Social Icons

கண்ணாமூச்சி ரே ரே - 3


 




அத்தியாயம் 6

பார்க்கும் இடங்களில் எல்லாம் பச்சை நிறமே பரவிப் படர்ந்திருந்தது.. மலைகளில் முளைத்திருந்த மர, செடி, கொடிகளின் பச்சை..!! சிகரங்கள் அனைத்தும் குளிருக்கு இதமாய் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தன.. முகடுகளை சுற்றிலும் அடர்த்தியாய் வெண்பனி மூட்டங்கள்..!! உடலை ஊசியாய் துளைக்கிற ஈரப்பதம் மிக்க குளிர்காற்று.. நாசிக்குள் நுழைந்திட்ட அந்த குளிர்காற்றில் யூகலிப்டஸின் வாசனை..!! பச்சைமலையை பொத்துக்கொண்டு வெள்ளையாய் வெளிக்கொட்டுகிற தூரத்து அருவி.. அந்த அருவியின் சீற்றத்தை இங்குவரை கேட்ட அதன் சப்தத்திலேயே புரிந்துகொள்ள முடிந்தது..!!

பாறையை செதுக்கி அமைக்கப்பட்டிருந்த தண்டவாளத்தில்.. பாம்பென ஊர்ந்து கொண்டிருந்தது ஒரு தொடர்வண்டி..!! பக்கவாட்டில் குறுகலாய் கிடந்த அந்த தார்ச்சாலையில்.. பனிசூழ பயணித்துக் கொண்டிருந்தது வெண்ணிற ஸ்கார்ப்பியோ..!! கொண்டையூசி வளைவுகள் நிரம்பிய சிக்கலான மலைப்பாதை அது.. கவனத்துடன் நிதானத்தையும் கலந்து காரோட்டிக் கொண்டிருந்தான் சிபி..!! மார்புக்கு குறுக்காக கைகளை கட்டியவாறு.. மலைச்சரிவு மரங்களில் மனதை செலுத்தியிருந்தாள் ஆதிரா..!! குளிருக்கு வெடவெடத்த அவளது தளிர் உதடுகளை எதேச்சையாக பார்த்த சிபி..

"ஸ்வெட்டர் வேணா எடுத்து போட்டுக்கடா..!!" என்றான் கனிவாக.

"இல்லத்தான்.. பரவால.. இன்னும் கொஞ்ச நேரந்தான..??" அமர்த்தலாக சொன்னாள் ஆதிரா.

பத்துநிமிட பயணத்திற்கு பிறகு.. குழலாறு குறுக்கிட்ட அந்த இடத்தில்.. பாதை இரண்டாக பிரிந்து கொண்டது..!! இடது புறம் செல்கிற பாதை அகழிக்கு இட்டுச்செல்லும்.. வலது புறம் திரும்பினோமானால் களமேழி வந்துசேரும்..!! சிபி காரை இடதுபுறம் செல்கிற சாலையில் செலுத்தினான்..!!

ஆதிரா ஜன்னலுக்காக சற்றே தலைசாய்த்து தூரமாக பார்வையை வீசினாள்.. மலையுச்சியை செதுக்கி வடிக்கப்பட்ட சிங்கமுக சிலையொன்று.. இங்கிருந்தே தெளிவாகவும், பிரம்மாண்டமாகவும் காட்சியளித்தது..!! குபுகுபுவென மேனியெங்கும் பற்றிக்கொண்ட நெருப்புடன்.. குறிஞ்சி குதித்து கீழுருண்ட அதே மலையுச்சி..!!

ஐம்பது வருடங்களுக்கு முன்பாக.. குறிஞ்சியின் அட்டகாசத்தை தாங்கமாட்டாத அகழி மக்கள்.. மலையுச்சியில் நரசிம்மருக்கு சிலைவடித்து வணங்க ஆரம்பித்தனர்..!! அப்போது உச்சிமலை என்று அழைக்கப்பட்ட அந்த இடம்.. அதன் பிறகிலிருந்து சிங்கமலை என்று வழங்கப்படுகிறது..!! அந்த சிங்கமலையின் அடிவாரத்தில் சலசலப்புடன் ஓடிக்கொண்டிருந்தது.. குறிஞ்சியை உள்வாங்கிக்கொண்ட குழலாறு..!!

"ஆத்துல தண்ணி ரொம்ப அதிகமா போற மாதிரி இருக்கு.. இல்லத்தான்..??" கேட்ட மனைவிக்கு,

"ம்ம்.. ஆமாம் ஆதிரா.. அப்படித்தான் தெரியுது..!!"

பாதையில் இருந்து பார்வையை எடுக்காமலே பதில் சொன்னான் சிபி..!! சற்று தூரம் சென்றதும்.. குழலாறை கடக்கும் குறுகலான ஆற்றுப்பாலம் வலதுபுறமாக வந்தது..!! சிபி காரின் வேகத்தை வெகுவாகவே குறைத்து.. அந்தப்பாலத்தை நிதானமாக கடந்தான்..!! அதன்மேலும் இரண்டு மைல் தூரம்.. மலைப்பாதையில் மெல்ல மெல்ல மேலேற.. அழகும் அமானுஷ்யமும் கொஞ்சும் அகழி வந்து சேர்ந்தது..!!



நூறு வருடங்களில் அகழி மிகவும் மாறியிருந்தது.. அறிவியல் வளர்ச்சியும், பொருளாதார முன்னேற்றமும் அகழியை மட்டும் விட்டுவைக்குமா என்ன..?? மலைமரங்களுக்கு நடுவே கால் அகற்றி கம்பீரமாக நிற்கும் மூன்று செல்ஃபோன் டவர்கள்.. வீடுகளின் மேற்கூரைகளில் சேட்டிலைட்டுக்கு சமிக்ஞை அனுப்புகிற டிஷ் ஆன்டனாக்கள்.. காய்கறி மார்க்கெட்டுக்கு பக்கத்து சந்தில் ஒரு கணினி மையம் கூட உண்டு..!!

அகழியின் மக்கள்தொகை இப்போது ஆயிரத்தை நெருங்கியிருந்தது..!! புதிய தலைமுறையினர் புகலிடம் தேடி வேலைக்காக வெளியூர் சென்றிருக்க.. அதற்கு முந்தைய தலைமுறையினரே அந்த ஆயிரத்தில் பெரும்பங்கினர்..!! குடிசைகள் வெகுவாக குறைந்து போயிருந்தன.. ஓட்டு வீடுகள் அதிகமாக முளைத்திருந்தன..!! ஊரைச் சுற்றி ஆங்காங்கே தேயிலை தோட்டங்கள்.. ஊருக்கு வெளியே ஒரு தேயிலை தொழிற்சாலையும், ஒரு தடுப்பூசி மருந்து தொழிற்சாலையும்..!! அதுமட்டுமில்லாமல் காளான் வளர்த்தல், கம்பளி நெய்தல் என்று சுயதொழில் செய்வோரும் இருக்க.. அகழி மக்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் எப்போதும் வந்ததில்லை..!!

கார் ஊருக்குள் நுழைந்து மெல்ல பயணிக்க ஆரம்பித்த நேரம்.. கார்மேகம் திரண்டிருந்த வானமும் தூறல் போட ஆரம்பித்திருந்தது..!! மதிய நேரத்திலும் மங்கலான வெளிச்சத்திலேயே காணக்கிடைத்தது அகழி..!! நூறு வருடத்துக்கு முந்தைய கரடுமுரடான சாலைகள் எல்லாம்.. இப்போது தரமான தார்ச்சாலைகளாய் மாறிப்போயிருந்தன..!! சாலைக்கு பக்கவாட்டில் அடுக்கடுக்காய் வீடுகள்..!! ஒவ்வொரு வீட்டுக்கு முன்பாகவும்.. வெள்ளெருக்கம் வேரில் செய்யப்பட்ட ஒருவகை பொம்மைகள் தொங்கவிடப் பட்டிருந்தன.. பேய், பிசாசு, காத்து, கருப்பு என எல்லாவற்றையும் அண்டவிடாமல் செய்கிற சக்தி.. அந்த பொம்மைகளுக்கு உண்டென்பது அகழி மக்களின் நம்பிக்கை..!!

உடலுக்கு ஸ்வெட்டரும், தலைக்கு மப்ளருமாக காட்சியளித்தனர் ஊர்ஜனங்கள்.. எல்லோருடைய முகங்களிலும் இயல்பாகவே ஒரு இறுக்கம் குடியிருந்தது.. ஆண்களின் உதடுகளில் சுருட்டு.. பெண்களின் கண்களில் மிரட்சி..!! எதிர்ப்பட்டவர்களில் ஒருசிலர் காருக்குள்ளிருப்பவர்களை அடையாளம் கண்டுகொண்டு வணக்கம் செய்தனர்.. இவர்களும் காருக்குள் இருந்தவாறே அவர்களுக்கு பதில் வணக்கம் வைத்தனர்..!! ஊரைப்பற்றி ஏதேதோ பேசிக்கொண்டே வீட்டை நோக்கி பயணித்தனர்..!!

"புதுசா ஏதோ ஹோட்டல் வந்திருக்கு அத்தான்..!!"

"புதுசுலாம் இல்ல ஆதிரா.. அது ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆச்சு..!!"



அகழியை விட்டு சற்றே ஒதுங்கி.. தன்னந்தனியாக நின்றிருக்கும் தணிகை நம்பியின் மாளிகை வீடு..!! அகலமாகவும், நீளமாகவும் வேயப்பட்ட ஓட்டுக்கூரை.. கடுக்காய், முட்டையின் வெள்ளைக்கருவெல்லாம் கலந்த கலவையை பூசிக்கொண்டு பளபளக்கும் பக்கவாட்டு சுவர்கள்..!! வீட்டை சுற்றி விரவியிருக்கும் பச்சைப் பசேலென்ற புல்வெளி.. அந்த புல்வெளியினூடே வளைந்தோடி வீட்டு முகப்பில் சென்றுமுடியும் சிமெண்ட் சாலை..!! வீட்டுக்கு ஒருபுறம் அமைதியான குழலாறு.. மறுபுறம் ஆளரவமற்ற அடர்ந்த காடு..!! அந்த காட்டுக்குள் மேலேறும் ஒற்றையடிப் பாதையில் நடந்து சென்றால்.. சிங்கமலையின் உச்சியை சென்றடையலாம்..!!

கார் வீட்டை அடைவதற்குள் மழை வலுத்துக் கொண்டது.. காற்றும் பலமாக வீசியடித்தது..!! காம்பவுண்டுக்குள் நுழைந்து, சிமெண்ட் சாலையில் சீறிய காரின் மேற்கூரையில் மழைத்துளிகளின் சடசட சப்தம்..!! கார் வீட்டுக்குள் வந்து நின்றதுமே.. கையில் விரித்து வைத்த குடையும், காற்றில் படபடக்கிற புடவை தலைப்புமாக.. காரை நோக்கி ஓடிவந்தாள் வனக்கொடி.. அவளுக்கு பின்னாலேயே அவளுடைய பதினெட்டு வயது மகள் தென்றலும்..!! காரில் இருந்து ஆதிரா முதலில் கீழிறங்க.. அவள் நனைந்துவிடாமல் சென்று குடைபிடித்தாள் வனக்கொடி..!!

"ஆதிராம்மாஆஆ..!! இப்போ பரவாலயாம்மா உனக்கு.. இந்த பாதகத்தியால உன்னை வந்து பாக்க கூட முடியல..!! எப்படிமா இருக்குற..??" என்று அன்பாக கேட்டாள்.

"நான் நல்லா இருக்கேன்மா.. நீங்க எப்படி இருக்கீங்க..??"

"எனக்கு என்னம்மா.. இருக்கேன்..!!" வனக்கொடி சலித்துக் கொண்டிருக்கையிலேயே, அந்தப்பக்கமாக சிபியும் காரைவிட்டு வெளிப்பட,

"அய்யா.. சிபிக்கண்ணு.. நல்லாருக்கியாய்யா..??" அவனை ஏறிட்டு கேட்டாள் வனக்கொடி.

"ம்ம்.. நல்லாருக்கேன்மா..!!"

"கல்யாணத்தோட கடைசியா பாத்தது.. ஹ்ஹ்ம்ம்ம்..!!! சரி சரி.. சீக்கிரம் உள்ள வாங்க.. நனைஞ்சுற போறீங்க..!! ஹ்ம்.. இந்த மழை சனியன் ஏன்தான் இப்படி பண்ணுதுன்னு தெரியல.. நைட்டு பூரா பெஞ்சுச்சு.. இப்ப மதியமே மறுபடியும் ஆரம்பிச்சிடுச்சு..!!" எரிச்சலாக சொன்ன வனக்கொடி மகளிடம் திரும்பி,

"ஏய் தென்றலு.. டிக்கியை தெறந்து பெட்டிலாம் ரூம்ல கொண்டு போய் வைடி..!!" என்று உத்தரவிட்டாள்.

அம்மாவின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு.. காரின் பின்பக்கமாக ஓடினாள் தென்றல்..!! சிபியும், ஆதிராவும் வராண்டாவை அடைந்து நிதானமாக நடைபோட.. அவர்களிடம் புலம்பலாக பேசிக்கொண்டே அவர்களுக்கு முன்னால் பரபரப்பாக நடந்தாள் வனக்கொடி..!!

"திடுதிப்புன்னு ஃபோன் பண்ணி வரேன்னு சொன்னதும் எனக்கு கையும் ஓடல காலும் ஓடல.. வீட்ல எல்லாம் அப்படியே போட்டது போட்டபடி கெடந்துச்சு.. நானும் தென்றலும் சேந்து இப்போத்தான் எல்லாத்தையும் ஒதுக்கி சுத்தம் பண்ணுனோம்..!! சமையல் இனிமேத்தான் ஆரம்பிக்கனும்.. நீங்க குளிச்சுட்டு வர்றதுக்குள்ள எப்பிடியாவது ரெடி பண்ணிடுறேன்.. சரியா..?? ரெண்டு புள்ளைகளும் ரெம்ப நாள் கழிச்சு வர்றீக.. ஏதாவது கவுச்சி எடுத்துட்டு வந்து ஆக்கி வைக்கலாம்னா.. வெளியிலயே போமுடியாத மாதிரி இந்த மழை வேற.. ச்சை..!!"

"அதுலாம் ஒன்னும் வேணாம்மா.. சிம்பிளா ஏதாவது பண்ணுங்க போதும்..!!" என்றாள் ஆதிரா.

"ம்ம்.. சாம்பாரும், ரசமும் வச்சுரட்டுமா..?? அப்பளமும், உருளைக்கெழங்கும் பொரிச்சுடுறேன்..!! நாளைக்கு வேணா எதாவது கவுச்சி ஆக்கிக்கலாம்..!!"

"ம்ம்..!!"

"சரி.. நீங்க ரூம்ல போய் குளிச்சு ரெடியாகுங்க.. நான் சமையக்கட்டுக்கு போய் வேலையை பாக்குறேன்..!!"

சொல்லிவிட்டு வேறுபக்கமாக நடந்தாள் வனக்கொடி..!! இரண்டு மூன்று அடி எடுத்து வைத்தவள்.. திடீரென ஏதோ ஞாபகம் வந்தவளாய் மீண்டும் இவர்கள் பக்கமாக திரும்பி,

"ஆங் ஆதிராம்மா.. கீசரு ரிப்பேரா போச்சும்மா.. வெண்ணி போட்டு பாத்ரூம்ல எடுத்து வச்சிருக்கேன்.. பகுந்து குளிச்சுக்கங்க..!!" என்றாள்.

"ச..சரிம்மா.. நாங்க பாத்துக்குறோம்..!!"

வனக்கொடி சமையல்கட்டிற்கு திரும்ப.. ஆதிராவும், சிபியும் அவர்களது தங்கும் அறைக்கு நடந்தனர்..!! ஆதிராவுக்கு காலில் ஏற்பட்ட வெட்டுக்காயம் இன்னும் முழுமையாக ஆறியிருக்கவில்லை.. அதனால் ஒருவித அவஸ்தையுடனே மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்தாள்.. சிபியும் அவசரத்தை விடுத்து மனைவிக்கு இணையாகவே நடந்து சென்றான்..!! காருக்குள் இருந்து அவர்களுடைய பெட்டியை கைப்பற்றியிருந்த தென்றல்.. அவர்களுக்கு முன்பாகவே அவர்களது அறைக்கு ஓடினாள்..!!

வீட்டின் உட்புறம் விஸ்தாரமாக விரிந்திருந்தது.. அபரிமிதமான வேலைப்பாடு மிக்க அலங்கார வளைவுகளுடன் அழகுற காட்சியளித்தது..!! இரண்டு அடுக்குகளை கொண்ட உட்கட்டமைப்பு.. இத்தாலியன் மார்பிள் பதிக்கப்பட்ட தரைத்தளம்..!! நான்கு திசை மேற்கூரையும் உட்புறமாக இறங்குகிற இடத்தில்.. நீள்சதுர வடிவில் அகலமான நடுமுற்றம்..!! நீண்ட வராண்டா.. நிறைய அறைகள்.. அந்த அறைகளை மூடியிருக்கும் பெரிய பெரிய கதவுகள்.. அத்தனை கதவுகளுக்குமான சாவிகளை மொத்தமாக எடை போட்டாலே ஒரு கிலோவுக்கு மேல் தேறும்..!!

யானையின் கால்களென ஆங்காங்கே நின்று, அந்த வீட்டை தாங்கிப் பிடிக்கும் மரத்தூண்கள்.. வெளவால்களை அண்டவிடாமல் செய்ய, அந்த தூண்களில் செருகி வைக்கப்பட்டிருந்த ஈச்சங்கீற்றுகள்..!! 'எல்லாம் பர்மா தேக்கு' என்று தணிகை நம்பி எப்போதும் பெருமைப் பட்டுக்கொள்கிற ஊஞ்சல், நாற்காலிகள், மேஜைகள், அலமாரிகள், அணிகலன் பெட்டகங்கள்..!! தமிழர் பண்பாட்டின் தனிச்சிறப்பை உணர்த்துகிற மாதிரியான.. சுவற்றோடு பொருந்தியிருந்த எழில்மிகு ஓவியங்கள்..!!

ஆதிராவும், சிபியும் மாடிப்படியேறி அவர்களது அறையை அடையவும்.. அறைக்குள் பெட்டியை வைத்துவிட்டு தென்றல் வெளியே வரவும் சரியாக இருந்தது..!! தென்றலை கண்டுகொள்ளாமல் சிபி அறைக்குள் நுழைய.. ஆதிராவோ அவளைப்பார்த்து ஒரு அன்புப் புன்னகையுடன் கேட்டாள்..!!

"எப்படி இருக்குற தென்றல்..??"

"ந..நல்லா இருக்கேன்கா..!!"

"ஹ்ம்ம்.. பொடவைலாம் கட்டிக்கிட்டு பெரிய மனுஷி மாதிரி ஆயிட்ட..??"

"இ..இல்லக்கா.. சும்மாத்தான்.. இ..இன்னைக்குத்தான் பொடவைலாம்.." தென்றல் வெட்கத்தில் நெளிந்தாள்.

"ஆமாம் கதிர் எங்க போயிருக்காரு.. ஆளை காணோம்..??"

ஆதிரா திடீரென அவ்வாறு கேட்கவும்.. தென்றல் சற்றே திகைத்துப் போனாள்.. தடுமாற்றமாக ஆதிராவை ஏறிட்டு பார்த்தாள்..!! அவளுடைய தடுமாற்றத்தைக் கண்டு நெற்றி சுருக்கிய ஆதிரா,

"எ..என்னாச்சு..??" என்று குழப்பமாக கேட்டுக் கொண்டிருக்கும்போதே,

"அ..அண்ணன் இப்போ அகழில இல்லக்கா..!!" தென்றல் அவளுக்கு பதில் சொன்னாள்.

"அப்புறம்..??"

"கோயம்புத்தூர்ல இருக்கான்..!! உங்களுக்கு ஞாபகம் இல்லையா..??"

"இ..இல்ல தென்றல்..!!"

"போய் ஒருவருஷம் ஆச்சுக்கா..!!"

"ஓ..!! கோயம்புத்தூர்ல என்ன பண்றார்..??"

"அ..அங்க ஒரு காட்டன் மில்லுல சூப்பர்வைசரா ஜாயின் பண்ணிருக்கான்..!!"

"வெரிகுட்..!!!! நல்ல வேலையா..??"

"ம்ம்.. நல்ல வேலைக்கா.. நல்ல சம்பளம்..!!"

"ஹ்ம்ம்ம்..!! அப்போ.. கதிருக்கும் வேலை கெடைச்சாச்சு.. அடுத்து.. கூடிய சீக்கிரமே உனக்கு கல்யாணம்தான்னு சொல்லு..!!"

ஆதிரா அவ்வாறு கேலியாக கேட்டுவிட்டு கண்சிமிட்டவும், தென்றலுடைய முகம் வெட்கத்தில் குப்பென சிவந்து போனது.

"ஹையோ.. போங்கக்கா..!!" என்று சிணுங்கியவாறே அந்த இடத்தை விட்டு புள்ளிமானாய் துள்ளி குதித்து ஓடினாள்.

"ஹாஹாஹாஹாஹாஹா..!!"

அவள் ஓடுவதையே மலர்ந்த முகத்துடன் சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்த ஆதிரா.. பிறகு அறைக்குள் நுழைந்தாள்..!!

சிறுவயதில் இருந்தே சிபிக்கென அந்த வீட்டில் ஒதுக்கப்பட்ட அறைதான் அது..!! ஆதிராவும், தாமிராவும் தூங்குகிற அறை கீழ்த்தளத்தில் இருக்கிறது..!! மைசூரிலிருந்து அகழிவரை மலைப்பாதையில் காரோட்டி வந்தது சிபிக்கு களைப்பாக இருந்திருக்க வேண்டும்.. அதனால்தான் அறைக்குள் நுழைந்ததுமே.. 'ஷ்ஷ்ஷ்ஷப்பாஆஆ' என்றொரு சலிப்பு மூச்சுடன் மெத்தையில் பொத்தென்று விழுந்திருந்தான்..!! கண்ணிமைகளை மூடி கைகால்களை நீட்டி படுத்திருக்க.. அவனுடைய மார்பு மட்டும் சீராக ஏறி இறங்கிக் கொண்டிருந்தது..!!

சிபியை தொடர்ந்து அறைக்குள் நுழைந்த ஆதிரா ஒருகணம் அப்படியே நின்றாள்.. கட்டிலில் கணவன் கண்மூடி கிடப்பதை, நின்றபடியே சிறிது நேரம் ரசித்தாள்..!! அந்த அறை.. சிபி படுத்திருக்கிற கோலம்.. இடி மின்னலுடன் வெளியே பெய்யும் மழை.. வீசிய காற்றுக்கு படபடக்கும் ஜன்னல் திரைச்சீலை.. மழைக்கு கிளம்பிய மண்வாசனை.. எல்லாமுமாக சேர்ந்து இரண்டாண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த சம்பவத்தின் நினைவுகளை.. ஆதிராவுக்கு மீட்டுக் கொணர்ந்தன..!!

இதே மாதிரிதான் அன்றும் வெளியே அடைமழை.. சிபியும் அறைக்குள் இதே போஸில் தூங்கிக்கொண்டிருந்தான்..!! அறைவாசலில் பட்டென தோன்றினாள் அவளுடைய தங்கை தாமிரா.. கைகள் இரண்டையும் பக்கவாட்டில் விரித்து வைத்துக்கொண்டு.. பறவையின் சிறகு மாதிரி அந்த கைகளை அசைத்துக்கொண்டு.. முகத்தில் ஒரு உற்சாகம் கொப்பளிக்க.. குரலில் ஒரு குறும்பு பொங்க.. சத்தமாக ஒரு பாடலை பாடிக்கொண்டே அறைக்குள் ஓடிவந்தாள்.. அவளுக்கு பின்னாலேயே ஆதிராவும்..!! தாமிராவுக்கு எங்கிருந்துதான் இந்த மாதிரி பாடல்கள் கிடைக்குமோ தெரியாது..!!

"மழை வருது மழை வருது நெல்லு அள்ளுங்க..!!
முக்காப்படி அரிசி போட்டு முறுக்கு சுடுங்க..!!"


பாடிக்கொண்டே வந்தவள் கட்டிலை நெருங்கியதும், தனது வலது காலை உயர்த்தி..

"ஏர் ஓட்டுற மாமனுக்கு எண்ணி வையிங்க..!!
சும்மா கெடக்குற மாமனுக்கு சூடு வையிங்க..!!"


என்று கத்தியவாறே, சிபியின் புட்டத்தில் ஓங்கி ஒரு உதை விட்டாள்..!! உடனே சிபி விருட்டென்று விழித்தெழுந்தான்.. எழுந்த வேகத்திலேயே..

"ஏய்ய்ய்ய்.. முட்டக்கோஸு.. என்ன பண்றேன் பாரு உன்னை..!!"

என்று சீறியவாறு, உக்கிரமாகிப்போன முகத்துடன்.. தாமிராவின் தலையில் குட்டு வைப்பதெற்கென.. வீராவேசமாக அவளை விரட்டினான்..!!

"ஹாஹாஹாஹாஹாஹா..!!!!"

கலகலவென சிரித்த தாமிரா சிபியின் பிடியில் சிக்காமல் சிட்டாக பறந்தோடினாள்..!! அப்போது ஏனோ தங்கையின் குறும்பை ஆதிராவால் ரசிக்க முடியவில்லை.. வேறொரு தருணத்தில் அதற்காக அவளை கடிந்தும் கொண்டாள்..!!

"அதென்ன பழக்கம்.. எட்டி உதைக்கிறது..?? ரொம்பத்தான் கொழுப்பு வச்சுப் போச்சு உனக்கு..!!"

"சரிஈஈ.. சரிஈஈ.. விடு..!! இனிமே ஒன்னும் பண்ணல உன் புருஷனை.. போதுமா..??"

சிறுவயதில் இருந்தே சிபியின் மீது ஆதிராவுக்கு இருந்த ரகசிய காதல், தாமிராவும் அறிந்த ஒன்றுதான்.. அதனால்தான் 'உன் புருஷனை' என்ற அவளது அந்த கிண்டல்..!! தங்கையின் பதிலில் ஆதிராவுக்கு திருப்தி இல்லை.. ஒருவித எரிச்சல் உணர்வுடன் அவளையே முறைத்துப் பார்த்தாள்..!!

ஆனால்.. இப்போது ஏனோ.. அந்த நிகழ்வின் நினைவு ஆதிராவுக்கு சிரிப்பை வரவழைத்தது..!! எழுந்த சிரிப்பை அடக்க முடியாமல் வாயை பொத்திக்கொண்டு சிரித்தும் விட்டாள்..!!

"ஹாஹாஹாஹாஹாஹா..!!!!"

"என்ன.. என்ன சிரிப்பு..??" இமைகள் திறந்த சிபி, ஆதிராவை பார்த்து கேட்டான்.

"ஒ..ஒன்னும்.. ஒன்னும் இல்ல..!!" ஆதிரா சமாளிக்க முயன்றாள். அப்படியும் முடியாமல் மீண்டும் சிரிப்பை சிந்திவிட்டாள்.

"ஹாஹாஹாஹாஹாஹா..!!"

"ப்ச்.. கேக்குறேன்ல..??"

சற்றே சலிப்பான சிபி இப்போது கட்டிலை விட்டே எழுந்துவிட்டான்.. நடந்து ஆதிராவை நெருங்கினான்..!!

"ஹையோ.. ஒன்னும் இல்லத்தான்..!!"

"இல்ல.. ஏதோ இருக்கு.. சொல்லு..!! சொல்லு ஆதிரா..!!"

சிபி வற்புறுத்தவும் ஆதிரா ஒரு பெருமூச்சை உதிர்த்தாள்.. தனக்கு நினைவு வந்த நிகழ்வை அவனுக்கு உரைத்தாள்.. அடக்கமுடியாத ஒரு சிரிப்பை அவ்வப்போது சிந்தியவாறு..!!

"........... தூக்க கலக்கத்தோட.. மூஞ்சிலாம் அப்படியே செவந்துபோய்.. பின்னாடி கைவச்சு தேச்சுக்கிட்டே.. அவளை நீங்க அடிக்க வெரட்டினது ஞாபகம் வந்துச்சு.. என்னால சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியல..!! ஹாஹாஹாஹாஹாஹா..!!!!" சொல்லிவிட்டு ஆதிரா மறுபடியும் சிரிக்க ஆரம்பிக்க, இப்போது சிபி அவளையே உர்ரென்று முறைத்தான்.

"ம்க்கும்.. இந்த மாதிரி தேவையில்லாத மேட்டர்லாம் நல்லா உனக்கு ஞாபகத்துக்கு வருது.. தேவையான மேட்டர் ஒன்னுகூட ஞாபகத்துக்கு வராதே..??" என்று சலிப்பாகவே கேட்டான்.

"தேவையான மேட்டரா.. அது என்ன தேவையான மேட்டர்..??" ஆதிரா ஒருவித குழப்பத்துடன் திருப்பி கேட்டாள்.

"ஹ்ம்ம்.. நம்ம ஃபர்ஸ்ட்நைட் அன்னைக்கு எவ்வளவு மேட்டர் நடந்துச்சு.. ஐ மீன்.. நம்ம மேரேஜ்கப்புறம் ஒருமாசம் கழிச்சு வந்துச்சே.. அந்த ஃபர்ஸ்ட்நைட்..!! நான் படுத்திருக்குற போஸை பார்த்து அந்த மேட்டர்ல ஏதாவது உனக்கு ஞாபகம் வந்திருக்கலாம்ல..??" சிபி அவ்வாறு குறும்பாக கேட்கவும், இப்போது ஆதிராவின் முகம் அப்படியே நாணத்தில் சிவந்து போனது.

"ஹையோ.. போங்கத்தான்..!! அதுலாம் எதுவும் எனக்கு ஞாபகத்துக்கு வரல..!!" என்று சிணுங்கினாள்.

"எப்படி ஞாபகத்துக்கு வரும்.. அதைப்பத்தி கொஞ்சமாவது நீ யோசிச்சாத்தான..?? ஞாபகம் வரலை சரி.. அட்லீஸ்ட் நான் சொல்றதையாவது நம்பலாம்ல..??"

"நீங்க சொல்றதுலாம் நம்புற மாதிரியே இல்ல.. எல்லாம் பொய் பொய்யா சொல்றிங்க..!!"

"என்னது.. பொய்யா..?? அப்புறம் எப்படி எனக்கு அந்த மச்சத்தைப்பத்தி தெரிஞ்சதாம்..??"

"நீங்க ஏதாவது திருட்டுத்தனமா பாத்திருப்பிங்க..!!"

"நான் ஏன் திருட்டுத்தனமா பாக்கணும்..?? 'பாருங்கத்தான்.. எவ்வளவு அழகா இருக்கு'ன்னு நீயேதான் பெருமையா காட்டின..!!"

"ச்சீய்ய்ய்..!! போங்கத்தான்.. அப்படிலாம் நான் பண்ணிருக்க மாட்டேன்..!!"

சொல்லும்போதே ஆதிராவுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.. உடல் குறுகிப்போய் தலையை குனிந்துகொண்டாள்..!! சிபியின் கண்களிலோ ஒரு குறும்பு மின்னியது.. உதட்டில் ஒரு கேலிப்புன்னகை..!! நடந்ததெல்லாம் ஆதிராவுக்கு மறந்து போயிருந்ததை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு அவளை சீண்டிப்பார்த்தான் சிபி..!! இப்போது அவளுடைய இடுப்பில் கைபோட்டு வளைத்து.. தனக்கு நெருக்கமாக அவளை இழுத்து.. ஹஸ்கி வாய்ஸில் கொஞ்சலாக பேசினான்..!!



"நெஜ்ஜ்ஜ்ஜமாடா.. நான் என்ன பொய்யா சொல்றேன்..?? அந்த மச்சத்துல முத்தம் வேணும்னு கேட்டுக்கூட நீ கெஞ்சின.. முத்தம் தந்தப்புறம் என்ன பண்ணின தெரியுமா..?? என் தலையை பிடிச்சு.."

"ஐயோ...!!! போதும்.. நிறுத்துங்க..!! பொய் பொய் எல்லாம் பொய்..!!"

"உண்மை உண்மை 100% உண்மை..!!"

"நான் நம்பமாட்டேன்பா..!!"

"நம்பாட்டி போ.. நீ நம்பலைன்றதுக்காக நடந்ததுலாம் பொய்ன்னு ஆய்டாது செல்லம்..!! நீ என்னென்ன சேட்டை பண்ணுனன்னு எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு..!!"

"நானா..?? நான் என்ன சேட்டை பண்ணுனேன்..??"

"அதிகாலைல.. நாலு மணிக்கு..!!"

"நாலு மணிக்கு..??"

"அல்ரெடி ரெண்டு தடவை.. நான் அப்படியே டயர்டா தூங்கிட்டு இருந்தேன்..!! உனக்கு முழிப்பு வந்துடுச்சு.. முழிப்பு மட்டும் இல்ல.. மேடத்துக்கு மூடும் வந்துடுச்சு..!!" சிபி சொல்லிவிட்டு கண்ணடிக்க,

"நோ நோ.. பொய்..!!" ஆதிரா பதறினாள்.

"யெஸ்.. யெஸ்..!! மூணாவது தடவை நீயாதான் ஆரம்பிச்ச.. என்னை தூங்கவே விடல.. உன் காலை என் தொடை மேல போட்டு.. உன் கையை வச்சு.."

"ச்சீய்ய்ய்..!!!! சத்தியமா அப்படிலாம் நான் பண்ணிருக்கவே மாட்டேன்.. நீங்க பொய் சொல்றீங்க..!!"

"ப்ச்.. நான் ஏன்டா பொய் சொல்லப் போறேன்..?? ஹ்ம்ம்.. வேணுன்னா ஒன்னு பண்ணலாமா..??"

"என்ன..??"

"இன்னைக்கும் அதேமாதிரி ட்ரை பண்ணலாம்.. ரெண்டு தடவை பண்ணலாம்.. மூணாவது தடவை யார் கூப்பிடுறாங்கன்னு பாக்கலாமா..??" சிபி கேட்டுவிட்டு இளிக்க, ஆதிரா அவனை செல்லமாக முறைத்தாள்.

"ம்க்கும்.. உங்க ஐடியா இப்போ எனக்கு நல்லா புரியுது..!! ரொம்பத்தான் ஆசை உங்களுக்கு..!!"

என்றவாறே தனது இடுப்பை வளைத்திருந்த கணவனின் கைகளை பட்டென தட்டிவிட்டாள்..!! அவ்வளவு நேரம் பிரகாசமாக இருந்த சிபியின் முகம் இப்போது பொசுக்கென வாடிப்போனது.. ஆதிராவையே ஆசையும் ஏக்கமுமாக பார்த்தான்..!! அந்தப்பார்வையில்.. விளக்கமுடியாத ஒரு விரகதாபம் விஞ்சிப் போயிருந்தது..!! திருமணமாகி இரண்டு மாதங்கள் கழிந்தும்.. ஒரே ஒரு நாள்தான் கட்டிலில் கலந்திருக்கிறார்கள்.. சிபியின் ஏக்கம் மிக இயல்பான ஒன்றுதான்..!! தளர்ந்துபோன குரலில் சலிப்பாக பேசினான்..!!

"ஆமாம்.. ஆசைதான் எனக்கு.. அடக்க முடியல.. என்ன பண்ணலாம்னு நீயே சொல்லு..!! ரெண்டு மாசத்துல ஒரே ஒரு தடவை.. எனக்கு ஆசையா இருக்கு ஆதிரா.. திரும்ப வேணும்னு தோணுது..!! சரி.. பிரச்சினைலாம் ஒருவழியா ஓய்ஞ்சு.. ஊட்டிக்கு ஹனிமூன் போறோம்னு சந்தோஷமா வந்தேன்.. நீ என்னடான்னா இங்க இழுத்துட்டு வந்துட்ட..!! என்னென்ன கற்பனைலாம் வச்சிருந்தேன் தெரியுமா.. இப்போ எல்லாம் கேன்ஸல்..!!"

பரிதாபமாக சொன்ன கணவனை பார்க்க ஆதிராவுக்கு பாவமாக இருந்தது.. அவனுடைய ஏக்கம் புரிந்ததும் இவளுக்குள் அவன் மீது ஒரு இரக்கம் பிறந்தது..!! சிபியின் முகத்தையே ஓரக்கண்ணால் குறுகுறுவென பார்த்தாள்.. பிறகு குரலை குழைவாக மாற்றிக்கொண்டு சிணுங்கலாக சொன்னாள்..!!

"எடம் மட்டுந்தான மாறிருக்கு.. எல்லாம் கேன்ஸல்னு யார் சொன்னது..??"

ஆதிரா சொன்னதன் அர்த்தம் உடனடியாக சிபிக்கு விளங்கவில்லை.. ஒரு சில வினாடிகள் கழித்துதான் புரிந்து கொண்டான்.. உடனே அவனுடைய முகத்தில் மீண்டும் அந்த பிரகாசம்..!!

"ஹேய்ய்ய்.. ஆதிராஆஆ..!!"

என்று கத்தியவாறே மனைவியை ஆசையாக அணைத்துக் கொண்டான்.. ஆதிராவும் இப்போது அவனிடமிருந்து விலகவில்லை.. அவனுடைய அணைப்புக்குள் சுகமாக அடங்கிப் போனாள்..!!

"நைட்டு..!!" என்றாள் கிசுகிசுப்பாக.

"ஏன் அவ்ளோ நேரம் வெயிட் பண்ணனும்..??" சிபி அவளுடைய கழுத்தை முகர்ந்தான்.

"நைட்டு..!!" ஆதிரா நெளிந்தாள்.

"இப்போ லைட்டா பாஸ்ட்ஃபுட்.. நைட் ஹெவியா ஃபுல்மீல்ஸ்.. ஓகேவா..??" சிபி தனது அணைப்பை இறுக்கமாக்க,

"நைட்டூடூடூ..!!!" ஆதிரா கத்தினாள்.

கைகளுக்குள் அடங்கியிருந்த மனைவியையே சிபி ஏக்கமாக பார்த்தான்.. பொங்கி வரும் ஆசை வெள்ளத்தை அணைபோட்டு தடுக்கிற நிலை அவனுக்கு..!! ஈரம் மினுக்கிற ஆதிராவின் இதழ்கள்.. தேனில் ஊறிய ஆப்பிள் துண்டங்களாய் அவனுக்கு காட்சியளித்தன..!! அவளுடைய முகத்தை நோக்கி குனிந்தான்.. அந்த ஆப்பிள் துண்டங்களுக்கு தனது அதரங்களை எடுத்து சென்றான்..!! கணவனின் உதடுகளை கைகொண்டு தடுத்த ஆதிரா,

"நைட்டு.. நைட்டு.. நைட்டு..!!" என்று கறாராக சொன்னாள்.

"சரி.. சரி.. சரி..!!!"

நொந்துபோனவனாய் சிபி கத்தினான்.. நீளமாக ஒரு சலிப்பு மூச்சை வெளியிட்டான்.. ஆதிராவை தனது அணைப்பில் இருந்து விடுவித்தான்..!!

"நைட்டே வச்சுக்கலாம்.. பாஸ்ட்ஃபுட் வேணாம்.. ஃபுல்மீல்ஸே சாப்பிட்டுக்குறேன்..!!" செல்லக்கோபத்துடன் சொன்னவன், மெத்தையில் போய் மீண்டும் விழுந்தான்.

"ஹாஹாஹாஹா..!!" ஆதிரா சிரித்தாள்.

"சிரிக்காத.. சீக்கிரம் குளிச்சுட்டு வா..!! அந்தப்பசிக்கு நைட்டுத்தான் சாப்பாடுன்னு சொல்லிட்ட.. வயித்துப் பசிக்காவது கொஞ்சம் குயிக்கா சாப்பிடலாம்..!!" சற்றே எரிச்சலுடன் சொல்லிவிட்டு இமைகளை மூடிக்கொண்டான்..!!

அந்த அறையில் அட்டாச்ட் பாத்ரூம் இல்லை.. கீழ்த்தளத்தில் உள்ள பொது குளியலைறையைத்தான் உபயோகித்துக் கொள்ள வேண்டும்..!! ஜிப் இழுத்து பெட்டியை திறந்த ஆதிரா.. உள்ளிருந்த பூந்துவாலையை எடுத்து தோளில் போட்டுக் கொண்டாள்.. மாற்று உடை, சோப்பு, ஷாம்பெல்லாம் அள்ளிக்கொண்டு அறையை விட்டு வெளியேறினாள்..!! படியிறங்கி கீழே வந்து.. விசாலமான அந்த ஹாலை கடந்து.. அடுத்த முனையில் இருந்த குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்..!!

வெளியாடைகளை களைந்தாள்.. உள்ளாடைகளுடன் நின்றாள்.. கூந்தலை கட்டி வைத்திருந்த ஹேர்பேண்டை உருவி கையிலெடுத்தாள்.. விரல்கள் கோர்த்து முடியை பிரித்து விட்டுக் கொண்டாள்..!! வனக்கொடி பிடித்து வைத்திருந்த வெந்நீருடன் குளிர்நீர் கொஞ்சம் கலந்து.. மிதமான வெப்பத்துக்கு குளிநீரை மாற்றினாள்.. சற்றே உயரமான அந்த முக்காலியில் அமர்ந்து, நிதானமாக நீராட ஆரம்பித்தாள்..!!

உடலுக்கு சோப்பு போட்டு முடித்தவள்.. முகத்துக்கும் நுரை சேர்க்க நினைக்கையில்தான்..

"க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்..!!!"

அறைக்கு வெளியில் இருந்து ஏதோ சப்தம் கேட்டது..!! புருவத்தை நெரித்த ஆதிரா சோப்பு போடுவதை நிறுத்தி வைத்துவிட்டு.. தனது காதுகளை சற்றே கூர்மையாக்கி கவனமாக கேட்டாள்..!!

"க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்..!!!"

அந்த சப்தம் சன்னமான டெசிபலில் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது..!! அது என்ன சப்தம் என்று அவளால் இனம்காண முடியவில்லை.. ஒரு சில வினாடிகள் யோசித்தாள்.. பிறகு புத்தியில் எதுவும் உறைக்காமல் போகவும், அந்த சப்தத்தை அலட்சியம் செய்துவிட்டு குளியலை தொடர்ந்தாள்..!!

குளித்து முடித்து வேறு உடை அணிந்துகொண்டாள்.. தலையில் சுற்றிய டவலுடன் பாத்ரூமில் இருந்து வெளியே வந்தாள்..!! இப்போது அந்த சப்தம் இன்னும் தெளிவாகவே கேட்டது..!!

"க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்..!!!"

ஹாலில் இருந்த ஊஞ்சல் ஆளில்லாமல் அசைந்து கொண்டிருந்தது..!! உத்தரத்தில் இருந்து தொங்கும் இரட்டை ஊஞ்சல்கள் அவை.. தாங்குவதற்கு தடிமனான இரும்புச்சங்கிலி.. அமர்வதற்கு உராய்வற்ற மரப்பலகை.. இரண்டு பேர் ஒரே நேரத்தில் தனித்தனியாக அமர்ந்து ஆடலாம்.. அதில் ஒன்று மட்டுந்தான் இப்போது..

"க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்..!!!"

என்ற சப்தத்துடன் அசைந்துகொண்டிருந்தது.. யாரோ இத்தனை நேரம் அதில் அமர்ந்து ஆடிவிட்டு, இப்போதுதான் இறங்கிச் சென்ற மாதிரி..!!

ஆதிரா அந்த ஊஞ்சலையே சற்று குழப்பமாக பார்த்துக் கொண்டிருந்தபோதுதான்.. அவளுடைய நாசியை குப்பென்று அந்த வாசனை தாக்கியது.. மனதை மயக்குகிற மாதிரி ஒருவித சுகந்த நறுமணம்.. அவளுடைய நாசியில் புகுந்து, மூளைவரை பாய்ந்து, கண்கள் லேசாக செருகுமாறு, மெலிதான ஒரு கிறக்கத்தை அவளுக்கு ஏற்படுத்தியது அந்த வாசனை..!!

ஆதிராவுக்கு மிகவும் பழக்கப்பட்ட வாசனைதான் அது.. ஆனால் சட்டென்று அவளால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை..!! எங்கிருந்து அந்த வாசனை வருகிறது என்று அப்படியும் இப்படியுமாய் தலையை திருப்பி திருப்பி பார்த்தாள்.. ஊஞ்சல் எப்படி தானாக அசைந்து கொண்டிருக்கிறது என்று வேறு உள்ளுக்குள் ஒரு கேள்வி.. எந்த முடிவுக்கும் வர முடியவில்லை அவளால்..!!

ஒருசில வினாடிகள்.. பிறகு.. 'தென்றல் வந்து கொஞ்ச நேரம் ஊஞ்சல் ஆடியிருப்பாளாக இருக்கும்.. அவள் ஏதாவது வாசனை திரவியம் பூசியிருப்பாளாக இருக்கும்..' என்று அவளாகவே ஒரு முடிவுக்கு வந்து.. மெல்ல மாடிப்படியேற ஆரம்பித்தாள்..!!

அத்தியாயம் 7

அகழிக்கு வந்திருந்தது ஆதிராவின் மனதில் ஒரு உற்சாகத்தை தந்திருந்தது.. ஊர் ஊராய் சுற்றிவிட்டு வீட்டை வந்தடைந்ததும் உருவாகுமே, அது மாதிரியானதொரு உணர்வு..!! நடந்ததெல்லாம் மறந்து போயிருந்த காரணத்தினால்.. என்னதான் ஒருவருடமாக வாழ்ந்த வீடானாலும்.. மைசூர் வீட்டை அவளதுவீடாக கருதுவதில் அவளுக்கு ஒரு தயக்கம் இருக்கவே செய்தது..!! அவள் பிறந்து வளர்ந்த இந்த அகழி வீட்டைத்தான்.. அவளுடைய ஆழ்மனம் 'தனது வீடு' என்று அவளுமறியாமல் நம்பியது..!! சிபி குளிக்க கிளம்பியபிறகு தனது கூந்தலை உலர்த்தியவள்.. சிறுவயது நினைவுகளில் அப்படியே சிறிது நேரம் ஆழ்ந்திருந்தாள்..!!

சிபியும் குளித்துவிட்டு வந்து வேறு உடை மாற்றிக்கொண்டதும்.. மதிய உணவுக்காக இருவரும் மாடியினின்று கீழே இறங்கி வந்தார்கள்..!! பயணக்களைப்பு பசியை கிளறி விட்டிருந்தது இருவருக்கும்.. வனக்கொடி அருகில் இருந்து பரிமாற, வயிறார இருவரும் உணவருந்தினார்கள்..!! அப்பளத்தை கடித்துக்கொண்டே ஆதிரா வனக்கொடியிடம் சொன்னாள்..!!

"நாங்க வந்திருக்குறது அப்பாவுக்கு இப்போதைக்கு தெரிய வேணாம்மா.. தெரிஞ்சா தேவை இல்லாம டென்ஷன் ஆவாரு..!!"

"ம்ம்.. புரியுது ஆதிராம்மா.. நான் சொல்லல.. ஆனா ஏதாவது.."

"பின்னாடி அப்பாக்கு தெரிஞ்சு உங்களை ஏதாவது சொல்வாரோன்னு நெனைக்காதிங்க.. அப்படி ஏதாவது பிரச்சினையானா அதை நாங்க பாத்துக்குறோம்.. சரியா..??"

"ச..சரிம்மா..!!"

"ஹ்ம்ம்.. எனக்கென்னவோ இங்க ஒரு அஞ்சாறு நாள் இருக்கணும்னு ஆசைம்மா.. அதான்..!! ஒருவருஷம் நடந்ததுலாம் மறந்து போச்சுன்றதை என்னால ஏத்துக்க முடியல.. எப்படியோ போகட்டும்னு அப்படியே என்னால வாழ முடியல..!! நான் பழைய மாதிரி நார்மலுக்கு வரணும்.. மறந்ததுலாம் திரும்ப ஞாபகம் வர்றதுக்கு, இந்த அஞ்சாறு நாள் எனக்கு ரொம்ப உதவியா இருக்கும்னு தோணுது..!! பாக்கலாம்..!!"

ஆதிரா சொல்ல வனக்கொடி அவளையே பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தாள்.. அப்புறம் அப்படியே திரும்பி சிபியையும் அதே பார்வை பார்த்தாள்..!! பிறகு.. நீளமாக ஒரு பெருமூச்சை உதிர்த்தவள்.. கனிவான குரலில் ஆதிராவிடம் சொன்னாள்..!!

"ஹ்ஹ்ம்ம்ம்ம்.. எல்லாம் நல்லபடியா நடக்கும் ஆதிராம்மா.. நீ ஒன்னும் கவலைப்படாத..!! உன் நல்ல மனசுக்கு எந்த கொறையும் வராதும்மா..!!"

"சரிம்மா.. என் கதையை விடுங்க.. கதிர்க்கு வேலை கெடைச்சிருக்குறதா தென்றல் சொன்னா..!!"

"ஆ..ஆமாம்மா..!! கோயமுத்தூர்ல இருக்கான் இப்போ..!!"

"என் கல்யாணத்துக்கு கூட வரல போல.. ஆல்பம் பார்த்தேன்.. அதுல ஆளையே காணோம்..!!"

"வரணும்னுதான்மா அவனுக்கும் ஆசை.. கடைசி நேரத்துல லீவு கெடைக்கலை போல..!!"

"ஓஹோ.. அகழிக்காவது வர்றாரா இல்லையா..??"

"ம்ம்.. வருவான்மா..!! போன மாசம் கூட வந்துட்டு போனானே..!! இன்னும் ரெண்டு நாள்ல திரும்ப வருவான்னு நெனைக்கிறேன்.. திருவிழா வேற வருதுல..??"

"ஓ.. சரி சரி.. வரட்டும் வரட்டும்.. எனக்கும் அவரை பாக்கணும் போல இருக்கு.. பார்த்து ரொம்ப நாள் ஆயிட்ட மாதிரி ஒரு ஃபீல்..!! ஹ்ம்ம்.. அப்புறம்.. இன்னொன்னு சொல்லனும்னு நெனைச்சேன்.."

"சொல்லும்மா..!!"

"நாளைக்கு காலைல நீங்க எங்கயும் வெளில போறிங்களா..??"

"இல்லம்மா.. எங்கயும் போகல.. இங்கதான் இருப்பேன்.. ஏன் கேக்குற..??"

"காலைல நான் உங்களுக்கு ஒரு வேலை வச்சிருக்கேன்..!!"

"என்ன வேலை..??"

"என்கூட சிங்கமலை வரைக்கும் வரணும்..!!"



ஆதிரா கேஷுவலாக சொல்ல, வனக்கொடியின் முகம் பட்டென ஒரு இருட்டுக்கு போனது.. உடனடியாக எந்த பதிலும் சொல்லாமல் ஒருவித தடுமாற்றத்தில் உழன்றாள்..!!

"என்னம்மா.. ஒன்னும் சொல்ல மாட்டேன்றிங்க..?? வர்றீங்களா..??" ஆதிரா திரும்ப கேட்கவும்,

"ம்ம்.. வ..வர்றேன்மா..!!" திணறலாக சொன்னாள் வனக்கொடி. இப்போது ஆதிரா சிபியிடம் திரும்பி,

"இப்போ.. ஈவினிங் உங்களுக்கு நான் ஒரு வேலை வச்சிருக்கேன்..!!" என்றாள்.

"எ..என்ன..??" அவ்வளவு நேரம் அமைதியாக சாப்பிட்டுக்கொண்டிருந்த சிபி குழப்பமாக கேட்டான்.

"என்கூட மாமா வீடு வரைக்கும் வரணும்..!!" ஆதிரா சொல்ல, இப்போது சிபியின் முகம் சட்டென்று இருண்டு போனது.

"நா..நானா..?? நா..நான் வரல ஆதிரா..!!" என்றான் தளர்வான குரலில்.

"ப்ளீஸ்த்தான்.. மாமா உடம்பு சரியில்லாம இருக்காரு.. அகழி வரை வந்துட்டு அவரை பாக்கலைன்னா நல்லாருக்காது.. போய் பாத்துட்டு வரலாம்.. ப்ளீஸ்..!!"

"உன்னை போகவேணாம்னு நான் சொல்லலையே.. நான் வரலைன்னுதான் சொன்னேன்..!! நீ.. நீ மட்டும் போயிட்டு வா ஆதிரா..!!"

"இல்லத்தான்.. கல்யாணத்துக்கப்புறம் மொதமொறையா அங்க போறேன்.. தனியா போறதுக்கு ஒருமாதிரி இருக்கு.. நீங்களும் வந்தா நல்லாருக்கும்.. ப்ளீஸ்த்தான்.. வாங்க..!!"

ஆதிரா கெஞ்ச, சிபிக்கு வேறு வழியிருக்கவில்லை.. ஒருசில வினாடிகள் தயக்கத்துக்கு பிறகு, மனைவியின் விருப்பத்துக்கு இசைந்தான்..!!

"சரி ஆதிரா.. போலாம்.. சாப்பிடு..!!"

மதிய உணவின்பிறகு சிறிதுநேரம் ஓய்வெடுத்துவிட்டே ஆதிராவும் சிபியும் கிளம்பினார்கள்.. மாலை நேரத்தில் மழை சற்று ஓய்ந்திருந்தது..!! அகழியின் ஒருமூலையில் தணிகைநம்பியின் வீடு இருக்கிறதென்றால்.. அதன் இன்னொரு மூலையில் இருக்கிறது ஆதிராவின் மாமா மருதகிரியின் வீடு.. அவளுடைய அம்மா பூவள்ளியின் பிறந்தகம்..!! தணிகைநம்பியோ பூவள்ளியோ அந்த வீட்டுக்கு சென்று பதினைந்து வருடங்கள் ஆகப்போகின்றன..!! ஆதிராவுக்கு பத்து வயது இருக்கையில்.. மருதகிரியின் வீட்டில் நடந்த ஒரு சுபகாரியத்தின்போது.. மரியாதைக் குறைச்சல் என்று தணிகைநம்பி ஆரம்பித்த ஒரு பிரச்சினை.. விரைவிலேயே விரிசல் பெருசாக்கிப் போய் பேச்சு வார்த்தை இல்லாமல் போயிற்று..!! ஆனால்.. ஆதிராவோ தாமிராவோ அந்த வீட்டுக்கு செல்ல எந்த தடையும் எப்போதும் இருந்ததில்லை..!!

ஊருக்கு வெளியே இருக்கிற தடுப்பூசி மருந்து தொழிற்சாலை மருதகிரிக்கு சொந்தமானதுதான்.. அதுமட்டுமில்லாமல் ஊட்டிக்கருகே பெரிய ரப்பர் தோட்டமும் உண்டு..!! முடக்குவாதம் வந்து மருதகிரி இப்போது படுத்த படுக்கையாகிவிட.. முகிலன், நிலவன் என்கிற அவருடைய இரண்டு மகன்கள்தான் அதையெல்லாம் கவனித்துக் கொள்கிறார்கள்..!! மருதகிரியின் வீட்டுக்கு வர சிபி தயங்கியதற்கு காரணம் இருக்கிறது.. சிறுவயதில் இருந்தே சிபிக்கும் மருதகிரியின் மகன்களுக்கும் ஏழாம் பொருத்தம்.. பெற்றோர் இல்லா பிள்ளை, மாமா வீட்டை அண்டிப் பிழைப்பவன் என்று அவர்களுக்கு எப்போதுமே இவனைக்கண்டால் ஒரு இளக்காரம்..!!

மருதகிரியின் வீட்டுக்கு காரில் சென்றடைய பதினைந்து நிமிடங்கள் ஆகின..!! தணிகை நம்பியின் வீட்டைவிட இன்னுமே கம்பீரமான, செல்வசெழிப்பான மாளிகை வீடு.. பிரிட்டிஷ் கட்டிடக்கலையின் நுணுக்கத்துடன் கட்டமைக்கப்பட்ட கல் பங்களா..!! இரண்டாள் உயரத்திற்கு வீட்டை சுற்றிய மதில் சுவர்.. அதனினும் அதிக உயரத்தில் அகலமான, அலங்காரமான மர வாயில்.. அந்த மர வாயிலில் ஆங்காங்கே தொங்கிய சின்னசின்ன பொம்மைகள்.. வெள்ளெருக்கம் வேரில் செய்யப்பட்ட விதவிதமான மாந்திரீக பொம்மைகள்..!!

காரில் வந்தவர்களை அடையாளம் கண்டுகொண்ட காவலாளி கேட்டை திறந்துவிட்டான்.. வீட்டு முகப்புக்கு ஓடிய சாலையில் காரை செலுத்தினான் சிபி..!! தணிகைநம்பியின் வீட்டை போல செடிகொடிகளோ, புல்வெளிகளோ இல்லை.. விஸ்தாரமான வெற்று முற்றம்தான்..!! பச்சை கற்பூரம், கஸ்தூரி மஞ்சள், ஜவ்வாது எல்லாம் அரைத்து கலந்த பொடியை.. நீரில் கலந்து அந்த முற்றம் எங்கும் தெளித்திருக்க.. ஒரு இனிய நறுமணம் அந்த பிரதேசத்தை நிறைத்திருந்தது..!! தீயசக்திகள் எவையும் வீட்டை அணுகக்கூடாது என்பதற்காகத்தான் இதெல்லாம்..!!

ஆதிராவும் சிபியும் வீட்டுக்குள் நுழைகையில்.. உள்ளே நடுஹாலில் நடந்துகொண்டிருந்த கலசபூஜையும் அதற்காகத்தான்..!! செங்கற்களால் அணைகட்டப்பட்ட அடுப்பில் நெருப்பின் ஜூவாலை.. அடுப்பை சுற்றி சந்தனப்பொட்டு வைத்துக்கொண்ட ஐந்து வெண்கல பாத்திரங்கள்.. ஐந்திலும் ஐவகை இலைகள் மிதக்கிற தூய நீர்.. கலசம் என்று அழைக்கப்படுகிற பஞ்ச பாத்திரங்கள்..!! மேலும்.. துளசி, மஞ்சள், எலுமிச்சை, குங்குமம் என்று பூஜைக்கு தேவையான இன்னபிற இத்யாதிகள்..!!

கொசகொசவென முகமெல்லாம் தாடி மீசையுமாய், முதுகில் புரள்கிற நீளக்கூந்தலுமாய் இருந்த ஒரு ஆள்தான் பூஜை செய்துகொண்டிருந்தார்.. ஏதோ ஒரு புரியாத பாஷை மந்திரங்களை சொல்லிக்கொண்டே நெய்யள்ளி தீயில் வார்த்துக் கொண்டிருந்தார்..!! வெள்ளை வேஷ்டியும் வெற்று மார்புமாக அவர் முன்பு அமர்ந்திருந்தனர் முகிலனும், நிலவனும்.. அவர்களுக்கு அருகே அவர்களது தாய் அங்கையற்கண்ணியும், முகிலனின் மனைவி யாழினியும்..!! நிலவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை..!! முகிலனும், நிலவனும் பட்டதாரிகளானாலும் ஆவி, அமானுஷ்யங்களில் அதிக நம்பிக்கையுண்டு.. அதற்கான மாந்திரீக அணுகுமுறையிலும் நிறையவே ஈடுபாடு உண்டு..!!

ஆதிராவும், சிபியும் உள்ளே நுழைந்ததும்.. சகோதரர்கள் இருவரும் ஒருமுறை இவர்களை ஏறிட்டு பார்த்தனர்..!! ஓரிரு வினாடிகள்.. அவ்வளவுதான்..!! பிறகு மீண்டும் அந்தப்பக்கமாக திரும்பி.. மந்திரங்களை திரும்ப உச்சரித்து.. பூஜையில் தங்கள் கவனத்தை செலுத்த ஆரம்பித்தனர்..!! அங்கையற்கண்ணியும், யாழினியும்தான் சிரித்த முகத்துடன் எழுந்து ஓடி வந்தார்கள்..!!

"ஆதிராஆஆ.. வா வா..!! எத்தனை நாளாச்சு பாத்து..?? எப்படிமா இருக்குற..?? எப்போ வந்த..?? அப்பா, அம்மாலாம் நல்லா இருக்காங்களா..?? எப்படி சொல்லாமக் கொள்ளாம வந்து நிக்கிறா பாரேன்..??" என்று அன்பொழுக வரவேற்றனர்.

அவர்களுடைய கேள்விகளுக்கெல்லாம் சிரித்த முகத்துடன் பதில் சொன்னாள் ஆதிரா..!! பிறகு.. பூஜை பற்றி ஆதிரா கேட்க, அங்கையற்கண்ணி பதில் சொன்னாள்..!!

"மாசமாசம் நடக்குற பூஜைதான்மா.. குடும்பத்துக்கு எதும் கெடுதல் வந்துடக்கூடாதுன்னுதான்.. குறிஞ்சி வேற இப்போ உச்சத்துல ஆடுறா..!! அவனுகளை பத்தித்தான் தெரியும்ல.. பூஜைன்னா யார்ட்டயும் பேசக்கூட மாட்டானுக.. நீ தப்பா எடுத்துக்காத..!!"

"இ..இல்ல அத்தை.. தப்பா எடுத்துக்கல..!!"

இதமான குரலில் சொன்ன ஆதிரா, அப்புறம் மாமாவை பற்றி விசாரித்தாள்.. அவரை பார்க்கவேண்டும் என்றாள்..!!

"ஆதிராவை நான் மேல கூட்டிட்டு போறேன் யாழினி.. நீ இங்க இருந்து பூஜைக்கு தேவையானதுலாம் கவனிச்சுக்க..!!"

மருமகளை பணித்துவிட்டு அங்கிருந்து முன்நடந்தாள் அங்கையற்கண்ணி.. அவளை பின்தொடர்ந்தனர் ஆதிராவும், சிபியும்..!!

மாடிப்படியேறி மருதகிரியின் அறையை அடைந்தனர்..!! கோணிக்கொண்ட வாயுடனும், கொக்கிபோல் வளைந்த கையுடனும் படுக்கையில் கிடந்தார் மருதகிரி.. அவரைக்காண ஆதிரா வந்திருப்பதை அறிந்து அகமகிழ்ந்து போனார்..!! வாயிலிருந்து எச்சில் வந்த அளவிற்கு வார்த்தை வரவில்லை அவருக்கு.. சைகையாலேயே ஆதிராவை பற்றியும் அவளுடைய குடும்பத்தை பற்றியும் விசாரித்தார்..!! ஆதிராவும் மிகப் பொறுமையாக அவருக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.. சிபிதான் அந்த சூழ்நிலைக்கு சற்றும் சம்பந்தமில்லாதவனாய் எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்..!!

பிறகு அங்கையற்கண்ணி சிறிதுநேரம் ஆதிராவுடன் தனியே பேசிக்கொண்டிருந்தாள்.. ஆதிராவுக்கு நேர்ந்த விபத்தைப் பற்றி கேட்டறிந்து கொண்டாள்.. தற்போதைய உடல்நல தேற்றத்தை பற்றியும் விசாரித்து தெரிந்து கொண்டாள்..!!

"மைசூர் வந்து உன்னை பாக்கனும்னு போல இருந்துச்சு ஆதிரா..!! வந்தவளை உங்கப்பா எதும் சொல்லிருவாரோன்னு ஒரு பயம்.. இவனுகளும் அதெல்லாம் ஒன்னும் வேணாம்னு சொல்லிட்டானுக..!!"

"ஹ்ம்ம்.. புரியுது அத்தை.. பரவால.. அதனால என்ன..??"

பேச்சு பிறகு பின்னோக்கி சென்றது.. தாமிராவை இழந்துவிட்டதற்காக கண்ணீர் சிந்தினாள் அங்கையற்கண்ணி.. குடும்பப்பகையை நினைத்து கவலை தொனிக்க பேசினாள்..!!

"எப்போவோ நடந்ததை நெனச்சுக்கிட்டு இப்போவும் முறுக்கிக்கிட்டு இருக்காரே உன் அப்பா..!! முகிலனுக்கு உன்னை கட்டிவச்சாவாவது பகையெல்லாம் தீரும்னு நெனச்சோம்.. அதான் பொண்ணு கேட்டும் வந்தோம்.. முடியவே முடியாதுன்னு ஒத்தைக்கால்ல நின்னுட்டாரு..!! வள்ளியவும் ஒன்னும் குத்தம் சொல்ல முடியாது.. அவளுக்கு ஆசை இருந்தாலும் புருஷனை மீறி என்ன பண்ணிட முடியும்..?? ஹ்ம்ம்.. எப்போத்தான் எல்லா பிரச்சினையும் தீந்து, ஒத்துமையா நிம்மதியா இருப்போம்னு தெரியல..!!!"

அங்கையற்கண்ணியின் புலம்பலை கேட்டுமுடித்து.. அவளுக்கு ஆறுதல் எல்லாம் சொல்லிமுடித்து.. அங்கிருந்து சிபியை கூட்டிக்கொண்டு கிளம்பினாள் ஆதிரா..!! கீழிறங்கி வந்தபோது பூஜையும் முடிந்திருந்தது..!! சட்டை பட்டனை மாட்டிக்கொண்டே எதிர்ப்பட்ட முகிலன்..

"என்னடா.. நல்லாருக்கியா..??" என்று முறைப்பாக கேட்டான் சிபியை பார்த்து.

"சாப்ட்டு கெளம்பலாம்ல..??" என்று சம்பிரதாயமாக கேட்டான் ஆதிராவிடம்.

"இல்ல.. இன்னொரு நாள் சாப்பிடுறோம்.. வனக்கொடி சாப்பாடு ரெடி பண்ணிருப்பாங்க..!!"

என்று நாகரிகமாக மறுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள் சிபியும் ஆதிராவும்.. காரை கிளப்பி தங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்..!!

அன்றிரவு உணவருந்தி முடித்த சிறிதுநேரத்திலேயே.. சிபி பிஸியாகிப் போனான்..!! அவனுடைய மைசூர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்திருக்க.. செல்ஃபோனை எடுத்துக்கொண்டு வராண்டாவிற்கு சென்றிருந்தான்..!! கையை இப்படியும் அப்படியுமாய் அசைத்து.. கன்னடமும், ஆங்கிலமும் கலந்து பேசிக்கொண்டிருந்தான்..!!

கணவனுக்காக காத்திருந்த நொடிகள் ஆதிராவுக்கு அலுப்பை ஏற்படுத்த.. ஹாலில் கிடந்த மரத்தாலான சாய்விருக்கையில் வந்தமர்ந்தாள்.. ரிமோட் எடுத்து டிவியை ஆன் செய்தாள்..!! ஓடிய சேனலில் விருப்பம் இல்லாதவளாய், வேறு சேனல் மாற்ற ரிமோட் பட்டனை அழுத்தினாள்.. சேனல் மாறவில்லை.. அதே சேனலே தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது..!! ஆதிரா இப்போது கட்டைவிரலால் பட்டனுக்கு அதிக அழுத்தம் கொடுத்தாள்.. பலனேதும் இல்லை.. அதே சேனல்..!! வலதுகையால் ரிமோட்டை இறுகப்பற்றி.. இடது உள்ளங்கையில் அதை 'பட்.. பட்.. பட்.. பட்..' என்று நான்கு முறை ஓங்கி தட்டினாள்..!! மீண்டும் டிவிக்கு முன்பாக ரிமோட்டை நீட்டி.. சேனல் மாற்றும் பட்டனை அழுத்தி பார்த்தாள்.. சேனல் மாறுவதாக இல்லை..!!

"ப்ச்..!!"

சலிப்பை உதிர்த்தவள் பவர் பட்டனை வெறுப்புடன் அழுத்த.. பட்டென ஆஃப் ஆகிக்கொண்டது டிவி..!! ஆதிரா ஒருசில வினாடிகள் டிவி திரையையே எரிச்சலாக முறைத்தாள்.. பிறகு ரிமோட்டை விசிறி எறிந்துவிட்டு, இருக்கையில் இருந்து எழுந்துகொண்டாள்..!! நடந்து வாசலுக்கு சென்று வராண்டாவை ஒருமுறை எட்டி பார்த்தாள்.. சிபி இன்னும் சீரியஸான டிஸ்கசனில் இருந்தான்..!! 'என்ன செய்யலாம்?' என்று ஒருகணம் யோசித்தவள்.. பிறகு திரும்பி மாடிக்கு படியேற ஆரம்பித்தாள்..!!

அறைக்குள் நுழைந்ததுமே அவளுடைய கையிலிருந்த செல்ஃபோன்..

"விர்ர்ர்ர்ர்... விர்ர்ர்ர்ர்... விர்ர்ர்ர்ர்...!!!"

என்று அதிர்வுற்று சப்தம் எழுப்பியது.. உள்ளங்கையில் உதறலை ஏற்படுத்தியது..!! ஆதிரா டிஸ்ப்ளே எடுத்து பார்த்தாள்.. அந்த செல்ஃபோனில் சேகரிக்கப்படாத ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வந்துகொண்டிருந்தது..!! 'யாராக இருக்கும்..?' என்று நெற்றி சுருக்கியவள்.. பிறகு காலை பிக்கப் செய்து காதில் வைத்துக் கொண்டாள்..!!

"ஹலோ..!!"

ஆதிரா நிதானமாக சொல்ல.. அந்தப்பக்கம் ஒரே நிசப்தம்..!! யாரோ கால் செய்துவிட்டு பேசாமல் அமைதியாக இருந்தது போல் தோன்றியது..!! சற்றே எரிச்சலுற்ற ஆதிரா..

"ஹலோ..!!" என்று குரலை உயர்த்தி கத்தினாள். இப்போது அடுத்தமுனையில் அந்த வினோத ஒலி..!!

"க்க்ர்ர்க்க்...க்க்கர்ர்ர்க்க்க்க்... க்க்கர்ர்ர்க்க்க்க்... க்க்ர்ர்க்க்...!!!!"

சரியாக அலைதிருத்தப்படாத வானொலி கரகரக்குமே.. அந்த மாதிரியான ஒரு கரடுமுரடான சப்தம்.. காதுகளுக்கு உகாத ஒரு இரைச்சல் சப்தம்..!! மனிதரின் குரல் மாதிரியே அது இல்லை.. ஏதோ காட்டுவிலங்கு மூச்சிரைப்புடன் குறட்டையிடுவது மாதிரி..!!

"ஹலோ..!!"

"க்க்ர்ர்க்க்... க்க்கர்ர்ர்க்க்க்க்... இன்.. க்க்கர்ர்ர்க்க்க்க்... கண்... க்க்ர்ர்க்க்... க்க்கர்ர்ர்க்க்க்க்...!!!!"

அந்த சப்தம் ஆதிராவிடம் ஏதோ சொல்ல முயன்றது போலிருந்தது.. ஆனால்.. ஒலித்த எந்த வார்த்தைகளையும் ஆதிராவால் புரிந்து கொள்ள முடியவில்லை..!! குழப்பரேகை ஓடுகிற முகத்துடன் செல்ஃபோனையே சிறிதுநேரம் வெறித்து பார்த்தாள்.. பிறகு படக்கென காலை கட் செய்தாள்.. மெத்தையில் செல்ஃபோனை விட்டெறிந்தாள்..!!

"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..!!!"

நீளமாக ஒரு மூச்சு விட்டவள், நடந்து சென்று அலமாரியை திறந்தாள்.. அடுக்கி வைக்கப்பட்டதிலிருந்து ஒரு உடையை தேர்வு செய்தாள்.. அணிந்திருந்ததை அவிழ்த்துவிட்டு அந்த இரவு உடைக்கு மாறினாள்..!!

அறையின் அடுத்த மூலையில் இருந்த ஜன்னலை அடைந்தாள்..!! ஜன்னல் திரையை விலக்கி.. சற்றே தலையை எக்கி.. கீழ்த்தள வராண்டா மீது பார்வையை வீசினாள்.. கணவனை கண்களால் தேடினாள்..!! சிபியை அங்கே காணவில்லை.. வெறிச்சோடி கிடந்தது வராண்டா..!! 'எங்கே சென்றிருப்பான்?' என்று எக்கி எக்கி அவள் பார்க்க..

"ஊஊஊஊஊஊஊஊ..!!!"

என்று காட்டுக்குள் ஒரு ஓநாய் ஊளையிட்ட சப்தம் இங்குவரை கேட்டது..!! ஆதிரா கண்களை மெல்ல சுழற்றி.. வீட்டுக்குப் பின்புறமிருந்த காட்டுப்பக்கமாக பார்வையை செலுத்தினாள்..!! கரியப்பிக்கொண்ட மாதிரி காட்சியளித்த அடர்காட்டுக்குள்.. ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெள்ளையாய் மசமசப்பு வெளிச்சம்.. அங்கிருந்து ஏதோ புகைமூட்டம் கிளம்புவதுபோல ஒரு தோற்றம்..!! அந்தக்காட்சி அவளுடைய முதுகுத்தண்டில் ஒரு ஜிலீர் உணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கையிலேயே..

"ப்பே.....!!!!!!!!!!!!!!!!!" அவளுக்கு பின்பக்கமாக வந்த சிபி, அவளது காதுக்கருகே பெரிதாக கத்தினான்..!!

"ஆஆஆஆஆஆ..!!" பக்கென அதிர்ந்த ஆதிரா பயத்தில் அலறினாள்.

"ஹாஹாஹாஹா..!!" சிபியோ எளிறுகள் தெரிய சிரித்தான்.

"போங்கத்தான்.. நான் பயந்தே போயிட்டேன்..!!" ஆதிரா செல்லமாக சிணுங்கினாள்.

"ச்சும்மாடா.. வெளையாட்டுக்கு..!! ரொம்ப பயந்துட்டியா..??"

"ஆமாம்..!!"

"ஸாரி ஸாரி ஸாரி..!!"

"ம்ம்.. பரவால.. விடுங்க..!! என்னாச்சு.. ரொம்ப நேரமா கால்..??"

"அதுவா..?? ஊட்டில இந்த வாரம் ஹார்ஸ் ரேஸ் ஆரம்பிக்குதாம்.. அதைப்பத்தி எங்க மேகஸின்ல ஒரு ஆர்ட்டிக்கில் வரப்போகுதாம்..!! மைசூர்ல இருந்து நாளான்னிக்கு ஒரு டீம் ஊட்டிக்கு வர்றாங்க.. 'நீ அங்கதான இருக்குற.. அப்படியே போய் ஜாய்ன் பண்ணிக்கிறியா..'ன்னு கேட்டாங்க.. ஒரேநாள் வேலைதான்..!!"

"ஓ.. நீங்க என்ன சொன்னிங்க..??"

"முடியாதுன்னு சொன்னேன்.. ட்ரை பண்ணுன்னு சொன்னாங்க.. சரி ட்ரை பண்றேன்னு சொல்லிருக்கேன்..!!"

"போகணுமா..??" ஆதிரா கவலையாக கேட்டாள்.

"வேணாமா..??"

"ப்ளீஸ்த்தான் போகாதிங்க.. இங்கயே இருங்க..!!"

"ஓ..!! இங்கயே இருந்தா என்ன கெடைக்குமாம்..??" சிபியிடம் பட்டென ஒரு குறும்பு.

"என்ன வேணும்..??" புரிந்தும் புரியாத மாதிரி கேட்டாள் ஆதிரா.

"அது..!!"

"எது..??"

"அப்போ நீ சொன்னதுதான்..!!"

"நான் என்ன சொன்னேன்..??" ஆதிராவும் விடுவதாய் இல்லை.

"ம்ம்..?? நைட்டு.. நைட்டு.. நைட்டு..!!!" மதியம் ஆதிரா சொன்ன அதே பாவனையுடன் சிபி சொல்லிவிட்டு குறும்பாக கண்சிமிட்ட,

"ச்சீய்ய்ய்..!!!" ஆதிரா அழகாக வெட்கப்பட்டாள்.

நாணத்தில் தலைகுனிந்தவளை அப்படியே கைகளில் அள்ளிக்கொண்டான் சிபி.. ஆதிராவும் அவனது செயலுக்கு மறுப்பேதும் தெரிவிக்கவில்லை.. அவனுடைய முகத்தை பார்க்க கூசியவள், தலையை மட்டும் தாழ்த்திக் கொண்டாள்..!! ஒரு பூங்கொத்தைப் போல அவளை மென்மையாக மெத்தையில் கிடத்தினான் சிபி.. ஆசையாக அவள் மீது கவிழ்ந்து, அவளது கழுத்துப்பகுதியில் முகம் புதைத்தான்.. உஷ்ணமாக ஒரு மூச்சுவிட்டான்..!!

"ஹ்ஹ்ம்ம்ம்ம்ம்..!!!"



கூச்சத்தில் நெளிந்த ஆதிரா உடலை முறுக்கி துள்ளினாள்.. சிபி சமநிலை இழக்க, அவனுடன் சேர்ந்து மெத்தையில் புரண்டாள்..!! இப்போது அவன் மல்லாந்திருக்க.. இவள் அவன் மார்பில் மாலையாய் தவழ்ந்திருந்தாள்..!! எழ முயன்றவள் நகரமுடியாதபடி சிபி அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்..!! விரகத்தை மனதில் வைத்துக்கொண்டு விலக முயன்றால் என்னவாகும்..?? தனது முயற்சியில் தோற்றுப்போய் அவனுடைய நெஞ்சிலேயே முகம் புதைத்துக் கொண்டாள் ஆதிரா..!! சிபியின் கரமொன்று நீண்டு.. இரவு விளக்கு தவிர மற்ற விளக்குகளை அணைத்தது..!!

ஆடை களைந்தார்கள்.. அங்கம் கலந்தார்கள்.. ஆனந்தக்கடலில் மூழ்கி திளைத்தார்கள்.. அதன் ஆழம் வரை சென்று திரும்பியதும் அப்படியே அயர்ந்து போனார்கள்..!! எது யாருடைய உடல் என்று பிரித்தறிய முடியாதமாதிரி.. ஒருவரை ஒருவர் பிண்ணிப் பிணைந்துகொண்டு.. எப்போது உறங்கினோம் என்பதை அறியாமலே ஆழ்தூக்கத்தில் ஆழ்ந்து போனார்கள்..!!

அடித்துப் போட்டமாதிரி அவர்கள் இருவரும் மாடியில் அவ்வாறு தூங்கிக்கொண்டிருக்க.. கீழ்த்தளத்தில் இருந்த இரட்டை ஊஞ்சல்களில் ஒன்று மட்டும்.. இப்படியும் அப்படியுமாய் தனியாக ஆடிக்கொண்டு கிடந்தது..!!

"க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்..!!!"

அதன் சப்தம் மேலே இருப்பவர்களுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை..!!

அடுத்தநாள் காலை ஏழுமணி.. அகழியை தழுவியிருந்த வெண்பனி..!! இழுத்துப் போர்த்திய கம்பளிக்குள் இன்னுமே உறக்கத்தை தொடர்ந்திருந்தான் சிபி.. அதற்குள்ளாகவே குளித்துமுடித்து வீட்டிலிருந்து கிளம்பியிருந்தாள் ஆதிரா..!! வீட்டுக்கு பின்புறமாக புதர் அடர்ந்துகிடந்த அந்த ஒற்றையடிப்பாதையில்.. வனக்கொடி முன்னால் நடக்க, ஆதிரா அவளை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தாள்..!!

"பார்த்துவா ஆதிராம்மா.. முள்ளுஞ்செடியுமா மண்டிக் கெடக்கு..!!"

வனக்கொடியின் கையில் ஒரு நீளப்பிரம்பு.. தன்னால் முடிந்த அளவிற்கு புதரை விலக்கி பாதையை எளிதாக்கி.. ஆதிராவுக்கு சிரமமில்லாமல் பார்த்துக் கொண்டாள்..!! அதிகாலைக் குளிருக்கு சால்வை போர்த்தியிருந்த ஆதிரா.. ஒற்றைக்கையை மட்டும் வெளியே நீட்டி, செடிகொடிகளை புறந்தள்ளி, மலைப்பாதையில் மெல்ல மெல்ல மேலேறினாள்..!!

"சொல்லுங்கம்மா.. அன்னைக்கு என்ன நடந்துச்சு..??" ஆதிரா கேட்கவும், அதற்காகத்தான் காத்திருந்த மாதிரி வனக்கொடி மெல்ல ஆரம்பித்தாள்.

"தலைல நீர் கோத்துக்கிட்டு சளியும், இருமலுமா கெடந்தா தென்றலு.. நாலு நாள்ல ஆளே தேஞ்சு போய்ட்டா ஆதிராம்மா..!! சரி.. வெள்ளைநொச்சி இலையை புடுங்கியாந்து.. அரைச்சு ஆவி புடிச்சா சரியாப்போவும்னு நெனச்சேன்..!! இந்தா.. இப்படியே கெழக்கால எறங்குனமுன்னா நெறைய மூலிகைச்செடி கொத்துக்கொத்தா வளந்து கெடக்கும்.. அங்கதான் போய் இவ்வளவு வெள்ளைநொச்சி இலையை புடுங்கி எடுத்தாந்தேன்..!! வீட்டுக்குப்போய் அரைச்சு குடுக்கனும்னு தென்றலு நெனைப்பாவே வந்துட்டு இருந்தப்பதான்.. காட்டுக்குள்ள தனியா நடந்துபோன நம்ம தாமிராவை திடீர்னு பாத்தேன்..!!"

"..........................." வனக்கொடி சொல்வதையே ஆதிரா அசைவின்றி கேட்டுக்கொண்டிருந்தாள்.

"இந்தா.. இந்த எடத்துலதான் தாமிரா போயிட்டு இருந்துச்சு.. நான் அதோ அங்க நின்னு பாத்துட்டேன்..!!"

"ம்ம்..!!"

"பாத்ததுமே என் மனசுக்கு எதோ சரியாப்படல.. இந்த நேரத்துல இந்தப்பொண்ணு எதுக்கு இந்தப்பக்கம் போகுதுன்னு..!!"

"..........................."

"அதுமில்லாம நம்ம தாமிரா மூஞ்சில ஒரு சத்தே இல்லம்மா.. எதையோ பாத்து பயந்த புள்ள மாதிரி மூஞ்சி வெளிறி போயிருந்துச்சி..!!" சொன்ன வனக்கொடி தானும் தனது முகத்தை பயந்தமாதிரி மாற்றிக்கொண்டாள்.

"ம்ம்..!!"

"தாமிரா தாமிரான்னு சத்தம் குடுத்து பாத்தேன்..!! தாமிரா திரும்பியே பாக்கல.. ஏதோ வசியம் வச்ச மாதிரி அப்படியே அசையாம போயிட்டு இருந்துச்சு..!!" - வனக்கொடியின் கண்கள் இப்போது அகலமாக விரிந்துகொண்டன.

"ஓ..!!"

"எனக்கு இப்போ வயித்துல புளி கரைக்க ஆரம்பிச்சிருச்சு.. தாமிரா தாமிரான்னு கத்திக்கிட்டே பின்னாடி ஓடுனேன்..!!"

சொல்லிக்கொண்டே இப்போதும் வனக்கொடி திடுதிடுவென ஓட ஆரம்பிக்க.. ஆதிராவும் சுதாரித்துக்கொண்டு, காலில் வெட்டுக்காய வேதனையுடன் அவள் பின்னால் ஓடினாள்..!!

"இங்க.. இந்த எடத்துல வச்சு தாமிராவை புடிச்சுட்டேன்.. கையை புடிச்சுட்டு எங்க போறன்னு கேட்டேன்..!! வெடுக்குன்னு வெட்டுனாம்மா ஒரு வெட்டு.. அவ்வளவுதான்.. நான் தடுமாறி அப்படியே கீழ விழுந்துட்டேன்..!!" விழுக்கென்று துள்ளி மரத்தில் சரிந்து காட்டினாள் வனக்கொடி.

"எந்திரிச்சு தாமிராம்மான்னு கத்துறேன்.. தாமிரா இப்போ வேகமா ஓட ஆரம்பிச்சுட்டா.. நானும் எந்திரிச்சு அவ பின்னாடியே ஓடுனேன்..!!"

வனக்கொடி அந்த குறுகிய மலைப்பாதையில் மீண்டும் ஓட ஆரம்பித்தாள்..!! மிரட்சி அப்பிய விழிகளுடன், நெஞ்சுக்கூடு தடக் தடக்கென அடித்துக்கொள்ள ஆதிராவும் அவளுடன் ஓடினாள்..!! தடதடவென ஓடிய வனக்கொடி திடீரென பிரேக்கடித்து நிற்க.. ஆதிராவும் மூச்சிரைக்க அவளுக்கருகே வந்து நின்றாள்..!!

"இந்த எடத்துல வர்றப்போ தூரத்துல தாமிராவை காணோம்.. பட்டுன்னு மாயமா மறைஞ்சு போயிட்டா..!! எனக்கு ஒன்னும் புரியல.. மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க இங்கயே கொஞ்ச நேரம் தனியா நின்னுட்டு இருந்தேன்..!!" - ஆதிராவும் வனக்கொடியுமே இப்போது அதேமாதிரிதான் நின்றிருந்தார்கள்.
"எனக்கு இப்போ நல்லா புரிஞ்சு போச்சு.. இது குறிஞ்சியோட வேலைதான்னு.. நம்ம புள்ளையை அவ கொண்டு போயிடக் கூடாதுன்னு நெனச்சேன்.. உசுரை கைல புடிச்சுட்டு திரும்ப ஓடுனேன்..!!"

சரிவான அந்த மலைப்பாதையில் மீண்டும் ஒரு ஓட்டம்.. கைகளை விரித்து வைத்துக்கொண்டு வனக்கொடி ஓட, இழுத்துப் போர்த்திய சால்வையுடன் அவள் பின்னே ஓடினாள் ஆதிரா..!! சிங்கமலை உச்சியை அடைந்ததும் வனக்கொடி நின்றாள்.. ஓரிரு வினாடிகளுக்கு பிறகு ஓடிவந்தடைந்த ஆதிராவிடம் தஸ்புஸ்சென்று மூச்சிரைப்பு.. அவளுடைய மார்புகள் இரண்டும் குபுக் குபுக்கென்று மேலும் கீழும் ஏறி இறங்கின.. காலில் வேறு விண்ணென்று ஒரு வலி..!!

"இங்க வந்து நின்னு பாத்தப்போ.. என் நெஞ்சே வெடிச்சுற மாதிரி அப்படியே பக்குன்னு இருந்தது.. நான் கண்ணுல கண்ட காட்சி அப்புடி..!!"

"எ..என்ன பாத்திங்க..??"

"நம்ம தாமிராவை காணோம்.. அந்த பாதகத்தி குறிஞ்சிதான் தலையை விரிச்சு போட்டு அங்க நின்னுட்டு இருந்தா.. அவ மூஞ்சியே முழுசா தெரியல.. அப்படியே முடி மறைச்சு கெடந்துச்சு.. 'உஸ்ஸ்.. உஸ்ஸ்' ன்னு கோவமா மூச்சு விட்டுட்டு என்னையே உத்துப்பாத்தா.. எனக்கு கொலை நடுங்கிப்போச்சு ஆதிராம்மா..!!"

"..........................."

ஆதிரா பேச்சுமூச்செல்லாம் அடங்கிப்போய் நின்றிருந்தாள்.. ஆவேசம் கொப்பளித்த வனக்கொடியின் முகத்தையே மிரண்டுபோய் பார்த்துக் கொண்டிருந்தாள்..!!

"மலைல இருந்து குறிஞ்சி குதிக்கப் போறான்னு எனக்கு தெரிஞ்சுச்சு.. அவ குதிச்சுட்டா நம்ம புள்ள நமக்கு இல்லைன்னு என் புத்திக்கு புரிஞ்சுச்சு..!! எனக்கு எப்படித்தான் அப்படி ஒரு வேகம் வந்துச்சோ.. 'வேணாம்... நில்லு...'ன்னு கத்திக்கிட்டே ஓடுனேன்..!!"

சொல்லிக்கொண்டே வனக்கொடி மலைவிளிம்பை நோக்கி விடுவிடுவென ஓடினாள்.. ஆதிரா அதிர்ந்துபோய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்..!!

"அப்படியே பாய்ஞ்சு போய் குறிஞ்சி மேல விழுந்து அவளை புடிச்சேன்..!!"

வனக்கொடி இப்போது பொத்தென்று தரையில் விழுந்து உருண்டாள்.. சற்று தள்ளி விழுந்திருந்தால் மலையுச்சியில் இருந்தே கீழே விழுந்திருப்பாள்..!! தரையில் விழுந்தவள் சிலவினாடிகள் அப்படியே கிடக்க.. ஆதிரா உடலெல்லாம் ஒரு வெடவெடப்புடன் அப்படியே அசையாமல் நின்றிருந்தாள்..!! வனக்கொடி இப்போது மெல்ல தலையை உயர்த்தி.. ஆதிராவை திரும்பி பார்த்தாள்..!! அவளுடைய கண்களில் இப்போது கண்ணீர் தாரை தாரையாய் ஓடிக் கொண்டிருந்தது.. முகமும், உதடுகளும் துக்கத்தில் கிடந்தது துடித்தன..!! விசும்பலான குரலில் சொன்னாள்..!!

"குறிஞ்சி என் கைல மாட்டல ஆதிராம்மா.. காணாம போயிட்டா..!! எட்டிப்பாத்தா.. அவ அங்கிதான் ஆத்தை நோக்கி பறந்து போயிட்டு இருந்துச்சு..!!"

"..........................."

“நம்ம தாமிராவை என்னால காப்பாத்த முடியல.. இந்தப்பாவியால உன் தங்கச்சியை காப்பாத்த முடியல ஆதிராம்மா..!!"

வனக்கொடி குலுங்கி குலுங்கி அழ ஆரம்பிக்க.. அதை எதிர்பாராத ஆதிரா திகைத்துப் போனாள்.. ஓடிச்சென்று வனக்கொடியை வாரி அணைத்துக் கொண்டாள்..!!

"அழாதிங்கம்மா..!! ஐயோ.. அழாதிங்க ப்ளீஸ்..!!"

"காட்டுக்குள்ள தெசை தப்பி போயிட்டேன்மா.. கொஞ்சம் அசந்துட்டேன்..!! நான் மட்டும் சரியான நேரத்துக்கு வந்திருந்தா.. நம்ம தாமிராவை காப்பாத்திருக்கலாம் ஆதிராம்மா..!! தப்பு பண்ணிட்டேன்.. தப்பு பண்ணிட்டேன்..!!" ஆதிராவின் மார்பில் முகம் புதைத்து அழுதாள் வனக்கொடி.
"ஐயோ.. என்னம்மா இது.. விடுங்க..!! உங்க மேல எந்த தப்பும் இல்லம்மா.. அழாதிங்க.. கண்ணை தொடைச்சுக்காங்க.. ப்ளீஸ்..!!" அவளை தேற்றினாள் ஆதிரா.

அதன்பிறகு அந்த இடத்தில் சிறிது நேரம் நிசப்தம்தான்..!! வனக்கொடியின் அழுகை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.. ஆதிராவும் அவள் நிதானத்திற்கு வருவதற்காகத்தான் காத்திருந்தாள்..!! வனக்கொடி இயல்புக்கு திரும்பியதும்.. ஆதிரா அந்தக் கேள்வியை அவளிடம் கேட்டாள்..!!

"அப்போ.. தாமிராவையும் குறிஞ்சியும் ஒண்ணா சேர்த்து நீங்க பாக்கல.. தனித்தனியாத்தான் பாத்திங்க..!!"

"ஆ..ஆமாம்மா.. ஏன் கேக்குற..??"

"அப்புறம் எப்படி அவதான் தாமிராவை கொண்டு போயிருக்கனும்னு உறுதியா சொல்றிங்க..??"

"அவ இல்லனா அப்புறம் வேற யாரு..??"

வனக்கொடி அவ்வாறு திருப்பி கேட்க.. அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று ஆதிரா இப்போது தடுமாறினாள்..!! உறுதியான வாதம் எதையும் அவளால் முன்வைக்க முடியாமல் போனதால்.. அப்படியே அமைதி காக்க முடிவு செய்தாள்..!!

"ஒன்னும் இல்லம்மா.. விடுங்க..!!" என்று அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

தரையில் அமர்ந்திருந்த இருவரும் மெல்ல மேலெழுந்து கொண்டார்கள்..!! வனக்கொடி ஏதோ ஒரு சூனியத்தை வெறித்துக்கொண்டிருக்க.. ஆதிரா மட்டும் அந்த இடத்தை சுற்றி பார்வையை சுழற்றினாள்..!!



பாறையைக் குடைந்து செதுக்கப்பட்ட ராட்சதவடிவ சிங்கமுக சிலை ஒருபுறம்.. பாதாளத்தில் வீழ்த்திவிடும் சரேலென்ற மலைச்சரிவு மறுபுறம்.. பச்சைபச்சையாய் சுற்றிலும் அடர்ந்த காட்டு மரங்கள்..!! கோயில் என்று சொல்வதற்கான எந்த தனித்துவ அடையாளங்களும் அந்த இடத்தில் காணப்படவில்லை.. குங்குமத்தில் தோய்க்கப்பட்ட நான்கைந்து எலுமிச்சம் பழங்கள் சிலைக்கு அடியில் வீழ்ந்து கிடந்தன.. சிலைக்கு முன்புறம் கற்பாளங்களால் எழுப்பப்பட்ட ஒரு உயரமான மேடை.. அந்த மேடையின் அடிப்பாகத்தை சுற்றியிருந்த ஒரு சிவப்புத்துணி.. மேடையின் மேற்புறத்தில் காய்ந்தவிறகுகளின் உதவியுடன் எரிகிற ஜோதி.. மேடைக்கு வலப்புறமாக நட்டுவைக்கப்பட்டிருந்த ஒரு சூலாயுதம்.. அவ்வளவேதான்..!!

ஆதிராவுக்கு அந்த இடத்தை பார்க்க பார்க்க.. அவளும் தாமிராவும் அந்த இடத்துக்கு முன்பு வந்து சென்ற ஏதேதோ நினைவுகள் எல்லாம்.. அவளுடைய மனத்திரையில் குழப்பமாக ஓடின.. அந்த குழப்பத்தை தாங்கமுடியாதவளாய் படக்கென தலையை உதறிக்கொண்டாள்..!!

அவ்வாறு உதறி ஒரு நிதானத்துக்கு வந்தபோதுதான்.. ஆதிரா அதை உணர்ந்தாள்.. அந்த இடத்தை நிறைத்திருந்த அந்த இனிய வாசனையை.. நேற்று குளித்துவிட்டு வந்தபோது குப்பென்று நாசியில் ஏறிய அதே வாசனை..!! நாசியில் புகுந்து.. நாடி நரம்பெல்லாம் ஓடி.. மனதை கொள்ளை கொள்கிற அற்புத வாசனை..!! தனக்கு பழக்கமான வாசனைதான் என்று நேற்று நினைத்தாளே.. அவளுக்கு அந்த வாசனை அறிமுகமான இடமே இதுதான்..!! அந்த வாசனையை அறிந்துகொண்டதுமே அவளுடைய கண்களில் ஒரு மிரட்சி.. உடலில் ஒருவித நடுக்கம்..!! கலவர முகத்துடன் அப்படியே வனக்கொடியிடம் திரும்பி..

"அ..அம்மா.. இது.. இ..இந்த வாசனை.. என்ன வாசனை இது.. எ..எங்க இருந்து வருது..??" என்று திணறலாக கேட்டாள். உடனே நாசியை சற்று கூர்மையாக்கிய வனக்கொடி,

"இதுவா..?? இது மகிழம்பூ வாசனைம்மா.. மகிழமரம் அந்தா வளர்ந்திருக்கு பாரு.. அதுல இருந்துதான் இவ்வளவு வாசனை வருது..!! வாடிப்போனாலும் வாசம்போகாத ஒரே பூ.. மகிழம்பூதான் ஆதிராம்மா.. வாசத்துக்கு பேர்போனது..!!" என்று இயல்பாக சொன்னாள்.

வனக்கொடி கைகாட்டிய திசையில் பார்வையை வீசினாள் ஆதிரா.. மகிழம்பூ மரத்தின் மேற்புறம் அங்கே காட்சியளித்தது..!! மலைச்சரிவில் வேரூன்றி.. மேல்நோக்கி உயரமாக வளர்ந்து.. மலைவிளிம்பில் தனது கிளைக்கைகளை படரவிட்டிருந்தது அந்த மகிழமரம்..!! மரத்தின் மேற்புறத்தில் பச்சைபச்சையாய் இலைகள்.. கொத்துக்கொத்தாய் வெள்ளைப்பூக்கள்.. மஞ்சள் மஞ்சளாய் மகிழம்பழங்கள்..!!

"இ..இது.. இந்த மகிழமரம்.. நம்ம வீட்டுக்கு பக்கத்துல இந்த மரம் இருக்குதா..??" ஆதிராவிடம் இன்னுமே ஒரு தடுமாற்றம்.

"இல்லையே.. நம்ம வீட்டுப் பக்கத்துல மகிழமரம் எதுவும் இல்லையே..!! ஏன்மா கேக்குற..??"

வனக்கொடி குழப்பமாக ஆதிராவிடம் திரும்ப கேட்டாள்.. அதை கேட்கும்போதே ஆதிராவின் இதயத்தில் குபுகுபுவென ஒரு கொந்தளிப்பு..!! பதில் எதுவும் சொல்லத் தோன்றாதவளாய்.. அந்த மகிழமரத்தையே மிரட்சியாகப் பார்த்தாள்..!!

 

6 comments:

  1. superb update screw sir......
    oru nalla thriller movie paakkura mathiriye oru feel irukku.....
    so all we are expect ur next update shortly........
    -kutti arun

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. I love this story but post update quick as possible. I made me so eager that what come next

    ReplyDelete

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...