப்ரியாவைத்தாண்டா சொல்றேன்..!! பேருக்கு ஏத்த மாதிரி எல்லார்ட்டயும் எவ்வளவு ப்ரியமா நடந்துக்குறா..?? ரொம்ப நல்ல புள்ளைடா..!!" வெகுளியாக சொன்ன அண்ணியை அசோக் முறைப்பாக பார்த்தான்.

"ம்க்கும்.. ரொம்ப நல்ல்ல்ல நொள்ளைதான்.. நாட்டுலயே கெடைக்காது..!!" அசோக் வெறுப்பாக சொன்னான்.

"ஏண்டா அப்படி சொல்ற..?? உனக்கு ஆக்சிடன்ட்னு தெரிஞ்சு அவ எப்படி துடிச்சு போயிருக்கா தெரியுமா..?? வர்றப்போவே ஓ'ன்னு அழுதுட்டேதான் வந்தா..!! நீ தூங்குனப்போ உன் பக்கத்துல உக்காந்து உன் மூஞ்சியவே பாத்துட்டு இருந்தா..!! உன் மேல அவளுக்கு ரொம்ப ப்ரியம் போலடா..!!"
'அதான் அந்த ப்ரியம்.. புண்ணாக்கு.. புடுங்கி பிராண்டுனதுலாம் பார்த்தாச்சே..?? கல்லை விட்டு அடிச்சுட்டு.. காயத்துக்கு மருந்து போட வந்திருக்கா.. நீலிக்கண்ணீர் வடிக்கிறா.. அது புரியாம நீங்க பேசிட்டு இருக்கீங்க..!!' அசோக் மனதில் நினைத்தை வெளியே சொல்லவில்லை. அமைதியாகவே இருந்தான். அவனுடைய மனநிலை புரியாது செல்விதான் கேட்டாள்.

"ஏண்டா.. ஒருவேளை இந்த ப்ரியாதான் பொண்ணுன்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா.. நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சிருப்பியா..??"

"ஏ..ஏன் அப்படி கேக்குறீங்க..??" அசோக் சற்று தடுமாற்றமாகவே கேட்டான்.

"இல்லடா.. எனக்கு அப்படி தோணுச்சு..!! நான் வேணுன்னா உன் அண்ணன்ட்ட சொல்லி.. மறுபடியும் அவ அப்பாட்ட பேச சொல்லவா..??"

"ஹையோ.. சும்மா இருங்க அண்ணி.. உள்ள கொழப்பம் போதும்.. நீங்க வேற ஏதாவது பண்ணிட்டு இருக்காதீங்க..!!"

"நான் என்ன பண்ண பண்றேன்..??"

"எதுவும் பண்ண வேணாம்னுதான் சொல்றேன்.. எல்லாம் நான் பாத்துக்குறேன்.. விடுங்க..!!"

அதேநேரம் ப்ரியாவின் வீட்டில்.. அசோக்கிற்கு நேர்ந்த விபத்து பற்றி ப்ரியா தன் அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். விஷயம் கேட்டு வரதராஜன் பதறிப் போனார். அடுத்த நாள் மருத்துவமனை சென்று, அசோக்கை நேரில் பார்க்க விரும்புவதாக கூறினார். ப்ரியா அவரை அவசரமாய் தடுத்தாள்.

"ஐயோ.. வேணாம் டாடி..!! அவன் ஏற்கனவே என் மேல பயங்கர கோவத்துல இருக்கான்.. இந்த நேரத்துல நீங்க அவனை பாக்க வேணாம்..!!"

"உன் மேல கோவமா..?? ஏன்மா..??"

"ப்ச்.. அதெல்லாம் சொன்னா உங்களுக்கு புரியாது டாடி..!! எல்லாம் நான் பாத்துக்குறேன்.. விடுங்க..!!"

என்ற ப்ரியா மனதுக்குள் 'அவன்கூட மனசு விட்டு பேசணும் டாடி.. மன்னிப்பு கேக்கணும்.. நான் செஞ்ச தப்பை உணர்ந்திட்டேன்னு சொல்லி கெஞ்சனும்..' என்று நினைத்துக் கொண்டாள்.

அன்று நள்ளிரவு தாண்டியும் அசோக்கும் ப்ரியாவும் உறக்கம் வராமல் மிகவும் சிரமப்பட்டனர். ப்ரியாதான் தனக்காக பார்த்த பெண் என்ற விஷயம் அசோக்கிற்கு ஆச்சரியத்தை கொடுத்திருந்தது. ஆனால் அவனிருந்த சூழ்நிலையிலும், மனநிலையிலும் அந்த ஆச்சரியம் அவனுக்கு ஏனோ மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. ப்ரியாவின் செய்கைகள் அவன் மனதில் ஏற்படுத்தியிருந்த வெறுப்பு, அந்த ஆச்சரியம் தந்த சந்தோஷத்தை சாப்பிட்டிருந்தது. கட்டுப்போட்டிருந்த கையை ஒருமுறை தடவிப் பார்த்துக் கொண்டான்.

அதே நேரம் ப்ரியாவோ.. 'தன்னால் அசோக்கிற்கு இவ்வாறு நேர்ந்துவிட்டதே' என்று எண்ணி எண்ணியே, இருட்டுக்குள் ரகசியமாக அழுதாள். மனதுக்குள்ளேயே அசோக்கை வரவழைத்து 'மன்னித்துவிடு..!!' என்று மன்றாடினாள். அவனிடம் மனம் விட்டு பேசவேண்டும் என்று மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டாள். கண்ணீர் பொங்கும் கண்களை தலையணையிலேயே துடைத்துக் கொண்டாள்.



அத்தியாயம் 22

ப்ரியா நினைத்துக்கொண்ட மாதிரி அவ்வளவு எளிதாக அசோக்கிடம் மனம்விட்டு பேசி விட முடியவில்லை. அவர்கள் இருவரும் தனித்திருக்கும் நேரமே வாய்க்கவில்லை. அசோக் அந்த மருத்துவமனையில் ஐந்து நாட்கள் இருந்தான். அந்த ஐந்து நாட்களும் ப்ரியா காலையில் ஒருமுறை, மாலையில் ஒருமுறை அவனை சென்று பார்த்து வருவாள். ஆனால் எந்த நேரமும் அவனுடன் யாரவது ஒருவர் உடனிருப்பார்கள். மனதில் நினைத்தை சுதந்திரமாக பேசிக்கொள்ள முடியாமல் போகும்.

"இப்போ எப்படிடா இருக்கு..?? பரவாலையா..??" என்று ஃபார்மலாகத்தான் கேட்க முடியும். அதற்கு அவனும்

"ம்ம்..?? இருக்கு இருக்கு..!!" என்பான் முகத்தை முறைப்பாக வைத்துக்கொண்டு.

"ஸாரிடா..!!" ப்ரியா கிசுகிசுப்பான குரலில் கெஞ்சலாக சொல்வாள்.

"ப்ச்..!!" அசோக் சலிப்பாக சொல்லிவிட்டு முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொள்வான்.

தினமும் காலையிலே கோவிலுக்கு சென்று அசோக்கின் பெயரில் அர்ச்சனை செய்து, அவன் நெற்றியில் வந்து திருநீறு பூசுகிற ப்ரியாவை செல்விக்கு மிகவும் பிடித்து போனது. மாலையில் ஆபீஸை விட்டு கிளம்ப எவ்வளவு நேரம் ஆனாலும், ஆஸ்பத்திரிக்கு வந்து கொஞ்ச நேரமாவது அவர்களுடன் செலவழித்து சென்றது செல்வியை கவர்ந்துவிட்டது. ப்ரியா வந்துவிட்டாலே, அவளை அருகில் அமர்த்தி வைத்து, அவளுடைய கையை வாஞ்சையாக தடவிக் கொடுத்தவாறே, ஏதாவது ஸ்னேஹமாக பேசிக்கொண்டிருப்பாள்.

ஆறாம்நாள் காலை.. அசோக் ஹாஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான். வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டான். 'வீட்டுக்கு அடிக்கடி வாம்மா..!!' என்று சொன்ன செல்வியின் நட்பு கிடைத்ததால், ப்ரியா அசோக்கின் வீட்டுக்கு செல்வதிலும் எந்த தடையும் இருக்கவில்லை. ஆஸ்பத்திரிக்கு விட்டது போலவே அசோக்கின் வீட்டுக்கும் தினம் இரண்டு முறை விசிட் விட்டாள். ஆனால் அவர்கள் தனித்து பேசிக்கொள்ளத்தான் சந்தர்ப்பம் கிட்டவில்லை..!! அசோக்கின் மனதிலோ வெறுப்பு.. ப்ரியாவின் மனதிலோ ஏக்கம்.. வெளிப்படுத்திக்கொள்ளத்தான் வாய்ப்பு அமையவில்லை.. காத்திருந்தனர் இருவரும்..!!

அசோக் வீட்டுக்கு சென்ற மூன்றாம் நாள் காலை..!! அன்று விடுமுறைதான்.. ப்ரியா சற்று தாமதமாகவே தனது வீட்டில் இருந்து அசோக்கை பார்த்துவர கிளம்பினாள்..!! அசோக்கின் வீட்டை அடைந்தபோது மணி ஒன்பதரை ஆகி இருந்தது..!! வீட்டுக்குள் நுழைந்தவள்.. 'இது அசோக்கின் வீடுதானா..?' என்று ஒருகணம் குழம்பிப் போக நேர்ந்தது..!! ஏதோ சந்தைக்கடைக்குள் நுழைந்தாற்போல சலசலவென்று ஒரே சத்தம்..!! இருபது.. இருபத்தைந்து பேர்கள்.. அசோக்கின் உறவினர்கள்.. விபத்தில் சிக்கிய அசோக் வீடு திரும்புவதற்காக காத்திருந்தவர்கள்.. அவன் வீடு திரும்பியதும் கிராமத்தில் இருந்து கிளம்பி வந்திருந்தனர்..!! இப்போது ஹாலில் கும்பலாக அமர்ந்து ஆளாளுக்கு ஏதேதோ கதையடித்துக் கொண்டிருந்தார்கள்..!! அசோக்கை மட்டும் அந்த கூட்டத்தில் காணோம்..!! அவர்களை பார்த்து ப்ரியா சற்றே திகைத்துப்போய் நின்றிருக்க..

"இதோ வந்துட்டால..?? இவதான் ப்ரியா..!!" என்று செல்விதான் முதலில் இவளை கவனித்து கத்தினாள்.

அவ்வளவுதான்..!! உக்காந்திருந்த ஏழெட்டுப் பெண்கள் உடனே எழுந்து வந்து ப்ரியாவை பிடித்துக் கொண்டார்கள். 'நீதானாம்மா.. வா.. வா..' என்று அவளை அழைத்து சென்று அவர்களுக்கு நடுவில் அமர்த்தி வைத்துக் கொண்டனர். இந்த திடீர் சூழ்நிலையை சற்றும் எதிர்பாராத ப்ரியா திருதிருவென விழித்தாள். ஒருமாதிரி மிரட்சியாக எல்லோரையும் பார்த்தாள். அதை யாரும் புரிந்து கொள்ளாமல் ஆளாளுக்கு அவளுடைய கன்னத்தை தடவி பிய்த்து எடுத்தனர். ஏதேதோ கேள்வி கேட்டு துளைத்தெடுத்தனர்.

"செவசெவன்னு சினிமாக்காரி மாதிரில இருக்குறா..!!" என்று கமென்ட் அடித்தாள் ஒரு கிழவி.

"ஏம்மா.. இந்த தலைக்கறில சின்ன வெங்காயம், மொளகா வத்தல் போட்டு பெரட்டி எடுத்தா.. எனக்கு ரொம்ப உசுரு.. தாத்தாவுக்கு வச்சு குடுப்பியா..??" என்று கேட்டது ஒரு பெருசு.

"உங்களுக்கு அஜித் புடிக்குமா.. விஜய் புடிக்குமா..??" என்றாள் ஒரு ஆறு வயது சிறுமி.

"இது என்னடி அதிசயமா இருக்கு..?? வளையலை போய் காதுல மாட்டிருக்காக..?? இதுதான் பெங்களூர் மாடலாக்கும்..??" ப்ரியாவின் காது வளையத்தை பிடித்து இழுத்தாள் ஒரு பெண்.

"ஏத்தா.. என் பேரனை கட்டிக்க உனக்கு சம்மதந்தானா..??" இதை கேட்டது அசோக்கின் பாட்டி. ப்ரியா இன்னும் மிரட்சி தெளியாமலே இருக்க, செல்வியே அதற்கு பதில் சொன்னாள்.

"ம்க்கும்.. இந்தப்புள்ளையா வேணாஞ்சொல்லுச்சு..?? உன் பேரப்புள்ளைதான் உச்சானிக்கொம்புல ஏறி ஒக்காந்திருக்காப்புல.. அவன்ங்கிட்ட போய் கேக்க வேண்டியதான..??"

"அடிப்போடி.. அவன்ங்கிட்ட போய் என்னத்த கேக்க சொல்றவ..?? பொண்ணு பாக்கவான்னு கேட்டதுக்கே.. 'போறியா.. இல்ல.. பொதைகுழில எறக்கிப்புடவா'ன்ல கேட்டான்..??"

"அப்புறம் என்ன.. வாயை மூடிக்கிட்டு ச்சும்மா கெட..!!"

இப்போது அசோக்கின் அம்மா எழுந்து வந்து ப்ரியாவுக்கு அருகில் அமர்ந்து கொண்டாள். ப்ரியாவின் கன்னத்தை பிடித்து வாஞ்சையாக தடவியவாறே, மலர்ந்த முகத்துடன் கேட்டாள்.

"வீட்ல அப்பா, தம்பிலாம் சவுக்கியமாம்மா..??"

"ம்ம்.. ச..சவுக்கியம்..!!"

"நீயும் என் புள்ளை வேல பாக்க அதே கம்பெனிலதான் வேல பாக்கியாக்கும்..??

"ம்ம்.. ஆ..ஆமாம்..!!"

"செல்விதான் சொன்னா..!! அசோக்கு அடிபட்ட அன்னைக்கு நீ எப்படி துடிச்சு போயிட்டேன்னு.. அன்னைக்கு பூரா அவன் கூடவே இருந்து பாத்துக்கிட்டியாமே..?? என் புள்ளை மேல உனக்கு அவ்வளவு பிரியமாம்மா..??"

"ம்ம்..!!"

ப்ரியா அவஸ்தையாக நெளிந்தவாறே சொன்னாள். ஒருமுறை பார்வையை சுழற்றி செண்பகத்தை தேடினாள். அவளோ இங்கே நடப்பது எதையுமே கண்டுகொள்ளாமல், அசோக்கை பார்க்க வந்தவர்கள் அவனுக்கு கொண்டுவந்திருந்த பலாச்சுளைகளை, 'லபக் லபக்' என்று வாய்க்குள் திணித்து அசைபோட்டுக் கொண்டிருந்தாள். ப்ரியா இப்போது சற்றே எரிச்சலாக செண்பகத்தை பார்த்தாள். 'ச்சே.. என்ன பெண் இவள்..?? அவளுடைய காதலனை பிடித்திருக்கிறதா என்று இங்கே ஆளாளுக்கு என்னை மொய்க்கிறார்கள்.. கல்யாணப்பேச்சு பேசுகிறார்கள்.. இவள் என்னவென்றால் கவலையே இல்லாமல் பலாப்பழம் விழுங்குகிறாள்..??'

"என்னம்மா.. அப்படி பாக்குற..??" அசோக்கின் அம்மா அன்பாய் கேட்க,

"ஒ..ஒண்ணுல்ல ஆண்ட்டி.. அ..அசோக்.. அசோக் எங்க..??" ப்ரியா திணறலாக கேட்டாள்.

"அப்படியே காத்து வாங்கிட்டு வரேன்னு மொட்டை மாடிக்கு போனான்..!! ஏன்மா.. அவனை பாக்கணுமா..??"

"ம்ம்..!!"

"சரி போ.. மேலதான் இருக்கான்.. போய்ப்பாரு..!!"

'விட்டால் போதும்..' என்பது போல ப்ரியா படக்கென எழுந்து கொண்டாள். அவளுடைய முதுகுக்குப்பின், அவளை கிண்டல் செய்து எல்லோரும் கெக்கேபிக்கே என்று கனைக்க, இவள் அதை கண்டுகொள்ளாமல் வெளியே வந்தாள். படியேறி மொட்டை மாடி சென்றாள். தூரத்தில் முதுகு காட்டி நின்றவாறு பூங்காவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அசோக் கண்ணில் பட்டான். மெல்ல நடந்து அவனை நெருங்கினாள்.



ப்ரியா வந்ததை அசோக் கவனிக்கவில்லை. அவனுக்கு அருகில் சென்ற ப்ரியா, ஓசை ஏதும் எழுப்பாமல், கைப்பிடி சுவற்றில் ஊன்றியிருந்த அவனது வலது கையை, தனது கையால் இதமாக பற்றி ஒரு அழுத்தம் கொடுத்தாள். உடனே படக்கென திரும்பி பார்த்த அசோக், ப்ரியா என்று தெரிந்ததும் வெடுக்கென தனது கையை உருவிக் கொண்டான். சற்றே சீற்றமாக கேட்டான்.

"ப்ச்.. என்ன..??"

"என் மேல கோவம் இன்னும் போகலையா..??"

"உன் மேல கோவப்பட நான் யாரு..??" அசோக்கின் வார்த்தைகள் ப்ரியாவை வன்மையாக தாக்கின.

"ஏண்டா இப்படிலாம் பேசுற..??"

"இனிமே எல்லாம் அப்படித்தான்..!! என்ன விஷயம்னு சொல்லு..!!"

அசோக் கடுமையாக சொன்னான். வெறுப்பு கொப்பளிக்கும் அவன் முகத்தையே ப்ரியா பரிதாபமாக பார்த்தாள். சில வினாடிகள் தயங்கியவள், அப்புறம் மெல்ல ஆரம்பித்தாள்.

"கீ..கீழ.. அவங்க எல்லாம் என்னன்னவோ பேசுறாங்க அசோக்..!!"

"என்ன பேசுறாங்க..??"

"நம்ம கல்யாணப் பேச்சை திரும்ப ஆரம்பிச்சுட்டாங்க.. உன்னை கட்டிக்க சம்மதமான்னு எங்கிட்ட கேக்குறாங்க..!!"

"ஓஹ்..!! அவங்களுக்கு வேற வேலையே கெடயாது.. அவங்க எய்ம்லாம் ஏதோ ஒரு கழுதையையோ குரங்கையோ புடிச்சு எனக்கு கட்டி வச்சிடணும்.. அவ்ளோதான்.. ச்ச..!!" அசோக் சலிப்பாக சொல்ல,

"என்னது..???" ப்ரியா முகத்தை சுளித்தவாறு அவனை பார்த்தாள்.

"ஹ்ம்ம்.. அதுக்கு நீ என்ன சொன்ன..??"

"நான் என்னத்த சொல்றது..?? நீதான் அவங்ககிட்ட போய் சொல்லணும்..!!"

"நானா..?? நான் என்ன சொல்லணும்..??"

"இங்க பாரு அசோக்.. இனிமேயும் நீ காலம் கடத்துறது கொஞ்சம் கூட சரி இல்ல.. அல்ரெடி ரொம்ப லேட்..!! போய் அவங்ககிட்ட உன் மனசுல இருக்குறதை பளிச்சுன்னு சொல்லிடு..!!"

"ப்ச்..!! என்ன சொல்றேன்னே எனக்கு ஒன்னும் புரியல..!!"

"ஹையோ.. 'செண்பகத்தைத்தான் நான் கட்டிக்கப்போறேன்'னு.. அவங்ககிட்ட போய் சொல்லுன்னு சொல்றேன்..!!"

ப்ரியா சொன்ன விஷயத்தை சரியாக புரிந்து கொள்ளவே அசோக்கிற்கு சில வினாடிகள் பிடித்தன. பிறகு புரிந்ததும் எரிச்சலாக கேட்டான்.

"என்ன உளர்ற..?? செண்பகத்தை எதுக்கு நான் கட்டிக்கணும்..??"

"அவளைத்தான நீ லவ் பண்ற..??"

"உனக்கென்ன லூசா..?? அவளை நான் லவ் பண்றேன்னு உனக்கு யாரு சொன்னது..??" அசோக் முறைக்க, இப்போது ப்ரியா நெற்றியை சுருக்கினாள்.

"செ..செண்பகத்தை லவ் பண்றேன்னு.. நீ..நீதான அன்னைக்கு என் அப்பாகிட்ட.." ப்ரியா தடுமாற்றமாய் சொல்லி முடிக்கும் முன்பே அசோக் புரிந்து கொண்டான்.

"ப்ச்.. நான் லவ் பண்றேன்னு மட்டுந்தான் சொன்னேன்.. அவராத்தான் 'அன்னைக்கு உங்ககூட வந்த பொண்ணா'ன்னு கேட்டாரு..!! அந்த நேரம் பாத்து.. நீ வேற இந்தப்பக்கம் அவசரப் படுத்தின.. நானும் கால் கட் பண்ற அவசரத்துல ஆமாம்னு சொல்லிட்டேன்..!!" என்று அவன் படபடவென சொல்ல,

"ஓ..!!"

அதிர்ச்சியில் ப்ரியாவுக்கு வாய் 'ஓ'வென பிளந்து கொண்டது. ஒரு கையால் அந்த வாயை மூடிக்கொண்டாள். விழிகளை அகலமாய் விரித்து, உறைந்து போனவளாய் அசோக்கையே பார்த்தாள். அவன் சொன்னதை இன்னும் நம்ப முடியாதவளாகவே சிலவினாடிகள் திகைப்பாய் பார்த்தாள். அப்புறம் சற்றே திணறலாக கேட்டாள்.

"அ..அப்போ நீ செண்பகத்தை லவ் பண்ணலையா..??"

"ம்ஹூம்..!!'

"ஐயோ.. என்னடா நீ..??? நீ அவளை லவ் பண்றேன்னு நெனச்சுல நான் எல்லாம் பண்ணிட்டேன்.. தேவை இல்லாம உன் மேல கோவத்தை காட்டிட்டேன்.. வேணுன்னே வெறுப்பை கொட்டிட்டேன்.. இந்த ஆக்சிடன்ட்க்கு கூட.."

ஏதோ ஒரு அவசரத்தில் படபடவென பேசிவிட்ட ப்ரியா, பட்டென நாக்கை கடித்துக் கொண்டாள். உடனே அமைதியாகிப் போனாள். அவஸ்தையாய் அசோக்கின் முகத்தை ஏறிட்டாள். ஆனால் அவள் சொன்னதை கேட்டு அதிர்ச்சியுற்ற அசோக், அந்த வார்த்தைகளை பிடித்துக் கொண்டான்.

"ம்ம்.. சொல்லு ப்ரியா.. இந்த ஆக்சிடன்ட்கு கூட..??" அசோக் கூர்மையாக கேட்க, ப்ரியா இப்போது சுதாரித்துக் கொண்டாள்.

"அ..அசோக்.. ப்ளீஸ்.. நான் உனக்கு ஆரம்பத்துல இருந்து சொல்றேன்..!!"

"இல்ல.. இதை மொதல்ல சொல்லு.. இந்த ஆக்சிடன்ட்கு கூட..?? என்ன பண்ணின..??"

"அ..அசோக்.. ப்ளீஸ்..!!" ப்ரியா கெஞ்சினாள்.

"சொல்லுடி..!!" அசோக் கத்தினான். ப்ரியாவுக்கு வேறு வழி இருக்கவில்லை.

"அன்னைக்கு வேணுன்னேதான் அப்படி பண்ணினேன்.. அது ஒன்னும் க்ரிட்டிக்கல் இஷ்யூலாம் இல்ல.. பொய் சொல்லித்தான் உன்னை உடனே ஆபீஸ் கெளம்பி வர சொன்னேன்..!!"

ப்ரியா சொல்ல சொல்லவே, அசோக்கின் மனதுக்குள் அவள் மீது ஒரு ஆத்திரம் குபுகுபுவென பொங்க ஆரம்பித்தது. அவள் சொன்னதை நம்பி.. பைக்கை எடுத்துக்கொண்டு பறந்து.. லாரியை முந்தி செல்ல நினைத்து.. வேகத்தால் கட்டுப்பாட்டை இழந்து.. லாரி மீது மோதி.. ரோட்டோரமாய் தூக்கி வீசப்பட்டது.. அவனுடைய கண்முன் படமாக ஓடியது..!!

"ஓ..!! நெனச்சேன்..!!" என்றான் வெறுப்புடன்.

"ப்ளீஸ்டா அசோக்.. நான் ஏன் அப்படிலாம் செஞ்சேன்னு புரிஞ்சுக்கோ.. எல்லாத்துக்கும் காரணம் இருக்கு..!!"

"என்ன காரணம் இருக்கு..?? உனக்கு உடம்பு பூரா கொழுப்புன்றதை தவிர..??"

"ஹையோ.. நான்.." ப்ரியா சொல்ல முடியாமல் தவித்தாள்.

"ம்ம்.. சொல்லு..!!"

தன் காதலை எப்படி எப்படி எல்லாம் அசோக்கிடம் சொல்லவேண்டும் என்று ப்ரியா எத்தனையோ நாள் கனவு கண்டிருக்கிறாள். எந்தெந்த வார்த்தைகள் எல்லாம் உபயோகித்து அலங்காரத்துடன் சொல்லவேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறாள். ஆனால்.. அந்த வார்த்தைகள் எல்லாம் இப்போது அவளுக்கு கைகொடுக்காமல் போக,

"நா..நான் உன்னை லவ் பண்றன்டா..!!" என்றாள் அலங்காரமற்ற வார்த்தைகளால்.. சற்றே பரிதாபமாக..!!

அசோக்கும் எத்தனையோ நாள் ப்ரியாவின் வாயிலிருந்து இந்த வார்த்தைகளை கேட்க ஏங்கியிருக்கிறான். அவள் தன் காதலை சொல்லும்போது, தன் மனம் எப்படி எல்லாம் பூரித்துப் போகும் என்று கற்பனை வளர்த்திருக்கிறான். ஆனால்.. அந்த நேரத்தில் ப்ரியாவின் மீது அவனுக்கிருந்த அளவற்ற ஆத்திரம்.. அவள் காதல் சொன்ன மகிழ்ச்சியை மங்கிப் போக செய்திருந்தது..!! சீறினான்..!!



"ஓ..!! லவ் பண்ணினா என்ன வேணா பண்ணுவியா..?? ஏதோ நல்ல நேரம்.. கையோட போச்சு..!! உசுரு போயிருந்தா..??"

"எனக்கு புரியுதுடா.. நான் செஞ்சது தப்புதான்..!! என்னை மன்னிச்சுடு.. ப்ளீஸ்..!!" பரிதாபமாக சொன்னவாறு ப்ரியா அசோக்கின் கையை பற்றினாள். அவன் வெடுக்கென அவளுடைய கையை உதறினான்.

"ச்சீ.. கையை விடு..!! என் கண் முன்னாடியே நிக்காத.. போயிடு..!!"

"ப்ளீஸ் அசோக்.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு..!!"

"என்ன சொல்லப் போற..??"

"நான் உன் மேல உயிரையே வச்சிருக்கேன்டா..!! ஆறு வருஷத்துல இந்த லவ் எப்போ ஆரம்பிச்சதுன்னு கூட எனக்கு தெரியல.. கொஞ்சம் கொஞ்சமா உள்ள வந்து.. இப்போ என் மனசு பூரா நீதான் இருக்குற..!! நீ எனக்கு சொந்தமானவன்னு நான் முடிவே பண்ணிட்டேன் அசோக்.. அதான் செண்பகம் நமக்குள்ள வந்ததை என்னால தாங்கிக்க முடியல..!! அவ மேல பொறாமை.. பொசசிவ்னஸ்..!! அதான் இப்படிலாம் நடந்துக்கிட்டேன்.. எல்லாத்துக்குமே உன் மேல இருந்த லவ்தாண்டா காரணம்..!!" ப்ரியா இரக்கமாக சொல்ல,

"பொய்..!! எல்லாத்துக்கும் உன்னோட ஈகோதான் காரணம்.. நான் நெனச்சா என்ன வேணா பண்ணுவேன்ற உன் திமிர்தான் காரணம்..!! பண்றதெல்லாம் பண்ணிட்டு.. இப்போ லவ் மேல பழியை போடுறியா..?? இதுல என்னை ஈகோ புடிச்சவன்னு கிண்டல் பண்றது..?? என் ஈகோலாம் சும்மா வெளையாட்டுத்தனமாதான் இருக்கும்.. இப்படி கையை முறிச்சு ஹாஸ்பிட்டல் அனுப்பாது..!! இன்னைக்கு நீ டெக்லீடா இருக்குறேன்னா அதுக்கு காரணம் நான்.. ஆனா நீ.. அந்த அதிகாரத்தை வச்சுக்கிட்டு.. என் உசுருக்கே உலை வச்சிட்ட.. இல்ல..??" அசோக் சூடாக கேட்டான்.

"இல்லடா.. சத்தியமா இல்ல.. நான் அப்படிலாம் நெனைக்கவே இல்ல..!!"

"நடிக்காத..!! 'உன்னை டீமே விட்டே தூக்குறேன் பாரு'ன்னு வெரல் சொடுக்கி சவால் விட்டவதான நீ..?? 'எனக்கும் நேரம் வரும்.. அப்பா நான் யாருன்னு காட்டுறேன்'னு சொன்னவதான நீ..?? இன்னும் கொஞ்சம்னா இந்த உலகத்தை விட்டே தூக்கிருப்ப..!!"

"ஹையோ.. உனக்கு புரியலை.. அது வேற.. இது வேற..!!"

"என்ன வேற வேற..?? எனக்கு எல்லாம் ஒண்ணாத்தான் தெரியுது..!!"

"இப்படி புரிஞ்சுக்கவே மாட்டேன்னு அடம் புடிச்சா நான் என்ன பண்ணட்டும்..?? நான் பண்ணினது தப்புதான்னு நான் ஒத்துக்கிட்டேன்.. நான் செஞ்ச தப்பை திருத்திக்க எனக்கு ஒரு சான்ஸ் குடுக்க மாட்டியா..?? என்னை கொஞ்சம் பேச விடு.. ப்ளீஸ்..!!!" ப்ரியா அந்த மாதிரி அழுகுரலில் கேட்கவும், அசோக் இப்போது சற்றே ஆத்திரம் தணிந்தான்.

"சொல்லு..!!"

"நான் உனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணி தர்றேன்.. ஓகேவா..??"

"என்ன..??"

"உனக்கு ஆக்சிடன்ட் ஆனது தெரிஞ்சதுமே.. என் ஈகோ செத்துப் போச்சு அசோக்..!! இனிமே சத்தியமா அந்தமாதிரி நடந்துக்க மாட்டேன்.. எந்த வகையிலையும் உன் மேல வெறுப்பு காட்ட மாட்டேன்.. ஆபீசுக்கு உள்ளேயும் சரி.. ஆபீசுக்கு வெளிலயும் சரி.. சத்தியமா உனக்கு இனி எந்த கஷ்டமும் கொடுக்க மாட்டேன்டா..!! இட்ஸ் எ ப்ராமிஸ்.. என்னை நம்பு.. ப்ளீஸ்..!!"

ப்ரியா அசோக்கின் தலை மீது கைவைத்து உறுதியான குரலில் சொன்னாள். அவள் சொன்னதைக்கேட்டு அசோக் எந்த உணர்ச்சியும் காட்டாமல் நின்றிருந்தான். இப்போது ப்ரியா அசோக்கின் தலை மீது இருந்த கையை மெல்ல கீழிறக்கி, அவனுடைய நெற்றியை மென்மையாக வருடினாள். கலைந்திருந்த அவனது தலை முடியை காதோரத்திற்கு ஒதுக்கிவிட்டாள். பிறகு அவனது கன்னத்தை கனிவாக தாங்கிப்பிடித்தவாறு, பரிதாபமான குரலில் சொன்னாள்.

"நீ எனக்கு வேணுண்டா அசோக்..!! நீ என்னை லவ் பண்ணாட்டாலும்.. என் லைஃப் லாங் நீ எனக்கு வேணும்.. ஒரு ஃப்ரண்டா..!! நான் என்னை மாத்திக்கிட்டேண்டா.. நான் இதுவரை செஞ்சதுக்காக என்னை நீ வெறுத்து ஒதுக்கிடாத ப்ளீஸ்.. என்னால அதை தாங்கிக்க முடியாது.. நீ எனக்கு எப்போவும் வேணும்..!!"

ப்ரியாவின் கெஞ்சலில் அசோக் சற்றே நெகிழ்ந்து போனான். அன்று ஸ்குவாஷ் கோர்ட்டில் அவளிடம் அடிபட்டுவிட்டு, அப்புறம் அவள் ஒத்தடம் தந்தபோது.. அவனுக்கு எந்த மாதிரி ஒரு உணர்வு இருந்ததோ.. அதே மாதிரியான ஒரு உணர்வு இப்போது மெகா சைஸில் அவன் மனதை நிறைத்திருந்தது..!! 'இவளிடம் ஒத்தடம் பெறுவது இதமாகத்தான் இருக்கிறது.. ஆனால் ஒத்தடத்துக்கு முன் இவள் அடித்த அடியின் வலி.. அதை விட அதிகமாக இருக்கிறதே..??'

"சரி விடு.. இதை இத்தோட விட்ரலாம்..!!"

அசோக் சாந்தமாக சொன்னான். அவனுடைய ஆத்திரம் தணிந்து போயிருந்ததில் பிரியாவுக்கும் இப்போது நிம்மதியாக இருந்தது. அப்புறம் கொஞ்ச நேரத்திற்கு அவர்கள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. புயலடித்து ஓய்ந்த மாதிரி இருந்தது. கைப்பிடி சுவற்றில் சாய்ந்தவாறு.. கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியவாறு.. வானத்தை வெறித்துக் கொண்டிருந்தனர்..!!

சிறிது நேரம் கழித்து ப்ரியா முகத்தை பக்கவாட்டில் திருப்பி, அசோக்கை பார்த்தாள். அவனுடைய முகத்தில் எந்தவித சலனமும் இருக்கவில்லை. ப்ரியாவின் இதழ்களில் இப்போது மெலிதாக ஒரு புன்னகை அரும்பியது. தனது கையால் அசோக்கின் கையை தேடிப்பிடித்தாள். அவனது விரல்களோடு தனது விரல்களை கோர்த்துக் கொண்டாள். மென்மையாக நெறித்தாள். அசோக் இப்போது அவளுக்கு எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. அவன் அமைதியாய் நின்றிருக்க, ப்ரியாதான் மெல்லிய குரலில் கேட்டாள்.

"யார் அந்தப்பொண்ணு..??"

"எ..எந்தப்பொண்ணு..??"

"அதான்.. நீ லவ் பண்ற அந்த லக்கி கேர்ள்..!! செண்பகம் இல்லைன்னு சொல்லிட்ட.. அப்படினா வேற யாரு..??"

இப்போது அசோக் திரும்பி ப்ரியாவின் முகத்தை ஏறிட்டான். ஓரிரு வினாடிகள் அவள் கண்களையே கூர்மையாக பார்த்தான். அப்புறம் என்ன நினைத்தானோ.. ஒரு பெருமூச்செறிந்துவிட்டு, சுரத்தற்ற குரலில் சொன்னான்.

"நான் யாரையும் லவ் பண்ணல..!!"

"ப்ச்.. அப்புறம் ஏன் அன்னைக்கு அப்பாட்ட அப்படி சொன்ன..??"

"அது.. சும்மா அவரை சமாளிக்க பொய் சொன்னேன்..!!"

"இல்ல.. இப்போ நீ சொல்றதுதான் பொய்..!! நீ யாரையோ லவ் பண்ற..!!"

"ப்ச்.. அதான் இல்லன்னு சொல்றேன்ல..??"

"கமான் அசோக்.. ஏன் மறைக்கிற..?? இத்தனை நாளா நீ எங்கிட்ட மறைச்சதுக்கே உனக்கு நல்ல பனிஷ்மன்ட் கொடுக்கணும்..!! சொல்லு.. யாரை லவ் பண்ற..?? எனக்கு இப்போ தெரிஞ்சாகனும்..!!"

"................."

"ஹ்ம்ம்ம்... எங்கிட்ட சொல்றதுல என்னடா தயக்கம்..?? இதுதான் நீ என் ப்ரெண்ட்ஷிப்கு தர்ற மரியாதையா..?? யாரை லவ் பண்ணாலும் உடனே எங்கிட்ட வந்து சொல்லிருக்க வேணாமா..?? ம்ம்..??" ப்ரியா புன்னகையுடன் கேட்க, அசோக்கும் ஏதோ ஞாபகத்தில்..

"ப்ச்.. வேற யாரையாவது லவ் பண்ணிருந்தாத்தான் உடனே உன்கிட்ட சொல்லிருப்பேனே..!!" என்று அவசரமாக சொல்லிவிட்டான். ப்ரியாவிற்கு உடனே சுருக்கென்று இருந்தது. 'என்ன சொல்லுகிறான் இவன்..??'

"எ..என்ன..?? இப்ப என்ன சொன்ன.. திரும்ப சொல்லு..??" என்று நெற்றியை சுருக்கியவாறு கேட்டாள். அசோக் இப்போது சுதாரித்துக்கொண்டவனாய்..

"யா..யாரையாவது லவ் பண்ணிருந்தாத்தான் உடனே உன்கிட்ட சொல்லிருப்பேனேன்னு சொன்னேன்..!!" என்று சற்று முன் சொன்னதை சற்றே மாற்றி சொன்னான்.

"இல்ல இல்ல.. வேற யாரையாவதுன்னு சொன்ன..?? அப்படின்னா என்ன அர்த்தம்..??"

"ப்ச்.. அப்படிலாம் நான் சொல்லவே இல்ல..!!"

"ம்ஹூம்.. எனக்கு தெளிவா கேட்டுச்சு..!! வேற யாராவதா இருந்தா எங்கிட்ட உடனே சொல்லிருப்ப.. அப்போ யாரா இருந்தா எங்கிட்ட சொல்ல தயங்கிருப்ப..?? யோசிச்சு பாத்தா.. ம்ம்ம்.. ம்ம்ம்.."

ப்ரியாவின் மூளை இப்போது சுர்ரென சுறுசுறுப்பாக இயங்கியது. ஆறு வருடங்களாக அசோக்குக்கும் அவளுக்குமான நிகழ்வுகள்.. அப்போது அவனுடைய பேச்சு.. பார்வை.. நடவடிக்கைகள்.. எல்லாம் பளிச் பளிச்சென மின்னல் போல அவளுடைய நினைவில் வந்து போயின..!! அவள் தலையை சற்றே கவிழ்த்தவாறு அந்த மாதிரி யோசித்துக்கொண்டிருக்க, அசோக் அவளுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். எல்லாவற்றையும் அவசரமாய் ஆராய்ந்த ப்ரியாவின் புத்தி.. அவளுக்கு ஒரு முடிவை அறிவிக்க.. அவள் இப்போது தனது கருவிழிகளை மேலே உருட்டி.. அசோக்கின் முகத்தை ஒரு மேல்ப்பார்வை பார்த்து.. பட்டென்று கேட்டுவிட்டாள்..!!

"நீ என்னைத்தான லவ் பண்ற..??"

"ஹேய்.. அ..அதுலாம் ஒண்ணுல்ல..!!" அசோக் தடுமாற்றமாய் சொன்னான்.

"இல்ல இல்ல.. நீ என்னைத்தான் லவ் பண்ற..!! மறைக்காத அசோக்.. உண்மையை சொல்லு.. ப்ளீஸ்..!!" ப்ரியா தவிப்பாக கேட்டாள்.

"ஏய்.. அதான் இல்லைன்னு சொல்றேன்ல..??" அசோக் சொல்லும்போதே அவனையும் அறியாமல், ஒரு சிறு புன்னகை அவனுடைய இதழ் வழியே கசிந்தது.

"பாரு பாரு.. சிரிக்கிற பாரு..!! இட்ஸ் கன்ஃபார்ம்ட்.. யு ஆர் இன் லவ் வித் மீ..!!" ப்ரியா முகமெல்லாம் பரவசமாய் சொல்ல, அசோக் இப்போது பட்டென முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டான்.

"ஒய்.. உனக்கென்ன லூசா..?? சொன்னா புரியாதா..?? நான்தான் இல்லைன்னு சொல்றேன்ல..?? அப்புறமும் நாந்தான நாந்தானன்னு கேட்டா என்ன அர்த்தம்..?? நான் யாரையும் லவ் பண்ணலை.. லவ் பண்ணலை.. லவ் பண்ணலை..!! போதுமா..???"

அசோக் அப்படி பெரிய குரலில் கத்த, ப்ரியா இப்போது சோர்ந்து போனாள். அவனுடைய முகத்தையே ஒருமாதிரி ஏக்கமாய் பார்த்தாள். 'ஏண்டா இப்படி என்னை சித்திரவதை செய்கிறாய்..??' என்பது போல இருந்தது அந்தப்பார்வை. அசோக்கும் அவளுடய முகத்தையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடய பார்வையில் ஒரு குறும்பு மிளிர்ந்ததை ப்ரியா சில வினாடிகளிலேயே புரிந்து கொண்டாள். அதுவரை அவனை ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தவள், இப்போது பட்டென முகம் மாற்றிக்கொண்டு முறைத்தாள்.

"நீ என்னைத்தான் லவ் பண்ற.. எனக்கு நல்லா தெரிஞ்சு போச்சு..!! ஆனா.. அதை சொல்றதுக்கு உன் ஈகோ இடம் குடுக்கலைல..?? இத்தனை நாளா நான் ஈகோ பாத்துட்டு உன்னை கஷ்டப்படுத்தினேன்னு.. நீ இப்போ என்னை கஷ்டப்படுத்தி பாக்க நெனைக்கிறல..?? பரவால.. இட்ஸ் ஓகே..!! நானும் பாக்குறேன்.. எத்தனை நாள் நீ இப்படி இருக்குறேன்னு பாக்குறேன்..!! 'என் லவ்வை அக்சப்ட் பண்ணிக்கோ ப்ரியா'ன்னு உன்னை எங்கிட்ட வந்து கெஞ்ச வைக்கிறனா இல்லையான்னு பாரு..!!"

ப்ரியா சவால் விடுவது மாதிரி சொன்னாள். மார்பில் புரண்ட கூந்தலை தூக்கி பின்புறம் வீசியவள், விடுவிடுவென படிக்கட்டை நோக்கி வேகமாய் நடந்தாள். அசோக்கும் இப்போது மெல்ல அவன் நின்றிருந்த இடத்தை விட்டு நகர்ந்தான். படிகளில் தபதபவென்று கோபமாக இறங்குகிற ப்ரியாவை, மேலிருந்து பார்த்தான். அவ்வளவு நேரம் தயங்கி தயங்கி சிந்திய புன்னகையை, அவன் உதடுகள் இப்போது தாராளமாய் சிந்தின. 'போடீ லூசு.. சவால் விடுற ஆளைப்பாரு..!!' என்று முணுமுணுத்தன.



அத்தியாயம் 23

ப்ரியா அன்று வீட்டுக்கு சென்றதுமே தன் அப்பாவை பார்த்து முதலில் பேசிய வார்த்தைகள்..

"உங்களுக்கு சிக்கன் பிரியாணி பண்ண தெரியும்ல டாடி..??"

அடுத்த நாள் காலையில் ஐந்து மணிக்கெல்லாம் வரதராஜன் எழுந்துவிட்டார். மகளுக்கு திடீரென என்னாயிற்று என்ற குழப்பத்துடனே, மணக்க மணக்க சிக்கன் பிரியாணி தயார் செய்தார். எழுந்து குளித்து ஆபீசுக்கு கிளம்பிய ப்ரியா, அப்பா செய்து வைத்திருந்த பிரியாணியை ஒரு பெரிய டப்பாவில் அடைத்து எடுத்துக் கொண்டாள்.

"எனக்கு எதுவும் புரியலைம்மா.. திடீர்னு ஏன் உனக்கு சிக்கன் பிரியாணி மேல ஆசை..?? அதுவும் காலாங்காத்தால..??"

அப்பாவின் கேள்விக்கு ப்ரியா பதில் சொல்லாமல் புன்னகைத்தாள். ஷோல்டர் பேகுக்குள் அந்த டப்பாவை திணித்து, ஜிப் இழுத்து மூடினாள். பேகை தோளில் மாட்டிக்கொண்டாள்.

அடுத்து ஒரு மணி நேரம் கழித்து.. அவர்கள் ஆபீஸ் கேஃபிட்டீரியாவில்.. அந்த பிரியாணி டப்பா மூடி திறக்கப்பட்டு கிடந்தது..!! ஒருவித தயக்கத்துடனே.. ஓரக்கண்ணால் ப்ரியாவை மிரட்சியாக பார்த்துக்கொண்டே.. ஒரு கையால் பிரியாணி அள்ளி.. மெல்ல வாயில் திணித்துக்கொண்டாள் செண்பகம்..!!



"உ..உங்களுக்கு..??" அசை போட்டுக்கொண்டே ப்ரியாவிடம் கேட்டாள்.

"ச்ச.. அக்காக்கு வேணாண்டா.. எல்லாம் உனக்குத்தான்.. சாப்பிடு..!! இந்தா.. முட்டை எடுத்து வச்சுக்கோ..!!"

கனிவுடன் சொல்லிக்கொண்டே, தனியாக இருந்த அவித்த முட்டையை எடுத்து, தட்டில் வைத்தாள் ப்ரியா. செண்பகம் மெல்ல அதை கையில் எடுத்து, ஒரு கடி கடித்துக்கொண்டே கேட்டாள்.

"என்னால நம்ப முடியலைக்கா.. நெஜமாவே நீங்க அசோக் மாமாவை லவ் பண்றீங்களா..??"

"ஆமாண்டா..!! இப்போ இல்ல.. ரொம்ம்ம்ப நாளா லவ் பண்றேன்.. அவன் எனக்குத்தான் சொந்தம்னு என் மனசுக்குள்ள ஒரு பொசஸிவ்னஸ்..!! அந்த பொசஸிவ்னஸ்லதான் அக்கா அப்படி எல்லாம் நடந்துக்கிட்டேன்.. தேவை இல்லாம உனக்கு நெறைய கஷ்டம் கொடுத்திட்டேன்.. அக்காவை மன்னிச்சுடுடா.. ப்ளீஸ்..!!"

"சேச்சே.. பரவாலக்கா.. உங்க மேல எந்த தப்பும் இல்ல.. உங்க பொசிஷன்ல இருந்திருந்தா நானும் இதைத்தான் செஞ்சிருப்பேன்..!!" என்று சொன்ன செண்பகம் அடுத்த நொடியே செய்தது, லெக்பீஸை வாயால் கவ்வி இழுத்ததுதான்..!!

"ஹையோ.. ஹவ் ஸ்வீட் ஆஃப் யூ..!!! உன்னைப்போய் இப்படி கஷ்டப்படுத்திட்டனே.. அதை நெனச்சாத்தான் அக்காவுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு செண்பகம்..!!"

"இட்ஸ் ஓகேக்கா..!!" என்று வெகுளியாக புன்னகைத்த செண்பகம், உடனே..

"பிரியாணி சூப்பரா இருக்குக்கா..!!" என்று பல் இளித்தாள்.

"ஓ..!! உனக்கு புடிச்சிருக்கா..??"

"ஹ்ம்ம்.. ரொம்ப பிடிச்சிருக்கு.. நல்லா பண்ணிருக்கீங்க..!!"

"ஹாஹா.. ஆக்சுவலா இதை விட பிரம்மாதமா பண்ணுவேன் செண்பகம்.. இன்னைக்கு காலாங்காத்தால எழுந்து.. தூக்க கலக்கத்தோடவே பண்ணினனா.. அதான் கொஞ்சம் சரியா வரல..!! பிரியாணி பண்றதுல என்னை அடிச்சுக்க ஆளே இல்ல.. தெரியுமா..??" ப்ரியா வாய் கூசாமல் பொய் சொன்னாள்.

"ஓ.. அப்படியாக்கா..??" அதையும் நம்பி, செண்பகம் அப்பாவியாக வாய் பிளந்தாள்.

"ஹ்ம்ம்..!! அசோக்குக்கும் எனக்கும் மேரேஜ் மட்டும் ஆகட்டும்.. அக்கா உனக்கு டெயிலி பிரியாணி பண்ணித் தரேன்.. சரியா..??" ப்ரியா ஆசை வார்த்தை காட்ட,

"ம்ம்ம்ம்.. தேங்க்ஸ்க்கா..!!" செண்பகத்தின் கண்களில் இப்போதே கலர்கலராய் பிரியாணி கனவு.

"ஹ்ம்ம்.. ஊர்ல இருந்து வந்தவங்கலாம் என்னைக்கு கெளம்புறாங்க..??"

"இன்னைக்கு கெளம்பிடுவாங்கக்கா.. அத்தையும் மாமாவும் மட்டும் ரெண்டு நாள் இருந்துட்டு கெளம்புவாங்க..!! வீட்ல எல்லாருக்கும்.." செண்பகம் பாதியிலேயே நிறுத்திவிட்டு பிரியாணியை அசை போட..

"ம்ம்..?? எல்லாருக்கும்..??" ப்ரியா பொறுமை இல்லாமல் கேட்டாள்.

"எல்லாருக்கும் உங்களை ரொம்ப பிடிச்சு போச்சுக்கா..!! உங்களைத்தான் மேரேஜ் பண்ணிக்கனும்னு.. அசோக் மாமாவை எல்லாரும் நேத்து கம்பல் பண்ணாங்க..!!"

"ஓ..!! இவன் என்ன சொன்னான்..??"

"நானே கை உடைஞ்சு கெடக்குறேன்.. இப்போ வந்து கல்யாணம் பத்தி பேசுறீங்க.. எல்லாம் கொஞ்ச நாள் போகட்டும்'னு சொன்னாரு..!!"

"பாத்தியா.. பாத்தியா..?? வேணாம்னும் சொல்லல.. வேற பொண்ணு பாருங்கன்னும் சொல்லல..!! இதுல இருந்தே தெரியல.. அவன் என்னைத்தான் லவ் பண்றான்னு..??"

"ஆமாக்கா.. நீங்க சொல்றது சரிதான்..!! கொஞ்ச நாளாவே.. எனக்கு கூட அந்த சந்தேகம் மைல்டா இருக்குது..!!"

"எ..எப்படி சொல்ற..??"

"மாமா அடிக்கடி அவர் லேப்டாப்ல.. உங்க போட்டோஸ்லாம் எடுத்து.. மொறைச்சு மொறைச்சு பாத்திட்டு இருப்பாரு..!!" செண்பகம் சொல்ல, ப்ரியாவின் மனதில் அப்படி ஒரு புல்லரிப்பு.

"ஆஹா.. இது எப்போ இருந்து..??"

"நான் வந்ததுல இருந்தே கவனிச்சுட்டுத்தான்க்கா இருக்குறேன்..!!"

"ஓஹோ..?? அதுசரி.. என் ஃபோட்டோஸ் எப்படி அவனுக்கு கெடைச்சது..??"

"நீங்கதான் ஷேர் பண்ணினதா சொன்னாரு..??"

"நானா..?? நான் எங்க ஷேர் பண்ணினேன்..?? ஹ்ம்ம்... இப்போ புரியுது..!! அவனுக்கு என் மெஷின் அக்சஸ் கொடுத்திருந்தேன்ல.. அப்போ லவட்டிருப்பான்.. திருட்டுப்பய..!!"

"ஹாஹா..!!"

"ஹ்ம்ம்.. சந்தேகமே இல்ல செண்பகம்.. அவன் என்னைத்தான் லவ் பண்றான்..!!"

"ம்ம்.. எனக்கும் அப்படித்தான்க்கா தோணுது..!! ஆனா.. நீங்க லவ் பண்றேன் சொன்னப்புறமும்.. மாமா ஏன் இப்படி பிகு பண்றாரு..??"

"எல்லாம் கொழுப்புதான்.. வேறென்ன..?? ஈகோ புடிச்ச பய..!! நான் இத்தனை நாளா அவனை கஷ்டப்படுத்தினேன்ல.. அதான் அவன் கொஞ்ச நாள் என்னை காய விடலாம்னு நெனைக்கிறான்..!! ஹ்ம்ம்.. என் மேல எவ்வளவு பிரியமா இருப்பான் தெரியுமா.. எப்படி இழைவான் தெரியுமா.. என்னெல்லாம் ஹெல்ப் பண்ணிருக்கான் தெரியுமா..?? என்னைக்கு அந்த நாசமாப்போன அவார்ட் எனக்கு குடுத்தாங்களோ.. அன்னைக்கு ஆரம்பிச்சது எல்லாம்..!! இல்லனா.. நானும் அவனும் சேர்றதுல எந்த பிரச்சினையும் வந்திருக்காது..!!"

"கவலைப்படாதீங்கக்கா.. மாமாவை எப்படியும் நம்ம வழிக்கு கொண்டு வந்துடலாம்..!!" செண்பகம் சொல்ல, ப்ரியாவுக்கு லேசாக முகம் சுருங்கியது.

"எ..என் வழிக்குன்னு சொல்லேன்..??"

"ஓகே ஓகே.. உங்க வழிக்கு கொண்டு வந்துடலாம்..!!" இப்போது ப்ரியாவின் முகத்தில் இப்போது மீண்டும் பல்பு எரிந்தது.

"நல்லா அள்ளி சாப்புடு செண்பகம்.. குருவி மாதிரி கொறிச்சுட்டு இருக்குற..?? நீ வந்தப்போ இருந்ததுக்கு.. இப்போ ரொம்ப எளைச்சு போயிட்ட..!!" என்று பாசத்தை பொழிந்தாள்.

"ம்ம்.. ஆமாக்கா.. பெங்களூர் சாப்பாடு எனக்கு புடிக்கவே இல்ல..!!" செண்பகமும் மனசாட்சியே இல்லாமல் கவலைப்பட்டாள்.

"ஹ்ம்ம்.. உன் மாமனை வழிக்கு கொண்டு வர்றதுக்கு.. நீதான் அக்காவுக்கு ஹெல்ப் பண்ணனும் செண்பகம்..!!"

"சொல்லுங்கக்கா.. என்ன ஹெல்ப்பா இருந்தாலும் பண்றேன்..!!"

"உனக்கு ஏதாவது ஐடியா தோணுச்சுனா சொல்லேன்..??"

"ஐடியாவா..??"

செண்பகம் பிரியாணியை அசை போட்டுக்கொண்டே யோசித்தாள். 'என்ன பண்ணலாம்.. என்ன பண்ணலாம்..' என்று முணுமுணுத்தவாறே நெற்றியை கீறிக்கொண்டாள். ப்ரியா செண்பகத்தின் முகத்தையே ஆர்வமாய் பார்த்துக்கொண்டிருக்க.. அவள் இப்போது திடீரென முகம் மலர்ந்து போய் கேட்டாள்.

"ஆங்.. உங்களுக்கு சொறாப்புட்டு பண்ணத் தெரியுமாக்கா..??" செண்பகம் அப்படி கேட்டதுமே, ப்ரியாவின் முகம் காற்றுப் போன பலூன் மாதிரி ஆனது.

"ஏன் கேக்குற..?? சொறாப்புட்டு தின்னாத்தான் உனக்கு ஐடியா வருமோ..??" என சற்று கடுப்புடனே கேட்டாள்.

"ஐயோ.. அதுக்கு இல்லக்கா.. உங்களுக்கு பண்ண தெரியுமா.. தெரியாதா..??"

"தெ..தெரியும்..!! என்ன மேட்டர்னு சொல்லு..!!"

"மாமாவுக்கு சொறாப்புட்டுன்னா ரொம்ப புடிக்கும்க்கா..!!"

"அதுக்கு..????"

"எனக்கு பிரியாணி பண்ணி கொண்டு வந்த மாதிரி.. மாமாவுக்கு சொறாப்புட்டு பண்ணி கொண்டு போய் குடுங்க.. மாமா மனசு மாறிடுவாருன்னு நெனைக்கிறேன்..!!"

செண்பகம் படுசீரியசாக சொல்லிவிட்டு பற்களை காட்ட.. ப்ரியா அவளை கேவலமாக ஒரு பார்வை பார்த்தாள்..!! 'முடியல..' என்பது போல சலிப்பாக தலையசைத்தாள். 'சொறாப்புட்டுக்கு மயங்குறவனா உன் கேடிப்பய மாமன்..?? உன்கிட்ட வந்து ஐடியா கேட்டேன் பாரு.. என்னை சொல்லணும்..!!' என்று மனதுக்குள்ளேயே நொந்து கொண்டாள்.

"என்னக்கா.. ஒன்னும் சொல்ல மாட்டேன்றீங்க..??"

"ஒண்ணுல்ல..!! ஐடியாலாம் அக்காவே யோசிச்சுக்குறேன்.. நீ தேவை இல்லாம உன் ப்ரயினை போட்டு பிராண்டாத.. சரியா..?? பாரு.. பிரியாணி அப்படியே இருக்கு.. சாப்பிடு சாப்பிடு.. காலி பண்ணு..!!"

செண்பகம் மீண்டும் சுறுசுறுப்பாய் பிரியாணி சாப்பிட ஆரம்பித்தாள். அவள் சாப்பிட்டு முடிக்கும்வரை.. அவளுடைய முகத்தையே.. கன்னத்தில் கைவைத்தவாறு.. கவலையுடன் ப்ரியா பார்த்துக் கொண்டிருந்தாள்.

அசோக்கைப் பற்றி ப்ரியா நினைத்தது சரிதான். அவள் கணித்த மாதிரியான ஒரு மனநிலையில்தான் அசோக் இருந்தான். அவனுக்கு ப்ரியா மீது காதல் இருந்தாலும், அதற்கு போட்டியாக எரிச்சலும், கோபமும் இருந்தது. கை முறிந்து போனதினால் வந்த ஆத்திரம் வேறு. அதனால்தான் ப்ரியா வந்து மன்னிப்பு கேட்டும், மனதை திறந்து காட்டியும், அவனது காதலை உடனே வெளிப்படுத்திவிட அவனுடைய ஈகோ தடுத்தது. 'இத்தனை நாளா என்னை என்ன பாடுபடுத்தின.. நீ கொஞ்ச நாள் என் பின்னாடி அலை..!!' என்பது மாதிரியான எண்ணம்..!!

ஒரே நாளில்.. ஒரே பிரியாணியில்.. ப்ரியாவும் செண்பகமும் ஒன்றுக்குள் ஒன்றாக ஆகிப் போனார்கள்..!! அன்று இரவு அசோக்கின் வீட்டிற்கு ஒன்றாக ஸ்கூட்டியில் சென்று இறங்கினார்கள். ஏதோ பேசி சிரித்துக்கொண்டே இருவரும் வீட்டுக்குள் நுழைய, அதைப் பார்த்த அசோக், சற்றே டென்ஷன் ஆகிப் போனான். அப்புறம் தனிமையில் செண்பகத்திடம் கேலியாக கேட்டான்.

"என்ன செம்பு.. அக்கா அக்கான்னு ரொம்பத்தான் அவகிட்ட குழையுற.. ஒரே நாள்ல.. க்ளோஸ் பிரண்ட்ஸ் ஆயிட்டிகளோ..??"

"ம்ம்.. ஆமாம் மாமா..!!"

"ஹ்ம்ம்.. பாத்து ஜாக்கிரதையா இருந்துக்கோ..!!"

"ஜாக்கிரதையாவா..?? எதுக்கு..??"

"நானும் ஒரு காலத்துல அவகூட இந்த மாதிரி க்ளோஸா இருந்தவன்தான்.. இப்போ நெலமையை பாத்தேல..??" என்று அசோக் கட்டுப்போட்டிருந்த கையை ஆட்டி காட்டினான்.

"ம்ம்ம்ம்.." செண்பகம் சற்றே மிரட்சியாய் அந்த கையை பார்த்தாள்.

"உனக்கு எந்த லாரி ரெடி பண்ணி வச்சிருக்காளோ..?? ஹ்ம்ம்ம்... நாளைக்கு மொத வேலையா.. உன் பேர்ல பத்து லட்ச ரூபாய்க்கு.. ஒரு இன்ஷ்யூரன்ஸ் பாலிசி எடுக்கணும் செம்பு..!!" அசோக் கேஷுவலாக செண்பகத்திற்கு கிலி கிளப்பிவிட்டு சென்றான்.

உள்ளுக்குள் சற்றே உதறல் எடுத்தாலும் ப்ரியாவின் நட்பை, செண்பகம் உதறிவிடவில்லை. தினமும் மாலை ஒன்றாகவே ப்ரியாவுடன் அசோக்கின் வீட்டுக்கு வருவாள். சிறிது நேரம் அங்கே செலவழித்துவிட்டு, அப்புறம் ப்ரியாவே அவளை ஹாஸ்டலில் கொண்டு விடுவாள். ப்ரியாவுக்கும் அசோக்குக்கும் இடையிலான இந்த நட்பு, காதல், மோதல் எல்லாம் செண்பகம் மூலமாக செல்விக்கும் ராஜேஷுக்கும் மேலோட்டமாக தெரிந்து போனது. அசோக்கின் ஈகோதான் இப்போது இடையில் நிற்கும் ஒரே ஒரு தடைக்கல் என்பதை அவர்களும் புரிந்து கொண்டார்கள். அவனை வழிக்கு கொண்டுவர அவர்களும் முயற்சித்தார்கள். அசோக்கிற்கும் ப்ரியாவிற்கும் திருமணம் நடப்பது உறுதி செய்யப்பட்டு விட்டது போலவே அவனிடம் பேசி, அவனுக்கு டென்ஷன் கிளப்புவார்கள்.

அசோக் அவனுடைய அறைக்குள் அமர்ந்திருக்கும்போதே, செல்வியும் ப்ரியாவும் உள்ளே நுழைந்து, அவனை கண்டுகொள்ளாமல், அவர்களுக்குள்ளேயே பேசிக்கொள்வார்கள்.

"இந்த ரூமையே எடுத்துக்கங்க ப்ரியா.. இதுதான் உங்களுக்கு ரொம்ப வசதியா இருக்கும்..!! இந்த வீட்டுலயே ரெண்டு ஜன்னல் இருக்குற ஒரே ரூம் இதுதான்.. நல்ல வெளிச்சமா, காத்தோட்டமா இருக்கும்..!!" என்பாள் செல்வி.

"ஹையோ.. ஜன்னல்லாம் எதுக்குக்கா..?? எந்த நேரமும் அடைச்சுத்தான் வச்சிருக்க போறோம்..?? அதனால என்ன யூஸ்..??" ப்ரியா ஒரு தொலைநோக்கு பார்வையுடன் சொல்வாள்.

"ஹ்ம்ம்.. அதுவும் சரிதான்..!!"

"இந்த ரூம் ஓகேதான்க்கா.. ஆனா ஒரே டன்ஜனா இருக்குற மாதிரி இருக்கு..!!"

"ஐயையே.. இந்தப்பய ரூமை அந்த மாதிரி போட்டு வச்சிருக்கான் ப்ரியா..!! எல்லாத்தையம் ஒதுங்க வச்சு அக்கா உனக்கு அரேஞ்ச் பண்ணி தரேன்..!!"

"ஓ.. தேங்க்ஸ்க்கா..!!" ப்ரியா குழைந்துகொண்டு சொல்ல, அசோக்கால் அதற்கு மேலும் பொறுக்கக்க முடியாது.

"யார் வீட்டுல வந்து.. யார் ரூம் செலக்ட் பண்ணிட்டு இருக்கீங்க.. வெளில ஓடிப்போங்க ரெண்டு பேரும்..!!" என்று ஆத்திரமாக கத்தி அவர்களை விரட்டுவான்.

மற்றவர்கள் இப்படி என்றால், ப்ரியாவின் அணுகுமுறை வேறு மாதிரி இருந்தது. அசோக் குடும்பத்தார் அனைவருடனும் ஏற்பட்டிருந்த ஸ்னேஹம் அவளுக்கு ஒரு புது தைரியத்தை அளித்திருந்தது. அசோக் தன்னை காதலிக்கிறான் என்பது உறுதிப்பட்டு போனதால், அதிரடியாகவே அவனை அணுகினாள். எப்படி என்றால்..

அன்று.. அசோக்குக்கு கை உடைந்து போய் இரண்டு வாரங்களுக்கு மேல் கியிருந்தது. இரண்டு வாரங்களாக மழிக்கப்படாத தாடி சொரசொரவென அவனுடைய தாடையில் உறுத்தியது. ஒற்றை கையுடனே ஷேவ் செய்துகொள்ள கிளம்பினான். சோப்பு நுரையை முகத்தில் தடவிவிட்டு நிமிர்ந்தபோது, அறை வாசலில் நிழலாட, நிமிர்ந்து பார்த்தான். கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியவாறு ப்ரியா நின்றுகொண்டிருந்தாள். நுரை பொங்கும் இவனுடைய முகத்தையே, கண்களில் ஒரு குறும்பு கொப்பளிக்க பார்த்துக் கொண்டிருந்தாள். இவன் அவளை பார்த்து ஒரு ஏளனப் பார்வையை வீசிவிட்டு, ரேசர் எடுத்து கன்னத்தில் இழுத்துக்கொள்ள ஆரம்பித்தான்.

ஒற்றை கையுடன் ஷேவ் செய்து கொள்வது அவ்வளவு எளிதல்ல என்பது ஓரிரு இழுப்பிலேயே அவனுக்கு புரிந்து போனது. அடர்த்தியாய் வளர்ந்துவிட்ட மயிர்கள் ப்ளேடுக்குள் சிக்கி வெட்டுப்பட மறுத்தன. அவஸ்தையாய் நெளிந்த அவனுக்கு உதவி செய்ய ப்ரியா முன்வந்தாள்.

"குடு.. நான் பண்ணி விடுறேன்..!!" என்றாள் அன்பாக.

"வேணாம் விடு.. நானே பண்ணிக்கிறேன்..!!" அசோக் சலிப்பாக சொன்னான்.

"ப்ச்.. குடுன்றேன்ல..?? இது ஜஸ்ட் ஒரு ஃப்ரண்ட்லி ஹெல்ப்.. இதுக்காகலாம் உன்கிட்ட இருந்து ஸ்பெஷலா எதுவும் எதிர்பார்க்க மாட்டேன்..!!"

"வே..வேணாம் ப்ரியா..!!"

"அடச்சை.. குடுடா..!!"

ப்ரியா அவன் கையில் இருந்த ரேசரை பிடுங்கிக் கொண்டாள். அசோக் முகத்தை உர்ரென்று வைத்தவாறு நின்றிருக்க, இவள் அவனுக்கு சவரம் செய்துவிட ஆரம்பித்தாள். ஒரு கையால் அவனுடைய கன்னத்து தோலை அழுத்தி பிடித்துக்கொண்டு, இன்னொரு கையால் ரோமங்களை நுரையுடன் சேர்த்து அழகாக மழித்தெடுத்தாள். ப்ரியாவின் அருகாமை அசோக்கிற்கு ஒரு கிறக்கத்தை கொடுக்க ஆரம்பித்தது. அவளுடைய மேனியில் இருந்து வந்த இனிய வாசனை அவனது நாசியில் போதையாய் ஏறியது. தேனில் ஊறிய செர்ரி துண்டுகளாய் அவளுடைய உதடுகளை க்ளோசப்பில் பார்த்து, அவனுடைய இதயத்துடிப்பு படபடவென எகிறிக்கொண்டிருந்த போதுதான்..


"மொகரையை கொஞ்சம் லிஃப்ட் பண்ணு..!!" என்றாள் ப்ரியா.

அசோக் தன் தலையை உயர்த்தி தாடையின் அடிப்பாகத்தை அவளுக்கு காட்டினான். அவனுடைய மோவாயில் இருந்து கீழ்நோக்கி ரேசரை ஓட்டிவந்த ப்ரியா, சரியாக அவனது தொண்டைக்குமிழ் வந்ததும் நிறுத்தினாள். அதே நேரம் அவளுடைய இன்னொரு கையால் அசோக்கின் பின்னந்தலையை தாங்கி பிடித்துக் கொண்டாள். அசோக்கிற்கு ஒன்றும் புரியவில்லை.

"ஏ..ஏய்.. என்னாச்சு..??" தொண்டைக்குமிழ் அசையாத வண்ணம் மிக சிரமப்பட்டு பேசினான்.

"எங்க.. சொல்லு பார்ப்போம்..!!" என்றாள் ப்ரியா.

"சொ..சொல்லவா..?? என்ன சொல்ல..??"

"ஐ.. லவ்.. யூ..!! சொல்லு பார்ப்போம்.. ஐ.. லவ்.. யூ..!!" குழந்தைக்கு பேச சொல்லி தருவது போல ப்ரியா சொல்ல, அசோக் இப்போது டென்ஷன் ஆனான்.

"ஏ..ஏய்.. எ..என்ன.. வெளையாடுறியா..?? கையை எடுடி..!!" பதற்றமாக சொன்னான்.

"மவனே.. இப்போ மட்டும் நீ ஐ லவ் யூ சொல்லல.. இங்க புடைச்சிருக்கு பாரு.. இதுலயே ப்ளேடால சரக் சரக்னு கோடு போடப்போறேன்..!! மரியாதையா என்னை லவ் பண்றதை ஒத்துக்கோ..!!"

"நா..நான் ஒன்னும் உன்னை லவ் பண்ணலை..!!"

"அப்புறம் என்ன ஹேர்-க்கு என் ஃபோட்டோவை.. திருட்டுத்தனமா உன் லேப்டாப்ல வச்சு பாத்துட்டு இருக்குற..??"

"உனக்கு யார் சொன்னது..??"

"யார் சொன்னா என்ன..?? உண்மையா இல்லையா..??"

"நீ..நீயுந்தான் என் ஃபோட்டோவை திருட்டுத்தனமா வச்சு பாத்துட்டு இருந்திருக்குற..??"

"ஆமாம்.. நான் உன்னை லவ் பண்றேன்.. பாக்குறேன்..!! நீ என்ன டேஷ்-க்கு பாக்குற..??"

"மொ..மொதல்ல நீ கையை எடு.. நான் சொல்றேன்..!!"

"இல்ல.. நீ சொல்லு.. நான் கையை எடுக்குறேன்..!!"

"ஹேய்.. எடுடி.. பேசுறதுக்கே கஷ்டமா இருக்கு.. கட் ஆயிடுமோன்னு பயமா இருக்கு..!!" அசோக் கெஞ்ச, ப்ரியா அவளது உடும்பிப்பிடியை தளர்த்தினாள்.

"ஹ்ம்ம்.. இப்போ சொல்லு..!! என்னை லவ் பண்றதான..??"

"நா..நான் ஒன்னும் உன்னை லவ் பண்ணல.. லவ் பண்ணலாம்னு ஒரு காலத்துல ஒரு ஐடியா இருந்தது.. அந்த ஆசைலதான் உன் ஃபோட்டோஸ்லாம் சுட்டேன்..!!" அசோக் தனது கழுத்தை தடவிக்கொண்டே சொன்னான்.

"ஹ்ம்ம்.. கழுத்துல கத்தியை வச்சதுந்தான்.. உண்மை கொஞ்சம் கொஞ்சமா வெளில வருது..!! சரி.. என்னை லவ் பண்ற அந்த ஐடியா இப்போ எந்த ஸ்டேஜ்ல இருக்கு..??"

"ஆங்..?? என்னைக்கு நீ டெக்லீட் ஆகி.. ஈகோ வெறியாட்டம் போட ஆரம்பிச்சியோ.. அன்னைக்கே அந்த ஐடியாலாம் தூக்கி தூரமா போட்டாச்சு..!!"

"ப்ச்.. அதான்.. இனிமே நான் அப்படிலாம் நடந்துக்கமாட்டேன்னு அன்னைக்கே ப்ராமிஸ் பண்ணேன்ல ..?? இனிமே உன்னை எந்த வகைலையும் ஹர்ட் பண்ண மாட்டேன் அசோக்..!! இட்ஸ் ப்ராமிஸ்.. என்னை நம்பு ப்ளீஸ்..!!" ப்ரியா இப்போது ஏக்கமான குரலில் சொன்னாள்.

"ம்க்கும்.. உன் ப்ராமிசை தூக்கி குப்பைல போடு..!! ஹர்ட் பண்ண மாட்டாளாம்..?? இப்போ என் கழுத்துல ப்ளேடு வச்சு மெரட்டுனியே.. இதுக்கு பேர் என்ன..?? இந்த ஈகோ உன்கூடவே பொறந்தது.. அது என்னைக்கும் உன்னை விட்டு போகாது..!!"

"அட ராமா.. இது ஈகோவால செஞ்சதா.. உன் மேல இருக்குற லவ்வால அப்டி நடந்துக்கிட்டேன்டா..!! இட்ஸ் ப்யூர்லி லவ்..!!"

"ம்ம்.. ம்ம்..!! உன் லவ் ப்யூர்னு எனக்கு மொதல்ல நம்பிக்கை வரட்டும்.. உன்னை லவ் பண்ற ஐடியாவை அப்புறம் கன்சிடர் பண்றேன்..!!" அசோக் விடாப்பிடியாக சொல்ல, ப்ரியா இப்போது கடுப்பாகி போனாள்.

"உ..உன்னல்லாம்..?? உன்னல்லாம் திருத்தவே முடியாதுடா.. எப்படியோ போ..!!"

எரிச்சலாக கத்தியவள், ரேசரை அசோக்கின் கையில் ஆத்திரமாக திணித்தாள். திரும்பி அறை வாசலை நோக்கி விடுவிடுவென வேகமாக நடந்தாள். அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த அசோக், திடீரென ஏதோ ஞாபகம் வந்தவனாய் அவளுடய முதுகை பார்த்து கத்தினான்.

"ஏய்.. என் ஃபோட்டோவை MM-னு ஒரு ஃபோல்டர்ல போட்டு வச்சிருந்தியே.. MM-னா என்ன அர்த்தம்..??"

"ஆங்..?? மானங்கெட்ட மடப்பயன்னு அர்த்தம்..!!" ப்ரியா வெறுப்பாக கத்திவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

அதைக்கேட்டு அசோக் அப்போது முறைத்தாலும், அவனுடைய உள்மனம் இதையெல்லாம் ரசித்தது என்றுதான் சொல்லவேண்டும். ப்ரியா இந்த மாதிரி வலிய வந்து அவனிடம் வழிவது.. அவனுக்காக உருகுவது.. காதல் சண்டை இடுவது.. எல்லாமே அவனுக்கு பிடித்திருந்தது..!! இத்தனை நாளாய் அவனுடன் முட்டிக்கொண்டு நின்ற காதலி.. இப்போது அவனுடைய காதலுக்காக கையேந்தி நிற்பதை.. அவனுடைய இயல்பான ஈகோ மனம் மிகவும் விரும்பியது..!!

அவனுடைய மனம் அதையெல்லாம் ரசித்ததால்தான்.. அவனுக்கு கை சரியாகி, கட்டெல்லாம் அவிழ்த்தபிறகு.. அவன் திரும்ப ஆபீஸ் கிளம்புகிற நாளன்று நடந்த சம்பவத்தின்போது கூட.. அவன் அதிகப்படியான எதிர்ப்பொன்றும் காட்டவில்லை..!! அசோக்கை தனது ஸ்கூட்டியில் ஆபீஸ் அழைத்து செல்ல, அன்று காலையிலேயே ப்ரியா அவன் வீட்டிற்கு வந்து நின்றாள். அசோக் ஆரம்பத்தில் பிகு செய்தான். அவளுடன் வர மறுத்தான். தனது வண்டியில் சென்றுகொள்வதாக கூறினான். ப்ரியா செல்வியிடம் சென்று முறையிட, அவள் அசோக்கின் பைக் சாவியை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டாள்.

"அண்ணி.. வெளையாடாதீங்க அண்ணி.. பைக் சாவியை குடுங்க..!!" அசோக் செல்வியிடம் கெஞ்சினான்.

"எதுக்கு..?? மறுபடியும் ஏதாவது லாரியை போய் முட்டிப் பாக்குறதுக்கா..?? ஒழுங்கா அந்தப்புள்ள கூட போ.. பூப்போல கூட்டிட்டு போய்.. பூப்போல வந்து எறக்கி விடும்..!!"

"இவ கூடலாம் என்னால போக முடியாது..!!"

"அப்போ பஸ்ல போ..!!"

"பஸ்ஸா..?? பஸ்லலாம் போக முடியாது அண்ணி..!!"

"அப்போ இவ கூட போ..!!"

"அடச்சை.. என்ன இது.. சின்னப்புள்ளத்தனமா..?? எ..என்னால முடியாது..!!"

"அப்போ வீட்லயே கெட..!! எங்கயும் போக வேணாம்..!!"

"ஐயோ.. என்ன அண்ணி இது..?? வெளையாடாம சாவியை குடுங்க..!!"

"சாவியைலாம் தர முடியாது.. உன்னால முடிஞ்சதை பாத்துக்கோ..!!"

செல்வி தனது முடிவில் உறுதியாக இருக்க, அசோக்கிற்கு வேறு வழி இருக்கவில்லை. இவர்களுடைய மொத்த உரையாடலையும், புன்னகையுடனே பார்த்து ரசித்துக் கொண்டிருந்த ப்ரியாவிடம் திரும்பி சொன்னான். வேண்டா வெறுப்பாக ஒத்துக்கொள்பவன் மாதிரி நடித்தான்.

"சரி வா.. கெளம்பலாம்..!!"

இருவரும் வீட்டில் இருந்து கிளம்பினார்கள். அவர்கள் கிளம்புமுன், ப்ரியாவை தனியாக அழைத்து சென்று ராஜேஷ் ரகசியமான குரலில் சொன்னான்.

"பைக்ல ஒண்ணா போறது முக்கியம் இல்ல ப்ரியா.. லைஃப்ல நீங்க ஒண்ணா சேரனும்.. அதுதான் முக்கியம்..!! என்ன சொல்றேன்னு புரியுதா..??"

"ம்ம்.. புரியுது மாமா..!!" ப்ரியா புன்னகையுடன் கூறினாள்.

ப்ரியா வண்டியை ஸ்டார்ட் செய்ய, அசோக் பின் சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டான். வண்டியை கிளப்புமுன் ப்ரியா சொன்னாள்.

"பேலன்சுக்கு வேணா என் இடுப்பை புடிச்சுக்கோ.. நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்..!!"

"போ போ.. அதுலாம் ஒன்னும் வேணாம்.. ஐயா எப்போவும் ஸ்டெடி..!!"

அசோக் வீராப்பாக சொல்லி முடிக்கும் முன்பே, ப்ரியா ஆக்சிலரேட்டரை பிடித்து சரக்கென முறுக்க, ஸ்கூட்டி ஜிவ்வென்று சீறியது. அதை சற்றும் எதிர்பாராத அசோக், 'ஆஆஆவ்..!!' என்று கத்திக்கொண்டே முன்பக்கமாக பாய்ந்தான். ஆட்டோமெடிக்காக அவனுடைய கைகள் ரெண்டும்.. ப்ரியாவுடைய இடுப்பை இரண்டு புறமும் அழுத்தி பற்றிக்கொண்டன..!!

 

No comments:

Post a Comment

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...