Social Icons

கண்ணாமூச்சி ரே ரே - 2


 




அத்தியாயம் 3

அடுத்த நாள் காலை.. அதிகமாய் ட்ராஃபிக் இல்லாத மைசூர் காந்தராஜ் சாலை..!! அந்த சாலையில்.. அகலமாகவும் உயரமாகவும் எழுந்து நிற்கிற அப்பல்லோ மருத்துவமனை.. அந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவை சார்ந்த அமைதியான ஒரு அறை..!!

ஆதிரா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்..!! அவளுடைய மார்புகள் சீராக ஏறி இறங்கிக் கொண்டிருந்தன.. அவளது தலையில் பலத்த அடிபட்டிருக்க வேண்டும்.. தலையை சுற்றி பெரிதாக ஒரு பேண்டேஜ்..!! முகத்தில் காணப்பட்ட சிறுசிறு சிராய்ப்புகள்.. இன்னும் கவனிக்கப்படாமலே விடப்பட்டிருந்தன..!! அவளுடைய இடதுபுற மார்புப் பிரதேசத்தில் இருந்து கிளம்பி சென்ற ஐந்தாறு எலக்ட்ரோடுகள்.. மேஜையில் வைக்கப்பட்டிருந்த ECG மானிட்டரின் பின்புறமாக சென்று முடிவடைந்தன..!! ஆதிராவின் இதயத்துடிப்பு வீதத்திற்கு ஏற்ப.. அந்த ECG மானிட்டர் பச்சை நிற அதிர்வலைகளை உருவாக்கிக் கொண்டிருந்தது.. 'கீங்க்.. கீங்க்.. கீங்க்..' என்ற சப்தத்தோடு..!!

மூன்று கால்களில் நின்ற அந்த ஸ்டீல் ஸ்டாண்டின், விரிந்திருந்த இரண்டு கைகளுள் ஒன்றில்.. ப்ளாஸ்டிக் சலைன் பாட்டில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தது..!! அதிலிருந்து சொட்டு சொட்டாக இறங்கிய நிறமற்ற திரவம்.. குழாய் வழியிறங்கி ஆதிராவின் வலதுகை நரம்புக்குள் நேரடியாக பாய்ந்து கொண்டிருந்தது..!! தீருகிற நிலையை அந்த திரவம் இப்போது அடைந்திருக்க.. வேறொரு புதிய சலைன் பாட்டிலை மாற்றினாள், ஆதிராவை கவனித்துக் கொள்கிற கன்னட நர்ஸ்..!! நாஸில் திறந்து திரவ ஓட்டத்தை சீராக்கியவள்.. எதேச்சையாக ஆதிராவின் முகத்தை ஏறிட்டபோதுதான்.. அவளுக்கு இப்போது விழிப்பு வந்திருப்பதை கவனித்தாள்..!!

"வெல்கம் பேக் ஆதிரா.. குட் மார்னிங்..!!" என்றாள் புன்னகையுடன்.

ஆதிரா அவளுக்கு ஒரு உலர்ந்த புன்னகையை சிந்த முயன்று தோற்றாள்.. களைத்துப் போயிருக்கிறாள் என்பது அவளுடைய கண்களிலேயே தெளிவாக தெரிந்தது..!! உடலின் சக்தி முழுவதும் உறிஞ்சப்பட்டுப் போனது மாதிரியான ஒரு உணர்வு அவளுக்குள்..!! இமைகளை திறந்தும் மூடியும் திறந்தும் மூடியும்.. அப்படியே மலங்க மலங்க ஒரு பார்வை பார்த்தாள்..!! பிறகு.. உதடுகளை பிரித்து ஏதோ சொல்ல முயன்றாள்.. ஆனால் சப்தம் வெளிவராமல் போகவும்..


"ஏனு..??" ஆதிராவை கேட்டாள் அந்த நர்ஸ்.

ஆதிரா இப்போது விழிகளை ஒருமுறை அழுத்தமாக மூடி திறந்து.. மூச்சுக்காற்றை சற்றே தாராளமாக உள்ளிழுத்து வெளியேற்றி.. உடலில் எஞ்சியிருந்த ஆற்றலை எல்லாம் உதடுகளுக்கு தருவித்து..

"அம்மா.." என்றாள் ஈனஸ்வரத்தில்.

"ஓ.. அம்மா வெளில இருக்காங்க.. பாக்கணுமா..??"

"ம்ம்ம்ம்..!!"

"சரி.. வர சொல்றேன்.. பேசுங்க..!! பட்.. ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காதிங்க..!!"

கனிவாக சொன்ன நர்ஸ், இதமான ஒரு புன்னகையை சிந்திவிட்டு, நிதானமாக திரும்பி நடந்தாள்.. அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்.. நீளமாக விரிந்திருந்த வராண்டாவை இப்படியும் அப்படியுமாய் பார்வையால் அலசினாள்..!! சற்று தூரத்தில் கிடந்த ஒரு மர இருக்கையில்.. பூவள்ளியும் தணிகை நம்பியும் கவலை தோய்ந்த முகத்துடன் காட்சியளித்தனர்..!! நடந்து அவர்களை நெருங்கியவள்..

"அவங்க கண்ணு முழிச்சுட்டங்க.. உங்களை பாக்கனும்னு சொல்றாங்க..!!" என்றாள்.

அவள் அவ்வாறு சொன்னதுமே.. பூவள்ளிக்கும் தணிகை நம்பிக்கும் முகத்தில் ஒருவித மலர்ச்சியும், சந்தோஷமும்..!! படக்கென இருக்கையில் இருந்து எழுந்தவர்கள்.. ஒருவர் முகத்தை ஒருவர் ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொண்டார்கள்..!! பூவள்ளி கணவனின் கையை சற்றே ஆறுதலுக்கென பற்றிக்கொண்டாள்..!!

"அ..அவகிட்ட நாங்க பேசலாமா..??" தடுமாற்றமான குரலில் கேட்டார் தணிகை நம்பி.

"நீங்க பேசலாம்.. ஆனா.. அவங்களை அதிகமா பேச விடாதிங்க.. ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ண கூடாது..!!"

"இ..இல்லமா.. பண்ணல..!! பா..பாத்துக்குறோம்..!!"

"அவங்க நல்லா ரெஸ்ட் எடுக்கணும்.. சீக்கிரம் பாத்துட்டு வெளில வந்துடுங்க.. சரியா..?? டாக்டர் வந்தா திட்டுவாரு.. அதுக்குத்தான் சொல்றேன்..!!"

"ம்ம்.. சரிம்மா.. தேங்க்ஸ்..!!"

நர்சுக்கு ஒரு நன்றியை உதிர்த்துவிட்டு.. தணிகை நம்பியும் பூவள்ளியும் அவசரமாக அந்த அறைக்குள் நுழைந்தனர்.. ஆதிராவின் முகத்தை ஒருவித பரிதவிப்புடன் தேடினர்..!! காய்ந்த கொடியாய் துவண்டு போய் கிடந்த ஆதிராவை பார்த்ததுமே.. பூவள்ளியின் விழிகளில் முணுக்கென்று கண்ணீர் பூத்துக் கொண்டது..!!

"அம்மாஆஆ..!!" என்று ஆதிரா பரிதாபமாக அழைத்தவிதம், பூவள்ளியின் அழுகையை அதிகமாக்கவே செய்தது.

"ஆதிராஆஆ..!!"

தழதழத்த குரலில் சொன்ன பூவள்ளி.. அவசரமாய் ஆதிராவை நெருங்கி அவளுடைய கையை ஆதரவாக பற்றிக் கொண்டாள்..!! பூவள்ளிக்கு பின்புறமாக வந்து நின்ற தணிகை நம்பி.. மகளின் முகத்தை கவலையுடன் பார்த்தவாறே.. மனைவியின் தோள் பற்றி ஒரு நம்பிக்கை அழுத்தம் கொடுத்தார்..!!

"எ..என்னம்மா ஆச்சு எனக்கு..??" ஆதிரா களைப்புடன் பேசினாலும், அவளுடைய வார்த்தைகளில் இப்போது ஒரு தெளிவு வந்திருந்தது.

"ஒ..ஒன்னும் ஆகலடா.. ஒன்னும் இல்ல உனக்கு..!! எ..எல்லாம் சரி ஆய்டும்..!!" பூவள்ளியிடமோ ஒருவித பதற்றம்.

"எ..எப்படி அடிபட்டுச்சு.. எ..எதாச்சும் ஆக்சிடன்டா..??"

ஆதிரா அவ்வாறு முனகலாக கேட்க.. பூவள்ளியும் தணிகை நம்பியும் சற்றே குழப்பமாக நெற்றியை சுருக்கினார்கள்..!! பிறகு.. அந்த குழப்பத்தை பொருட்படுத்தாது, பூவள்ளி மகளுக்கு பதில் சொன்னாள்..!!

"ஆ..ஆமாண்டா.. நீயும் சிபியும் கார்ல போறப்போ.. ஒ..ஒரு சின்ன ஆக்சிடன்ட்..!! ப..பயப்படுறதுக்குலாம் ஒன்னும் இல்ல ஆதிரா.. சீக்கிரம் சரி ஆய்டும்னு டாக்டர் சொல்லிட்டாங்க.. நீ தெம்பா இரும்மா..!!"

"ஓ..!! அ..அத்தானுக்கு..??" கவலையுடன் கேட்ட ஆதிராவின் கண்களில் ஒரு கலக்கம்.

"சி..சிபிக்கா..?? சிபிக்கு ஒன்னும் இல்லடா.. சின்ன அடிதான்..!! நல்லா இருக்கான்.. மருந்து வாங்க போயிருக்கான்.. இப்போ வந்துருவான்..!!"

என்று பூவள்ளி சொன்னதும்.. ஆதிராவிடம் அந்த கலக்கம் மறைந்து முகத்தில் ஒருவித நிம்மதி படர்ந்தது.. இமைகளை ஒருமுறை மூடி திறந்தாள்..!! அப்புறம்.. அந்த அறையை சுற்றி ஒருமுறை பார்வையை சுழற்றினாள்.. சுழற்றிவிட்டு அம்மாவை ஏறிட்டு கேட்டாள்..!!

"எ..எத்தனை நாளாச்சு..??"

"ஒ..ஒருநாள்தான்டா ஆகுது.. நே..நேத்து காலைலதான்..!!" சொல்லும்போதே பூவள்ளிக்கு கண்களில் நீர் தளும்பியது.

"ஹ்ம்ம்ம்ம்..!!!!!" ஆதிரா நீளமாக ஒரு பெருமூச்சு விட்டாள். பிறகு முகத்தை ஒருமாதிரி வேதனையுடன் சுருக்கியவாறே,

"கால் ரொம்ப வலிக்குதும்மா..!!" என்றாள்.

பூவள்ளிக்கு இப்போது அழுகை முட்டிக்கொண்டு வந்தது.. துக்கம் கட்டுப்படுத்த வாயை பொத்திக் கொண்டாள்.. மகளின் கால்களை ஒருமுறை திரும்பி பார்த்தாள்..!! ஆதிராவின் வலது முழங்காலுக்கு கீழே ஒரு கட்டு போடப்பட்டிருந்தது.. உருக்குலைந்த காரின் ஏதாவது ஒரு ஸ்டீல் தகடு ஏற்படுத்திய வெட்டுக்காயமாக இருக்க வேண்டும்..!! அவளுக்கு அளிக்கப்பட்டிருந்த பெயின் கில்லர் இப்போது சற்று செயலிழக்க ஆரம்பிக்கவும்.. அந்த இடத்தில் இருந்து வேதனை கிளம்ப ஆரம்பித்திருக்க வேண்டும்..!!

"ரொம்ப வலிக்குதாடா..??"

"ம்ம்ம்ம்..!!"

"கொஞ்சம் பொறுத்துக்கோம்மா.. சீக்கிரம் சரி ஆய்டும்.. என்ன..!!"

ஆறுதலான வார்த்தைகளை தவிர வேறொன்றும் இல்லை பூவள்ளியிடம்.. மகளின் தலையை இதமாக தடவிக் கொடுத்தாள்..!! ஆதிரா இப்போது அசதி தோய்ந்த கண்களுடன் அப்பாவை ஏறிட்டு பார்த்தாள்.. அவ்வாறு பார்த்ததுமே அவளுடைய முகத்தில் ஒரு சிறிய மலர்ச்சி..!!

"டி-ஷர்ட் உங்களுக்கு நல்லா இருக்குப்பா..!!" என்றாள் மெலிதான புன்னகையுடன்.

ஆதிரா திடீரென அவ்வாறு சொல்வாள் என்று தணிகை நம்பி எதிர்பார்த்திரவில்லை.. ஒருகணம் திகைத்தவர், தான் அணிந்திருந்த டி-ஷர்ட்டை ஒருமுறை தலைதாழ்த்தி பார்த்தார்.. பிறகு மகளின் முகத்தை ஏறிட்டு, தடுமாற்றமாக சொன்னார்..!!

"ஆ..ஆமாம்.. ஆமாம்மா.. ந..நல்லாருக்கு..!!"

அவர் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே.. அவருக்கு பின்புறமாக பார்வையை வீசிய ஆதிரா.. முகத்தில் ஒரு புதுவித வெளிச்சம் பிறந்தவளாய்..

"அ..அத்தான்..!!" என்றாள்.

உடனே, பூவள்ளியும் தணிகை நம்பியும் தலையை திரும்பி பின்பக்கமாக பார்த்தார்கள்..!! அறை வாசலில்.. கண்களில் நீரும், கைகளில் மருந்துப்பையுமாக சிபி நின்றிருந்தான்.. அவனுடைய இடது நெற்றியில் ஒரு பிளாஸ்திரி.. முகத்தில் ஆங்காங்கே ரத்த தீற்றல்கள்..!! தூரத்திலிருந்தே சிலவினாடிகள் ஆதிராவை பார்த்துக் கொண்டிருந்தவன்.. இப்போது அவசரமாய் நகர்ந்து இவர்களை நெருங்கினான்..!! கையிலிருந்த மருந்துப்பையை டேபிளில் வைத்துவிட்டு.. ஆதிராவின் கரமொன்றை பற்றிக்கொண்டான்..!!


"ஆதிராஆஆ..!!" காதலும் தவிப்புமாய் சொன்னான்.

"உ..உங்களுக்கு ஒன்னும் ஆகலையே..??" கவலையும் கனிவுமாய் கேட்டாள் ஆதிரா.

"இ..இல்லடா.. எனக்கு ஒன்னும் இல்ல.. ஜஸ்ட்.. நெத்தில சின்ன அடி.. அவ்வளவுதான்..!!"

விலாப்பகுதியின் வெட்டுக்காயத்தை மனைவியிடம் சொல்லாமல் தவிர்த்து விட்டிருந்தான் சிபி.. தனக்கு ஏற்பட்டிருக்கிற காயம் அவளுடைய கவலையை அதிகரித்து விடக் கூடாது என்பதே அவனது எண்ணமாக இருந்தது..!! ஆதிரா இப்போது நீளமாக ஒரு நிம்மதி பெருமூச்சை வெளிப்படுத்தினாள்..!!

சிபி அவளுடைய கையை பற்றியிருந்தது அவளுக்கு இதமாக இருந்தது.. அதே சமயம் அவளுக்குள் ஒரு ஆச்சர்ய உணர்வும் ஓடியது.. 'அத்தானுக்கு தன்மீது இத்தனை பிரியமா..?' என்பது மாதிரியான ஆச்சர்யம்..!! தனது கையைப் பற்றியிருந்த சிபியின் கையை பார்த்தாள்.. அவன் கையில் அணிந்திருந்த கடிகாரத்தின் மீது ஆதிராவின் பார்வை நிலைத்தது..!! உடனே இன்னுமொரு ஆச்சரியத்துக்கு உள்ளானவள்..

"எ..என்னத்தான்.. வாட்ச்லாம் கட்டிருக்கிங்க..?? உ..உங்களுக்குத்தான் வாட்ச் கட்டுறதே பிடிக்காதே..??"

என்று திக்கி திணறி கேட்க, சிபி மெலிதாக அதிர்ந்தான். ஆதிராவின் முகத்தை குழப்பமாக ஒரு பார்வை பார்த்தான்..!!

"எ..என்ன சொல்ற ஆதிரா.. நீ..நீதான எனக்கு இந்த வாட்ச் ப்ரசன்ட் பண்ணின..??"

"நானா..????"

இப்போது ஆதிராவின் முகத்தில் ஒரு சிறு அதிர்ச்சி..!! தலைக்குள் குடைச்சல் எடுப்பது மாதிரி ஒரு உணர்வு அவளுக்கு.. அவஸ்தையாக முகத்தை சுளித்தவள், அப்படியே கண்களையும் நெற்றியையும் சுருக்கிக் கொண்டாள்..!! அவளுடைய பேச்சிலும், கேள்விகளிலும் மற்ற மூவரும் சற்றே குழம்பிப் போயிருந்தனர்.. அந்த குழப்பத்தின் ரேகைகள் படர்ந்திட்ட முகத்துடன், அவளையே அசைவில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்..!!

இப்போது.. ஆதிரா மூடிய விழிகளை மெல்ல திறந்தாள்.. சுற்றி நின்ற மூவரையும் மருள மருள ஒரு பார்வை பார்த்தாள்..!! பிறகு அந்த பார்வையை, அறையை சுற்றி ஒருமுறை அலைபாய விட்டாள்.. அப்புறம் திடீரென ஞாபகம் வந்தவளாய் அப்பாவிடம் திரும்பி கேட்டாள்..!!

"தாமிரா எங்கப்பா.. காணோம்..??"

அவ்வளவுதான்..!! மற்ற மூவரும் இப்போது ஒரு உச்சபட்ச அதிர்ச்சியை உள்வாங்கினார்கள்..!! மூவருக்குள்ளும் ஒரு கலவர உணர்வு ஜிவ்வென்று ஓட.. ஆதிராவின் முகத்தையே ஒருவித மிரட்சியுடன் பார்த்தார்கள்..!! ஆதிராவும் என்னவென்று புரியாமல் அவர்களுடைய முகத்தையே மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்..!! ஓரிரு வினாடிகள்.. அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவும்,

"சொல்லுங்கப்பா.. தாமிரா எங்க போயிருக்கா..?? எ..எனக்கு அடிபட்டது அவளுக்கு தெரியாதா..??"

என்று ஆதிராவே திரும்பவும் கேட்டாள்..!! மகளின் கேள்விக்கு பதில் சொல்லாமல்.. அவளுடைய முகத்தை திகைப்பாக பார்த்த பார்வையையும் மாற்றிக்கொள்ளாமல்.. மருமகனை திணறலாக அழைத்தார் தணிகை நம்பி..!!

"சி..சிபி..!!"

"எ..என்ன மாமா..??" சிபியும் மிரட்சி நீங்காத விழிகளுடன் தணிகை நம்பியை திரும்பி பார்த்தான்.

"டா..டாக்டரை வர சொல்லுப்பா..!!"

தணிகை நம்பி சொல்லவும், ஒருவித தடுமாற்றத்துடனே சிபி எழுந்துகொண்டான்.. ஆதிராவை பார்த்தவாறே அறை வாசலுக்கு நகர்ந்தான்..!! எதுவும் புரியாத ஆதிரா அப்பாவை திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருந்தாள்..!!

"எ..என்னப்பா ஆச்சு.. சொல்லுங்கப்பா..!! எ..என்னாச்சு..??"

அத்தியாயம் 4

அதன்பிறகு ஒருவாரம் கழித்து..!! அப்பல்லோ மருத்துவமனையின் நரம்பியல் துறையை சார்ந்த கட்டிடத்தில் ஒரு அறை..!! அறைக்கு வெளியே அறையப்பட்டிருந்த மரப்பலகையில்.. Dr. Sannidhanam, MBBS, MD, DM (Neurology) என்கிற எழுத்துக்கள் வெண்ணிறத்தில் பளிச்சிட்டன..!!

அறைக்கு உள்ளே கிடந்த சுழல் நாற்காலியில்.. மூளை மற்றும் நரம்பியல் நிபுணர் சந்நிதானம் அமர்ந்திருந்தார்.. கைகளை மடித்து டேபிளில் ஊன்றி, நாற்காலியில் இருந்து முன்னுக்கு வந்திருந்தார்..!! டேபிளுக்கு இந்தப்பக்கம் கிடந்த இரண்டு நாற்காலிகளில்.. சீரியஸான முகத்துடன் சிபியும், தணிகை நம்பியும் அமர்ந்திருந்தனர்.. டாக்டர் சொல்கிற விஷயங்களை கவனமாக கேட்டுக் கொண்டிருந்தனர்..!!

"நீங்க என்ன படிச்சிருக்கீங்க மிஸ்டர் சிபி..??" டாக்டர் சிபியை கேட்டார்.

"பி.எஸ்.ஸி விஷுவல் கம்யுனிகேஷன்..!!"

"எந்த காலேஜ்..??"

"ஆதித்யா இன்ஸ்டிட்யூட்..!!"

"ஹ்ம்ம்..!! த்ரீ இயர்ஸ் கோர்ஸ்ல..??"

"எஸ்..!!"

"காலேஜ்ல முதல்நாள் அனுபவம் உங்களுக்கு எப்படி இருந்தது.. அதைப்பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்..!!"

டாக்டர் அவ்வாறு கேட்கவும், சிபி சற்றே நிதானித்தான்..!! திடீரென எதற்காக இதைப்பற்றி கேட்கிறார் என்று மனதுக்குள் எழுந்த கேள்வியை அலட்சியம் செய்தவாறே.. கல்லூரியின் முதல்நாள் ஞாபங்களை மனதுக்குள் ஒருங்கிணைத்து.. ஒருசில வினாடிகளுக்கு பிறகு மெலிதான குரலில் ஆரம்பித்தான்..!!

"ஆக்சுவலா.. ஃபர்ஸ்ட் டே நான் லேட்டாத்தான் காலேஜுக்கு போனேன் டாக்டர்..!! நல்லா ஞாபகம் இருக்கு.. கே.ஆர்.எஸ்.ரோட்ல அன்னைக்கு சரியான ட்ராஃபிக் ஜாம்..!! நான் காலேஜ் போறப்போ.. இன்டக்சன் ப்ரோக்ராம் அல்ரெடி ஸ்டார்ட் ஆகியிருந்தது..!! எங்க ப்ரொஃபஸர் ஒருத்தர் தாமரைக்கண்ணன்னு.. அவர்தான் ஸ்பீச் குடுத்துட்டு இருந்தாரு.. அவர்ட்ட மன்னிப்பு கேட்டுட்டு ஹாலுக்குள்ள என்டர் ஆனேன்..!! என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட் பரிதியை அப்போத்தான் ஃபர்ஸ்ட் டைம் பார்த்தேன்.. அவன் உக்காந்திருந்த பெஞ்ச்லருந்து நகர்ந்து.. எனக்கு இடம்.." சிபி சொல்லிக்கொண்டிருக்கையிலேயே அவனை இடைமறித்த டாக்டர்,

"அன்னைக்கு நீங்க என்ன கலர் ஷர்ட் போட்டிருந்திங்கன்னு ஞாபகம் இருக்கா..??" என்று திடீரென கேட்க, சிபியிடம் படக்கென ஒரு திகைப்பு.

"அ..அது.. அது... அ..அன்னைக்கு.."

என்று பதில் சொல்ல திணறினான்.. அன்று அவன் அணிந்திருந்த சட்டையின் நிறத்தை நினைவுகூர்கிற முயற்சியுடன் நெற்றியை சுருக்கிக்கொண்டான்..!!

"ஹாஹா.. ரொம்ப யோசிக்க வேணாம்..!! இட்ஸ் ஓகே.. விடுங்க..!!"

புன்னகையுடன் சொன்ன டாக்டர்.. சிபியின் கண்களையே சிலவினாடிகள் கூர்மையாக பார்த்தார்..!! சிறிது இடைவெளிக்கு பிறகு மிகத்தெளிவான குரலில் மீண்டும் பேச ஆரம்பித்தார்..!!

"See.. ஞாபக மறதின்றது quite natural.. எல்லாருக்குமே இருக்குறதுதான்..!! லைஃப்ல நடந்த எல்லா சின்ன சின்ன விஷயங்களும், ஒருத்தனுக்கு அப்படியே ஞாபகத்துலயே இருக்க ஆரம்பிச்சா.. அவன் சீக்கிரமே மனநிலை சரியில்லாதவனா மாறிடுவான்..!! தேவை இல்லாத விஷயங்களை அப்பப்போ மறந்துடுறது.. மனசுக்கும் மூளைக்கும் ரொம்ப ரொம்ப நல்லது..!!"

"ம்ம்..!!"

"அம்னீஷியாவும் அந்த மாதிரிதான்.. ஒருவித ஞாபக குறைபாடு..!! என்ன ஒன்னு.. நேச்சுரலா ஏற்படவேண்டிய ஞாபக மறதி.. உங்க வொய்ஃபுக்கு தலைல அடிபட்டதன் மூலமா.. ஆக்சிடண்டலா ஏற்பட்டிருக்கு.. அவ்வளவுதான்..!! இதுல பயப்படுறதுக்குலாம் எதுவும் இல்ல..!!"

"புரியுது டாக்டர்..!!"

"முக்கியமான ஒரு விஷயத்தை நீங்க நல்லா புரிஞ்சுக்கணும்.. மூளைன்றது ரொம்பவே காம்ப்ளிகேட்டட் சமாச்சாரம்..!! நம்மளோட அஞ்சு புலன்கள்ல இருந்து வர்ற உணர்வுகளை ஞாபகங்களா கன்வர்ட் பண்றதா ஆகட்டும்.. அதை நினைவடுக்குகள்ல ஸ்டோர் பண்றதா ஆகட்டும்.. தேவையற்ற நினைவுகளை சப்-கான்ஷியஸ் மைண்ட்க்கு ட்ரான்ஸ்ஃபர் பண்றதா ஆகட்டும்.. தேவைப்படுறப்போ மறுபடியும் அந்த நினைவுகளை ரெகவர் பண்றதா ஆகட்டும்.. It's all a kind of magic..!! எவ்வளவோ ஆராய்ச்சிக்கு அப்புறமும்.. மூளையை யாரும் இன்னும் முழுசா புரிஞ்சுக்க முடியலைன்னுதான் சொல்லியாகணும்..!!"

"ம்ம்..!!"

"மருந்து மாத்திரையால அம்னீஷியாவை குணப்படுத்த முடியாது.. மன அமைதிதான் அந்த ஞாபகங்களை திரும்ப கொண்டுவர முடியும்..!!"

"ம்ம்..!!"

"கடந்த ஒருவருஷமா நடந்த சம்பவங்கள்தான், உங்க வொய்ஃபோட மெமரில இருந்து அல்மோஸ்ட் சுத்தமா துடைச்சு எடுக்கப்பட்டிருக்கு.. அதுக்கு முந்தி நடந்ததெல்லாம் அவங்களுக்கு நல்லாவே ஞாபகம் இருக்கு..!! மறந்து போன இந்த விஷயங்கள் எல்லாம்.. கண்டிப்பா அவங்களோட சப்-கான்ஷியஸ் மைண்ட்ல இருக்கும்..!! அதை திரும்ப அவங்களுக்கு நினைவுபடுத்த சில தெரபிலாம் இருக்கு.. அது வொர்க்கவுட் ஆகலாம்.. ஆகாமலும் போகலாம்..!! ஆனா.. என்னைக்கேட்டா.. அவங்க இப்போ இருக்குற நிலைமைல அதெல்லாம் தேவை இல்லைன்னுதான் சொல்லுவேன்..!! இப்போதைக்கு அவங்களோட ஒரே தேவை.. கம்ப்ளீட் ரெஸ்ட்தான்.. மனசுக்கும், உடம்புக்கும்..!!"

''பு..புரியுது..!!"

"இந்த மாதிரி ஞாபகங்கள் தொலைஞ்சு போனதுல அவங்க ரொம்பவே கன்ஃப்யூஸ்டா இருக்காங்க..!! என்னன்னு சொல்ல முடியாத மாதிரி ஒரு பயம்.. என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்குறதுல ஒரு அவசரம்..!! அந்த மாதிரி அவசரத்துக்கு இடம் குடுக்காம.. அவங்க மனசு அமைதியா இருக்குறது ரொம்ப முக்கியம்..!! நீங்கதான் அதையெல்லாம் நல்லா புரிஞ்சு அவங்களை கவனிச்சிக்கணும்..!!"

"கண்டிப்பா டாக்டர்..!!"

" ஹ்ம்ம்.. உங்களுக்கு மேரேஜ் ஆகி எத்தனை நாளாச்சுன்னு சொன்னிங்க..??"

"நாற்பது நாள் ஆகுது..!!"

"இன்னும்.. ஹனிமூன் அந்த மாதிரிலாம் எங்கயும் தனியா போகல..??"

"இ..இல்ல டாக்டர்.. எங்கயும் போகல..!!"

"Then, this is the right time..!! அவங்களை எங்கயாவது வெளியூர் கூட்டிட்டு போங்க.. மனசுக்கு ப்ளசன்ட்டா இருக்குற மாதிரி ஏதாவது ஒரு இடம்.. அமைதியா பசுமையா ஏதாவது ஒரு சூழல்.. கொஞ்ச நாள் அவங்க அங்க இருக்கட்டும்..!! அவங்களோட சப்-கான்ஷியஸ் மைண்ட்ல இருக்குற விஷயங்கள், கான்ஷியஸ் மைண்ட்க்கு திரும்பவர.. அந்த மாதிரியான மெண்டல் ரெஸ்ட் ரொம்ப ஹெல்ப் பண்ணும்..!! ஒரு பூ மலர்ற மாதிரி அது தானா இயல்பா நடக்கணும்.. 'அதை ஞாபகப் படுத்துறேன்.. இதை ஞாபகப் படுத்துறேன்'னு நீங்களா அவங்களுக்கு ஓவர் ஸ்ட்ரெஸ் குடுக்காதிங்க..!! புரியுதா..??"

"புரியுது டாக்டர்.. I will take care of her..!!"

"குட்..!! வேற ஏதாவது உங்களுக்கு டவுட் இருக்கா..??"

அவ்வளவுதான் தான் பேச நினைத்தது என்பதை.. அந்தக் கேள்வியின் மூலம் உணர்த்தினார் சந்நிதானம்..!! ஆதிராவை அணுகுகிற முறை பற்றி மேலும் தங்களுக்கு இருந்த சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்று.. சிபியும் தணிகை நம்பியும் அந்த அறையை விட்டு கிளம்ப.. அதன்பிறகும் சிறிது நேரம் எடுத்துக் கொண்டனர்..!!

அறையை விட்டு வெளியே வந்தவர்கள்.. இறுக்கமான முகத்துடனே இணைந்து நடைபோட்டனர்..!! ஆதிராவை அட்மிட் செய்ந்திருந்த வார்ட்.. அந்தக் கட்டிடத்திலேயே இன்னொரு மூலையில் இருந்தது..!! அந்த வார்டை அடைந்து.. அவள் அனுமதிக்கப்பட்டிருந்த தனியறைக்குள் நுழைந்தனர்..!! ஏதோ ஒரு சூனியத்தை வெறித்துக் கொண்டிருந்த ஆதிராவும்.. மகளின் முகத்தை கவலையுடன் பார்த்தவாறு அமர்ந்திருந்த பூவள்ளியும் பார்வையில் பட்டனர்..!! ஆதிராவின் தலையில் இப்போது பேண்டேஜ் இல்லை.. நெற்றியில் மட்டும் ஒரு ப்ளாஸ்திரி..!!

"டாக்டரை பாத்தாச்சு.. கெளம்பலாம்..!!"

தணிகை நம்பி சொன்னதும்.. படுக்கையில் இருந்து படக்கென எழுந்து கொண்டாள் பூவள்ளி..!! ஆதிராவோ, அப்பாவின் வார்த்தைகள் ஓரிரு வினாடிகள் கழித்தே காதில் விழுந்த மாதிரி.. மிக பொறுமையாக எழுந்து நின்றாள்..!! அருகில் சாய்ந்திருந்த வாக்கிங் ஸ்டிக்கை கையில் எடுத்து.. அதன் உதவியுடன் ஒரு காலை மட்டும் இழுத்து இழுத்து நடக்க ஆரம்பித்தாள்..!!

நால்வரும் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தார்கள்.. தயாராக நின்றிருந்த டாக்ஸியில் ஏறிக் கொண்டார்கள்..!! சிபி ட்ரைவர் சீட்டுக்கு அருகில் அமர்ந்து கொண்டான்.. மற்ற மூவரும் பின்சீட்டில்..!! டாக்ஸி கிளம்பியது.. மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியே வந்ததும், சற்றே வேகம் எடுத்து விரைந்தது..!! சிறிது நேரம் சாலைப் போக்குவரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆதிரா.. பிறகு ஏதோ ஞாபகம் வந்தவளாய் அப்பாவிடம் திரும்பி கேட்டாள்..!!

"இப்போ எங்கப்பா போறோம்..??"

"நம்ம வீட்டுக்கு போறோம்மா..!!"

"அகழிக்கா..??" ஆதிரா அவ்வாறு கேட்கவும், மற்ற மூவரிடமும் மெலிதான ஒரு திகைப்பு.

"இ..இல்லம்மா.. இங்க.. மைசூர்ல இருக்குற வீட்டுக்கு..!!"

பூவள்ளியே சமாதானமான குரலில் மகளுக்கு பதில் சொன்னாள்..!! அடர்த்தியான மரங்களை இருபுறமும் ஏந்தியிருந்த அந்த தார்ச்சாலையில் கார் சென்றுகொண்டிருக்க.. ஆதிரா இப்போது இமைகள் இரண்டையும் மூடி பின்சீட்டில் தலை சாய்த்துக் கொண்டாள்..!!

பூவள்ளிக்கும் தணிகை நம்பிக்கும் அகழிதான் பூர்வீகம்..!! செல்வத்துக்கு சற்றும் குறைவில்லாத குடும்பத்தில் பிறந்தவர்கள் இருவரும்..!! பூவள்ளி புவனகிரியின் வழித்தோன்றல்.. தணிகை நம்பி அந்த ஊரிலேயே இன்னொரு செல்வந்தரின் ஆண்வாரிசு..!! நாற்பது வருடங்களுக்கும் மேல் அகழியிலேயே வாழ்வை கழித்திருந்தவர்கள்.. ஒருவருடம் முன்பாக மைசூருக்கு இடம்பெயருகிற மாதிரியான குடும்ப சூழல்..!! அத்தகைய சூழல் உருவாக காரணமென ஆதிராவின் தங்கை தாமிராவுக்கு நேர்ந்ததை சொல்லலாம்..!!

ஆனால்.. அந்த நிகழ்வெல்லாம் ஆதிராவுக்கு இப்போது நினைவில் இல்லை..!! வந்து ஒருவருடம் ஆகப் போகிறது.. மைசூரையே புது ஊர் போல வெறிக்க வெறிக்க பார்க்கிறாள்..!! விபத்து மயக்கத்தில் இருந்து ஆதிரா விழித்து எழுந்ததும்.. அப்பா அணிந்திருந்த டி-ஷர்ட்டை பார்த்து அவள் வியப்புற்றதற்கு காரணம் இருக்கிறது.. மைசூர் வந்த பிறகுதான் தணிகை நம்பி டி-ஷர்ட் எல்லாம் அணிகிறார்.. அகழியில் இருக்கையில் அந்தப்பழக்கம் அவருக்கு இல்லை..!!

கால்மணி நேர பயணத்துக்கு பிறகு.. காரின் வேகம் கொஞ்சம் கொஞ்சாய் குறைந்து.. இளஞ்சிவப்பு நிற வெளிப்பூச்சுடன் காணப்பட்ட அந்த இரண்டடுக்கு வீட்டின் முன்பாக சென்று நின்றது..!!

"வீடு வந்துடுச்சும்மா..!!"

பூவள்ளி சொன்னதை தொடர்ந்து நால்வரும் காரில் இருந்து இறங்கினார்கள்..!! தரையில் அழுத்தமாக ஊன்றிய வாக்கிங் ஸ்டிக்குடன் நின்ற ஆதிரா.. தலையை மெல்ல நிமிர்த்தி வீட்டை ஒரு பார்வை பார்த்தாள்..!! மைசூரை வெறித்தபோது அவள் உணர்ந்த அதே அந்நியத்தன்மையை.. ஒரு வருடமாக அவள் வாழ்ந்த இந்த வீட்டை பார்க்கையிலும் உணர்ந்தாள்..!!


"என்ன ஆதிரா அப்படி பாக்குற..?? இது உன் வீடு.. உரிமையா உள்ள வா..!!"

இயல்பாக சொன்னவாறே.. சிபி ஆதிராவின் தோள் மீது கைபோட்டு இதமாக அணைத்துக் கொண்டான்..!! அவன் அவ்வாறு அணைத்துக் கொண்டதுமே.. ஆதிரா ஒரு புதுவித கூச்சத்துடன் நெளிந்தாள்.. காணாமல் போன அவளுடைய நினைவுகளில் கணவனின் நெருக்கம் தொடர்பான நினைவுகளுமே அடக்கம்.. அதனாலேயே அவளிடம் அந்த கூச்சம்..!!

அவளது மனநிலையை உடனடியாய் புரிந்து கொண்ட சிபி.. தனது கையை அவளிடம் இருந்து விலக்கிக்கொண்டான்..!!

"பார்த்து வா ஆதிரா..!!"

என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு முன்னால் நடந்தான்..!! கணவன் நடந்து செல்வதையே ஆதிரா ஒரு காதல் பார்வை பார்த்தாள்.. கழுத்தில் தொங்கிய தாலியை ஒருமுறை பெருமிதமாக பார்த்துக் கொண்டாள்.. கால் தந்த வேதனையை உதடுகடித்து பொறுத்தவாறே வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தாள்..!!

யாருடைய வாழ்விலுமே திருமணம் என்பது ஒரு முக்கியமான நிகழ்வு.. அந்த நிகழ்வே ஆதிராவின் நினைவில் இருந்து தொலைந்து போயிருந்தது..!! அம்னீஷியாவால் பாதிக்கப்பட்டவளிடம் அவளுக்கு திருமணமாகிவிட்ட செய்தியை பூவள்ளி உரைத்தபோது.. அதிர்ந்துதான் போனாள் முதலில்..!! நம்பிக்கை அற்றவளாய் மாங்கல்யத்தையே மலங்க மலங்க பார்த்தாள்..!! ஆனால்.. அது அவளுக்கு ஒருவித இன்ப அதிர்வாகத்தான் இருந்தது.. சிறு வயதில் இருந்தே சிபி மீது அவளுக்கு இருந்த காதல்தான் அதன் காரணம்..!!

"பெரியவளாகி என்ன பண்ணப் போற..??" வீட்டுக்கு வரும் உறவினர்களின் கேள்விக்கு,

"ஐ.ஏ.எஸ் படிச்சு கலக்டர் ஆகப் போறேன்..!!" என்று குட்டி தாமிரா பதில் சொன்னால்,

"அத்தானை கட்டிக்கிட்டு பொண்டாட்டியாகப் போறேன்..!!" என்பாள் எட்டு வயது ஆதிரா.

தாய்தந்தையரை இழந்து தாய்மாமாவின் வீட்டில் தஞ்சம் புகுந்திருந்த சமயத்தில்.. தாரை தாரையாய் கண்ணீர் வடித்துக்கொண்டே இருப்பான் சிறுவன் சிபி..!! அந்நிய உணர்வோடு அனைவரையும் மிரட்சியாக பார்ப்பான்.. ஆறுதலாய் அவனுடைய கண்ணீர் துடைக்க நீளும் ஆதிராவின் கரங்கள்..!!

"அழாதீங்க அத்தான்.. உங்களுக்குத்தான் நாங்கல்லாம் இருக்கோம்ல..??"

அப்போதிருந்தே அவன் மீது ஒரு பரிவு கலந்த பாசம்.. பள்ளியில் அவன் முதல் மாணவனாக திகழ, அவன் மீது ஒரு மதிப்பு..!! தாமிராவை அவர்களுடன் சேர்த்து கொண்டு.. மூவரும் ஒருவர் கையை அடுத்தவர் பற்றி வளையம் அமைத்துக்கொண்டு.. ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து..

"கிறுகிறு மாம்பழம்.. கிய்யா கிய்யா மாம்பழம்..!! கிறுகிறு மாம்பழம்.. கிய்யா கிய்யா மாம்பழம்..!!"

என்று திரும்ப திரும்ப பாடியவாறே கிறுகிறுவென சுழலுவார்கள்..!! தலை சுற்றலை தாக்கு பிடிக்கமுடியாமல் தரையில் சரிந்து.. மல்லிகைச் சிதறலாய் மூவரும் வெள்ளைச் சிரிப்பை சிந்துவார்கள்..!! ஆதிராவுக்கு அப்போது சிபி மீது ஒரு சினேக உணர்வு பிறக்கும்..!!

அவனது பெண்மைத்தனமான வட்ட முகத்தில்.. அரும்பு மீசை வளர ஆரம்பித்த சமயத்தில்.. அவனிடம் மிளிர்ந்திட்ட அந்த வசீகரம்.. ஆதிராவின் மனதை சொக்கிப்போக வைக்கும்..!! பட்டப் படிப்புக்கென சிபி வெளியூர் பயணிக்கையில்.. அவனுக்கு அருகிலேயே இருந்திட முடியாதா என்பது போல.. இவளுக்குள் ஒரு ஏக்க உணர்வு எழும்..!! பரீட்சை விடுமுறைக்கென அவன் அகழி திரும்பியிருக்கையில்.. அவனுக்கு அருகிருக்க இவளுக்கு வாய்ப்பிருந்தும்.. இயல்பாக நடந்திட முடியாத மாதிரியாய் ஒருவித வெட்க உணர்வு..!!

இப்படி எல்லாவித உணர்வுகளும் அவளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் சேர்ந்து.. அவள் வளர வளர, அந்த உணர்வுகளும் அவளுடனே வளர்ந்து.. அவள் பருவம் எய்திய காலத்தில் ஒரு அசுர உருவம் கொண்டு அவளுக்குள் நின்றது.. அந்த உருவத்திற்கு காதல் என்றே நாம் பெயரிட வேண்டும்..!! சிபியிடம் இதுவரை வெளிப்படையாக சொல்லாவிடிலும்.. சிறுவயதில் இருந்தே அவன் மீதான காதலை அவள் வளர்த்து வந்தது என்னவோ நிஜமான நிஜம்..!!

அந்த காதலால்தான்.. நினைவில் இல்லையென்றாலும், அவனுடனான திருமணத்தை அவளால் இனியதொரு அதிர்வாக எடுத்துக் கொள்ள முடிந்தது..!! அதே காதலால்தான்.. மருத்துவமனையில் இருந்து திரும்பிய அன்றைய இரவில்.. இருவரும் ஒருபடுக்கையை பகிர்ந்துகொள்ள நேர்ந்த சமயத்தில்.. தயக்கத்துடன் அவன் முதலில் இவளது கை பற்றிக் கொள்ள.. தானாகவே இவள் பிறகு அவனது மார்பில் தலை சாய்த்துக் கொண்டாள்..!!

ஆனால்.. தனக்கு திருமணம் நடந்த விஷயத்தை போல.. தங்கையின் விஷயத்தை அவ்வளவு எளிதாக ஆதிராவால் எடுத்துக்கொள்ள முடியவில்லை..!! காலில் தைத்த முள், நடக்க நடக்க இன்னும் ஆழமாக உள்ளிறங்குமே.. அதேமாதிரி.. அந்த விஷயம் நாளாக நாளாக அவளுடைய புத்தியில் ஆழமாக ஆணி திருகிக் கொண்டிருந்தது..!!

"தா..தாமிராக்கு என்னம்மா ஆச்சு.. சொல்லும்மா..!!" தவிப்புடன் தாயிடம் கேட்டாள் ஆதிரா.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சமயத்தில்..!!

"எ..என்னாச்சுன்னு தெரியலடா.. காணாம போயிட்டா..!! எங்க போனான்னே தெரியாம.. மாயமா மறைஞ்சு போயிட்டா..!!"

"என்னம்மா சொல்ற நீ..?? எ..எப்படி.. எப்படி திடீர்னு காணாம போவா..??"

ஆதிராவின் கேள்விக்கு பூவள்ளியால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை.. ஆதங்கத்துடன் இவளையே ஒரு பார்வை பார்த்தாள்.. அப்படியே கண்களை சுருக்கி நெற்றியை பிசைந்தாள்.. உள்ளத்தில் எழுந்த துக்கத்தை உதடுகள் கடித்து அடக்க முயன்றாள்.. அதையும் மீறி அவளுடைய கண்களில் கண்ணீர் தளும்பியது..!!

"சொல்லும்மா.. என்ன நடந்துச்சுன்னு சொன்னாத்தான எனக்கும் தெரியும்..??" ஆதிரா பொறுமையில்லாமல் கேட்க,

"குறிஞ்சி அவளை கொண்டு போய்ட்டாடி.. போதுமா..??" பூவள்ளி வெடுக்கென்று சொன்னாள்.

குறிஞ்சி என்ற பெயரை கேட்டதுமே ஆதிராவின் முகத்தில் குப்பென்று ஒரு திகைப்பு.. அம்மாவின் முகத்தையே மிரட்சியான விழிகளுடன் பார்த்தாள்.. குரல் தெளிவில்லாமல் குழறலாக கேட்டாள்..!!

"கு..குறிஞ்சியா..????"

"ஆமாம்..!! நம்ம வனக்கொடியே கண்ணால பாத்திருக்கா.. அவதான் உன் தங்கச்சியை கடைசியா பாத்தவ..!! அங்க தொட்டு இங்க தொட்டு.. கடைசில நம்ம தாமிராவையும்..!!"

கண்களில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டே சொன்னாள் பூவள்ளி..!! வனக்கொடி என்பது, அகழியில் அவர்களுடைய வீட்டில் பணிபுரியும் ஐம்பது வயது பணிப்பெண்.. சிபி, ஆதிரா, தாமிரா என மூவரையும் சிறு வயதில் இருந்தே கவனித்துக் கொண்டவள்..!!

"அம்மா..!!"

"சொல்லுடா..!!

"எ..என்ன நடந்துச்சுன்னு எனக்கு கொஞ்சம் தெளிவா சொல்லேன்.. ப்ளீஸ்..!! வனக்கொடி என்ன பாத்தாங்க..??"

ஆதிரா அவ்வாறு கேட்கவும், பூவள்ளி நீளமாக ஒரு பெருமூச்சை சிந்தினாள்.. சில வினாடிகள் அமைதியாக இருந்தாள்.. பிறகு தொண்டையை ஒருமுறை செருமிக்கொண்டு மெல்ல பேச ஆரம்பித்தாள்..!! அவள் பேச பேச.. ஆதிரா முகத்தில் பலவித உணர்ச்சிகளுடன்.. அவற்றையெல்லாம் கவனமாக கேட்டுக் கொண்டாள்..!!

பூவள்ளி பேசி ஓய்ந்த பிறகும்.. அவள் சொல்ல நினைத்ததெல்லாம் சொல்லி முடித்த பிறகும்.. ஆதிராவின் மனம் அவள் சொன்ன விஷயங்களையே நெடுநேரம் அசை போட்டுக் கொண்டிருந்தது..!! நம்புவதற்கே கடினமான ஒரு சில விஷயங்கள்.. நானும் இதைத்தான் இத்தனை நாளாய் நம்பியிருந்தேனா என்று அவளுக்குள் ஒரு கேள்வி வேறு..!! எந்த ஒரு முடிவுக்கும் தெளிவாக அவளால் வர இயலவில்லை..!!

"வனக்கொடி சொன்னதை கேட்டுட்டு நாம சும்மா இருந்துட்டோமா.. தாமிராவை தேடி கண்டுபிடிக்க எதுவும் பண்ணலயா..??"

"என்ன பண்ணிருக்கனும்னு சொல்ற..??"

"போலீஸ்ல..??"

"எல்லாத்தையும் மறந்துட்டியா நீ..?? போலீஸ்லயும்தான் கம்ப்ளயின்ட் பண்ணினோம் ஆதிரா..!! அவங்களாலயும் எதும் செய்ய முடியல.. வனக்கொடியை துருவி துருவி கேள்வி கேட்டதோட சரி..!!"

அதற்கு மேலும் அம்மாவை துருவி துருவி கேட்க ஆதிராவுக்கு இஷ்டம் இல்லை.. அமைதியாக 'ம்ம்' கொட்டினாள்..!!

"ம்ம்..!!"

"ஏதோ நம்ம கெட்ட நேரம்.. தாமிராவை இழந்துட்டோம்.. அங்கயே இருந்து உன்னையும் இழந்துடுவோமோன்னு எங்களுக்கு பயம் வந்துடுச்சு.. அதான்டா எல்லாரும் சிபியோட கெளம்பி மைசூர் வந்துட்டோம்..!!"

"ம்ம்..!!"

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகும்.. சில நாட்கள்.. ஆதிராவுக்கு புத்தி குழப்பமாகவும், மன அழுத்தமாகவுமே கழிந்தன..!! ஒருவருடமாக வாழ்ந்த வீட்டின் ஒவ்வொரு மூலையையும்.. புதிதாக பார்ப்பது போலவே மிரட்சியுடன் பார்த்தாள்..!! வீட்டில் அவளுடைய பொருட்களை வைத்திருந்த இடமெல்லாம் மறந்து போயிருந்தன.. விரலில் முளைத்திருந்த சிபி அளித்த மோதிரம் வித்தியாசமாக காட்சியளித்தது..!! பேஸ்ட், ப்ரஷ், சோப்பு, உள்ளாடைகள் முதற்கொண்டு.. எதை தேடிக் கண்டுபிடிப்பதானாலும் அம்மாவின் துணை தேவைப்பட்டது..!!

"மதியம் வந்துடுவேன்.. எதாவதுனா கால் பண்ணு..!!"

வேலை விஷயமாக வெளியில் கிளம்பியிருந்த சிபி.. ஆதிராவின் கையில் ஒரு செல்ஃபோனை திணிக்க.. அவள் அந்த செல்ஃபோனை இப்படியும் அப்படியுமாய் புரட்டி புரட்டி பார்த்தவாறே.. கணவனிடம் குழப்பமாக கேட்டாள்..!!

"யா..யாரோட ஃபோன் இது..??"

"உன்னோடதுதான்டா..!!"

"நா..நான்.. நான் நோக்கியால வச்சிருந்தேன்.. இது..??"

"ஓ.. அதுவும் மறந்து போச்சா..?? அந்த ஓல்ட் மாடல் நோக்கியாவை ஒரு வருஷம் முன்னாடியே நீ தொலைச்சுட்ட.. மைசூர் வந்ததுல இருந்து இந்த மொபைல்தான் யூஸ் பண்ணிட்டு இருக்குற..!! இது லேட்டஸ்ட் ஸ்மார்ட்ஃபோன்.. டச் ஸ்க்ரீன்..!!"

"ம்ம்..!! இதென்ன இவ்ளோ பெருசா இருக்கு.. இதை எப்படி அன்லாக் பண்றது..??"

பரிதாபமாக கேட்ட மனைவியை பார்க்க.. சிபிக்கு சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை..!! வெளியில் செல்ல தயாராக இருந்தவன்.. அப்படியே ஆதிராவின் அருகில் அமர்ந்து.. மேலும் ஐந்து நிமிடங்கள் செலவழித்து.. அந்த செல்ஃபோனை இயக்கும் முறை பற்றி அவளுக்கு விளக்கி முடித்தே கிளம்பினான்..!!

இந்த மாதிரியான மறதி குழப்பம் ஒருபுறம் இருக்க.. வேறு மாதிரியான மன அழுத்தம் இன்னொரு புறம்..!! அகழி பற்றியும் அவளுடைய தங்கை பற்றியுமான நினைவுகளே அந்த மாதிரியான அழுத்தத்துக்கு காரணம்..!! எவ்வளவு நேரந்தான் மாத்திரையின் வீரியத்தில் மயங்கி கிடப்பது..?? விழித்திருக்கையில் எல்லாம் பலவித சிந்தனைகளுடன்.. அவளுடைய மனம் ஒருவித அழுத்தத்திலேயே தத்தளித்தது..!!

மர்மமான முறையில் மனிதர்கள் காணாமல் போவது.. அகழிக்கும் புதிதல்ல.. ஆதிராவுக்கும் புதிதல்ல..!! நூறு வருடங்களாகவே அகழியில் இது மாதிரியான சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.. ஆதிராவும் அதுபற்றியெல்லாம் நிறையவே கேள்விப் பட்டிருக்கிறாள்..!! குழந்தைகள்.. இளம்பெண்கள்.. இல்லத்தரசிகள்.. சில முதியவர்கள் கூட.. திடீர் திடீரென காணாமல் போய்விடுவார்கள்..!! காணாமல் போன நபர்களில் இதுவரை ஒருவரைக் கூட காவல்துறையால் மீட்டுக் கொடுக்க இயலவில்லை..!!

குறிஞ்சிதான் இதற்கெல்லாம் காரணம் என்பது அகழி மக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை..!! நூறு வருடங்களாக.. அடுத்தடுத்து வந்த சந்ததியினருக்கு.. குறிஞ்சியின் கதை ஒட்டுமொத்தமாக திரிக்கப்பட்டே உரைக்கப்பட்டிருந்தது..!! புவனகிரியும், அகழி மக்களும் குறிஞ்சிக்கு இழைத்த அநீதி சுத்தமாக மறைக்கப்பட்டிருந்தது..!! குறிஞ்சி என்பவள் ஒரு பில்லி சூனியக்காரி எனவும்.. அவளுடைய சித்து விளையாட்டுக்களால் ஊருக்கு பல இன்னல்கள் நேர்ந்தது எனவும்.. ஆத்திரமடைந்த ஊர்மக்கள் அவளை தீயிட்டு கொளுத்தினர் எனவும்.. அப்படியும் அடங்காமல் இன்னும் ஆவியாக அலைகிறாள் எனவும்தான்.. இப்போதிருக்கிற அகழி மக்கள் குறிஞ்சியின் கதையை அறிவர்..!!


"செவப்பு அங்கி போத்திருப்பா.. உச்சந்தலைல இருந்து உள்ளங்கால் வரை அங்கிதான்.. நடக்குறாளா மெதக்குறாளா கூட தெரியாது..!! இங்க நிக்கிற மாதிரி இருக்கும்.. கண்ணு மூடி கண்ணு தெறக்குறதுக்குள்ள அங்ங்ங்க நிப்பா..!!"

"காட்டுக்குள்ள உக்காந்து தனியா அழுதுகிட்டு இருந்தா.. கைல ஏதோ கொழந்தை கணக்கா இருந்துச்சு.. அதை கொஞ்சிக்கிட்டே அழுதுகிட்டு இருந்தா..!!"

"சிங்கமலை உச்சில நின்னவ.. சிரிச்சுக்கிட்டே தலைகுப்புற ஆத்துல குதிச்சுட்டாளப்பா..!! என் ரெண்டு கண்ணாலயும் பாத்தேனப்பா..!!"

"தாகமா இருக்கு தண்ணி குடு.. தாகமா இருக்கு தண்ணி குடுன்னு.. பின்னாடியே வந்தா..!! நான் கொடத்தை கீழ போட்டுட்டு திரும்பிகூட பாக்காம ஒரே ஓட்டமா ஓடியாந்துட்டேன்..!!"

இதுபோல.. குறிஞ்சியை கண்ணால் பார்த்த கதைகளும் ஊருக்குள் ஏராளம்.. ஆதிராவும் அந்தக்கதைகளில் பலவற்றை அறிவாள்..!!

ஆதிராவின் பரம்பரையிலும் கூட அந்த மாதிரி சம்பவங்கள் நிறைய நடந்திருக்கிறன.. ஐந்து தலைமுறைகளாக இதுவரை ஏழு பேர் என்ன ஆனார்கள் என்று தெரியாமலே காணாமல் போயிருக்கிறார்கள்.. தாமிரா இப்போது எட்டாவது ஆள்..!!

இவையெல்லாம் அல்லாமல் ஆதிராவின் கொள்ளுப்பாட்டி இன்னொரு கதை சொல்வாள்.. குறிஞ்சியிடம் போராடி தனது குழந்தையை மீட்டு வந்த கதை.. அதாவது பூவள்ளியின் அப்பா குழந்தையாக இருக்கையில்..!!

"வெள்ளன நாலு அஞ்சு மணி இருக்கும்.. நல்ல உறக்கம் எனக்கு.. திக்குன்னு நெஞ்சுக்குழி அடிச்ச மாதிரி இருந்துச்சு.. திடீர்னு முழிச்சு பாத்தா.. பக்கத்துல புள்ளைய காணோம்.. தூரத்துல குறிஞ்சி போயிட்டு இருந்தா..!!"

"எங்க இருந்துதான் எனக்கு அப்படி ஒரு துணிச்சல் வந்துச்சோ.. நாம செத்தாலும் பரவால, நம்ம புள்ளையை அவளுக்கு காவு குடுக்க கூடாதுன்னு நெனச்சேன்..!!"

"விடாம அவளை வெரட்டிக்கிட்டே போயி.. அவ வீடு வரை போயி மல்லு கட்டி.. புடிவாதமா என் புள்ளையை புடுங்கிட்டு வந்தேன்..!!

"நாம பயப்பட பயப்படத்தான்டி பேய்க்கு பலம்.. எதுத்து நின்னமுன்னா எந்த பேயா இருந்தாலும் பணிஞ்சுதான் ஆகணும்..!! அப்படி எதுத்து நின்னுதான் உன் தாத்தனை நான் மீட்டுக் கொண்டாந்தேன்..!! அதனால.. பயத்தை விடுங்க மொதல்ல.. பயந்தான் பேயை விட பெரிய சனியன்..!!"

தானும் தாமிராவும் சிறுமிகளாக இருந்தபோது.. தைரியம் ஊட்டுகிற மாதிரி கொள்ளுப்பாட்டி சொன்ன கதை.. ஆதிராவுக்கு இப்போது நினைவுக்கு வந்தது..!!

கொள்ளுப்பாட்டியின் அந்த போதனைகள் எல்லாம் கடுகளவும் அப்போது ஆதிராவின் புத்தியில் ஏறவில்லை..!! அவளுக்கு ஏனோ துணிச்சல் என்பது.. ஆரம்பம் முதலே தூரத்து உறவாகவே இருந்தது..!! தூங்கும்போது கூட முகம் வரைக்கும் இழுத்துப் போர்த்திக்கொண்டே தூங்குவாள்..!! கையில் டார்ச்சுடன் அவளுடைய போர்வைக்குள் புகும் தாமிரா.. முகத்தை கோணலாக வைத்துக்கொண்டு.. அதை அக்காவுக்கு வெளிச்சமுமிட்டு காட்டியவாறு..

"பே.....!!!!!!!!!!!!!!!!!" என்று பெரிதாக கத்துவாள்.

"ஆஆஆஆஆஆ..!!" என்று பயத்தில் அலறி துடிப்பாள் ஆதிரா.

"பேயி.. பிசாசு..!!!" என்று தங்கையை வண்டை வண்டையாக திட்டுவாள்

"ஹாஹாஹாஹா..!!"

தாமிரா குலுங்கி குலுங்கி சிரிப்பாள்.. அக்காவை இந்த மாதிரி சீண்டுவதில் ஏனோ அவளுக்கு ஒரு அலாதி ப்ரியம்..!! பருவ வயது வந்த பிறகும் கூட.. பலமுறை அந்த மாதிரி பயந்தும் கூட.. அதே ட்ரிக்குக்கு திரும்ப திரும்ப அலறுவாள் ஆதிரா..!! அவ்வளவுதான் அவளுடைய துணிச்சலும் வீரமும்..!!

ஆனால்.. தாமிரா அப்படியல்ல.. இயல்பிலேயே மிக தைரியம் வாய்ந்தவளாக இருந்தாள்..!! அவளுடைய தைரியமும்.. அந்த தைரியம் தந்த துடுக்குத்தனமும்.. எல்லா சூட்சுமங்களை அறிந்து கொள்ள நினைக்கிற அவளுடைய ஆர்வமும்.. அந்த ஆர்வத்தினால் வீட்டிலுள்ள பொருட்கள் எதையாவது போட்டுடைப்பதும்..!!

"சர்க்கஸ்க்காரியா பொறக்க வேண்டியவ என் வயித்துல பொறந்து என்னை சாவடிக்கிறா..!!"

சிறுவயதில் தாமிராவை பூவள்ளி இந்தமாதிரித்தான் அவ்வப்போது கடிந்து கொள்வாள்..!! தாமிராவின் சுட்டித்தனமும் அவள் செய்கிற சேட்டைகளும்.. அடியையும் திட்டையுமே அவளுக்கு அடிக்கடி வாங்கித்தரும்..!! அமைதியும் அடக்கமும் ஒன்றாக உருவான ஆதிராவையே.. அனைவருக்கும் தாமிராவை விட அதிகமாக பிடித்து போகும்..!!

அடுத்தவர்கள் பார்வைக்கு தொல்லை தரும் பிள்ளையாக தாமிரா தோன்றியபோதும்.. ஆதிராவுக்கோ அவள் எப்போதுமே அன்புமிகு தங்கை.. சிறுவயதில் இருந்தே அவளுடன் அத்தனை ஒட்டுதல்.. அவளுக்கும் அக்கா மீது அத்தனை பாசம்..!! அவர்களுடைய பாசப்பிணைப்பை பற்றிய நினைவுகளே.. இப்போது ஆதிராவின் மனதில் அடிக்கடி ஓடிக்கொண்டிருந்தன..!! தங்கைக்காக ஏங்கினாள்.. அவள் காணாமல் போன உண்மையை தாங்க முடியாமல் தவித்தாள்..!!

தாமிராவை பற்றி நினைத்தாலே ஆதிராவுக்கு உடனடியாய் உள்ளத்தில் தோன்றுவது.. அவளுடைய கள்ளங்கபடம் இல்லாத வெள்ளை சிரிப்பும்.. கண்ணை சிமிட்டி அவள் பார்க்கிற குறும்பு பார்வையும்தான்..!! அப்புறம்.. அவளுடைய விளையாட்டுத்தனமும்.. அவள் 'Game or Shame..??' என்று கேட்கிற ஸ்டைலும்..!! இரண்டு கைகளையும் விரித்து முகத்துக்கு முன்பாக வைத்துக் கொள்வாள்.. ஒரு உள்ளங்கை அவள் பக்கமாக திரும்பியிருக்கும்.. இன்னொரு உள்ளங்கை எதிரிருப்பவரின் பக்கமாக திரும்பியிருக்கும்..!! இரண்டு கைகளுக்கும் நடுவிலிருக்கும் இடைவெளியில் ஒற்றைக்கண்ணால் பார்த்து.. அந்தக் கண்ணையும் வெடுக்கென வெட்டியவாறு கேட்பாள்..!!

"Game or Shame..??"

முதன்முறையாக அந்த மாதிரி அவள் கேட்டது கூட ஆதிராவுக்கு இப்போது நினைவிருக்கிறது.. அப்போது தாமிராவுக்கு எட்டுவயது.. ஆதிராவுக்கு பத்து வயது..!! இருவரும் அகழியில் உள்ள தங்கள் தாய்வழி தாத்தாவின் வீட்டில்.. பழைய பொருட்கள் அடைத்து வைத்திட்ட அறையில் விளையாடுகையில்.. ஒரு மரபொம்மையை கண்டெடுத்தனர்.. மாத்ரியோஷ்கா என்று அழைக்கப்படுகிற ரஷ்ய நாட்டில் தயாரான மரபொம்மை..!!


வித்தியாசமான பொம்மை அது.. பொம்மை என்று ஒருமையில் கூட சொல்ல இயலாது.. பொம்மைகள் என்று சொல்ல வேண்டும்.. ஒன்றுக்குள் ஒன்றாக அமைந்த ஒரே மாதிரியான எட்டு பொம்மைகள்.. அளவில் மட்டும் ஒன்றோடொன்று மாறுபட்டிருக்கும்..!! பெரிய பொம்மையை திறந்தால் உள்ளே ஒரு சிறிய பொம்மை.. அந்த பொம்மையை திறந்தால், அதனுள்ளே அதைவிட சிறிய பொம்மை.. அந்த மாதிரி மொத்தம் எட்டு பொம்மைகள்..!!

அந்த பொம்மையை இருவருக்குமே பிடித்திருந்தது.. அதை யார் வைத்துக் கொள்வது என்று இருவருக்கும் சண்டை.. 'நான்தான் முதலில் பார்த்தேன்.. நான்தான் முதலில் பார்த்தேன்..' என்று இருவருமே வாக்குவாதம் செய்துகொண்டார்கள்..!! அப்போதுதான் தாமிரா திடீரென அவ்வாறு சொன்னாள்.. அவளுக்கே உரித்தான அந்த பிரத்தியேக பாணியுடன்.. கைகள் இரண்டையும் முகத்திற்கு முன்பாக உயர்த்தி பிடித்து..!!

"Game or Shame..??"

"Game or Shame-ஆ..?? அப்படினா..??"

"நான் ஒரு கேம் வைப்பேன்.. அதுல நீ ஜெயிச்சா.. இந்த பொம்மையை நீயே வச்சுக்கோ.. தோத்துட்டா நான் வச்சுப்பேன்..!!"

"கேம் சரி.. அதென்ன ஷேம்..??"

"கேம் வெளையாட நீ வரலனா.. 'பயந்தாங்கொள்ளி பயந்தாங்கொள்ளி'ன்னு நான் உன்னை கேலி பண்ணுவேன்.. அது உனக்கு ஷேம்..!! ஹாஹாஹாஹா..!!" சொல்லிவிட்டு தாமிரா கலகலவென சிரித்தாள். அப்புறம் அந்த சிரிப்புடனே அக்காவை பார்த்து,

"இப்போ சொல்லு.. Game or Shame..??" என்று கேட்டாள்.

"Game..!!" ஆதிராவும் வீராப்பாக சொன்னாள்.

கேம் என்ன என்பதை அடுத்த நாள் சொல்வதாக தாமிரா சொன்னாள்.. அன்று அந்த பொம்மையை எடுத்த இடத்திலேயே திரும்ப வைத்துவிட்டார்கள்..!! அடுத்த நாள்.. அதுபற்றிய நினைவே இல்லாமல் ஆதிரா இருந்த சமயத்தில்.. தாமிரா அவள் முன்பு திடீரென தோன்றி கத்தினாள்..!!

"Game or Shame..??"

"Game..!!" ஆதிராவும் பதிலுக்கு கத்தினாள்.

"தலை போனா மறைக்கும்.. இடை போனா குறைக்கும்.. கால் போனா குதிக்கும்..!!"

"என்ன சொல்ற.. எனக்கு புரியல..!!"

"தலை போனா மறைக்கும்.. இடை போனா குறைக்கும்.. கால் போனா குதிக்கும்..!!"

ஆதிராவின் கேள்விக்கு பதில் சொல்லாமல்.. தாமிரா திரும்ப திரும்ப அதையே சொல்லிக் கொண்டிருந்தாள்..!! ஆதிராவுக்கு சில வினாடிகள் எதுவும் புரியவில்லை.. அதன் பிறகு அவளுடைய மூளையில் பளிச்சென ஒரு மின்னல் வெட்ட.. முகத்தில் ஒரு மலர்ச்சியுடன் வீட்டுக்குள் ஓடினாள்..!! தாமிராவும் தமக்கையை பின்தொடர்ந் து ஓடினாள்..!!

அந்த நீண்ட வராண்டாவை ஆதிரா சிட்டாக கடந்தாள்.. அகலமான ஒரு மரத்தூணை சரக்கென சுற்றி திரும்பினாள்.. விரிந்திருந்த முற்றத்தை தாண்டி பாய்ந்தாள்.. வீட்டின் பின்வாசலை ஒட்டியிருந்த அறைக்குள் புயலென புகுந்தாள்..!! அவளுக்கு பின்னே ஓடிவந்திருந்த தாமிராவும் வாசலில் வந்து நின்றாள்..!!

அறைக்குள் அந்த மரக்குதிரை நின்றிருந்தது.. ஆதிராவும் தாமிராவும் வழக்கமாக ஏறி விளையாடுகிற குதிரை.. ஓடாமல் நகராமல் ஒரே இடத்தில் அவர்கள் சவாரி செய்கிற குதிரை..!! அந்த குதிரையை நெருங்கிய ஆதிரா.. அதன் வயிற்றுப் பகுதியில் இருந்த திறவை பிடித்து வெளியிழுத்தாள்..!! உள்ளே அந்த மரபொம்மை காட்சியளித்தது..!!!!

முகத்தில் ஒரு மலர்ச்சியுடன், ஆதிரா திரும்பி தங்கையை பார்த்தாள்.. அவளுடைய முகத்திலும் ஒரு பிரகாசம்.. புன்னகைத்தாள்..!! பொம்மையை வெளியே எடுத்தாள் ஆதிரா.. எடை குறைவாக இருப்பது தெளிவாக தெரிந்தது..!! பொம்மையின் உடலை பற்றி திருக.. அது படக்கென திறந்து கொண்டது..!! உள்ளே மற்ற பொம்மைகளை காணோம்.. ஒரே ஒரு துண்டு சீட்டு..!! சீட்டை பிரித்து படித்தாள்..!!

"நாலு மூலை நாடக சாலை..
நடுவிலிருக்கும் பாடகசாலை..!!
ஆடும் பெண்கள் பதினாறு..
ஆட்டி வைப்பவர் ரெண்டு பேரு..!!"

படித்து முடித்தவள் தங்கையை நிமிர்ந்து பார்க்க.. அவள் கன்னத்தில் குழிவிழ அழகாக சிரித்தாள்..!! அப்படி சிரித்தவாறே..

"Game or Shame..??" என்று மீண்டும் கத்தினாள்.

"Game..!!!!" ஆதிரா அலறிக்கொண்டே விருட்டென எழுந்து ஓடினாள்.

தங்கையை கடந்து வெளியேறியவள்.. தாத்தாவின் அறைக்கு விரைந்தாள்..!! அங்கிருந்த சொக்கட்டான் விளையாட்டு பொருட்கள் அடங்கிய பெட்டியை திறந்து பார்க்க.. அடுத்த பொம்மை கிடைத்தது..!! அந்தப் பொம்மைக்குள் இன்னொரு துண்டு சீட்டு.. அதில்.. மூன்றாவது பொம்மையை கண்டறிவதற்கான குறிப்பு அடங்கிய ஒரு விடுகதை..!!

இப்படியே ஒவ்வொரு பொம்மையாக கண்டுபிடித்து.. எட்டு பொம்மைகளையும் தன் வசமாக்கிக் கொண்டாள் ஆதிரா..!! அவளை கட்டிக்கொண்டு அக்காவின் வெற்றிக்காக தாமிராவும் பூரித்து போனாள்..!!

அதன் பிறகு.. ஆதிராவும் தாமிராவும் பருவக் குமரிகளாக ஆனபிறகும் கூட.. இந்த மாதிரி நிறைய விளையாடி இருக்கிறார்கள்..!! ஏதோ ஒரு பொருளை இருவரும் விரும்பும்போதோ.. ஏதோ ஒரு விஷயத்திற்காக இருவரும் வாதிடும்போதோ.. இந்த மாதிரி 'Game or Shame..??'-தான்..!! விதவிதமான சூழ்நிலைகள்.. விதவிதமான விளையாட்டுக்கள்..!! எல்லா விளையாட்டுகளிலுமே மாறாத ஒரே விஷயம் என்ன தெரியுமா..?? அது.. ஆதிராவின் வெற்றிதான்..!!

இப்போது நினைத்து பார்க்கையில் ஆதிராவுக்கு ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது..!! கிட்டத்தட்ட எல்லா விளையாட்டுக்களிலுமே.. ஆதிரா ஜெயிக்க வேண்டும் என்பதற்காக.. அப்போது ஆதிராவின் அறிவுக்கு கூட எட்டாத வகையில்.. தாமிரா சில தந்திரங்கள் புரிந்திருக்கிறாள் என்று..!! அந்த விடுகதைகளின் விடைகளை எல்லாம் அக்கா நன்கறிவாள் என்பது.. தாமிராவுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்க வேண்டும்..!! அக்காவை சீண்டுவது மட்டுமல்ல.. அவளை ஜெயிக்க வைத்து பார்ப்பதிலும் தாமிராவுக்கு ஒரு அலாதி ப்ரியம்..!!

ஒவ்வொரு போட்டியிலும் வெல்லும்போதும்.. ஆதிரா அடைகிற ஆனந்தத்துக்கு அளவே இருக்காது..!! தாமிரா அந்தப் பொருளை விட்டுக் கொடுத்திருந்தால் கூட.. ஆதிராவுக்கு அந்த அளவு மகிழ்ச்சி இருந்திருக்காது.. தானே கஷ்டப்பட்டு, தானே வென்று, தனதாக்கிக் கொண்ட பொருள் என்று.. அந்தப் பொருளின் மீது இன்னும் அதிகமான பிடித்தமும்.. எனக்கு சொந்தமானது என்ற உரிமையும் அவளுக்கு பிறக்கும்..!! 'என்னதான் இருந்தாலும் இது தங்கை நமக்கு விட்டுக் கொடுத்த பொருள்தானே?' என்ற நினைவு எப்போதும் ஆதிராவுக்குள் எழாது..!! அந்த மாதிரியான தந்திரம் தாமிராவுடையது..!!


ஆதிராவுக்கு தங்கையின் மீதான அன்பு இப்போது உள்ளத்துக்குள் குபுகுபுவென ஊற்றெடுத்து ஓடியது..!! 'எத்தனை அன்பிருக்க வேண்டும் அவளுக்கு என் மேல்..?? இந்த மாதிரி ஒரு தங்கை கிடைக்க நான் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்..?? இப்படி என்னவானாள் என்று புரியாமல் தொலைந்து போனாளே..??'

ஆதிராவுக்கு இப்போது திடீரென இன்னொரு நினைவு..!! 'என்னிடம் எத்தனை விளையாட்டு வைத்திருக்கிறாள்.. ஆனால்.. அவளுக்கு முதன்முறையாக விளையாட்டு என்று ஒன்றை சொல்லி தந்ததே நான்தானே..??' என்பது மாதிரியான நினைவு..!! அந்த நினைவு இப்போது அவளுடைய மனதில் படமாய் விரிந்தது..!!

"கண்ணாமூச்சி ரே ரே..
கண்டுபுடி ரே ரே..
ஊளமுட்டையெல்லாம் நீ தின்னுட்டு..
நல்ல முட்டையெல்லாம் கொண்டு வா..!!"

பாடி முடித்த ஆதிரா, முகத்தை மூடியிருந்த கைகளை விலக்கி, கண்கள் திறந்து பார்த்தாள்.. உடனே அவளிடம் ஒரு மெலிதான அதிர்ச்சி..!! ஓடி ஒளியாமல், இன்னும் தன் எதிரே நின்று கொண்டிருந்த குட்டித் தங்கையை குழப்பமாக பார்த்தாள்..!!

"என்னாச்சு தாமிரா.. போய் ஒளிஞ்சுக்கோ.. போ..!!"

"எனக்கு கண்ணாமூச்சி பிடிக்கலக்கா..!!" தாமிரா பரிதாபமாக சொன்னாள்.

"பிடிக்கலையா.. ஏன்..??"

"பயமா இருக்கு..!!"

"என்ன பயம்..??"

"நீ என்னை கண்டுபிடிக்கலைன்னா.. அப்புறம் நான் தொலைஞ்சு போயிடுவேனே..??"

மழலைக்குரலில் தாமிரா அவ்வாறு சொன்னபோது.. ஆதிரா படக்கென சிரித்துவிட்டாள்..!!

"ஹாஹாஹாஹா..!!"

தாமிரா அவ்வாறு சொன்ன தோரணையை நினைத்துப் பார்க்கையில் இப்போதும் கூட ஆதிராவுக்கு சிரிப்பாக வந்தது..!! ஆனால்.. அந்த சிரிப்பு முடிவதற்கு முன்பே.. அன்று அவள் தங்கைக்கு சொன்ன பதில், கூடவே ஞாபகத்துக்கு வரவும்.. அவளுடைய முகத்தில் பட்டென ஒருவித இறுக்கம்..!! தங்கையை சமாதானப்படுத்தி விளையாட வைக்க.. அன்று ஆதிரா சொன்ன வார்த்தைகள்.. இப்போது அவளது காதுக்குள் மீண்டும் மீண்டும் ரீங்காரமிட்டன..!!

"பயப்படாத தாமிரா.. அக்கா இருக்கேன்ல..?? உன்னை கண்டு பிடிக்கிற வரை அக்கா தேடிக்கிட்டே இருப்பேன்..!!"

"உன்னை கண்டு பிடிக்கிற வரை அக்கா தேடிக்கிட்டே இருப்பேன்..!!"

"தேடிக்கிட்டே இருப்பேன்..!!"

"தேடிக்கிட்டே இருப்பேன்..!!"

அத்தியாயம் 5

மேலும் ஒரு வாரம் கழித்து.. மைசூரில் இருந்து ஊட்டி செல்கிற மலைப்பாதை..!! பாதையின் ஓரமாக அந்த புத்தம்புது வெண்ணிற ஸ்கார்ப்பியோ பார்க் செய்யப்பட்டிருந்தது..!! வண்டிக்குள் ஆதிரா அமர்ந்திருந்தாள்.. பழுப்பு நிறத்தில் ஒரு சால்வை போர்த்தியிருந்தாள்..!! கையிலிருந்த காகித தம்ளரை அவ்வப்போது உயர்த்தி.. உதடுகள் பதித்து தேநீர் உறிஞ்சிக் கொண்டிருந்தாள்..!! அவளுடைய பார்வை முழுவதும்.. தூரத்தில் தெரிந்த ஒரு போர்டின் மேல் கூர்மையாக நிலைத்திருந்தது..!!

அகலமான தார்ச்சாலையின் அந்தப்புறமாக ஜீன்ஸ் அணிந்திருந்த சிபி நின்றிருந்தான்..!! அவனுடைய கையில்.. எடை மிகுந்திருந்த, மூக்கு நீண்டிருந்த ஒரு கேமரா..!! சாலையோரமாய் வளர்ந்திருந்த பச்சை செடிகளில் வந்தமர்ந்திருந்த பட்டாம்பூச்சிகளை படம் பிடித்துக் கொண்டிருந்தான்..!! அந்த பட்டாம்பூச்சிகளின் மேனியில் ஜொலித்த வர்ணஜாலமும்.. அதனை தனது கேமராவுக்குள் கேப்சர் செய்துவிட்ட சந்தோஷமும்.. சிபியின் முகத்தை பரவசத்தில் ஆழ்த்தியிருந்தன..!!

"ஆதிராஆஆ.. இங்க பாரேன்..!!"

திரும்பி பார்த்து கத்தினான் சிபி.. ஆதிராவிடம் இருந்து பதில் வராமல் போகவும், காரை நோக்கி மெல்ல நடந்தான்..!! மனைவியை நெருங்கியவன் காரின் ஜன்னலுக்கு கொஞ்சமாய் குனிந்தவாறே.. உற்சாகம் மட்டும் சற்றும் குறையாமல் சொன்னான்..!!

"அங்க வந்து அந்த பட்டாம்பூச்சிலாம் பாரு ஆதிரா.. எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா..?? நானும் அப்படியே பட்டாம்பூச்சியா மாறிடலாம் போல ஆசையா இருக்கு..!!"

அவன் அவ்வளவு உற்சாகமாக சொல்லியும், அதன்பிறகு ஓரிரு வினாடிகள் கழித்தே ஆதிரா கவனம் கலைந்தாள்..!! அதற்குள் சிபியும் ஆதிராவின் பார்வை சென்ற திசையை நோக்கி.. அவளுடைய எண்ண ஓட்டத்தை உடனடியாய் புரிந்து கொண்டிருந்தான்..!! இமைகளில் ஒருவித படபடப்புடன் கணவனை திரும்பி பார்த்த ஆதிரா.. தடுமாற்றமான குரலிலேயே கேட்டாள்..!!

"எ..என்ன.. என்ன சொன்னிங்க..??"

சிபி இப்போது சலிப்பாக ஒரு பெருமூச்சை உதிர்த்தான்.. ஆதிராவுக்கு பதில் ஏதும் சொல்லாமல், அமைதியாக காருக்குள் ஏறி அமர்ந்தான்.. கையில் இருந்த கேமராவை பின்சீட்டில் விட்டெறிந்தான்..!! மனைவியிடம் திரும்பி.. சற்றே எரிச்சலான குரலில் சொன்னான்..!!

"நீ என்ன நெனைக்கிறேன்னு எனக்கு புரியுது ஆதிரா.. தயவு செஞ்சு அந்த நெனைப்பெல்லாம் உடனே கட் பண்ணிடு..!!"

"ஏ..ஏன்த்தான் அப்படி சொல்றீங்க..??"

"நாம ஊட்டி போறோம்னு வீட்ல சொல்லிட்டு வந்திருக்கோம் ஆதிரா..!!"

"அதனால என்ன.. ஊட்டி போக வேணாம்னு நான் சொல்லவே இல்லையே..?? டூ வீக்ஸ் ட்ரிப்.. அஞ்சு நாள் அகழில இருப்போம்.. அப்புறம் பத்து நாள் ஊட்டி.. அதுக்கப்புறம் மைசூர்..!!"

"புரிஞ்சுக்காம பேசாதடா..!! உன்னை அகழிக்கு கூட்டிப் போறதுல எனக்கு சுத்தமா இஷ்டம் இல்ல..!! ஊட்டிக்கு போகலாம்னு கெளம்பி வந்துட்டு.. இப்போ என்ன இது திடீர்னு நடுவுல..??" சிபி எரிச்சலாக கேட்கவும், ஆதிரா தலையை பிடித்துக் கொண்டாள்.

"என்னால முடியலத்தான்..!! எனக்கு தாமிரா நெனைப்பாவே இருக்கு..!!"

"ப்ளீஸ் ஆதிரா..!! ஏற்கனவே ஒருவருஷம் ஆச்சு.. அவ நெனைப்புலயே இந்தமாதிரி நீ இருந்துட்ட.. ஒரு வருஷம்.. எல்லாம் பண்ணி பாத்தாச்சு..!! இப்போ திரும்பவும் ஆரம்பிக்காத.. கஷ்டமா இருக்கு எனக்கு..!!"

"எப்படி-த்தான் என்னால முடியும்..?? எப்படியோ போகட்டும்னு எப்படி என்னால இருக்க முடியும்..?? தாமிராக்கு என்னாச்சுன்னு எனக்கு தெரியணும்.. மறந்து போனதுலாம் எனக்கு திரும்ப ஞாபகத்துக்கு வரணும்..!! இதுலாம் அகழி போனாத்தான் நடக்கும்..!! ப்ளீஸ்த்தான்.. என்னை புரிஞ்சுக்கோங்க..!!" அழுகையுடன் கெஞ்சினாள் ஆதிரா. அவளுடைய கெஞ்சல் சிபியை சற்றே அசைத்து பார்த்தது.

"அகழிக்கு போனாமட்டும் உனக்கு அதுலாம் ஞாபகம் வந்துடும்னு எந்த உத்திரவாதமும் இல்லடா..!!"

"தெரியும்.. பரவால.. போய்த்தான் பாக்கலாமே..??"

"மாமாக்கு தெரிஞ்சா டென்ஷன் ஆயிடுவாரு..!! அகழிக்கு உன்னை கூட்டிப் போனது தெரிஞ்சா.. அவ்வளவுதான்..!!"

"அப்பாவுக்கு தெரிய வேணாம்-த்தான்.. நாமளா போயிட்டு வரலாம்.. அங்க இருந்து ஃபோன் பண்றப்போ ஊட்டில இருக்குறதாவே சொல்லிடலாம்..!! அதையும் மீறி அப்பாக்கு தெரிஞ்சிடுச்சுனா.. அவரை நான் சமாளிச்சுக்குறேன்..!! ப்ளீஸ்த்தான்..!!"

"எனக்கு பயமா இருக்கு ஆதிரா..!!"

"என்ன பயம்..?? அந்த குறிஞ்சி என்னையும் தூக்கிட்டு போயிடுவான்னா..?? அப்படிலாம் எதுவும் நடக்காதுத்தான்..!! அஞ்சு நாள்ல என்ன ஆகிடப் போகுது..?? அதுவும்.. நீங்க என் கூடவே இருக்குறப்போ..?? ம்ம்..??”

"வே..வேணாம் ஆதிரா..!!" பலவீனமாக ஒலித்தது சிபியின் குரல்.

“ப்ளீஸ்த்தான்.. ப்ளீஸ்..!! அஞ்சே அஞ்சு நாள்.. எனக்காக..!! அன்னைக்கு என்ன சொன்னிங்க.. எனக்கு புடிச்சதை சொன்னா.. எதுவா இருந்தாலும் வாங்கி தர்றேன்னு சொன்னிங்கள்ல..?? எனக்கு இதுதான் வேணும்.. ப்ளீஸ்த்தான்.. எனக்கு அகழிக்கு போகணும்..!! ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..!!"

ஆதிரா குழந்தை மாதிரி கெஞ்சிக்கொண்டே இருக்கவும்.. சிபியின் பிடிவாதம் கொஞ்சம் கொஞ்சமாய் தகர்ந்து கொண்டே சென்றது..!! என்ன சொல்வதென்று புரியாமல் மனைவியின் முகத்தையே பரிதாபமாக பார்த்தான்.. ஒருவித அவஸ்தைக்குள் அவன் ஆட்பட்டுக் கொண்டது அப்பட்டமாக அவனுடைய முகத்தில் தெரிந்தது..!!

ஒரு சில வினாடிகள்..!! அப்புறம் என்ன நினைத்தானோ.. சலிப்பாக தலையை அசைத்தவாறே முகத்தை திருப்பிக் கொண்டான்.. சாவியை திருகி வண்டியை கிளப்பிக்கொண்டே ஆதிராவிடம் சொன்னான்..!!

"அஞ்சு நாள்தான் ஆதிரா.. அதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட அங்க நீ இருக்க, உன்னை நான் அலோ பண்ண மாட்டேன்..!!"

"தேங்க்ஸ்-த்தான்..!!"

ஆதிரா மகிழ்ந்து கொண்டிருக்கையிலேயே வண்டி சீற்றமாய் கிளம்பியது..!! அகலமாய் மேலேறிய ஊட்டிக்கு செல்லும் சாலையை விடுத்து.. அதிலிருந்து பிரிந்து சற்றே தாழ்வாக கீழிறங்குகிற அந்த குறுகலான பாதையில்.. குலுங்கி குலுங்கி பயணிக்க ஆரம்பித்தது அந்த ஸ்கார்ப்பியோ..!! அத்தனை நேரம் ஆதிரா வெறித்துக் கொண்டிருந்த அந்த மரபோர்டில்.. எழுத்துக்கள் சற்றே சிதிலமடைந்து போய் காட்சியளித்தன..!!

அகழி --> 13 கி.மீ

 

3 comments:

  1. Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...