Social Icons

மலரே என்னிடம் மயங்காதே - 5








எபிஸோட் – V

அன்று இரவு நடந்தவை எல்லாம் அரைகுறையாகத்தான் எனக்கு ஞாபகம் இருக்கிறது. மூளை ஏடுகளில் பதிந்து போயிருக்கும் விஷயங்களை முடிந்த அளவு சேகரித்து சொல்கிறேன். எனக்கு சுய நினைவு வருவதும், பின் நினைவு தப்பி மயக்கமுறுவதும் மாறி மாறி நடந்து கொண்டிருந்தன. கண் மூடினால் கயலின் புன்னகை முகமும், கண் விழித்தால் மலரின் கண்ணீர் முகமுமே, திரும்ப திரும்ப விழித்திரையில் விழுந்து கொண்டிருந்தன. குழப்பமான கனவுகள் வேறு இடை இடையே..!!

டாக்டர் எழுதி தந்த மருந்து சீட்டை எடுத்துக்கொண்டு ஷ்யாம் அவசரமாக ஓடியது ஞாபகம் இருக்கிறது..!! 'கொஞ்சம் வலிக்கும்.. பொறுத்துக்கங்க..' என்று கையுறை மாட்டிக்கொண்டே ஒரு நர்ஸ் சொன்னது நன்றாக நினைவிருக்கிறது..!! 'என்னைக்கும் என்கூடதானடா வருவ..? இன்னைக்கு மட்டும் ஏண்டா தனியா போன..?' என்று பன்னீர் அழுகையின் இடையே அரற்றியது கனவில்லை என்று நினைக்கிறேன்..!! 'எனக்கு எதுவும் வேணாம் ஷ்யாம்.. நீங்க சாப்பிட்டு வாங்க..' என்று மலர் மூக்கை விசும்பிக்கொண்டே சொன்னது, நான் பாதி மயக்கத்தில் இருந்தபோது நிகழ்ந்தது..!! அபி அர்த்த ராத்திரியில் 'வீல்....' என அலறி, அசந்து தூங்கிய என்னை விழிக்க வைத்ததும் மறந்து போகவில்லை..!!

விழித்துக்கொண்டதும்.. உடலெங்கும் ஏறியிருந்த வலியின் தீவிரம் உணர்ந்தேன். வலி தந்த வேதனையில் உழன்றேன். சுயநினைவு முழுமையாய் திரும்பாமல்.. சுவாதீனமும் இல்லாமல்.. கனவில் கண்ட பிம்பங்களின் தாக்கத்தில்.. 'கயல்.. மலர்.. அபி..' என மாறி மாறி ஏதோ பேரை சொல்லி.. புலம்பினேன்..!! தரையில் டவல் விரித்து படுத்திருந்த பன்னீருக்கு என் புலம்பல் ஒலி கேட்கவில்லை..!! சேரில் அமர்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்த மலர், தன் உதடுகளை கடித்து முயன்றும் அடங்காமல், அவள் கண்களில் நீர் வெளிப்பட்டு கொட்டின..!!

நான் படும் வேதனையை நெடுநேரம் காண சகியாத மலர், அபியை தூக்கிக்கொண்டு வெளியே எழுந்து ஓடினாள்..!! வெளியே சென்ற சிறிது நேரத்திலேயே வெளிர் நீல உடை அணிந்த நர்ஸுடன் வந்து சேர்ந்தாள்..!! அந்த நர்ஸ் வலி நீக்கும் மருந்தை.. ஊசியை செருகி.. என் உடலுக்குள் செலுத்த.. ஓரிரு நிமிடங்களியே நான் நிம்மதியாய் உறங்கிப் போனேன்..!! ஆழ்ந்த உறக்கம்..!!





அடுத்த நாள் காலை எனக்கு விழிப்பு வந்ததுமே.. அனிச்சையாக எனது இடது கை கயலின் படத்தை தேடியது..!! கண்களை திறக்காமேல் கைப்பற்றினேன் அந்த படத்தை..!! இமைகளை திறந்து என் இதயராணியின் முகத்திலே விழித்தேன்..!!

ஒரு சில வினாடிகளுக்கு அப்புறந்தான்.. நான் ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகியிருக்கிறேன் என்ற உண்மையே எனக்கு உறைத்தது..!! அப்படியானால்.. இந்தப்படம் இங்கே எப்படி வந்தது..??? அதிர்ச்சியும் திகைப்புமாய் திரும்பினேன்..!! அங்கே.. கனிவும், கருணையுமாய் மலர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்..!! அவள்தான் இதை செய்திருக்கவேண்டும் என உடனடியாய் எனக்கு புரிந்து போனது..!! அதற்குள் அவளே..

"காலைல அப்பா வீட்டுக்கு போயிட்டு வந்தார்.. எந்திரிச்சதும் நீங்க அக்கா போட்டோ தேடுவீங்கன்னு தெரியும்.. அதான் எடுத்துட்டு வர சொன்னேன்.." என்று ஒரு மாதிரி உலர்ந்து போன குரலில் சொன்னாள்.

அந்த நொடியில்.. எந்த மாதிரி உணர்ச்சிகளுக்கு நான் உள்ளாகியிருப்பேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்..? 'என் மீது இவளுக்கு இவ்வளவு அன்பா..?' என உருகிப்போனேன்..!! எந்த அளவுக்கு என் உணர்வுகளை புரிந்து வைத்திருப்பவள் என்றால்.. இந்தமாதிரி ஒரு காரியத்தை மலர் செய்திருப்பாள்..?? நேற்று என் வார்த்தைகளால் சுடப்பட்டு.. அவள் வடித்த கண்ணீர்.. இப்போது மீண்டும் ஞாபகத்துக்கு வந்தது..!! உடலை விட மனம் இப்போது நூறு மடங்கு அதிகமாக வலித்தது..!!



அவள் இன்னும் என் கண்களையே கூர்மையாய் பார்த்துக் கொண்டிருந்தாள். இரவு முழுவதும் அவள் சரியாக தூங்கவில்லை என்பது அவளை பார்த்ததுமே தெளிவாக தெரிந்தது. முகம் வாடிப் போயிருந்தது..!! அழுதுஅழுது சோர்ந்து போன விழிகளும், கலைந்து போன கூந்தலுமாய் பரிதாபமாக காட்சியளித்தாள். இரவு அவள் சாப்பிடவேறு இல்லை அல்லவா..??

நானும் அவள் முகத்தை பரிவுடன் பார்த்தேன். ஆனால்.. என்னால் நெடுநேரம் அந்தமாதிரி அவளை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. அப்புறம் பார்வையை தாழ்த்திக்கொண்டு, மெல்லிய குரலில் சொன்னேன்.

"தே..தேங்க்ஸ் மலர்..!!"

"ம்ம்ம்.. பரவாலத்தான்..!! நீ..நீங்க.. அப்புறம் நல்லா தூங்குனீங்களா..?"

"ம்ம்ம்..."

"ரொ..ரொம்ப வலிக்குதா..??" ஏதோ அவளுக்கே வலிப்பது போல இருந்தது அவளது குரல்.

"இ..இல்ல.. பெயின் கில்லர் போட்டிருக்காங்கல்ல..? வலி தெரியலை.."

"ம்ம்ம்.. அப்பாவும் ஷ்யாமும் டாக்டர் கூப்பிட்டாங்கன்னு.. பாக்க போயிருக்காங்க.."

"ஓ..!!"

"ஷ்யாம் ரொம்ப ஹெல்ப் பண்ணினாரு.. நைட்டு ஃபுல்லா இங்கதான் இருந்தாரு..!!"

"ம்ம்ம்.."

அப்புறம் மலர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். நான் விழிகளை சுழற்றி, அந்த ஹாஸ்பிட்டல் அறையை ஒருமுறை பார்வையிட்டேன். பெரிய அறையின் குறுக்கே தடுப்பு வைத்து, இரண்டு அறையாக மாற்றி வைத்திருந்தார்கள். நான் படுத்திருக்கும் இந்த பெட், ஒரு பிளாஸ்டிக் சேர், மரத்திலான ஒரு பென்ச், ஒரு ட்ரிப்ஸ் ஸ்டாண்ட்.. மொத்தமே அவ்வளவுதான்..!! சேரில்தான் மலர் அமர்ந்திருந்தாள். நேற்று பன்னீர் படுத்திருந்த இடத்தில்.. தரையில்.. இப்போது அபி தூங்கிக் கொண்டிருந்தான்.

நான் நேற்று அணிந்திருந்த சட்டை இப்போது என் உடலில் இல்லை. வெறும் பனியன் மற்றும் லுங்கியில் இருந்தேன். எப்போது நான் லுங்கிக்கு மாறினேன் என்று சரியாக நினைவில்லை. வலது கையை மடக்கி, எலும்பு முறிவுக்கு கட்டுப் போட்டு, கழுத்தில் தொங்க விட்டிருந்தார்கள். தலை எதிலோ சென்று இடித்ததல்லவா..? பேண்டேஜ் போட்டிருந்தார்கள்..!! அப்புறம்.. இடது காலில்.. முழங்காலுக்கு சற்று மேலே ஒரு கட்டு.. அது என்ன எழவுக்காக என்று தெரியவில்லை..!! சின்ன சின்ன சிராய்ப்புகள் அப்படியே விடப்பட்டிருந்தன..!!

நான் அந்த மாதிரி என் உடலின் காயங்களையும், கட்டுக்களையும் ஆராய்ந்து கொண்டிருக்க.. மலர் என்னையே பார்த்துக் கொண்டிருந்திருப்பாள் போலிருக்கிறது..!! எனது கவனத்தை கலைக்கும் விதமாக.. ஒரு மாதிரி பரிதாபமாக, குரல் தழதழக்க கேட்டாள்.

"எ..எல்லாம் என்னாலதான..??"

"எ..என்னது..?" நான் புரியாமல் அவளை ஏறிட்டேன்.

"நாந்தான அறிவில்லாம அந்த ஸ்வெட்டர்ல கை வச்சு.. நீங்க டென்ஷனா வெளில போய்.. அதனாலதான இப்படி ஆயிடுச்சு..?"

"சேச்சே.. என்ன பேசுற நீ.. அ..அதுலாம் ஒண்ணுல்ல.." நான் அவசரமாய் மறுத்தேன்.

"இல்லத்தான்.. எனக்கு தெரியும்..!! நீங்க காரை ஸ்பீடா கெளப்பிட்டு போறப்போவே.. எனக்கு பக்குன்னு இருந்தது..!! நீங்க பத்திரமா வீட்டுக்கு வரணும்னு.. சாமியை வேண்டிட்டுத்தான் உக்காந்திருந்தேன்..!! ஆனா.. அதுக்கு பதிலா ஷ்யாம்ட்ட இருந்து ஃபோன்தான் வந்தது..!! துடிச்சு போயிட்டேன்த்தான்..!!"

சொல்லும்போதே அவளுக்கு அழுகை பீறிட, வாயை ஒரு கையால் பொத்திக் கொண்டாள். அவளுடைய கண்களில் கண்ணீர் திரையிட.. அந்த திரையினூடே என்னை பரிதாபமாக பார்த்தாள். எனக்காக அவள் துடித்திருக்கிறாள் என்ற உணர்வு, என் மனதை பிசைய.. இப்போது நான் அவளுக்காக அப்படியே உருகிப் போனேன்..!!

"ஐயோ.. என்ன மலர் இது..? அழாத ப்ளீஸ்.. நான்தான் அதுலாம் ஒன்னுல்லன்னு சொல்றேன்ல..? நான் ஏதோ குடிச்சுட்டு போதைல போய் விழுந்துட்டேன்.. அதுக்கு நீ என்ன பண்ணுவ..?? மொதல்ல கண்ணைத்தொடை..!! ப்ச்.. கண்ணைத் தொடைச்சுக்கோ மலர்.. ப்ளீஸ்..!!"

நான் அதட்டவும், அவள் விழிகளை துடைத்துக் கொண்டாள். என்னை பார்ப்பதை தவிர்த்து, சற்றே தலையை குனிந்து கொண்டாள். அவ்வப்போது மூக்கை மட்டும் விசும்பிக் கொண்டாள். நான் கொஞ்ச நேரம் அவளையே அமைதியாக பார்த்துவிட்டு.. அப்புறம் மெல்லிய குரலில் சொன்னேன்..!!

"ஆக்சுவலா.. தப்பு என் மேலதான் மலர்..!! நீ தெரியாம பண்ணின ஒரு விஷயத்துக்கு.. நான்தான் பெருசா ரியாக்ட் பண்ணிட்டேன்.. தேவையில்லாம உன்னை ஹர்ட் பண்ணிட்டேன்..!! என்னை மன்னிச்சுடு..!!" நான் அப்படி உருக்கமாக சொல்ல, இப்போது அவள் பதறினாள்.

"ஐயோ.. என்னத்தான் நீங்க.. எங்கிட்ட போய்.. மன்னிப்பு.. அது இதுன்னுட்டு..!! உங்க மேல என்ன தப்பு.. நான்தான் புத்தி இல்லாம.. அப்படி பண்ணிட்டேன்..!!"

"இல்லம்மா.. நீ வேணும்னே அதை பண்ணலையே.. தெரியாமத்தான..? அதுக்கு நான் அவ்வளவு டென்ஷன் ஆகி.. உன்னை அழ வச்சிருக்க கூடாது..!! அதுக்காக நான் மன்னிப்பு கேக்குறது ஒன்னும் தப்பில்ல..!! ஆனா.." என நான் சற்றே இழுக்க,

"ஆனா..??"அவள் குழப்பமாய் என்னை ஏறிட்டாள்.

"இ..இனி.. கயல் சம்பத்தப்பட்ட விஷயங்கள்ல.. கொஞ்சம் கவனமா இரு மலர்.. எனக்கு கயலோட நினைவுகள் ரொம்ப முக்கியம்..!!"

"ம்ம்ம்.. புரியுதுத்தான்..!! இனிமே சத்தியமா இந்த மாதிரி எதுவும் பண்ணமாட்டேன்..!!"

"ஹ்ம்ம்.. சரி அதை விடு.. வேற ஏதாவது பேசலாம்..!! அபி என்ன இன்னும் தூங்குறான்.. அவனுக்கு பசிக்கப் போகுது.. எழுப்பி ஏதாவது கொடு..!!"

"காலைலேயே எழுந்து ஒரு பாட்டில் பால் காலி பண்ணிட்டுத்தான்.. திரும்ப தூங்கிட்டு இருக்காரு..!! இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும்.. அவனும் நைட்டு ஒழுங்கா தூங்கலை..!!"

அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, பன்னீரும் ஷ்யாமும் உள்ளே நுழைந்தார்கள். நான் எழுந்து, தெளிவாக அமர்ந்திருப்பதை பார்த்ததும் அவர்கள் முகத்தில் ஒரு வித சந்தோஷமும், மகிழ்ச்சியும் பரவியது. டாக்டர் என்ன சொன்னார் என்பதை என்னிடமும், மலரிடமும் பகிர்ந்து கொண்டார்கள். 'நாளை டிஸ்சார்ஜ் செய்து விடுவார்கள்.. வாரம் ஒருமுறை செக்கப் வர வேண்டும்.. ஒரு மாதத்தில் கை பூரண குணமடைந்து விடும்..' என டாக்டர் சொன்னதையும், அவர் தந்த அறிவுரைகளையும் எங்களிடம் தெரிவித்தார்கள்.

அப்புறம் கொஞ்ச நேரம் நான்கு பேரும் அந்த ஹாஸ்பிட்டல் பற்றியும், அவர்களுடைய சேவை பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். எட்டு மணி ஆனதும் ஆபீசுக்கு போக வேண்டும் என்று ஷ்யாம் கிளம்பினான். நாங்கள் மூவரும், அவன் செய்த உதவிக்கு மனமார்ந்த நன்றிகளை சொல்லிக் கொண்டோம். இன்று வேலைக்கு லீவ் சொல்லிவிடுவதாக சொன்ன பன்னீரை, மலர் விடவில்லை.

"ப்ச்.. அதான் நான் இருக்கேன்ல.. எல்லாம் நான் பாத்துக்குறேன்.. நீ கெளம்பு..!! நாளைக்குத்தான டிஸ்சார்ஜ்..? நாளைக்கு வேணா லீவு போடு..!!" என்று அவரை கிளப்பி விட்டாள்.

"சரி அசோக்கு.. பாத்துக்கோ.. சாயந்திரம் ஷிப்ட் முடிஞ்சதும்.. நேரா ஆஸ்பத்திருக்கு வந்துர்றேன்.."

சொல்லிவிட்டு பன்னீரும் கிளம்பினார். அவர் போனதும் நானும் மலரும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். எட்டரை மணி போல அபி கண்விழித்தான். பசியில் அழுதான். மலர் ஃப்ளாஸ்க் திறந்து, அவனுக்கு பால் கலந்து கொடுத்தாள். பால் சாப்பிட்டதும் மலர் அவனை பெட்டில் ஏற்றி விட, சிறிது நேரம் அவனுடன் நான் கொஞ்சி விளையாடினேன். ஒன்பது மணி வாக்கில் டாக்டர் ரவுண்ட்ஸ் வந்தார்.

"ஒன்னும் வொர்ரி பண்ணிக்க தேவை இல்ல.. விதின் ஒன் மன்த், யூ வில் பீ கம்ப்ளீட்லி ஆல்ரைட்..!!" என்று நம்பிக்கையூட்டினார்.

டாக்டர் வந்து சென்றதும், காலை உணவு சாப்பிட்டேன். ப்ரடும், பாலும் தான்..!! ந்யூஸ் பேப்பர் வாசித்தேன்..!! மெல்ல அடியெடுத்து.. வெளியே வராந்தாவுக்கு சென்று டிவி பார்த்தேன்..!! உடல் நலம் விசாரித்து ஆபீசில் இருந்து வந்த ஃபோன் கால்களை அட்டன்ட் செய்தேன்..!! பிறகு கொஞ்ச நேரம் தூங்கி ஓய்வெடுத்தேன். தூங்கியவனை மலர் எழுப்பியபோது இரண்டு மணி ஆகியிருந்தது.

"அபியை பாத்துக்கங்கத்தான்.. நான் போய் சாப்பாடு வாங்கிட்டு வர்றேன்.." என்றாள்.

"ம்ம்.."

தூக்கக் கலக்கத்துடன் சொன்னவாறே நான் எழுந்து அமர்ந்து கொண்டேன். பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்த என் மகனின் தலை முடியை மென்மையாக கோதி விட்டேன். அவன் தலையை திருப்பி என்னை பார்த்து அழகாக புன்னகைத்தான்.

ஹாஸ்பிட்டல் வளாகத்துக்குள்ளேயே ஒரு ரெஸ்டாரன்ட் இருக்கிறது. மலர் அங்குதான் சென்று எனக்கும் அவளுக்கும் சாப்பாடு பார்சல் வாங்கிக் கொண்டு வந்தாள். வந்தவள் பார்சலை பிரித்து ப்ளேட்டில் சாதத்தை கொட்டிய போதுதான் எனக்கு அந்த ஞாபகமே வந்தது..!! கழுத்தில் தொங்கும் ஊஞ்சலில் ஆடும்.. வலது கையை வைத்துக்கொண்டு.. எப்படி நான் சாதம் அள்ளி சாப்பிடுவது..??? தயக்கத்துடனே மலரிடம் கேட்டேன்.

"ஸ்..ஸ்பூன் இல்லையா மலர்..?"

"இல்லைத்தான்.. அப்பாட்ட காலைல எடுத்துட்டு வர சொல்ல மறந்துட்டேன்..!!"

"அ..அப்புறம் எப்படி நான் சாப்பிடுறது..?"

"இன்னைக்கு ஒரு நாள் நானே ஊட்டி விடுறேன்.. நாளைல இருந்து ஸ்பூன் வச்சு சாப்பிடுங்க..!!"

அவள் கேஷுவலாக சொல்லிக்கொண்டே, பாலித்தீன் பொட்டலத்தை பிரித்து.. சாம்பாரை சாதத்தின் மீது ஊற்றினாள்.. பிசைந்தாள்..!! நான் இப்போது அவஸ்தையாக நெளிய ஆரம்பித்தேன். இது என்ன புதுவித சோதனை..?? இவள் எனக்கு சாப்பாடு ஊட்டிவிடப் போகிறாளா..?? இதெல்லாம் இயல்பாக நடக்கிறதா..?? இல்லை.. இவளே திட்டமிட்டு செய்கிறாளா..?? புரியவில்லை..!!

"ம்ம்ம்.."

என்றவாறே அவள் பிசைந்த சாதத்தை என் வாயருகே நீட்டினாள். எனக்கு தயக்கமாக இருந்தது. வார்த்தையில் சொல்ல முடியாத மாதிரி.. ஒரு வித்தியாசமான உணர்வு..!! அவள் அந்த மாதிரி உணவு ஊட்டி விட்டு.. அதை நான் சாப்பிட.. விருப்பமில்லை எனக்கு..!! சாப்பாட்டை வாங்காமல் முகத்தை சற்றே வேறுபக்கமாக திருப்பிக் கொண்டேன்.

"என்னாச்சுத்தான்..?"

"வே..வேணாம் மலர்.."

"ஏன்..?"

"எ..எனக்கு.. பசியில்ல..!!"

"பொய்..!!"

"நெஜமாத்தான் மலர்..!! நா..நான்.. அப்புறமா சாப்பிட்டுக்குறேன்..!!"

"ப்ச்.. பொய் சொல்லாதீங்கத்தான்..!! உங்களுக்கு இப்போ என்ன பிரச்னைன்னு எனக்கு தெரியும்.."

"எ..என்ன..?" நான் சற்றே உதறலாகத்தான் கேட்டேன்.

"நான் உங்களை தொடுறது உங்களுக்கு பிடிக்கலை.. அப்டித்தான..?" அவள் சரியாக கண்டுபிடித்து விட,

"அ..அப்டிலாம் ஒன்னும் இல்..." நான் பலவீனமாக மறுத்தேன்.

"அப்புறம் ஏன் சாப்பிட மாட்டேன்றிங்க..??"

"வேணான்னு சொன்னா விடேன்.. ப்ளீஸ்.."

"என்ன காரணம்னு சொல்லுங்க.. விட்டுடறேன்.."

"ம்ம்ம்ம்... நீ.. நீ சொன்னதுதான்..!!"

"ஓ..!! நான் தொடுறது உங்களுக்கு பிடிக்கலையா..?"

"ஆ..ஆமாம்.."

"ஏன்..? நான் தொட்டா என்ன..?"

"எனக்கு ஒருமாதிரி.. அன்-ஈசியா இருக்கு மலர்.. ப்ளீஸ்.. வேணாம்..!!"

நான் சலிப்பாக சொல்லிவிட்டு என் பார்வையை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டேன். மலர் எதுவும் பேசவில்லை. பிசைந்த சாதத்தை கையில் வைத்துக் கொண்டு, அமைதியாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம் என்ன நினைத்தாளோ.. லேசாக தொண்டையை செருமிக்கொண்டு சொன்னாள்.

"ம்ம்ம்.. சரித்தான்..!! உங்க பிரச்னைக்கு நான் ஒரு யோசனை சொல்றேன்.. ரெண்டு பேரும் அதை பண்ணலாமா..?"

"எ..என்ன யோசனை..?" இப்போது நான் குழப்பமாய் அவளை ஏறிட, அவள் அழுத்தம் திருத்தமாக சொன்னாள்.

"அபிக்கு ஊட்டி விடுறதா நான் நெனச்சுக்குறேன்.. அம்மா ஊட்டிவிட்டதா நீங்க நெனச்சுக்கோங்க..!! எதுவும் தப்பா தெரியாது..!!"

அவ்வளவுதான்..!! என்னால் அதன் பிறகு அவளை எதுவும் மறுத்து பேச முடியவில்லை. அமைதியாக அவள் பிசைந்து நீட்டிய சாதத்தை, வாய் திறந்து வாங்கிக்கொள்ள ஆரம்பித்தேன். பற்களால் அரைத்து விழுங்கினேன்..!! மலர் அவளுடைய முகத்தில் எந்த வித உணர்ச்சியும் காட்டவில்லை. குனிந்து சாதத்தை பிசைவதும், பின் நிமிர்ந்து என் வாயருகே நீட்டுவதுமாக இருந்தாள். நான்தான் பலவித உணர்ச்சி அலைகள் உள்ளத்தில் மோத, அவளுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவள் என்னை அபி என்று நினைத்துக் கொண்டாளா என்று எனக்கு தெரியாது. ஆனால் நான்.. அவள் சொன்ன வார்த்தைகளின் தாக்கத்தில்.. கொஞ்ச நேரம் அவளை என் அம்மாவாக நினைத்துப் பார்த்தேன்..!!

நான் சிறு வயதிலேயே அம்மாவை இழந்தவன். அம்மாவுடைய அன்பு என்ற பேரின்பத்தை, அதிக நாட்கள் அனுபவிக்க கொடுத்து வைக்காதவன். மதுரையில் மாமாவுடைய குடும்பத்தில்தான் வளர்ந்தேன். அத்தை அன்பான பெண்மணிதான். ஆனால்.. அம்மாவுக்கு இணையான அன்பு என்று சொல்ல முடியாது. அத்தையை நான் அம்மா ஸ்தானத்தில் வைத்து ஒருநாளும் பார்த்ததும் கிடையாது.

அம்மா இல்லை என்ற ஏக்கம் எனக்கு சிறுவயதில் இருந்தே உண்டு. கயல் வந்த பின்புதான் எனக்கு அந்த ஏக்கம் தீர்ந்தது. கயல் என் காதல் மனைவிதான்..!! ஆனால் என் மீது அம்மாவுக்கு நிகரான அன்பு வைத்திருந்தவள்..!! அவளுடைய அன்பில்.. அவள் காட்டும் அக்கறையில்.. அடிக்கடி என் அம்மாவை நான் உணர்வேன்..!!

"ச்சே.. இது எனக்கு ரெண்டாவது புள்ளைடா.. நீதான் எனக்கு மொத புள்ள..!! போதுமா..?"

ஒரு கையால் என் தலை முடியை கோதிவிட்டவாறு, இன்னொரு கையால் தன் கர்ப்பிணி வயிறை தடவிக் கொண்டே கயல் சொன்னது, இப்போது ஞாபகத்துக்கு வந்து போனது. அந்த கோர விபத்தால் நான் இழந்தது என் காதல் மனைவியை மட்டுமல்ல.. கயலின் உருவில் எனக்கு கிடைத்த என் அம்மாவையும்தான்..!!

இப்போது மலரை என் அம்மாவாக நினைத்துப் பார்க்க.. இதயத்துக்குள் ஒரு இனம்புரியாத உணர்வு பரவியது.. திடீரென குழந்தை ஆகி விட்ட மாதிரி..!! எனக்கு அந்த உணர்வு நன்றாக இருந்தது.. பிடித்திருந்தது..!! அந்த இதமான உணர்வு தந்த இன்பத்தை அனுபவித்துக் கொண்டேதான் நான் மொத்த சாதத்தையும் சாப்பிட்டேன்..!! தட்டில் இருந்த உணவு காலியான பின்னும், நெடுநேரம் நீடித்திருந்தது அந்த உணர்வு..!!

அடுத்த நாள் ஹாஸ்பிட்டலில் இருந்து என்னை டிஸ்சார்ஜ் செய்தார்கள். எனக்கு கை சரியாகி கட்டுப் பிரிக்க ஒரு மாதம் ஆனது. அந்த ஒருமாதமும் ஆபீசில் மெடிக்கல் லீவ் எடுத்துக் கொண்டேன். காலை ஆறு மணிக்கெல்லாம் ஷிப்ட் என்று கிளம்பும் பன்னீர், மாலை ஆறு மணிக்கு வீடு வந்து சேரும் வரை, நானும் மலரும்தான் வீட்டில்..!! மலர் என் வீட்டுக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகி விட்ட போதிலும், இந்த மாதிரி ஒரு தனிமை எங்களுக்கு வாய்த்தது இதுவே முதன் முறை..!! மலருக்கும் எனக்கும் வாய்த்த இந்த தனிமை, அவளுக்கும் எனக்கும் ஒரு வித நெருக்கத்தை உருவாக்கியது.

அன்று ஹாஸ்பிட்டலில் சாதம் ஊட்டி விட்ட போது எனக்குள் எழுந்த அந்த உணர்வை.. அந்த ஒரு மாதத்தில் அடிக்கடி என்னால் உணர முடிந்தது.. மலர் எனக்கு செய்த பணிவிடைகளின் மூலமாக..!! வெந்நீரில் துணி நனைத்து எனக்கு உடம்பு துடைத்து விடுவது.. வேளா வேளைக்கு என்னை மாத்திரை விழுங்க வைப்பது.. காயத்தை சுத்தப்படுத்தி மருந்து தடவுவது.. கையை தாங்கிட தலையணை எடுத்து வைப்பது..!! எல்லாவற்றிலுமே நான் தாயின் கனிவை உணர்ந்தேன்..!! சில நேரங்களில்.. அவள் இந்த மாதிரி எனக்கு பணிவிடை செய்கையில்.. அவளுடைய முகத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பேன்.

"என்னத்தான்.. என் மூஞ்சியையே அப்படி பாக்குறீங்க..?" என்று மலர் என் கவனத்தை கலைப்பாள். நான்..

"ஒ..ஒண்ணுல்ல மலர்.." என்று சமாளிப்பேன்.

அந்த நாட்களில் மலருடன் நிறைய மனம் விட்டு பேச முடிந்தது. வேறு வழியுமில்லை என்பது வேறு விஷயம். வீட்டில் அவள் மட்டும்தானே இருக்கிறாள்..? ஆனால்.. அந்தப் பேச்சு என் மனதுக்கு இனிமையையே தந்தது. அவளுடைய அறிமுக நாளில் இருந்து அவளைப் பற்றி தெரிந்ததை விட.. அதிக விஷயங்களை அந்த கொஞ்ச நாட்களில் தெரிந்து கொள்ள முடிந்தது. அவளுக்கு பிடித்தவை.. பிடிக்காதவை.. அவளுடைய ஆசைகள்.. அவளுடைய ரசனைகள்..!! அவளுடைய ரசனைகளும், எனது ரசனைகளும் நிறைய விஷயங்களில் ஒத்துப் போனது.. எனக்கு ஒரு புது ஆச்சரியம்..!!

"உனக்கு யார் பாடின சாங்லாம் ரொம்ப பிடிக்கும் ..?"

"சொல்வேன்.. நீங்க கிண்டல் பண்ண கூடாது.."

"ப்ச்.. இதுல போய் நான் என்ன கிண்டல் பண்ண போறேன்..? சும்மா சொல்லு.."

"ச..சந்திரபாபு.." அவள் தயங்கி தயங்கி சொல்வாள்.

"ஹேய்.. சீரியஸாவா..?" நான் ஆச்சரியமாக கேட்பேன்.

"ம்ம்.."

"ஹையோ.. எனக்கும் அவரை ரொம்ப ரொம்ப பிடிக்கும் தெரியுமா..?" நான் அப்படி சொன்னதும் அவள் முகம் பளீரென பிரகாசிக்கும்.

அபியுடனும் அதிக நேரம் செலவழிக்க முடிந்தது. ஆபீஸ் செல்லும் அவசரமில்லாமல் அவனை கொஞ்ச முடிந்தது.. அவன் விழித்திருக்கும் நேரங்களில் எல்லாம் விளையாட முடிந்தது.. அவனுக்கும், மலருக்குமான அம்மா-மகன் பிணைப்பை அருகிலிருந்து கவனிக்க முடிந்தது..!! மலர் சிரித்தால் அவனும் சிரித்து.. மலர் அழுதால் அவனும் அழுது..!! அபிக்கும் மலருக்கும் அப்படி ஒரு பாசப்பிணைப்பு..!!

எனக்கு காலை நேரங்கள் பெரும்பாலும் அபியுடனே கழியும்..!! மதிய நேரங்களில் நேரங்களில்.. மலரும் நானும்.. மணிக்கணக்கில் பால்கனியில் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்போம்..!! மாலையில் அருகில் இருக்கும் பூங்காவுக்கு சென்று.. உலாவி விட்டு வருவோம்..!! அப்புறம் இரவு பன்னீர் வந்து விட்டால்.. வீடே கலகலப்பாகி விடும்..!! வாரம் ஒருமுறை.. நானும் மலரும் மருத்துவமனை சென்று, என் கையை காட்டிவிட்டு வருவோம்..!! அதே வாரம் ஒருமுறை.. நானும் பன்னீரும் மாடிக்கு சென்று மதுவருந்தி, கால்கள் தள்ளாடி வருவோம்..!!

"கை சரியாற வரைக்குமாவது.. இந்த கருமத்தை தொடாம இருக்கலாம்ல..? எல்லாம்.. என்னைப் பெத்தது ஒன்னு இருக்கே.. அதை சொல்லணும்..!!" என்று மலர் கடிந்து கொள்வாள்.

ஒரு மாதமும் ஆனது.. கையில் இருந்த கட்டும் பிரிக்கப்பட்டது.. எக்ஸ்-ரே பிம்பம், எலும்புகள் எல்லாம் சரியாக சேர்ந்திருப்பதாக காட்டியது..!! கையின் இயக்கம்தான் கொஞ்சம் முழுமையாக வரவில்லை..!! அதற்கென சில பயிற்சிகளை ஃபிசியோதெரபிஸ்ட் ஒருவர் கற்றுத் தந்தார். தினமும் காலையில் கொஞ்ச நேரம் அப்பயிற்சியை செய்வேன்..!! மற்றபடி என்னுடைய இயல்பு வாழ்க்கைக்கு முழுமையாய் திரும்பினேன். ஆபீசுக்கு செல்ல ஆரம்பித்தேன்.. அலுவல்களை வழக்கம் போல கவனிக்க ஆரம்பித்தேன்..!!

என்னுடைய இயல்பு வாழ்க்கை, ஒரு மாதத்துக்கு முன்பிருந்ததை விட.. இப்போது இனிமையாக தோன்றுவதை என்னால் உணர முடிந்தது. காரணம் மலருக்கும் எனக்கும் அந்த ஒரு மாதத்தில் வளர்ந்திருக்கும் அன்னியோன்யம் என்று என்னால் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. எந்த மாதிரி அன்னியோன்யம் என்றால்..

"இத்தனை வருஷமா சிகரெட் பிடிக்கிறீங்க.. ஒரு ரிங் விட தெரியலை.. நானா இருந்திருந்தா.. ஆர்ட்டின் போட்டு.. அதுல அம்பு விட்டுக்காட்டுவேன்..!!" என்று அவள் என்னை கிண்டல் செய்யும் அளவிற்கு..!!

"அம்மா தாயே.. நீ பாடுறதை கொஞ்சம் நிறுத்து.. அபி தூங்குறான்.. அலறியடிச்சுட்டு எந்திரிக்கப் போறான்..!!" என்று நான் அவளை கேலி செய்யும் அளவிற்கு..!!



எல்லாமே இதமாக.. இனிமையாக சென்றுகொண்டிருக்கும்போதுதான்..

ஒருநாள் அதிகாலை..!! ஆறு, ஆறரை மணி இருக்கும். நான் படுக்கையில் இருந்து அப்போது எழுந்திருக்கவில்லை. பாதி உறக்கமும், பாதி விழிப்புமாக.. ஒருவித அரைகுறை உறக்க மயக்கத்தில் கிடந்தேன் எனலாம்..!! இரவு தூங்குகையில் நெடுநேரம் கயலையே நினைத்துக்கொண்டு.. புரண்டு புரண்டு படுத்து.. உறக்கம் வராமல் தவித்திருந்தேன்..!! இரவில் நினைத்தவள், அதிகாலையில் கனவில் வந்திருந்தாள்..!!

"அசோக் கண்ணா.." கயல் கொஞ்சினாள்.

"ம்ம்ம்.." குப்புறப் படுத்திருந்த நான் விழிகளை திறக்காமலே சொன்னேன்.

"எந்திரிடா செல்லம்.. டைமாச்சு..!!" அவள் இப்போது என் பிடரி முடியை ஒதுக்கிவிட்டு, பின்னங்கழுத்தில் இதழ் ஒற்றி எடுத்தாள்.

"ச..சண்டேதானம்மா..? இன்னும் கொஞ்ச நேரம்.."

"சண்டேன்னா.. சோம்பேறியா மாறிடனும்ன்னு ஏதாவது வேண்டுதலா..? எந்திரிடா..!!"

"ம்ஹூம்..!!"

"ப்ச்.. அதுங்க ரெண்டும் வீட்டுல இல்ல.. எனக்கு போரடிக்குது.. ப்ளீஸ் அசோக்.. எந்திரி.." இப்போது அவள் என் மீது சாய, அவளது மார்புப்பழங்கள் ரெண்டும், எனது வெற்று முதுகில் மெத்தென்று அழுந்தின.

"நோ..!!" என்றேன் நான் இன்னும் இமைகளை பிரிக்காமல்.

"ம்ஹ்ம்.. ம்ஹ்ம்.. ம்ஹ்ம்.. ப்ளீஸ்டா.. செல்லம்ல..? அம்முல..? போரடிக்குதுப்பா..!! நான் வேற அஞ்சு மணிக்கே எந்திரிச்சுட்டேன்..!!"

"யாரு எந்திரிக்க சொன்னா.. வா.. நீயும் வந்து படு..!!"

"நல்லாருக்கு கதை.. நான் உன்னை எழுப்ப வந்தா.. நீ என்னை படுக்க சொல்றியா..? நைட்டு போட்ட ஆட்டம் பத்தாதுன்னு.. காலைலேயே மறுபடியும் ஆரம்பிக்கலாம்னு பாக்குறியா..?"

"நைட்டு ஹெவியா டின்னர் சாப்பிட்டு.. காலைல லைட்டா ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடுறது இல்லையா.. அந்த மாதிரி நெனச்சுக்கோ..!!"

"உதை விழும்.. ப்ரேக்ஃபாஸ்ட்டா கேக்குது உனக்கு..? உன்னல்லாம் பத்து நாள் பட்டினி போட்டாத்தான் சரியா வரும்..!!"

"பட்டினிதான..? போட்டுக்கோ.. பரவால.."

"என்னது.. பரவாலையா..??" கயல் அதிர்ச்சியும், எரிச்சலுமாய் கேட்டாள்.

"ம்ம்ம்.. இப்போ ப்ரேக்ஃபாஸ்ட் கொடுத்துட்டு.. அப்புறமா எத்தனை நாள் வேணா பட்டினி போட்டுக்கோ.." சொல்லிக்கொண்டே, நான் என் வலது கையை பின்னுக்கு செலுத்தி, அவளுடைய பழங்களில் ஒன்றை பற்றி பிசைய,

"அடச்சை...!!!" என்று அவள் துள்ளிக்கொண்டு என் மீதிருந்து எழுந்தாள்.

"ஹேய்.. வாடி.. குளிருது..!!" நான் இன்னும் குப்புறப் படுத்திருந்தவாறே சொன்னேன்.

"அதுக்கு..?"

"என் போர்வைக்குள்ள வந்து.. என்னை கட்டிப்புடிச்சு படுத்துக்கோ..!!"

"நீ ஆளை விடு சாமி.. உன்னைப் போய் எழுப்ப வந்தேன் பாரு.. என் புத்தியை செருப்பால அடிக்கணும்..!! நான் ஹாலுக்கு போறேன்.. உனக்கு எப்போ முழிப்பு வருதோ.. அப்போ எந்திரிச்சு வா.."

"ம்ஹ்ம்..ம்ஹ்ம்.. ம்ஹ்ம்.. போகாதடி.." நான் சிணுங்கினேன்.

"நான் போறேன்.. போறேன்.. போறேன்.."

சொல்லிக்கொண்டே அவள் படுக்கையில் இருந்து எழ முயலுவதை என்னால் உணர முடிந்தது. நான் இப்போது பட்டென்று கண்களை திறந்தேன். அவசரமாய் புரண்டேன். கட்டிலுக்கு அருகே நின்று கொண்டிருந்த கயலை, அவளுடைய இடுப்பை பிடித்து வளைத்தேன். இழுத்து அவளை மெத்தையில் கிடத்தினேன். முரட்டுத்தனமாய் அவள் மீது படர்ந்தேன்..!!

அப்போதுதான் எனக்கு படக்கென விழிப்பு வந்தது..!! விழிப்பு வந்த ஓரிரு வினாடிகள் எனக்கு எதுவுமே புரியவில்லை..!! அப்புறந்தான்.. கனவில் கண்ட காட்சியால், நிஜத்தில் நடந்த விபரீதம் சுள்ளென்று எனக்கு உறைத்தது..!!


இங்கே.. மலர் எனக்கு அடியில் படுத்திருக்க.. நான் அவள் மீது கவிழ்ந்திருந்தேன்..!! மலர் என்னையே மிரட்சியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.. அதிர்ச்சியில் அவள் விழிகள் இரண்டும் விரிந்திருந்தன.. அவளுடைய வாய் 'ஓ' வென பிளந்திருந்தது..!! மாராப்பு விலகியிருக்க, அவளுடைய மார்புகள் இரண்டும் ப்ளவுசுக்குள் விம்மிக்கொண்டு..!! அவைகளும் இப்போது நான் மேலே கிடந்தது அழுத்தியதில்.. கணிசமான அளவு பிதுங்கி வெளியே வந்துகொண்டு..!!

நான் சுதாரித்துக் கொண்டு மலர் மீதிருந்து எழுதவதற்கு.. ஒரு ஐந்தாறு வினாடிகள்தான் ஆகியிருக்கும்..!! ஆனால்.. அதற்குள்ளாகவே.. மலருடைய மேனியின் மென்மையை, எனது உடல் நன்றாக உணர்ந்திருந்தது.. அவளுடைய மூச்சுகாற்றின் வெப்பத்தை, எனது முகம் முழுமையாக அறிந்திருந்தது.. அவள் தேய்த்துக் குளித்த ஹமாம் வாசனையை, எனது நாசி ஆழமாக சுவாசித்திருந்தது.. அவளுடைய முழுநிலவு முகத்தையும், செர்ரித்துண்டு இதழ்களையும், என் விழிகள் அருகில் இருந்து பார்த்து, ஆசை தீர பருகியிருந்தன..!!

நான் படக்கென்று அவள் மீதிருந்து எழுந்தேன். பரிதாபமாக அவளை பார்த்தேன். எனக்காவது ஐந்தாறு வினாடிகள்.. மலர் சுதாரித்துக் கொள்ள வெகு நேரம் ஆனது..!! பேந்த பேந்த விழித்தவாறு, அதிர்ச்சியும் திகைப்புமாய் என்னையே பார்த்தாள்..!! கொஞ்ச நேரம் கழித்துத்தான் தன் மார்பு பளிச்சென திறந்திருப்பதையே உணர்ந்தாள்..!! உணர்ந்ததுமே உடனடியாய் புடவை தலைப்பை அள்ளி, ஏறி இறங்கிக்கொண்டிருந்த தன் பெண்ணழகை மூடிக்கொண்டாள்..!! அவள் அப்படி மூடிக்கொண்டதும்தான் அவ்வளவு நேரம் அதையே நான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது, எனக்கும் உறைத்தது..!! பட்டென்று வேறுபக்கமாய் என் பார்வையை திருப்பிக் கொண்டேன்..!!

ஒரு அரை நிமிடம் இருக்கும்..!! அந்த அறையில் குண்டூசி கீழே விழுந்தால்கூட கேட்கும் அளவிற்கான நிசப்தம்..!! நான் கட்டிலில் ஒரு பக்கமாக திரும்பி அமர்ந்திருக்க, எனக்கு அருகே மலர் மல்லாந்து கிடந்தாள்..!! அப்புறம் அவளும் மெல்ல எழுந்து அமர்ந்தாள்..!! இப்போது இருவரும் ஒரே திசையை வெறித்தவாறு.. அருகருகே..!! எனக்கு இதயத்துடிப்பு எக்கச்சக்கமாய் எகிறிப் போயிருந்தது.. விரல்கள் எல்லாம் நடுங்கின.. உடலில் உதிரம் உச்சபட்ச வேகத்தில் பாய்வது மாதிரி ஒரு உணர்வு..!!

நான் இப்போது என் முகத்தை மெல்ல மலர் பக்கமாக திருப்ப.. அவளும் அதே நேரம் அவளுடைய முகத்தை என் பக்கமாக திருப்பினாள்..!! இருவருடைய முகங்களும் எதிரெதிரே, வெகு அருகே இருக்க.. இருவரது விழிகளும் ஒன்றை ஒன்று துளைத்தெடுப்பது மாதிரி பார்க்க.. எனது மூச்சுக்காற்றும், அவளது மூச்சுக்காற்றும் ஒன்றோடொன்று மோதி ஒன்றாய் கலக்க.. நானும், மலரும் எதுவும் செய்யத்தோன்றாமல்.. சில வினாடிகள் அப்படியே அமர்ந்திருந்தோம்..!!

மலர்தான் முதலில் துணிந்தாள். ஆசையாக என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள், அப்படியே என் மீது சாய்ந்தாள். 'அத்தான்...' என்று கிறக்கமாக சொன்னவாறு என் இடுப்பை வளைத்தவள், என் மார்பில் முகம் சாய்த்து, கழுத்தில் அனல் மூச்சு விட்டாள்..!! நான் பதறினேன்..!! 'ம..மலர்.. எ..என்ன இது.. ப்ளீஸ்..' என்று பலவீனமாக அவளை என்னிடம் இருந்து விலக்க முயன்றேன்..!! அவள் எழுவதாயில்லை..!! அவளுடைய மார்புகள் வேறு எனக்கு இதமாக ஒத்தடம் தந்து இம்சித்தன..!!

'இல்லை.. இது தவறு.. விலக்கிக்கொள்..' என் உள்ளுணர்வு என்னை எச்சரிக்க, நான் தடுமாற்றத்திலிருந்து மீண்டேன்..!! என் தோளை அசைத்து, எனது வலது கையால் அவளுடைய மோவாயை பற்றி நிமிர்த்தி, அவளுடைய முகத்தை என் மார்பில் இருந்து விலக்க முயற்சித்தேன். அது எவ்வளவு பெரிய தவறு என்று அப்புறந்தான் எனக்கு புரிந்தது..!!

முகத்தை என் மார்பிலிருந்து விலக்கிக் கொண்டவள், அதே வேகத்தில் பாய்ந்து வந்து என் உதடுகளை கவ்விக் கொண்டாள்.. 'சர்ர்ர்ர்...' என உறிஞ்ச ஆரம்பித்தாள்..!! நான் இப்போது நிலைகுலைந்து போனேன்..!! பஞ்சினும் மென்மையான இதழ்கள்.. பவளத்தினும் சிவந்த நிறம்.. தேனினும் இனிய சுவை..!! சுவைப்பதா வேண்டாமா என்ற குழப்பம் என் உதடுகளுக்கு..!! தடுப்பதா தழுவுவதா என்ற தயக்கம் என் கைகளுக்கு..!!

ஆனால்.. சில வினாடிகள் மட்டுமே நீடித்திருந்தது அந்த குழப்பம்..!! அதன் பின் என் கைகள் அவளை தழுவிக் கொண்டன.. உதடுகள் அவளுடையதை சுவைக்க ஆரம்பித்தன.. ஆனால் அவளை விட சற்றே ஆவேசமாக..!! மலர் இப்போது தைரியமாக என்னை அணைத்து இறுக்கிக் கொண்டாள். அவளுடைய இளமைக்கனிகளை தாராளமாய் என் மார்பில் பரவச்செய்து அழுத்தினாள். எனது கைகள் அவள் முதுகை மெல்ல தடவ.. அவளது விரல்கள் என் முதுகை அழுத்தமாய் பற்றி பிசைய.. நானும் மலரும் ஒருவர் உதட்டுச்சுவையை அடுத்தவர் அறிந்து கொள்ள, ஆவேசமாய் முயன்று கொண்டிருந்தோம்..!!

முழு வேகத்தோடு இருவரும் முத்தமிட்டுக் கொண்டிருக்கும்போதே, மலர் என்னிடம் இருந்து திடீரென விலகினாள். என் தடித்த உதடுகளுக்குள் சிக்கியிருந்த அவளது, ரோஜா இதழ்களை படக்கென பிடுங்கிக் கொண்டாள். மூச்சு எகிறியதால் ஏறி இறங்கும் மார்புகளுடனும், முத்தம் தந்த போதையில் சொக்கிப்போன கண்களுடனும் என்னையே கிறக்கமாக பார்த்தாள். 'ஸாரித்தான்..!!' என்று சத்தமே வெளிவராத குரலில் சொன்னாள். பின்பு மெல்ல கட்டிலில் இருந்து இறங்கினாள்..!!

அப்போதுதான் நான் அந்தக் காரியத்தை செய்தேன். நான் ஏன் அப்படி செய்தேன் என்று இப்போது வரை எனக்கு விளங்கவில்லை..!! ஆசையாக சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தையின் வாயில் இருந்து, வெடுக்கென லாலிபாப்பை பிடுங்கியது மாதிரியான மனநிலையின்தான் நான் அப்போது இருந்தேன். அவளுடைய முத்தச்சுவையை முழுமையாக நான் உண்ணவில்லை என்ற என் உள் உணர்வுதான் அந்தக் காரியத்தை செய்யச் சொல்லி என்னை உந்தித் தள்ளியது..!!

எழப்போன மலரை நான் எட்டிப் பிடித்தேன். அவளுடைய இடுப்பை வளைத்து இழுத்து, மீண்டும் என் மடியில் கிடத்தினேன்.அதிர்ச்சியில் திறந்த அவளுடைய உதடுகளை ஆவேசமாக சென்று கவ்விக் கொண்டேன். தித்திக்கும் முத்தத்தை விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தேன். எனது ஒரு கையை அவளுடைய பின்னதலைக்கு கொடுத்து தாங்கியவாறு.. இன்னொரு கையால் அவளுடைய இடுப்பை இறுகப்பற்றி அழுத்தி பிசைந்தவாறு.. அவளுடைய உதடுகள் சுரக்கும் தேனை உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்தேன்..!!

மலருடைய தயக்கம் இப்போது முற்றிலும் பறந்து போனது. இத்தனை நாளாய் கனவில் மட்டுமே ஸ்பரிசிக்க கிடைத்த ஆசைக்காதலன், இன்று அவனாகவே வலியவந்து வளைத்து.. மடியில் கிடத்தி.. உதடுகளை கவ்வி உண்ணுகிறான் என்றால்.. எந்தப்பெண்தான் அந்த வாய்ப்பை விட்டுவைப்பாள்..?? எனது உதடுகள் அவளது உதடுகளில் இருந்து பிரிந்து விடக் கூடாது என்று எண்ணியவள் போல, எனது பிடரி மயிரை கொத்தாகப் பிடித்து, என் முகத்தை அவள் முகம் நோக்கி அழுத்தமாக தள்ளினாள்..!! தனது தடித்து சிவந்த கீழுதட்டை எனக்கு சுவைக்க கொடுத்துவிட்டு, எனது மேலுதட்டில் மிச்சமிருந்த ஈரத்தை அவள் உறிஞ்சினாள்..!!

உதட்டில் ஏறிய இனிப்பு உடலெங்கும் சுறுசுறுவென பரவ.. இன்பம் ஊறிய ரத்தம் இதயத்துக்குள் சரசரவென பாய.. கட்டுக்கடங்கா சுகம் எங்கள் கண்களை செருக செய்ய.. உண்ண உண்ண திகட்டாத உமிழ்நீர் எங்கள் உதடுகளை பிணைத்து வைத்திருக்க.. உலகத்தை மறந்து நானும் மலரும் முத்தமிட்டுக் கொண்டு கிடந்தோம்.. நெடுநேரம்..!!

ஒருவழியாய் திருப்தியாகி ஒருகட்டத்தில் நாங்கள் இருவரும் பரஸ்பரம் விலகிக் கொண்டோம். என் முகத்தை கிறக்கமாக பார்த்தவாறே, மலர் கொஞ்ச நேரம் என் மடியிலேயே கிடந்தாள். பின்பு மெல்ல எழுந்தாள். இப்போது அவள் முகமெல்லாம் வெட்கத்தில் குப்பென சிவந்து போயிருக்க.. ஓரக்கண்ணால் என்னை குறுகுறுவென குறும்பாக பார்த்தாள்..!! இத்தனை நேரம் நான் கவ்வியிருந்த அவளுடைய கீழுதட்டை, இப்போது அவள் தன் மேலுதட்டால் கவ்வி, எங்கே ஒட்டியிருந்த என் எச்சில் துளிகளை தனக்குள் இழுத்துக் கொண்டாள். பின்பு கட்டிலில் இருந்து இறங்கி ஹாலை நோக்கி விடுவிடுவென ஓடினாள்..!!

அவள் என்னை விட்டு அகன்ற பிறகுதான் நான் செய்த தவறே என் புத்தியில் உறைத்தது. கனவில் வந்த கயலை எண்ணி.. நனவில் நின்ற மலரை இழுத்து.. கட்டிலில் தள்ளியிருக்கிறேன்..!! படுகிறக்கமாய் அவள் என் மீது சாய.. பலவீனமாய் விலக்க முயன்றிருக்கிறேன்..!! முத்தமிடும் அவளுடைய ஆசைக்கு.. முடிந்த அளவு எனது ஒத்துழைப்பை நல்கியிருக்கிறேன்..!! பாதியில் எழுந்து ஓட முயன்றவளை.. பாய்ந்து பிடித்து இதழ் சுவைத்திருக்கிறேன்..!!

ஐயோ..!! என்ன ஒரு காரியம் செய்துவிட்டேன்..?? ஏன் இப்படி செய்தேன்..?? 'என்னை நெருங்காதே.. என்னிடம் மயங்காதே..' என்று இத்தனை நாளாய் சொல்லிவிட்டு, நானே இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறேனே..? என் பேச்சைக் கேட்டு, அவளும் அடக்க ஒடுக்கமாகத்தானே இருந்தாள்..? இப்போது நானே அதை கெடுத்து விட்டேனே..? மலர் என்னைப் பற்றி என்ன நினைப்பாள்..? இந்த விஷயத்தை அவள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறாள்..?? கடவுளே..!!

பித்துப் பிடித்தவன் மாதிரி நான் நெடுநேரம் மெத்தையிலே அமர்ந்திருந்தேன். அப்புறம் கொஞ்சம் துணிச்சல் பெற்று எழுந்து ஹாலுக்கு சென்றேன். மலர் சோபாவில் அமர்ந்திருந்தாள். ஓடிக்கொண்டிருந்த டிவியை நோக்காமல்.. அவளுடைய பார்வை.. அந்தரத்தில்.. இல்லாத பொருள் மீது நிலைத்திருந்தது..!! அவளுடைய பற்கள்.. அவளது விரல்களில்.. வளராத நகத்தை கடித்து கடித்து துப்பிக் கொண்டிருந்தன..!! என்னைப் பார்த்ததும் வெட்கத்தில் முகம் சிவந்து, தலையை குனிந்து கொண்டாள்.

"ஸா..ஸாரி மலர்.. நான் தெ..தெரியாம.." நான் தயங்கி தயங்கி சொல்ல,

"ப..பரவாலத்தான்.. விடுங்க.." அவள் கொஞ்சம் கூட நாணம் குன்றாமல் சொன்னாள்.

"நான்.. கனவுல.. கயல் வந்து.. அ..அந்த நெனப்புல..."

"ஏதோ ஒன்னு.. எ..எனக்கு பிடிச்சிருந்ததுத்தான்..!!"

"இல்லம்மா.. நீ தப்பா எடுத்துக்கிட்.." நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அவள் எழுந்து என்னை ஏறிட்டு,

"ஐயோ..!! நான்தான் 'பரவால.. எனக்கு பிடிச்சிருந்தது..'ன்னு சொல்றேன்ல..? அப்புறம் என்ன தப்பா எடுத்துக்கப் போறேன்..?"

வேகமாக சொன்னவள், இப்போது என் முகத்தையே ஆசையும் ஏக்கமுமாய் பார்த்தாள். அவளுடைய கண்களில் இப்போது ஒரு அதீத பிரகாசம்.. பளபளத்தன..!! அவளுடைய உதடுகளில் ஒரு நிலை கொள்ளாத தவிப்பு.. படபடத்தன..!! படபடத்த உதடுகளை அவள் பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டாள்..!! அவளுடைய கண்களால் எனது கண்களை சந்தித்து.. குறுகுறுவென குறும்பாக பார்த்தாள்..!! பின்பு 'களுக்' என்று எழுந்த சிரிப்பை அடக்க முடியாமல், வாயைப் பொத்திக் கொண்டு கிச்சனுக்கு ஓடினாள்..!! எனக்கு தலை சுற்றியது.. நான் சக்தியிழந்தவனாய் பொத்தென்று சோபாவில் விழுந்தேன்..!!

அப்புறம் வந்த சில நாட்கள், எனக்கு முள்ளின் மீது நடப்பது மாதிரி.. அவஸ்தையாய் கழிந்தன..!! பார்வையிலும், வார்த்தையிலும் காதலை காட்ட மாட்டேன் என்று எனக்கு அளித்த உறுதிமொழியை, மலர் தைரியமாகவும், முழுமையாகவும் மீறினாள்..!! அவளுடைய ஒவ்வொரு அசைவிலும் அவளது காதலை எனக்கு துணிச்சலாக உணர்த்தினாள்..!!

காலையில் காபி கொடுக்க எழுப்புகையில், 'இன்னைக்கு எதுவும் கனவு வரலையா..?' என்று கேலியாக கேட்டு கண் சிமிட்டுவாள். சாதம் அள்ளி சாப்பிடுகையில், 'ஒழுங்கா எல்லாம் சாப்பிட்டு முடிச்சிருங்க.. இல்லன்னா.. அபிக்கு ஊட்டி விடுற மாதிரி.. மடில உங்களை உக்கார வச்சு ஊட்டி விட வேண்டி இருக்கும்..' என்று தைரியமாக உரைப்பாள். 'இன்னைக்கு ரொம்ப ஹேண்ஸமா இருக்குறீங்கத்தான்..' என்று கண்களாலேயே என்னை விழுங்கிக்கொண்டு, கிசுகிசுப்பான குரலில் சொல்வாள்.

என்னால் மலரை எதுவும் செய்ய முடியவில்லை. முன்பு போல குரலை உயர்த்தி அவளை கண்டிக்க முடியவில்லை. பலவீனமாகவே அவளுடைய செய்கைகளை தவிர்க்க முடிந்தது. சும்மா இருந்தவளுக்கு சூட்டை கிளப்பி விட்டது நான் அல்லவா..? தவறை என் மீது வைத்துக் கொண்டு, எப்படி அவள் மீது நான் பாய்வேன்..?? சில நேரங்களில் அவள் அந்த மாதிரி செய்வதை.. அவள் தன் காதலை வெளிப்படுத்துவதை.. 'எனக்கு பிடித்திருக்கிறது..!!' என்று என் மனம் அறிவித்தபோது, நான் சத்தியமாய் குழம்பிப் போனேன்..!!

என் மனதின் அறிவிப்பு எனக்கு பிடிக்கவில்லை. என் மீதே எனக்கு ஒரு வெறுப்பு வளர ஆரம்பித்தது. மலரை கண்டிக்க முடியாத எனது இயலாமை, எனக்குள் வேறு வித விபரீதங்களை உருவாக்க ஆரம்பித்தது..!! மலர் இயல்பாக செய்யும் சில காரியங்களில் கூட குறை கண்டுபிடிக்க ஆரம்பித்தேன்..!!

மாலையில் வீடு திரும்புகையில், அவள் மல்லிகை சூடியிருந்தால்.. மயக்க முயலுகிறாளோ என்று தோன்றியது..!! பால்கனி சென்று அவள் துணி காயப்போடுகையில், புடவையை தூக்கி செருகினால்.. எனக்காகத்தான் செய்கிறாளோ என்று எண்ணம் ஓடியது..!! சாதம் பரிமாறுகையில் அவளுடைய மாராப்பு விலகினால்.. மனதை கெடுக்கிறாளே என்று கோவம் வந்தது..!! 'இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்..? அன்பே அன்பே..!!' என்று அவள் திரைப்பாடலை ஹம் செய்தால்.. 'ஏதாவது செய்யேன்..' என்று என்னை தூண்டுகிறாளோ என எரிச்சலாக வந்தது..!!

இப்படி சின்ன சின்னதாக என் மனதுக்குள் வளர்ந்த விபரீதங்கள்.. ஒருநாள் பெரிய அளவில் வெடித்து சிதறியது..!! அன்று மாலை நான் ஆபீசில் இருந்து திரும்புகையில், வீடு திறந்தே கிடந்தது. நான் உள்ளே நுழைந்து எனது அறைக்கு சென்றேன். மலர் கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருந்தாள். எனக்கு ஏதோ அப் நார்மலாக பட்டது. அவள் ஆன்லைனில் ஷேர் ட்ரேடிங் எல்லாம் செய்வாள். அதனால் என் கம்ப்யூட்டர் முன் அவள் அமர்ந்திருப்பது இயல்பான ஒரு காட்சிதான். ஆனால் இன்று அவளுடைய முகத்தில் தெரிந்த பதட்டம்தான் எனக்கு வித்தியாசமாக பட்டது..!! மானிட்டருக்குள்ளேயே தலையை விட்டுவிடுபவள் மாதிரி அவசரமாய் எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.

"என்னாச்சு மலர்.. என்ன தேடுற..?"

மலர் திடுக்கிட்டுப் போய் என்னை திரும்பி பார்த்தாள். அவள் முகம் பயத்தில் வெளிறிப் போயிருந்தது. அதிர்ச்சியில் விழிகள் அகலமாய் திறந்திருந்தன. நடுக்கமாய் என்னை பார்த்தாள்.

"அ..அது.. அது.." என்று வார்த்தைக்கே தடுமாறினாள்.

"என்னாச்சு.. ஏன் பதர்ற..?"

"அ..அக்கா.."

"கயலா..? கயலுக்கு என்ன..?"

"அக்காவோட வாய்ஸ் இருக்குற ஃபைல் ஒன்னு டெஸ்க்டாப்ல வச்சிருந்தீங்கள்ல..?"

"ஆ..ஆமாம்.." அவளுடைய பதட்டம் இப்போது என்னையும் தொற்றிக் கொண்டது.

"அதை ஆக்சிடண்டா டெலீட் பண்ணிட்டேன்.. அதை வேற எங்கயாவது பேக்கப் எடுத்து வச்சிருக்கீங்களா..?"

அவ்வளவுதான்..!! சுர்ரென்று ஒரு ஆத்திரம் உடனடியாய் என் உச்சந்தலை வரை ஏறியது..!! வேறெங்கும் அதற்கு நான் பேக்கப் எடுத்து வைக்கவில்லை என்ற உண்மை சுள்ளென்று எனக்கு உறைக்க, அந்த ஆத்திரத்தை அவள் மீது காட்டினேன். மலரை வெறுப்பாக பார்த்து, குரலை உயர்த்தி கத்தினேன்.

"என்னடி சொல்ற..?"

"வேணும்னு பண்ணல.. என் மெயிலுக்கு ஒரு ஜிப் ஃபைல் வந்தது.. அதை டெஸ்க்டாப்ல வச்சு அன்ஜிப் பண்ணினேன்.. ஆயிரக்கணக்குல ஃபைல்ஸ் ஓப்பன் ஆயிடுச்சு.. அதெல்லாம் டெலீட் பண்றப்போ.. பதட்டத்துல அக்கா ஃபைலையும் டெலீட் பண்ணிட்டேன்.." அவள் நடுக்கமாய் சொன்னாள்.

"சேர்ல இருந்து எந்திரி.. இந்தப்பக்கம் வா.."

அவள் அவசரமாய் எழுந்துகொள்ள நான் இப்போது சேரில் அமர்ந்து, அந்த ஃபைலை தேடினேன். டெஸ்க்டாப்பில் இருக்கிறதா என்று தேடினேன்.. 'ரீசைக்கிள் பின்' சென்று பார்த்தேன்.. என்னுடைய பர்சனல் ஃபோல்டர்களில் என்னையும் அறியாமல் ஸேவ் செய்து வைத்திருப்பேனோ என்று நப்பாசையுடன் பார்த்தேன்.. இறுதியாக மொத்த மெம்மரியிலும் ஃபைல் சர்ச் செய்து பார்த்தேன்..!! எங்குமே அந்த ஃபைல் சிக்கவில்லை..!!

கை கால் எல்லாம் நடுங்க, மலர் எனக்கு அருகே நின்று பார்த்துக் கொண்டிருக்க, இப்போது நான் ஆத்திரத்துடன் அவள் பக்கம் திரும்பினேன். இத்தனை நாளாய் அவள் எல்லை மீறும்போதெல்லாம், நான் செய்த தவறால் என்னிடம் இருந்த இயலாமை.. இப்போது அவள் தவறு செய்திருக்கிறாள் என்றதும்.. இருந்த இடம் தெரியாமல் போனது..!! அவள் நடவடிக்கைகள் எனக்குள் ஏற்படுத்தியிருந்த எரிச்சலும், கயலுடைய குரலை இனி கேட்கவே முடியாது என்ற கடுங்கோபமும் ஒன்றாய் கலக்க.. உச்சபட்ச ஆத்திரமாய் உருமாறி.. அவள் மீது வெடித்து சிதறியது..!!

"ஏண்டி இப்படி பண்ணின..?" என்று வெறுப்பை உமிழ்ந்தேன்.

"நா..நான் வேணும்னு பண்ணலத்தான்.. தெ..தெரியாம..." மலர் என் கோபத்தில் நடுநடுங்கினாள்.

"இல்லை.. நீ வேணும்னேதான் பண்ணிருக்குற.. எனக்கு தெரியும்..!!" ஆத்திரத்தில் நான் அபாண்டமான பழியை அவள் மீது சுமத்தினேன்.

"ஐயோ.. சத்தியமா நான் தெரியாமத்தான் பண்ணினேன்.. என்னை நம்புங்க.."

"நடிக்காதடி.. உன் ப்ளான்லாம் என்னன்னு எனக்கு நல்லா தெரியும்.."

"எ..என்ன பேசுறீங்க நீங்க..?"

"கயலோட நெனைப்பு மொத்தத்தையும் என்கிட்டே இருந்து அழிக்கனும்.. அப்டித்தான..? அந்த எடத்துல நீ வந்து உக்காரணும்.. அதுதானடி உன் திட்டம்..? ம்ம்ம்..?? சொல்லு..!!"

"ஐயோ.. சத்தியமா இல்லைத்தான்..!!"

மலர் இப்போது அழ ஆரம்பித்தாள். அவளுடைய கண்கள் சரம் சரமாய் நீரை சொரிய ஆரம்பித்தன. மிரட்சியாக என்னையே பார்த்தாள். இப்போது நான் அவளுடைய தோள்ப்பட்டையை இரண்டு புறமும் அழுத்திப் பிடித்து, அவளுடைய கண்களை வெறுப்பாக பார்த்தேன். அமிலத்தில் தோய்ந்த வார்த்தைகளை அவள் மீது அள்ளித் தெளித்தேன்.

"பொய் சொல்லாதடி.. என்னை மயக்கனும்னு ஒவ்வொரு நாளும் நீ பண்ற வேலையலாம் நானும் கவனிச்சுட்டுத்தான் இருக்குறேன்..!! மாயக்காரிடி நீ..!! வேஷக்காரி..!!"

"இல்லைத்தான்.. சத்தியமா இல்லை.." மலர் கண்களில் நீர் மல்க கெஞ்சினாள்.

"ச்சை.. உன்னை நெனச்சாலே.. எனக்கு அருவருப்பா இருக்குடி..!! என் மனசுல கயல் இருக்குற இடத்தை தொட்டுப் பாக்கனும்னு கூட நெனச்சிடாத.. எங்கயாவது தொலைஞ்சு போ..!!"

என்று கத்தியவாறு அவளை அப்படியே பிடித்து பின்னால் தள்ளிவிட்டேன். அவள் மெத்தையில் சென்று மல்லாக்க விழுந்தாள். அவளை திரும்பிக் கூட பார்க்காமல், படுக்கையறையை விட்டு வெளியே வந்தேன். பால்கனிக்கு சென்றேன். பாக்கெட் தடவி சிகரெட் பாக்கெட்டை எடுத்தேன். பதட்டத்துடன் ஒரு சிகரெட் உருவி, நடுங்கும் விரல்களால் நெருப்பு வைத்துக் கொண்டேன். குபுகுபுவென புகையை நுரையீரலுக்குள் இழுத்து, வெளியே ஊதினேன்.

மனம் முழுவதும் தீப்பற்றியது மாதிரி ஆத்திரத்தில் திகுதிகுவென எரிந்து கொண்டிருந்தது. என்ன காரியம் செய்து விட்டாள் இந்த மலர் என்ற மாயக்காரி..?? என்னுடைய கயல்.. குயிலை விட இனிமையான அவள் குரல்.. தூக்கம் வராமல் நான் தவிக்கையில், என்னை தாலாட்டி விழி மூட வைக்கும் அந்த பாடல்..!! எல்லாம் அவ்வளவுதானா..?? இனி நான் கேட்கவே போவது இல்லையா..??

நினைக்க நினைக்க, ஆத்திரம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்ல, அடுத்தடுத்து இன்னொரு சிகரெட்டையும் பற்ற வைத்துக் கொண்டேன். அந்த சிகரெட்டும் முடியப் போகிற வேளையில்தான் உள்ளிருந்து அந்த சப்தம் வந்தது..!! இல்லை இல்லை.. சப்தம் இல்லை..!! பாடல்.. அந்த பாடல்.. என் கயலின் தேன் குரலில் நனைந்த அதே பாடல்..!!


"உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல..
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல..”

கயலுடைய குரலை கேட்டதும், என் உடலுக்குள் ஒரு பரவசம்..!! என் மனதில் மோதிய அத்தனை ஆத்திர அலைகளையும், ஒரே நொடியில் அமைதியாக்கியது என்னவளின் குரல்..!! கண்களில் முணுக்கென்று நீர் கோர்த்துக் கொண்டது..!! சிகரெட்டை தூக்கி எறிந்து விட்டு.. ஆனந்தமாய் அழுதுகொண்டே.. உள்ளே ஓடினேன்..!! உள்ளே..

கம்ப்யூட்டரில் அந்தப் பாடல் ஓடிக் கொண்டிருந்தது..!! கண்களில் நீர் பொங்கி வடிய.. மலர் அமைதியாக அதனருகே நின்றிருந்தாள்..!! நான் உள்ளே நுழைந்ததும் என்னை நிமிர்ந்து பார்த்தாள். மிக மிக பொறுமையாக, வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்..!! எனக்கு எதுவும் புரியவில்லை.. அழிக்கப்பட்ட ஃபைல் எப்படி திரும்பக் கிடைத்தது..?? எனது குழப்பத்தை மலரே புரிந்து கொண்டாள். நான் வாய் விட்டு கேட்காமலேயே, அவளாகவே என் கேள்விக்கு பதிலளித்தாள்..!!

"டெலீட் பண்ணின ஃபைலை திரும்ப எடுக்க முடியுமான்னு.. நெட்ல சர்ச் பண்ணினேன்..!! ஏதோ டேட்டா ரெகவரி சாஃப்ட்வேர் இருந்தா பண்ணலாம்னு தெரிஞ்சது.. அதை டவுன்லோட் பண்ணி ட்ரை பண்ணினேன்.. திரும்ப கெடைச்சிடுச்சு..!!"

அவள் சொன்ன விஷயங்கள் எனக்கு புதிது..!! டேட்டா ரெகவரி என்று ஒரு விஷயம் இருப்பதே அப்போதுதான் எனக்கு தெரியும்..!! அவள் சொல்ல சொல்ல, நான் இப்போது குற்ற உணர்ச்சியில் குறுகிப் போனேன். ச்சே.. ஆத்திரத்தில் அவசரப் பட்டு இவளை காயப் படுத்தி விட்டேனே..? அவளை ஒரு மாதிரி பரிதாபமாக பார்த்தேன். அப்புறம் அந்தப் பார்வை பார்க்க கூட திராணி இல்லாமல், தலையை கவிழ்ந்து கொண்டேன். மலரே தொடர்ந்து பேசினாள்.

"முக்கியமான ஃபைல்லாம் தனியா ஒரு காப்பி எடுத்து, ஸேஃ பா வச்சுக்கோங்கத்தான்.. இப்படி அசால்ட்டா போட்டு வைக்காதீங்க..!!"

உணர்ச்சியற்ற குரலில் அவள் சொல்லிவிட்டு, கதவை நோக்கி நடந்தாள். வழியில் தலை குனிந்தவாறு நின்றிருந்த என்னை, அவளும் தலை குனிந்தவாறே கடந்து சென்றாள். நான் பார்வையை திருப்பி.. அவள் செல்வதையே ஓரக்கண்ணால் பார்த்தேன். கதவை அடைந்த மலர், அப்படியே செல்லாமல் ஒருகணம் அங்கேயே நின்று.. திரும்பி.. என் விழிகளை கூர்மையாக பார்த்தாள். மிகவும் பரிதாபமான குரலில் சொன்னாள்.

"நீங்க என் மனசை புரிஞ்சுக்கிட்டீங்கன்னு ரொம்ப சந்தோஷமா இருந்தேன்-த்தான்..!! அது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம்னு என் மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டீங்க..!! அக்காவோட நினைவுகள்ல நீங்க இருக்குறதை பாத்துத்தான்.. உங்க மேல எனக்கு காதலே வந்தது..!! எனக்கு காதல் வர காரணமா இருந்த அந்த நினைவுகளை.. நானே எப்படி அத்தான் அழிப்பேன்..?? உங்க மனசுல அக்கா இருக்குற இடத்துக்கு நான் என்னைக்குமே ஆசைப்பட்டது இல்லத்தான்.. அவ்வளவு பெரிய மனசுல எனக்குன்னு கொஞ்சூண்டு.. ஒரு ஓரத்துல எடம் கிடைக்காதான்னுதான் ஏங்கினேன்..!! நீங்க என்னை புரிஞ்சுக்கவே இல்லத்தான்.. புரிஞ்சுக்கவே இல்ல..!!"


சொல்லும்போதே, அருவியாய் கண்ணீர் கொட்டி.. அவளுக்கு அழுகை பீறிட.. அதற்கும் மேலும் அங்கே நில்லாமல், அவளுடைய அறையை நோக்கி ஓடினாள். அவள் பேசிய வார்த்தைகள் என் மனசாட்சியை குத்திக் கிழிக்க, நான் அப்படியே தளர்ந்து போய் கட்டிலில் அமர்ந்தேன்.

அப்புறம் வந்த சில நாட்களில், எனக்கு மனநிம்மதி என்பது மருந்தளவுக்கு கூட சிக்கவில்லை. எந்த நேரமும் மனதுக்குள் ஒரு வித உணர்ச்சி அழுத்தம்..!! மலரை நான் காயப்படுத்தியதை எண்ணி எண்ணி.. என் இதயம் வேதனையில் வெந்து துடித்தது..!! கயலின் நினைவு எனக்கு முக்கியம்தான்.. ஆனால்.. மலரின் கனவை.. அதுவும் என் தவறால் நானே அவள் மனதில் உருவாக்கிய கனவை.. அழிப்பது என்ன நியாயம்..? திரும்ப திரும்ப.. நடந்ததையே எண்ணி.. தினம் தினம் மலருக்காக என் மனம் உருகியது.. கண்கள் அவளுக்காக கண்ணீர் சிந்தின..!!

அந்த சம்பவத்துக்குப் பிறகு மலரும் சுத்தமாக மாறிப் போனாள். உணர்ச்சிகள் செத்துப் போன மரம் போலத்தான், மலர் நடந்து கொண்டாள். எந்திரம் போலத்தான் எல்லா வேலையுமே செய்தாள். ஏறெடுத்துக் கூட என்னை அவள் பார்ப்பது கிடையாது. ஏதாவது கேட்டாலும், எங்கேயோ வெறித்தபடி.. விட்டேத்தியாகத்தான் பதில் சொன்னாள். அடிக்கடி தனிமையில் சென்று அமர்ந்து கொண்டு, கண்ணீர் வடித்தாள். யாராவது வந்தால், அவசரமாக கண்களை துடைத்துக் கொண்டு எழுவாள்.

மலருடைய இந்த சோகம், என் மனதை வேதனையில் புரட்டி வாட்டியது. தனிமையில் அமர்ந்து யோசித்தபோது.. ஒரு உண்மை தெளிவாக உறைத்தது..!! மலர் என் மனதுக்குள் எப்போதோ வந்து விட்டாள்..!!!!! கயல் மட்டுமே வந்து கொண்டிருந்த கனவில், அப்புறம் ஏன் மலரும் வர ஆரம்பித்தாள்..?? அவளிடம் தாய்மையை உணர்ந்தபோது என் மனம் ஏன் பூரிக்க வேண்டும்..?? உள்ளத்தில் காதலில்லாமலா அன்று அவளை உரிமையாக என் மடியில் கிடத்தி முத்தமிட்டேன்..?? இப்போது அவள் முகத்தை திருப்பிக் கொண்டு செல்லும்போது.. அவள் என்னை பார்க்க மாட்டாளா.. எப்போதும் போல் என்னுடன் பேசமாட்டாளா.. என என் மனம் ஏன் ஏங்கித் தவிக்கிறது..??

ஆம்.. உண்மைதான்..!! மலரை நான் காதலிக்க ஆரம்பித்து விட்டேன் என்று தோன்றியது..!! ஆனால் அந்த காதலுக்காக என்னால் அகமகிழ்ந்து போக முடியவில்லை..!! 'இந்த ஜென்மத்தில் கயலுக்கு மட்டுந்தான் என் இதயத்தில் இடம்' என்று இத்தனை நாளாய் உறுதியாக இருந்த என் மனம், இப்போது வெட்கமில்லாமல் மலரையும் நினைக்கிறதே என்று கடிந்துகொள்ளத்தான் முடிந்தது..!! 'மலருடன் சென்று பேசு' என ஒரு நினைவு உந்தித்தள்ளும்.. 'கயல் என்பவள் என்னாயிற்று..?' என்று இன்னொரு நினைவு கேள்வி கேட்டு தடுத்து நிறுத்தும்..!!

இந்தமாதிரி ஒரு குழப்பமான போராட்டம்தான் என் மனதுக்குள் எந்த நேரமும்..!! மலர் தனிமையில் அமர்ந்து அழுவதை பார்க்கையில்.. ஓடிச்சென்று அவளை அணைத்துக் கொள்ளவேண்டும் போலிருக்கும்..!! நான் ஓட எத்தனிக்கையில்.. கயல் இந்தப்பக்கம் என் கையைப் பற்றி இழுப்பாள்.. தடுப்பாள்..!! கால்கள் செயலிழந்து போய் நான் பரிதாபமாய் நிற்க.. கயல் என்னைப் பார்த்து கைகொட்டி சிரிப்பாள்..!!

இந்த மாதிரிதான் ஒரு குழப்பத்துக்கு நான் உள்ளாகியிருந்தேன். மலரை வெறுத்து ஒதுக்கவும் முடியவில்லை. விரும்பி ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை..!! இரண்டுவித மனநிலைகளுக்குள் சிக்கி.. நான் சின்னாபின்னாமாகிக் கொண்டிருந்தேன்..!! அப்போதுதான்..


ஒருநாள் சனிக்கிழமை இரவு.. நானும், பன்னீரும் மொட்டை மாடியில் மது அருந்திக் கொண்டிருந்தோம். மலருடைய நடவடிக்கைகள் பன்னீருக்கும் பலத்த சந்தேகத்தை வரவழைத்திருந்தது. அன்று குடிக்கும்போது, என்னிடமே வாய்விட்டு கேட்டுவிட்டார்.

"உனக்கும் அவளுக்கும் ஏதாவது பிரச்னையா..?"

"பி..பிரச்னையா..? அ..அதுலாம் ஒன்னுல்லையே..?"

"ம்க்கும்.. இருந்தாலும் சொல்ல மாட்டீங்களே ரெண்டு பேரும்..!! நீயும் ஒன்னும் சொல்ல மாட்ட.. அவளும் வாயை தெறக்க மாட்டா..!! எப்படியோ போங்க.. என்னவோ நடக்குதுன்னு மட்டும் தெரியுது.. என்னன்னுதான் புரியலை..!!"

"ப்ச்.. அதுலாம் ஒன்னும் இல்ல பன்னீர்..!! நீ சோடாவை ஊத்து..!!"

நான் பேச்சை மாற்றினேன். பன்னீரும் சலிப்புடன் தலையாட்டிவிட்டு சோடாவை விஸ்கியில் ஊற்றி மிக்ஸ் செய்தார். வேறு விஷயங்களை பற்றி பேசியவாறு, பொறுமையாக குடித்தோம். வழக்கம் போல மூன்று ரவுண்டு முடிந்ததும், பன்னீர் எழுந்தார். நான் வரவில்லை என்றேன். அவர் எரிச்சலாக கேட்டார்.

"ஏன்.. என்னாச்சு இப்போ உனக்கு..?"

"எனக்கு கயல் நெனைப்பாவே இருக்கு பன்னீர்.. நான் இன்னும் ரெண்டு ரவுண்டு போட்டுட்டு வர்றேன்.. நீ போய் தூங்கு.."

அவர் கொஞ்ச நேரம் என்னையே எரிச்சலாக பார்த்தார். அப்புறம் ‘எப்படியும் போ’ என்று சொல்லிவிட்டு கிளம்பினார். அவர் சென்றதும் நான் மட்டும் தனியாக அமர்ந்து மதுவருந்தினேன். மேலும் மூன்று ரவுண்டுகள் உள்ளே செல்ல, உச்சபட்ச போதை இப்போது என் உச்சந்தலை வரை ஏறியிருந்தது. தலை 'கிர்ர்ர்ர்..' என்று சுழலுவது மாதிரி இருந்தது. எழுந்து செல்லக் கூட தோன்றாமல்.. சிகரெட் பற்றவைத்து புகை விட்டவாறு.. மேலே இருந்த வெண்மதியை.. 45 டிக்ரி கோணத்தில் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். அப்போதுதான் மலர் மாடியேறி மேலே வந்தாள்.

"போதும்த்தான்.. எழுந்து வாங்க.. டைமாச்சு..!!"

நான் கொஞ்ச நேரம் மலரையே அமைதியாக பார்த்தேன். எவ்வளவு அழகாக இருக்கிறாள் இவள்..?? மேலிருக்கும் நிலவை விட இவள் எவ்வளவு அழகு..?? மற்ற பெண்களுக்கு பொறாமையை தூண்டி விடும்படியான அழகு..?? அழகு மட்டுமா..?? எவ்வளவு காதல் வைத்திருக்கிறாள் என் மீது..?? 'எவளுமே என் அளவுக்கு உன்னை காதலிக்க முடியாது' என என்னையே உணர வைக்கிற அளவுக்கு..??

"என்னத்தான்.. அப்படியே பாக்குறீங்க..? டைமாச்சு.. வாங்க.. வந்து சாப்பிட்டு படுங்க..!!"

நான் இத்தனை நாள் அவளுடன் பேச வேண்டும் என்று நினைப்பேன். ஆனால்.. ஏதோ ஒரு தயக்கம் என்னை தடுத்துவிடும்..!! இன்று.. எனக்கு உள்ளே ஏறியிருந்த போதை, இப்போது ஒரு தைரியத்தை கொடுத்திருந்தது..!! சிகரெட்டை சுண்டி எறிந்து விட்டு, போதையில் வாய்குழற மலரிடம் சொன்னேன்.

"நா..நான் சாப்பிடுறது இருக்கட்டும்.. நீ வா.. இங்கவா.. இ..இங்க வந்து உக்காரு..!!"

"எ..எதுக்கு..?"

"உன்கிட்ட கொ..கொஞ்சம் பேசணும்.."

"எதுவா இருந்தாலும்.. காலைல பேசிக்கலாம்த்தான்.. இப்போ வாங்க.."

"இல்ல மலர்.. காலைல எனக்கு இந்த தைரியம் இருக்காது..!! ப்ளீஸ் மலர்.. உக்காரு..!!"

நான் கெஞ்சலாக சொல்லவும், மலர் தயங்கி தயங்கி எனக்கு எதிரே கிடந்த சேரில் அமர்ந்தாள். என்ன சொல்லப் போகிறேன் என்று குழப்பமாக என்னை ஏறிட்டாள். நான் அவளுடைய முகத்தையே கொஞ்ச நேரம் அமைதியாக பார்த்துவிட்டு, அப்புறம் சற்றே பரிதாபமான குரலில் கேட்டேன்.

"நா..நான் எங்கயாவது போயிடட்டுமா மலர்..?" அப்படி நான் கேட்டதும் மலர் அதிர்ந்து போனாள்.

"அ..அத்தான்.. என்ன சொல்றீங்க நீங்க..?"

"சொல்லு மலர்.. நா..நார்த் இந்தியால கூட எங்க கம்பெனி ப்ராஞ் இருக்கு.. ட்ரான்ஸ்ஃபர் கேட்டா கிடைக்கும்.. நான் போயிடவா..?"

"ஐயோ.. ஏன்-த்தான் இப்படிலாம் பேசுறீங்க..?"

"இ..இல்ல மலர்.. நான் இங்க இருக்குறது சரியில்ல.. இங்க இருக்குறது சரியில்ல.." புலம்பினேன்.

"என்ன சரியில்ல..? என்னாச்சு இப்போ..?"

"நா..நான்.." சொல்ல தயங்கினேன்.

"நீங்க..??"


"ம்ஹூம்.. நான் சொல்ல மாட்டேன்.."

"ஐயோ.. சொல்லுங்கத்தான்.. ப்ளீஸ்..!! நீங்க..??"

"எ..எனக்கு பயமா இருக்கு மலர்.."

"நீங்க சொல்றது எனக்கு ஒன்னும் புரியலை..!! என்ன பயமா இருக்கு உங்களுக்கு..??"

"நா..நான் இங்க இருந்தேன்னா.."

"ம்ம்ம்..?"

"எ..என்னைக்காவது ஒருநாள்.. உன்னை ஓடி வந்து அணைச்சுக்கிட்டு.. 'ஓ'ன்னு அழுதிடுவேன் மலர்..!! அது நடக்க கூடாது.. நடக்கவே கூடாது..!!"


இப்போது நான் உடைந்து போய் அழ ஆரம்பித்தேன். என் கண்களில் தாரை தாரையாய் நீர் வடிய, மலர் திகைத்துப் போனாள். என் வாயிலிருந்து வந்த வார்த்தைகளை நம்ப முடியாமல், என்னையே அதிர்ச்சியாக பார்த்தாள்.

"அ..அத்தான்.." திணறலாக சொன்னாள்.

"நீ என் மனசுக்குள்ள வந்துட்ட மலர்.. நான் எவ்வளவோ தடுக்க நெனச்சும்.. எல்லாத்தையும் உடைச்சுக்கிட்டு உள்ள வந்துட்ட..!! இனிமே நான் இங்க இருக்குறது நல்லது இல்ல..!! என் கயலுக்கு நான் துரோகம் பண்றேன்னு என் மனசாட்சி என்னை குத்தி கிழிக்குது மலர்..!!"


"ம்ம்ம்ம்.." இப்போது மலரும் அழ ஆரம்பித்திருந்தாள். உதடுகளை கடித்து அந்த அழுகையை அடக்க முயன்றவாறு சொன்னாள்.

"நான் நெறைய தப்பு பண்ணிட்டேன் மலர்.. அன்னைக்கு கனவுல கயலை பாத்து.. நானே என் கண்ட்ரோல்ல இல்லாம உன்னை கிஸ் பண்ணி.."

"அது உங்க தப்பு இல்லைத்தான்.. நான்தான் அதை இனிஷியேட் பண்ணேன்.."

"அப்புறம் நான் பண்ணின தப்பை நெனச்சு.. ஒவ்வொரு நாளும்.. என்னை நானே வெறுத்து.. எனக்கு என் மேல இருந்த கோவத்தை.. அன்னைக்கு உன் மேல காட்டிட்டேன்.. என்னை மன்னிச்சுடு மலர்.. என்னை மன்னிச்சுடு..!!"

"ஐயோ.. என்னத்தான் நீங்க..? நீங்க எந்த தப்பும் பண்ணலை.. நான்தான் எல்லாத்தையும் தப்பா புரிஞ்சுக்கிட்டேன்.." மலர் இப்போது பெரிய குரலில் அழ ஆரம்பித்தாள்.

"நான் கயலுக்கு சத்தியம் பண்ணி தந்திருக்கேன் மலர்.. இன்னொரு பொண்ணுக்கு என் மனசுல எடம் இல்லைன்னு..!! ஆ..ஆனா.. ஆனா.. உன்னால அவளுக்கு இப்போ துரோகம் பண்ண ஆரம்பிச்சுட்டேன்..!!"

"ப்ளீஸ்த்தான்.. அழாதீங்க..!! ப்ளீஸ்..!!" மலர் கெஞ்சலாக கத்தினாள்.

"எ..என்னால.. என்னால இந்த வேதனையை தாங்க முடியலை மலர்..!! நீயும், கயலும் ஆளுக்கொரு பக்கம் நின்னு.. என்னை புடிச்சு இழுத்து.. பிச்சு பிச்சு எடுத்து.. பீஸ்பீஸா என்னை கிழிக்கிற மாதிரி இருக்கு மலர்..!! என்னால இதை தாங்க முடியலை.. இந்த சித்திரவதையை என்னால தாங்க முடியலை மலர்..!! நான் எங்கயாவது கண்காணாத எடத்துக்கு போயிர்றேன் மலர்..!! ப்ளீஸ்.. எங்கயாவது போயிர்றேன்"

நான் அழுது புலம்பி வெடித்து சிதற, மலர் நீர் கோத்துக்கொண்ட கண்களுடன்.. படபடக்கும் உதடுகளுடன்.. என்னையே பரிதாபமாக பார்த்துக்கொண்டு.. ஸ்தம்பித்துப்போய் அமர்ந்திருந்தாள்..!!


1 comment:

  1. இப்படி கதை எழுதி அடிமனது வரை அழவைத்துவிட்டாரே ஆசிரியர்

    ReplyDelete

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...