Social Icons

மலரே என்னிடம் மயங்காதே - 1








சற்றே எமோஷனலாக ஒரு காதலை சொல்ல திட்டமிட்டிருக்கிறேன். அதை தவிர இந்தக்கதையை பற்றி எதையும் சொல்ல நான் விரும்பவில்லை. காரணம்.. மேலும் தகவல்கள் சொன்னால்.. உங்களுடைய வாசிப்பு அனுபவம் கெட்டு விட கூடிய வாய்ப்பிருக்கிறது..!! குட்டி குட்டியாக ஐந்தாறு எபிசோட்கள் வருமாறு எழுத நினைத்திருக்கிறேன்..!! வழக்கம் போல உங்கள் ஆதரவு எனக்கு இருக்கும் என்று நம்புகிறேன்..!! நன்றி..!!

எபிஸோட் - I

குடையை குண்டூசியால் குத்தி சல்லடையிட்டது மாதிரி, இருள் வானெங்கும் எண்ணிடலங்கா நட்சத்திர ஓட்டைகள்..!! சாலை விளக்குகள் மஞ்சள் நிறத்தில் மந்தமான வெளிச்சத்தை துப்பி, இரவின் இருள் போக்க இயன்ற அளவு முயற்சித்துக் கொண்டிருந்தன. குரைத்த நாயை கண்டுகொள்ளாமல், குறுகலான அந்த சாலைக்குள் நான் காரை திருப்பினேன். குண்டும் குழியுமாய் இருந்த சாலையில் நிதானமாகவே காரை செலுத்தினேன். நாங்கள் குடியிருக்கும் வீட்டை நெருங்கியதும் காரின் வேகத்தை சுத்தமாக குறைத்தேன். கேட்டுக்கு வெளியிலேயே காரை நிறுத்தி பார்க் செய்தேன். அலறிக்கொண்டிருந்த ஹிமேஷ் ரேஷம்மயாவை ஆஃப் செய்தேன். சாவி திருகி, இன்ஜினை சாந்தமாக்கினேன்.

கேட் திறந்து உள்ளே சென்று.. கயல்விழியை நான் கட்டிப் பிடித்து கொஞ்சுவதற்கு முன்பு.. என்னை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். நான்.. அசோக்..!! இயந்திரவியலில் இளநிலை பொறியியல் பட்டமும், வணிக நிர்வாகத்தில் முதுநிலை பட்டமும் பெற்றவன். ஆட்டோ மொபைல் உதிரி பாகங்களை, உற்பத்தியும் ஏற்றுமதியும் செய்யும் ஒரு நிறுவனத்தில் உத்தியோகம். உற்பத்தி பிரிவு ஒன்றுக்கு மேலாளராக இருக்கிறேன். சற்றே கடினமான வேலைதான்..!! மாதாமாதம் முதல் தேதி ஆனதும், எனது வங்கிக்கணக்கு ஐம்பதாயிரத்து சொச்சம் அதிகமாக காட்டும்.

மேலே நான் கொஞ்சப் போவதாக சொன்ன கயல்விழி, என் மனைவி..!! ஓராண்டுக்கு முன்புதான் எங்களுக்கு மணமானது..!! மாங்கல்யத்தை அவளுடைய கழுத்தில் பூட்டி.. என்னை அவளுடைய பதியாகவும்.. அவளை என்னில் பாதியாகவும்.. மாற்றிக்கொண்டேன்..!! இருவருக்கும் மணமாகிய இந்த ஒரு வருட காலத்தில், எங்கள் இருவருடைய மனமும்.. இப்போது ஒன்று கலந்து ஒரு மனமாகி போயிருந்தது..!! இல்லற வாழ்க்கை உமிழ்ந்த இன்பத்தில்.. நானும் கயலும் நனைந்து.. திளைத்துப்போய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..!! எங்கள் இருவருக்கும் இடையிலான அன்னியோன்யம்.. மிக மிக அலாதியானது..!! சரி.. வாருங்கள்.. கயலை பார்க்கலாம்..!!


கேட் திறந்து கதவை நெருங்கியவன், காலிங் பெல்லை அழுத்த கையை நகர்த்தினேன். அப்போதுதான் 'விஷ்ஷ்... விஷ்ஷ்... விஷ்ஷ்...' என்ற சப்தத்துடன் எனது செல்போன் வைப்ரேட் ஆனது. பாக்கெட்டுக்குள் கிடந்து பதறி துடித்தது. காலிங் பெல் அழுத்தும் முன்பு, 'கால் செய்வது யார்' என பார்த்துவிடலாம் என்று எனக்கு தோன்ற.. செல்போனை வெளியே எடுத்தேன்..!! கயல்தான் கால் செய்கிறாள். வீட்டுக்குள்தான் இருக்கிறாள். காரில் வந்து நான் இறங்கியதை கவனிக்கவில்லை போலும் அவள்..!! சின்னதாக அவளிடம் விளையாடலாம் என்று நினைத்தவாறே, கால் பிக்கப் செய்தேன்.

"ஹலோ..!!" என்றேன்.

"அப்பாவும், தங்கச்சியும் கெளம்பிட்டாங்கப்பா..!!" என்றாள் எடுத்ததுமே அடுத்த முனையில் அவள்.

"ம்ம்.. எத்தனை மணிக்கு ட்ரெயின்..??"

"எட்டு மணிக்கு..!!"

"காலைல முகூர்த்தத்துக்கு சரியா போய் சேர்ந்திடுவாங்களா..?"

"ம்ம்.. அதுலாம் போயிருவாங்க.. ஆறு மணிக்குலாம் ட்ரெயின் அங்க ரீச் ஆயிடும்..!!"

"ஆறு மணிக்குலாம் போயிடுமா..? அப்போ கரெக்டா இருக்கும்..!!"

"ம்ம்ம்.. அது சரி... நீ எப்போ ஆபீஸ்ல இருந்து கெளம்புற..?"

"அ..அது.. இன்னும் ஒரு.. ரெண்டு மணி நேரம் ஆகும்மா.." நான் சற்றே கேஷுவலாக பொய் சொன்னேன்.

"இன்னும் ரெண்டு மணி நேரமா..? அப்போ.. வீட்டுக்கு வர்றதுக்கு பத்தாயிடுமா..??" அவள் சலிப்பாக கேட்டாள்.

"பத்தரை கூட ஆயிடும்..!!"

"ப்ச்.. போடா..!! எருமை மாடு..!! கொஞ்சம் கூட உனக்கு பொறுப்பே இல்ல..!! சரியான.... ஜடம்..!!"

"ஒய்.. இப்போ எதுக்கு திட்டுற..?"

"பின்ன என்ன..? புள்ளத்தாச்சி பொண்டாட்டி ஒருத்தி.. வீட்டுல தனியா இருக்காளே.. காலாகாலத்துல வீட்டுக்கு போய்.. அவளை கட்டிப் புடிச்சு கொஞ்சலாமேனு.. கொஞ்சமாவது அறிவு இருக்கா உனக்கு..?? எப்போ பாரு.. வேலை.. வேலை.. வேலை..!! உனக்குலாம் எதுக்கு பொண்டாட்டி..? உன் கம்பெனில இருக்குற கட்டிங் மெசினையோ.. வெல்டிங் மெசினையோ கல்யாணம் பண்ணி தொலைச்சிருக்க வேண்டியதுதான..? நீயும் அதை காலம் பூரா கட்டிக்கிட்டு அழுதிருக்கலாம்.. நானும் நிம்மதியா இருந்திருப்பேன்..!!"

"ம்ம்ம்.. ஐடியா நல்லாத்தான் இருக்கு.. இந்த யோசனை எனக்கு முன்னாடியே இல்லாம போச்சே..? சரி பரவால.. இப்போவும் ஒன்னும் கெட்டுப் போகலை... உன்னை டைவர்ஸ் பண்ணிட்டு.. வெல்டிங் மெசினோட எனக்கு வெடிங்..!! எப்பூடி..???"

"ம்ம்ம்ம்... வெளக்கமாரு..!!!!!"

"ஹ்ஹ்ஹஹாஹ்ஹ்ஹஹா...!!"

"சிரிக்காதடா.. நான் செம கடுப்புல இருக்கேன்.." அவள் சிணுங்கலாக சொன்னாள்.

"சிரிப்பு வருதே செல்லம்.. என்ன பண்ண சொல்ற என்னை..? ஹ்ஹஹா...!!"

"சிரி சிரி.. நல்லா சிரி.. இன்னும் பத்து நாளைக்கு உனக்கு ஒன்னும் கெடயாது மவனே..!! ‘ஒன்னே ஒன்னுடி.. ஒன்னே ஒன்னுடி’னு.. ஒதட்டை பிதுக்கிட்டு வருவேல.. ஓங்கி ஒன்னு போடுறேன் இரு.."

"ஹேய்.. இதுலாம் அநியாயம்டி..!! அக்கிரமம்.. அராஜகம்..!!"

"நீ பண்றது மட்டும் நியாயமா..? பொண்டாட்டியை விட.. போல்ட், நட்டு கணக்கு பாக்குறதுதான உனக்கு முக்கியம்..??"

"ப்ளீஸ் கண்ணம்மா.. அப்டிலாம் சொல்லாத.. ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்..!! இன்னைக்கு நான் செம மூடுல இருக்கேன்.. வந்ததும் எனக்கு சூடா ஒன்னு வேணும்..!! ஓகேவா..??"

"சூடாதான..?? வா.. கரண்டியை காய வச்சு.. சூடா ஒன்னு போடுறேன்.. வாயிலேயே..!!"

"ம்ஹூம்.. நான் கேட்டது முத்தம்..!!"

"உன் முகறைக்கட்டை..!! இங்க பாரு.. முத்தம் வேணும்னா.. ஒன்பது மணிக்குள்ள வீட்டுக்கு ஓடிவா..!! இல்லனா கரண்டில நல்லா சூடுதான் கெடைக்கும்..!!"

"ம்ம்ம்ம்... சரி.. ஒருவேளை நான் ஒன்பது மணிக்குள்ள வந்துட்டா..?"

"முத்தம் கெடைக்கும்..!!"

"எத்தனை..???"

"என்ன கேள்வி இது..? ஒண்ணுதான்..!!"

"அதுலாம் பத்தாது எனக்கு..!!"

"ஓ.. அப்போ எத்தனை வேணுமாம்.. ஐயாத்தொரைக்கு..?"

"பத்து..!!"

"ஓஹோ.. ரொம்பதான் ஆசை.."

"ப்ச்.. தரமுடியும்னா சொல்லு.. நான் வர்றேன்.."

"ம்ம்ம்ம்.. சரி.. ஒன்பது மணிக்குள்ள வந்துட்டா.. பத்து முத்தம்..!!"

"லிப்ஸ்ல..?"

"லிப்ஸ்லதான்டா சொல்றேன்.. வா..!!"

"சரி.. ஒருவேளை எட்டு மணிக்குள்ளயே வந்துட்டன்னா..?"

"எட்டு மணிக்குள்ள வந்துட்டேனா.. ம்ம்ம்ம்... டபுள்..!! ட்வெண்ட்டி..!!"

"வாவ்...!!! அட்ராக்டிவ் ஆஃபர்..!! ம்ம்ம்ம்.. சரி.. அப்போ இன்னும் ஒரே நிமிஷத்துல வந்துட்டேன்னா..?"

"ஒரே நிமிஷத்துல எப்படி வருவ நீ..? பறந்து வந்தாலும் பத்து நிமிஷமாவது ஆகுமே.. உன் ஆபீஸ்ல இருந்து இங்க வந்து சேர்றதுக்கு...!!"

"ப்ச்.. வந்துட்டன்னா..?? ஆஃபர் என்னனு சொல்லு..!!"

"ஓகே.. நூறு முத்தம்..!! லிப்ஸ்ல..!! போதுமா..??"

"ஹையா..!!!!!!!!!!! ஜாலி ஜாலி...!!!!! டுடே இஸ் மை லக்கி டே… பேபி..!!!!!! ஹே.. ஹே.. ஹே.."

"ஷ்ஷ்ஷ்ஷ்.. ப்பாஆஆஆ.. ஏன் இப்டி கத்துற..?"

"ஹண்ட்ரட் கிஸஸ் ரெடி பண்ணி வச்சுக்கோ கண்ணம்மா.. இதோ வந்துர்றேன்.. இன்னைக்கு உனக்கு உதடு ரெண்டும் வீங்கப் போகுதுடியோவ்.."

"என்னது..??? வந்துர்றியா..?? ஒரே நிமிஷத்துலையா..?? எப்புடி..??"

"ஹ்ம்ம்.. இப்புடி..!!" சொல்லிக்கொண்டே நான் காலிங் பெல்லை, நான்கைந்து முறை 'கீங் கீங் கீங்..' என்று அழுத்தினேன்.

"அட திருட்டு ராஸ்கல்..!! வெளில நின்னுக்கிட்டேதான் இவ்ளோ நேரம் வெளையாடிட்டு இருந்தியா..? உன்னை என்ன பண்ணுறேன் பாரு..!!"

கடுப்புடன் கத்தியவள் காலை பட்டென கட் செய்தாள். அடுத்த சில வினாடிகளிலேயே படாரென கதவை திறந்தாள். திறந்தவள், இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்தவாறு, கண்களை இடுக்கி கூர்மையாக என்னையே முறைத்தாள். நான் எதுவும் சொல்லவில்லை. உதட்டில் ஒரு நமுட்டு புன்னகையுடன் அவளையே குறும்பாக பார்த்தேன்.

அரக்கு நிறத்தில் ஒரு புடவை உடுத்தி அம்சமாக நின்றிருந்தாள் என் மனைவி..!! பளிச்சென்ற பால்நிலா முகத்துடனும், பலூன் மாதிரி உப்பியிருந்த வயிறுடனும் நின்றிருந்தாள். முகத்தை கழுவி லேசாக பவுடர் தீற்றியிருப்பாள் போலிருக்கிறது. கூந்தலில் சூடியிருந்த மல்லிகையின் மணம் குப்பென ஆளை தூக்கியது. கருவுற்றபின் கொஞ்சமாய் சதை போட்டிருந்தவளின் மேனியில், மினுமினுப்பும் ஏறியிருந்தது. தாய்மை அடையும் போது, கூடவே சேர்ந்து, ஒரு தனிக்களையும் வந்து விடுகிறது இந்த பெண்களுக்கு..!! கருவுற்ற தேவதையாய் காட்சியளித்தாள் என் மனைவி..!!

அவள் விழிகளை உருட்டி குறுகுறுவென என்னையே பார்க்க, நான் இப்போது மெலிதாக புன்னகைத்தேன். ஒரு கண்ணை திறந்து வைத்துக்கொண்டு, மற்றொரு கண்ணை மட்டும் மூடி.. குறும்பாக சிமிட்டினேன். முறைத்துக் கொண்டிருந்தவளிடம் இப்போது மாற்றம் தெரிந்தது. அவளுக்கு சிரிப்பு எழுந்திருக்க வேண்டும். அதை உள்ளுக்குள்ளே வைத்து அடைக்க முயற்சித்தாள். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்து.. அடக்க முயன்ற அந்த சிரிப்பு.. அவளுடைய உதட்டின் ஊடே மெலிதாக கசிந்தது..!! கண்களாலும் இப்போது காதலாக புன்னகைத்தவள், குறும்பான குரலில் சொன்னாள்.

"பொறுக்கி..!!!"

"ஓ.. பொறுக்கியா நான்..? வா.. பொறுக்குறேன்.." நான் வீட்டுக்குள் நுழைந்து அவளை அணைத்துக் கொண்டேன்.

"எதை பொறுக்க போறடா பொறுக்கி..??"

"வேற என்ன..? முத்தம்..!!"

சொல்லிக்கொண்டே நான் உதட்டை குவிக்க, அவள் அவளுடைய நான்கு விரல்களை ஒன்றாய் சேர்த்து என் உதட்டிலேயே பட்டென அறைந்தாள்.

"அதுலாம் ஒன்னும் கெடயாது போ.."

"ஹேய்.. இதுலாம் சீட்டிங்..!! ஹண்ட்ரட் கிஸஸ் தர்றேன்னு இப்போத்தான சொன்ன..?"

"எது சீட்டிங்..??? நீ பண்ணுனதுதான் சீட்டிங்..!!"

"நான் என்ன சீட்டிங் பண்ணினேன்..?" நான் அப்பாவியாக கேட்டேன்.

"ம்ம்..?? வீட்டுக்கு வெளிலேயே நின்னுக்கிட்டு.. ஆபீஸ்ல இருக்குறேன்னு பொய் சொல்றதுக்கு பேர் என்னவாம்..??"

"நோ நோ..!! அதுலாம் எனக்கு தெரியாது..!! நீ தர்றேன்னு சொல்லிருக்குற.. தந்தே ஆகணும்..!!" நான் அடம் பிடித்தேன்.

"முடியாது.. போடா..!!" அவள் கறாராக சொன்னாள்.

"என்னது.. முடியாதா..?? ஏய்.. கொழந்தைப் பையனை ஏமாத்தாதடி.."

"ஆமாம்.. ஒன்னுந்தெரியாத கொழந்தை இவரு..?? வாயில வெரல் வச்சா கூட கடிக்க மாட்டாரு..??"

"வெரல் வச்சா கடிக்க மாட்டேன்.. வேற எதையாவது வச்சுப்பாரு.. கடிக்கிறேன்..!!" நான் குறும்பாக சொல்ல,

"ச்சை.. கருமம்..!!".

அவள் உதட்டை சுளித்து சொல்லிக்கொண்டிருக்கும்போதே, நான் திடீரென்று என் முகத்தை நகர்த்தி, எனது உதடுகளால் அவளது உதடுகளை தேடிப் பிடித்து கவ்விக்கொண்டேன். அவளுடைய தடித்த கீழுதடு எனது முரட்டு உதடுகளுக்குள் சிக்கிக்கொள்ள, மெலிதாக உறிஞ்சினேன். இரண்டு கைகளாலும் அவளது வழவழ கன்னத்தை தடவிக் கொடுத்தவாறே, அவளது இதழ்களை ஆர்வமாய் சுவைத்தேன். கயலும் ஆரம்பத்தில் சற்று திணறித்தான் போனாள். 'முடியாது.. பிடிக்காது..' என்று பிகு செய்தவள், இப்போது எனது முத்த சுவைக்குள் கட்டுண்டு கிடந்தாள். கண்களை லேசாக செருகிக் கொண்டு.. 'ம்ம்ம்.. ம்ம்ம்.. ம்ம்ம்..' போதையாய் முனகிக்கொண்டு.. உதடுகளை பிளந்து எனக்கு வசதியாக காட்டிக்கொண்டு..!!!

கயலை முத்தமிடுவது ஒரு சுகானுபவம்..!! அவளுக்கு ரோஜா இதழ்கள் போல விரிந்த செந்நிற உதடுகள். கீழுதடு சற்றே தடியாக.. பிதுங்கியவாறு.. கவர்ச்சியாக.. கவ்விக்கொள்ள தூண்டும்..!! வரி வரியாய் இருக்கும் உதட்டு ரேகைகளில்.. தேன் கசிந்த மாதிரி ஒரு ஈரம் எப்போதும் மினுமினுக்கும்..!! இனிப்பான அவளுடைய அந்த உதட்டு ஈரம்தான்.. இப்போது எனது தொண்டைக்குழிக்குள் அமிர்தமாய் இறங்கிக் கொண்டிருந்தது..!! ஆசை தீர அந்த அதரத்து அமிர்தம் உண்டு முடித்து, நான் அவளுடைய உதடுகளை விடுவித்தபோது.. கயல் என்னை சற்றே கிறக்கமாக பார்த்தாள். அவளது இரண்டு கைகளாலும் எனது கழுத்தை கட்டிக்கொண்டு கிசுகிசுப்பாக சொன்னாள்.

"ம்ம்ம்.. பெட்ரூம் தூக்கிட்டு போ அசோக்..!!"

நான் புன்னகைத்தவாறே என் மனைவியை அப்படியே அலாக்காக தூக்கிக் கொண்டேன். அவளுடைய அழகு முகத்தை ஆசையாக பார்த்துக் கொண்டே, படுக்கையறைக்கு அள்ளி சென்றேன். உள்ளே நுழைந்ததும், கண்ணாடிப் பொருள் போல கவனமாய் அவளை கட்டிலில் கிடத்தினேன். அவளுக்கு அருகே படுத்துக் கொண்டேன். ஒரு கையால் அவளுடைய கூந்தலை தடவிக் கொடுத்தவாறு, காதலாய் அவளையே பார்த்தேன்.

அவளும் என் முகத்தையே கொஞ்ச நேரம் ஆசையாக பார்த்தாள். அப்புறம் சற்றே குறும்பான குரலில் என்னை அழைத்தாள்.

"அழகு புருஷா..!!"

"ஹஹா.. அழகா நான்..??" எனக்கு சிரிப்பு வந்தது.

"பின்ன இல்லையா..??"

"பொய் சொல்லாத கயல்.." நான் அப்படி சொன்னதும், அவள் என்னை கொஞ்ச ஆரம்பித்தாள்.

"போடா.. நான் எதுக்கு பொய் சொல்ல போறேன்..? கரு கருன்னு சாஃப்டா.. ஸ்டைலா.. தலைமுடி..!! குட்டியா.. ஷார்ப்பா.. அந்த ரெண்டு கண்ணு..!! நீளமா.. உருண்டையா.. எனக்கு ரொம்ப பிடிச்ச இந்த மூக்கு...!! ரோஸ் கலர்ல.. தடியா.. இந்த சேட்டைக்கார லிப்ஸ்..!! அதிகமும் இல்லாமா.. கம்மியும் இல்லாம.. அளவான என் பேவரிட் மீசை..!! எனக்கு நீ அழகுதான்..!! சொல்லப்போனா.. நீ மட்டுந்தான் அழகு..!!"

"ஓஹோ..?? ம்ம்ம்.. எனக்கும் நீ அப்படித்தான் கயல்..!!"

"ஹேய்.. இது பொய்..!! உனக்கு என்னை விட காஜல் அகர்வாலைதான புடிக்கும்..?"

"அ...அது.. அ..அதுலாம்.. க..கல்யாணத்துக்கு முன்னாடி..."

"ஆ...ங்.. பொய் சொல்றான் பொய் சொல்றான்.. திருடன்..!!" அவள் பழிப்பு காட்டினாள்.

"பொய்லாம் சொல்லலை.. உண்மைதான்..!!" நான் போலிக் கோபத்துடன் முகத்தை திருப்பிக்கொள்ள,

"ஆஆஆஆவ்வ்..!!" என்று அவள் லேசாக கத்தினாள்.

"என்னாச்சுடா..??" நான் சற்றே பதட்டமாக கேட்டேன்.

"உன் பையன் உதைக்கிறான்டா.." அவள் முகமெல்லாம் பெருமிதமாக சொன்னாள்.

"ஓ.. பையன்னே முடிவு பண்ணிட்டிங்களாக்கும்..??"

"பின்ன என்ன..?"

"எனக்கு பொண்ணுதான் வேணும்..!!"

"உனக்கு வேணும்னா அதுக்கு நான் என்ன பண்றது..? உள்ள கெடக்குறது பையன்தான்..!!"

"உனக்கு எப்படி தெரியும்..??"

"எல்லாம் எனக்கு தெரியும்.. அதான் இந்த உதை உதைக்குதே..?? அப்டியே... அப்பன் மாதிரியே.. முரடு.. உள்ள இருக்குறப்போவே இந்த பாடு படுத்துது.." அவள் கொஞ்சலாக சொல்லிக்கொண்டே என் மூக்கை பிடித்து திருகினாள்.

"ஹேய்.. இரு.. எனக்கு பாக்கணும் போல இருக்கு.." நான் ஆசையாக சொல்ல,

"ஹ்ஹ்ஹா.. ம்ம்ம்.. பாக்கணுமா..?? சரி.. வா.." அவள் சிரிப்புடன் சொன்னாள்.

தன் புடவையை சற்றே விலக்கி, தனது நிறை மாத வயிற்றை பளிச்சென்று எனக்கு காட்டினாள். வெள்ளை வெளேரென.. புஸ்சென்று பெரிதாக வீங்கியிருந்த அவளது வயிற்றை நான் ஆசையாக பார்த்தேன். எனது விரல்களால் மெல்ல வருடிக் கொடுத்தேன். அப்புறம் என் முகத்தை மென்மையாக அதன் மீது கிடத்தி, உள்ளிருந்து உதைக்கும் சத்தம் வருகிறதா என்று பார்த்தேன். ஒரு சத்தமும் கேளாமல் ஏமாந்தேன்..!! பின்பு முகத்தை திருப்பி 'இச்ச்ச்...' என்று அந்த வயிற்றின் மத்தியில் ஒரு முத்தம் பதித்தேன். என் மனைவியின் முகத்தை ஏறிட்டேன். உதட்டில் புன்னகையுடன், நான் செய்வதையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள், இப்போது எதிர்பார்ப்பும் ஏகாந்தமும் மிக்க குரலில் சொன்னாள்.

"இன்னும் பத்து நாள்தான் அசோக்.. நாம மூணு பேராயிடுவோம்..!!"

"ம்ம்.. நெக்ஸ்ட் வீக் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகிடலாம்ல..?"

"ஆமாம்.."

நான் இப்போது எழுந்து, அவளுக்கருகே கட்டிலில் தலை சாய்த்து படுத்துக் கொண்டேன். கயல் நகர்ந்து வந்து, எனது தோளில் அவளது தலையை சாய்த்துக் கொண்டாள். நான் அவளுடைய நெற்றியில் 'இச்ச்..' என்று இதமாய் முத்தம் பதித்துவிட்டு, ஆதரவாக அவளது கூந்தலை தடவிக் கொடுத்தேன். அவள் என் சட்டை பட்டன்களின் இடைவெளிக்குள் அவளது வலது கையை செருகி, என் மார்பை தடவியவாறே கேட்டாள்.

"நாளைக்கும் இதே மாதிரி சீக்கிரம் வந்திடுறியாப்பா..?"

"ஏன்மா..?"

"நாளைக்கு கோயிலுக்கு போகணும் அசோக்.. நீயும் வந்தா சேர்ந்தே போயிட்டு வந்துடலாம்..!! இதே நேரத்துக்கு வந்தா கூட போதும்..!!"

"இல்லடா.. நாளைக்கு நெறைய வேலை இருக்கு..!! நான் ஒரு பிசினஸ் பிரசண்டேஷன் கொடுக்கணும்..!! சீக்கிரம் வர முடியாது..!!"

"ஓ..!! அப்படியா..??"

"ம்ம்ம்.. அந்த புது ட்ரஸ் எடுத்து வை.. நாளைக்கு அதை போட்டுட்டு போறேன்..!!"

"எது..??"

"அதான்.. போன மாசம் வாங்கினமே.. அந்த லைட் ப்ளூ ஷர்ட்.. டார்க் ப்ளூ பேன்ட்..??"

"அச்சச்சோ.. அதுவா..?? அது இன்னைக்குத்தான தொவைச்சு போட்டேன்..??"

"அப்படியா..? ம்ம்ம்.. சரி.. பரவால விடு.. வேற ட்ரஸ் போட்டுக்குறேன்.."

"இல்ல இல்ல.. இப்போ காஞ்சிருக்கும்.. நைட்டு அயர்ன் பண்ணி வச்சிடுறேன்.. காலைல போட்டுட்டு போ.."

"பரவால்லம்மா... எதுக்கு உனக்கு கஷ்டம்..?"

"இல்ல.. நீ ஆசைப்பட்டுட்டேல..? அப்புறம் எனக்கு கஷ்டமா இருக்கும்.." அவள் உண்மையிலேயே சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல, நான் மெலிதாக புன்னகைத்தேன்.

"சரி.. அதையே அயர்ன் பண்ணிக்கொடு.. நான் போட்டுட்டு போறேன்.."

"மொட்டை மாடிலதான் எல்லாத்துணியும் கெடக்குது.. போய் கையோட எடுத்துட்டு வந்துர்ரியா..?"

"ம்ம்.. சரிம்மா.."

நான் சொல்லிவிட்டு கட்டிலில் இருந்து எழுந்து கொண்டேன். பாத்ரூமுக்குள் புகுந்து கை கால் அலம்பி, முகம் கழுவிக் கொண்டேன். பேன்ட்டை அவிழ்த்து வீசிவிட்டு, லுங்கிக்கு மாறினேன். என்னுடைய செயல்களை எல்லாம் சிரித்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்த என் மனைவியிடம்,

"சரி கயல்.. நான் போய் துணிலாம் எடுத்துட்டு வர்றேன்.."

என்று மீண்டும் ஒரு முறை சொல்லிவிட்டு, கதவு திறந்து வெளியே வந்தேன். ஸ்லிப்பர் அணிந்து கொண்டேன். வீட்டுக்கு பக்கவாட்டில், இடது பக்கம் இருந்து மாடிக்கு சென்றடைந்த படிக்கட்டுகளை அடைந்து, மேலே ஏறினேன். ஒவ்வொரு படியாக ஏறும்போதே,

"காலமென்னும் தேரில் ஏறி கருமாரி நீ வருகையிலே..
காணக் கண் கூசுதம்மா.. கோடி ஜோதி தெரியுதம்மா.."

என்று L.R.ஈஸ்வரியின் குரல் கணீர் என்று காற்றில் மிதந்து வந்தது. உடலில் பட்டென ஒரு சிலிர்ப்பை உருவாக்கியது. பக்கத்து தெரு மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் திருவிழா என்பது ஞாபகத்துக்கு வந்தது..!! படியில் இன்னும் மேலே செல்ல செல்ல, காற்றில் கலந்த அந்த கானஒலியின் டெசிபல் அளவு, இன்னும் அதிகரித்துப் போய் ஒலித்தது. மனதிற்கு மிகவும் ரம்மியமாக இருந்தது.

மொட்டை மாடியை அடைந்ததுமே என் கண்கள் அபகரிக்கப்பட்டன. ஆகாயத்தில்.. அந்தரத்தில்.. வான வேடிக்கைகளின் வர்ண ஜாலங்கள்..!! கீழிருந்து 'விஷ்ஷ்ஷ்ஷ்...' என்று, மேல் நோக்கி கிளம்பி சென்ற வான வெடிகள், குறிப்பிட்ட தூரத்தை அடைந்ததும், 'டொம்...!!!!' என்று பெரும் சப்தத்துடன் வெடித்து, அழகாய்.. வண்ண மயமாய்.. நெருப்புப் பூக்களாய்.. மீண்டும் கீழேயே சிதறிக் கொண்டிருந்தன. மேலே சென்று ஒரு வெடி சிதறுவதற்குள்ளாகவே, அடுத்த வெடி அதை ஃபால்லோ செய்து கிளம்பி.. இடைவிடாமல் வெடித்து.. வானத்தில் வண்ணமாரி பொழிந்து கொண்டிருந்தன.

வான வேடிக்கைகளின் அழகினை கண்களால் விழுங்கிக்கொண்டே, நான் மொட்டை மாடியின் ஒரு பக்க ஓரத்திற்கு சென்று, பக்கத்து தெருவுக்கு என் பார்வையை வீசினேன். அம்மன் ஊர்வலம் போய்க் கொண்டிருந்தது. வெளிச்சத்தை விளக்குகள் வாரியிறைக்க, அம்மன் பளிச்சென்று ஜொலித்தாள். அம்மன் அலங்காரத்தை தூரத்தில் இருந்தே தெளிவாக காண முடிந்தது. பல்லாக்கில் அம்மன் அமர்ந்திருக்க, பக்தர்கள் அதை தூக்கிக் கொண்டு, ஒவ்வொரு அடியாய் பொறுமையாக முன்னேறிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் மக்கள் கும்பம் வைத்து வழிபட்டார்கள்.

பல்லாக்குக்கு வெகு அருகே.. இருபுறமும்.. கேரளா செண்டை மேளங்கள்.. 'திடும்.. திடும்.. திடும்..' என முழங்கி, கேட்பவர்களின் இதயத்தை அதிர செய்தன..!! மேளத்தின் தாளத்துக்கு ஏற்ப.. ஊர்வலத்தின் முன்பு.. ஒரு ஆணும் பெண்ணும்.. தலையில் கரகம் சுமந்து.. காலில் சலங்கைகள் கட்டி.. லாவாகமாகவும், அதே நேரம் நளினமாகவும் ஆடிச் சென்றார்கள்..!! அலகு குத்திக்கொண்டு.. அருள் வந்து ஆடிக்கொண்டு.. விழிகளை அகலமாய் திறந்து வைத்துக்கொண்டு.. நாக்கை நீளமாய் வெளியே துருத்திக் கொண்டு.. சென்ற பக்தர்கள்.. பயத்துடன் கலந்த பக்தியை.. பார்ப்பவர்களுக்கு புகட்டிக் கொண்டிருந்தார்கள்..!!

வான வேடிக்கைகளிலும், அம்மன் ஊர்வலத்திலும், அதிர்ந்து முழங்கிய மேளதாளத்திலும் என் மனம் பட்டென்று லயித்து போனது. ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தேன். ஊர்வலத்தை ரசித்துக் கொண்டிருந்தபோதே, புகைக்க வேண்டும் போல் ஒரு உள்உணர்வு எழுந்தது. பாக்கெட் தடவி, மிச்சமிருந்த ஒற்றை சிகரெட்டை எடுத்து உதட்டில் பொருத்திக் கொண்டேன். பற்ற வைத்து, புகையை கொஞ்சமாய் உள்ளிழுத்து, நிதானமாய் வெளியே விட்டவாறே.. அடுத்த தெரு ஊர்வலத்தின் அழகை, கண்களால் அனுபவித்துக் கொண்டிருந்தேன்.

எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை..!! புகையிலை தீர்ந்து, நெருப்பு விரல் சுட்ட போதுதான் உணர்வு வந்தது. பட்டென உதறி எறிந்தேன். எறிந்து விட்டு சூடுபட்ட விரலை உதடுகளால் ஊதிக்கொண்டே திரும்பியவன், ஒரு கணம் லேசாக அதிர்ந்து போனேன். கயல் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள். நான் வியப்பாய் கேட்டேன்.

"ஏய்.. நீ எதுக்கு வந்த..?"

"எவ்ளோ நேரம் கத்துறது..? கூப்பிடுறது காதுலையே விழலையா..?" அவள் சற்றே சலிப்பாய் கேட்டாள்.

"கூப்டியா..?"

"சரியாப் போச்சு.. 'அசோக்.. அசோக்..'னு கத்தி.. தொண்டைத்தண்ணி வத்திப் போச்சு.."

"ஐயோ.. ஸாரிம்மா.. இந்த சத்தத்துல எதுவும் கேக்கலை..!! எதுக்கு கூப்பிட்ட..?"

"உங்க ஆபீஸ்ல இருந்து ஃபோன் வந்தது.. ஏதோ முக்கியமான விஷயம்னு சொன்னாங்க..!! இந்தா.. கால் பண்ணி பேசு.. அவங்க வச்சுட்டாங்க..!!"

சொல்லிக்கொண்டே அவள் என் செல்போனை நீட்ட, நான் வாங்கி யார் கால் செய்தது என்று பார்த்தேன். எங்கள் டைரெக்டர் கால் செய்திருந்தார். இந்த நேரத்திற்கு இந்த ஆள் எதற்கு கால் செய்கிறார்..? கேள்வியுடனே திரும்ப அவருக்கு டயல் செய்து பேசினேன். ஒரு க்ளையண்டிற்கு இந்த வாரம் டெலிவரி செய்வதாக ஒத்துக்கொண்ட காம்போனண்டுகளை பற்றிய தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டார். அந்த சத்தத்தில் கத்தி கத்தி கஷ்டப்பட்டுத்தான் பேச வேண்டி இருந்தது. ஒரு வழியாக பேசி முடித்து காலை கட் செய்தபோது, கயல் சற்றே முறைப்பாக கேட்டாள்.

"ஆமாம்.. காஞ்ச துணிலாம் எடுத்துட்டு வர்றேன்னு சொல்லிட்டு வந்து.. இங்க என்ன பண்ணிட்டு இருக்குற நீ..?"

"அ..அது.. சும்மா.. சாமி ஊர்வலம் போச்சு.. பாத்துட்டு இருந்தேன்.."

"ம்க்கும்.. சாமி ஊர்வலம் பாக்குற மூஞ்சை பாரு.. உண்மையை சொல்லு.. என்ன பண்ணிட்டு இருந்த..?"

"ஹேய்.. சத்தியமா சாமி ஊர்வலந்தான்டி பாத்தேன்.."

"இல்லையே.. சிகரெட் வாடை வருதே..? தம்மடிச்சியா..?" அவள் மூக்கை உறிஞ்சி ஸ்மெல் செய்துகொண்டே கேட்டாள்.

"அ..அது... அதுலாம் இல்ல.." நான் மாட்டிக்கொண்டதை மழுப்ப முயல,

"இல்லையா..?? எங்க ஊது.."

அவள் விடாப்பிடியாய் கேட்டாள். நான் தயங்கி தயங்கி ஊத, அவள் பட்டென்று கையால் மூக்கை பொத்திக் கொண்டாள்.

"ச்சை.. கருமம்..!! நாறுது..!!"

"ஏய்.. நீதானடி ஊத சொன்ன..?"

"அதுக்கு..?? திருட்டு ராஸ்கல்..!!! எங்கிட்ட ரெண்டுன்னு கணக்கு சொல்ல வேண்டியது.. அப்பப்போ இங்க மொட்டை மாடில வந்து திருட்டு தம் அடிக்க வேண்டியது..!! எத்தனை நாளா நடக்குது இது..??"

"ஐயோ.. டெயிலிலாம் இல்லைடி.. இன்னைக்குத்தான்.. அதுவும் சாமி ஊர்வலம் பாத்துட்டு.. அப்படியே.."

"இதை நம்ப சொல்றியா என்னை..?"

"நம்புனா நம்பு.. நம்பாட்டி போ.."

"ம்ம்ம்..!! சரி.. நம்புறேன்..!! ஆனா.. இன்னைக்கு கோட்டா இத்தோட முடிஞ்சு போச்சு.. நைட்டு சாப்பாட்டுக்கு அப்புறம்லாம் கெடையாது.. இனிமே நாளைக்குத்தான்..!! சரியா..?" அவள் படபடவென பொரிந்தாள்.

"ம்ம்.. சரி சரி..!! உன் இன்ஜினை கொஞ்சம் நிப்பாட்டு.. வுட்டா.. லொட லொட லொடன்னு ஓட்டிட்டே இருப்ப..!! வா.. கீழ போலாம்..!!" நான் சலிப்பாய் சொன்னேன்.

கொடியில் காய்ந்து தொங்கிய துணிகளை எல்லாம், நான் கிளிப் நீக்கி கைகளில் சேகரித்துக் கொண்டேன். கிளிப்களை மீண்டும் கொடியிலே தொங்கவிட்டுவிட்டு, துணிகளை மட்டும் காலி செய்தபோது, எனது இரண்டு கைகளும் நிறைந்து போயிருந்தன. கயல் பொறுமையாக எனக்கு முன்னால் நடக்க, முகத்தை மறைக்கும் துணிகளோடு நான் அவள் பின்னால் நடந்தேன். படிக்கட்டை அடைந்து அவள் கீழே இறங்க, நானும் அவள் பின்னாலேயே இறங்கினேன்.

"பாத்து இறங்கும்மா.."

என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதேதான் அது நடந்தது. ஒரு நொடிதான்..!!!!! கால் இடறியதோ.. புடவை தடுத்ததோ.. கயல் தடுமாறிப் போனவளாய்.. பொத்தென்று நிலைகுலைந்து விழுந்தாள். 'அம்மாஆஆஆ...!!!!' என்று அவள் அலற ஆரம்பிக்கும் முன்பே, அந்த குறுகலான படிகளில் சரிந்து.. 'கட கட கட'வென கீழ் நோக்கி உருள ஆரம்பித்தாள். பதறிப்போன நான் சுதாரிக்கும் முன்பே, பாதி தூரம் உருண்டு சென்று விட்டாள். 'கயல்...!!!!' என்று நான் பெருங்குரலில் கத்தியவாறு, துணிகளை போட்டுவிட்டு படிகளில் இறங்கி ஓட.. கயல் ஒவ்வொரு படியாக.. உருண்டு உருண்டு உருண்டு... கீழே... கடைசிப் படிவரை...!!! அம்பு தைத்த அன்னப்பறவையாய் சொத்தென்று தரையில் போய் வீழ்ந்து கிடந்தாள்..!!

"கயல்ம்மா.. கயல்ம்மா.. கயல்ம்மா.."

நான் காட்டுக்கத்தலாய் கத்திக்கொண்டே ஓடிச்சென்று, கீழே கிடந்த என் மனைவியை தூக்க முயன்றேன். அவள் முகத்தில் சிறு கீறல் கூட இல்லை..!! மேலே வானில் நின்ற வட்ட நிலவின் அதே பிரகாசம்..!! கண்கள் ஒருமாதிரி நிலைகுத்திப் போனது போல.. என்னையே மலங்க மலங்க பார்த்தாள்..!! உதடுகள் படபடவென துடித்துக் கொண்டிருந்தன..!! இமைகள் பரிதாபமாய் வெட்டிக் கொண்டன..!! அவள் அணிந்திருந்த புடவை, இப்போது இடுப்புக்கு கீழே முழுவதும் ஈரமாகி சொதசொதத்து போயிருந்தது..!! அவளுடைய நிலையை பார்த்த என் கண்களில்.. உடனே ஒரு கண்ணீர் ஆறு உற்பத்தியாகி, போல பொலவென கொட்ட ஆரம்பித்தது..!!

"ஐயோ... கயல்ம்மா.. என்னம்மா நீ..??? பா..பாத்து..."

சொல்லிக்கொண்டே அவளை தூக்கலாம் என்று எனது இடது கையை அவளது பின்னந்தலைக்கு கொடுக்க, அந்த கையில் பெயின்ட் மாதிரி பிசுபிசுப்பாய் ஏதோ ஒட்டியது..!! அது என்ன என்று என்று கையை எடுத்து பார்க்க... என் உள்ளங்கை முழுவதும்.. சிவப்பாய்... ரத்தம்...!!!! என் கண்மணியின் ரத்தம்..!!!!! குலை நடுங்கிப் போனது எனக்கு..!! மிரண்டு போனேன் நான்..!!!!

"ஆஆஆஆஆஆஆ.... ஐயோ....!!!!!"

என்று என் மார்பில் 'படார்.. படார்.. படார்..' என இரண்டு கையாலும் அறைந்துகொண்டு அலறினேன்..!!! பக்கத்து தெருவின் செண்டை மேளங்கள் இப்போது 'டம்.. டம்.. டம்..' என இடிபோல் முழங்கின..!! வான வெடிகள் 'டமால்.. டமால்..' என வெடித்து சிதறி காதைப் பிளந்தன..!! எனது அலறல் கேட்டு, பால்கனி வழியாக எட்டிப் பார்த்த பக்கத்து வீட்டு மாமி, 'ஐயய்யோ... கடவுளே...!!!!!' என்று அதிர்ந்து போய் கத்தினாள். அவசரமாய் அவளுடைய கணவரை அழைத்துக்கொண்டு, என் வீட்டிற்கு ஓடி வந்தாள்.

"ஐயோ.. பனிக்குடம் உடைஞ்சிடுச்சு தம்பி... உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகணும்.. தூக்குப்பா...!!"

அவள் பதட்டமும் பரிதவிப்புமாய் சொல்ல, நான் என் தேவதையை தூக்கி இரண்டு கைகளிலும் ஏந்திக் கொண்டேன்.

"கார் சாவி எங்க இருக்கு அசோக்..?"

"உ..உள்ள ஸார்.. ஹால்ல.. டே..டேபிள்..." எனக்கு பேசுவதற்கு நாவே எழவில்லை.

அவர் ஓடிச்சென்று கார்சாவியை எடுத்துக் கொண்டு வீட்டை தாழிட்டு விட்டு வந்தார். என்னுடைய காரை ஸ்டார்ட் செய்ய அவர் முன்னால் ஓட, நான் கயல்விழியை தூக்கிக்கொண்டு வேகமாக பின்னால் நடந்தேன்.

என்னை எப்போதும் மயக்கும் என் மனைவியின் மதி முகத்தை, நீர் கோர்த்த என் விழிகளுடன் பார்த்தேன். அவளும் என் முகத்தையே அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய உடல் கிடுகிடுவென கிடந்து நடுங்கியது. அவளது கண்கள் என்னையே காதலும், பரிதாபமுமாய் பார்த்தன. மூக்கு விம்மியது..!! உதடுகள் துடித்தன.. எதுவோ சொல்ல முயன்றன.. ஆனால் சிறு சப்தம் கூட வெளிவரவில்லை..!! சப்தம் வராவிட்டாலும்.. அவளது உதட்டசைவில் இருந்தே.. அவள் என்ன சொல்ல முயலுகிறாள் என்று என்னால் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது..!!

"அசோக்..!!!!!!"



1 comment:

  1. என்ன பாஸ் இப்படி பண்ணிட்டிங்க நல்லா கதையை ஆரம்பித்துவிட்டு இப்படி காயப்படுத்துறீங்களே பாஸ்

    ReplyDelete

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...