Social Icons

கண்ணாமூச்சி ரே ரே - 7​


 




அத்தியாயம் 17

ஆதிரா உச்சபட்சமானதொரு குழப்பத்தில் உழன்று தவித்தாள் என்றுதான் சொல்லவேண்டும்..!! அகழி வந்ததிலிருந்தே நடந்த சில சம்பவங்கள் அவள் மனதில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தன..!! இப்போது, அவளது கைபேசிக்கு வந்திட்ட மர்மமான அழைப்பு.. அவளது பழைய எண்ணிலிருந்து வருகிறது என்பதை அறிந்ததும்.. மனதில் ஏற்பட்டிருந்த அந்த கலக்க அதிர்வுகள் இன்னுமே வீரியமடைந்திருந்தன.. புத்திக்கு புலப்படாத ஒரு குழப்பச்சுழலுக்குள் சிக்கித் தவிப்பது போன்றொரு உணர்வு..!!

தனது பழைய கைபேசி எண்ணை ஆதிரா கிட்டத்தட்ட மறந்தே போயிருந்தாள்.. அதுவுமல்லாமல், அழைப்பு வந்த இரண்டுமுறையுமே அந்த எண்ணை சற்று கவனித்துப்பார்க்கவும் தவறியிருந்தாள்..!! அதனால்.. பார்த்ததுமே அவளுடைய பழைய எண் என்பது, சட்டென அவளுக்கு உறைக்கவில்லை..!!

இப்போது கதிர் சொன்னபிறகு.. அந்த எண்ணை ஓரிரு வினாடிகள் உற்று நோக்கியபிறகு.. ஒருவருடத்திற்கு முன்பு அவள் உபயோகித்த எண்தான் அது என்கிற உண்மை.. அவளது மூளையை பலமாக அறைந்தது..!! அந்த உண்மை புத்திக்கு புலப்பட்டதுமே.. அவளது தலைக்குள் கிர்ர்ர்ரென்று ஒரு குடைச்சல்.. மயக்கம் வரும்போல உடலில் ஒரு தடுமாற்றம்.. கண்களையும் முகத்தையும் ஒருமாதிரி சுருக்கிக் கொண்டாள்..!!

"எ..எப்படி கதிர் இது.. எ..என்னோட பழைய நம்பர்ல இருந்து.. எ..எனக்கு ஒன்னும் புரியல..!!"

"எனக்கும் எதுவும் புரியலைங்க ஆதிரா..!! கால் பண்ணினா 'நாட் இன் யூஸ்'ன்னு வேற வருது..!!"

"ம்ம்ம்ம்..!!"

"மைசூர் போனதுல இருந்தே இந்த புது நம்பர்தான் யூஸ் பண்றீங்களா..??"

"ஆமாம்..!!"

"உ..உங்களோட பழைய ஸிம்மை என்ன பண்ணுனிங்க..??"


"அ..அது.. என்னோட பழைய மொபைல் தொலைஞ்சு போனப்போ.. அந்த ஸிம்மும் சேர்ந்து தொலைஞ்சு போயிருக்கனும்..!!"

"ஓ..!! மொ..மொபைல் எப்படி தொலைஞ்சு போச்சு..??"

"தெ..தெரியலை கதிர்.. எனக்கு ஞாபகம் இல்ல.. ஒருவருஷமா நடந்த எதுவுமே எனக்கு சுத்தமா ஞாபகம் இல்ல.. அந்த மொபைல் எப்படி தொலைஞ்சு போச்சுன்னு கூட மறந்துடுச்சு..!!" ஆதிரா அவ்வாறு பரிதாபமாக சொல்லவும், கதிர் அவளது இயலாமையை ஓரளவுக்கு புரிந்துகொண்டான்.

"ஒ..ஒருவேளை சிபிக்கு தெரிஞ்சிருக்க சான்ஸ் இருக்கா..?? அவர்ட்ட கேக்கலாமா..??"

"இ..இல்ல.. அவருக்கும் தெரியல.. அல்ரெடி நான் கேட்டுட்டேன்..!! 'தொலைஞ்சு போச்சு'ன்னு மட்டுந்தான் நான் அப்போ அவர்ட்ட சொல்லிருக்கேன்.. எப்படி தொலைஞ்சு போச்சுன்னு சொல்லலைன்னு சொன்னார்..!!"

"ம்ம்ம்ம்.. அந்த நம்பர்ல இருந்து எப்படி.. ஒரே கொழப்பமா இருக்கு ஆதிரா..!!"

"எ..எனக்குந்தான் கதிர்..!!"

குழம்பிய மனநிலையுடனே இருவரும் சிங்கமலையில் இருந்து புறப்பட்டார்கள்.. காரை நிறுத்தியிருந்த சாலையை அடையும் மலைச்சரிவில் இறங்கி, மெல்ல நடைபோட்டார்கள்..!! சுற்றிலும் பச்சைப் பசேலென, சூரிய வெளிச்சம் குறைவான பாதை..!! அடர்த்தியாய் வளர்ந்திருந்த மரங்கள்.. ஆங்காங்கே முளைத்த முட்புதர்கள்..!! அந்த முட்புதர்களை.. அனிச்சை செயலாய் கைகொண்டு விலக்கியவாறே.. ஆதிரா மலைச்சரிவில் இறங்கிக்கொண்டிருந்தாள்..!! அவளுடைய காலில் ஏற்பட்டிருந்த வெட்டுக்காயத்தில்.. அவ்வப்போது 'சுருக்.. சுருக்' என்று ஒரு வலி..!!


ஆதிராவின் சிந்தனையோட்டம் இப்போது வெகுவாக சிதைந்து போயிருந்தது.. மூளைக்குள் வெட்டிய குழப்ப மின்னல்களால், அவளது முகம் வெளிறிப்போய் கிடந்தது.. அவளுடைய கண்களில் இனம்புரியாத ஒரு பயமும், மிரட்சியும்..!! அங்கிருந்து அவள் வீட்டை சென்றடைகிற வரை.. ஆங்காங்கே அவ்வப்போது தோன்றி மறைந்த மாயபிம்பங்களும், மருட்சியான காட்சிகளுமே.. அவள் எந்த அளவிற்கு குழப்பக்கடலில் மூழ்கியிருக்கிறாள் என்பதற்கு சான்றுகள்..!!

ஆதிராவுக்கு பக்கவாட்டில்.. சற்று தூரத்தில்.. சிவப்பு அங்கி அணிந்த குறிஞ்சி.. இவளுக்கு இணையாக மலைச்சரிவில் இறங்கிக் கொண்டிருந்தாள்..!! மரங்களுக்கிடையே அவ்வப்போது மறைந்து மறைந்து.. பிறகு மீண்டும் 'சரக் சரக்'கென மின்னலாக தோன்றி..!! முகம் மறைக்கிற கூந்தல் மயிர்களின் வழியே.. ஒற்றைக்கண்ணால் இவளை வெறித்துப் பார்த்தபடி.. இவளுடனே மலைப்பாதையில் சேர்ந்து நடந்தாள்..!!

ஆதிராவின் செவிக்கருகே 'விஷ்ஷ்ஷ்க்க்.. விஷ்ஷ்ஷ்க்க்..' என்று சப்தம்.. அவளது நாசிக்கருகே வினோதமான மகிழம்பூ வாசனை..!! இமைகள் தானாக செருக ஆரம்பிக்க, தலையை உதறிக் கொண்டாள்..!!

செல்கிற வழியில் செடி நட்டுக்கொண்டிருந்த மணிமாறன்.. இவள் அருகில் சென்றதும் தலையை நிமிர்த்தி சொன்னார்..!!

"ஐஞ்சு வருஷம் ஆச்சும்மா..!! போலீஸால இதுவரை ஒன்னும் புடுங்க முடியல..!!"

மரமொன்றுக்கு பின்னிருந்து.. மயிர்மண்டிய முகத்துடன் வெளிப்பட்ட மாந்திரிகவாதி.. இடுங்கிப்போன பார்வையுடன் இவளை கேட்டார்..!!

"உன் தங்கச்சி அந்த தகட்டை எடுத்ததுக்கு அப்புறந்தான் திரும்ப அந்த மாதிரி மர்மமான சம்பவங்கள் நடக்குது.. இதுக்கு என்ன விளக்கம் சொல்லப்போற ஆதிராக்கொழந்தை..??"

திடீரென ஆதிராவின் கால்களுக்கு அருகே அந்தக்காட்சி..!! தரையில் கிடந்து உருண்டவாறே.. தாரைதாரையாய் கண்ணீர் வடித்தவாறே.. பரிதாபமாய் புலம்பினாள் வனக்கொடி..!!

“நம்ம தாமிராவை என்னால காப்பாத்த முடியல.. இந்தப்பாவியால உன் தங்கச்சியை காப்பாத்த முடியல ஆதிராம்மா..!!"

கைகள் நிறைய சரளைக் கற்களுடன்.. ஆதிராவுக்கு பின்னால் தொடர்ந்து வந்த செம்பியன்.. கண்களில் ஒரு அதீத பயத்துடன் ரகசியக்குரலில் கிசுகிசுத்தார்..!!

"அந்த பூகிமேன்.. அப்டியே ஒரு மேஜிக் மாதிரி.. மனுஷங்களை தூக்கிட்டு போய்டுவான்..!!"

கதிரும் ஆதிராவும் காரில் ஏறி அமர்ந்தனர்.. கார்க்கதவை அறைந்து சாத்திய ஆதிரா, எதேச்சையாக பின்புறம் திரும்பினாள்..!! பின்சீட்டில் கைகளை விரித்துவைத்து கம்பீரமாக அமர்ந்திருந்தார் வில்லாளன்.. எகத்தாளமான குரலில் இவளிடம் கேட்டார்..!!

"அகழில இருக்குற ஒரு பயலுக்கும் அறிவுன்றதே கெடையாதா..??"

கார் சென்றுகொண்டிருக்கையிலேயே அவளது காலுக்கடியில் ஏதோ தட்டுப்பட்டது.. சீட்டுக்கடியில் இருந்து, அந்த குட்டிப்பெண் விருட்டென தலையை வெளியே நீட்டினாள்.. அகல்விழியின் தங்கை..!! வெளிறிப் போன முகமும், பயம் அப்பிய விழிகளுமாக மிரட்சியாக சொன்னாள்..!!

"அ..அக்காவை.. குறிஞ்சி தூக்கிட்டு போயிட்டா..!!"

காரோட்டிக்கொண்டிருந்த கதிர் திடீரென இவள்பக்கமாக திரும்பினான்.. வெறித்த பார்வையுடன், கியர் மாற்றிக்கொண்டே இறுக்கமாக சொன்னான்..!!

"இல்லைங்க.. குறிஞ்சிதான் காரணம்னு எனக்கு தோணல..!!"

வீட்டை அடைந்ததும் ஆதிரா காரில் இருந்து இறங்க.. பின்பக்க கதவை திறந்துகொண்டு கூடவே இறங்கினான் முகிலன்.. குரூரமாக முகத்தை வைத்துக்கொண்டு எச்சரித்தான் இவளை..!!

"அப்படியே கோழிக்குஞ்சை திருகுற மாதிரி அவ கழுத்தை திருகிப் போட்ருவேன்.. சொல்லி வையி..!!"

வாசலை அடைந்து படி ஏறுகையில்.. கையில் கிஃப்ட் பாக்ஸுடன் எதிர்ப்பட்டார் திரவியம்..!!

"ஹாஹா.. எனக்கு எல்ல்ல்ல்ல்லாம் தெரியும்மா..!!" என்று விஷமப் புன்னகையை சிந்தினார்.

வீட்டுக்குள் நுழைந்த ஆதிரா, அயர்ந்துபோய் தொப்பென்று சோபாவில் விழுந்தாள்.. அத்தனை நேரம் அவளை நெருக்கிய குழப்ப அழுத்தத்தில் இருந்து மீளமுடியாமல், அப்படியே கண்களை இறுக்கிக் கொண்டு கிடந்தாள்..!!

"என்னாச்சு ஆதிராம்மா..?? உடம்பு கிடம்பு சரியில்லையா..??" என்று கனிவாக கேட்ட வனக்கொடிக்கு கூட,

"ஒ..ஒன்னும்.. ஒன்னும் இல்லமா.. லேசா தலைவலி..!!" என தடுமாற்றமாகவே பதில் சொன்னாள்.

"சாப்பாடு ரெடிமா..!! சாப்பிடுறியா..??"

"இ..இல்லம்மா.. கொஞ்ச நேரம் ஆகட்டும்..!!"

தனது கைபேசிக்கு வருகிற அந்த மர்மமான அழைப்பைப்பற்றி.. உடனடியாய் தனது கணவனிடம் தெரிவிக்கவேண்டும் போலிருந்தது அவளுக்கு.. ஊட்டியிலிருக்கும் அவனுக்கு கால் செய்து பேசிவிடலாமா என்று கூட ஒருகணம் நினைத்தாள்..!! பிறகு.. அலுவலக வேலை நிமித்தமாக சென்றிருக்கும் அவனுக்குள்.. தனது அழுத்தத்தை இட்டு நிரப்பவேண்டாமே என்று தோன்றவும்.. அந்த யோசனையை கைவிட்டாள்..!!

அன்றிரவு.. தான் குறிப்பிட்ட நேரத்திற்கு சற்று முன்னதாகவே வீட்டிற்கு வந்து சேர்ந்தான் சிபி..!! அவனுடைய வருகைக்காகத்தான் காத்திருந்த ஆதிரா.. அவன் வந்ததுமே ஓடோடிச்சென்று அந்த விஷயத்தை அவனுக்கு உரைத்தாள்.. அவனுடைய வார்த்தையை மீறி கதிருடன் சுற்றியதை மட்டும் தவிர்த்துவிட்டு, அந்த மர்ம அழைப்பைப்பற்றி மட்டும் சொன்னாள்..!!

மனைவி சொல்வதை கவனமாக கேட்டுக்கொண்டே வந்த சிபி.. கொஞ்சம் கொஞ்சமாய் முகம் மாறினான்.. திகைப்பும், குழப்பமும் கலந்துகட்டி வழிந்தது அவனது முகத்தில்..!! 'எப்படி இது சாத்தியம்?' என்பது போல நெற்றியைப்பற்றி பிசைந்துகொண்டான்.. எங்கேயோ ஒரு வெறித்த பார்வை பார்த்தான்..!!


குழப்பத்தில் தத்தளித்த கணவனிடம், ஆதிரா இப்போது கவலையாக கேட்டாள்..!!

"அந்த மொபைல் நம்பரை ட்ரேஸ் பண்ணனும் அத்தான்.. யாராவது அந்த நம்பரை யூஸ் பண்ணிட்டு இருக்காங்களான்னு தெரிஞ்சுக்கணும்.. முடியுமா..??"

"ம்ம்.. நாவரசு ஸார்ட்ட வேணா ஹெல்ப் கேட்டுப் பாக்கலாம் ஆதிரா..!! தமிழ்நாடு போலீஸ் டிப்பார்ட்மன்ட்ல அவருக்கு கொஞ்சம் இன்ஃப்ளூயன்ஸ் இருக்கு..!!"

"ஓ..!! அப்போ அவர்ட்ட பேசுறிங்களா..??"

"இ..இப்போவேவா..??"

"ம்ம்.. இப்போவேதான்..!!"

"அன்-டைமா இருக்கேன்னு பார்த்தேன்..!!"

"என்ன மேட்டர்னு எனக்கு உடனே தெரிஞ்சாகனும்.. ப்ளீஸ்த்தான்..!!!"

மனைவியின் கெஞ்சலில் இருந்து தப்பமுடியாமல்.. அவ்வளவாக விருப்பம் இல்லாமலேயே, அந்த அசௌகரியமான நேரத்தில் தனது முதலாளியை கைபேசியில் அழைத்தான் சிபி..!! விஷயத்தை சுருக்கமாக சொல்லி அவரது உதவியை கேட்டான்.. அவரும் உடனடியாய் செய்வதாக உறுதியளித்தார்..!!

இரவு உணவு அருந்தி முடித்து இருவரும் படுக்கையில் வீழ்ந்த சமயத்தில்.. சிபியின் செல்ஃபோன் அதிர்வுற்று 'க்க்க்ர்ர்ர்ர்ர்ர்... க்க்க்ர்ர்ர்ர்ர்ர்...' என்று ஓசையெழுப்பியது..!! அறைக்குள் சிக்னல் கிடைக்காமல் செல்ஃபோனை எடுத்துக்கொண்டு வெளியே ஓடினான் சிபி.. ஐந்து நிமிடங்கள் கழித்தே அறைக்கு மீண்டும் திரும்பினான்..!! அவனுக்காக காத்திருந்த ஆதிரா இப்போது ஆர்வமாக கேட்டாள்..!!

"யாருத்தான் ஃபோன்ல..??"

"நாவரசு ஸார்தான்..!!"

"ஓ..!! என்ன சொன்னாரு..??"

"நம்ம விஷயமா போலீஸ்ட்ட ஹெல்ப் கேட்ருக்காரு.. அவங்களும் இனிஷியலா சில இன்ஃபர்மேஷன்ஸ் குடுத்திருக்காங்க..!!"

"எ..என்ன அது..??"

"அந்த மொபைல் நம்பரோட லாஸ்ட் ஆக்டிவிட்டி அகழியைத்தான் பாயிண்ட் பண்ணுது ஆதிரா.. பட்.. ஒருவருஷத்துக்கு முன்னாடி..!! லாஸ்ட் ஒன் இயரா அந்த மொபைல் நம்பர் ஸ்விட்ச் ஆஃப் ஆகித்தான் இருக்குதாம்.. யாருமே யூஸ் பண்ணலைன்னு சொல்லிருக்காங்க..!!" சிபி சொல்ல, ஆதிரா திகைப்பாக புருவத்தை நெறித்தாள்.

"அ..அப்புறம்.. அப்புறம் எப்படி என் மொபைல்க்கு அந்த நம்பர்ல இருந்து கால் வருது..??"

"ம்ம்.. நாவரசு ஸார் இது பத்தி அவங்கட்ட கேட்ருக்காரு.. அவங்களும் டீடெயிலா ட்ரேஸ் பண்ணனும்னு சொல்லி, இன்னும் ரெண்டு நாள் டைம் கேட்ருக்காங்க..!!"

"ஓ..!!"

"ஸோ.. ரெண்டு நாள் வெயிட் பண்ணலாம் ஆதிரா.. என்ன சொல்றாங்கன்னு பாக்கலாம்..!! இப்போதைக்கு இதை ரொம்ப சீரியஸா எடுத்துக்க வேணாம்.. சரியா..??" சிபி அவ்வாறு அமர்த்தலாக சொல்ல,

"ம்ம்.. சரித்தான்..!!" ஆதிரா திருப்தியில்லாமலே தலையசைத்தாள்.

அன்றிரவு கணவனுடன் உறவில் ஈடுபட்ட போதிலும்.. ஆதிராவால் கவனத்துடன் ஈடுபட முடியவில்லை..!! உறவு தந்த களைப்பு உடலில் நிறைந்திருந்தபோதிலும்.. உறக்கம் வராமல் நீண்ட நேரம் நெளிந்துகொண்டு கிடந்தாள்..!! ஏதேதோ குழப்ப நினைவுகள்.. என்னென்னவோ சீரற்ற சிந்தனைகள்.. அவஸ்தையாக அப்படியும் இப்படியும் புரண்டுபுரண்டு படுத்தாள்..!! ஒருமணிக்கு அப்புறம் ஒருவழியாக கண்கள் அயர்ந்தபோதுதான்.. அவளுக்கு அந்த கனவு வந்தது.. நிஜத்தில் நடப்பதுபோல் அவள் மனக்கண்ணில் அந்தக்காட்சி..!!

அடர்ந்து இருண்ட காடு அது.. அந்தி சாய்கிற சமயம் அது..!! சுற்றுச்சூழலில் எக்கச்சக்கமாய் மாலைநேரத்து பனிப்பொழிவு.. காற்றில் மிதக்கிற பனித்துகள்கள் கூட கண்களுக்கு தெளிவாக புலப்பட்டன..!!

அகன்ற அடிப்புறம் கொண்ட மரமொன்றில்.. எட்டு வயது ஆதிரா நெற்றியை சாய்த்திருந்தாள்..!! அவளது கண்கள் ஒரு சிவப்புநிற துணியால் கட்டப்பட்டிருந்தன.. அவளுடைய உதடுகள் அந்தப்பாடலை உச்சரித்தன.. அவள் உச்சரித்த அந்த வார்த்தைகள் அவளுக்கே தெளிவில்லாமல்தான் காதில்வந்து விழுந்தன..!!

"கண்ணாமூச்சி ரே ரே..
கண்டுபுடி ரே ரே..!!!"


"ஹாஹாஹாஹாஹாஹா..!!!!!"

ஆறு வயது தாமிரா பச்சரிசிப்பற்கள் பளபளக்க சிரித்தவாறே.. அக்காவின் முதுகை தொட்டுவிட்டு ஓட்டமெடுத்தாள்..!! தரையில் முளைத்திருந்த புல்வெளியில்.. தனது தளிர்ப்பாதங்களை பதித்து பதித்து.. ஸ்லோமோஷனில் தூரமாக ஓடிக்கொண்டே இருந்தாள்..!! மரத்தின் பக்கமாக திரும்பி நின்றிருந்த ஆதிராவோ.. தொலைதூரம் தங்கை செல்வதை அறியாமல்.. தொடர்ந்து பாடிக் கொண்டே இருந்தாள்..!!

"கண்ணாமூச்சி ரே ரே..
கண்டுபுடி ரே ரே..!!
ஊளமுட்டையெல்லாம் நீ தின்னுட்டு..
நல்ல முட்டையெல்லாம் கொண்டு வா..!!"


தலைதிருப்பிய ஆதிரா இப்போது தங்கையை தேட ஆரம்பித்தாள்..!! கண்கள் துணியால் கட்டப்பட்டிருக்க.. காற்றில் பறக்கிற பனித்துகள்களுக்குள்.. கைவிரல்களை அசைத்து அசைத்து தேடினாள்..!! விரித்துவைத்த கைகளுடன்.. அங்குமிங்கும் நகர்ந்து தங்கையை தேடியவாறே.. அந்தப்பாடலை விடாமல் மழலைக்குரலில் பாடினாள்..!!

"கண்ணாமூச்சி ரே ரே..
கண்டுபுடி ரே ரே..!!!"


நீண்ட நேரமாக தாமிரா தட்டுப்படவில்லை.. அலைந்து அலைந்து ஆதிராவின் கைவிரல்கள் அயர்ச்சி கண்டதுதான் மிச்சம்..!! நேரம் ஆக ஆக.. அவளது நெஞ்சுக்குழிக்குள் பயம் கொப்பளிக்க ஆரம்பித்தது.. தங்கை என்ன ஆனாளோ என்கிற பயம்..!!
கண்களை கட்டியிருந்த துணியை.. படக்கென அவிழ்த்து கையிலெடுத்தாள் ஆதிரா..!! அத்துவான காட்டுக்குள்.. ஒத்தையாய் நின்று.. சத்தம்போட்டு கத்தினாள்..!!

"தாமிராஆஆஆஆ..!!!!!"

தங்கை சென்றிருக்க வாய்ப்பிருக்கிற திசையென.. உத்தேசமாய் ஒருதிசையை முடிவு செய்துகொண்டு.. அந்தத்திசையிலேயே தொண்டைகிழிய அலறிக்கொண்டு ஓடினாள்..!!

"தாமிராஆஆ.. தாமிராஆஆ..!!"

ஆதிராவின் கையிலிருந்த சிவப்புத்துணி இப்போது காற்றில் படபடத்தது.. கொஞ்சம் கொஞ்சமாய் அந்தத்துணியின் அகலமும், நீளமும் பெரிதாகி.. குறிஞ்சியின் அங்கியாக பிரம்மாண்ட உருவெடுத்தது.. காற்றில் சுழன்றடித்து ஆதிராவை அப்படியே சுருட்டிக்கொள்ள முயன்றது..!!

"ஆஆஆஆ..!!"

பதறியடித்து அலறிய ஆதிரா.. உடலை முறுக்கி அந்தத்துணியை உதறினாள்.. தரையில் விழுந்து கடகடவென உருண்டாள்.. 'தஸ்புஸ்' என் மூச்சிரைத்தாள்..!! அதே நேரம்..

"கண்ணாமூச்சி ரே ரே..
கண்டுபுடி ரே ரே..
ஹாஹாஹாஹாஹாஹா..!!!!!"


காட்டு மரங்களுக்கு இடையே தாமிராவின் குரல் சிரிப்புடன் எதிரொலித்தது..!! தரையில் இருந்து எழுந்தாள் ஆதிரா.. தலையைத் திருப்பி, அந்த அங்கியை மிரட்சியாக பார்த்துக்கொண்டே.. தங்கையின் குரல் வந்த திசையிலே ஓடினாள்..!!

அடர்ந்த வனத்துக்குள் ஓடிக்களைத்த ஆதிராவுக்கு.. இப்போது அந்த சிங்கமுக சிலை காட்சியளித்தது.. அதன் பக்கவாட்டிலேயே இருண்டுபோன அந்த குகை..!! அந்த குகைக்குள் இருந்துதான் தாமிராவின் குழந்தைக்குரல் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது..!!

"கண்ணாமூச்சி ரே ரே..
கண்டுபுடி ரே ரே..!!!"


சிறுமி ஆதிரா இப்போது சற்றே நிதானித்தாள்.. அவளது மார்பு மட்டும் 'படக், படக்' என அடித்துக்கொண்டுதான் கிடந்தது..!! அதீத பயம் அப்பிய விழிகளுடனே.. அந்த குகையை நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்தாள்..!!

"தாமிராஆஆ.. தாமிராஆஆ..!!"

சன்னமான குரலில் தங்கையை அழைத்துக் கொண்டே நகர்ந்தாள்.. குகை வாசலில் வந்து கைகள் விரித்து நின்றாள்..!! குகைக்குள் ஒரே கும்மிருட்டு.. உள்ளிருக்கும் எதுவுமே கண்ணிரண்டுக்கும் புலப்படவில்லை..!! இருட்டுக்குள் இருந்து அந்தப்பாடல் மட்டும் கிசுகிசுப்பாக ஒலித்தது..!!


"கண்ணாமூச்சி ரே ரே..
கண்டுபுடி ரே ரே..!!!"


குட்டி ஆதிரா இப்போது அந்தக்குகைக்குள் நுழைந்தாள்.. ஒவ்வொரு அடியாக நகர்ந்து இருளுக்குள் முன்னேறினாள்..!! அவளது நெஞ்சுக்குழி பயத்தில் பதறியடித்துக் கொண்டிருந்தாலும்.. தங்கையை எப்படியாவது மீட்டுவிடவேண்டும் என்று அவளுக்குள் ஒரு தீவிரம்..!!

"நீ என்னை கண்டுபிடிக்கலைன்னா.. அப்புறம் நான் தொலைஞ்சு போயிடுவேனே..??" - திடீரென காதுக்குள் ஒலித்த தாமிராவின் குரல்.

இருட்டுக்குள் கைகளை அலையவிட்டவாறே.. அடிமேல் அடிஎடுத்து வைத்து மெல்ல மெல்ல உள்நடந்தாள்.. அவ்வப்போது ரகசிய குரலில் தங்கையை அழைத்தாள்..!!

"தாமிராஆஆ.. தாமிராஆஆ..!!"

குகைக்குள் இப்போது திடீரென ஒரு வெளிச்சக்கீற்று.. சுற்றிலும் அடர்இருள் ஆக்ரமித்திருக்க ஓரிடத்தில் மட்டும் சரக்கென ஒரு வெளிச்சம்.. அவ்விடத்தில் யாரோ ஒரு பெண்ணின் முகம்.. யாரென்று இங்கிருந்து தெளிவாக தெரியவில்லை..!! ஆதிரா அந்தப்பெண்ணை நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்தாள்..!!

"தாமிராஆஆ..!!"

ஆதிரா அருகில் நெருங்க நெருங்க.. அந்தப்பெண்ணின் முகம் கொஞ்சம் கொஞ்சமாய் தெளிவானது..!! தாமிராதான் அது..!!! குட்டிப்பெண்ணாய் அக்காவின் முதுகுதொட்டு காட்டுக்குள் ஓடியவள்.. இப்போது கன்னிப்பெண்ணாய் இவள் கண்களுக்கு காட்சியளித்தாள்..!! தங்கையைப் பார்த்த மகிழ்ச்சியில்.. 'தாமிரா' என்று கத்திக்கொண்டே.. எட்டுவயது ஆதிரா உற்சாகமாக அவளை நோக்கி ஓடினாள்..!! ஆனால்.. தாமிராவோ எந்தவித சலனமும் இல்லாமல் மிரட்சியாக இவளையே பார்த்தாள்.. இமைகளை அகலமாக திறந்து வைத்திருந்தவள்..

"அக்காஆஆ..!!" என்று ஈனஸ்வரத்தில் முனுமுனுத்தாள்..!!

ஆதிரா எதுவும் புரியாமல் தங்கையையே பார்த்துக் கொண்டிருக்க.. இப்போது தாமிராவின் முதுகுப்புறம் இருந்து அந்த உருவம் வெளிப்பட்டது..!! அடையாளம் காணமுடியாத மாதிரி.. தெளிவில்லாத மசமசப்பான உருவம்..!! அந்த உருவத்தை பார்த்ததும் ஆதிராவின் இருதயத்தில் பக்கென்று ஒரு பயம்.. கத்தவேண்டும் போலிருந்தது.. கத்தவும் செய்தாள்.. சத்தம்தான் வெளியே வரவில்லை..!!

தாமிரா மட்டும் தொடர்ந்து பரிதாபமாக அக்காவை அழைத்துக் கொண்டே இருந்தாள்..!!

"அக்காஆஆ..!! அக்காஆஆ..!!"

ஆதிரா இப்போது ஒருகையை உயர்த்தி.. நடுங்குகிற விரல்களை விரித்து.. மெல்ல மெல்ல அசைத்து.. தங்கையை அணைத்திருந்த அந்த உருவத்தை தொட முயன்றாள்..!! அவளுடைய விரல்களுக்குள் எதுவும் சிக்கவில்லை..!!

"அக்காஆஆ..!!"

ஆதிரா இப்போது இமைகளை விரித்து விரித்து.. விழிகளை கசக்கி கசக்கி.. மிகவும் கஷ்டப்பட்டு அந்த உருவத்தின் முகம்காண முயன்றாள்..!! எவ்வளவு முயன்றும் அந்தமுகத்தை இவளால் தெளிவாக பார்க்க முடியவில்லை.. இறுதிவரை மசமசப்பாகவே இருந்தது..!!

அந்த உருவத்தின் முகத்தை பார்த்துவிடுகிற முயற்சியில்.. தலையை இப்படியும் அப்படியுமாய் அவஸ்தையாக அசைத்த ஆதிரா.. விருட்டென படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தாள்..!!

கனவு கலைந்து போயிருந்தது.. அவளது இதயம் மட்டும் இன்னும் பதறியடித்துக் கொண்டிருந்தது.. கண்களில் இன்னும் அந்த பயம் நிரம்பி வழிந்தது.. மார்புப்பந்துகள் குபுக் குபுக்கென மேலும் கீழும் ஏறியிறங்கின.. 'புஸ்ஸ்..புஸ்ஸ்' என மூச்சிரைப்பு..!! கண்டது கனவுதான் என்று உணர்ந்தபிறகு.. அந்த மூச்சிரைப்பு மெல்ல மெல்ல நிம்மதிப் பெருமூச்சானது..!! அன்று பார்த்த அந்த சிங்கமலை குகை.. அந்த 'கண்ணாமூச்சி ரே ரே' என்ற வார்த்தைகள்.. குறிஞ்சி பற்றிய குழப்பமான தகவல்கள்.. அவள் அணிந்து வருவதாக சொல்லப்படுகிற அங்கி.. இவையெல்லாம் கலந்துகட்டித்தான் அந்த கனவை உருவாக்கியிருக்கின்றன என்று ஆதிராவுக்கு தோன்றியது..!!

தண்ணீர் ஜாடியை எட்டி எடுத்தாள்.. 'கடக் கடக்'கென தொண்டைக்குள் நீரை சரித்துக் கொண்டாள்..!! மீண்டும் தொப்பென படுக்கையில் விழுந்தாள்.. அருகில் கிடந்த கணவனின் மீது காலை தூக்கிப் போட்டு, அவனது மார்போடு அண்டிக்கொண்டாள்.. ஒரு குழந்தையைப்போல அவனை நெருக்கியடித்து படுத்துக் கொண்டாள்..!! இவளது அதீத இறுக்கமான அணைப்பு.. சிபியின் உறக்கத்தை சற்றே கலைத்தது..!! இமைகளை மெல்ல பிரித்தவன்..

"எ..என்னாச்சு ஆதிரா..??" என்று கேட்டான்.

"ஒ..ஒன்னுல்லத்தான்.. ஒரு கெட்ட கனவு..!!" ஆதிரா தடுமாற்றமாக சொன்னாள்.

"என்ன கனவு..??"

தனக்கு வந்த கனவை, ஆதிரா கணவனுக்கு சுருக்கமாக சொன்னாள்..!! குறிஞ்சி, தாமிரா பற்றிய கனவு என்று தெரிந்ததும்.. சிபி மனதுக்குள் சற்று எரிச்சலானான்..!! ஆனால்.. அதை வெளியே காட்டிக்கொள்ளாமல்.. மனைவியை ஆறுதல் படுத்தவே முயன்றான்..!!

"ஏன் ஆதிரா இப்படி பண்ற..?? கண்டதையும் நெனச்சுக்கிட்டு..?? இப்பப்பாரு.. நிம்மதியா தூங்கக்கூட கஷ்டப்படுற..??"

"நான் என்னத்தான் பண்ணுவேன்..?? எனக்கு அதே நெனைப்பா இருக்கு..!!" ஆதிரா அவ்வாறு பரிதாபமாக சொல்லவும், சிபி இப்போது அவளை பாவமாக பார்த்தான்.

"சரி விடு.. தூங்கலாம் வா..!! காலைல திருவிழா.. சீக்கிரம் வேற எந்திரிக்கனும்..!!"

"ம்ம்.. ஆமாம்..!!"

"வா.. நெஞ்சுல சாஞ்சுக்கோ.. தட்டிக் குடுக்குறேன்.. நிம்மதியா தூங்கு..!!"

"ம்ம்..!!"

சிபி படுக்கையில் சரிந்துகொள்ள.. ஆதிரா அவனது மார்பில் படர்ந்துகொண்டாள்..!! மனைவியை இறுக்கமாக அணைத்துக் கொண்ட சிபி.. அவளது வெற்று முதுகை பிசைந்து, இதமாக தடவிக் கொடுத்தான்.. அவளுடைய நெற்றியில் ஈரமாக 'இச்' பதித்தான்..!!

"மனசைப் போட்டு கொழப்பிக்காத ஆதிரா..!! இன்னும் ரெண்டு நாள்.. எதைப்பத்தியும் யோசிக்காம, ஜஸ்ட் திருவிழாவை மட்டும் செலிப்ரெட் பண்ணு..!! ரெண்டு நாள் முடிஞ்சதும்.. இந்த ஊரை காலிபண்ற வழியை பார்ப்போம்..!! புரியுதா..??"

"பு..புரியுதுத்தான்..!!"

"ம்ம்.. இப்போ சமத்தா தூங்கு..!! செல்லம்ல.. குட்டிப்புள்ளல..??"

ஒரு குழந்தையை உறங்க வைப்பதுபோல, கணவன் தனது முதுகை சுகமாக தட்டிக்கொடுக்க.. மூளையை ஆக்கிரமித்திருந்த குழப்ப நினைவுகளில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு.. அவனது மார்பிலேயே நிம்மதியாக உறங்கிப் போனாள் ஆதிரா..!!

அவள் உறங்குகிறவரை தானும் இமைமூடி படுத்திருந்த சிபி.. அவள் உறங்கிவிட்டாள் என்று உறுதியானபிறகு.. மெல்ல மெல்ல விழிகளை திறந்தான்..!! மனைவியின் உறக்கம் கலைக்காமல் அவளை மெத்தைக்கு மாற்றிவிட்டு.. இவன் படுக்கையில் இருந்து எழுந்துகொண்டான்.. அருகில் கிடந்த நாற்காலியில் மெல்ல அமர்ந்துகொண்டான்..!! இரவுவிளக்கின் வெளிச்சத்தில் தெரிந்த மனைவியின் முகத்தையே.. சலனமில்லாமல், கூர்மையாக, ஒரு வெறித்த பார்வை பார்த்தான்..!!

அத்தியாயம் 18

அடுத்தநாள் காலை ஆரவாரமாக விடிந்தது.. அகழி கிராமம் விழாக்கோலம் பூண்டிருந்தது..!! கோயிலை சுற்றிலும் மாக்கோலமும், மாவிலை தோரணங்களும்.. கோபுரத்தில் கட்டப்பட்டிருந்த ஒலிப்பெருக்கியில் கோவிந்தராஜனின் கணீர் குரல்..!!

"சின்னஞ்சிறு பெண் போலே..
சிற்றாடை இடை உடுத்தி..
சிவகங்கை குளத்தருகே..
ஸ்ரீதுர்க்கை சிரித்திருப்பாள்..!!"

வெள்ளையும் காவியுமாய் புதுவர்ணப் பூச்சோடு கோயில் சுவர்கள் பளபளத்தன.. பக்கத்திற்கு ஒன்றாய் பச்சை வாழையுடன் கோயிலின் வாயில்..!! வாயிலில் இருந்து நீண்ட சாலையில் புதிது புதிதாய் நிறைய கடைகள் முளைத்திருந்தன.. பலூன் கடை, பாப்கார்ன் கடை, வளையல் கடை, வாழைப்பழ கடை.. எல்லா கடைகளின் முன்பாகவும் மக்கள் கூட்டம்..!! குழந்தைகளை ஏற்றிக்கொண்டு குடை ராட்டினம் ஒன்று சுழன்று கொண்டிருந்தது.. கன்னியரை சைட்அடிக்கிற காளையர் கூட்டம் ஒன்றும், ராட்டினத்துக்கு போட்டியாய் கோயிலை சுற்றிக் கொண்டிருந்தது..!!

ஆண்டு முழுதையும் ஒருவித அழுத்தத்திலேயே கழிக்கிற அகழி ஜனங்கள்.. இறுக்கம் தளர்ந்து சற்று சிரிக்க நினைக்கிற இரண்டு தினங்கள் இவை..!! வஜ்ரேஸ்வரி அம்மனுக்கு பங்குனிப் பொங்கல்.. வருடத்திற்கு ஒருமுறை நடக்கின்ற உற்சவம்.. வேறூருக்கு பிழைக்க சென்றிருப்பவர்கள்கூட சொந்தஊருக்கு வந்தடைகிற சமயம்..!! போன வாரமே காப்பு கட்டியாயிற்று.. இந்த இரண்டு தினங்கள் இன்னும் விசேஷமானவை..!!

ஊர்மக்களில் கணிசமான விழுக்காட்டினர் புத்தாடை அணிந்து வலம்வந்தனர்.. எல்லோர் முகத்திலும் ஒரு இயல்பான மலர்ச்சியை காணமுடிந்தது..!! பெரியவர்களை காட்டிலும் சிறுசுகளிடம் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.. கோயிலுக்கு முன்பு கொட்டிவைத்திருந்த மணலில், கும்மாளமாக குதித்து விளையாடின குழந்தைகள்..!!

அந்த குழந்தைகளிடம் இருந்த உற்சாகத்தின் ஓரளவு.. தனது வீட்டில் குளித்துக்கொண்டிருந்த ஆதிராவிடமும் காணப்பட்டது என்றுதான் சொல்லவேண்டும்..!! நேற்றுமுழுதும் மனதை சூழ்ந்திருந்த குழப்பமேகம், இன்று சற்றே கலைந்து விலகியிருந்தது.. ஷவரில் கொட்டிய வெதுவெதுப்பான நீரை அண்ணாந்து வாங்கிக்கொண்ட அவளது முகத்திலும் ஒருவித தெளிவை உணரமுடிந்தது..!! ஊரில் திருவிழா என்ற உள்ளுணர்வுதான் அவளது அந்த உற்சாகத்தின் ஊற்றுக்கண்..!! சிறுவயது முதலான திருவிழா தொடர்பான நினைவுகள் எல்லாம்.. அவளையும் அறியாமல் அவளது மனதுக்குள் முண்டியடித்து கிளம்பின..!!

குளித்துமுடித்த ஆதிரா, உள்பாவாடையை மார்புகளுக்கு மேலாக உயர்த்திக்கட்டி முடிச்சிட்டாள்.. கூந்தலை ஒரு டவல் சுருட்டியிருக்க, இன்னொரு டவலால் தோள்களை மறைத்துக் கொண்டாள்..!! கசக்கிப் பிழிந்த உள்ளாடைகளை கையில் எடுத்துக்கொண்டு பாத்ரூம் கதவை திறந்தாள்.. திறந்ததுமே பக்கென ஒரு திகைப்புக்கு உள்ளானாள்..!! வெளியே.. வாசலை அடைத்துக்கொண்டு சிபி நின்றிருந்தான்.. அவனது உதட்டில் ஒரு குறும்புப் புன்னகை..!! அவனை எதிர்பார்த்திராத ஆதிரா அவ்வாறு திகைப்பாக பார்த்துக்கொண்டிருக்கும்போதே.. சிபி படக்கென கதவைத்தள்ளி உள்ளே நுழைந்தான்.. மனைவியின் புஜத்தினை பற்றியிழுத்து முரட்டுத்தனமாக அவளை அணைத்துக் கொண்டான்..!!

"ஐயோ.. என்னத்தான் இது..??" ஆதிரா சிணுங்கியவாறே நெளிந்தாள். அவன் அணைப்பில் இருந்து விடுபட முயன்றாள்.

"தூங்குறப்போலாம் அப்படியே வந்து ஒண்டிக்கிற.. குளிக்கிறப்போ மட்டும் தனியா விட்டுட்டு வந்துடுற..??" பிடித்தபிடியை விடாமல் சிபி குறும்பாக சொன்னான்.

"ஓ.. வேற என்ன பண்ணனுமாம்..??"

"ம்ம்..?? என்னை கூப்பிட்ருக்கலாம்ல..?? குட்டிப்புள்ளயை குளிப்பாட்டி விட்ருப்பேன்ல..??"

"ம்க்கும்.. ஆசைதான்..!! ஏன்.. நைட்டு போட்ட ஆட்டம் பத்தலையாக்கும்..??"

"யானைப்பசிக்கு சோளப்பொரியை விட்டெறிஞ்சுட்டு.. பத்தலையான்னு வேற கேக்குறியா..?? இங்க கொழுப்பு இருந்தா இப்படிலாம் பேச சொல்லுமோ..??" கேட்டுக்கொண்டே சிபி ஆதிராவின் பின்புறத்தை அழுத்தி ஒரு பிடி பிடிக்க, அவள் விழுக்கென்று கிடந்து துள்ளினாள்.

"ஐயோ.. விடுங்கத்தான்.. காலங்காத்தாலேயே..??"

"ஏன்.. காலங்காத்தால ரொமான்ஸ் பண்ணக்கூடாதா..?? ஏதாவது சட்டம் போட்ருக்காங்களா..??"

"ம்ம்..?? நைட்தான எல்லாம் ஆச்சு.. அப்புறம் என்ன.. காலைலேயே..??"

"நைட் நல்லா சாப்பிட்டுட்டுத்தான் தூங்குறோம்.. காலைல எழுந்ததும் பசிக்கிறது இல்லையா..?? அந்த மாதிரித்தான்..!!"

"ஓஹோ.. லாஜிக்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஆனா.. இதுக்குலாம் இப்போ டைம் இல்ல.. கோயிலுக்கு கெளம்பனும்..!!"

"கெளம்பலாம் கெளம்பலாம்..!! அதுக்கு முன்னாடி.. வீட்லயே ஒரு ஸ்பெஷல் தரிசனம் பார்த்து, அர்ச்சனைலாம் முடிச்சுட்டு அப்புறமா கெளம்பலாம்..!!" சிபி போதையாக சொல்லிக்கொண்டே, ஆதிராவின் உள்பாவாடையை உயர்த்த முயல,

"ச்சீய்ய்ய்ய்..!!!" அவனுடைய கையை பட்டென தட்டிவிட்டாள் ஆதிரா.

"விடுங்கத்தான்.. நான் போகணும்..!!" என்று கெஞ்சினாள்.

"ம்ஹூம்..!! அதுக்குலாம் நீ சரிப்பட்டு வருவியான்னு பாக்காம.. இன்னைக்கு உன்னை வெளில அனுப்புறதா இல்ல..!!"

"எதுக்குலாம் சரிப்பட்டு வருவனா..??"

சிபி இப்போது ஆதிராவின் காதருகே ஏதோ கிசுகிசுக்க, அவள் அப்படியே முகத்தை சுளித்தாள்.

"ஐய்ய்ய்ய்யோ.. கருமம்..!!!!!"

"வா.. ட்ரை பண்ணிப் பாக்கலாம்..!!"

"இப்போ விடப் போறீங்களா இல்லையா..??" ஆதிரா சற்று கடுமையாக கேட்டாள்.

"சான்ஸே இல்ல..!!" சிபி பிடிவாதமாக இருந்தான்.

கணவனின் செய்கையில் கடுப்பாகிப்போன ஆதிரா.. இப்போது தனது கைகளில் ஒன்றை நீட்டி.. சுவற்றோடு பொருந்தியிருந்த அந்த குமிழை பிடித்து சரக்கென திருகினாள்.. உடனே ஷவரில் இருந்து சர்ர்ர்ரென நீர் பீய்ச்சியடித்தது..!! ஆதிராவை கதகதப்பாக அணைத்துக்கொண்டிருந்த சிபியின் முதுகில்.. சடசடசடவென குளிர்ந்தநீர் கொட்டவும்.. 'ஹேய்ய்ய்ய்..!!' என்று கத்தியவாறு உடலை முறுக்கி உதறினான்.. அவனது உடும்புப்பிடியை சற்றே தளர்த்தினான்..!! ஆதிராவுக்கு அதுவே போதுமானதாக இருந்தது.. கணவனின் அணைப்பில் இருந்து அவசரமாய் நழுவி, கதவு திறந்து வெளியே ஓடினாள்..!! வெளியில் சென்று திரும்பி பார்த்து..

"யார்கிட்ட..??" என்று நாக்கை நீட்டி பழிப்பு காட்டினாள். தொடர்ந்து..

"ஹாஹாஹாஹாஹாஹா..!!!!" என்று எளிறுகள் தெரிய சிரித்தாள்.

முகத்தில் வழிந்த நீரை இருகையாலும் துடைத்தெடுத்த சிபி.. கனைக்கிற மனைவியையே கடுப்புடன் பார்த்தான்..!! அசையாமல் நின்று, கொட்டுகிற ஷவரில் நனைந்தவாறே.. ஆதிராவை போலியாக எச்சரித்தான்..!!

"இளிக்கவா செய்ற..?? இன்னைக்கு நைட்டு எல்லாத்துக்கும் சேர்த்து இருக்குது..!!"

"ஹாஹா.. பாக்கலாம் பாக்கலாம்..!!"

சிரிப்புடனே சவால் விட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் ஆதிரா.. மாடிப்படியேறி தங்களது அறைக்கு விரைந்தாள்..!! கணவனின் குறும்பை நினைத்து.. அவளது மனதுக்குள் ஒரு பூரிப்பு.. உதடுகளில் ஒரு வெட்கம் கலந்த புன்னகை..!!

அறையை அடைந்ததும் கதவை சாத்தி தாழிட்டாள்.. உடுத்தியிருந்ததை களைந்துவிட்டு வேறு உடை அணிந்துகொள்ள ஆரம்பித்தாள்..!! சந்தன நிறத்து ப்ராவால் தனது மார்பழகை மறைத்து மூடியவள்.. இரண்டு கைகளையும் பின்பக்கம் செலுத்தி ஹூக் மாட்ட முயன்றாள்..!! ப்ரா மிகவும் இறுக்கமாக இருந்தது.. கொக்கியை கோர்க்க கஷ்டப்பட வேண்டியிருந்தது.. 'அடுத்த சைஸ் மாத்தணும்' என்று வாய்க்குள்ளே முனுமுனுத்தாள்..!! உதட்டை அழுத்தி கடித்துக்கொண்டு.. உடம்பை சற்றே முன்னுக்கு தள்ளி.. முகத்தை நிமிர்த்தி மேலே பார்த்தவாறு.. ஹூக்கை மாட்டிக்கொள்ள முயன்றவள்.. ஒருகணம் அப்படியே உறைந்துபோய் நின்றாள்..!!

எதேச்சையாகத்தான் அவளுடைய பார்வையில் அது பட்டது.. அலமாரியில் நீட்டிக்கொண்டிருந்த அந்த புத்தகம்.. அன்று தாமிராவின் அறையில் இருந்து எடுத்துவந்திருந்த புத்தகம்.. கருப்பு அட்டையுடனும், 'கண்ணாமூச்சி ரே ரே' என்கிற தலைப்புடன்..!! அன்று அந்த புத்தகத்தின்மீது சிந்திய சிவப்பு மை.. அதன் அட்டையில் விரவி, இப்போது காய்ந்துபோய் காட்சியளித்தது..!! அன்று ஏனோ ஆதிராவின் கவனத்தை அது கவரவில்லை.. இன்று கவர்ந்தது.. அந்த சிவப்புமையின் பரவல், சீரான ஒரு ஓவியமாக அவளுக்கு தோன்றியது..!!

ஹூக்கை மாட்ட மறந்துபோய், கையை நீட்டி அந்த புத்தகத்தை எடுத்தாள்.. அட்டையின் மீது கூர்மையாக பார்வையை வீசினாள்..!! ஏதோ ஒரு மலருடைய இதழ்களைப்போல.. மை அந்த அட்டையில் படர்ந்திருந்தது.. சற்றே வித்தியாசமான இதழமைப்பு கொண்ட ஒரு மலர் எனலாம்..!! அதைப் பார்த்ததுமே ஆதிராவின் மூளைக்குள் சுருக்கென்று ஒரு மின்னல் வெட்டு..!!

'இந்த மாதிரியான இதழமைப்பு கொண்ட மலரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே..?? எங்கே..??'

என்கிற ரீதியில் மனதுக்குள்ளேயே பேசியவள்.. தனது நெற்றியைப் பற்றி பிசைந்து கொண்டாள்.. நினைவுக்கு கொண்டுவர முயன்றாள்..!! 'எங்கே.. எங்கே.. எங்கே..' என்று திரும்ப திரும்ப கேள்விகேட்டு.. தனது மூளையை தட்டியெழுப்பி சுறுசுறுப்பாக்கி.. மறந்துபோனதை மனதுக்குள் எடுத்துவர முயன்றாள்..!!

"டக்.. டக்.. டக்.. டக்..!!" - அறைக்கதவு அவ்வாறு தட்டப்பட்டதும் ஆதிராவுக்கு கவனம் கலைந்து போயிற்று.

"யாரு..??" என சற்று எரிச்சலாகவே கேட்டாள்.

"நாந்தான்க்கா..!!" - அறைக்கு வெளியிருந்து தென்றலின் குரல்.

"ம்ம்.. சொல்லு..!!"

"ரூம் கிளீன் பண்ணனும்க்கா..!!"

"ஓ.. ஒருநிமிஷம் இரு..!!"

"சரிக்கா..!!"

ஆதிரா அந்த புத்தகத்தை மீண்டும் அலமாரியிலேயே வைத்தாள்.. அவசர அவசரமாய் ஹூக் மாட்டிக் கொண்டாள்.. ஆரஞ்சு நிறத்திலான அந்த பட்டுப்புடவையும், அதற்கு பொருத்தமானதாய் ஒரு ரவிக்கையும் அணிந்துகொண்டாள்..!! அவளது கூந்தலை இன்னும் பூந்துவாலை சுருட்டியிருக்க.. அப்படியே நடந்து சென்று கதவை திறந்தாள்..!! கதவு திறந்து வெளியே பார்வையை வீசியவளின் முகத்தில்.. உடனே ஒருவித ஆச்சர்யம் கலந்த பூரிப்பு..!!

வெளியே தென்றல் நின்றிருந்தாள்.. என்றுமில்லாத ஒரு புதுவித அழகுடன் இன்று ஜொலிஜொலித்தாள்..!! இளமஞ்சள் நிறத்தில் புடவை.. நேர்த்தியாக பின்னப்பட்ட கூந்தல்.. பவுடர் போட்டு பளிச்சென்றிருந்த முகம்.. லிப்ஸ்டிக் தீட்டி பளபளத்த உதடுகள்.. கை, கழுத்து, காதில் எல்லாம் புதிதாய் அணிகலன்கள்..!! இப்போதுதான் மொட்டிலிருந்து அவிழ்ந்துகொண்ட மலர்போல.. புத்துணர்வோடும், புதுப்பொலிவோடும் தோற்றமளித்தாள்..!!

"வாவ்...!!!!!" வாய்விட்டே ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினாள் ஆதிரா.

"என்னக்கா..??" தென்றல் புரியாதவளாய் கேட்டாள்.

"சூப்ப்ப்ப்பரா இருக்குற தென்றல்..!!!"

"ஹையோ.. போங்கக்கா..!!" - தென்றலிடம் இப்போது ஒரு வெக்கம்.

"ஹேய் நெஜமாத்தான்.. அப்படியே ஜொலிக்கிற போ..!! ம்ம்ம்ம்ம்ம்... ஸேரி ரொம்ப அழகா இருக்கு..!! புதுசா..??"

"ஆமாம்க்கா..!! அண்ணன் இப்போ ஊர்ல இருந்து வர்றப்போ வாங்கிட்டு வந்தான்..!!"

"ஓ..!! நல்லாருக்கு.. உனக்கு ரொம்ப பொருத்தமா இருக்கு..!!"

"தேங்க்ஸ்க்கா..!!"

"ஹ்ம்ம்..!! கதிருக்கும் தங்கச்சி மேல ரொம்ப பாசம்தான் போல..??"

"ஹஹா.. ஆமாம்க்கா.. ஸேரி மட்டும் இல்ல.. இந்த ஜிமிக்கி, கொலுசு கூட அண்ணன் வாங்கிட்டு வந்ததுதான்..!!" தென்றல் காலை உயர்த்தி கொலுசை காட்டினாள்.

"ஹ்ம்ம்.. எல்லாமே நல்லாருக்குது தென்றல்..!!"

"ம்ம்ம்ம்ம்ம்...!! சரிக்கா.. நான் கோயிலுக்கு கெளம்பனும்.. வேலையை சீக்கிரம் முடிச்சுட்டு கெளம்புறேன்..!!"

பணிவுடன் சொன்ன தென்றல் புடவையை உயர்த்தி இடுப்பில் செருகிக் கொண்டாள்.. பக்கவாட்டில் இருந்த நீருள்ள பக்கெட்டை ஒரு கையில் தூக்கிக் கொண்டாள்.. இன்னொரு கையில் துடைப்பமும், அழுக்கு துணியும்.. ஆதிராவை கடந்து அறைக்குள் நுழைந்தாள்..!! இன்று அவளிடம் காணப்பட்ட அழகுத்தோற்றத்துக்கும், அவள் கைகளில் இருந்த அழுக்கு சமாச்சாரங்களுக்கும் சுத்தமாக ஒத்துப் போகவில்லை..!! ஆதிரா என்ன நினைத்தாளோ..

"தென்றல்..!!" என்று திடீரென அழைத்தாள்.

"என்னக்கா..??" உள்ளே சென்றிருந்த தென்றல் திரும்பி பார்த்தாள்.

"ரூம் அப்புறம் கிளீன் பண்ணிக்கலாம்.. நீ கோயிலுக்கு கெளம்பு..!!"

"பரவால்லக்கா.. கிளீன் பண்ணிட்டே.."

"சொல்றேன்ல.. இன்னும் ரெண்டு நாளைக்கு எந்த வேலையும் பாக்க வேணாம்..!! திருவிழாவை நல்லா என்ஜாய் பண்ணு.. போ..!!"

"இல்லக்கா.. சிபி அண்ணனுக்கு ரூம் க்ளீனா இருந்தாத்தான்.."

"ப்ச்.. அவர்ட்ட நான் சொல்லிக்கிறேன்.. நீ கெளம்பு..!!"

"ம்ம்.. சரிக்கா..!!"

ஆதிரா சொன்னதைக்கேட்டு மனதுக்குள் சந்தோஷப்பட்டாலும்.. அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமலே தென்றல் அங்கிருந்து கிளம்பினாள்..!! ஆதிராவை கடந்து செல்லும்போது மட்டும்.. 'தேங்க்ஸ்க்கா' என்று மெலிதாக முனுமுனுத்தாள்..!!

அவள் சென்ற அரைமணி நேரத்திற்கெல்லாம் ஆதிராவும் சிபியும் வீட்டிலிருந்து கிளம்பினார்கள்.. அதன்மேலும் ஒரு பத்து நிமிடங்களில், ஊரின் இன்னொரு மூலையில் இருக்கிற கோயிலை அடைந்தார்கள்..!!

அவர்கள் சென்ற நேரத்தில் அம்மனை நீராட்டுவதற்காக ஆற்றிற்கு எடுத்து சென்றிருந்தனர்.. அதனால் கோயிலில் மக்கள் நெருக்கடி சற்று குறைவாகவே இருந்தது..!! எனினும்.. கோயிலுக்கு முன்புறமாக கணிசமான அளவு பெண்கள் கூட்டத்தினை காணமுடிந்தது.. அம்மனுக்கு பொங்கல் வைக்கிற வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அகழி கிராமத்து பெண்கள்..!! அக்னிச்சட்டி தூக்குதல், ஆயிரங்கண்பானை எடுத்தல், கரும்புத் தொட்டில், தலைமுடி காணிக்கை போன்று நேர்த்திக்கடன் செலுத்துபவர்களின் கூட்டம் இன்னொரு பக்கம்..!!

ஆதிராவும் சிபியும் காரில் இருந்து இறங்கி கோயிலின் முகப்புக்கு நடந்தனர்..!! நடந்து செல்கிற வழியில்.. கொட்டி வைத்த மணலில்.. எதிரெதிர் அமர்ந்து விளையாடுகிற இரண்டு சிறுமிகளை ஆதிரா பார்க்க நேர்ந்தது.. உடனே பட்டென ஒரு பழைய நினைவில் மூழ்கிப்போனாள்..!! தானும், தாமிராவும் சிறுமிகளாக இருந்தபோது.. இதே இடத்தில் இருவரும் ஆடிய இதே விளையாட்டு..!!

ஆற்றுமணலை நீள்வாக்கில் குவித்து கரை அமைத்துக்கொண்டு.. ஆதிராவும், தாமிராவும் எதிரெதிரே அமர்ந்து கொள்வார்கள்.. தாமிராவின் கையில் ஒரு சிறிய துணித்திரி இருக்கும்..!!

"திரித்திரித்திரி பொம்முத்திரி..
திரிக்காலடி பொம்முத்திரி..
காசுகொண்டு பொம்முத்திரி..
கடையிலகொண்டு பொம்முத்திரி..!!"


என்று தாமிரா மழலைக்குரலில் பாடிக்கொண்டே.. வெண்முத்துப் பற்கள் தெரிய அழகாக சிரித்தவாறே.. கையிலிருக்கிற திரியை அந்த மணற்கரைக்குள் நுழைத்து.. நெட்டுவாக்கில் முன்னும் பின்னுமாக அலைந்து..

"நாலுகரண்டி நல்லெண்ணை..
நாப்பத்தொரு தீவட்டி..
கள்ளன் வாறான் கதவடை..
வெள்ளச்சி வாறாள் விளக்கேத்து..
வாறாரய்யா சுப்பையா..
வழிவிடம்மா மீனாட்சி..!!"

பாடல் முடிகிற சமயத்தில்.. மணற்கரையின் ஏதோ ஒரு இடத்தில் அந்தத்திரியை மறைத்து வைப்பாள்..!! கைகளை அகலமாக விரித்து, விரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக்கொள்ளும் ஆதிரா.. அந்த நீளமான மணற்கரையில் எவ்விடத்தில் திரி ஒளிந்திருக்கலாம் என்பதை உத்தேசமாக முடிவு செய்து.. அந்த இடத்தை விரித்த கைகளால் பொத்துவாள்..!!

"ஹாஹாஹாஹா..!! திரி அங்க இருக்குன்னு நெனச்சுட்டியா..?? அது.. இங்க இருக்கு..!! ஹாஹாஹாஹா..!!"

இவளைப்பார்த்து குட்டித்தாமிரா கைகொட்டி சிரித்தது.. இன்னுமே ஆதிராவுக்கு நன்றாக நினைவிருக்கிறது..!!

அது ஒருவகையான தேடுதல் விளையாட்டு..!! தங்கை ஒளித்துவைத்த துணித்திரியை தேடியவள்.. இப்போது தங்கையையே தேடுகிற மாதிரியான சூழ்நிலை.. விதியை நினைத்து நொந்துகொண்டாள் ஆதிரா..!!

ஆதிராவின் குடும்பத்தினருக்கு அகழியில் மிகுந்த மரியாதை உண்டு..!! அவளும், சிபியும் கோயிலை நோக்கி நடக்கும்போதே.. வழியில் எதிர்ப்பட்ட நிறையபேர் இவர்களை கையெடுத்து கும்பிட்டு வணங்கினர்.. இவர்களும் ஒரு புன்னகையுடனே எல்லோருக்கும் பதில் வணக்கம் வைத்தவாறு, கோயில் வாசலுக்கு நடந்தனர்..!! கோயில் வாசலை அடைந்ததும்.. பொங்கல் வைத்துக் கொண்டிருந்த பெண்கள் ஆதிராவை சூழ்ந்து கொண்டனர்.. ஆளாளுக்கு அவளிடம் மரியாதையாகவும், ப்ரியத்துடனும் பேசினர்..!!

"ஆதிராம்மா.. நல்லா இருக்கியாம்மா..?? அப்பா அம்மாலாம் வரலையா..??"

"எப்ப வந்த ஊர்ல இருந்து..?? எங்களைலாம் ஞாபகம் வச்சிருக்கியா..??"

"மைசூர் மகாராணிக்கு இந்த மலைக்கிராமம் மறந்து போச்சாக்கும்..?? அங்கேயே கெடந்தா எப்படி.. அடிக்கடி இங்கிட்டு வந்துட்டுப் போனாத்தான நல்லாருக்கும்..??"

"அடையாளம் தெரியுதா என்னய..?? சிட்டு இருக்காள்ல.. அவளுக்கு சின்னம்மா நானு..!!"

அன்புடன் அவர்கள் கேட்ட கேள்விக்கெல்லாம்.. அடக்கமாக பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் ஆதிரா..!! மனைவிக்கு கிடைக்கிற மரியாதையை.. ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் சிபி..!!

ஆதிரா அங்கேயே சிறிதுநேரம் செலவழித்தாள்.. அம்மனுக்கு பொங்கல் வைக்கிற அந்தப் பெண்களுடன் கலந்து கொண்டாள்..!! கருங்கல் அடுப்பில்.. வெண்கலப் பானையில்.. பச்சரிசிப் பொங்கல் பொங்க.. அதை குலவையிட்டு கிளறும் பெண்கள்..!! சென்ற வருடம், தானும் தனது தங்கையும் ஒன்றாக சேர்ந்து பொங்கல் வைத்தது.. ஆதிராவின் நினைவுக்கு வந்தது..!!

அவர்கள் சென்ற கொஞ்ச நேரத்திலேயே.. முகிலன் தனது குடும்பத்தாருடன் காரில் வந்து இறங்கினான்..!! அவனுடைய தலைமையில்தான் இந்த பொங்கல் திருவிழாவே நடைபெறுகிறது.. திருவிழாவுக்கான செலவில் பெரும்பங்கு அவனுடையது..!! இவர்களுக்கு கிடைத்ததை விட இரண்டு மடங்கு மரியாதையும், வரவேற்பும்.. முகிலனுக்கும், அவனது குடும்பத்தினருக்கும் கிடைத்தது..!! கோயில் தர்மகர்த்தாவும், இன்னபிற ஊர்த்தலைவர்களும்.. கார் நிறுத்தின இடத்திற்கே ஓடிச்சென்று அவர்களை வணங்கி வரவேற்றனர்..!!

அங்கையற்கண்ணியும், யாழினியும் ஆதிராவை அணுகி அன்புடன் பேசினர்.. நிலவன் ஒரு புன்னகையுடன் வணக்கம் சொன்னதோடு சரி.. முகிலன் மட்டும் இவளை முறைப்பாக பார்த்தவாறே சென்றான்.. ஆதிராவிடமும், சிபியிடமும் ஒருவார்த்தை கூட பேசவில்லை..!!

சிறிது நேரத்தில்.. தூரத்தில் அம்மன் ஊர்வலம் வருவது தெரிந்தது..!! ஆற்றில் நீராடியிருந்த அம்மன்.. அழகுற அலங்காரம் செய்துகொண்டு.. பல்லக்கு மீதேறி அமர்ந்து.. பவனி வந்து கொண்டிருந்தாள்.. கோயில் நோக்கி..!! நீண்ட அந்த சாலையில் நிதானமாக நகர்ந்து வந்த ஊர்வலத்தின் முன்பாக.. சில இளம்பெண்கள் நடனமாடி வந்தனர்..!! அகழி கிராமத்தின் வழக்கங்களில் ஒன்று அந்த நடனம்.. கும்மியாட்டத்தையும் ஒயிலாட்டத்தையும் கலந்த மாதிரியான ஒரு நடனம்..!!

"வாங்கம்மா.. நீங்களும் எங்ககூட வந்து ஆடுங்க..!! ம்ம்.. வாங்க..!!" ஆடிவந்த கன்னிப்பெண்களில் சிலர் ஆதிராவை வற்புறுத்தினர்.

"இ..இல்ல.. வேணாம்.. பரவால..!!" ஆதிரா லேசாக தயங்கினாள்.

"ப்ச்.. ஆடு.. போ..!!"

சிபியும் மற்றவர்களுடன் சேர்ந்து வற்புறுத்த, ஆதிரா தயக்கத்துடனே அவர்களுடன் சேர்ந்துகொண்டாள்..!! ஆரம்பத்தில் சற்று தடுமாறியவள்.. சீக்கிரமே.. இடுப்பையும், கைகளையும் அசைத்து நளினமாக நடனமாட ஆரம்பித்தாள்..!! அவளுக்கு மிகவும் பழக்கப்பட்ட நடனம்தான்.. அதனால் இயல்பாக அவர்களுடன் சேர்ந்து ஆடமுடிந்தது..!! ஆனால்.. அவளது காலில் ஏற்பட்டிருந்த காயத்தில்தான் அவ்வப்போது சுருக் சுருக்கென்று வலி..!! அந்த வலியை பொறுத்துக்கொண்டு.. வேதனையின் சாயலை கொஞ்சம் கூட முகத்தில் காட்டாமல்.. ஒரு பூரிப்புடனும் ஆர்வத்துடனுமே ஆடினாள் ஆதிரா..!!


கோயிலில் இப்போது கூட்டம் அதிகமாயிருந்தது.. மக்கள் நெருக்கியடித்து அம்மனின் அழகையும், ஆட்டத்தின் அழகையும் கண்டு ரசித்துக் கொண்டிருந்தனர்..!! ஆடிமுடித்த ஆதிரா கணவனை தேடினாள்.. அவன் சற்று தொலைவில் கும்பலுக்குள் நின்றிருந்தான்..!! கூட்டத்திற்குள் நுழைந்து கணவன் இருந்த திசை நோக்கி நகர்ந்தாள்.. அவ்வாறு நகர்ந்தவள் படாரென யார் மீதோ மோதிக்கொண்டாள்..!!

"ஸா..ஸாரி..!!"

என்றவாறு நிமிர்ந்தாள்.. முகிலன்..!! தான் இடித்துக்கொண்டது முகிலனை என்று அறிந்ததும்.. அவன் தன்னை முறைத்துப் பார்க்கிறான் என்பதை உணர்ந்ததும்..

"ஸா..ஸாரி.. ஸாரித்தான்..!!" என சற்றே தடுமாறினாள். முகிலனோ இறுக்கமான குரலில் பதிலுக்கு பேசினான்.

"ஹ்ம்ம்.. ஆட்டம்லாம் ரொம்ப பலமா இருக்கு..?? கொஞ்சம் கொறைச்சுக்கிட்டா நல்லா இருக்கும்..!!" என்று குதர்க்கமாக சொன்னான்.

"எ..என்ன சொல்றீங்க..??"

"ஹ்ஹ.. புரியாதமாதிரி நடிக்காத..!!"

"இ..இல்ல.. நெஜமாவே எனக்கு எதுவும் புரியல..!!"

" ஹ்ம்ம்ம்.. அந்த ப்ரொஃபஸரையும், ஸ்டேஷன் மாஸ்டரையும் போய் பார்த்ததா கேள்விப்பட்டேன்..??"

"ஆ..ஆமாம்.. அதுக்கு என்ன..??"

"அதுக்கு என்னவா..?? தங்கச்சி விட்டதை அக்காக்காரி ஆரம்பிக்கிறியா..?? பாத்து.. அவளுக்கு ஆன மாதிரி உனக்கும் ஏதாவது ஆகிடப் போகுது..!!" முகிலனின் அந்தப்பேச்சில் ஆதிரா இப்போது சற்றே எரிச்சலானாள்.

"என்ன.. மெரட்றிங்களா..??" என்றவாறு அவனுடைய கண்களை கூர்மையாக பார்த்தாள்.

"மெரட்டலாம் இல்ல.. மனசுல பட்டதை சொன்னேன்..!!"

"................................"

"நம்ம குடும்பத்துக்குன்னு ஒரு மதிப்பும் கௌரவமும் இருக்கு ஆதிரா..!! பாக்குற எல்லாரும் உன்னை கையெடுத்து கும்பிட்ருப்பாங்களே.. அவங்கல்லாம் காறி துப்பினா பரவாலயா உனக்கு..??"

"................................" - ஆதிரா பதிலேதும் சொல்லாமல் முகிலனை முறைத்து பார்த்தவாறே நின்றிருந்தாள்.

"போதும்..!! அந்த ஆராய்ச்சியை பத்தி ஆராய்ச்சி பண்றதை இத்தோட நிறுத்திக்க..!! மூடி கெடக்குறதை தோண்ட நெனச்சா.. அது அவ்வளவு நல்லா இருக்காது பாத்துக்கோ.. நான் சொல்லவேண்டியதை சொல்லிட்டேன்.. அப்புறம் உன் இஷ்டம்..!!"

"................................"

"என்ன.. ஒன்னுமே சொல்ல மாட்டேன்ற..??"

முகிலன் அவ்வாறு கேட்டதும், ஆதிரா இப்போது வாய் திறந்தாள்.. உடம்பை விரைத்துக்கொண்டு முறைப்பாக சொன்னாள்..!!

"இங்க பாருங்க.. அந்த ஆராய்ச்சி பத்திலாம் எனக்கு எந்த கவலையும் இல்ல.. ஆனா என் தங்கச்சியைப் பத்தின அக்கறை இருக்கு..!! அவளுக்கு என்னாச்சுன்னு தெரியாம நான் ஓயமாட்டேன்.. அவ காணாமப் போனதுக்கு அந்த ஆராய்ச்சிதான் காரணம்னா, அதையும் வெட்டவெளிச்சமாக்க தயங்க மாட்டேன்..!!"

சொல்லிவிட்டு முகிலனின் பதிலை கூட எதிர்பாராமல் விடுவிடுவென நடந்தாள்.. 'ஏய்' என்று முதுகுப்புறமாக அவன் கத்தியதைக் கூட அவள் பொருட்படுத்தவில்லை..!! அதற்குள்ளாகவே.. இவர்களது வாக்குவாதத்தை தூரத்தில் இருந்து பார்க்க நேர்ந்த சிபி.. நகர்ந்து இவளை நெருங்கியிருந்தான்..!!

"என்ன ஆதிரா.. என்னாச்சு..??" என்று குழப்பமாக கேட்டான்.

"ஒ..ஒன்னுல்லத்தான்.. விடுங்க..!!"

அமர்த்தலாக சொன்ன ஆதிரா, அவனது கையை இறுக்கமாக பற்றிக்கொண்டாள்.. பல்லக்கில் வீற்றிருக்கிற அம்மனையே கூர்மையாக வெறிக்க ஆரம்பித்தாள்.. காரிய சித்தி வேண்டுமென கண்மூடி வேண்டிக்கொண்டாள்..!!

அத்தியாயம் 19

அன்று மாலை ஐந்தரை மணி.. சிங்கமலையை ஒட்டிய ஆளரவமற்ற வனப்பகுதி..!! வானில் திரண்டிருந்த மேகக்கூட்டங்களும், நெருக்கமாய் வளர்ந்திருந்த காட்டுமரங்களும்.. சூரியனின் வெளிச்சத்தையும், வெப்பத்தையும் சுத்தமாக வற்றிப்போக வைத்திருந்தன..!! மெலிதாக படர ஆரம்பித்திருந்த மாலைப்பனி.. காற்றின் ஈரப்பதத்தை சற்று அதிகரிக்க வைத்திருந்தது..!! இங்குவரை கேட்ட கோயில் ஒலிப்பெருக்கியின் சன்னமான சப்தத்தை தவிர.. சூழ்நிலையை சுற்றிலும் ஒரு கெட்டியான நிசப்தம்..!!

அடர்ந்த மரங்களுக்கு இடையே சென்ற அந்த குறுகலான ஒற்றையடி மலைப்பாதையில்.. அவசர அவசரமாய் நடந்து கொண்டிருந்தனர் அந்த மூன்று இளம்பெண்கள்.. தென்றலும் அவளது பள்ளித்தோழிகள் இருவரும்..!! பாவாடை சட்டையும், ரெட்டை ஜடையுமாக முன்னால் நடப்பவள் வாசுகி.. பச்சை தாவணியும், ஒற்றை பின்னலுமாய் இடையில் செல்பவள் மேகலா..!! இருவரையும் சிறிது இடைவெளி விட்டு பின்தொடர்கிற தென்றல்.. இப்போது பொறுமையற்றவளாய் தோழிகளிடம் கேட்டாள்..!!

"ஏய்.. எங்கடி கூட்டிட்டு போறீங்க என்னை..??"

"............................."

"சொல்லுங்கடி.. கேக்குறேன்ல..??"

"ப்ச்.. கொஞ்சநேரம் வாயை மூடிட்டு கம்முனு வாடி..!!" வாசுகி எரிந்து விழவும்,

"ஏய் மேகலா.. நீயாவது சொல்லுடி.. எங்க போயிட்ருக்கோம் இப்போ..??" அடுத்தவளிடம் கேட்டாள் தென்றல்.

"ஏன் அவசரப்படுற..?? இன்னும் அஞ்சு நிமிஷத்துல உனக்கே தெரியப்போகுது..!!" மேகலா சாந்தமாகவே பதில் சொன்னாள்.

"ப்ச்.. உங்க ரெண்டுபேருக்கும் என்ன லூஸா..?? திருவிழான்னு ஊரே அங்க கோயில் முன்னாடி கெடக்குது.. நீங்க என்னடான்னா.. இந்த நேரத்துல.. காட்டுக்குள்ள.." தென்றல் சொல்லி முடிப்பதற்கு முன்பே, முன்னால் சென்றுகொண்டிருந்த வாசுகி இப்போது திரும்பி பார்த்து சொன்னாள்.

"ஊரே கோயில் முன்னாடி கெடக்குதுல.. அதான்..!! இதைவிட்டா நமக்கு வேற சான்ஸே கெடைக்காது..!!"

"அ..அப்படி என்னடி பண்ணப் போறீங்க..??" தென்றலின் கேள்வியில் இப்போது எக்கச்சக்க குழப்பமும், அதே அளவு ஆர்வமும்.

"வா.. சொல்றோம்..!!"

அடுத்த ஐந்தாம் நிமிடம்.. அந்த மலைச்சரிவில் இருந்த மறைவான பாறைக்கு பின்புறமாக அமர்ந்திருந்தனர் மூன்று மங்கையரும்..!! தென்றலுக்கு இன்னுமே என்னவிஷயம் என்று தெளிந்திருக்கவில்லை.. ஆர்வமிகுதியால் அரித்தெடுத்தாள் அவளது தோழிகளை..!!

"இப்பயாச்சும் சொல்லுங்கடி.. இங்க எதுக்கு வந்து உக்காந்திருக்கிங்க..??"

"அடச்சீய்.. அவசரத்துக்கு பொறந்தவளே..!! அப்படியே பறக்காதடி.. சொல்றோம் இரு..!!" எரிச்சலாக சொன்ன வாசுகி, மேகலாவிடம் திரும்பி

"ம்ம்.. எடுத்து காட்டுடி..!!" என்றாள். மேகலா இப்போது தென்றலை ஒரு குறும்புப் பார்வை பார்த்தவாறே,

"ஏய் அரிசிமூட்டை.. இப்போ நான் காட்டப்போறதை பாத்து, அப்படியே நீ வாயை பொளக்கப்போற..!!" என்றுவிட்டு, தனது மார்புகளை மூடியிருந்த தாவணியை, படக்கென கீழே எடுத்துப்போட்டாள்.

"எ..என்னடி பண்ற..??" - தோழியின் கழுத்துக்கு கீழ் வெறித்த தென்றலின் முகத்தில் ஒரு மிரட்சி.

"டொட்டடய்ய்ங்ங்க்..!!!!" கண்சிமிட்டிய மேகலா, விம்மிக்கொண்டிருந்த தனது ரவிக்கைக்குள் கையை விட,

"ஏய் ச்ச்சீய்ய்ய்..!!!!" கத்தியே விட்டாள் தென்றல். கண்கள் இரண்டையும் கைகள் இரண்டாலும் பொத்திக்கொண்டாள்.

"அடச்சைய்.. அது இல்லடி..!! இது வேற..!! இங்க பாரு..!!"

மேகலா அவ்வாறு கடுப்பாக சொன்னதும்தான்.. தென்றல் அவளது கண்களை மெல்ல திறந்தாள்..!! விரிந்திருந்த மேகலாவின் கைகளில் அவள் சொன்ன அந்த இது.. கோல்ட்ஃப்ளேக் சிகரெட் பாக்கெட்டும், கொளுத்துவதற்கென்று ஒரு தீப்பெட்டியும்..!! அவற்றை பார்த்ததுமே தென்றல் அப்படியே வாயைப் பிளந்தாள்.. சற்றுமுன் மேகலா சொன்னது போலவே..!!

"அடிப்பாவிகளா..!!! பீடி குடிக்கத்தான் இவ்வளவுமா..??"

"என்னது..??? பீடியா..??? அப்டியே போட்டன்னா..!! பில்ட்டர் சீரட்டுடி இது..!!" வாசுகி முகத்தை சுளித்தவாறு டென்ஷனாக சொன்னாள்.

"எதோ ஒரு கருமம்..!! இதை குடிக்கத்தான் இம்புட்டுதூரம் இந்த காட்டுக்குள்ள வந்தீகளாக்கும்..??"

"ஹ்ம்ம்.. என்ன பண்றது.. நடுவீட்ல வச்சு குடிக்கனும்னு எனக்கும் ஆசைதான்.. எங்கம்மாக்காரி வெளக்கமாத்தாலேயே சாத்துவாளே..!!"

"ஏன்.. இப்போ மட்டும் சாத்தமாட்டாளா..??"

"அவளுக்கு தெரிஞ்சாத்தான சாத்துவா..??"

"நான்தான் இப்பப்போய் போட்டு குடுத்துடுவன்ல..??" தென்றல் கேஷுவலாக சொல்லவும், வாசுகிக்கு சுர்ரென்று கோவம் வந்தது.

"அடிங்.. போட்டு குடுப்பியா..?? ஏய் மேகலா.. அவளை அப்டியே புடிச்சு மலைலயிருந்து தள்ளி விடுடி..!! ஊருக்குள்ள கேட்டா குறிஞ்சி தூக்கிட்டு போயிட்டான்னு சொல்லிரலாம்..!!"

"ஹாஹா.. பாவம்டி..!!"

"போட்டுக் குடுப்பேன்றா.. இவளைப்போய் பாவம்ன்ற..??"

"பாவம்னு இவளை சொல்லல.. குறிஞ்சியை சொன்னேன்..!! இந்த அரிசிமூட்டையை தூக்கி சொமக்குற நெலமை அந்த குறிஞ்சிக்கு வரவேணாம்.. பாவம்.. ஹாஹாஹாஹா..!!" மேகலா சொல்லிவிட்டு சிரிக்க, வாசுகியும் அவளுடன் சேர்ந்துகொண்டாள்.

"ஹாஹாஹாஹாஹாஹா..!!"

தென்றலோ தோழிகள் இருவரையும் கடுப்புடன் முறைத்தாள்.

"ம்க்கும்..!! இவளுகளுக்கு அப்படியே மனசுக்குள்ள இலியானான்னு நெனைப்பு.. நீங்கமட்டும் என்ன கொறைச்சலாவாடி இருக்கீக.. குந்தானிகளா..!!"

"ஹாஹா.. கோச்சுக்காதடி...!! இந்தா..!!" சொல்லிக்கொண்டே வாசுகி ஒரு சிகரெட்டை எடுத்து தென்றலிடம் நீட்ட, அவள் உடனே முகத்தை சுளித்தாள்.

"ஐயே.. எனக்கு வேணாம்..!!"

"வேணாமா..?? அப்புறம் எதுக்குடி எங்ககூட வந்த..??"

"நான் எங்கடி வந்தேன்..?? நீங்கதான் ஒண்ணுமே சொல்லாம இழுத்துட்டு வந்திங்க..!!"

"அ..அது.. எங்களுக்கு ஆசை இருக்குற மாதிரி, உனக்கும் ஆசை இருக்கும்னு நெனச்சோம்..!!"

"ஆசைப்படுறதுக்கு அப்படி என்ன இருக்கு இந்த கருமத்துல..??"

"என்னடி இப்படி சொல்லிட்ட..?? பயலுக எப்பப்பாத்தாலும் இதைத்தான வாய்லவச்சு பக்குபக்குன்னு இழுத்து, குப்புகுப்புன்னு பொகை விட்றாய்ங்க..?? எத்தனை நாள் ஆசை தெரியுமா எனக்கு..?? அப்படி என்னதான் இதுல இருக்குன்னு இன்னைக்கு பாத்துடனும்..!! நீ குடிக்காட்டா போ.. நாங்க குடிக்க போறோம்..!!" ஆசையாக சொன்ன வாசுகி, அந்த சிகரெட்டை வாயில் வைத்துக்கொண்டு, மேகலாவிடம் திரும்பி,

"ஏய்.. பத்தவைடி..!!" என்றாள்.

மேகலா தனது வாயில் ஒரு சிகரெட்டை பொருத்திக் கொண்டாள்.. தீக்குச்சி உரசி வாசுகிக்கு பற்றவைத்துவிட்டு, தனது சிகரெட்டுக்கும் நெருப்பு வைத்துக்கொண்டாள்..!! தென்றல் ஒரு கையால் மூக்கை இறுகப் பொத்திக்கொள்ள.. வாசுகியும், மேகலாவும் சிகரெட் புகைக்க ஆரம்பித்தார்கள்.. ஆரம்பித்ததுமே, ஆர்வக்கோளாறில் அதிக அளவு புகையை சர்ரென உள்ளிழுத்து..

"லொக்.. லொக்.. லொக்..!!" என கண்களில் நீர் வருமளவிற்கு இருமினார்கள்.

"எ..என்னடி இது.. நல்லாவே இல்ல..!!" முகத்தை அஷ்டகோணலாக்கியவாறு சொன்னாள் மேகலா.

"ஆரம்பத்துல அப்படித்தாண்டி இருக்கும்.. குடிக்க குடிக்க நல்லாருக்கும்..!!" ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல் அவளை என்கரேஜ் செய்தாள் வாசுகி.

"ஏய்.. சீக்கிரம் குடிச்சு முடிங்கடி.. இருட்ட ஆரம்பிச்சிடுச்சு.. மழை வேற வர்ற மாதிரி இருக்குது..!!"

இயல்பாக சொல்லிக்கொண்டே வானத்தை பார்த்த தென்றல்.. எதேச்சையாக பார்வையை வேறுபக்கம் சுழற்றியபோதுதான்.. அந்த உருவம் அவளது கண்களில் பட்டது..!! அங்கிருந்து சற்றே தூரமாக.. அடர்ந்த காட்டு மரங்களுக்கு இடையே.. அசைவேதுமில்லாமல் தனியே நின்றிருந்த.. அந்த சிவப்பு அங்கி போர்த்திய உருவம்..!! இவர்கள் மூவரையுமே வெறித்துப் பார்ப்பது போன்றொரு தோற்றம்..!!


அந்த உருவத்தை பார்த்ததும் தென்றலுக்கு அப்படியே முதுகுத்தண்டு சில்லிட்டுப்போனது.. பயரத்தம் பாய்ந்ததில் அவளது இருதயம் தறிகெட்டு துடிக்க..

"ஆஆஆஆஆஆஆஆ..!!!" என்று பெரிதாக அலறினாள். அலறியவேகத்தில் தடுமாறி விழப்போனவளை வாசுகி தாங்கிப்பிடித்துக் கொண்டாள்.

"ஏய்ய்ய்.. என்னடி ஆச்சு..??"

"கு..குறிஞ்சி.. குறிஞ்சிடி..!!" தென்றல் திணறலாக சொன்னாள். அவளது முகத்தில் கொப்பளித்த அந்த அதீத மிரட்சி, மற்ற இரு பெண்களுக்குமே உடனடியாய் ஒரு பதற்றத்தை கிளப்பியிருந்தது.

"எ..எங்க..??"

"அ..அதோ.. அங்.."

சொல்லவந்ததை முடிக்காமலே நிறுத்தினாள் தென்றல்.. அவள் கைநீட்டிய திசையில் இப்போது அந்த உருவத்தை காணவில்லை.. காட்டுமரங்கள்தான் காற்றுக்கு மெலிதாக தலையசைத்துக் கொண்டிருந்தன..!! பயந்துபோய் திரும்பிப்பார்த்த தோழிகள் இருவரும் குழம்பிப்போனார்கள்..!!

"எ..எங்கடி.. யாரையும் காணோம்..??"

"அ..அங்க.. அங்கதான்டி நின்னுட்டு இருந்தா.. அதோ.. அந்த மரத்துக்கு பக்கத்துல..!!"

"வெ..வெளையாடாத தென்றல்..!!"

"அடச்சீ.. வெளையாடலடி.. நெஜமாத்தான் சொல்றேன்.. நான் பார்த்தேன்.. என் ரெண்டு கண்ணாலயும் பார்த்தேன்..!! உடம்பு பூரா செவப்பு அங்கிய போத்திக்கிட்டு.. ஒத்தையா அங்க நின்னுட்டு இருந்தா.. நம்மளயே உத்த்த்து பாத்துக்கிட்டு இருந்தா.. அப்டியே கொலை நடுங்கிப்போச்சு எனக்கு..!!" படபடவென சொன்னாள் தென்றல்.

அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே.. 'டமார்ர்ர்' என்று விண்ணில் ஒரு இடிமுழக்கம்.. ஊசிச்சிதறல்களாய் சிலுசிலுவென மழைத்தூறல்..!! மூன்று பெண்களின் முகத்திலுமே இப்போது ஒரு கிலி பரவுவதை காணமுடிந்தது.. மூன்று பேருடைய நெஞ்சுமே பக்பக்கென அடித்துக்கொள்ள ஆரம்பித்திருந்தது.. தென்றலிடம் மட்டும் சற்று அதிகப்படியாகவே அந்த படபடப்பு..!!

சிகரட்டை பிடித்திருந்த விரல்கள் நடுநடுங்க, மேகலா இப்போது சொன்னாள்..!!

"கெ..கெளம்பிறலாம்டி..!!"

வாசுகியும், மேகலாவும் கையிலிருந்த சிகரெட்டை படக்கென விசிறியெறிந்தனர்.. மூவரும் மலைச்சரிவில் விருட்டென ஏறி, நடக்கிற பாதையை அடைந்தனர்.. அகழி இருக்கிற திசையை நோக்கி அவசர அவசரமாக நடந்தனர்..!! சில்லென்று சிதறிய மழைத்தூறலை மீறி, நெற்றியில் வியர்வை அரும்பியது அவர்களுக்கு.. உடலுக்குள் ஜிவ்வென்று ஒரு பய சிலிர்ப்பு..!! அப்படியும் இப்படியுமாய் தலையை திருப்பி.. எல்லா திசைகளையும் ஒரு பயப்பார்வை பார்த்துக்கொண்டே விரைந்தனர்..!!

"ப..பயமா இருக்குடி வாசுகி..!!" உடைந்துபோன குரலில் சொன்னாள் மேகலா.

"அடச்சீ.. ஒன்னும் இல்லடி..!!" அவளுக்கு தைரியமூட்டினாள் வாசுகி.

திடீரென்று.. அவர்களுக்கு வெகுஅருகில்.. 'ஸரஸரஸர'வென காய்ந்த சருகுகள் மிதிபடுகிற சப்தம் கேட்டது..!! அந்த சப்தத்தை கேட்டதும்.. அப்படியே 'ஹக்க்க்க்' என்று நெஞ்சடைத்துப்போய், மூன்று பெண்களும் அசையாமல் உறைந்து நின்றனர்..!! பயத்தில் விரிந்த விழிகளும், மிரட்சி அப்பிய முகமும், ஏறியிறங்குகிற மார்புப்பந்துகளுமாக.. சப்தம் வந்த திசையை மெல்ல திரும்பிப் பார்த்தனர்..!!

"ஸர்ர்ர்ர்ர்ர்ரக்க்க்க்க்க்...!!!" - யாரோ ஒரு மரத்தின் மறைவில் இருந்து இன்னொரு மரத்தின் மறைவுக்கு ஓடினார்கள்.

"ஆஆஆஆஆ..!!" வாயில் கைவைத்து அலறினாள் தென்றல்.

"யா..யாரு.. யாரது..???" சற்று துணிச்சலாக கத்தினாள் வாசுகி.

அதேநொடியில்.. வானத்தில் 'திடும் திடும்' என அடுத்தடுத்து இடியோசை.. 'பளிச் பளிச்' என மின்னல் வெளிச்சம்..!! மேகங்கள் ஒன்றோடொன்று உரசிக்கொள்ள, 'ச்ச்சோ'வென்று மழைகொட்ட ஆரம்பித்தது.. நின்றிருந்த பெண்களை சடசடவென நனைத்தன மழைத்துளிகள்..!!

"எ..எனக்கு ரொம்ப பயமா இருக்குடி.. போ..போயிறலாம்டி..!! இ..இங்க நிக்கிற ஒவ்வொரு.."

வாய்க்குழறலாக பேசிய மேகலா, சொல்லவந்ததை முழுதாக முடிக்காமல் அப்படியே நிறுத்தினாள்.. அவளது பார்வை இப்போது ஓரிடத்தில் நிலைகுத்திப் போயிருந்தது.. ஓவென்று திறந்திருந்தன அவளது உதடுகள்.. அவளது முகத்திலும், கண்களிலும் அப்பட்டமாய் அப்படி ஒரு பீதி..!!

"எ..என்னடி..??"

வாசுகியின் கேள்விக்கு மேகலாவிடமிருந்து பதில் இல்லை.. வாயும் நெஞ்சும் அடைத்துப்போனது மாதிரி விக்கித்து நின்றிருந்தாள்..!!

இப்போது தென்றலும், வாசுகியும்.. மேகலாவின் பார்வை சென்ற திசைபக்கமாக.. மெல்ல மெல்ல தங்களது முகத்தை திருப்பினர்..!! அங்கே.. அவர்களுக்கு மிக மிக நெருக்கமாக.. ஒழுங்கின்றி வளர்ந்திருந்த ஒருபுதருக்கு பின்புறமாக.. கொட்டுகிற மழையில் சொட்டச்சொட்ட நனைந்தவாறு.. அந்த உருவம்..!! உடல்முழுதையும் போர்த்திய சிவப்பு அங்கி.. முகம்முழுதும் வழிகிற கருங்கூந்தல்..!!

"க்க்க்ர்ர்ர்.. க்க்க்ர்ர்ர்.. க்க்க்ர்ர்ர்..!!" என்று அந்த உருவத்திடம் இருந்து வருகிற சப்தம்.

"ஆஆஆஆஆஆஆஆஆஆஆ..!!!!!!!!!!!!!!!"

அவ்வளவுதான்..!! அலறியடித்துக் கொண்டு ஓடினர் இளம்பெண்கள் மூவரும்..!! மாலைநேரத்து மங்கலான வெளிச்சம்.. மழைபெய்து வழுக்குகிற மலைப்பாதை.. ஆங்காங்கே குறுக்கிடுகிற காட்டுமரங்கள்.. உச்சியிலிருந்து சடசடவென ஊற்றுகின்ற மழைநீர்..!! கண்மண் தெரியாமல்.. கால்கள் சென்ற திசையில்.. உடம்பெல்லாம் வெடவெடக்க.. உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடினார்கள்..!!

அவர்கள் அணிந்திருந்த காலணிகள் எல்லாம் எங்கே நழுவியதென்று தெரியவில்லை.. ஈரமான கோரைப்புற்களில் வெற்றுக் கால்களை பதித்து வேகமாக ஓடினர்..!! சரியான திசையில்தான் ஓடுகிறோமா என்பதைக்கூட அவர்கள் அறியவில்லை.. கண்ணில்பட்ட திசையில், எதிர்ப்பட்ட மரங்களுக்கு இடையில் புகுந்து ஓடிக்கொண்டே இருந்தார்கள்..!! மழையில் நனைந்து உடலோடு ஒட்டிய உடையுடனும்.. மார்புக் கூட்டுக்குள் பதறித் துடிக்கிற இருதயத்துடனும்..!!

"ஆஆஆஆஆ..!!!!"

ஓடியவர்கள் திடீரென அலறியவாறு அப்படியே ப்ரேக் அடித்து நின்றார்கள்..!! அவர்கள் ஓடியதிசையில் எதிர்ப்புறம்.. 'சர்ர்ர்ரரக்க்க்' என்று குறுக்காக வந்துநின்றது அந்த உருவம்..!! பலமாக வீசிய காற்றில் படபடக்கிற சிவப்பு அங்கி.. முகத்தை மறைத்திட்ட முடிக்கற்றைகளில் சொட்டுகிற மழைநீர்..!!

மூன்று பெண்களும் ஒருநொடி கூட தாமதிக்கவில்லை.. பக்கவாட்டில் திரும்பி விர்ரென்று வேகமெடுத்து ஓடினர்.. அந்த உருவம் தங்களை பின்தொடர்கிறதா என்று திரும்பிப் பார்க்கக்கூட மூவருக்கும் அச்சம்..!! உயிர்பயத்தில் அலறியடித்துக்கொண்டு ஓடினர்..!!

இந்தப்பாதை சற்றே சீரற்ற பாதை.. மரங்களின் கிளைகள் பாதையின் குறுக்காக நீண்டிருந்தன.. விரிந்திருந்த முட்புதர்கள் அவர்களது புஜங்களை கீறின.. இறைந்து கிடந்த கற்கள் அவர்களது பாதத்தை பதம் பார்த்தன..!! உடம்பில் உண்டான வேதனையை பொருட்படுத்தாமல்.. உயிரை காப்பாற்றிக் கொள்கிற பதைபதைப்புடன்.. அடர்ந்த காட்டுக்குள் கிலியடித்துப்போய் ஓடிக்கொண்டிருந்தனர்..!! அகன்ற அடிப்புறம் கொண்ட மரம் ஒன்றிற்கு பின்புறமாக.. அண்டிக்கொண்டனர் மூவரும்..!!

நுரையீரல் வெளியே வந்துவிடுவது போல மூச்சிரைத்தது அவர்களுக்கு.. இருதயம் 'திடுக்.. திடுக்..' என்று அடித்துக் கொண்டதில், மார்புகள் 'சர்ர்.. சர்ர்..' என மேலும் கீழும் ஏறியிறங்கின.. அட்ரினலின் அதீதமாக சுரந்து, நாடிநரம்பெல்லாம் தாறுமாறாய் ஓடியது.. குளிராலும் குறிஞ்சி பயத்தாலும், உடம்பின் ஒவ்வொரு செல்லும் வெடவெடத்து நடுங்கியது..!! மூச்சு விடுகிற சப்தம்கூட வெளியே வரக்கூடாதென.. வாயை இரு கைகளாலும் இறுகப் பொத்திக்கொண்டு.. மூன்று பெண்களும் மரத்துக்கு பின்புறமாக பம்மியிருந்தனர்..!!

அரை நிமிடம்.. பிறகு வாசுகி மட்டும் சற்றே தைரியம் பெற்று.. தனது தலையை மெல்ல வெளியே நீட்டி.. தாங்கள் ஓடிவந்த பாதையை பார்த்தாள்.. பார்த்ததுமே பக்கென்று இருந்தது அவளுக்கு..!! அந்த உருவம் அவர்களுக்கு பக்கத்திலேதான் இன்னொரு மரத்துக்கு அருகே நின்று கொண்டிருந்தது.. 'ச்சோ'வென்று கொட்டுகிற மழையில் நனைந்தவாறு.. வேறொரு திசையை வெறித்தவாறு..!! விரிந்த விழிகளுடன் அந்த உருவத்தையே மிரட்சியாக பார்த்தாள் வாசுகி..!!

அந்த உருவம் இப்போது மெல்ல இந்தப்பக்கமாக திரும்ப.. வாசுகி படக்கென தலையை உள்ளிழுத்துக் கொண்டாள்..!! சுறுசுறுப்பாக யோசித்தாள்.. அவசரமாய் ஒரு முடிவுக்கு வந்தாள்.. 'தஸ்.. புஸ்..'என்று மூச்சிரைப்புடன், கிசுகிசுப்பான குரலில் தோழிகளிடம் சொன்னாள்..!!

"சொ..சொல்றதை கவனமா கேளுங்கடி.. மூணு பேரும் ஒன்னா இருந்து, அவகிட்ட மொத்தமா மாட்டிக்க வேணாம்.. ஆ..ஆளுக்கொரு பக்கமா ஓடலாம்.. ஒருத்தியை பலிகுடுத்து மிச்ச ரெண்டுபேர் தப்பிச்சுக்கலாம்.. எ..என்ன சொல்றிங்க..??"

"ம்ம்.. ச..சரிடி..!!"

பயத்துடனும், பதைபதைப்புடனும் ஒப்புக்கொண்டனர் மற்ற இருவரும்..!! அழுகை வந்தது அவர்களுக்கு.. வாயைப் பொத்திக்கொண்டு சத்தம் வராமல் அழுதனர்..!! பீதி நிரம்பிய அவர்களது கண்கள்.. பொலபொலவென கண்ணீரை உகுத்தன..!!

இப்போது சிவப்பு அங்கி போர்த்திய அந்த உருவம்.. அவர்கள் அண்டியிருக்கிற மரத்தைநோக்கி மெல்ல நகர்ந்தது.. மரத்துக்கு அந்தப்பக்கம் அவர்களுடைய சன்னமான பேச்சுக்குரல் இங்கேயே கேட்டது..!! கொஞ்சம் கொஞ்சமாய் நிதானமாக நகர்ந்து.. மரத்திற்கு மிகஅருகே நெருங்கிவிட்டது அந்த உருவம்.. இரண்டு மூன்று அடி இடைவெளிதான்..!!

அப்போதுதான் அது நடந்தது.. மரத்துக்கு பின்புறம் இருந்து சரக்கென வெளிப்பட்டனர் மூன்று பெண்களும்.. வெளிப்பட்ட வேகத்தில் வெவ்வேறு திசையில் சர்ரென ஓட்டமெடுத்தனர்..!! அங்கிருந்து கிளம்பிய மூன்று சாலைகளில்.. ஆளுக்கொரு சாலையென சிட்டாக பறந்தோடினர்..!!

அந்த உருவம் அதை எதிர்பார்த்திருக்கவில்லை..!! சற்றே திகைத்துப்போய்.. வெடுக்வெடுக்கென மூன்று திசைகளையும் மாறிமாறி திரும்பிப் பார்த்தது..!! அப்போதுதான்..

"ஆஆஆஆஆஆ..!!!" என்று தென்றலின் அலறல்.

தறிகெட்டு ஓடிய தென்றல் தரையில் விழுந்து கிடந்தாள்.. மேற்கிளம்பிய ஒரு மரத்தின் வேர், அவளது பாதத்தை இடறி விட்டிருந்தது.. தடுமாறிப்போய் கால்கள் ரெண்டும் பின்னிக்கொள்ள கீழே விழுந்து உருண்டிருந்தாள்..!!

"ஆஆஆஆஆஆ..!!!" கொட்டுகிற மழையில் காலை பிடித்துக்கொண்டு கத்தினாள்.

மூன்று திசைகளையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்த அந்த உருவம், இப்போது சற்றே நிதானித்தது.. தென்றல் விழுந்து கிடந்த திசையை மட்டும் கூர்மையாக வெறித்தது.. அந்த திசையில் மெல்ல நகர்ந்தது..!!

அதன்பிறகு சில நிமிடங்கள் கழித்து..!! வேறு திசையில் ஓடிய மற்ற இரு பெண்களும்.. அகழி செல்கிற சாலையில் ஆளுக்கொரு இடத்தில் இணைந்தனர்..!! பிறகு அதே சாலையில் தனித்தனியே ஓடியவர்கள்.. ஓரிடத்தில் ஒன்றாக சந்தித்துக் கொண்டனர்..!! பார்த்ததுமே ஓடிவந்து அணைத்துக் கொண்டனர்.. ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு அழுதனர்..!! தாங்கள் சேதாரமில்லாமல் தப்பித்துவிட்டாலும்.. தங்களது தோழி மாட்டிக்கொண்டாளே என்கிற பதைபதைப்பில் இருவருக்கும் நெஞ்சடைத்தது..!!

"அரிசிமூட்டை பாவம்டி.. குறிஞ்சிகிட்ட மாட்டிக்கிட்டா..!!!" அழுது அரற்றினாள் மேகலா..!!

'பாவம்னு இவளை சொல்லல.. குறிஞ்சியை சொன்னேன்..!!' என்று அவள் சற்றுமுன் கேலியாக சொன்னது இப்போது நினைவுக்கு வர.. அவளது அழுகை இன்னுமே அதிகமாக பீறிட்டது..!!

"அழாதடி.. வா.. மொதல்ல ஊருக்குள்ள போய் சொல்லலாம்..!!" சற்றே துணிச்சலாக சொன்ன வாசுகி, அடுத்தவினாடியே உள்ளுக்குள் உடைந்துபோய் உதடுகள் தழதழத்தாள்..!!

'அவளை அப்டியே புடிச்சு மலைலயிருந்து தள்ளி விடுடி..!! ஊருக்குள்ள கேட்டா குறிஞ்சி தூக்கிட்டு போயிட்டான்னு சொல்லிரலாம்..!!'

சிறிது நேரத்திற்கு முன்பு அவள் பேசிய வார்த்தைகள், இப்போது மீண்டும் அவளது காதுக்குள் ஒலிக்க.. 'ஓ'வென்று அவளுக்கும் அழுகை பீறிட்டு கிளம்பியது..!! அப்படியே கால்கள் மடங்கிப்போய்.. தரையில் வீழ்ந்து.. முதுகுப்புறம் விம்ம விம்ம.. குலுங்கி குலுங்கி அழுதாள்..!! மேகலாவும் இப்போது தரையில் அமர்ந்து, தோழியை அணைத்துக் கொண்டாள்.. ஆதரவாக அவளது முதுகை தடவிக்கொடுத்தாள்..!!

இருட்டுக்குள் அவ்வாறு அமர்ந்திருந்த அவர்களது முகத்தில்.. திடீரென ஒரு வெளிச்ச வெள்ளம் பாய்ந்து, கண்களை கூசச்செய்தது.. ஒருவித பதற்றத்துடனே இருவரும் எழுந்துகொண்டனர்..!! அந்த சாலையில், சிறிது தூரத்தில் ஒரு கார் வந்துகொண்டிருந்தது.. அந்த காருடைய முகப்புவிளக்கின் வெளிச்சம்தான் அது..!! காருக்குள் இருந்தவர்களை இவர்களால் உடனடியாக அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.. ஆதிராவும், சிபியும்..!! அத்தனை நேரம் கோயிலில் கழித்துவிட்டு.. அப்போதுதான் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள்..!!

"அக்காஆஆஆ..!!" என்று கத்திக்கொண்டு, காரைநோக்கி ஓடினார்கள் வாசுகியும் மேகலாவும்.

"அ..அத்தான்.. வண்டியை கொஞ்சம் நிறுத்துங்க..!!"

ஆதிரா பதற்றமாக சொல்லவும், சிபி சரக்கென ப்ரேக் போட்டு காரை நிறுத்தினான்..!! ஏதோ விபரீதம் என்று புரிந்துகொண்ட இருவரும்.. காரில் இருந்து அவசரமாக இறங்கினார்கள்..!! தங்களை நோக்கி மிரட்சியாக ஓடிவந்த பெண்களிடம்..

"எ..என்னம்மா.. என்னாச்சு..??" ஆதிரா பதட்டத்துடன் கேட்டாள்.

அழுகையும், மூச்சிரைப்புமாக நடந்ததை விளக்கினார்கள் வாசுகியும், மேகலாவும்..!! அவர்கள் சொன்னதை கேட்க கேட்க.. அப்படியே அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள் ஆதிராவும், சிபியும்..!! நடந்ததை நம்புவதற்கு சற்று கடினமாகத்தான் இருந்தது.. அதையும்மீறி அந்தப்பெண்களின் முகத்தில் கொப்பளித்த அதீத பயமும், மிரட்சியும்.. அவர்களது வார்த்தையில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது..!!

ஆதிரா விக்கித்துப்போய் நின்றிருந்தாள்.. 'காலையில்தானே அந்த அப்பாவிப்பெண்ணை வாயார வாழ்த்தினோம்' என்கிற நினைவு வர.. துக்கம் தொண்டையை அடைத்து, வாயை ஒருகையால் பொத்திக் கொண்டாள்..!!

"இ..இப்போ.. எ..என்னத்தான் பண்றது..??" கணவனிடம் கவலையாக கேட்டாள். சிபி சற்று தெளிவாகத்தான் இருந்தான்.

"டென்ஷன் ஆகாத ஆதிரா.. ரிலாக்ஸ்..!! அவசரப்பட்டு நாமளா எந்த முடிவுக்கும் வரவேணாம்.. தென்றல் தப்பிச்சிருக்க கூட சான்ஸ் இருக்கு.. நான் சிங்கமலை போய் அவளை தேடிப்பாக்குறேன்.. நீ இவங்களை கூட்டிட்டு வீட்டுக்கு போ.. வனக்கொடிக்கும், கதிருக்கும் இன்ஃபார்ம் பண்ணு..!!"

"ஐயோ வேணாம்த்தான்.. நீங்க போகாதீங்க.. எனக்கு பயமா இருக்கு..!!"

"எனக்கு ஒன்னும் ஆகாதுடா.. தேவையில்லாம பயப்படாத..!!"

"ப்ளீஸ்த்தான்.. வேணாம்..!!"

"ப்ச்.. புரியாம பேசாத ஆதிரா.. நாம லேட் பண்ற ஒவ்வொரு செகண்டும் தென்றலுக்கு ஆபத்து..!! உடனே போய் தேடிப்பாக்குறது நல்லது..!!"

"அ..அப்போ.. என்னையும் உங்ககூட கூட்டிட்டு போங்க..!!"

"நீ எதுக்குடா அங்க..?? நான் மட்டும் போயிட்டு வரேன்..!!"

"இல்லத்தான்.. உங்களை தனியா அனுப்ப எனக்கு இஷ்டம் இல்ல.. நானும் வர்றேன்..!!"

மனைவியிடம் வாக்குவாதம் செய்ய நேரமில்லாமல்.. அவளையும் உடன்அழைத்துச் செல்ல சம்மதித்தான் சிபி..!! கிளம்புவதற்கு முன்.. வனக்கொடிக்கும், கதிருக்கும் உடனடியாய் விஷயத்தை தெரிவிக்குமாறு வாசுகியிடம் சொன்னான்.. தென்றலை இறுதியாக அவர்கள் பார்த்த இடத்தை பற்றி விசாரித்துக் கொண்டான்.. எந்த இடத்திற்கு சென்று தேடுவது என்று உத்தேசமாக முடிவு செய்துவிட்டே காரை கிளப்பினான்..!!

மலைப்பாதையில் ஐந்து நிமிட பயணத்திற்கு பிறகு.. தார்ச்சாலை முடிவடைந்த இடத்தில் சிபி காரை நிறுத்தினான்.. டாஷ்போர்ட் திறந்து டார்ச்லைட்டை கையில் எடுத்துக் கொண்டான்..!! இருவரும் காரில் இருந்து இறங்கி, கதவை அறைந்து சாத்தினார்கள்.. இருள் அப்பியிருந்த வனப்பகுதிக்குள் ஒருவித அவசரத்துடன் நடந்தனர்..!! மழை இப்போது ஓரளவுக்கு ஓய்ந்திருந்தது.. சில்லென்று மெலிதாக சிதறிய தூறல் மட்டுமே..!!

"தென்றல்.. தென்றல்..!!" ஆதிரா தென்றலின் பெயரை பதைபதைப்புடன் அழைத்தவாறே சென்றாள்..!!

மசமசப்பான வெளிச்சத்துடன் மரங்களின் பிம்பங்கள் மட்டுமே ஆங்காங்கே அடர்ந்து தெரிந்தன.. கையிலிருந்த டார்ச்சால் இருட்டுக்குள் வெளிச்சக்கீற்றை பாய்ச்சியவாறே நடந்தான் சிபி.. அவனுடன் நடந்த ஆதிராவின் இருதயமோ 'திக் திக்.. திக் திக்..' என்று பதறிக்கொண்டிருந்தது..!! சூழ்நிலையை சுற்றிலும் ஒரு அமானுஷ்ய நிசப்தம்.. காய்ந்த சருகுகள் மீது அவர்களது காலடி பதிகிற சப்தம் மட்டுமே..!!

"சர்ர்ர்ரக்.. சர்ர்ர்ரக்.. சர்ர்ர்ரக்..!!!"

இளம்பெண்கள் மூவரும் அந்த உருவத்திடம் இருந்து மிரண்டு, பக்கவாட்டில் ஓடிய அந்த பாதையில்.. இப்போது சிபியும் ஆதிராவும் சென்றுகொண்டிருந்தனர்..!! அவர்கள் ஒளிந்துகொண்ட அந்த அகன்ற அடிப்புறம் கொண்ட காட்டுமரம்.. அந்த இடத்தில் சற்று நின்று டார்ச்சை சுழற்றினான் சிபி.. தரையிலிருந்து மேல் கிளம்பி, பாதையில் படர்ந்திருந்த அந்த மரவேர் கண்ணில் பட்டது.. அந்த திசையில் மெல்ல நடந்தான்.. அவனுக்கு இரண்டடி இடைவெளி விட்டு ஆதிரா பின்தொடர்ந்தாள்..!!

"தென்றல்.. தென்றல் தென்றல்..!!"

அதே திசையில் மேலும் சிறிது நேரம் நடக்க.. அந்த மலைச்சரிவை வந்தடைந்தார்கள்..!! சரேலென்று செங்குத்தான மலைச்சரிவு.. அந்த சரிவின் அடியாழத்தில் சலசலப்புடன் ஓடுகிற குழலாற்றின் சப்தம்..!! மலைச்சரிவை ஒட்டியே குறுகலாக சென்ற அந்த பாதையில்.. சற்றே கவனமாகவும், நிதானமாகவும் நடந்தார்கள் இருவரும்..!! சிபி பாதையில் வெளிச்சத்தை தெளித்துக்கொண்டே..

"பாத்து வா ஆதிரா.. மழை பெஞ்சு ஈரமா இருக்குது.. வழுக்குது..!!" என்று மனைவியிடம் சொன்னபோதுதான்..

"ச்ச்சலீர்ர்ர்..!!!!!" ஆதிராவின் காலில் ஏதோ தட்டுப்பட்டு ஓசை கிளப்பியது.

அது என்னவென்று தலையை தாழ்த்தி பார்த்தாள்.. குனிந்து கையில் எடுத்தாள்.. அது.. ஒரு ஒற்றைக்கால் கொலுசு..!! அதை பார்த்ததுமே ஆதிராவுக்கு பட்டென்று தெரிந்து போனது..!!

"தென்றலோட கொலுசு அத்தான்..!!"

"ஓ..!! அப்போ.. இந்தப்பக்கமாத்தான் அவ போயிருக்கனும்..!!"

அதே பாதையில் இப்போது சற்று விரைவாக நடந்தார்கள்.. தென்றலை தேடுவதை தீவிரப் படுத்தினார்கள்..!! இருட்டாக இருந்த மலைச்சரிவின் பரப்பில்.. சிபியின் கையிலிருந்த டார்ச்லைட்டின் வெளிச்சவட்டம் படிந்து.. ஓரிடத்தில் நில்லாது அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தது..!!

"டார்ச்சை குடுங்கத்தான்..!!"

ஒருவித பதற்றத்துடன் ஆதிரா அவ்வாறு திடீரென கேட்கவும்.. என்னவென்று புரியாமலே அவளுடைய கையில் டார்ச்லைட்டை திணித்தான் சிபி..!!

"என்னாச்சு ஆதிரா..??"

"ஏதோ அசைஞ்ச மாதிரி இருந்தது..!!"

"எங்க..??"

கணவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல்.. அவர்கள் நின்றிருந்த இடத்தில் இருந்து செங்குத்தாக கீழிறங்கிய பள்ளத்தில்.. சற்றே ஆழமாக, தூரமாக.. வெளிச்சத்தை தெளித்தாள் ஆதிரா..!! கொஞ்சம் உற்றுப் பார்க்கவும்தான் அது தெரிந்தது.. பாறை இடுக்கில் இருந்து வெளிப்பட்டு, காற்றில் மெலிதாக அசைந்துகொண்டிருந்த அந்தத் துணி.. இளமஞ்சள் நிறத்திலான துணி..!!!!

ஆதிராவின் முகத்தில் இப்போது பட்டென ஒரு மலர்ச்சி.. மனதில் ஒருவித நம்பிக்கையுடன் உற்சாகமாக கீழ்நோக்கி கத்தினாள்..!!

"தென்றல்.. தென்றல்..!!!"

அடுத்த வினாடியே கீழிருந்து பதில் வந்தது.

"அக்காஆஆஆ..!!!!"

தென்றலின் குரலை கேட்டதும்.. ஆதிராவும், சிபியும் அப்படியே பூரித்துப் போனார்கள்..!! இருவரும் ஒரே நேரத்தில் ஒரு நிம்மதிப் பெருமூச்சை வெளிப்படுத்தினார்கள்.. ஆதிரா வஜ்ரேஸ்வரி அம்மனுக்கு மனதுக்குள்ளேயே நன்றி தெரிவித்தாள்..!! குறிஞ்சிக்கு பயந்து.. அவளிடம் இருந்து தப்புவதற்காக.. தென்றல் இந்த மலைச்சரிவில் கீழிறங்கி மறைந்திருக்க வேண்டும் என்று அனுமானித்தார்கள்..!! இங்கிருந்து அவளுடைய முகத்தை காண இயலவில்லை.. அவளது குரல் மட்டும் தொடர்ந்து ஒலித்தது.. தெளிவில்லாமல் காதில் வந்து விழுந்தது..!!

"அக்காஆஆ.. நா..நான் இங்க.. கு..குறிஞ்சி என்னை.. நா..நான் அவகிட்ட.."

"எங்களுக்கு எல்லாம் தெரியும்மா.. தெரிஞ்சுதான் உன்னைத் தேடி வந்தோம்..!! குறிஞ்சி இப்போ போய்ட்டா.. இங்க யாரும் இல்ல.. நீ மேல ஏறி வா தென்றல்..!!"

"இ..இல்லக்கா.. என்னால முடியல.. ஏதோ ஒரு வேகத்துல எறங்கிட்டேன்.. இப்போ எப்படி மேல வர்றதுன்னு தெரியல.. இங்க எதைத்தொட்டாலும் வழுக்குது.. எனக்கு கால்ல வேற அடிபட்ருக்கு..!!"

தென்றல் அவ்வாறு பரிதாபமாக சொல்லவும், ஆதிராவும் சிபியும் ஒருகணம் குழம்பிப் போனார்கள்.. என்ன செய்வதென்று யோசித்தவர்கள், பட்டென ஒரு முடிவுக்கு வந்தார்கள்..!!

"சரி தென்றல்.. நீ அங்கேயே இரு.. நான் கீழ வந்து உன்னை மேல அழைச்சுட்டு வரேன்..!!"

சிபி கீழே பார்த்து கத்திவிட்டு, அந்த மலைச்சரிவில் மெதுவாக இறங்கினான்..!! ஆதிரா மேலிருந்து டார்ச் அடிக்க.. அதில் கிளம்பிய சொற்ப வெளிச்சத்தின் துணையோடு நிதானமாக கீழிறங்கினான்..!! வழுக்குப் பாறைகள் நிறைந்த மலைச்சரிவு அது.. இப்போது மழைநீரும் சேர்த்துக்கொள்ள, இன்னுமே அதிகமாக வழுக்கியது..!!

"பார்த்து அத்தான்.. பொறுமையா எறங்குங்க..!!"

மேலே நின்றிருந்த ஆதிரா, கனிவும் கவலையுமாக சொன்னாள்..!! சிபியும் மிக மிக கவனமாகவே அந்தப் பள்ளத்தில் இறங்கிக் கொண்டிருந்தான்..!! கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து.. தென்றலின் புடவை பறந்த இடத்தை அடைந்தான்..!! அருகருகே இருந்த இரண்டு பாறைகளுக்கு இடையிலான குறுகிய இடுக்கில்.. மிக வசதியாகவே பதுங்கியிருந்தாள் தென்றல்..!!

தென்றலை நெருங்கிய சிபி, ஒருகையால் அவளுடைய புஜத்தை வலுவாகப் பற்றிக்கொண்டு.. பாறையின் இடுக்கிலிருந்து அவள் வெளியே வர உதவினான்..!! அந்தப்பிடியை விடாமலே.. அவள் எளிதாக மேலேறுவதற்கு ஒருசில அறிவுரைகளை வழங்கியவாறு.. அவளுடன் சேர்ந்து தானுமே மெல்ல மெல்ல அந்த மலைச்சரிவில் இருந்து மேலேறினான்..!!

"என்னத்தான்.. போயிட்டிங்களா..??" ஆதிரா மேலிருந்து கத்த,

"ம்ம்.. வந்துட்டேன் ஆதிரா.. தென்றலை பாத்துட்டேன்.. ரெண்டு பேரும் இப்போ மேல வர்றோம்..!!" கீழிருந்து பதிலுக்கு கத்தி பதில் சொன்னான் சிபி.

"ம்ம்.. பாத்து கவனமா மேல வாங்க..!!"

ஆதிரா அவ்வாறு கீழே குனிந்து சொல்லிக் கொண்டிருந்தபோதுதான்.. அவளுக்கு நெருக்கமாக அந்த வித்தியாசத்தை உணர்ந்தாள்.. அவளது பின்னங்கழுத்தில் படர்ந்த அந்த உஷ்ணத்தை உணர்ந்தாள்.. யாரோ அருகில் இருந்து மூச்சு விடுவது போல..!! மார்புக் கூட்டுக்குள் இப்போது மெலிதாக ஒரு கிலி பரவ ஆரம்பிக்க.. கொஞ்சம் கொஞ்சமாய் தனது தலையை திருப்பினாள்..!! அவளது முதுகுக்கு பின்புறமாக.. மிக மிக அருகாக.. இவளையே உற்றுப் பார்த்தவாறு அது நின்று கொண்டிருந்தது.. அந்த சிவப்பு அங்கி போர்த்திய உருவம்..!!

"ஆஆஆஆஆஆஆஆ..!!!!!!"

ஆதிராவின் அலறல், மேலேறிக் கொண்டிருந்தவர்களின் காதில் விழுந்தது..!! அதைத்தொடர்ந்து.. 'டங்.. டணார்.. டங்க்க்க்க்..' என்ற ஓசையுடன்.. பாறைகளில் அங்குமிங்கும் மோதி மோதி.. அந்த டார்ச்லைட் மேலிருந்து பறந்து வந்தது.. அதன்பிறகும் கீழிருந்த பாறைகள் சிலவற்றில் மோதி, குழலாற்றை நோக்கி விர்ரென வீழ்ந்தது..!! சிபி இப்போது ஒரு உச்சபட்ச பதற்றத்துக்கு உள்ளானான்.. அண்ணாந்து பார்த்து பெரிதாக அலறினான்..!!

"ஆதிராஆஆஆ..!!!"

ஆதிராவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை..!! இன்னுமே அதிகமாக பதறி துடித்தவன்.. தென்றலை இழுத்துக்கொண்டு அவசரஅவசரமாய் மேலேறினான்.. 'ஆதிராஆஆ.. ஆதிராஆஆ..' என்று இடைவிடாமல் கத்திக்கொண்டே மேலேவந்தான்..!!

மலைச்சரிவில் இருந்து இருவரும் நிலப்பரப்புக்கு வந்தனர்..!! ஆதிரா நின்றிருந்த இடம் இப்போது வெறுமையாக காட்சியளித்தது.. மிரட்சி பொங்குகிற முகத்துடன், சிபி அந்த இடத்தை சுற்றிச்சுற்றி பார்த்தான்.. கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரையும் காணோம்..!! இருதயத்தில் வேதனையுடனும், இயலாமை உணர்வுடனும் இங்குமங்கும் ஓடினான்.. மனைவியின் உருவம் காண துடித்தான்..!!

"ஆதிராஆஆஆ..!!! ஆதிராஆஆஆ..!!!" - அலறிக்கொண்டே இருந்தான்.

அதே நேரம்.. அங்கிருந்து சற்று தூரத்தில்.. அடர்ந்தும், இருண்டும் போயிருந்த வனத்துக்குள்.. உயர உயரமாய் நெருக்கமாக வளர்ந்திருந்த காட்டு மரங்களுக்கு இடையே.. அந்த சிவப்பு அங்கி போர்த்திய உருவம் நிதானமாக சென்றுகொண்டிருந்தது..!! அந்த உருவத்தின் தோளில் மயக்கமுற்ற நிலையில் ஆதிரா வீழ்ந்திருந்தாள்..!!

வானிலிருந்த வெண்ணிலவின் மசமசப்பான வெளிச்சத்தில்.. அந்த உருவத்தின் முன்பக்கம் இப்போது சற்றே தெளிவாக தெரிந்தது..!! முகத்தை தவிர மிச்ச பாகங்களை சிவப்பு அங்கியே மூடியிருந்தது.. முகத்திலுமே கற்றை கற்றையாய் கூந்தல் மயிர்கள் வழிந்தன.. அந்த கூந்தல் கற்றைகளுக்கு இடையே சற்று உற்றுப்பார்த்தால்.. அது தெளிவாக தெரிந்தது.. அடர்த்தியான மீசை..!!!!

ஒரு ஆணின் முகம் அது..!!

 

7 comments:

  1. excellent boss.. sema thrill.. I'm visiting your blog everyday.. Pls post more stories.. If possible post nxt part soon.. NIce work.. keep it up..

    ReplyDelete
  2. super story screw...sema thrilling ah iruku ..nice job buddy

    ReplyDelete
  3. neenga first eludhuna stories elamey only situation and targeted to sex alone...but ipa eludhura stories elamey..like from mangalyam thandhunaney la irundhu elamey it makes the readers to stick to ur story and the stories are purely based on wt it aimed other than sex too...

    ReplyDelete
  4. shaik20102:- இந்த எபிசோடில் ஒவ்வொரு வரியும் உளி கொண்டு சிற்பத்தை செதுக்கியது போல் வந்துள்ளது... உங்களின் எழுத்துக்கு நான் பெரும் விசிரியன் ஆகி விட்டேன்

    ReplyDelete

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...